Viṟaliviṭu tūtu


பிரபந்த வகை நூல்கள்

Back

விறலிவிடு தூது
சுப்பையர்



தூதுத் திரட்டு :
சங்கரமூர்த்தி ஐயரவர்கள் பேரில் விறலிவிடு தூது
ஆசிரியர்: சுப்பையர்


Source:
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 58.
தூதுத் திரட்டு
TUTU-T-TIRATTU
Edited by : T.CHANDRASEKHARAN, M.A.,L.T
Curator, Government Oriental Manuscripts Library, Madras,
AND THE STAFF OF THE LIBRARY.
(Prepared under the orders of the Government of Madras.)
1957
This edition published under the name of Tututtirattu consists of six works.
1. periyAmpikai piLLai pEril mAn2 viTu tUtu
  • 2. veLLaiya rAcEntiran tukil viTu tUtu
  • 3. muttaivIrappa piLLai pEril mAn2 viTu tUtu
  • 4. cenkuntar tukil viTu tUtu.
  • 5. cangkaramUrti virALi viTu tUtu
  • 6. maNavai tiruvEngkaTamuTaiyAn mEka viTu tUtu



    5. சங்கரமூர்த்தி விறலிவிடு தூது

    இந்நூல், முதலில் காப்புச் செய்யுளான விநாயகர், முருகர், கலைமகள் ஆகிய மூவர் மீதும் பாடிய மூன்று விருத்தப் பாக்களும், இடையில் 809 கண்ணிகளையும் பெற்றுள்ளது. இறுதிப்பாகம் கிடைக்கப் பெறவில்லை. இஃது, ஆண்பால் பெண்பால் மீது விடுத்த தூதின்பாற்படும்.

    ஆசிரியர் வரலாறு

    - இந்நூல், சுப்பையர் என்பவரால் செய்யப்பட்டதாகும். இவர், திருவிடைமருதூர் தன்னில்இராகவசாத்திரியார் என்பார்க்கு மகனாகப் பிறந்தவர்.திருவிடைமருதூர் சுப்பையா சுவாமி சந்நிதியில், இராகவசாத்திரியார் நீண்டநாள் மகவில்லாமை காரணமாக விரதம் பூண்டிருந்து, தானங்கள் பல செய்து, இறுதியில் வரப்பிரசாதமாக இறையருளால் தோன்றியவர் ஆவர். இவர் இளமை முதற்கொண்டே குலவழக்கப்படி, ஆண்டியப்ப வாத்தியார் இடத்தில் வேதாகம புராணங் களையும், இலக்கிய இலக்கணங்களையும் பயின்றவர் ஆவர். தந்தையினிடத்திலிருந்து சோதிடக் கலையைக் கற்றவர். நாள் தோறும் நந்தவனத்தில் சென்று பூப்பறித்து மாலை தொடுத்து, சுப்பையா சுவாமிக்கு நல்கும் ஒழுக்கமுடையவர். திருநெல்வேலியில் வாழ்ந்து வந்த குப்பசாத்திரியின் மகள் இந்திராணி என்பாளை மனைவியாகப் பெற்று வாழ்ந்தவர். இந்தி ராணி என்பாள், கணவன் தன்னை வைதாலும் அடித்தாலும் மனங்கோணாது உடனுரைந்து வாழும் பண்பினளாவள் ; பொய்யுரையாள்.

    புலவராகிய சுப்பையரும் அவரது மனைவி இந்திராணியும் மனமொத்து வாழுங்காலத்து ஓர்நாள், முத்திபெறும் பொருட்டு, திருநெல்வேலியில் எழுந்தருளாநின்ற காந்திமதியம்மன் சந்நிதியை இருவரும் வணங்கச் சென்றனர். அப்பொழுது, இந்திராணி தனது கையினால் தீர்த்தம் வாங்கிச் சுப்பையருக்கு இட்டனள். அதுபொழுது அம்மஞ்சள் தண்ணீர் சுப்பையர் மார்பினிடத்துப் பட்டது. இருவரும் பின்னே தமது இல்லம் ஏகி, உண்டிருந்தனர். பின்னே, இந்திராணி கணவன் மார்பில் மஞ்சள் சாந்து இருக்கக் கண்டனள். இது ஏது என்று வினவினள். சுப்பையர் தண்டீசுவரியை வணங்கியபின் நீர் இட்ட மஞ்சள் தண்ணீரேயல்லாமல் இஃது வேறில்லை ; வேறொரு மாதின்மீது எனது உள்ளம் நாடியதில்லை என்று பலவாறாகக் கூறினார். இந்திராணி மெய்யைப் பொய்யாக நினைத்து, தனது கணவராகிய சுப்பையரிடத்தில் ஐயப்பட்டு மரியாதையின்றி தாறு மாறாக நடந்துகொண்டனள். அதனால் வெறுப்புண்ட சுப்பையர் இறைவனை வேண்டி, இனி மாமனார் இல்லத்தில் இருக்கப்படாது ; தனது தந்தையினிடத்திலும் செல்லுதல் நலமன்று. ஆதலின், தலயாத்திரை செல்லுதல் நன்றாமோ என எண்ணித் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். திருவுளச்சீட்டுத் தலயாத்திரை செல்லுதல் நன்றெனத் தெரிவிக்க, அதன்படி தலயாத்திரை சென்று, இறுதியில் திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதியை வணங்கும் பொருட்டு, அவ்வூர் சென்றனர். அவ்வூரில் தமது ஆசிரியர் நாராண வாத்தியார் என்பார் அகத்தினில் தங்கியிருந்தனர். இங்ஙனம் தங்கி, முருகப் பெருமானை வழிபடுங்காலை, அவ்வூர் கோயில் நடனமாது நடனமாடியபொழுது, தான் அவளைக் கண்டு, அவள்மீது காதல் கொண்டு, அதனால் தனது பொன் பொருள்களை எல்லாம் அவளிடத்து இழந்து, வறிதே மீளுங்காலத்து நாரணவாத் தியாரின் மகனாரால் தாசிகளின் தன்மைகளைப்பற்றி சொல்லக் கேட்டு, அறிவு துலங்கி, இறுதியில் சங்கரமூர்த்திச் செல்வரிடம் சென்று, பொன் பொருள் பெற்று அவரால் ஓம்பப்பெற்று இன்பமாக வாழ்ந்திருந்தனர். ஆக அனைத்து வரலாறும் இந் நூலினுள்ளே இவ்வாசிரியரால் எடுத்து விரித்துரைக்கப் படுகின்றன.

    சங்கரமூர்த்தி வரலாறு

    சோதி வளநாடு என்னும் சோழவளநாட்டைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணணை என்னும் பதியில், அறிவும் திருவும் உடையவராய், புலமையில் சிறந்தவராய், புலவர்களைப் போற்றிப் புரக்கும் தன்மைமிக்கவராய், செல்வங்கள் மலிந்து கொடை வள்ளலாக வாழ்ந்து வந்தவர் சங்கரமூர்த்தி என்பவர் ஆவர். சோதி வளநாடு என்பது, பொதிகை மலையையும் தாம்பிரவன்னி-யாற்றையும் பெற்று, நிலவளம் நீர்வளம் மிக்குள்ளதோர் நாடாகும். சங்கரமூர்த்தி என்பார் அந்தணர் குலத்தில் உதித்தவர். அழகே தெய்வம் எனப்படும் முருகக் கடவுளையே குலதெய்வமாக வழிபாடு செய்பவர். இவரின் தந்தை சுப்பிரமணி என்னும் பெயருடையவர் என்றும், அவர் பூபதிப் பட்டம் உடையவர் என்றும், அழகின் பெருமாள், சண்முகவேலப்பர் என்பவர்களை தன்னுடைய புதல்வராகப் பெற்றவர் என்றும், எப்பொழுதும் கருணையோடு விளங்குவதும், நல்லோர் நட்புறவும், ஆன்றோர்களின் ஆய்வுரைகளைக் கேட்டு நடக்கும் பண்பும், முத்துக்குமார சுவாமி என்பவரை அத்தனாகப் போற்றும் அருகதையுடையவர் என்பதும், சங்கர நாராயணரை மைத்துனனாகப் பெற்றவர் என்றும், எண்திசைக்கும் ஐயமிட்டே வாழும் பண்பினர் என்றும், அழகப்பத்துரையால் அம்மான் என்று போற்றும் முறையினர் என்றும், சுற்றத்தினர்கள் எல்லோருக்கும் அன்னமும் சொர்ணமும் கொடுத்து அவர்கள் எப்பொழுதும் தன்மீது பற்று மிகும்படியாக வாழ்பவர் என்றும், சுற்றத்தினர்களே யன்றி மற்று எவர் வரினும் அவர்தம் பசிப் பிணி களைந்து இனிமையாகப் பேசி அவர்கட்கு பசிப்பிணி மருத்துவனாக விளங்குவோர் என்றும், அடியார்கட்கு நேசராக விளங்குவோர் என்றும், திருவிடை மருதூரின் அக்கிராகாரம் பண்ணி வைத்தவர் என்றும், ஆகிய எல்லா நற்பண்புகளையும் நற்புகழ்களையும் உடைய, சுற்றத்தினர்களையும் பெற்று கண்ணன் எனப் போற்றும் வண்ணம் வாழ்ந்தவர் ஆகும்.

    நூலின் போக்கு

    முதலில் ஆனைமுகக் கடவுள், முருகர், கலைமகள் மூவரையும் வணங்கி நூலைப்பாட ஆரம்பித்துள்ளார் இப்புலவர்.
    1-27 கண்ணிகளில், விறலியின் வர்ணனையைப் பற்றிக் கூறுகிறார்.

    28-33 கண்ணிகளில், விறலியினிடத்து, சுப்பையர் தன் வரலாறு கூறுகிறார்.

    34-42 கண்ணிகளில், சீகிருட்டிணைப் பதியில் வாழும் சங்கர மூர்த்தி என்னும் வள்ளல் பெருமானின் மலை, ஆறு முதலிய தசாங்கங்களைப் பற்றிக் கூறுகிறார்.

    43-65 கண்ணிகளில், சங்கரமூர்த்தி செல்வனுடைய சுற்றத் தினர் சிறப்பினைக் கூறுகிறார்.

    66-71 கண்ணிகளில்,புலவர் தனது தந்தையின் திருநாமமும், அவர் மதலையிலாது வாழந்து, சுப்பையர் சந்நிதியில் தவம் இருந்து, தன்னைப் பெற்றெடுத்துப் பெயரிட்டதனையும்,

    72-80 கண்ணிகளில்,சுப்பையருக்கு, குடுமித் திருமணமானது, குருவினிடத்தில் அமர்ந்து வித்தை பல கற்றது ஆகிய எல்லாவற்றினையும் பற்றிக் கூறுகிறார்.

    81-89 கண்ணிகளில், புலவர் தனக்குத் திருமணம் நடந்ததைப் பற்றியும், தான் மாமனாரகத்தில் சென்று இருந்ததைப் பற்றியும்,

    90-95 கண்ணிகளில், புலவர் தனது மனைவியின் குண நலங்களைப் பற்றியும்,

    96-102 கண்ணிகளில், புலவர் தனது மனைவியாகிய இந்திராணியோடு தண்டீசுவரியை வணங்கச் சென்றதையும், அங்கே திருமஞ்சள் தனது மார்பின்மீது பட்டதையும், அதனால் தங்களிருவருக்கும் புசல் ஏற்பட்டதையும் ஆகியவைகளைப் பற்றிக் கூறுகிறார்.

    103-115 கண்ணிகளில், புசல் காரணமாக தனது மனைவி தன்னிடத்து நடந்துகொண்ட விதத்தைப் பற்றியும் தனக்கு ஏற்பட்ட சஞ்சலம் காரணமாக திருவுளச் சீட்டுப்போட்டுப் பார்த்து யாத்திரை செல்லத் துணிந்ததைப் பற்றியும் கூறுகிறார்.

    116-162 கண்ணிகளில், புலவராகிய சுப்யைர் கழுகுமலை, சங்கரனார் கோவில், ஸ்ரீவல்லிபுத்தூர் முதலிய நூறு சிவத்தலங்கட்குச் சென்று தரிசித்ததைப்பற்றி விவரிக்கின்றார்.

    163-167 கண்ணிகளில், புலவர், யாத்திரைச் செலவில் தான் பட்ட துயரத்தைப் பற்றி வருணிக்கிறார்.

    168-183 கண்ணிகளில், யாத்திரை இறுதியாக, தான் பயின்ற நாரண வாத்தியார் இருக்கும் திருச்செந்தூர் சென்று அவர் அகத்தில் இருந்துகொண்டு, செந்திலாண்டவனை ஆறு காலங்களிலும், தான் வழிபாடு செய்த வரலாற்றினைப் பற்றிக் கூறுகிறார்.

    184-211 கண்ணிகளில், புலவர் செந்திலாண்டவனை வழிபடுங் காலத்து, சந்நிதியில் ஆடிய நடனமாதின் மேல் தன் நாட்டம் சென்றதைப் பற்றியும், அவளது அங்கவசைவுகளின் வருணனைப் பற்றியும் கூறுகிறார்.

    212-228 கண்ணிகளில், நடனமாது தன்னைக் கண்டு நகைத்ததைப் பற்றியும், தான் அவள் மேல் மோகங்கொண்டதைப் பற்றியும், இது தவப்பயன் எனவும், அவள் சென்ற வழியே சென்று அவளது இல்லத்திலே நின்றுகொண்டு, நடனமாதின் வாயில் தோழியைக் கண்டு “முந்தியேகினப் பெண் யார்” என வினவினதைப் பற்றியும் கூறுகிறார்.

    229-244 கண்ணிகளில், நடனமாதின் வாயில் தோழி நடன மாதின் சிறப்புக்களையும், குணு நலங்களைப் பற்றியும், அவளது திருநாமம் “மோகன சவுந்தரி” என்று கூறியதையும் கூறுகிறார்.

    245-249 கண்ணிகளில், வாயில் தோழி சுப்பையப் புலவரின் ஊர் பேர் முதலியன கேட்டலும், புலவர் தன் ஊர் பேர் கூறி அவள்மீது தான் காதல் கொண்டதைப் பற்றியும் அவளிடம் கூறுகிறார்.

    250-256 கண்ணிகளில், மோகனசவுந்தரியை யடைதலின் அருமையைப் பற்றி வாயில் தோழி கூறியதாகக் கூறுகிறார்.

    257-271 கண்ணிகளில், புலவர் சவுந்தரியின் எளிமையைப் பற்றியும், பின்பு, அவள் பணயத்தையும் வினவவும், தோழி தனது தலைவியின் பணயத்தைப் பற்றிக் கூறவும், புலவர் ஈராயிரம் பொன் அவளிடத்து ஈதலும், அதனைப் பெற்றுத் தலைவி இசைந்ததற்கு அடையாளங் கொடுக்கவேண்டியதைப் பற்றியும், குறிப்பிடுகிறார்.

    272-278 கண்ணிகளில், புலவர் தனக்குள் வாயில் தோழி, மோகனசவுந்தரியிடம் சொல்லும் தூதைப் பற்றி நினைந்து நினைவழிந்ததைப் பற்றிக் கூறுகிறார்.

    279-294 கண்ணிகளில், வாயில் தோழியாகிய தாசி அதிரூப ரத்தினள், தலைவியிடஞ் செல்லுங்காலத்து முதலில் அவளது தாயினிடத்து நடந்த உரையாடல்களையும், பின்பு, தலைவி கொடுத்த கொலுசையும், இத்தனைக்கும் அவள் பட்ட கஷ்டத்தையும் விரிவாக எடுத்துக் கூறுவதாகக் கூறுகிறார்.

    295-321 கண்ணிகளில், சுப்பையர் அக்கொலுசைப்பெற்று மகிழ்வானதைப் பற்றியும், தோழி தலைவியிடம் தாதியர் புடைசூழ பரிகசித்து அழைத்துச் சென்றதைப் பற்றியும், அவள் தாதியர்கட்குத் தக்க பதில் கூறியதைப் பற்றியும் கூறுகிறார்.

    322-329 கண்ணிகளில், தாய்க்கிழவி பசப்பிக் கூறுதலும் அப்பசப்பலுக்குப் புலவர் பதிலுரைத்தலும்,

    330-372 கண்ணிகளில், தாய்க்கிழவி புலவரிடத்து தனது மகள் கண்ட நற்சகுனத்தைப் பற்றியும், கோயில் சென்று வழிபாடு செய்யுங் காலத்து ஏற்பட்ட, “வாய்ச்சொல் குறியும், வேதவாசிரியர் கூறிய ஏட்டுக் குறிப்பும் ஆகிய எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறினதாக விவரிக்கின்றார்.

    373-384 கண்ணிகளில், தாதியர் பள்ளியறைக்குச் செல்ல வேண்டினதையும், பள்ளியறையின் வருணனையும் கூறுகின்றார்.

    385-397 கண்ணிகளில், நடனமாது பள்ளியறைக்கு வருந்தோற்றத்தைப் பற்றியும், தன்னிடத்தில் நடந்து கொண்ட முறைகளைப் பற்றியும் தான் அவளது முறை கண்டு வியந்ததைப் பற்றியும் விளக்குகிறார்.

    398-457 கண்ணிகளில், புலவர் நடனமாதோடு கலந்துறவாடிய “கலவி வருணனை” பற்றி எடுத்துக் கூறுகிறார்.

    458-486 கண்ணிகளில், நடனமாது வினவ, புலவர் கூறியதையும், நடனமாது தனது இயல்பினையெடுத்தியம்பி தன்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டினதையும் அதற்குப் புலவர் ஒப்புதலும் தந்து, பிறகு கூடி மகிழ்ந்திருந்ததையும் ஆகிய செய்திகளைக் கூறுகிறார்.

    457-490 கண்ணிகளில், நாரணவாத்தியார் மகன், தன்னைச் சந்தித்து, மோகனவல்லியைப் பற்றிக் கூறியதை விளக்குகிறார்.

    491-514 கண்ணிகளில், மோகனவல்லி, பிள்ளையில்லாது வருந்தியிருந்ததையும், சொக்கேசர் சந்நிதியில் நோன்பு நோற்றதையும், சகுனங்கேட்டதையும், மீனாட்சியம்மனுக்கும் சொக்கேசருக்கும் பொன் பொருள் ஈந்ததைப்பற்றியும், மோகனவல்லி கருப்பமுற்று நல்ல வேளையில் மகள் பெற்றெடுத்ததையும் ஆக எல்லாச் செய்திகளையும் கூறியதாக உணர்த்துகிறார்.

    515-571 கண்ணிகளில், மோகனவல்லி, பெண்பிள்ளை பெற்றதனால்தான் மகிழ்ந்ததையும், பின்னே அப்பெண் குழந்தையை பாலூட்டிச் சீராட்டிப் பொட்டிட்டு, உச்சிட்டு, மருந்திட்டு, ஐம்படைத்தாலி கட்டி வளர்த்ததையும், பின்னே கைகால்கட்கு அணிவகைகள் பூட்டினதைப் பற்றியும், பதிணெண் மொழியிலும் வல்லவளாக ஆக்கியதைப் பற்றியும், பின்னே நடன சாலையிலும் சிலம்பக் கூடத்திலும் பயில்வித்ததைப் பற்றியும், விவரித்துக் கூறுகின்றார்.

    572-579 கண்ணிகளில், தளவாய் துரைசாமியின் சிறப்புக்களைக் கூறுகிறார்.

    580-581 கண்ணிகளில், திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடன அரங்கேற்றம் நடந்ததைப் பற்றிக் கூறுகின்றார்.

    582-592 கண்ணிகளில், சௌந்தரியவல்லி குமரிப்பருவம் அடைந்ததைப்பற்றி விளக்கிக் கூறுகிறார்.

    593-603 கண்ணிகளில், தாய்க்கிழவி மகளுக்குக் கூறும் அறிவுரைகளைப்பற்றி விளக்குகிறார்.

    604-616 கண்ணிகளில், மகள் தாய்க்கிழவிக்குப் பதில் கூறியதைக் கூறுகிறார்.

    617-776 கண்ணிகளில், நடனமாதுக்கு அவள் தாய் இன்னின்னாரிடத்தில் இவ்விவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், மருந்தீடு முறையும் முறையே தொகுத்துக் கூறுகிறாள்.

    (இடையே சில கண்ணிகள் காணப்பெற வில்லை.)

    777-785 கண்ணிகளில், நாரணவாத்தியார் மகன், தனக்கு நல்லறிவு கொளுத்தியும் நடனமாதின் இயல்பினை முறையே கூறியும் சென்றான் என புலவர் தன் கூற்றாக உரைக்கின்றார்.

    786-89 கண்ணிகளில், புலவர்தாம் திருநகரி ஊர்ச் சபையார் முன் நீதி கேட்கச் சென்று, தன் வரலாறு கூறுகிறார். நடனமாதும் அவள் தாயாரும் அவரவர்களுடைய வரலாற்றையும் சபையார் முன் உரைக்கத் தொடங்கு கிறார்கள். இதனோடு நூலின் போக்கு விடுபடுகிறது.

    (முடிவுபெறவில்லை. இறுதிப் பகுதியும் கிடைக்கப்பெறவில்லை.)


