Uṇṇāmulaiyam'mai piḷḷaittamiḻ I


பிரபந்த வகை நூல்கள்

Back

உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் I
சோணாசல பாரதியார்



உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
ஆசிரியர்: சோணாசல பாரதியார் (1858-1925)



Source
திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
வெளியீடு
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை
12.12.97.
ஈஸ்வர ஆண்டு கார்த்திகைத் திங்கள் 27-ம் நாள்
-----------

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
காஞ்சிபுரம் சோணாசல பாரதியார் (1858-1925)

காப்பு
ஆசிரிய விருத்தம்
1.
பொன்பூத்த புரிசடைப் புனிதர்பா லுற்றைய
         போரேற்றை யருள்கபாசம்
    பூட்டிவன் கோட்டினன் றோட்டிமுன் காட்டியெப்
         புவனமுஞ் சுற்றிமீட்டிங்
கின்பூத்த மெய்த்தொண்டர் சூட்டிளம்
         புற்றந் தினிக்குமத நீருட்டிநும்
    மிருசரண நிழல்விடுவ லெனமழலை யமுதுபொழி
         யிபவதன மகவைநினைவாம்
மின்பூத்த வைஞ்சத் தருக்குமைஞ் சத்தியின்
         விளங்கியைந் தொழினிறீஇப்பின்
    வியனுலக வுயிரெலாம் வயவின் றளித்தென்றும்
         விளையாடு மருமைநோக்கி
மன்பூத்த வருளம்மை கன்னியென மறையோதும்
         வாய்மைபொய் யாதவண்ணம்
    வன்னியண் ணாமலை மணந்தவுண் ணாமுலை
         மடந்தைவண் டமிழ்தழையவே

1. காப்புப் பருவம்



திருமால்

- 2.

பூமேவு புவனமெப் புவனத்து மேலான
        புண்ணியப் புவனமென்றே
    புலமது தெரித்துமற் றுலகர்காள் வருகநும்
       பொல்லாத மலவிருள்கழீஇக்
காமேவு வண்மையே மெனநுதற் கட்பிரான்
       கனஞான தீபஒளியிற்
    கருணைமலை யாயோங்கு மருணையுண் ணாமுலைக்
       கவுரியை யுவந்துகாக்க
மாமேவு பாற்கடலி னடுவணோ ராயிர
       மணிப்பணப் பாயன்மன்னி
    மயர்வறக் கண்வளர்ந் துயர்வற வுயர்ந்துதன்
        மார்வமர கதசினகரந்
தூமேவு துளவத் தலங்கரித்
    தொளிர்கவுத்துவமணிச் சுடருமிட்டுச்
    சுந்தரத் திருவைவைத் தன்பருக் கின்பருள்
       சொரிந்துவரு மைக்கொண்டலே. - (1)

- 3.

சிவபெருமான்
வேறு
மறிநெ டுங்கடன் மீதொரு பெரிய மந்தர மாமாலை
        வளையு றும்படி வாசுகி வன்மையிற் பூட்டுறா
    மதன நன்றுசெய் போதுவல் விடமெ ழுந்திய வூணென
        வளர்க ளங்கொடு வானவர் தும்மைமுற் காத்துளார்
மறலி வந்திடு வானென வழுது நொந்திடு தாயையு
        மயர்வு கொண்டபி தாவையு முன்னுறத் தேற்றியே
    மனநெ கிழ்ந்தர வோமெனு முறையு டன் சிவ பூசைசெய்
        மகவை யங்கினி தாயருள் வண்மையிற் றேற்றினார்
வெறிகொள் பங்கய வேதனு முலக ளந்திடு பாதனும்
        விபுதர் துன்றுவி ணாதனு மெண்ணுநற் சீர்த்தியார்
   விதிய றிந்தமூ வாயிரர் புலிப தஞ்சலி மாதவர்
        மிகவு ளங்களி கூர்சபை நண்ணுமெய்க் கூத்தினார்