    இந்நூலில் வரும் நீதிகள்
    - “தட்டானைத் தேறுந் தறுவிலியும் தன்மனையாள்
    இட்டம் பிறர்க்குரைக்கும் ஏழ்மையும் - முட்டமுட்ட
    வேட்டகத்தி னுண்ணும் வெறுவிலியு மிம்மூன்றும்
    ஆட்டின் கழுத்தி னதர்.” (91-92)

    காலங்கள் மூன்றுங் கருத்தி லுணர்ந்தானுங்
    கோலங்கண் டன்னங் கொடுப்பானும் - சாலவே
    தன்கணவன் சொல்லைத் தலைசாய்த்துக் கேட்பாளுந்
    திங்கள்மும் மாரிக்கு நேர்.” (103-104)

    “காலம்போம் வார்த்தை நிற்கும் கண்டாயே! – சாலப் பசித்தார் பொழுதும்போம் பாலுடனே அன்னம்
    புசித்தார் பொழுதும்போம் போமென்று” (257-258)

    “நிரலை பலநூல் கல்லாத் தலைமகனு
    மரலை யெரிபோன் றயலாருஞ் -சால
    மனக்கட் டில்லாத மனையா ளிம்மூன்றும்
    தனக்கட் டமத்துச் சனி.” (114-115)

    “நண்டுசிப்பி வேண்கதலி நாசமுறுங் காலமதில்
    கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடியீர்!
    போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமதில்
    மாதர்மேல் வைக்கு மனம்.” (185-186)

    போந்த வுதாரனுக்குப் பொன்றுரும்பு சூரனுக்குச்
    சேர்ந்த மானஞ் சிறுதுரும்பு – ஆய்ந்த
    அறவனுக்கு நாரி யரத்துரும்பு நெஞ்சில்
    துறவனுக்கு வேந்தன் துரும்பு.” (282 – 283)
    ----------

    இந்நூலில் வரும் உவமைகள்

    “விளக்கிற் பறந்துவிட்டில் வீழ்வதுபோல்” (216)

    “கூடியுடுச் சந்திரனை வளைவ தொத்தே” (220)

    “துன்பமதில் வந்துயிரைத் தூக்குமெம தூதனைநான்
    இன்ப மருத்துவனா யெண்ணுவபோல்” (227)

          "பண்பான
    வெண்கலத்தைக் கண்டோர்கள் வேண்டி முனம்விரும்பு
    மண்கலத்தின் மேல்மனது வைப்போரோ? – ஒண்பொருளப்

    பத்தரை மாற்றுப் பசும்பொன் னையுங்கண்டு முன்போல்
    பித்தளையை யேவிரும்பும் பேருண்டோ? – உத்தமரே!
    ஆற்றிலே வெள்ளம்வந் தாலாருஞ் சகதிகொண்ட
    ஊற்றிலே நீரெடுத்து உண்பரோ? – போற்றும்

    மருக்கொழுந்தும் பிச்சியிரு வாட்சிமலர் கண்டோர்
    எருக்கன்பூச் சூடுவரோ? இன்னும் - பெருத்தநிலைக்

    கண்ணாடி வந்திருந்தால் கங்கையையோர் செம்பில் வைத்தே
    உண்ணாடித் தன்னழகை யோர்வரோ – மண்ணில்

    சலதாகங் கொண்டவர்க்கே செவ்விளை நீர் வந்தால்
    குலமாகும் வேம்பிநெய் யாகுமோ? – " (231-236)

    "வெண்கலத்துக் கொத்துவிலை கொடுத்துப் பொன்னான
    வொண்கலத்தைக் கொள்வீரோ?” (252)

    “கன்றைவிட்ட ஆப்போல வேமறுகு மையனே: (256)

          “பார்ப்பார்க்கு
    வாய்ப்போக்கே னென்றவச னப்பழமை யுண்டே" (270)

    “சீதையெனு மம்மையன்று தேங்கிச் சிறையுறுமப்
    போதையிலும் மெய்ப்பாதன் பூமியிலே – காதலினால்

    அக்கினியை மூட்டி வலம்வருங்கா லந்தனிலும்
    மிக்க வனுமன் விரைவாக – முக்கியர்

    திருவாழி காட்டிநின்ற செய்கைபோல் தம்பி
    பெருநாக பாசம் பெறுங்கால் - அருகாக

    வந்த கருடனைப்போல் மாதே! அவ் வேளையெனக்
    கந்த மகிழ்வுபோ லானதே-” (295-298)

    "மரியாதை ராமனைப்போல் வந்த வழக்காயும்" (800)

    "எண்ணுக் கடங்காத போநிதியைபோ கொண்டாற்போல்" (516)

    நூறுநாய் கூடியொரு நொண்டிமாட்டைக்கடிக்க
    வேறுபுக லின்றியொரு வீண்செடியின் - தூறுபுகுந்
    தப்பொழுது வெம்புலியொன் றங்கே கிடந்ததுகண்டு
    தப்பவிடா மற்பிடிக்கத் தான்பதுங்கும் - அப்படிபோல்” (309-310)

    "பழம் நழுவிப் பாலிலே பாய்ந்ததுபோல் வந்து
    மிளமறிக் குளையறியா தென்ன – அலறிநின்றீர் (330)

    "பெண்விரும்புங் காலை பிதாவிரும்பும் வித்தையே
    நண்ணுதனம் விரும்பும் நற்றாயே – ஒண்ணுதலாய் கூறியநற் சுற்றங் குலம்விரும்புங் காந்தனது
    பேரழகை யேவிரும்பும் பெண்." (361-362)

    "விக்கிரமா தித்தன் மதிமிக்கா யிருந்தாலும்
    உக்கிரவான் பட்டிமதி யுட்கொண்டான் - தக்ககதி
    நாட்டுக்கே சென்று நணுகுந் தசரதனோர்
    ஆட்டைக்கோர் மந்திரியை யாக்கினார்" (618-619)

    பெற்றதனம் என்னாப் பெரியோனும் பெற்றபொருள்
    மற்றையு மென்றே மகிழ்வேந்து – முற்றியநன்
    மானமறு மில்லாளும் மானமுறும் வேசையரும்
    ஈனமுறு வாரிவரென் றெண்” (621-622)

            “நாம் பூசை பண்ணுகின்ற
    சாளிக் கிராமமென்றே தான்கொண்டேன்” (194)
    -----------

    இந்நூலில் வரும் தலங்களின் பெயர்கள்

    திருவிடைமருதூர், திருநெல்வேலி, திருச்செந்தூர், திருநல்லூர், செப்பறை, திருவம்பலவாடி, கழுகுமலை, சங்கரனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பெருங்குன்றம், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், திருவாருர், திருவீழிமிழலை, திருப்பட்டியூர், திருவாவடுதுறை, கும்பகோணம், திருவேரகம், திருமத்தியார்ச்சுனம், சீர்காழி, சிதம்பரம், காஞ்சிபுரம், விருத்தாசலம், திருக்காளத்தி, காசி, திருவொற்றியூர், திருப்பெருந்துறை, அழகர்மலை, திருவலஞ்சுழி, இராமேசுரம், நவபாஷாணம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ஆற்றூர், சங்குமுகம் முதலியன.

    நதிகளின் பெயர்கள்
    மணிமுத்தாநதி, கிருஷ்ணாநதி, கோதாபுரிநதி, யமுனை நதி, சடாயு தீர்த்தம், கங்கைநதி, பாம்பன் முதலியன.

    சுவாமி, அம்மன் பெயர்கள்
    ஆற்றூர்:- சோமலிங்கர், சோமவல்லி
    இராமீசுரம்:- இராமலிங்கர்
    திருப்பெருந்துறை:- ஆளுடையார் (ஆத்மநாதன்), சிவகாமியம்மை
    காசி:- விசுவநாதர், விசாலாட்சி
    சோலைமலை:- கள்ளழகர்
    திருக்காளத்தி:- ஞானப்பூங்கோதை
    காஞ்சிபுரம்:- ஏகாம்பரநாதன்
    சிதம்பரம்:- திருமூலலிங்கர்
    திருமத்தியார்ச்சுனம்:- மருதப்பர்
    கும்பகோணம்:- கும்பேசுரன், ஒப்பில்லாமுலையம்மை
    திருவாவடுதுறை:- மாசிலாமணி
    திருப்பட்டியூர்:- பட்டியீசர்
    திருவாரூர்:- தியாகேசர், சிவகாமி
    ஸ்ரீரங்கம்:- ஸ்ரீரங்கநாயகர், ஸ்ரீரங்கநாயகி
    திருவானைக்கா:- சம்புநாதர், அகிலாண்டவம்மை
    மதுரை:- சொக்கலிங்கர், மீனாட்சி
    ஸ்ரீவில்லிபுத்தூர்:- திருமால், தேவிநாச்சியார்
    சங்கரனார் கோயில்:- சங்கரநாராயணர்
    செப்பறை:- திருவம்பலவாணர்
    திருநெல்வேலி:- காந்தியம்மன்
    திருவிடைமருதூர்:- சுப்பையா சுவாமி.
    -----------

    இந் நூலில், தளவாய் துரைசாமி என்னும் அழகப்ப பூபதியின் பெருமை பலபடப் புகழ்ந்து கூறப்பட்டிருக்கிறது. அதனோடு, நாட்டியமாதுக்கு, தாய்க்கிழவி அறிவுரை கூறுகின்ற திறமும், பணத்தின் பெருமையை மறைமுகமாக தாய்க்கிழவி மகளுக்கு பிறரோடு ஒப்புநோக்கிச் சிறப்பித்துக் கூறுதலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பொட்டிடுதல், உச்சிடுதல், மருந்திடுதல், பால் கொடுத்தல், மையிடுதல், ஐம்படைத்தாலி அணிதல், வசம்பு கட்டுதல், தொட்டில் போடுதல், காதுகுத்தல், மிஞ்சி இடுதல், கைகால்கட்கு அணிவகை அணிதல், அரைமூடியணிதல், சிற்றாடையணிதல், பள்ளியில் வைத்தல் முதலாய நிகழ்ச்சிகள் நிகழ்த்தும்போது கூறும் அறிவுரைகளும், நடனமாதை அங்கங்கே வருணித்துச் செல்லும் இடங்களும் பயிலப்பயில இன்பசுவை உண்டாக்குவனவாம்.

    இந்நூலின் வரலாறு இப்புலவராலேயே சுருக்கமாக, 28 முதல் 33 வரையிலான கண்ணிகளால் கூறப்பட்டுள்ளன. அக் கண்ணிகளால் இந்நூலுக்கு முகவுரை போன்று அமைந்திருக்கின்றன. அதில் புலவர், நடனமாதின் செயலைக் குறித்து திருநகரி பொதுமன்றத்தாரிடம் முறையிடவும், நடனமாதும் முறையிடவும் அங்கே தன் வழக்குத் தோல்வியுறவும், சங்கர மூர்த்தி என்னும் செல்வன் பால் சென்று, பொன்பொருள்கள் பெற்று மகிழ்ந்து வந்ததையும், தெளிவுபடக் கூறுகின்றார்.

    இத்தகைய மதிப்புவாய்ந்த இந்நூல், இந்நூல் நிலையத்தில் தமிழ் ஓலைச்சுவடி D.316 – ஆம் எண்ணிலிருந்து எடுத்து, பிழைகள் மலிந்திருந்தவைகளைத் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப் பட்டிருக்கிறது.
    -------------

    சங்கரமூர்த்தி ஐயரவர்கள் பேரில்
    விறலிவிடு தூது.


    காப்பு.



    (விநாயகர்)

    என்னையு மின்னமுந் திருத்துங் கருணையாலே
    இரும்புவியி லமுதகுண வளமா நாடு
    தன்னில்வளஞ் சிறந்தகிட் டினைநகரில் மேவுந்
    தானவன்சங் கரமூர்த்தி பேரி லேயான்
    மின்னையாள் மாமோக வல்லி யான
    விறலிவிடு தூதுதனை விரித்துப் பாடப்
    பன்னையில்வாழ் சிதம்பர விநாய கன்பொற்
    பாதமல ரனுதினமும் பணிகின் றேனே. - 1


    (முருகர்)
    சனகருக் கன்றுபத் தேச முரைத்தலை
    தோளேமா ரிடவடிவைச் சார்த்திக் கொண்டே
    யெனதறிவைத் திருத்தவுஞ் சீகிட்டிணை தன்னி
    லெழுந்தருள்சங் கரமூர்த்தி பேரி லென்றும்
    வினவியொரு பொருளறியா யானு மிந்த
    விறலிவிடு தூதுதனை விரித்துப் பாடக்
    கனகமயில் தனிலேறி விரைவா யின்றே
    கந்தனெந்தன் சிந்தையில் வந்துதோன்றி னானே. - 2


    (கலைமகள்)
    கஞ்சமலர் நான்முக னுந்திரு மாலுந்
    தேடியுமே காணா நாதன்
    செஞ்சொ லினாலெனை யாளவெழுந் தருள
    சங்கரமூர்த்தி செல்வன் பேரில்
    மிஞ்சியசீர் விறலிவிடு தூதைப் பாட
    விரும்பிமன மகிழ்ந்துதொடுக் கின்றவென்றன்
    நெஞ்சினிலும் நாவினிலிலுந் தருணி யான
    நேரிழையும் வாலையுமே நிரம்பினாளே. - 3
    கடவுள் வாழ்த்து முற்றும்.

    நூல்


    (விறலியின் வருணனை)
    அம்பொன் னடியி லணிந்தவிரற் கேற்றநகை
    உம்பர் களுமகிழ வொள்ளிதா -யும்புனைந்து
    தண்டையிட்டுப் பாத சரமுஞ் சதங்கைமுதற்
    கொண்டிணக்க மானதனிக் கோதையே!-கெண்டை
    ஆரம்பைதனைக் கவ்வுமது போல் முழந்தாள்
    அரம்பையே!பெண்க ளரசே! -பெருங்கதலி
    வாழையெனப் பிரமன் வைத்தகுறங் காளேயிவ்
    வேளையெனக் குதவு மெல்லியலே!- காளமாம்
    மேகத்தி டையேதோன்று மின்னிடையிற் பொன்னிறமே - 5


    யாகத் துகிலணியு மன்னமே!-சேகரமாய்ப்
    பொன்னரைஞா ணின்னுடனே பூணும் பணியழகை
    என்னவா யான்புகல்வே னேந்திழையே!- மின்னனையீர்!
    ஆலிலைமே லேதிருமா லன்றனந்தல் போல்வயிற்றின்
    மேல்வரைரோ மம்பொறுத்த வேல்விழியே!-நூலிடையே
    நஞ்சதனி லேபொருப்பும் நீரின் குமிழிசெப்புங்
    கஞ்சமுகை போலுமுலைக் காரிகையே!-அஞ்சுகமே!
    நந்திணைத்த கந்தரத்தெந் நாளுஞ் சரப்பணியுங்
    கொந்துமுத்தி னார்மணி கோகிலமே!-சந்தமுற்ற
    கையிற் கடகமுடன் காந்திவளையணியுந் - 10


    தையற் குலத்துயர்ந்த சம்போகி!- செய்யவுருத்
    தொண்டைக் கனிமுருக்கித் தோன்று மலருடன்கற்
    கண்டிற் கிணைத்தவிதழ்க் கண்மணியே!- வண்டற்ற
    முல்லை யரும்பு முதிர்ந்தவொளி முத்தமுமே
    பல்லுக் கிணையான பாங்கியே!-சொல்லிற்றான்
    எள்ளிளம் பூவொத்தே யிலகுதிரு நாசிதனில்
    ஒள்ளியமூக் குத்தியணி யொண்டொடியே!-மெள்ளவசைந்
    தாடுங் குழைக்காதி லன்னவன்னக் கொப்பதின்கீழ்த்
    தோடுந் தரித்துநிற்குந் தோகையே!-பீடுபெறும்
    வேலுஞ் சுரும்பும் வெருண்டமான் செல்கயலும் - 15


    போலுஞ் சிறந்தவிழிப் பொன்னரசே!-கோலும்போர்
    வில்லும் பறையுமென வேயுந் நுதலழகைச்
    சொல்லத் தகுமோபைந் தோகையே!-மெல்லவே
    கண்ணாடி பார்த்துக் கவின்பெறவே யிட்டபொட்டின்
    வெண்ணீறும் நெற்றியணி மின்னாளே!-பெண்ணரசே!
    சுட்டியுடன் சேர்த்துத் துலங்கநில வும்பிறையுங்
    கட்டிச் சொருகுகுழற் கன்னியே!-இட்டமுடன்
    அத்தசகா யம்புரி வானினு மதிக
    மற்றவுட லிற்புரிவான் மற்றதினும்-முத்தனையீர்!
    அத்தமுரை யங்கத் துதவுவா னேயதிகம்
    வித்தகநூ லோதும் விரித்தன்றே-இத்தகைமை - 20


    நீதிவெண்பா தன்னில் நிசமே யுரைத்தசெய்தி
    ஆதிமுதற் கேட்டிருந்தா யல்லவோ?-தூதி!
    நளராசற் காகவன்னம் நற்றூது சென்றே
    உளமாலை வாங்கிவந்த துண்டே-இளமயிலே!
    சாதுரிய மின்றித் தனித்தார் பிரிந்தாலு
    மேதுரியத் திற்கூட்டு மெல்லியலே!-பாதுகாத்து
    என்னைநீ வேண்டியெந்த னேந்திழைமுன் பேதூது
    சொன்னையேற் புண்ணியமே சொல்லக்கேள்!-மின்னே!
    மடந்தையர்மே லாசை வழிகுழியத் தூது
    நடந்தவர்பாற் காணலாம் நன்றாய்ப்-படர்ந்தசடைச் - 25


    சொக்கர்மே லாசையவன் றெண்டன்மே லுண்டானால்
    ஒக்குமடை யாளமிதென் றோதெனவே-தக்கவர்கள்
    சொல்லவறி வேனதுபோற் றோகா யுனைமறவேன்
    எல்லையிலா வாழ்வுனக்கே யான்றருவேன்-நல்லாய்!

    (தலைமகன், விறலியினடத்து தன் வரலாறு கூறுதல்)
    தோகைக்கென் பால்விரும்பத் தூதுசொல்ல வேண்டும்நீ!
    போகைக்கு முன்கேளன்புண்பாட்டை-வாகாய்ப்
    பிறந்துவளர்ந் ததுமோர் பெண்ணைப்போய் வேட்டே
    சிறந்திலிருக் கிலென்னை யவள்சீற-அறஞ்செயநான்
    நற்றவத்தை நாடி நடந்துசே விக்கையிலோர்
    பொற்கொடியைக் கண்டுமையல் பூண்டதுவுஞ்-சற்றுமென்னைச் - 30


    சட்டைபண் ணாதாளைத் தயவாக வெண்ணிநான்
    வெட்டவெளி யானதுவும் வேதியர்முன்-சட்டமாய்ப்
    பேசவறி யாமலந்தப் பெண்வழக்கே வென்றபிற
    காசையற்று வந்தோர் அரசர்முன்-நேசமுடன்
    செய்தியெல்லாஞ் சொல்லவெகு செல்வமவர் தந்ததுவும்
    மைவிழியே! நான்புகலும் மாறுகேள்!-மெய்யாய்ச்
    (தசாங்கங்கள்)
    (மலை)
    மகத்தாம் பொதிகை மலையான்-உகத்தெல்லாம்
    வந்த கவிஞர்கலி வாராம லாற்றினான்
    அந்தமுறு தாம்பிரவன்னி யாற்றினான்-சுந்தரியே! - 35


    (நாடு)

    சொந்த வமுதகுணச் சோதிவள நாட்டினான்
    அந்தலின்றி வந்தோரை நாட்டினான்-சந்ததமும்
    (குதிரை)
    புல்லருடன் கூடார்க்குப் போதிப்பி லொப்பரியான்
    பல்கதிகள் வாய்ந்த பதப்பரியான்-சொல்லிற்
    (ஊர்)
    சிவஞான மில்லாதார் சிந்தைப் பதியான்
    பவமில் சீகிட்டிணைப் பநியான்-பவங்களையே
    (மாலை)
    மாற்றார் தனக்குமன மகிழ்தொன்றுந் தாரான்
    சேற்றார் குவளைமலர் சேர்தாரான்-போற்றி
    (கொடி)
    அறஞ்செய்தே வாழ மனமற்றார் கொடியான்
    குறைந்திடா மேழிக் கொடியான்-சிறந்த - 40


    (கொடை)

    கவிபுகன்றோற் கேகனகக் காசே கொடையான்
    குவிதலொன்றாத் திங்கட் குடையான்-புவிதனிலே
    (யானை)

    வாரணத்தை யேகொடியாய் வைத்தவர்பா தம்பணிவோன்
    வாரணாத்தி லேபவனி வந்தருள்வோன் - பார்வான
    (ஆணை)
    அட்டதிக்கெல் லாஞ்செலுத்து மாணையினா னெங்குமிவன்
    சட்டம் நடத்துகின்ற சாமியே!-இட்டமாய்க்

    கந்தனே தெய்வமென்று கைதொழுதன் னோன்நாமஞ்
    சிந்தையிலே வைக்குஞ் சிறப்பினான்-சந்ததமும்

    அன்னங் கொடுக்கு மழகின் பெருமாள்வேள்
    முன்னந் தருகருணை மூர்த்தியான்-மின்னனையீர்! - 45


    சூரனைவென் றான்பதத்தைத் தோத்திரஞ்செய் வோன்புவியிற்
    சூரனைவென் றான்பின்னே தோன்றினோன்-ஓரிலிந்த

    நல்வேத மூர்த்தி நரவடிவே கொண்டுவந்தோன்
    வல்வேத மூர்த்திசொந்த மைத்துனன்-மெல்லியலே!

    எப்பொழுதும் நல்லறிவை யின்பமாய்க் கேட்டுமகிழ்
    சுப்ரமணியன் தந்தையென்றே தோன்றினோன்-இப்பேர்

    அழகின் பெருமாளை யன்பாகப் பெற்றே
    மழலை மொழிதிருத்து மன்னன்-கழவறியாச்

    சுப்பிர மண்ணியனாம் துரைதன் மனமகிழ
    வப்பனெனத் துதிக்கு மாசையான்-ஒப்பிலாச் - 50


    சண்முகவே லப்பருக்குத் தந்தையா னோன்புவியிற்
    சண்முகவே லப்பர்பதம் பணிவோன்-மண்ணிற்

    பெரியோன் அழகின் பெருமாளை யீன்ற
    உரியோ னுலகனைத்து மோர்வோன்-அரிதான

    தன்னடிமை யாகுமிந்தச் சங்கரமூர்த் திக்குவாழ்
    வின்னமுத வும்பெயர னென்றிடுவோன்-மன்னனாம்

    முத்துக் குமாரசாமி மோகமுடன் பெரிய
    வத்தனென வேதொழவு மாகினோன் - வைத்தகர

    நத்தனாஞ் சங்கர நாரா யணற்குரிய
    மைத்துனனா கும்பெரிய வாழ்வினான் - எத்திசைக்கும் - 55


    ஐயமிட்டே வாழும் அழகின்பெரு மாள்பெரிய
    ஐயனென வேதொழவு மாகினோன் - மெய்யற்வெப்

    போதும் பழகுகின்ற பூபதிபட்டமுடையான்
    மாதுலனே யென்றுதொழ வாழுவோன்-சாது
    அழகப்ப னாந்துரையு மன்பா யம்மானென்
    றழகுற்ற தோத்திரஞ்செய் யய்யன்-பழகுங்
    குரநகுலன் முத்துக் குமாரசா மிக்கே
    தரமதிக மாமனென்று சாற்றும்-வரதன்
    குருகைப் பாதிவாழுங் கூரத் தாழ்வார்தன்
    திருமெய்ச் சிறப்புந்தினமே-வருமென்கோ - 60


    சுற்றத்தா ரெல்லார்க்குஞ் சொர்ணமன்னங் கொடுத்துப்
    பற்றுற்றே வைத்திருக்கும் பண்பினான்-சற்றும்
    பசித்தெவர்வந்தாலும் பாலுடனே நன்றாய்ப்
    புசிக்க வமுதருளும் பூமன்-ருசித்தென்றுங்
    கன்னனிவன் றனதுகை பார்த்திருக்க வென்றுஞ்
    சொர்ணங் கொடுக்குந் துரைராசன்-மன்னுஞ்
    செனனமதை வேரருக்கத் தேடு மடியார்கள்
    அனவரதந் தோத்திரஞ்செய் அய்யன்-வினவிலென்றுந்
    தற்பரமா குஞ்சதா சிவமூர்த்தி தனக்கு
    முற்பொருட்குஞ் சங்கரமூர்த்தி-நற்குணவான் - 63


    அக்கிராகரம் பண்ணிவைத்த வன்றுமுதல் பொன்னுலகில்
    மிக்கான வாழ்வு மிகுதியாய்த்-தக்கவர்கள்
    பொங்கி வளரும் புடைமருதூர் தன்னிலே
    மங்களர்க ளான வடகலையார்-இங்கிவரில்
    என்னுடைய தந்தை யிராகவ சாத்திரியார்
    கன்னனிவர் கொடைக்குக் காணாது-முன்னைநூல்
    கற்றதிலே நான்முகனுங் கற்கவறி யானதுபோல்
    மற்றதெல்லாஞ் சொல்வானென் வர்ணித்துப்-பொற்கொடியே!