விபவ வைங்கர வாரண மறுமு கம்பெறு கோளரி
    விழைவ யர்ந்திட நாலிரு பொன்மலைக் கேற்றினார்
விமல மங்கள கோமள வனச குஞ்சித பாதமெம்
    விசத நெஞ்சக வாதன மண்மவைத் தேத்துவாம்
எறித ருங்கன பேரிகை யமுத ளைந்தொளிர் வால்வளை
    யியம டங்கலும் வார்கடல் பின்னுறத் தாக்கலால்
எழுமு ழங்கொலி மாதிர முழுது மண்டலி னீதென
    விசையு மென்றுய ராவல்கொள் விம்மலிற்கேட்டபேர்
இதய மன்புறு மாறுமுன் மணமு வந்தமெய்ஞ் ஞானிய
    ரிலகு வண்டிரு நாளென மன்னுமச் சாற்றைநாம்

இகண கன்றவ ணேகிநம் விழிநி றைந்திடு சேவைசெய்
    திடர்த ணிந்திட லாமென நன்னயத் தாற்புகா
வறிவு டன்றிரு மாநதி பெருகு தண்புன லாடிமெ
    யணியும் வெண்பாடி யான்மல வெள்ளலிச் சேட்டை யோ
யகல வென்புமு ளேநெகு பரவ சங்கொடு தேகமு
    மடைய வொண்புள கார்தர மென்மெலப் பேர்த்தெழா
வடிவ லஞ்செய்த ணாமலை யொருபெ ரும்பொரு ளேயுன
    தருள் வழங்கிடு வாயென வுன்னிநற் காட்சிகா
ணருணை யம்பதி வாழ்தரு கருணை பொங்குழி மாசலை
    யமலை யெங்களு ணாமுலை யம்மையைக் காக்கவே.   - (2)

- 4. செங்கழுநீர் விநாயகர்
வேறு
பொதிகொண்ட வேணிப் பிரானரி யயன்போகி
        புகழ்கொண்ட வைப்பினாளும்
    புல்லுண்டு கயலுண்டு தண்டுண்டு தழையுண்டு
        போந்துண்டு தாங்குதுமெனாக்
கதிகொண்ட விடைகருட னெகினம்வெண் கரியுங்
        களித்துற வறிந்தாகுவுங்
    கனமோத காதியுண் டுறவர விவர்ந்தசெங்
        கழுநீர்க் களிற்றைநினைவாம
மதிகொண்ட வந்தணர்கண் மைந்தர்களை நந்தன
        வனந்தனிற் சந்தையார
    வன்னிகாள் வருகவென் றருமறை பயிற்றவவண்
        வந்துகிளி களும்வினாவி
நிதிகொண்ட கற்பகச் சோலைவன் னிகளுக்கு
        நிதமும் பயிற்றியமர்வா
    னீள்பொழில்கு லாவருணை வாழ்தரு மபீதகுச
        நிமலையைக் காக்கவென்றே.   - (3)

- 5.

முருகக்கடவுள்
துள்ளிமான் பற்பல வுலாக்காட்டு வேர்வலை
        சூழ்த்துவன் பார்வைபுல்லின்
    சூழ்ச்சியாம் பிறிதின்கி ழமைபூண்டு சிறுமான்
        றொடர்ந்துகொலை செயறீங்கெனா
வள்ளிமான் வலைவா ரொடும்போக்கி நன்பார்வை
        வைத்துப்பு லென்றுதனையே
    மன்னுதற் கிழமையாக் கொடுநிற்க விளையாட
        வருமொர்பெரு மானைநினைவாம்
தெள்ளிமா னதபூசை யிடைவிடா தாற்றுமுயர்
        சிவஞான யோகர்தம்பாற்
    சேர்ந்துமயர் வுங்கொடுமை யுந்தீர வெண்ணினேந்
        தேகநும தாக்குதுமெனப்
புள்ளிமா னும்புலியு முறவாடி யுரியபணி
        புரியருண கிரியெமானைப்
    புணரருந் தாமுலைப் பெயர்கோள்பெண் மானைப்
        புரிந்தினிது காக்கவென்றே. - (4)

- 6.

பிரம தேவர்
வேம்பசியி னெளியர்கண் முறையிட் டடைந்துநல்
        விருந்துண்ட வள்ளன்மனையின்
    வேதியிட மெங்கணும் வீங்குவயி றெடுதூங்கி
        வேடைதவிர் செய்கைமானத்
தேம்பசிய நறையுண்டு பாட்டளி மயங்கிச்
        செழுந்தோட் டிடங்கடோறுந்
    திகழ்நீல மணிகளிற் கண்வளரு மலரணைத்
        திசைமுகத் தேவைநினைவாம்
சாம்பசிவ நாமதுதி வேதகீ தத்தினொடு
        தமிழ்வேத விசையுமாந்தித்
    தான்றனை மறந்துயர மானந்த வனுபவத்
        தன்மையி னிருந்ததாலோ
பாம்பசி யெயிற்றுவாய்ப் பயமின்றி யெலியினம்
        பயில்வவென வறிஞரேத்தும்
    பண்புறு மணாமலையி னின்புறு முணாமுலைப்
        பாவையைக் காக்கவென்றே. - (5)

- 7. இந்திரன்
வேறு
அத்திமேன் முளைத்துக் கமுகமா ரிருப்பை
        யலர்தரு கற்பகா டவியி
    னகத்திய மாரக் குங்குமக் கோங்க
        மசையவா டரம்பைமா தளைய
வைத்தவ சோக மான்மகி ழீந்து
        வயிரவேல் விளாமனாற் கோட்டு
    வாகையாம் பனைக்கை மாமிசை யெட்டி
        வருமர சன்புடன் புரக்க
பொத்திரு ளுலகின் மன்னுயிர் போகம்
        புசித்திரு வினையொப்பிற் பாகம்
    பொருந்திமெய்ச் சத்தி பதிவினிற் பொன்னிற்
        புரிசடைப் பரன்கழ லுறல்போற்
கொத்திணர்க் கொன்றை யடிநிழன் மன்னிக்
        கோக்களின் படைதரு வளஞ்சூழ்
   குளிரருட் சோண மலைவள ரபீத
        குசசிவ ஞானவல் லியையே.   - (6)

- 8. திருமகள்
வேறு
பணங்கொண்ட பாப்பணையின் மீமிசைக் கண்வளர்
        பரந்தாம னைப் பார்த்தநும்
    பன்னியர்க ளிருவரேந் தம்மினெவர் பான்மிகப்
        பற்றுடையி ரென்னமாயன்
மணங்கொண்ட பூமாது நீகேட்ப தென்னென்ன
        மண்ணுணவிர் சொன்னன்றென
    மற்றும துமிழ்ந்துமாத் தேன்வேட்டு வந்துமென
        மகிழ்கொளும் பொன்புரக்க
கணங்கொண்ட மெய்த்தொண்டர் வந்துசந் நிதிநின்று
       கங்கா தராவென்னலுங்
    கருவிழி புரட்டித்த னார்செம் மேனியைக்
        கருமேனி யாக்கியடியார்
குணங்கொண்ட வருளுமா பதியுமா பதியெனக்
       குளிர்நகையின் வெண்மேனியாக்
    குலவச்செய் தருணைவளர் கருணையுண் ணாமுலைக்
        கோமளப் பெண்மணியையே.   - (7)

- 9. கலைமகள்
        வாணிவின வுறவயனுநின்
    மாமியார் மலரென்ன நும்பிட மதனம்பு
        மாமடிகள் கண்ணுமேலாம்
பொதுமலர்கொ லென்னுங் கடாவுக்கு விடையின்று
        பூநோக்கு நான்முகனைநன்
    பொருணோக்கி னெழுமுக னெனச்செய்து மருவுவெண்
        பூவையபி ராமிகாக்க
விதுமலர் திருப்பாற் கடற்கே நிகர்த்தசீர்
        மிக்கொளித் தவளமாட
    மேவுமட மங்கையரு மாடவரு மன்பினோடு
        வீற்றிருந்தாதுலர்கள்வா
யதுமலரு முன்னமுது தந்துதிரு மாலென்ன
        வாட்சிபெறு வாழ்ச்சியோங்கு
    மாதியரு ணாபுரி வினோதமுற வாழ்தரு
        மபீதகுச மாமயிலையே. - (8)