    (பெற்றோர் தவம் இருந்து பெற்றது)

    இப்படியே வாழும்நா ளேதோ மதலையிலா
    தொப்பிலாத் துன்பமவ ருற்றிருந்து-சுப்பையர்

    (சுப்பையன் என்று பெயரிட்டது)

    சன்னிதியிற் சென்றுவெகு தானங்கள் செய்துபெற்றே
    என்னை(ப் பெற்று)ச் சுப்பையனே யென்றழைத்துப்-பின்னைக்

    (குடுமித் திருமணம் ஆனது)

    குடுமிக்கல்யாணம் கூட்டினார் பின்பூணூல்
    கடிதிற் பொருத்துக் கலியாணம் - முடிவித்து

    (பள்ளியில் பலகலையும் பயின்றது)

    வேண்டியதெல் லாங்கொடுத்து வேறேபள்ளிக் கிருத்தி
    ஆண்டியப்ப வையனிடந் தாக்கினார்-பூண்டிருந்து
    வேதமுதலுள்ள பல மெய்நூ லெலாமறிந்து
    சாதனைசெய் தேவுரைத்தேன் தந்தைமுன்னே-நூதனமாய்ச்
    சோதிடநூலைத் தொகுத்துக் கேட்டே னுரைத்தார்
    ஆதியிலே பாடம்போ லானதே-ஈதிலவாய் - 75


    சையிரண்டு மானதையென் னையனறிந் தேவேட்கப்
    பையவெனக் கேபெண் பார்பரித்தான்-மைவிழியே!
    நானே புலர்காளை நந்தா வனந்தனிற்போய்த்
    தானே சுசிகரமாய்ச் சார்ந்துபுதுத்-தேனார்ந்து
    நாறும்பூ நாதருக்கே நண்ணுமென்று நானெடுத்து
    நாறும்பூ நாதருக்கே நல்குவேன்-பேறு
    கிடைக்கும் வழியையே கேட்பே னுலகோர்
    திடத்தனிவ னென்றே சிறியேன்-நடைக்குத்
    திருஞான சம்பந்த தேவரென வேத
    ரொருவருமென னோடெதிர்க்க வுன்னார் - பெருமையாய் - 80


    (திருமணமானது)

    இப்படியே வாழும்நா ளென்னையர் வேலிக்
    குப்பசாத் திரிதமையே கூட்டிவந்து-ஒப்பிலா
    வென்மகனுக் குன்மகளை யேவேட்க வேண்டுமதற்
    கென்னசெய்தி சொல்லுகிறீ ரென்றுரைக்க-அன்னவரும்
    அப்படியே ஆமென்றே ஆலோசனை முடித்துச்
    செப்பமாய்க் கலியாணஞ் செய்வித்தார்-அப்போழுது
    கல்லியாணஞ் செய்துகொண்ட கன்னிபே ரிந்திராணி
    சொல்லாம் அப்பேர்த் தோகைக்கே-மெல்லத்
    தடிக்க முலைசிவந்து தானே பரந்த
    பிடிக்குவய சஞ்சாறு பெண்ணே-அடிக்கடிநான் - 85


    மாமனார் தன்னகத்தில் வந்துமயி லைப்பார்ப்பேன்
    காமனா ரென்மார்பிற் கஞ்சமெய்வார்-சோமமுக
    வேந்திழையுமே பன்னிரண்டு வயசில் திரண்டு
    சாந்தி முடித்த தகப்பனார்-போந்த
    குணவான மென்னையனை கும்பிட்டு நின்று
    மணமான பெண்ணூம் பூமானும்-இணையாக
    என்னகத்தி லோராண் டிருக்க வியம்புமெண்ரார்
    அன்னவரு மப்படியே ஆமென்றே-என்னையே

    ( மாமனார் வீட்டில் மருமகன் தங்குதல்)

    பெண்ணகத்தில் நீயிருந்து பின்னைவா வென்றருளி
    மண்ணிலுயர் தன்னூர்க்கு வந்தாரே-எண்ணமின்றித் - 90


    தட்டானைத் தேறுந் தறுவிலியுந் தன்மனையாள்
    இட்டம் பிறர்க்குரைக்கு மேழ்மையும்-முட்டமுட்ட
    வேட்டகத்தி லுண்ணும் வெறுவிலியு மிம்மூன்றும்
    ஆட்டின் கழுத்தி லதரென்றே-நாட்டியே
    முன்னோர்க ளோதினதை முன்னா னறிந்திருந்து
    மின்னே! யவளை விரும்பியே-அந்நாளில்
    அஞ்சாறு மாதமந்த வாயிழையோ டுங்கூடிச்
    சஞ்சாரம் பண்ணினேன் தையலே! - மிஞ்சவவள்
    செய்த கலவிவகை செப்பத் தொலையாது
    வைய்யி லடிக்கில் மனங்கோணாள் - பொய்யுரையாள் - 95


    (மணமக்கள் தண்டீசுவரியை வழிபடல்)

    இத்திறம்மா மின்னோடு யானு மிருக்கையிலே
    பத்தியாக காந்திமதி பாதத்தை-முத்தி
    பெறவே தினந்தொழுது பேணுநா ளோர்நாட்
    துறவான தண்டீசுவரியைப்-பிறகாரம்
    வந்து தொழு பின்போய் மாதுதீர்த்த மெடுத்தே
    இந்துநுத லாய் கொண் டிருகண்ணிற்-சந்தோஷ

    ( மஞ்சள் முகத்தில் பட்டது)

    மாகத் தடவினதி லந்த மஞ்ச ளென்முகத்தில்
    ஏகத் திரமா யிவையறிவேன்-பூகொத்த
    கந்தரத்தா யுன்னாணை கண்டமஞ்ச விதல்லாற்
    சிந்தையிற்றா னுஞ்செயத் தேடவிலை-இந்தமஞ்சள் - 100


    (மணமக்கட்குள் பூசல்)

    கண்டாளென் இந்திராணி கண்டவுட னேயசடரக்
    கொண்டே யலர்முகங் குறுகி-வண்டாவி
    தேதென்றாள் நானு மியம்பினே னிதெல்லாஞ்
    சூதென்றே பூசலையுந் தோக்கியே-மாதேகேள்!
    காலங்கள் மூன்றுங் கருத்தி லுணர்ந்தானுங்
    கோலங்கண் டன்னங் கொடுப்பானும்-சாலவே
    தன் கணவன் சொல்லைத் தலைசாய்த்துக் கேட்பாளுந்
    திங்கள்மும் மாரிக்கு நேரென்றேன் - இங்ஙனே
    சொன்ன கவிதையை யத்தோகை யறிந்திருந்தும்
    என்னை முகம் பாரா தேகியே-மின்னாள் - 105


    கடுத்தாள் படுத்தாள் தன்காலா லேவோங்கிக்
    கொடுத்தாளென் நெஞ்சோடே கொண்டேன்-அடுத்தடுத்து
    நல்வார்த்தை சொல்லவந்த நாரிபதமிரு
    பல்விக வேவந்தாள் பார்த்தினிமேல்-நில்லாது

    (திருவுளச்சீட்டுப் போடுதல்)

    கோபமென்றே கண்டுவெளிக் கொண்டு தகப்பனார்
    தாபரத்திற் சொல்வோமோ சாலவே-சாபந்
    தவிர்க்கின்ற காசித் தலத்தே செல்வோமோ
    நவித்தவிசி* நாம்போதன ன்றோ-லவிப்பேதென்
    தேவிவடி வாளடியிற் சீட்டெழுதி சாத்தியே
    மாவிரகத் தாலெடுத்து வாசித்தேன் - காவிவிழி - 110


    (யாத்திரை செல்லத்துணிதல்)

    மின்னே! காசித்தலத்திற் மேவுவது நன்றென்றே
    அன்னேரத் துத்தரவு மாகிவே-சன்னையாய்
    வேட்டகத்தில் வந்துநித மெத்தயெடுத் தேனரங்கு
    பூட்டைமுறித் துள்ளேயான் போகியே-வாட்டம்
    மிகப்பொருந்தி யாத்திரைக்கு வேண்டியது கொண்டேன்
    தகப்பன்திசை நோக்கித் தாழ்ந்தேன்-செகத்துள்ளே

    நீரலை பலநூல் கல்லாத் தலைமகனு
    மரலை யெரியோன் றயலாருஞ்-சால

    மனக்கட் டில்லாத மனையாளிம் மூன்றுந்
    தனக்கட் டமத்துச் சனியாய்-நினைத்தென்றே - 115


    (நூறு சிவத்தலங்கட்கு ஏகுதல்)

    புண்ணியதீர்த் தங்கள்தலம் போயறிய மேண்டுமென்றே
    எண்ணியே நச்சநல்லூர்க் கேகினேன்-மண்ணியலுயர்

    செப்பறைக்குச் சென்றுதிரு வம்பல வாடி
    முப்பொழுதும் போற்றினேன் மோகமாய்-ஒப்பில்

    கழுகுமலைக் குப்போய் கந்தரிரு தாளை
    முழுகித் தொழும்பணியு முற்றிப்-பழுதிலாச்

    சங்கரனார் கோவிலிற்போய்ச் சார்த்தங் கிருவடிவாஞ்
    சங்கரநா ராயணரைத் தாழ்ந்திறைஞ்சி-மங்களஞ்சேர்

    சீவில்லி புத்தூரிற் சென்றுதிரு மாலுடனே
    தேவிநாச்சி யாரையும்நான் தெண்டனிட்டுப்-பூவிற் - 120


    திருப்பெருங் குன்றத்தே வாழ்செவ்வேள் பொற்பாதம்
    விருப்புடன்பூ சித்துடனே மீண்டேன்-கருத்தாய்

    மதுரையிலே சொக்கலிங்க மாதவரைக் கண்டு
    புதுமலர்மே லாயும்வண்டு பூணும்-மதுவார்

    திருமாலை வாங்கியவர் சேவடியிற் சாத்தி
    இருபோதும் நானே யிறைஞ்சிப்-பொருவிலா

    மீனாட்சி யம்மனையும் மீண்டு தொழுதவட்குத்
    தானாக்கித் தங்கவங்கிச் சாத்தினேன்-நானே

    திருச்சிராப் பள்ளிக்கே சென்று தாயான
    உருத்திரரைக் கண்டுமன தோர்ந்து-விருப்பால் - 125


    திருவானைக் காவுக்கே சென்று சம்புநாதப்
    பெருமான் அகிலாண்ட பேதை-அருள்பெற்றே

    சீரங்கப் பட்டினத்திற் சென்றுரங்க நாயகருஞ்
    சீரெந்த நாளும்நிறை செம்பதுமீ-யாரென்றும்

    அம்மையரங்க நாயகியு மன்பா யெழுந்தருளுஞ்
    செம்மையையுங் கண்டு தரிசித்து-மும்மைவினை

    தீர்ந்துதிரு வாரூர்த் தியாகர்பதம் போற்றி
    ஓர்ந்துசிவ காமிசர ணுட்கொண்டு-தேர்ந்து

    திருவீழி மிழலைக்கே சென்றரனைத் தேடிக்
    கருவே ரறநானே கண்டு-பரவித் - 130


    திருப்பட்டி யூருக்கே சென்று பட்டீசர்
    கருத்தைக் கண்டோடிக் கனிந்து-விரும்பத்

    திருவா வடுதுறையிற் சேர்மாசில் லாதார்
    முருகா மொப்பில்லா முலையுந்-திருநாள்தேர்

    கொண்டருளும் போதுகண்டு கும்பகோணத்திற் போய்
    இண்டையணி கும்பேசு ரனையும்நான்-கண்டு

    திருவே ரகத்திற்போய்ச் சேவித்தேன் வேளைக்
    கருவே ரறுமென்றே கண்டு-பொருவில்

    திருமத்தி யார்ச்சுனத்திற் சென்று மருதப்பர்
    இருவர் பாத மிறைஞ்சி-பரிவுற்றுச் - 135


    சீகாழி யூருக்கே சென்றரனைச் சேவித்தே
    மாகாத வாறே வணங்கினேன்-தோதாய்

    திருநல்லூர்க் கேகித் தெரிசித்தேன் தேவைப்
    பெருநல் வழியைப் பெறவே-கருதிச்

    சிதம்பரத்திற் கேகித் திருமூல லிங்கர்
    பதம்பரவிப் பொற்சபையும் பார்த்து-விதம்பெறவே

    ஐஞ்ஞூறு பொன்னை யளித்தே னடிபணிந்தேன்
    மெய்ஞ்ஞான மேன்மேலும் வேண்டுமென்றே மஞ்ஞாய்கேள்!

    காஞ்சிபுரத் திற்போய்க் கண்டேனே காம்பரனை
    வாஞ்சைமிக்கு கொண்டுபல்கால் வாழ்த்தினேன்-ஆஞ்சேய் - 140



    அதிகவிருத் தாசலத்தி லன்பாக முத்தா
    நதியுமுது குன்றரெனும் நாத-நீதியைத்

    தெரிசித்தேன் பின்பு திருக்காளத்தி
    எரிகண்ணான் காளத்தி யீசன்-பொருவிலா

    ஞானப்பூங் கோதையையும் நான்கண்ட னன்பணிந்து
    ஞானச்சார் பும்பெறவே நாடினேன்-தானன்பின்

    கிட்டிணா நதியிற்போய் கேடிலா தாடியபின்
    கிட்டிணா கோதாபுரிக் கேகினேன்-சட்டமதாய்த்

    தீர்த்தமாடி யமுனைத் தென்னதியில் மூழ்கியே
    பார்த்தே னென்பாவம் பறந்ததையும்-நேர்ந்தவழி - 145


    சென்று சரையுவெனுந் தீர்த்தமதில் மூழ்கியே
    அன்றுதுடைத் தேன்வினைக ளத்தனையும்-நன்றுதருங்

    கங்கை நதிதனைப் போய்க் கண்டேனென் கண்குளிர்ந்தேன்
    அங்கதனில் மூழ்கிநன்னீ ராடினேன்-மங்களஞ்சேர்

    காசிவிசுவ லிங்கர் கன்னிவிசா லாட்சியையும்
    மாசிமுதல் தைவரையும் வாழ்த்தியே-பூசித்துத்

    தானதவ மென்றுகன்னி தானமென்று சரணையென்று
    மானதிரு வாபரணம் மங்கியென்றும்-நூதனந்தீர்

    ஆலையங்க ளென்றுபதி னாயிரம்பொன் நாங்களந்தக்
    காலைகங்கைக் காவடியுங் கைக்கொண்டு-சோலை - 150


    செறிந்த திருநல்லூர் திருநகர்க்கு வந்து
    பிறிந்துதிரு வொற்றியூர் பேணி-அறிந்து

    விருப்பமுடன் நானே மின்னே பணிந்துதிருப்
    பெருந்துறைத் தலத்திற் சேர்ந்தே-உருக்கமாய்

    ஆளுடையார் வீற்றிருக்கு மாலையத்திற் சேர்ந்தவர்பொற்
    றாளுறநான் கண்டு தலைபணிந்து-நாளும்

    மருப்பொருந்துஞ் சோலை மலையி லழகர்
    ஒருத்தியாம் லட்சுமியு மொன்றாய்-விரும்பத்

    திருவிழாக் கொன்டருளச் சேவித்தேன் பின்பு
    திருவலஞ் சுழிதனைச் சேவித்தேன்-உருகி - 155


    நடந்துரா மீசுரத்தில் நான்ராம லிங்கர்
    மடந்தை பொற்பதமாம் மனதைத்-திடம்பெறவே

    வந்து தொழுதுகொண்டு வந்தவொரு காவடியை
    அந்தல* மா*மீசுரனுக் *காக்கியே-பின்பு

    வயிரவ பூசைக்கே வடமாலை சார்த்தி
    அயில்விழியே! பார்பனகன்று*-வெயில்ல

    நவபாஷா ணத்திலே நான்தீர்த்த மாடிப்
    பவமேகக் கண்டேன் பதுமீ!-தவமார

    திருப்புல்லா ணிக்குவந்து சேர்ந்து பள்ளிகொண்டோன்
    திருப்பாதங் கண்டு தெரிசித்தேன்-விருப்பாய் - 160


    உத்தர கோசமங்கை யுற்றொருநா ளங்கிருந்து
    அத்தா மங்களே யடிபணிந்தேன்-நத்தியே

    ஆற்றூரிற் சோமலிங்க ரம்மையெங்கள் சோமவல்லி
    பாற்றூய னாகப் பணிந்தேன் - ஈற்றிலே

    (யாத்திரை முடிவு)

    சங்குமுகத் திற்போய்த் தானமுஞ்செய் தந்நேரம்
    அங்கணாயக் கர்மடத் தாக்கியே - மங்காய்! நான்
    பார்த்தேன் செலவும் யாம் பார்வரவு மெல்லாம்
    சேர்த்தேன் சரிகண்டேன் செல்வியே! - தீர்த்தச்
    செலவி லிதுவரையிற் சின்னக்கா சில்லை
    உலகம் பழிக்க வுடலிற் - பலவாய்த் - 165


    துன்பத்தை மேவினேன் தோகாய்! இவ் வையாண்டில்
    இன்பத்தை மேவவினியங்கே - யன்புற்ற
    வாத்தியார் தன்னகத்தில் வந்திருந்து கொண்டுவெகு
    நேத்தியாய்ப் பேணினேன் நேருடலை- வாய்த்ததேன்

    (நாரண வாத்தியாரின் அகம் செல்லல்)

    நானினைந்து மாசிவிழா நாட்கொடியேற் றன்றுவள
    மானதிருச் செந்தூரி லன்றுவந்து-மானபரன்
    நாரணவாத் தியாரகமே நன்றென்று சென்றுமனப்
    பூரணமா யங்கவரைப் போற்றினேன்-வாருமிரும்
    எங்கே யிருந்துவந்தீ ரென்றா ரியம்பினேன்
    அங்கேயென் செய்தியெல்லா மன்பாக - மங்காய்! பின் - 170


    கங்கை யெடுத்தவர்தன் கைக்கொடுத்தே னன்றுமுதல்
    எங்கள் குடிக்குநன்மை யெய்தியதே-அங்கவரும்
    அன்பாக வாங்கியவர் புரோட்சித் தெவர்க்கும்
    பின்பே கொடுத்துப் பிரியாமல் - என்பாலே
    ஓராண் டிருமென் றுபசரித்தா ராமென்று
    நேராம் பரகதிநெஞ் சில்வைத்துச் சீரார்ந்த

    (திருச்செந்தூர் ஆண்டவனை வழிபடல்)

    கந்தவரையு மெங்கள்சண் முகநாதன் கொலுவும்
    அந்தவத னாரம்பமாங் கடாலும்-இந்தழகைச்
    சண்முக விலாசமதிற் சார்ந்துகண்டே நப்பொழுதே
    எண்ணரும் பவக்கடல்விட் டேகினேன் - பெண்ணே! - 175


    வதனாரம் பமுதலாய் மாவிருபன் னானங்கு
    சததீர்த்த மாடித் திரும்பி-விதவிதமாய்

    அஞ்சாறு பொன்தான மவ்விடத்தே செய்துமிக்க
    பஞ்சாட்சரஞ் சேவித்துப் பண்பாக-விஞ்சையருள்

    சண்முக நாதனிரு பாதத்தைத் தொழுதுடன்போய்
    விண்ணவரும் மண்ணவரும் வேண்டுகின்ற-பண்ணவனாஞ்

    சுப்பிர மண்ணியர் துணைத்தாளைப் போற்றியதற்
    கப்புறமற் றாலையங்க ளானவெல்லாந்-தப்பாமல்

    ஆறுகா லங்கள்தொழு தன்றுமுத லானையின்மேல்
    ஏறும்நா லாந்திருநா ளின்வரையும்-வேறுநினை - 180


    வில்லாம லிப்படியே யேத்திடிலஞ் சாந்திருநாள்
    வல்லான கலாபமயி லேறி-எல்லோருங்

    காண வெழுந்தருளக் கண்டுபின்நான் வந்துமனம்
    பூணவே வேதம் புகன்றுவரில்-நாணமுறும்

    மின்னே! பொல் லாக்காலம் வேறே நினைவுதந்து
    முன்னே யிழுத்ததுநான் முன்போனேன்-அந்நேரம்

    (நடனமாதைக் கண்டு, கருத்தழிதல்)
    சன்னிதியிற் றாதியர்கள் ததிங்கத் ததிங்கிணத்தோம்
    என்ன நடிக்கையிலோ சேந்திழையை-மின்னே! யான்

    நண்டுசிப்பி வெய்*கதலி நாசம்வருங் காலமதில்
    கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடியீர்! - 185


    போதத் தனங்கல்வி பொன்றவருங் காலமதில்
    மாதர்மேல் வைக்கு மனமென்றே-ஓதல்போற்

    கண்டேன் மருண்டேன் கருத்தழிந்தேன் மாலால்வாய்
    விண்டேன் மதர்த்தேன் விதிர்த்தேனே-கொண்டைச்

    சொருக்கின் சொருக்கினுள்ளே தொங்கலையுங் கண்டேன்
    கருத்து மயங்கிக் கரைந்தேன்-விருப்பமுடன்

    நெற்றியிலே யிட்டபொட்டின் நேர்த்தியைக்கண் டப்பொழுதே
    சற்றுமடங் காவிரக சன்னதமாய்-முற்றும்

    பரதப் பழக்கமுறும் பாவைநுதல் கண்டேன்
    பரதவித்து நின்று பதைத்தேன் - சரமநேர் - 190


    விழியின் மருட்டுமது மீண்டுவரு மானின்
    தொழிலதையுங் கண்டறிவைத் தோற்றேன் - தெளிவுநவ

    ரத்தினத்தோ டிட்டிருக்கும் ராசகொலு வையென்கண்
    பெற்றவிடத் தேகாமப் பேய்கொண்டேன்-சற்றிணையில்

    பல்வரிசை கண்டிவள்தன் பாதம் பணிவதன்றி
    நல்வழியொன் றில்லையென்றே நாட்டினேன்-மெல்லவே

    நாளிற் கனத்தமுலை நாம்பூசை பண்ணுகின்ற
    சாளிக் கிராமமென்றே தான்கொண்டேன்-கேளிக்கை

    ஆடுகையி லேயசைக்கும் அங்கைதனை யும்பெரியோர்
    நாடுமபை யத்தமென்றே நான்கொண்டேன்-பாடுவர்கள் 195

    சொற்கடங்காப் பேரழகு தோகை வயிறுசங்கப்
    பொற்பலகை யென்றுமனம் பூரித்தேன்-மற்றதன்மேல்

    ஓதிரதி பங்கனம்போ! வுந்திரோமத் தொழுங்கோ!
    மாதிரத வஞ்சிராணி வாய்த்ததோ-தூதியே!