- 10. துர்க்கை
நத்தலைய முத்தலைய நளினங்க டலைசாய
        நாரைகொக் கோடவாளை
    நளிநீர்த் தடத்தலை யெழீஇப்போந்து தாக்கவுயர்
        நாளிகே ரத்தலையினிற்
கொத்தலைய வுதிருமிள நீரையத் தலைமந்தி
        கொண்டஞ்சு தலையுற்றதன்
    குட்டியை யருத்திப்பி னாறுதலை யாக்குமெழில்
        கூரருணை வாணனுதலை
யித்தலையு மெத்தலையு மெய்த்தலைய வீரருட
        னீற்றலையி னாற்றலையும்வந்
    தேற்றலைவி லாதமர்செ யாற்றலை யறிந்தசுர
        னெருமைக் கடாத்தலையினைக்
கைத்தலை யெடுத்தகூர் முத்தலையின் வீட்டியொண்
       காற்றலை மிதித்துன்நிறே
    காட்சிதந் தன்பருக் கருள்செய்துர்க் கைத்தலைவி
        காதலொடு நனிகாக்கவே - (9)

- 11.
சத்தமாதர்
வேறு
பணார்மறை பினாகநற் கூர்த்தவேல்
        பரூஉவளை வலாதொடுப் பேற்றதோர்
விணாரசனி சூலம்வைத் தோச்சுமோர்
        வினோதவெழு மாதரைப் போற்றுவோம்
மணாளனை விடாதுளத் தேத்தியே
        மனோகரம தாயிடப் பாற்கணே
யணாமலையுள் வாழ்திருக் காட்சியோ
        ளபீதகுச தேவியைக் காக்கவே. - (10)

- 12. முப்பத்து மூவர்
வேறு
திக்கோடிந் நிலவரைப்பும் வானகமுங் கமழச்
       செழும்பொழிலி னளிகுடைய வெழும்பிரச மலரி
னிக்கோடி வளவயல்பாய்ந் தெவ்விளைவும் விளையு
       மிலகருணை நலகருணை யிளங்கொடியென் னம்மைக்
கெக்கோடி யிசையுமிசை யுருத்திரரா தித்த
       ரினியமருத் துவர்வசுக்க ளாகியமுப் பத்து
முக்கோடி யெனும்வகையிற் பதினொன்றோ டொருநாள்
       மூன்றிரண்டா நாலிரண்டா முதல்வர்கள்கா வலரே - (11)

காப்புப் பருவம் முற்றிற்று
----

2. செங்கீரைப் பருவம்



- 13.

அருளார்ந்த வுமையம்மை யெம்மையாட் கொள்ளவந்
        தவதரித் தாளென்றுமிக்
   கன்பினீ ராட்டிமந் திரநீறு சார்த்திநுத
       லவிர்மணிச் சுட்டிநாற்றி
யிருளார்ந்த சூழியக் கொண்டைத் தலைப்பணி
        யிலங்கத் திருத்துபுசெவிக்
    கிரவிமதி நிகர்குதம் பைகள்பூட்டி மற்றையணி
        யிசைவுற வலங்கரித்துப்
பொருளார்ந்த பதமுளரி கைக்காந்த ளிற்கொண்டு
        புனிதவா யல்லியிற்றம்
    பொழிமுலைக் கோங்கமுத மூட்டிநோக் கித்தண்
        பொருப்பரையன் மனைவிமேனை
தெருளார்ந்த மகிழ்வின்மடி வைத்துமுத் தாடுமயில்
       செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
        செங்கீரை யாடியருளே.   - (1)

- 14.