    மின்னிடையைக் கண்டு மிகவு மயங்கியவன்
    தன்னடியின் கீழே தலைகுனிந்தேன்-வன்னமணி

    மேகலையைக் கண்டு மிகுசோப மாகியெந்தன்
    ஆகமனைத் துங்குலைந்த தங்கனே-தோகை

    துகிலுமதிற் சரிகைச் சோதியுங் கண்டாங்கே
    அகிலம் நகைக்க மதியானேன்-சகியேநீ! - 200


    கண்டா லுடன்மயக்குங் காலடிகண் டேகாமங்
    கொண்டாவே[லே] சல்லவெகு கோட்டாலை-எண்டிசையோர்

    கண்ணை மயக்குமுடற் காந்தியென்றே கொண்டதல்லால்
    என்னை மினுக்கமென்றே யானறியேன்-பெண்ணே!

    நடிக்கும் பரதவிதம் நட்டுவ னண்ணாவி
    துடித்துப் பயிற்ற லறியேன்-துடிக்கொப்

    பகில மயங்குமவ ளிடையின் தேய்வைத்
    துகிலிறுக்க மென்றவர் சொன்னார்-சகியே! - 205


    சொருகுகுழ லத்தனையுந் தோகைகுழ லன்றிக்
    கரிய கவரியென்றே காணேன்-திருமேனி

    வாடைக் குணத்தைமயி லுடலவர்க்கென் றிருந்தேன்
    மேடைப்பூ லான்பொடியாய் விண்டாரோ-காடைக்

    குரல்கூவுங் கோதைசித்திரக் கொட்டகை யுள்ளானாள்
    பரலோகி போல்நின்றேன் பாங்காய்-அரகரா

    வென்று தொழுவோரு மிருமைமயி லோன்கொலுவும்
    நன்றுபணி மாறுகின்ற நேர்மைகளுஞ்-சென்றுசென்று

    பார்ப்பா ரவரவரே பைங்கிளியை நான்பிரியேன்
    கூர்ப்பென் றிவையந்தக் கோதைதன்மேல்-தாக்குறவே

    என்னறிவும் நன்றா யிதமகிதம் பார்க்கின்ற
    நன்னெறியு மவ்விடம் நகைக்கிடமாய்-முன்னமவள் - 210


    காலசைக்கி லென்னுடைய காலசையுங் கையுடனே
    மேலசைக்கி லப்படியென் மெய்யசையும்-ஆலம்

    (நடனமாது, புன்னகை புரிதல்)

    நிகர்விழியாள் நாட்டியத்தில் நின்றாடும் போது
    நகைபுரிந்தா ளென்முகத்தை நாடி-நகைபலவாய்

    (அம்மாதின் புன்னகையைக் கண்டு, தவப்பயன் எனல்)

    நான்பூண் டிருந்ததெல்லாம் நாரிகண்டோ? என்மயலைத்
    தான் தீர்க்க வேண்டுமென்ப தாந்தயவோ?-வான்புகுமென்

    முன்னவரே செய்ததவ முற்றிவரும் பயனோ?
    பின்னைநான் காசிகண்ட புரமோ?-என்னவோ?

    என்றே நினைத்தல்லால் என்கையிலோட் டைதரவே
    இன்றேபார்த் தாளெனநா னெண்ணாது-சென்றே - 215


    விளக்கிற் பறந்துவிட்டில் வீழ்வதுபோல் நானே
    கிழக்குமேற் காயவள்முன் தெ*ர்ச்சித்து-உழக்கியே

    நானடைந்தேன் போகவர நாரி கண்டா ளொயிலையோ
    வானவர்சே னாபதியை வாழ்த்தாது-போனதெல்லாம்

    சந்தோஷ மானதல்லாற் தாதியர்கள் காணவிங்கு
    வந்தே னலைவதேன் வைத்துணரேன் - இந்தமையல்

    (நடனமாது தன்வீடு செல்லல்)

    கொண்டலைந்தேன் நான்மிகவுங் கோதாயவ் வேளையிலே
    வண்டுவிழி யார்கோயில் வாயில்விட்டுச்-செண்டைப்

    பிடித்தகர மானமற்றப் பெண்க ளெல்லாங்
    கூடியுடுச் சந்திரனை வளைவதொத்தே-அடுக்கவளைந் - 220


    திவ்வாறே சென்றாரவ் வேந்திழைவா யில்வரையும்
    வெவ்வேறே யேகினர்பின் விடதனில்-அவ்வேளை

    இவ்வளவுங் கண்டே இவள்நமையுங் கூடுவளோ?
    அவ்வளவும் நாம்போ யறிவதெனுங்-கவ்வையினால்

    சார்த்திவிட்டால் மோசமென்று தான்போனேன் - கோர்த்த முத்து

    (நடனமாதின் வாயிலில் தோழியைக்கண்டு வினவல்)

    மாலையுடன் பொன்னின் வடமே புனைந்துவன்னச்
    சேலைதரித் தேதிலதந் தீட்டியதோ?-வேலைப்

    பழித்தவிழி யாளோர் பாவைதா னாங்கென்
    மொழிக்கடங்காச் சுந்தரமாய் முன்னே - வழித்தலையில் - 225


    வந்தவளை நான்பார்த்து மாதே! நீ யாரென்றேன்
    இந்தமயி லினடிமை யானென்றாள் - அந்தமின்னைத்

    துன்பமதில் வந்துயிரைத் தூக்குமெம தூதனைநான்
    இன்ப மருத்துவனா யெண்ணுவபோல் - அன்பினளாய்

    (தலைவனிடம், தோழி தலைவியை வியந்து கூறுதல்)

    எண்ணி யுனக்குமுன்னே யேகினப்பெண் ணாரெனவப்
    புண்ணியவாட் டிபுகன்றே பொய்யைக்கேள்!-விண்ணில்வாழ்

    இந்திராணி யென்றுமாதி யேந்திழையென் றுந்திருவாஞ்
    செந்தா மரையுறையுஞ் செல்வியென்றும் - இந்தவகைப்

    பெண்களெல்லா முன்புவியைப் பேணிவரிற் கண்ட்நாரி
    கண்குளிர இம்மாதைக் கண்டபின்பு - பண்பான - 230


    வெண்கலத்தைக் கண்டோர்கள் வேண்டி முனம்விரும்பு
    மண்கலத்தின் மேல்மனது வைப்பரோ? - ஒண்பொருளாம்

    பத்தரைமாத் துப்பசும்பொன் னையுங்கண்டு முன்போல்
    பித்தளையை யேவிரும்பும் பேருண்டோ?-உத்தமரே!

    ஆற்றிலே வெள்ளம்வந் தாலாருஞ் சகதிகொண்ட
    ஊற்றிலே நீரெடுத்து முண்பாரோ?-போற்றும்

    மருக்கொழுந்தும் பிச்சியிரு வாட்சிமலர் கண்டோர்
    எருக்கின்பூச் சூடுவரோ? இன்னும்-பெருத்தநிலைக்

    கண்ணாடி வந்திருந்தாற் கங்கையையோர் செம்பில் வைத்தே
    உண்ணாடித் தன்னழகை யோர்வாரோ?-மண்ணிற் - 235


    சலதாகங் கொண்டவர்க்கே செவ்விளைநீர் வந்தாற்
    குலமாகும் வேம்பிநெய் யாகுமோ? அலகிலா(து)

    இவ்வுவமை போல்விண்ணி லேந்திழையோ ரையிகழ்ந்தார்
    அவ்வுலகம் விட்டுவரா ரன்றுமுதல் - நவ்வியிவள்

    இப்புவிக்கு நாயகமா மெல்லோர்க்கும் நல்லமிர் தந்
    தப்பறுங்கா மப்பிணிக்குச் சஞ்சீவி!-ஒப்பிலாக்

    காளைக் குமாரருக்கே கண்மணி! அதுவல்லால்
    பாளைக் குழலியர்க்கும் பஞ்சமிர்தம்!-ஏழைக்

    கிரங்கு மமுதகுண வேந்திழை யாமையர்
    வரங்கள் தருமெங்கள் மயிலாந்-துரங்கர்பணி - 240


    நிற்கு முதலியார் நேமிக்குங் கட்டளையாள்!
    சற்குண குணாலத்த ளிப்பாவை!-கற்றவர்க்காங்

    கல்விக் கடலாம்! கலவிசெயுங் காமுகர்க்கே
    சொல்லுக் கடங்காச் சுகங்கொடுக்கும்-நல்லவள்காண்!

    இக்கோயில் தாதியர்க்கே யாங்கள் முதற்குடியாம்!
    எக்கோணத் திற்குமெம்சீட் டேறுமிப்போ!-மிக்கான

    காந்திகொளும் மேனிக் கயல்விழியாள் தன்நாமஞ்
    சாந்தகுண மோகன சவுந்தரியாம்!-போந்தவரே!

    (தோழி, தலைவனின் ஊர்பேர் முதலியன வினாவல்)

    ஆதியிலே நீங்களிப் பாகுமூர் எவ்வூரிவ்
    வீதியிலே வந்தருள வேண்டுவதென்?-கோதிலரே! - 245


    எங்கேயோ உங்களையும் யான்கண் டிருப்பதுண்டே
    துங்கனே உம்மூர்பேர் சொல்லென்றாள்-சங்கையிலா(து)

    (தலைவன், ஊர்பேர் முதலியன கூறல்)

    இப்புவியில் மிக்கானயென் அப்பாவின் பேருஞ்
    சுப்பையனென் றென்பெருந் தூதியே!-செப்பமாய்

    நானிருந்த ஊருமிந்த நங்கையரை வேட்டதுவுங்
    கானிடங்கள் சென்றதையுங் காவியம்போல்-வாய்நிறைஞ்சுந்

    தூதியர்முன் சொல்லியுங்கள் தோகைமே லாசைகொண்டே
    வீதிதனில் வந்ததென்றே மெய்சொன்னேன்-பாதிமதி

    (தோழி, தலைவியின் அருமைசாற்றல்)

    ஒப்பாகி யந்துதலா வோதுமதி வஞ்சகத்தைத்
    தப்பாமல் கேள்நீ! சந்தனமே!-செப்பாந் - 250


    தனத்தாளை நீர்சுடுந் தன்மையோ? அன்றித்
    தனத்தாலே வெல்லுந் தரமாமோ?-மணத்தால்நீர்

    வெண்கலத்துக் கொத்தவிலை கொடுத்துப் பொன்னான
    வொண்கலத்தைக் கொள்வீரோ? ஏதுமென-நண்பாய்!

    அரைக்காசிற் கொண்ட பரியாற்றைத் தாவாதென்
    றுரைப்பா ரதையறியீ ரோநீர் - தரைப்பாலே

    அத்தைமகளோயிவள்தான்? ஆரும்விரும் பாச்சரக்கோ?
    சுத்தவிலை யோ? உமக்குச் சொல்லுங்காண்!-உத்தமரே!

    அன்புவைத்தீ ரென்றா ளதிருபாற் றினமே
    பின்புமவளென்னையும் பேணியே-கன்றைவிட்ட - 255


    ஆப்போல வே மறுகு மையனே! அங்குசொல்லி
    பார்ப்போ மெனப் பகர்ந்த பைங்கிளிமுன் - வாய்ப்பாகும்

    (தலைவன் தலைவியின் எளிமை சாற்றல்)

    ஆலம்போல் நீலவிழி யங்கயற்கண் மாதரசே
    காலம்போம் வார்த்தைநிற்கும் கண்டாயே! - சாலப்

    பசித்தார் பொழுதும்போம் பாலுடனே அன்னம்
    புசித்தார் பொழுதும்போம் போமென்று - இசைத்துமுன்னோர்

    (தலைவன் தோழியிடம் பணையம் வினவல்)

    சொன்ன கவிதையைநான் சோராது உரைத்தவுடன்
    என்னசெய்ய வேண்டுங்கா ணென்றுரைத்தாள்-அந்நேரம்
    பெண்ணே! பணையமென்ன? பேதகமில் லாதுரைத்தால்
    எண்ணே னெடுத்தளிப்பே னென்றுரைத்தேன்-பெண்ணார் - 260


    ( தோழி, தலைவனுக்குப் பணையங்கூறல்)

    அமுதையுமித் தாராள மான மனதாற்
    சமுசயமில் லாதணைவீர் சாமி-கமுகிணைந்த

    கந்தரத்தா ளைப்புணருங் காமுகரீ யும்பணையஞ்
    சந்தனத்தாற் கெண்பதுபொன் சாதிரைக்கே-நந்தா

    பரிசா ரகமாதர் பற்றுவர்பொன் நூறு
    பிரியாத் தோழியஞ்சு பெண்கள்-விரியாத

    மின்னலா யம்மாதர் வேண்டுவர்பொன் ஐஞ்ஞூறே
    அன்னையர்க்குச் சேலைக் கைம்பதுபொன்-கன்னி

    குளிக்குங் களபவிலை கொஞ்ச முப்பதாம்பொன்
    தெளிக்கும் பனிநீர்ப் பத்தெண்பொன்-கிளிக்குரைசொல் - 265



    மின்னாள் தனக்கென்றே வேறே கொடுப்பதெல்லாம்
    பொன்னாயிரங்கிழியே!போதுங்காண்!-முன்னேயிவ்

    வாயிரத்தெண் ணூற்றோடே ஐம்பதுபொன் னுங்கொடுத்தாற்
    றோயிதத்தில் வேணசுகம் பெறலாம்-வாயினிக்க

    (தலைவன் ஈராயிரம் பொன் ஈதல்)

    உண்ணலா மின்னிதழி னூறுமமு தையென்றாள்
    எண்ணியீ ராயிரம்பொன் ஈந்துபின்னுங்-கண்மணியே!

    காப்பாய்நீ! உன்னிரண்டு கைப்பிடிநான்! காவாயேல்
    தாப்பாரு மில்லையென்றேன் தாதிசொன்னாள்-பார்ப்பார்க்கு

    வாய்ப்போக்கே னென்றவச னப்பழமை யுண்டே
    போய்ப்பார்க்கே னென்றே புகன்றுநின்றாள்-வேய்க்கழுத்தாள் - 270


    (தலைவன் தோழியிடத்து அடையாளங்கேட்டல்)

    சம்மதித்தால் கால்கொலுசுச் சங்கிலியை நீவாங்கி
    நம்மிடத்தில் வாவென்றேன் நாரியே!-விம்மிப்போய்க்

    (தலைவன் தானே நினைந்து வருந்துதல்)

    கெட்டகுடிக் கேற்றதெப்பங் கிட்டினதாய்ச் சொன்னாளோ?
    கட்டிநிதிக் காரனென்றே காட்டினளோ?-இட்டமாய்த்

    தேடியமுள் ளுத்தனியே தேனேயுன் காலிலிப்போ
    ஓடிவந்து பாய்ந்ததென்றே ஓதினளோ?-கோடிதரஞ்

    சென்றாடுந் தீர்த்தமுனைத் தேடி வலியவிங்கே
    நன்றாக வந்ததென்றே நாட்டினளோ?-அன்றிக்

    குரங்காட்டங் கொள்ளவிந்தக் கோமாளி யாமென்று
    இரங்காளியம்பியோ!யென்னோ!-வரம்பாக - 275


    நாலாறு நாழிகையாய் நாரிவரக் காணாமல்
    வேலாயு தன்பதத்தை வேண்டியே-நூலாம்

    இடையாளுஞ் சம்மதித்தா ளென்றசொல்லைக் கேட்டால்
    கிடையாத ரத்தினக் கிரீடம்- அடையாளம்

    ஆகத் தருவாளென் றாணையிட்டே னப்பொழுதே
    மோகச்சகி யும்என்கண் முன்வந்தாள்-தாகத்தால்

    (தலைவனிடம், தோழி தூது சென்றுவந்ததைக் கூறல்)

    பாங்கிநீ! சென்றசெய்தி பாலோ சீலோவெனநான்
    ஏங்கினேன் பாலென் றியம்பியே - தீங்கிலாத்

    தூதுசொலிப் பட்டசலஞ் சொல்லத் தொலையாது
    போதுமெனக் கையனே போதுமென்றாள்-ஏதுசெய்தி - 280


    என்றே பதறிவந்த யென்றூதி யம்மைபாற்
    சென்றே நடந்தசெய்தி செப்பினேன்-அன்றேடீ

    போந்த வுதாரனுக்குப் பொன்றுரும்பு சூரனுக்குச்
    சேர்ந்த மானஞ் சிறுதுரும்பு-ஆய்ந்த

    அறவனுக்கு நாரி யறத்துரும்பு நெஞ்சில்
    துறவனுக்கு வேந்தன் துரும்பு-முறைமையாய்

    ஆய்ந்தவரே! இக்கவிதை யாதியிலே சொன்னதெல்லாம்
    ஏந்திழையே! கேட்டிருப்ப தில்லையோ?-சேர்ந்தபுகழ்

    ஆடவராய் வந்தா லழைத்துவர வேண்டுமல்லாற்
    கூடவும்நீ சந்தயமாய் கூறுவதேன்?-மூட - 285


    மதியாய்! பணத்தைமுன்னே வாங்கிவர லாமோ?
    புதிதாயிப் போபணத்தைப் போற்றேன்-சதிகாரி!

    துன்மதியால் வாங்கிவந்த சொர்ணமதை நீகொடுத்து
    நன்மதியா னையனேபோ நாரியென்றே-அன்னையார்

    இப்படியே சொன்னா ளிதோபணத்தை யேகொடுத்து
    முப்புரிநூ லோனையுன்றன் முன்னமே-செப்பமாய்க்

    கூட்டிவா ரேனம்மா கோபிக்க வேண்டாமுன்
    பாட்டிலே நீயிரென்றுன் பைங்கிளிபால்-நாட்டமாய்

    வந்தேனவளும் வந்தமாப் பிள்ளையெங்கே யென்றாள்
    இந்தா பரிச மிணங்கியவர்-தந்தையுன் - 290


    அம்மை வாங்கேனென் றவர்பாற் கொடுத்திடென்றாள்
    சம்மதித்து வாங்கான் தவிப்பாய்நீ-தும்மிடத்திற்

    சொல்லவந்தே னென்றதற்குன் தோகையவர் வாரமட்டும்
    மெல்லவவர் பொறுக்க வேண்டுமென்று-சொல்லிப்

    பணமுடிப்பை வாங்கிப் பருந்தனத்திற் சேர்த்து
    மணமுடிக்க வந்த மதனைக்-குணமாகக்

    கூட்டியவா வென்றவளே கூறித்தந் தாள்கொலுசென்
    றாட்டியதி ரூபரத்தின மானசகி-காட்டினது

    (தலைவன், தோழியிடம் தான் மகிழ்ந்துகூறல்)

    சீதையெனு மம்மையன்று தேங்கிச் சிறையுறுமப்
    போதையிலும் மெய்ப்பாதன் பூமியிலே-காதலினால் - 295


    அக்கினியை மூட்டி வலம்வருங்கா லந்தனிலும்
    மிக்க வனுமன் விரைவாக-முக்கியர்

    திருவாழி காட்டிநின்ற செய்கைபோல் தம்பி
    பெருநாக பாசம் பெறுங்கால்-அருகாக

    வந்த கருடனைப்போல் மாதேயவ் வேளையெனக்
    கந்த மகிழ்வுபோ லானதே-சந்தமுறும்

    (தலைவன், தலைவியின் கொலுசுபெற்றுத் தலைவியிடம் சென்றது)

    அக்கொலுசைக் கைநிறைய அன்பாக வாங்கி யெந்தன்
    இக்கணிணைக் கேயணிந்தே னென்மயலால்-வெட்கமிலா

    நானே படும்பரிசை நாரிகண்டு வேட்டையின்று
    தானே பலித்ததெனச் சந்தமுற்ற-மானெய்வாள் - 300


    தேடித் தவிப்பாளே சீக்கிரம்வா ருங்கோவென்
    றாடிப் புளகித் தணிமுலையாள்-வேடிக்கை

    ஆகவே முன்னடந்தா ளந்தமின்னை நான்றொடர்ந்து
    போகவே பின்வந்தோர் போற்றச்சீ-தாகம்போல்

    (தாதியர் புடைசூழ்ந்து பரிகசித்தல்)

    மச்சான்நீ வாருமென்று மான்போலக் கிட்டவந்து
    முச்சாணீ ளத்திழுத்தேன் முன்னின்றாள்-அச்சணத்தில்

    அன்புடையாள் போலொருபெண் ணத்தானே! வாருமென்று
    என்பிறவீ! வாருமென்றா ளேயொருபெண்-முன்பாக

    வந்துமறித் தண்ணாவி! வாருமென்றா ளேயொருபெண்
    இந்துமுகப் பாவைய ரிரண்டுபேர்-சந்தோஷ - 305


    மாகவந்தே தம்பீ!நீ ராருடன் வந்ததென்றா ள்?
    தாகமும்போ லோர்கிழவி தானும்வந்து-மோகமாய்ப்

    பேரனார் வந்தீரோ? பெண்ணா யென்றுரைத்தாள்
    துரவுமோர் கன்னிவந்து தூண்மறைவில்-சாரநின்று

    (தலைவன் தாதியர்கட்குப் பதில் கூறி அமர்தல்)

    மாமனாரே! வாரும் வாருமெனக் கேட்டாள்
    ஆமம்மா வென்றிவர்கட் கோதியே-காமமாய்

    நூறுநாய் கூடியொரு நொண்டிமாட்டைக் கடிக்க
    வேறுபுக லின்றியொரு வீண்செடியின்-தூறுபுகுந்

    தப்பொழுது வெம்புலியொன் றங்கே கிடந்துகண்டு
    தப்பவிடா மற்பிடிக்கத் தான்பதுங்கும்-அப்படிபோல் - 310


    வீணிகளாய்க் கூடியெனை வேதனையே செய்யவங்கே
    நாணமிலா மாமிகண்டு நாணியொரு-கோணமதில்

    ஓடிப் பதுங்கிடநா னுள்வீட்டிற் போய்புகுந்து
    வேடிக்கை யாய்தடத்தில் வீற்றிருந்தேன்-கூடியே

    வெண்சா மரையும் மயில்விசிறி நாலாறும்
    பண்பாஞ் சிறுவிசிறி பத்துடனே-தண்சேரும்

    பன்னீர்க் கலசமெடுப் பித்துவிக்கக் காளாஞ்சி
    மின்னார்க்குங் கண்ணாடி வேணவிதம்-பொன்னால்செய்

    கைவிளக்கே நான்கு பக்கம் பரவுமஞ்சு
    மெய்வியர்த்தா லொன்றிரண்டு வெட்டியுடன்-அய்யோ - 315


    அடப்பமொரு நான்கு மாக விந்தவென்
    மடக்கொடியார் கொண்டு வளைந்தாற்-கடப்பவரார்?

    இந்திராதி போகமதற் கெய்தாதே டீமயிலே!
    இந்திராணி யித்தனையு மேற்குமோ?-சந்தோஷங்

    கொண்டேநாம் நம்மாதர் கூடுங் கொலுவிருப்பைக்
    கண்டேயம் மாமிவெகு காதலாய்ப்-பண்டே

    பழகியிருந் தாள்போலும் பாதகிதா னேநெஞ்சில்
    அழகி வாருங்கோ வென்றேனென்-றழகீரும்

    இந்தமொழி நீயங் கியம்பென்றாள் வந்தே
    நேற்றந்த மொழிகேட்டு வாற்றினேன்-சிந்தையிலே - 320


    அன்புபோற் பொன்கமல மஞ்சிலரி பிளவுந்
    தின்பர் பொருட்டிலையுஞ் சேர்த்துவைத்தே-என்பால்

    (தாய், தலைவனிடத்துப் பசப்பிக்கூறுதல்)

    கொடுத்தனுப்ப நானதுகைக் கொள்ளுங்கால் மேலுநம்
    இடுக்கணைச்செய் மாமிசொல்வா ளின்னும் - அடுத்துப்

    பழகவிலை யென்றோநீர் பக்கவச னத்?தோ
    சலதிவந்த தோமுன்னிங் கேசுவாமி!-உளமிவளைப்

    பார்ப்போ மெனநினைந்தோ? பையொடுபொன் தந்தவரைச்
    சேர்ப்போமென் றோநாங்கள் தேவரீர்-வார்த்தைசொலுந்

    தூதியே! உங்களையுஞ் சொல்லி நிறுத்தினளோ?
    மாதின்மேல் நீவைத்த வாரமிதோ?-ஆதிமுதல் - 325


    என்னையா! உங்கள்குண மிப்படிதோ னோ?அலது
    முன்னமுங்கள் தாயார் மொழிமதியோ?-தன்னிலே

    நாமாகப் போகிலுங்கள் நங்கைமதி யாளெனவோ?
    வீமா!நீ ராரெனு வேற்றாட்கள்-தாமாக

    இங்குவரக் கண்டதுண்டோ? ஏதோ யிவையறியேன்!
    உங்கள்மன வெட்கமோ? ஓதுவீர்!- அங்குனது

    (தலைவன், தாய் பசப்பலுக்குப் பதிலிறுத்தல்)

    தூதுவிட்ட செய்தியென்று சொல்லிப் பசப்பினாள்
    ஏதுமில்லை வெட்கந்தா னென்றேன்நான்-கோதில்

    (தலைவனிடத்து, தன்மகள் கண்ட சகுனம் விளம்பல்)

    பழநழுவிப் பாலிலே பாய்ந்ததுபோல் வந்து
    மிளமறிக் குளையறியா தென்ன-அலறிநின்றீர் - 330


    இங்குநீங் கள்வரவும் மெல்லவே கண்டகுறி
    சங்கையின்றி நான்புகல்வேன் சத்தியமாய்-நங்கையிவள்

    (மோகனவல்லி, கோவிலுக்குப் போகும்போது கேட்ட நற்குறி)

    இன்றுதையங் கோவிலுக்கு ளேகிலு மசரீரியும்
    நன்றுனக்கின் றேவருமின் னாளெனவே-நின்றறிந்து

    சன்னிதியிற் போகின்மணிச் சத்தமொன்று கேட்டுடனே
    என்னவதி செயமென்றெண்ணியே-கன்னிதான்

    நின்றுதொழும் போதுதிரு நீறுஞ் சந்தனமும்
    அன்றுநயி னாரணிந்த வாரமுமே-சென்றறிந்து

    (கோவிலினுள் சாமிசன்னிதியில் கேட்ட நற்சொல்குறி)

    நம்பியார் கொண்டுவந்திந் நங்கைகரத் தேகொடுக்கில்
    தம்பிரா னாமொருவர் தம்போக்கில்-உம்பருக்குங் - 336



    கிட்டாத வாழ்வுனக்கே கிட்டுதின்றைக் கென்றாராம்
    மட்டார் குழலிமன மகிழ்ந்து-கட்டாகத்

    (பூ விபூதி வாங்கும்போது, தூண்டாவிளக்கு சோதியாய் எறிதல்)

    தாதியர்கள் சூழமறு சன்னிதியிற் சென்றிலைவி
    பூதியதை வாங்கும் பொழுதிலே-ஆதிமுதல்

    வாடாமல் நிற்குமணி விளக்குத் தீபபுட்பங்
    கோடான கோடிதரக் கோதைகண்டு-நாடாளும்

    வேந்தருக்குங் கிட்டாத மேலான நற்சகுனந்
    தாந்தனியே கண்டதென்னச் சாரமதை-ஏந்திழைதான்

    (அம்மன் சன்னிதியில், பூ மஞ்சள் பொட்டலங் கண்டெடுத்தல்)

    ஐய்யமுற்றுக் கொண்டுள்ளி யம்மையெனுங் கருணைத்
    தையலுற்றக் கோயிற்றிருச் சன்னிதியில் - துய்யநிற - 340


    மஞ்சணையும் பிச்சிமலர் மாலிகையி னோடுபொடி
    மஞ்சளையு மொன்றாக வைத்திருக்கக்-கொஞ்சுகிளி

    (தெய்வானையை வணங்கும்போது அண்டையிற் கேட்ட நற்சொல்)

    கண்டெடுத்தங் குள்ளங் களிகூர்ந்து தெய்வானை
    கொண்டதிரு மேனிகண்டு சொல்லுகையில்-அண்டையிலே

    நின்றொருவ னுக்கொருவர் நேயமுட னுனக்கே
    இன்றுமுதல் நற்கால மென்றாராங்-கனதனத்தாள்

    (வேதவாசிரியரை ஏட்டுக்குறி கேட்டல்)

    கோயிலிலே கண்டநலங் கொண்டு மகிழ்ந்தெனக்கு
    வாயிலிலே போய்வேத வாத்தியாரை-ஆயிழையாள்

    (வேதவாசிரியர் ஏட்டுக்குறியைக் கூறுதல்)

    கூட்டிவரச் சொல்லிமணங் கொண்டுபோ டசங்கேட்டாள்
    ஒட்டின் படிபாலை யிட்டாய்ந்து-நாட்டில் - 345


    உயர்ந்தவராய் நெஞ்சிலே உண்மை யுளராய்
    நயம்பெறவே பேசும் நல்லாராய்-வயம்புரியும்

    மன்மதனைப் போலே வடிவு முடையவராய்
    நன்னெறியே பேசும் நடுவினராய்-பொன்னைக்

    கொடுக்குங் குணத்தவராய்க் கூடலுக் காவராய்த்
    தடுத்துத் தோன்றுஞ்சொல் லாதவராய்-அடுத்தவரைக்

    காக்கின்ற கோவாய்க் கருத்தில் மறுவிலராய்
    ஏற்குங் குணங்களே யில்லாராய்ப்-பார்க்குள்ளே

    பாக்கியங்கள் மெத்தப் பருகினரா யும்போக
    போக்கியத்தில் மெத்தமனம் பூண்டவராய்-ஏற்கவே - 350


    முன்னூல்கள் கற்றறிந்த முக்கியராய் யாவரையும்
    இன்னாரின் னங்கமென்றே யெண்ணுவராய்-மின்னே!

    பழகிப் பிரியாராய்ப் பட்ச முளராய்
    அளவில் கலைநூ லகராய்க்-களவற்ற

    மான பரராய் மறுவற்ற வேதியராய்த்
    தானதவஞ் செய்யுந் தருமராய்-ஞானம்

    பொருந்து மனத்தினராய்ப் பூசலில ராயோர்
    விருந்துமின்றைக் கேவந்த தாமென்றே-அருந்தவத்தில்

    மிக்க வாத்தியா ருரைக்கமின் மகிழ்ந்துவந்
    தென்னுடனிக் கதையெல்லா மியம்பினாள்-அக்களித்துப் - 355


    பேச்சியம்மன் கொண்டாடும் பெண்ணொருத்தி யுண்டவளை
    ஆச்சியைவிட் டிங்கே அழைத்துவந்து-பூச்சியஞ்செய்(து)

    அம்மா! ஒருகரும மாகவழைத் தேனென்று
    இம்மாத் திரந்தா னியம்பினாள்-அம்மாது

    கோயிலுக்குப் போனமுதற் கூடவிருந் தவள்போல்
    ஆயிழைக்குச் சொன்னாள்நான் ஆமென்றேன்-தாயதன்பின்

    வாத்தியார் சொன்னகுண மாறா துடையவராய்
    நேத்தியாய் முன்மகளை நீங்காமல்-காத்துவைத்துத்

    தோயவுமன் பாய்வேத்த தோத்திரஞ்செய் வோன்மகட்கு
    நாயகனிங் கேவரவிந் நாளென்று-தாயார்சொல் - 360


    பெண்விரும்புங் காலை பிதாவிரும்பும் வித்தையே
    நண்ணுதனம் விரும்பும் நற்றாயே - ஒண்ணுதலாய்!

    கூரியநற் சுற்றங் குலம்விரும்புங் காந்தனது
    பேரழகை யேவிரும்பும் பெண்ணென்றே-சாரமிக

    வேயவர்கள் சொன்னதெல்லாம் மெய்யாகு மையனே!
    நேயமுடன் மகள்போய் நின்றுகொண்டு-தாயறிந்தால்

    போதுமென வெண்ணாதிப் பூங்கொடி யுங்களழகைக்
    காதுகுளிரச் சொல்லென்று காதலாய்-மாதுசொல்லக்

    கேட்டே மயங்கிக் கிடைந்ததுடைப் புண்ணைநான்
    காட்டேன் வெளியிலிதைக் காட்டுவதோ?-வீட்டிலே - 365


    வைத்துவைத்துப் பார்த்திருந்த மாதின் மயல்தவிர்க்க
    இத்தனைநாள் தெய்வ மியம்பினபோல்-உத்தமரே!

    நீங்களின்று வந்ததனால் நேரிழையு முங்கள்வசம்
    நாங்களுபசார நவில் வதுவேன்?-பாங்காய்

    நடக்க வகையறியாள்! நானூட்ட வுண்பாள்!
    தடத்திற் படுக்கவின்னஞ் செல்லாள்!-மடக்கொடிக்கு

    முன்னாள் வயசெனினு முற்றிடுமுன் னேதிரண்ட
    தென்னோ! கலிகாலத் தின்திறமோ!-சொன்னேனே

    தட்டி யேதுரைக்குந் தாதியென வெண்ணாது
    குட்டிவளர்த் தேவேட்டைக் கொள்ளுங்கள்!-எட்டிபோல் - 370


    நச்சுமர மானாலும் நட்டமர மாகுமென்றே
    இச்சைவைத்துப் பெண்ணோ டிணங்குங்கோ!-மிச்சமெல்லாம்

    நான்புகல்வ தென்ன? உங்கள் நாரியைக்கண் டால்தெரியும்
    என்பதறி சொல்கே னெனவுரைத்துத்-தான்போனாள்

    (தலைவனிடத்து, தாதியர் பள்ளியறைக்கு ஏகென விளம்பல்)

    மாதே! மறுத்திரண்டு வஞ்சியர்கள் வந்துதங்கை
    மீதே யெனதுகையை மெல்லவைத்தங்-கேதேதோ

    தோத்திரமாய்ச் சொல்லியந்தச் சோதிப் பளிங்கறையைப்
    பாத்தருள வேண்டும் பராக்கென்றே-வாய்த்தமணி

    (பள்ளியறை வருணனை)

    மண்டபத்திற் காம மருந்தறையில் மன்மதனார்
    சண்டையிட்டுத் தோர்க்கும் சமர்களத்தில்-எண்டிசைக்கும் - 375


    பார்க்கில் மணக்கும் சவ்வாதுப் பாணிதனில்
    ஆர்க்கும் விருப்பமுறு மம்பலத்தில்-ஏற்கவே

    பன்னீர் சலத்தைவிட்டுப் பாங்குசெய்யுஞ் சேற்றறையில்
    என்னாளும் பூமணக்கும் எல்லைதனில்-மின்னாள்

    மதன நதியை மறிக்கு மனையில்
    இதனாற் றிடுந்திருவி னில்லில்-கதமுற்றி

    மன்மதனா ரெய்யுமலர் வந்துதிரும் பூங்காவில்
    அன்னமரசா ளரண்மனையில் - இன்னங்
    கயிலைக் கிணையெனவே காணுமிடத்தில்
    மயிலைப் புணரும் மணவறையில் - ஒயிலாகக் - 380


    கூட்டியே வந்துமலர் கொண்டுபுனை மெத்தையதைக்
    காட்டினா ரங்கிருந்து கண்ணாலே - நாட்டிலிதன்
    முன்காணா மஞ்ச முழுவதிலுந் தூக்கியிடும்
    நந்தாமு ல்லைச்சரமும் நான்காணில் - என்பால்
    மதன்சிதறு முல்லை மலர்ச்சரமோ? அன்றி
    விதம்பெற விதானிப்போ மெய்யாய் - அதன்பிரிவை
    இன்ன மறியேனே யேந்திழையே யவ்வேளை
    சன்னைசெய்தோ யவ்விருவர் தாம்போனார் - கன்னிகைகால்

    (நடனமாதின் வருகை)

    தண்டை புலம்பச் சதங்கை கலகலெனக்
    கொண்டை யதிற்சுரும்புக் கூத்தாடச் - செண்டைப் - 385


    பிடித்திருக் கைவளை பேச நுதல்கள்
    துடிக்கக் கயற்கணிணை சுற்றத் - தடித்தனைப்
    பதக்கம் பளிச்செனவே பட்டுடையும் சேர்த்து
    விதிர்த்து முலையிரண்டும் வீங்கி - மதர்த்துடனே

    (தலைவனைக் கண்டு நடனமாது வணங்கல்)

    வஞ்சிதய நெஞ்சிகுழல்மஞ்சிவர வாஞ்சியிவள்
    கொஞ்சிமயல் மிஞ்சிவந்து கும்பிட்டாள் - அஞ்சலிகை

    (தலைவன் நடனமாதினைக் கண்டு வியத்தல்)

    கண்டவுட னேயிவளைக் கட்டியொரு முத்தமிட்டுக்
    கொண்டுவிளை யாட நெஞ்சுக் கூத்தாடும்! - தண்டார்
    வதனத் திருவாள் மறுகுமெனைப் பாராள்
    கதவிற் கருகுநின்றாள் கண்டேன் -விதமிட்டு
    நற்சுவரி லேயெழுதும் நங்கையுருச் சித்திரமோ!
    சிற்றிடையின் பாவைநின்ற சித்திரமோ!-விற்புருவ
    மின்னாளை யின்னதென்று மெய்யறிய மாட்டாது
    தன்னாலே தேடித் தவிக்குங்கால்-அந்நேரங்

    (தலைவன் வண்டினைக் கண்டு விளித்தல்)

    கூந்தல் முடித்ததிலே கோர்த்தபிச்சித் தார்மதுவை
    மோந்து கிரகிக்கவந்த மொய்த்தவண்டே!-ஆய்ந்ததைக்கண்(டு)
    அவ்வுருவை நோக்கியிங்கே ஆயிழையே! வாவென்றேன்
    கொவ்வையிதழ் நீங்காக் குறுநகைசெய்-திவ்விடத்தை
    நோக்கினா ளென்மால் நொடிக்கு நொடிபெருக
    வாக்கினா ளத்தையறி யாதே-எற்கவே - 395


    கொஞ்சவய சேவொருவர் கூடியறியாதே
    மிஞ்சமுனம் நாம்பழகி மேவலையே-நெஞ்சங்
    கலங்குமே நாமுனமே கைப்பிடித்துக் கூடிற்
    துலங்கப் புணருமென்றே தோன்றி-விலங்காது

    (கலவி வருணனை)

    தானேதே டும்நோயாய் தாழ்ந்தமுத்தி தொட்டழைத்தேன்
    மானேதா நேமயங்கி வந்தணையிற்-தேனே!
    திரண்டவித ழாளிருந்தாள் தேகத்துச் சுரணையில்லா
    திரண்டுகரத் தாலெடுத் தணைத்துப்-புரண்டேனே
    துகிலையவிழ்த் தேனோநான்! தோள்துகிலை நீத்தோ
    சகியே! அவள் மார்பு தன்னில்-உகிர்களே - 400


    தைக்குமென்று பார்த்தேனோ! சன்னதுஞ்ச பாதையுமென்
    மெய்க்கு மணிந்தேனோ! வீணாகச்-சக்கியமாம்
    முன்னருந்தும் வெற்றிலையை முன்னா னுமிழ்ந்தேனோ!
    சின்னமயில் தரநான் தின்றேனோ!ொ-தக்கதொழுப்
    புகுந்தவா டும்புழுக்கை போட்டாற்போ காதெனச்
    சும்மா மாலென் றிருந்தேனோ!-ஆய்ந்தெனது
    மையல் திரளையென்ன வாயினாற் சொல்லமுலை
    நையப் பிணைத்திரண்டு நாழிகையாய்க்-கைவிட்டு - 405


    நீங்காமல் மோகித்தந் நேரம் இருக்கையிலே
    பூங்காசூழ் நெல்லைநகர் போற்றரசன்-ஆங்குவந்து
    வெட்டைவெளி மண்டபத்தில் வீற்றிருந்தா ராமவரைப்
    பேட்டிசெய்யத் தீர்த்தப் பிரசாதம்-நாட்டிலவ்வூர்
    மிக்கதலத் தார்களந்த வீதிவழி யாய்க்கொடுப்போம்
    அக்கருமத் தால்வாத்திய மத்தனையுந்-திக்கெல்லாங்

    கேட்க முழக்கம்நான் கேட்டெழுக வேநெகிழ்ந்து
    வாட்கண் மயிற்கரங்கள் வாங்காது-தாட்டுணையை

    நீக்கவென்றா லன்றிலே நேயமிகுந் தேதுயர
    மாக்குமென்றே யென்கா லசையேனே-பூக்கரத்தாள் - 410



    தம்மால் மிகுந்து தழுவினதோ? விட்டுவிட்டாற்
    சும்மா விராளென் தோகைதான்-விம்மவே

    கட்டினதோ? என்னோ? அக் கந்தர்வர்க் குந்தெரியும்
    கொட்டியதேட் பாவைநெஞ்சுக் குந்தெரியும்-இட்டமாய்ப்

    பூணவணைத் தாளென்னாம் பூரித் தவள்கரத்தை
    வேணவிதத் தால்நெகிழ்ந்து விட்டவுடன்-நாணமதைக்

    காமம் விழுங்கினபோற் கைநெகிழ்த்தா யென்றுமொருச்
    சாம மலைக்கொடுத்தாள் தையலே!-நாமதையும்

    மெய்யாய் நினைத்தவட்கே வேணவிதம் புகன்று
    மெய்யா லொருதலை யிணக்கினேன்-நெய்யால்

    முடித்தகுழ லாள்மகிழ்ந்து முன்னருந்தும் பாக்கைப்
    படிக்கமதி லுமிழ்ந்து பன்னீர்-வடித்தளைந்த

    சந்தனத்தி னோடே தனிச்சவ்வா தும்புழுகும்
    அந்தமுற்ற கையா லவள்கரைத்தும்-எந்தரத்தைப்

    பாராம லென்னுடலும் பாராமெய்த் தணைக்குந்
    தாராள மாயணிந்தாள் தன்கையால்-நேராய்

    அவள்தனக்கும் நானு மணிந்தே னிதுபெரிதோ!
    குவலயத்தி லார்க்குமிது கூடாப்-புவனமெச்சுங்

    கன்னியென்னோ டுங்கலந்தாள் கையால் சரமணிந்தாள்
    தின்னவித மாஞ்சுருளுந் தேன்தந்தாள்-அந்நேரம் - 420


    சாந்தகுண மோகன சவுந்தரியை யென்மடியில்
    ஏந்தி யெடுத்தங் கிருத்தியே-பூந்தொடையல்

    சூடுமுடி முதலாய்த் தோகையடி வரையுங்
    கூடும் புறத்தொழினான் கூட்டினதை-நாடியறி

    உச்சியிலே யென்னுகிரை யூன்றியே கோதிவிட்டேன்
    கச்சிலையா மின்னுதலைக் கவ்வியே-எச்சில்

    உறவே சுவைத்திதமாய் ஓர்வாக்காய் நாவால்
    மறவாது நீவிமலர் விழியைத்-திறவாது

    நேரே சுவைத்திமையை நீக்கிநுனி நாவாலே
    ஏரே யுறும்விழியை யாநீவி-யாரேனும் - 425


    உண்டால் மறவாத ஓரிதழை நான்சுவைத்துக்
    கொண்டே நுனிநாவாற் குற்றியிள-நண்டேபோற்

    பல்லா லழுத்தியந்தப் பாவையர் கபோலமதை
    யெல்லாம் வகையாக மென்றேனே-நல்லாளுங்

    கூசிச் சிரித்திடநான் கோதாய் திருக்கழுத்தில்
    ஆசித்து மென்மைவன்மை யாய்சுவைத்து-நேசித்துப்

    பல்லாலும் நாவாலும் பையவே நானழுத்தச்
    சொல்லா லடங்காச் சுகமுற்றாள்-மல்லாடிக்

    கைமூலந் தன்னிற் கனியச் சுவைத்தெயிறால்
    வையா ருகிரால் வளைத்தழுத்திச்-செய்யவுருக் - 430


    கூவிள மதிநுங் கொழுங்கனித் தனங்குழைய
    நீவி நுனியை நெருடினேன்-தேவிசிறு

    நெஞ்சிலே யெயிறூன்றி வெகுநேரந் தொழில்புரிந்தேன்
    மிஞ்சுவிர லாலும் நாவினாலும்-கொஞ்சமுந்தி

    மீதே தொழில்புரிந்து மீண்டுமுழந் தாள்பாடு
    மாதே புறந்தாளில் வல்விரலில்-ஏதேனும்

    நானறிந்த மட்டுமெந்தன் நற்கரத்தால் செய்துமல்குற்
    றானமங்கு செய்தொழினான் சாற்றுகேன்-யானறிவேன்

    உன்தொழில்க ளொன்று முரையாதே யின்னங்கேள்
    முந்துவிர லால்தொயில் முலைக்கெழுதி-அந்தமிலாப் - 435


    பற்குறிகள் சும்பனங்கள் பண்பாம் நகக்குறிகள்
    துற்றுதொழில் தாடனஞ் செய்துங்காண் முற்றியல்குல்

    கண்டேகரிசரமாங் கைத்தொழிலை யேபுரிந்து
    கொண்டே நம்மாது குணங்கண்டேன்-உண்டல்லோ

    மற்றத் தொழில்களதை மாறாது நான் செயுங்கால்
    கற்றைக்குழ லாளாவிக் கட்டினாள்-சுற்றத்

    தொடுத்தே னொருவிரலைத் தோகை மயில்போற்
    கொடுத்தாள் குரலறிந்து கொண்டேன்-அடுத்துப்

    புணர்ந்தே னதன்பின் புடுக்குரலுங் கூவி
    அணங்கன்னக் குரலு மாகி-இணங்கியே - 440


    காடைக் குரலும் கரியவண்டு போற்குரலும்
    பேடைக் குயிற்குரலும் பெண்கொடுத்தாள் - வாடை

    மயிலு முருகி வசமித் தடகையினால்
    நெருடு கருவாய் வெயிலார் - ..................