பிறந்தவிம் மனிதப் பிறப்பரி தெனக்கண்டு
       பெருநூல்க ளோதும்வாய்மை
    பிழைபடா வண்ணநல் லறிவாளர் தேர்ந்தன்பு
        பெருகுபுரு டார்த்தநான்கி
னறந்தவா தோங்கிடத் தலையெடுத் தேபொரு
        ளமைந்திட மலர்க்கையூன்றி
    யானவின் பஞ்சேர வொருதாண் மடக்கிவீ
       டருளவொரு தாளைநீட்டிக்
கறந்தபால் கன்னலொடு முக்கனிச் சாறளாய்க்
        கபிலையின் னெய்விராவிக்
    காட்டுவளர் கோட்டுநறை கூட்டுசுவை நீட்டுசெங்
        கனிவாயி னூறலொழுகிச்
சிறந்ததாய் மடிநனைய விளையாடு மான்கன்று
        செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
        செங்கீரை யாடியருளே.;   - (2)

- 15.

விந்தமலை பாதலம் விழுந்தமலை பொதியமலை
        மிதிகொண்மலை முனிகையடியான்
    வெள்ளிமலை யமர்த லைகிள்ளிமலை நிருதன்
        வெடுக்கென் றெடுத்தமலைமான்
முந்தமலை கடையைநிமிர் மந்தர மெனும்பெரிய
        மொத்துமலை மத்துமலைபொன்
    முடிவழுதி யடியுண்ட மலைகாலி னிடியுண்டு
       முடிமூன்று போனமலைபின்
னெந்தமலை நின்றிரு வுணாமுலைக் கொப்பாகு
        மிறைவரண் ணாமலையதே
    யென்றென்று துதிசெய்து வெண்கமலை செங்கமலை
        யிந்திரா ணியுமிரதியுஞ்
சித்தமலை யாதுபணி யுமயமலை யுமையமலை
        செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
        செங்கீரை யாடியருளே      - (3)

- 16.

உலகமுழு தும்பெற்ற கருணைமா தாவென்
        றுவந்துமறை முரசறையநீ
    யுண்ணா முலைப்பெயர் புனைந்தனை யுயிர்ச்சிறா
        ருய்யும்வண மெவ்வணமெனா
விலகவிள முரலொடு மண்ணா மலைப்பிரா
        னின்பவுரை யாடவடிக
    ளெவ்வுயிர்க் கும்பிதா வன்றுகொ னும்பெயரின்
        யாதுபய னென்னநினையிற்
கலகவினை நீக்கியுயர் கதியருளு வோமெனக்
        காதலுட னெனையுநினையிற்
    கனஞான வமுதீந்து காப்பலென வெந்தையுங்
        களிகூர விளையாடுநற்
றிலகவா ணுதன்மைக்கண் வெண்ணகைப் பைங்கிள்ளை
        செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
        செங்கீரை யாடியருளே.  - (4)

- 17.

சம்பாதி தேவர்திரு முகமேவு கண்களாஞ்
        சந்திரா தித்தம்மைத்
    தையனின் கரநளின மூடவதி சயநோக்கு
        தன்மையி னிராமினடைய
வெம்பாதிர் நண்பிருல கீரென நடுக்கணழல்
        வெளியெய்தி யொளிசெய்திடவே
    வெம்பவந் தீரும்வணம் வெள்ளிமலை நீங்கியிம்
        மேதினி யடைந்துகச்சிக்
கம்பாதி ருக்கணருள் புரிகென்று பூசனை
        கருத்துட னியற்றியருளின்
    கவின்வாழை யமபந்தர் வைகிமறு நாளிவண்
        காதலி நுஞற்றுதவனாற்
செம்பாதி கொண்டையர் மெய்யையக லாவையை
        செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
        செங்கீரை யாடியருளே.  - (5)

- 18.