    தரள வெரிவு தணிய மருவு
    பரவசமு மார பருவம்-வருதே
    அட்ட துரையே! ஆயாசம் வருதே
    விட்ட மதநீர் விரைந்தேன்-இடையில்
    இப்படி யப்பெண் இழைப்பவ ளோதுரை
    செப்ப வடிக்கடி சிற்றிதழ்-அப்பொழுது - 445


    துண்டு புரண்டிடி லொன்றிய பெண்கொடி
    தண்டை சிலம்புகள் தங்களில்-வண்டுகள்
    நின்று புலம்பிட நெஞ்சு கலங்கிட
    இன்பமுறும்படி யிண்டை-சரிந்த
    கனத்தை யுயர்த்தியவள் காலிரண்டை நீக்கி
    அனத்தின் சம்போகி யானேன்-சினத்தவளே!
    கோழிக் குரல்கொடுத்துக் கொண்டுகை காலிறுக்கித்
    தூழித்த தன்னியத்தாற் றோள் நோக-நாழிற்
    பிரிந்தாரைக் கண்டவுடன் பெண்ணே! கையாலே
    விரிந்தா லணையல் மருவல்-புரிந்தாள் - 450


    கண்ணயர்ந்தாள் வேர்த்தாள் கயற்கண் ணிணைசிவந்தாள்
    எண்ணறுஞ்சேர் பதாபமேபுரிந்தாள்-பெண்ணமுதாள்
    செம்போத்துப் போலச் சிறுகுரலுங் கூவியவள்
    தம்போக்கிற் கைகால் தளரவிட்டாள்-செம்பாக்கி
    விட்டோ மிவட்கெனவே மெய்த்தணையி லேயிறங்கி
    மட்டார் குழலி வனத்துகிலைத்-தொட்டேனான்
    ஆணையிட்ட தாகவோரஞ் சாறுமுழ மேகனைய
    வீனைக்கைகொள்வாள்மதன் வெள்ளமோ!-காணவப்போ
    தூரஞ் சிறுநீரோ! தோகையோ! யானறியேன்
    ஈரமிக வார்த்துகிலை யானெடுத்து-வாரமாய் - 455


    மூடினேன் பன்னீர் முகத்தெறிந்தேன் கிள்ளிவிளை
    யாடினேன் மின்விழித் தந்நேரமே- கூடியே
    முத்தமிட்டாள் என்தேகமுற்றும் வரிக்குயில்போற்
    சத்தமிட்டே பாடினாள் சங்கீதம்-இத்திறத்து

    (நாட்டியமாது தலைவனுடைய வரலாறு வினவல்)

    நாங்கள் மகிழ்ந்திடிலந் நாரிதா னவ்வேலை
    ஈங்கு மெழுந்தருள்வ தேதென்றாள்-ஆங்கெனது

    (தலைவன் தான்வந்த வரலாறுமொழிதல்)

    செய்தியெல்லாம் நேராகச் செப்பினேன் நீங்களதி
    வைதிகர்தா மென்று மகிழ்ந்துகொண்டே-தையலுமே

    ஏலப் பழகலையே யென்னையெங்கே கண்டதென்றாள்
    மேலத் தெருவிலென்று மீண்டுமவள்-கோலத்தைக் - 460


    கண்டு மயங்கினதுங் காமவிடாய்க் கொண்டதுவும்
    விண்டு மறுத்தணைய வேதொடுத்தேன்-தண்டார்

    வதனத்தா ளென்னை மறுத்தா ளந்நேரம்
    விதனத்தா லென்னவென்றேன் மெய்யாய்-இதமித்து

    ஒருதரத்தி னோடுமக்கே யொற்றியாய்ப் போனேன்
    இருதரத்தி லேவிலையா மயிரனே!-மருவி

    மறிப்பார் மொழிகேட்டு முன்னமவன் கைப்பாக்கைப்
    பறித்தா யெனவுமொரு பைதல்-குறித்துநின்று

    பறப்பானே னென்றும் பணமொருவர் தந்ததையே
    ஒத்தாய்நீ யென்றுமெனை நோக்கி-மார்க்கமாய் - 465


    வேறொருவர் வந்தெனையே மேவினா னென்றுமிந்த
    வாறொருசொற் செல்லியன்றைக் கையாநீர்-ஈரொருநாட்

    கோபிப்பீ ரென்குணம் கோரமது வல்லாலுஞ்
    சேவிப்பீர் கோவிலுக்குச் சென்றுதினம்-நோவிற்

    கிடந்தவளு மின்னங் கிடப்பவளும் பத்தியங்
    கடந்தவளுங் கூடியுமைக் கண்டு-தொடர்ந்தணைய

    மஞ்சளால் மேனி மினுக்கி வகைவகையாக்
    கொஞ்சுவா ரும்மிடத்திற் கூடிவந்து-கெஞ்சியே

    நீரவளைக் கூட நினைப்பீ ரதைப்பொறேன்
    பாரவட்காய் நான்பழி முடிப்பேன்-ஈரமற்ற - 470


    நெஞ்சியாய்ப் போவேன்யான் நீருமெனை வெறுப்பீர்
    மிஞ்சநாமும் பழகவே வேண்டாம்-எஞ்சாக்

    கடுங்கால் மழைகாட்டும் கடுவுறவின் நாவாலே
    ஒடுங்காப்பூ சல்விளைவ துண்டென்-றிடும்பாய்முன்

    தூதிகையில் பறித்தசொர்ண முடிப்பை யென்கை
    மீதிலமைத் தெழுகவே னென்றாள்-தாதியற்கு


    நாயகமே!உன்னையென்றும் நான்மறந்தோர் பெண்களுடன்
    போயகமே மாணப் பொருந்தேனே-நீயறியாய்

    என்னுடைய நெஞ்சி லிருப்பதெல்லா மின்றுமுதல்
    உன்னைமற வேனென்று உறுதியாய் - முன்னே

    பிரமவமு தத்தின்மேற் பேராணை யிட்டேன்
    பரதமதற் கரசி பாங்காய்ச் - சரசமே

    செய்யத் தொடுத்தாள் தேனளித்த வெண்முடிப்பைத்
    தையற் கறியாது தன் துகிலிற் - பையச்

    சுருட்டியே நானவளைத் தோயுங்கால் வெள்ளீ
    இருட்டிலே தோன்றினா னென்றே - திருப்பெண்

    விடிந்துபோ மேலிலை வேணவித மின்றி
    முடிந்துபோ மேயெனவு முற்ற - விடிந்து

    கரவாள்போற் பட்டதுயர் கண்டாயோ ! அப்போ
    விரைவாயே டூழ்பால் வெளுக்க - கரையாத் - 480


    தலையா ளொருவிவந்து ....... (text not readable between lines 480 and 490) கூறுகேன் தாயுனுட கூற்றுமவள் மகள்செய்
    வாறுநா னென்றவர்சொல் வார்த்தைகேள்!-பூருவத்தில்
    அன்னைவெகு காலமெலாம் ஆடவர்களைக் கெடுத்தாள்
    வின்னையவட் கொருபெண் பிள்ளையின்றி-உன்னிக்
    குறியோ போடசமோ கோவரத்தார் பாலோ
    அறிவான் பொருட்டிலன்னை யாய்ந்து-நெறியாம்

    (சொக்கேசர் சந்நிதியில் நோன்பு நோற்றல்)

    மதுரையிற் சொக்கலிங்க மாதவரைக் காத்தாற்
    பதுமியரைப் போலேயோர் பாவை-புதிதாயே
    பிள்ளையொன்று கிட்டுமென்று பேதாய் நிசந்தறிந்து
    நள்ளைசொக்க லிங்கருட சன்னிதியிற்-கள்ளமின்றிச் - 495



    (சொக்கேசர் கனவிலே தோன்றியருளுதல்)

    சென்றேயீ ராண்டிருந்து சேவித்தப் பின்பொருநாள்
    இன்றே மதலேதந்தோ மென்றிரவில்-நன்றாகக்
    கனவிலே சொக்கலிங்கக் கடவுளு மிட்டார்
    மனமகிழ்ந்து மோகன வல்லி-நனவிலே

    (மோகனவல்லி சொக்கேசர் சந்நிதிக்குக் காணிக்கையாக 1800
    பொன்னும், அணிகலன்களும் ஈதல்)

    பேசி யிருப்பதுபோற் பெம்மா னருள்முந்தித்
    தூசில் முடிந்துகொண்டு தோத்தரித்து-வாசிமுதல்
    ஆயிரத்தெண் ணூறுபொன்னி லாதி சொக்கர்தமக்
    கேயிணக்க மானநகை யீந்துபின்பு-கோயிலுக்குள்

    (மீனாட்சியம்மன் சந்நிதியில், நல்ல சொல் கேட்டல்)

    மீனாட்சி யம்மைமுன்பில் வீணிபோ யுன்கணவன்
    ஆனாற் கிரக்கமா யாண்பெண்ணே-நானா - 500


    கிலுமுனக்குத் தாரதென்று கேட்டவுரை யில்லை
    வலுவெனக்குத் தாவென்றேன் வாய்ச்சொல்-கொலுவினிற்கும்
    ஏழ்ந்திழையார் தங்களிலே யென்னைப்போற் பெண்பெறுவாய்
    சாந்தகுண மோகன சவுந்தரிபோல்-நேர்ந்த மொழி

    (மீனாட்சியம்மன் சந்நிதிக்கு, முப்பது பொன் ஈதல்)

    இப்படியே கேட்டுடனே இந்தமீ னாட்சிக்கே
    முப்பதுபொன் னாங்கே முடிந்தளித்தாள்-அப்பொழுதே

    (மோகனவல்லிக்குக் கர்ப்பமுண்டாதல்)

    ஊருக்கு வந்துமுழுக் கொன்றிலே கர்ப்பமுண்டாய்
    சீருற்று இருந்த சிமிழ்முலையும்-மேருப்போல்
    வீங்கி முகங்கருத்து மீன்விழியும் வட்டணிக்கத்
    தோங்கி தளர்ந்துன்னை வழுத்து-மாங்கனியில் - 505


    இச்சைகொண்டு கால்களிரண்டுங் கனத்துடலிற்
    பச்சைநிறம் பார்த்துப் பழங்கடின்று-நச்சு நச்சு
    சோற்றையுண்ன மாட்டாமற் றோய்வையே தின்றுதிரு
    நீற்றையின்ப மாய்த்தின்பாள் நேயமாய்-ஊற்றமாய்ப்
    பேசுகையி லேய்ப்பிழைப்பும் பெண்முகத்தில் லாதவலை
    வீசுவதற் கேற்ற மினுமினுப்பும்-மூச்சு
    சென்றபெரு மூச்செறிய வேந்திழையுந் தியுமலர்ந்து
    நின்ற திங்கட் பத்தும் நிரம்பவே-ஒன்றியவள்
    உந்தி குழைய உடல்முழுதுந் தள்ளாடச்
    சந்தவடி வாள்சலத்திற் றாகித்துக்-கந்தரமும் - 510


    (நல்ல ராசவேளையில், பெண் குழவி பெறுதல்)

    நெட்டித்துக் கைகால் நிரம்பவுழைச் சலெடுத்து
    மட்டற்ற நோவால் வளார்பிறையில்-இட்டத்தால்
    ஆதித்த வார மதிலே முதற்சாம
    மோதிற் புகரான வோரையிலே-சோதியெனும்
    நட்சத்திரத்திலே நல்ல ராசவேளை
    கிட்டாத் தேவ கணத்திலே - பட்டாடை

    (மோகனவல்லி மகிழ்தல்)

    மீதிலே பெற்றாள் வியர்வுற்றாள் பிள்ளைசத்தங்
    காதிலே யுற்றாள் களியுற்றாள்-மாதின்மேற்
    கண்விட்டாள் நெஞ்சிற் கவலைவிட்டா ளாடவராய்
    மண்ணிட்டாள் இல்லல் மறந்துவிட்டாள்-எண்ணுக் - 515



    கடங்கா தபோநிதியை அப்போகொண் டாற்போல்
    மடந்தாய்! வாவென் றெடுத்துவைத்துத்-தொடர்ந்தணையக்
    கையில்நிதி யில்லாது காப்போற்குச் சாணிநீர்
    மெய்யிலிதி போல்விடென்று வெந்நீர்விட்-டையா
    நவத்திலணை வான்றுகிலை நாடியே மஞ்சள்
    துவரத்திது போலேந்து துவாத்தித்-தவத்திதலை

    (பொட்டிடுதல்)

    அட்டதிக்கெல் லாம்வணங்க வரனை வணங்கியிற்செய்
    பொட்டையிது போலிடென்று பொட்டிட்டாள்-இட்டமாய்ப்

    (உச்சிடுதல்)

    பிச்சியிலைச் சாற்றுடனே பேய்க்கரும்பின் சாறனைவோற்
    குச்சியிது போலிடென்று உச்சியிட்டாள்-மெச்ச - 520


    (மருந்திடுதல்)

    வலுக்கொண்ட நெஞ்சன் வந்தால்வாய் மருந்திதைப்போற்
    செலுத்தென்று சேனை செலுத்தி-அலுத்துப்

    (பால்கொடுத்தல்)

    புணரப் பழகாப் புதியோர்க் கிதுபோல்
    அணையிப் படியென் றணைத்துக்-கணவர்க்குள்
    ஏன்றாள் விடார்க்குமுலை யிப்படிமெல் லக்கொடென்று
    மூன்றானாள் மெல்லமுலை கொடுத்தாள்-சான்றோரும்

    (கண் மை இடுதல்.)

    எண்ணிபுணைத் தோய்வருகீ ரிதுபோற் கீறெனவே
    கண்ணிமையைக் கண்ணிலே கீறினாள்-மண்ணிற்
    பணக்கார னாரெனநீ பார்க்கவழி யேநற்
    குணக்காரி மையால் கொடுக்கிட்-டிணைத்தாரையில் - 525


    (ஐந்தாம் நாள் ஐம்படைத்தாலி அணிதல்)

    எஞ்சா தணைபவரை யிப்படியே கட்டிவிடென்
    றஞ்சாநா ளஞ்சினை அரைக்கணிந்தாள்-வஞ்சமாய்


    (வசம்பு கட்டுதல்)

    மட்டன்றிப் போகிக்கும் வல்லவரை மேலரையிற்
    கட்டென்று நல்வசம்பு கட்டினாள்-இட்டார்க்கே

    (பதினாறாம் நாள், பொன்சங்கால் பால் கொடுத்தல்)

    அன்பையிது போற்புகட்டென் றன்னைபதி னாறாம்நாள்
    பொன்சிறு சங்காற்பால் புகட்டினாள்-உன்றன்மேல்

    (தொட்டில் போடுதல்)

    இட்டமுடை யோன்மடியி லிப்படி படுத்திரென்று
    கிட்டவந்து தொட்டிலிற் கிடத்தினாள்-கட்டியுனை

    (காது குத்துதல்)

    நித்தமணை யானுடைய நெஞ்சிலிது போல்முலையைக்
    குத்திவிடென் றேகாது குத்தினாள்-மற்றமற்றக் - 530


    குத்துமிட மத்தனையும் கோதையிந்த வாறுசொல்லி
    முற்றுமெங்கு முற்றி முடித்தனவே-சற்றேனும்

    அன்பிலா நெஞ்சி லதைவளரிவ் வாறெனவே
    வன்பில்லாக் காதை வளர்த்துவிட்டாள்-மன்பரவும்

    (காலுக்கு மிஞ்சி இடுதல்)

    வஞ்சியுன்றன் காலிணைக்கு வாய்த்தநகை தாதியரில்
    மிஞ்சியிடு மேலெனவே மிஞ்சியிட்டாள்-கொஞ்சிவிரல்

    (கை கால்கட்கு அணிவகைகளிடுதல்)

    கைவளையுமிட்டாள் அதன்பிறகு பாடகத்தைப்
    பேய்வளைக்கே யிட்டாள் பிரியாமல்-பையவே

    தண்டையிட்டாள் பொற்சிலம்பு தானுமிட்டாள் பின்சதங்கை
    கொண்டுமிட்டாள் பாத கொலுசுமிட்டாள்-ஒண்டொடிக்குப் - 535


    பாதசர மிட்டாளிப் பாவையருக் கிணங்கச்
    சீதமதி யைப்பாம்பு தீண்டினபோல்-மாதரசி

    (அரைமூடி அணிதல்)

    அல்குல்தனைக் காட்டா தரைமூடி யையணிந்தாள்
    நல்லரவும் நீங்கிவிட்ட நாழிகையில்-எல்லையிலே


    (ஐந்தாம் வயதில் சிற்றாடை அணிதல்)

    மேக மறைப்பதுபோல் மின்றனக்கஞ் சாம்வயசு
    மாக அரைமூடி யகற்றியே-மோகமாய்ச்
    சிற்றாடைக் கட்டிவெகு தேச மறிக்கைவிட்டுப்
    பற்றாக வைத்துவிட்டாள் பள்ளிக்கே-கற்றாளே

    (பள்ளியில் பதினெண் மொழியிலும் வல்லவளாகக் கற்றல்)

    கொஞ்சமோ நற்கணக்கர் கோடாரி யாகவுமே
    செஞ்சொல்வா ணர்க்கிவள்சொல் தேடவே-பஞ்சாட் - 540


    சரவிதிகள் கற்றத் தமியோர்கள் சூழப்
    பரகதிசொல் நூலோர் பணியத்-திரமாகும்
    பாஷையெனச் சொல்லும் பதினெண் வகையுமிந்த
    வேசையிடத் துள்ளுதென்று மெய்க்கவே-தேசமதில்
    இல்லாத தெல்லாம் இவள் கற்றாள் கற்றவகை
    சொல்லாலடங்காது தூரமே-நல்லாயுன்

    (நடனசாலையிலும், சிலம்புக்கூடத்திலும் பயில விடுதல்)

    மாமியா ரிந்தவகை யறிந்துமேற் படிக்க
    நேமியா தாடவிட நிச்சயித்துப்-பூமியாள்
    கின்ற வரசரெல்லாம் கேட்டுமகி ழவரவர்முன்
    தன்மகள் படிப்பை மூட்டியே-இன்றிவளை - 545


    ஆடவிடச் சாமியனுக்கிரக மாய்ச்சிலம்பக்
    கூடமதில் விட்டாற் குணமாமே-பேடை
    மயிலையே பெற்றேன் வளர்த்தேன் படிப்பிற்
    பயிலவே வைத்தேனன் பாகவே-வெயிலாருஞ்
    சூரியனைப் போலத் துலங்கும் வடிவாளை
    வாரியெடுத்துத் துங்கள்முன் வைத்துவிட்டேன்-நாரிதன்னை
    ஆக்கினாலும் நீ ரளித்தாலும் நீங்களல்லாற்
    போக்குவே றுண்டோ? புகல்வீரென்-றூக்கமாய்
    மாதா வுரைக்கமக ராசிரா சாமகிழ்ந்
    தீதா பெரிதெனவென் றென்றுகொண்டே-பேதாயாம் - 550


    என்று சொல்லி யேயவர்க ளிவ்வூரில்வந்துகுகற்
    கன்றுகலி யாணவிழா வாரம்பித்-தொன்பதாம்


    நாளிலே வேலவற்கிந் நங்கையரை யேமணந்து
    வேளுமே தேரேறி வீதிசுற்றிக்-கோழியோன்
    மஞ்சள்நீ ராடியபின் வன்சிலம்பக் கூடமதில்
    கொஞ்சு கிளியையே கூட்டிவைத்து-செஞ்சொல்மறை
    வேதியர்கள் சூழவடி வேலர்திருக் கோயில்வர
    நீதி நடத்துவித்த நேயவான்-காதலாய்ச்
    செங்கோல் நடத்ததிரு நெல்வே லிக்குவந்தார்
    இங்கே யிவள்பாத மென்பதெல்லாம்-துங்கா - 555


    படித்தாளோ ராண்டிலே பம்பரம்போ லாடித்
    துடித்தாள் அதைநானென் சொல்லப்-பிடிக்குவய
    சேழோவெட் டொன்பதோ யிவ்வள்ளவுங் கற்றுவிட்டாள்
    ஆளோ ரதிக்கிணையு மாகினாள்-வேளோ
    அனுதினமுங் காத்திருந்தா னவ்வேளை தாயும்
    பனுவல் மொழிக்கரசி பண்பாந்-தனுவதனுக்
    கேற்றதுயி லணிந்தாள் எல்லோ ருயிர்வாங்குங்
    கூற்றை யிணைவிழியாள் கோலத்துக்-கூற்றமாய்
    கைவிரலுக் காழி கடகம் பதக்கமிட்டாள்
    வையமெய்க்கத் தங்க வளையுமிட்டாள்-தையலுக்குப் - 560


    பொன்னால் சரிகையும் பொருந்தவடுக் காம்வளையும்
    மின்னார்க்குந் தோட்காப்பு மேயிட்டாள்-அந்நேரந்
    தாய்முத்த மிட்டாள் சரப்பணியு மட்டியலும்
    ஆயிரம்பொன் னுட்கட் டணிந்தாளோ-சேயிவட்கே
    பச்சைமணிப் பொட்டும் பதக்கம் சவடியுடன்
    வச்சிர மணிமுத்து வடமுமிட்டாள்-இச்சைதரும்
    மோகன மாலை முதிம்பவளத் தாழ்வடமுந்
    தாகமுட னணிந்தாள் தையலுக்கே-சேசரமாம்
    மாணிக்கத் தோடும் வயிரச் சிமிக்கியுமிம்
    மாணிக்கத் திற்கணிந்தாள் மாதாவே-பேணியே - 565


    ராவரார்க் கிட்டா ளாதிதனக் கொன்னப்பூந்
    தேவரார்க் குங்கிடையாத் தேன்முருகும்-பாவைக்கே
    அன்னமுத்துக் கொப்புமிட்டா ளந்தலையிற் சுட்டிபிறை
    கன்னலுக்கொப் பாய்நிலவுங் கட்டினாள்-பின்முடியில்
    குப்பியுடன் தொங்கலையை கூட்டி முடித்தனளே
    இப்படியே பூண்டநகை யெண்ணில்லைப்-பற்றாய்த்


    தானத்தா ரெங்கள் தளவாய் துரைசாமி
    வானத்தார்க் கொத்தமகிழ் தலத்தார் - ஞானத்தால்
    மிக்கபெரி யோர்தனையே வேண்டி விரும்பினபேர்
    தக்கவினத் தாரிவரைச் சந்தித்து-முக்கியரே! - 570


    (தளவாய் அழகப்ப பூபதியின் பெருமை)

    அன்பாகப் பெண்ணை யராங்கேற்ற வேண்டுமென்றாள்
    முன்பாய் தளவாய் முகில்ராசன்-இன்பமுறுஞ்
    சொல்லினார் மங்கள கலியாணமே தோன்றுகின்ற
    வில்லினார் ஆர்க்கு மிரங்குவோர்-வில்லினால்
    சத்துருவை யென்னுந் தலையறுக்குஞ் சூரரம்பு
    மித்துருவைக் காக்கும் விசையவேள்-சுத்தமுறும்
    வாக்கினான் தர்மம் வளர்ப்பான் கவிஞர்கலி
    போக்குவான் மேலும் புகழவே-பார்க்குள்ளே
    கற்றவாரா குஞ்சங்கர மூர்த்திமேல் விருப்பம்
    பெற்றவரா மார்க்கும் பெரியோன்-வெற்றியரி
    போலவே யிப்புவியும் போற்று மரசனிவன்
    சாலவே சூரத் தனத்தினான்-காலமே
    செந்தூர் முருகர்பணி தேடுதொண்டை நாட்டினான்
    நந்தூர்குன் றூர்பதியாய் நாட்டினான்-பிந்தாது
    அழகின் நாமாள மேலன்பன்-உளத்திற்
    களவற்ற போதக் கவிஞ்ர்கள் தங்கள்
    அளகப்ப னென்னு மழகப்பன்-வளமுற்ற

    (திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தல்)

    செந்தூரில் தங்கள் திருமண்ட பத்திலே
    நந்தூ ரலையுகந்த நாதனையும்-வந்தங்கு - 580


    எழுந்தருளப் பண்ணி யிவளரங் கேற்றங்கண்(டு)
    அளந்தநிதி யிந்தா அனந்தம்-குழந்தைப்

    (குமரிப் பருவம் அடைதால்)

    பருவ மகன்றிவளே பக்குவமாஞ் செய்தி
    தெரிய வுரைக்கின்றேன் தேரி-உருவொப்பாள்


    கெண்டைக்கால் மின்னிக் கிளர் துடைக ளுந்துடித்துக்
    கண்டப்பா லல்குற் கரைதிமிர்த்துத்-தண்டைக்காற்

    கன்னியிடை மின்னிடையாக் காமிவயிற் றின்மேலே
    மன்னுகரி ரோமவரை வந்துதித்துச்-சின்ன

    முலையிற் பரபரப்பு மூண்டு சிவந்து
    கலைகற்ற பிள்ளையெனறன் காசாய்-விலைபெற்ற - 585


    தந்தச் சிமிழாய்த் தனியெலுமிச் சம்பழமாய்
    அந்தக் குரும்பைமுலை யாகியே-கந்தரத்திற்

    கேற்கவே தோள்க ளிரண்டுந் திரண்டவள்துன்
    மார்க்கவேல் மின்விழியு மைவிழியாச்-சேற்கண்ணாய்ச்

    செவ்வரியும் பாய்ந்து சிறந்துவிழி நீண்டுகண்டுக்
    கொவ்வையித ழாகிக் குழல்வளர்ந்த-திவ்வளவுஞ்

    சொன்னேன் நின்மணந்த கொடியுண் டேயவ்
    வழகெல்லாங் கொண்ட வளமதியாய்ச்-செவ்வுடைய

    பெண்களுடன் கோயிலுக்குப் பெண்ணும்போய் நிற்கையிலே
    கண்களினால் வாயில் கரத்தினால்-நண்பர் - 590


    தனையே யுருக்குவாள் தாதிலொரு சோமன்
    நினைவாய் பெருக்குவாள் இந்நாரி!-அனைவர்க்கும்

    இப்படியே தண்மதியா லேயெரியுந் தீக்குறுநெய்
    யொப்பாவாய்த் தாய்சொல்வதை யோதக்கேள்!-வெப்புடைய

    (தாய்க்கிழவி மகளுக்குக் கூறும் அறிவுரை)

    தீக்குவெஞ் சூடும் சலமதனுக் கேகுளிர்வும்
    பேய்க்குப் பிடிக்கும் பெருந்திறமும்-தாய்க்கு

    மதலைக் கிரக்கமுமிம் மாநிலத்தி னார்க்குக்
    குதலைக் குரைப்பின் குணமும்-விதமுற்ற

    மானுக்குத் தள்ளு மதியும் பெருந்தீயில்
    மீனுக்கு நீந்தும் விரைவதுவுங்-கானுற்ற - 595


    பாம்புக்கு நல்விடமும் பாவைக்குப் பக்குவமும்
    ஆம்பற் குணம்போ லருங்கருப்புங்-கூம்பா

    மலருக்கு நற்கடியும் வண்டுக்கிரைப்பும்
    பலத்த பசுக்களுக்குப் பாலுங்-கலைகற்றாய்

    அப்பாலுக் கேவெளுப்பு மானகரிக் குக்கருப்பும்
    இப்பாரில் நன்மிளகுக் கேயெரிப்புங்-கொப்பாகும்


    மாங்காய்க்கு மெத்தவளர் புளிப்புமிப்-புவியிற்
    பூங்கதலி நற்கனிக்குப் போதினிப்புந்-தாங்கும்
    அரசர் மதலைதனக் காதரவு மன்பும்
    வரதக் கவிஞருக்கு வாக்கும்-திரமாய்க் - 600


    கரும்புதனக் கேயினிப்புங் காமுகர்க்குத் தாதும்
    இரும்புதனக் கேகனமு மிங்கே–பெரும்புவியில்
    வெம்புலிக்குப் பாயும் விரைவுங் குரங்கினுக்குக்
    கொம்புதனிற் றாவுங் குணுமெலாஞ்-செம்பதுமீ!
    ஆரேனுங் கொண்டுவிட்ட தாலே பொருந்தினதோ?
    ஊரே பழியாம லுன்மதியாற்-பேரேகொண்
    டென்னை மறைக்குமதி யில்லைநா னென்னுடைய
    அன்னைதனக் கதிக மாகினேன்-மின்னரசே!
    தாதிமகள் தனக்குத் தானே பிரட்டுருட்டும்
    ஆதிமொழி யாய்ப்போய் யாளையுமே–பேதித்தக் - 605


    குத்திரமு மித்திரமுங் கூடச் சிரிப்பதுவுங்
    கத்துவது மப்போ கலப்பதுவும்-இத்திறங்கள்

    (மகள் பதிலிறுத்தல்)

    இல்லையே உன்னிடத்தில் என்றாள் மகளிதற்குக்
    கல்லிலே நாருரித்துக் காண்பிப்பேன்-சொல்லினால்
    அம்மா வெனவுரைத்தா ளன்னையுமப் போமகிழ்வாள்
    இம்மாதை வேண்டி யிளைஞர்கள்-சும்மா
    பணமென்னா தங்கப் பதக்கமென் னாவுன்செய்
    குணுமென்னா கொல்லுதென்று கூறக்-கணமுன்னால்
    உன்மகளைக் காண துணவும் படலையென்பார்
    என்னவிதி சின்னமகட் கென்பாளே–கன்னி - 610


    முலையைத் திறவாது முத்தங் கொடாது
    கலையைப் பிரியாது கண்ணால் வலையிட்டு
    முப்பதி னாயிரம்பொன் மோசமிலைல யானறிய
    இப்படி யெத்தனையோ யேற்றினது–அப்பா
    வயதெல்லாம் பன்னிரண்டில் மாதாவை மிஞ்சி
    நயமெல்லாம் காட்டினளிந் நாரி–செயமுள்ளாட்
    கிப்படியே யாரு மிறைக்குங்கா லிம்மாது
    குப்பெனவே பூத்தாள் குறையோபின்?–அப்பொழுதில்


    யாரார் இவள்தா யடியைப் பணியாதார்
    சீரார் திருநாட் சிறப்புப்போல்-ஊரார்க்கும் - 615


    தாதியர்க்கும் சொலிலிருது சாந்தி முடித்துடனே
    மாதினுக்குப் புத்திசொன்ன வாறுகேள்-கோதையே!

    (தாய், புத்தி கூறுதல்)

    தன்புத்தி யெத்தனைதான் சாதுரிய மாகினுந்தா
    யின்புத்தி கேட்டா லிழுக்கென்றோ?-அன்புற்ற
    விக்கிரமா தித்தன் மதிமிக்கா யிருந்தாலும்
    உக்கிரவான் பட்டிமதி யுட்கொண்டான்-தக்ககதி
    நாட்டுக்கே சென்று நணுகுந் தசரதனோர்
    ஆட்டைக்கோர் மந்திரியை யாக்கினார்-வீட்டைப்
    பரிபா லனப்படுத்தும் பாவையே! என்சொற்
    பரிவாகக் கேட்பாய் பதிவாய்-திருவேகேள்! - 620


    பெற்றதனம் என்னுப் பெரியோனும் பெற்றபொருள்
    மற்றையு மென்றே மகிழ்வேந்து-முற்றியநன்
    மானமறு மில்லாளும் மானமுறும் வேசையரும்
    ஈனமுறு வாரிவரென் றெண்ணெனவே-தேனமுதே!
    கேட்டிருப்ப துண்டே கிடையா மதியனைத்தும்
    நாட்டியுனக் கின்றே நவிலுகின்றேன்-வீட்டில்
    வயிரவத்துத் தாசியர்கள் வந்து புணர்வார்
    தயிருவிட்ட சொற்றுக்குத் தானே-உயிர்க்கிரங்கும்
    தன்மக் குலசையில்வாழ் தாதியர்க்கா ரேனுமாம்
    பொன்மெத்த வுமிருந்தாற் போதுமே-துன்னிப்போய்க் - 625


    கன்னிகுறிச் சித்தாதி காமமா யோர்மதலை
    தன்னையு மப்பனையுந் தான்புணர்வார்-இன்னமிந்த
    ஆற்றுரிற் றாதியர்க ளன்பாகக் சோநகரைத்
    தோற்றா தணைந்தல்லோ சோறுண்பார்-மாற்றாக
    ஆறுமுக மங்கலத்துக் காந்தாதி யர்மிளகு
    சாறுதனக் கேபுணர்வார் சண்டையிட்டு-மீறும்
    பெருங்குளத்துத் தாதிப் பெரியோர்கள் ஒற்றைக்
    கரும்புதனக் கேபுணர்வார் கண்டேன்-விரும்புங்
    குறும்பூரிற் தாதிகையிற் கூகை மருந்தால்
    வெறும்பாழாய் ஆகினபேர் மெத்த-நறுங்காசூழ் - 630



    கங்கமங்க லந்தனிலே கட்டபொம்மு மாணிக்கங்
    கொங்கைவயிற் றில்விழுந்து கூத்தாட-அங்கதையும்
    காட்டா திளைஞர்கள் கட்டியணை நற்காமக்
    கோட்டாலை கொண்டுபணங் கூட்டுகிறாள்-நாட்டமாய்
    மிக்கதென் திருப்பேரை மின்வயிர முத்துபெருஞ்
    செக்கதுபோ லாகியும்பொன் தேடுகிறாள்-தக்கவர்வாழ்
    அவ்வூரிற் றாசியுரை முலையாய்ப் போகியுமே
    ஒவ்வோர் பணத்திற் குழைக்கிறாள் - செவ்வானர்
    இரட்டைத் திருப்பதியூரி லிருக்குங் குப்பியின்னம்
    வெட்டைகொடுத் தேனுநிதி வேண்டுகிறாள் - கட்டாய் - 635


    திருக்களுர் மாடியின்னஞ் சேர மதுவுண்டே
    துருக்கனையுங் கூடுகிறாள் சோற்றால் - விருப்பால்
    வரம்பெருகு மவ்வூர்க்கு வாய்த்த சுடலி
    கிரந்திகொடுத் துண்கிறாள் கேளென்!-அரம்பையே!
    மிஞ்சுகுரு கூர்தனிலே மேவுகிழட் டுச்சுடலி
    கொஞ்சவய சென்றுபணங் கூட்டுகிறாள-வஞ்சகமாய்
    அவ்வூரில் முத்தியின்னம் ஆயிரம்பேர் வந்தாலுஞ்
    செவ்வையா யவரைத் தினங்கூடி-அவ்வேளை
    காமவெள்ளம் வந்ததென்று கால்வழித்தண் னீரைவிட்டுத்
    தாமதமில் லாதுநிதி தண்டுகிறாள்-மாமயிலே! - 640


    பம்பராம்போல் பீதம்பர மாதோ ரண்ணனையும்
    தம்பியையும் கூடிநிதி தண்டுகிறாள்-கும்பமுலைக்
    கன்னிவேங்க டாசலமுங் காமுகர்சே ரத்துகிலை
    மன்னிக் குனிந்துபணம் வாங்குகிறாள்-இன்னமிந்த
    வெள்ளூர்ச் சிவகாமி மேவுகின்ற வவனோடு
    சள்ளே பிடித்துரிநேர் தண்டுகிறாள்-உள்ளதாம்
    காந்திசுர வள்ளிமுத்து காமுகர்முன் வந்துபனைங்
    கூந்தல்முலை காட்டிநிதி கூட்டுகிறாள்-ஏந்திழையே!
    சீவைகுண்டந் தன்னில்வாழ் தேவடியார்க் குக்காதுச்
    சூவைகண்டா லுந்தெரியா தோபணையம்-பாவையர்கள் - 645


    முன்கருங் குளந்தனிலே மூத்தபொன்னி வந்தவரை
    அன்புடன்செய் சும்பனத்தா லாளானாள் இன்றுமவ்வூர்
    ராமயமா ணிக்கமொரு ராவெல்லாங் கெஞ்சிவந்த
    வீமர்தம் நற்புத்திர [னென்று] வேண்டுகிறாள்-காமமதிற்


    காரிசெ........பாள் காமியராந் தாதியர்கள்
    ஏரிவழி கூடிநிதி யேற்கிறாள்-நாரி!
    திருமுர.......ட்டிலுறுந் தேவடியா ரானவர்க்
    கொருபணத்தின் மாங்காய்க் காமென்பார்-மருவாது
    வல்லங்காட் டுத்தாதி வந்தற்குக் கைத்தொழில்செய்
    தல்லவோ சொர்ணமிகுந் தாளானாள்-மெல்லவே - 650


    கிட்டிணா புரத்தாதி கேரளத்தே சப்புணர்ச்சி
    தட்டாமற் செய்துபணந் தண்டுகிறாள்-கட்டாயப்
    பாளையங்கோட் டைத்தாதி பண்பில்லா தாரையுமெவ்
    வேளையுமே கூடுவா ரின்றைக்கோ-மெய்யாய்த்
    திருநெல்வே லிக்குள்வாழ் தேவடியார் தம்மில்
    ஒருசொல் வாசகரா யோர்பங்கும்-மருவில்
    அழிவுகா லுள்ளவர்கள் அஞ்சுபங்கோர் செய்யும்
    தொழிலையா னென்னவென்று சொல்வேன்-வழிவழியாய்
    இப்படியே நம்மையொத்த வேந்திழையார் செய்ததெல்லாந்
    தப்பலவே சோறுணங்கத் தானலவோ!-அப்படிப்போல் - 655


    நீயும் பணத்தை நிரம்பவளர்ப் பாய்மயிலே!
    நாயுங் கழிக்குமதன் நல்வயிறு-ஆயிழையே!
    சீமையதி காரியெனுஞ் செல்வனையோர் போதணைந்தால்
    ஊமையுமே போக முனக்கஞ்சி-மாமயிலே!
    ஊர்மணியக் காரனைநீ யுற்றணைந்தா லங்கவர்தன்
    சார்புகொண்டு சொர்ணசம் பாதிப்பாய்-வார்முலையாய்!
    தாசில் மணியனைநீ சார்ந்திடிலுன் னோடெதிர்த்துப்
    பேசியே யெவனும் பிழைப்பானோ?-ஆசிலளே!
    சம்பிரதி காரனைநீ தான்கூடி லுன்னுடைய
    உண்பழங் கட்கெல்லா முறுதியாஞ்-செம்பதுமீ! - 660


    நாட்டுக் கணக்கனைநீ நாடியணை யாதிருந்தால்
    வீட்டுக் கலைச்சல் விளைத்திடுவான்-கூட்டத்
    தலத்தா ரவரவரைநீ தான்கூ டவர்தான்
    பலத்தால் மதியாமற் பேசு!-நலத்தினளே!

    நோட்டுத் துருக்கருனை நேர்ந்தா லிரவிலரைப்
    பாட்டுக்கு வந்துபணம் பாரானே - நாட்டிலுள்ளோர்

    மெய்த்த.......ற்காரன் வேகித்தா லுன்வீட்டை
    முத்திரைவைப் பானுர்க்கு முன்னமே-சுத்தவிழுக் - 655



    கல்லவெட்டி யிவ்வூர் அளவுகா றன்பகைத்தால்
    நெல்லளவில் மொட்டையிடும் நெட்டூரன்-சொல்லிலென்றுங்

    கட்டன்கோ யில்மணியக் காரனைநீ கூடாயேல்
    குட்டைக் குலைத்திடுவான் கோதையே!-சட்டமாய்க்

    கற்றவளே! சம்பிரதி காரனைநீ கூடாயேல்
    குற்றமெலாம் பார்த்தெழுதிக் கூட்டுவான்-சற்றிணையில்

    கன்னிநீ! கோயில் கணக்கனைநீ கூடாயேல்
    எந்நேரங் கோள்விளைப்பான் இன்றைக்கோ-அன்னமே!

    மாதக் கடைசிமுறை மாறாது சாந்திசெய்யும்
    போதத் திறவானும் போத்தியைநீ-காதல் - 670


    வழக்கிட்டு முந்தி மடிபிடித்துக் கூடில்
    உழக்கிட் டளந்துபண முன்றன்-பழக்கத்திற்

    காசித்தே மாதாந்தத் தன்றுநிச மாய்த்தருவான்
    வாசிக்காய் மாரேற்பான் மாதரசி!-நேசித்துக்

    கோயிற் பணியாரங் கொண்டுகுவிப் பானெதிர்த்துக்
    காயிற் பொறாதபணக் கப்பலவன்-ஆயிழையே!

    நம்பியார் தன்குலத்தை நாட்டுமக ராசனையும்
    நம்பியார் கெட்டதுசொல்! நாரியே!-உம்பர்தொழுங்

    கட்டியக்கா ரனைநீ கண்டணையா யேல்சபையில்
    தட்டிப் பிடித்துநிற்கில் சள்ளென்பான்-இட்டமுடன் - 675


    சீபண்டா ரக்காரன் சேர்ந்துவந்தா னாகிலிந்திர
    கோபம்போல் கல்நகைகள் கூட்டலாம்-(இ)லாபஞ்செய்

    வெஞ்சனக் காரன் விரும்பநடந் தாயானாற்
    கொஞ்சமோ வெஞ்சனமுன் கொள்ளைதான்-வஞ்சகமாய்ச்

    சந்தனத்தை.........சற்பானைச் சன்னையாய்க் கூடிவிட்டால்
    உன்றனத்துக் கேகளப மோயுமோ?-வந்தடிசில்

    மற்றுந் ..........ன் மடப்பள்ளி காரன்கூடில்
    சோற்றுக் கவலையிலைச் சொன்னேனோ?-ஏற்றகவி


    பாடும் பதுமினி! பூப் பண்டார மெள்ளல்லல்
    ஆடுங் குலாவுமவன் குலாவத்-தேடும் - 680


    பலவேலைக் காரப் பழிகாரன் சீறில்
    உலகே பழிக்கவைப்பான் உன்னைப்-பலவானாம்
    வாசல்காப் பான்பகைத்தால் வந்துவெளி யிற்பணையம்
    பேசவாய்ப் பாகவிடான் பெண்ணரசே!-ஈசர்
    திருச்சுற்றுத் தூர்ப்பானே சீறினால் உடம்புக்
    கெரிச்சல்கிட ந்துதென்பான் கன்னீ!-விருப்பத்திற்(கு)
    ஏற்றிடவுங் கோயிலிடை யனணைந்து வந்தால்
    பாற்பசவ னதுனக்குப் பைங்கிளியே!-தேற்றிப்
    பிராமணர்க ளென்றும் பெரியோ ரென்றாலும்
    இராவிலென்ன சொன்னாலு மின்ப-வார்த்தையென்றால்
    சோறுண்ண மாட்டாய்நீ சொன்னதையெல் லாந்தருவான்
    நீருனக்கே ஆளா யிருப்பானே-சீராம்
    முதலியா ருன்னை முயங்கவந் தாராகில்
    முதலியா ரென்றவர்தன் முன்னே-கதமதாய்த்
    திண்ணமா யோர்வசனஞ் செப்பா யவரணைந்த
    வெண்ணமே சொர்ணமடீ ஏந்திழையே!-உண்ணவே
    பண்டிதாள் மெத்தப் பணந்தருவார் வாங்கினால்
    சண்டைவே கத்தொழில்செய் தையலே!-கண்டவுடன்
    வர்த்தகர் மெத்த மயங்குவார் நீயெனக்கே
    பர்த்தா வென்றேசொல் பணந்தருவார்-பத்மினீ! - 690


    கோமட்டி நல்வணிகர் கூடில்மா ணிக்கமெந்தச்
    சாமத்தி லுங்கேள்! தருவானே-காமன்
    கரைதுரையாம் பாரியைநீ காத்திருந்து சேரில்
    திரைதிரையாய்க் காசுவந்து சேரும்-தரையிலுயர்
    பட்டாணி வந்து பழகிநிதி தந்தானேல்
    எட்டநா ளென்னையும்நீ யெண்ணுவையோ?-கட்டாகத்
    தொட்டியர் குலத்துத் துரைபாளை யக்காரர்
    கட்டி யணையவுனைக் கண்டுவந்தால்-மட்டறநீ
    கற்றசுகங் காட்டாதே! காட்டிலவன் ஊர்க்குனையே
    பொற்புடையா ளென்றுகொண்டு போய்விடுவான்-நெற்பொரிசேர் - 695



    வாடையுங் கூகை மருந்து மவர்க்கூட்டு!
    கோடியுங் தேடிக் கொடியிடலாம்-நாடில்

    வடுகத் துரைகள் மறமுற்றோ ரேனும்
    முடுகப் பிடித்தாயேல் முண்டானம்-அடுகிப்பார்

    ரெட்டியார் கும்பிற்பலர் கூடில் கன்னநிலம்
    ரெட்டியா கத்தருவார் இன்றைக்கும்-இட்டமாய்ப்

    பல்கால் மறத்தயர்ந்த பாளையக்கா ரத்துரைகள்
    நல்வாக் கியம்பியுனை நாடிவந்தால்-சொல்பேச்சு

    சாமீ! உன்னையே தழுவுங் கரத்தினால்
    பூமீதி லாரைப் புணர்வேன்-காமீயென் - 700


    றங்கவர்கள் முன்புரைநீ! அஞ்சுகையிற் றுண்பழமுந்
    தங்க வளையுந் தருவானே-எங்கும்
    மலைவறவூர் காக்கும் மறவ னுறவும்
    தலைமறையு மட்டுமேடீ தாயே!-நிலவரமாய்
    ஓதிவைக்கேன் பேனெடுத்தா லும்முடிப்பா னுன்னுடைய
    காதறுத்தா லும்மறுப்பான் கன்னிகையே!-நோதலென்றுஞ்
    சத்தியம்போற் பேசிச் சதித்தோடு தாசவரை
    அத்தையென்றே கொண்டாய் அறிவிலியாய்!-உத்தமிபோற்
    பாயற்குள் வைத்தொருநாள் பண்டிதனைச் சேர்ந்தார்க்கு
    நோயற்ற வாழ்வுமுண்டோ? நுண்ணிடையே!-நாயன் - 705


    கவியரசன் வந்துவிட்டாற் காலைப் பிடித்து
    நவியரா மழிநடுவில் .......... -உவந்திருத்தி
    யார்க்குமே செய்யாத வான்கலவி யெல்லாம்
    பார்த்துநீ செய்து பணிந்தவர்க்கு-வார்த்தையெல்லாம்
    பண்பாகப் பேசவவர் பைதல்கிட்ட நூறுபொன்னை
    நண்பாக ஈய்ந்தவர்பின் னாகவந்து-விண்பரவும்
    நாதனே! நிற்கவா நானென் றனுப்பிவித்தாற்
    சேதமே யில்லையுன்றன் சென்மமட்டும்-காதலாய்
    உந்திவா தப்பெரியோன் வந்தணைய வேண்டுமென்றால்
    தந்திரம்நீ செய்யுவகை சாற்றக்கேள்!-முந்திக் - 71'


    (மருந்தீடு)

    கடியன்சா ரதையுன்றன் தன்னுடம்பிற் றேய்த்துக்
    குடிபின்பா லிஞ்சிக் குடிநீர்-விடியுங்கால்


    இத்திறமே செய்தவரை யிங்கேநீ கூடிலவர்
    தத்தித்தாய் மருந்து தந்தாலும்-உத்தமியே!
    உன்னுடம்பிற் சாரத் துண்மையே யானாலும்
    இன்னமொரு மார்க்க மியம்பக்கேள்!-கன்னியுனைக்
    கூடி முடிந்துவெளிக் கொண்டவரும் போகிலடி
    நாடியதன் மண்ணையொரு நாளெடுத்துத் - தேடி
    அகத்தியிலை யுடனந்த மண்ணைச் சேர்த்து
    நகட்டி விழுங்கிவிடு! நஞ்சோ-உகத்தினுக்கும் - 715


    உன்குடரிற் றந்தமருந் தொட்டாதே யிப்படிசெய்
    தன்பவரைக் கூடிநிதி யத்தனையுந்-தன்கையிலே
    வாங்கிக்கோ! பின்பு மறக்குவா னவ்வேளை
    தாங்கிக்கோ! கேட்டதொழில் தான்சொல்வான்-ஓங்கப்
    படித்துக்கோ கேட்டபல தொழிலைச் செய்து
    முடித்துக்கோ சொன்னவன்றன் முன்னே-பிடிக்கொப்பாய்!

    (தம்பிரான், சபையிடத்தில் தந்திரம் பேசல்)

    தம்பிரான் கூடுஞ் சபைதனிற்போய்க் கும்பிடுநீ
    செம்பிரா னதுபோல் சிலர்விழிப்பார்-நம்பினேன்
    ஐயா! உங் கள் அடிமை யாகவே வேண்டுமென்றே
    மெய்யாயென் நெஞ்சம் விழையுதே-பொய்யாய் - 720


    மொழிபேசும் மற்றவர்போல் மூடமாய்ப்ப் போகா
    வழியடிமைக் கொள்ளுமென்றே வந்தேன்-எளியவள்யான்
    அன்னையும் நீங்க ளடித்துக் கரைத்துடனே
    தன்னை யறியுங்கோ! சாமிகளே!-முன்னமென்முன்
    காலை மடக்குங்கோ! காயம் பிறப்பிடித்து
    மாலை யடக்குங்கோ! மாதவரே!-வாலையென்னை
    ஆனந்த வெள்ளத் தழுத்துங்கோ! ஐயரே!
    ஊனங்க மெல்லா முருக்குங்கோ-ஞானம்போல்
    இப்படியே நீயு மிரண்டுபொரு ளாயுரைத்தால்
    அப்படியே ஆகட்டென் றன்புவைப்பார்-ஒப்பிலளே!

    நாலுநா ளிந்த நயமுரைக்கி லொவ்வொருவன்
    காலினா லேவிடுவான் காமத்தை-மேலுனக்குத்
    (தூதிட்ட)வான் சுகமே வாவென்று மெத்தை
    மீத்ற் படுக்கவைத்து மின்னே! நீ-ஈது

    சடையா யெனவிரித்துத் தான்பார்த்தற் குள்ளக்
    கிடையாத சொர்ணக் கிழிகள்-புடையிலே
    வைத்திருக்கு நீயதையும் வாரியெடுத்துக்கோ!
    முத்தனவ னகழ்ந்த மொட்டையனேல்-அத்தர்
    திருநீறுபூசித் தினந்தின்பேன் பாக்கென்று
    இருநாழி கொள்ள விருக்கும்-பெரியதிரு - 730


    நீற்றுக்கோ விலையெடுத்து நீயயழுத்திப் பார்க்கிலிரு
    நூற்றெட் டரையாய் உழைத்தவளே - நீற்றிலே
    மறைத்திருக்கு மனந்த வராகனை யெல்லாம் நீ
    முறைக்குமுறை கொள்ளையடி மோகீ!-திறத்திற்
    குருக்கள்மார் கூடிக் குளிக்குந்துறையில்
    விருப்பமாய் நீகுளிபோ மின்னே!-கருத்தழன்று
    கைநோக்கிக் கூப்பிடுவார் காதல்கொண்டாரென்று
    ரவிக்கைநீக்கி யென்னசொல்லுங் காணென்றால்-மெய்வியர்த்துன்
    வீட்டுக்கு வந்துவிடவாவென வுரைப்பார்
    கூட்டிக்கொண் டோடிவந்து கூடப்போ!-தாட்டுகின்ற - 735


    சுந்தரவேடம் துணையாறு கட்டியுடன்
    தன்சிரசு மாலைமுதற் றாழ்வடங்கள்-அந்தமுறும்
    அங்குட்ட மாலைமுத லானதெல்லாம் நீபறித்துப்
    பங்கிட்டு விற்றாற் பணமன்றோ!-இங்ஙனைநான்
    சொன்னபெரி யோர் வெளியிற் சொல்லார் பறித்ததெல்லாம்
    இன்னமென்மே லுமிழுக்கென் றேயறிந்து-மின்னே!
    மதனநூல் கற்ற மகராசன் வந்தால்
    கதவெல்லாஞ் சாத்தியொரு காரியஞ்சொல்!-உதையமுதற்
    காயதென்று சொல்லியவன் கண்ணில் விழியாதே!
    பேயுமவன் கண்டாற் பிரியாது-வாயுந் - 740


    திறவானே பெண்களெல்லாந் தேடத் தொழில்செய்
    திறவானே யுன்னைச் செயித்து-மறவாத
    லீலைகளைச் செய்துநிதி லேசிலே வாங்கியுன்னை
    ஆலையிட்ட கன்னலும்போ லாக்குவான்-வாலையே!
    செட்டித் தொழிலோர் சிமிழரிவர் களெல்லாங்
    கஷ்டப் படுத்துவர்நீ காமிபோல்-முட்டவெற்றிக்


    கற்பசுவி லேபால் கறந்தாற்போல் நீகரைத்துச்
    சொற்பசப்பி நாற்பணத்தைச் சுற்றிக்கோ!-பத்மினியே!
    நட்டுவனண் ணாவியுன்மேல் நாடநடந் தாயானால்
    அட்டதிசை போற்றவுன்னை யாட்டிவைப்பான்-கட்டழகீ! - 745


    முட்டுக்காற் பணிக்கன் மோகமவர் நடந்தால்
    கெட்டிக்கா ரீயெனப்பேர் கிட்டுமேடீ!-தட்டுகின்ற
    கைத்தாளந் தித்தியொத்துக் காரன்முத லோருனையே
    நத்தா வகையாய் நடவாதே!-முத்திமிகுஞ்
    சூதியற்ற வேசையிந்தத் தொல்புவியி லேயிரண்டு
    காதுமற்ற மூளியடி கன்னிகையே!-சாதுவாய்க்
    கும்பகும்ப லாயுனக்கே கோடிநிதி தந்தாலும்
    வம்பிருக்கச் சற்றுமனம் வையாதே!-தப்பிலாது
    என்னை நெடுநாளிருத்திச்சோ றிட்டவனை
    உன்னை யணையமருந் தூட்டிவிடு! மின்னே - 750


    தகப்பனுடன் அன்னோன் தலைமகன் வந்தாலும்
    இகழ்ச்சிசொல்லா தேயணைவா யென்றுஞ்-செகத்திற்றாய்
    மாமனார் முந்த மருவ மருமகன்பின்
    காமமாய் வந்தானேற் கட்டியணை!-தாமதியா(து)
    அண்ணனுந் தம்பியுமே ஆசைகொண்டுன் பால்வருவார்
    திண்ணை யாங்குமாய்ச் சேர்த்தனுப்பு!-பெண்ணரசே!
    சின்னம்மை யோடு சிநேகிதத்தோ ரும்வருவார்
    கன்னல் மொழியே! கலந்தனுப்பு!-எந்நேரம்
    அக்காள்கூ டப்பழகு மாசையினான் வந்துவிட்டால்
    மிக்காகக் கொண்டணைநீ மெல்லியலே!-தக்கதன்நான் - 755


    மைத்துனனும் மைத்துனனும் மாறியுமைக் கேட்டுவந்தால்
    சத்தியங்கள் சொல்லித் தழுவிவிடு!-மெத்த
    நிறையாய் நடப்பவள்போல் நீயிருப்ப தன்றி
    முறையே யறிந்தணைந்தால் மோசங்-குறையாவாழ்
    உள்ளவராய் வந்தாலு முனைமறந்திங் கேயிருக்க
    எள்ளளவுங் கொள்ளே னென்றுரைநீ!-பிள்ளாய்!
    பைத்தியங் கொண்டோன்போல் பணந்தருவோன் போகில்
    வயித்துவலி கண்ணீர் வடிநீ!-நயத்திற்
    குலவழியுங் கேட்டுப் பணந்தரு வானைநீ
    குலதெய்வ மென்றுகொள் கோதாய்!-நிலவரமாய் - 760



    இட்டமுடை யோன்கையினா லேற்கிலவன் தான்சொர்ணக்
    கட்டியையோர் முட்டெலும்பாய்க் கண்டுவிடு!-முட்டவொன்றும்

    இல்லா தவனென் றிகழாதை யோருழக்கு
    நெல்லா கிலும்பறித்து நீகூடு-சொல்லிலே

    நேருகே டாகி நிசமொருகா சில்லானை
    வாருகொள் கட்டைகொண்டு மாறிவிடு!-நாரீ!

    குருடன் தனையணைந்துக் கூட்டும் பணத்திற்
    குருடு மிருக்குமோ? கோதாய்!-மருவவந்த

    நொண்டிதந்த சொர்ணமதை நோக்கில் முடமதற்குக்
    கண்டிருக்குமோ? சொல்வாய் காரிகையே!-பண்டுமுதற் - 765


    சப்பாணி யீந்ததன மென்றே நெல்விலைக்கு
    மொப்பா யெடார்களோ? வோதுவாய்!-இப்பாரில்

    தள்ளி விழுங்கிழவன் தந்தகிழட் டுப்பணமென்
    றள்ளி யெறிவாரோ? யாரேனும்-வள்ளல்போல்

    ஊமையன்ஈ யும்பணமு மூமையோ? நம்முடைய
    சீமையெல் லாம்பேசித் திரும்பாதோ?-காமமுடன்

    பாரத் தடியன் பணந்தந்தால் வார்த்தையிலே
    நேரத்தைப் போக்கிவிடு நேரிழையே!-வாரத்தால்

    ஆயிரம்பொன் நல்ல அளவற்ற தீந்தாலும்
    நோயனையுங் கூடாதே நுண்ணிடையே!-தாயே! - 770


    அகமுழுதும் நீயணிந்த ஆபரணம் நீக்கி
    முகமறியா னைப்போய் முயங்கு!-செகமதிலே

    கண்கண்டோ ராருமுனைக் காதலாய்ச் சேருமட்டும்
    பண்புள்ளாள் போலப் பணிந்துநட!-பெண்பிள்ளாய்!

    கண்ணா லுனைப்பார்த்துங் காரியத்தில் போகிறவனைச்
    சுண்ணாம்புக் கேட்டுச் சுணங்கேடி!-பெண்ணரசே!

    செம்பதுமீ! வந்தவன்றன் தேகத்தைச் சோதனைசெய்
    தம்பனவே ராலே சதிசெய்வான்-கும்பமுலைப்

    பேடைமயிலாளே! பித்தனா னாலுமிந்த
    வாடையை விட்டால் மருவானே-நாடியே - 775


    முப்பென் றுனதுகுழற் கொண்டல் நரைக்கிலுழக்
    குப்பூங் கொடார்க ளுனக்கெடீ!-எப்பொழுதும்

    (இங்கே, சில ஏடுகள் காணப்பெறவில்லை)


    (மோகனவல்லியின் தன்மைகூறி, சுப்பையனுக்கு
    நல்லறிவு கொளுத்துதல்)

    நல்லவள்தன் கண்ணிணையை நாடி மயங்காதே
    கொல்லவந்த கூற்றாகக் கொள்ளடா! - மெல்லியல்
    அல்குலென்று கொண்டே யணைந்தாயே லாடவரைக்
    கொல்லவந்த நரகக் குழியடா!-சொல்லுகேன்
    உண்டவரைக் கொல்லும் நஞ்சுமுண்டே யிவளழகு
    கண்டவரைக் கொல்லும் கடுவிடமே!-எண்டிசைக்குள்
    பூமியின்கண் ணாடவர்கள் பொன்னுக் கெரிபுழுவை
    மாமியென் றேன்கொண்டாய் மதியிலாய்!-காமியர்முன் - 780


    சத்தியம்போற் பேசித் சதித்தோடு தாரவளை
    யத்தையென் றேன்கொண்டாய் யறிவிலியென்-றித்திறம்நான்
    நாணமதி சொன்னதையே நன்றெனக்கொள் ளாதிதுவீ
    ணானவுரை யென்றே நகைத்திருந்தேன்-பேணிநான்
    பாலைப் புகட்டுவேன் பாக்கியத்தை நானுனக்குக்
    காலைப் பிடித்துப் புகட்டுவனோ?-தாலத்துள்
    ஆம்பிள்ளைக் கும்பால் வேண்டாமே உயிரிழந்து
    வேம்பிள்ளைக் கும்பாலும் வேண்டாமே-தேம்பிப்போய்ச்
    சாங்கால மார்க்குந் தனிமருந்தோ? அதுகெட்டுப்
    போங்காலம் புத்தி பொருந்தாதோ?-ஈங்கேயான் - 785


    சொன்னமதி யெல்லாமோய்! சுப்பையனே! தப்பாமல்
    உன்மதியிற் கொண்டிப்போ தூர்க்கேகென்-றன்னமே!
    காட்டி லெரித்தக் கதிர்நிலாப் போலெனெக்கே
    வாட்டியுரைத் தாரந்த நன்மதியைத்-தாட்டனவன்
    கம்பர்மகன் போலேநான் காதலுங்கொண் டேனவன்போல்
    இன்பமதி யுங்கேளா தேயெழுந்து-முன்பாகத்
    தெப்பக் குள்ளத்தினுக்கே சென்றுகுளிக் கும்போதில்
    அப்பிப் பிடித்தமஞ்ச ளத்தனையும்-அப்பா

    கழுவச் சகியாது கால்மட் டலம்பி
    வழுவற்ற சந்திபண்ண மாதே!-தழுவிப்பெண் - 790


    செய்த கலவித் திறத்தையே மந்திரமாய்
    வையம் பழிக்கநின்று வாய்புலம்பித்-துய்யமதி
    போன்றமுக நம்முடைய பொற்கொடியுந் தேடுமென்றே
    தோன்றியவ ளிற்கேகத் துவக்கினேன்-சான்றோன்

    ............ரவணை வாழ்த்தி யாரிதெலாந் தன்னிலே
    பார்த்துவரை யறவாய்மீ ளாதமாலென்-றரகரா
    உன்நகைக ளெங்கே? உயர்த்த நிதிகளெங்கே?
    நன்மதிக ளெங்கே? நகைக்கிடமாய்ச்-சின்னமதி
    வேசையுட னேவெளியி லேவந்த தென்ன?
    ஆசை வசமு மறியாதே-மோசமாய்ப் - 795


    பேசிவிட்டீ ரோவென்றே பின்தலத்தா ருங்கேட்டார்
    தாய்சமத்தாய் வேணசதிர் சொன்னாள்-ஆசிலரே!!
    பூவிற்ற நற்கடையில் புல்லுவிற்கப் பண்ணிவிட்டாள்
    மாவித்தை யாலென்றோர் வார்த்தைசொன்னேன்-தேவரீர்!
    போரில் தெருவில் புறப்பட்ட தேதென்றார்
    வாரிக் கொடுத்தபணம் வாங்கவென்றேன்-நாரிதன்
    யாருக்கா யீந்தீ ரழிவழக் கீதென்றார்
    ஓரூருக் கனுப்புமென்றே னோமென்றே-பாரில்
    மரியாதை ராமனைப்போல் வந்த வழக்காயும்
    பெரியோ ரிருக்குமூர் பேசித்-தெரிந்து - 800


    திருநகரிக் கேநீங்கள் செல்லுங்கோ வென்றார்
    கருதி நடந்தோர் கணத்தில்-பெருமாள்
    திருக்கோயில் வாயிலிலே சீக்கிரத்தில் வந்து
    கருக்காக நானிருந்தேன் கன்னி-நெருப்பெனவே
    வார்த்தைசொலுந் தாயு மகளுமிந்த மண்டபத்தில்
    தீர்க்கமுடன் வந்துநின்றார் திண்ணமாய்-சீர்த்தி
    பெருகுந் தலத்திற் பெரியோரு மவ்வூர்க்
    கருமங்க ளாக வரிக்காணத்-திருமண்ட
    பத்திலே கூடினார் பார்த்துநல்ல வேளையென்று
    நத்தியே நாம்போய் நமஸ்கரித்தேன்-உத்தமரே!
    எவ்வூ ருமக்குநீ ரவ்விடத்தே வந்ததென்ன?
    அவ்வாறை யெங்கட் கருளுமென்றார்-செவ்வாக
    என்பூர்வத் தையெல்லா மேல்லோர்க்கு மோதியுங்கள்
    முன்பான செய்தி மொழிகின்றேன்-அன்பாயோர்
    பெண்ணோ டிருக்கையிலே பேச்சுவித்தி யாசம்வந்து
    நண்ணாய் வழக்காயுன் நாரியுடன் திண்புயரே!
    வந்தேனா னென்றேனம் மாதரா ரழையென்றார்
    கொந்தார் குழலிவந்து கும்பிட்டாள் - வந்தையா

    (முற்றுப் பெறவில்லை)



  • Comments