வேறு
மையிரு ளிரவியை வளைவுறன் மான
       மணிச்சூ ழியமாட
   மதியமு நிகரல வெனவமு தம்பொழி
    வண்முக மலராடத்
துய்ய நுதற்றில் கத்தெதிர் முத்துச்
       சுட்டி யசைந்தாடத்
   துள்ளுபு கட்கயல் பாய்செவி யிற்பொற்
       றோடு மவிர்ந்தாடச்
செய்யந லல்லியின் முல்லை யரும்பிச்
       சிறுநகை நிலவாடத்
   திகழ்திரு மார்பிற் பன்மணி யாரஞ்
       சேர்ந்துமி ளிர்ந்தாட
வையக டாட வகண்டமு மாடிட
       வாடுக செங்கீரை
   யருணையு ளங்குடி கொளுமொ ரிளங்கொடி
       யாடுக செங்கீரை. - (6)

- 19.

கரமணி செம்மணி வளைவெயி னேக்கிக்
       கானக் குயில்கூவக்
   கவினுறு மரகத மெய்ந்நிழ னோக்கிக்
       காதன் மயிலாடச்
சுருதிசொல் வாயின் செங்கனி நோக்கிச்
       சுற்றுபு கிளிபேசச்
   சுவையுறு மக்கனி யூறலை நோக்கிச்
       சூழ்ந்தெழி லளிபாடத்
தரைமுத லியவுல கருள்வயி னோக்கிச்
       சகமகள் மிகவாழ்த்தச்
   சரணம ணிந்தசி லம்பொலி வினவிச்
       சரணர்கு ழாம்போற்ற
வரவர சாடவ கண்டமு மாடிட
       வாடுக செங்கீரை
   யருணையு ளங்குடி கொளுமோ ரிளங்கொடி
       யாடுக செங்கீரை. - (7)

- 20.

பொருளே புகழே மணியே பணியே
       பொலியும் பெருவாழ்வே
   புயலே மயிலே குயிலே யனமே
       புகலும் பூங்கிளியே
மருளே துமிலா வடியார் பருகும்
       வடியாக் கடலமுதே
   மலரே மதுவே மணமே யளியே
       வளியே பரவெளியே
தெருளே திருமா மறையின் முடிவே
       தேடற் கருநிதியே
   தெய்வத் தருவே தருமத் துருவே
       சித்திக் கொருமுதலே
யருளே யெமதா ருயிரே மகிழ்வா
       யாடுக செங்கீரை
   யருணையு ளங்குடி கொளுமோ ரிளங்கொடி
       யாடுக செங்கீரை. - (8)

- 21.

குவலய முதலிய பலவுல கழுநிறை
       கொங்கா ருங்கோதாய்
   குலமுனி வரர்சுரர் நரர்முத லடியர்கள்
       கொண்டா டும்பாவாய்
கவனவெள் விடையவ ரருள்பொழி மழையது
       கண்டா டுந்தோகாய்
   கரிமுக னறுமுக னெனுமிரு மகவு
       கனிந்தார் வங்கூர்வாய்
தவமென வெளியர்செய் தனமுன தரிசனை
       தந்தாய் வந்தேநீ
   தகுதுணை யுனையல தொருவரு மிலையொரு
       சந்தா னம்போல்வாய்
சிவபுர மெனவொளி ரருணையு ளுறையுமை
       செங்கோ செங்கீரை
   திகழ்பரை திரிபுரை பனிவரை தருசுதை
       செங்கோ செங்கீரை.   - (9)

- 22.

தினையா மளவே நினசீர் கண்டே யின்போடுஞ்
       சிவையே பரையே யுமையே யென்பார் நெஞ்சூடுந்
தனைநே ரரனா ருடனே வந்தே பண்பாடுந்
       தவமா முனிவோ ரடியா ருந்தா முங்கூடும்
புனைநீ ளிமயா சலமா மென்றே கொண்டாடும்
       புரிவா யுறைவா யரியோ டயனா ருந்தேடும்
அனையே யனபூ ரணியே செங்கோ செங்கீரை
       யருணா புரநா யகியே செங்கோ செங்கீரை. - (10)

செங்கீரைப் பருவம் முற்றிற்று.

3. தாலப் பருவம்



- 23.

அழைக்கு முன்வந் தருளமல
       னனலின் வடிவி னவிர்முடியை
   யறிவ லெனவெம் முருவமெடுத்
       தரிதிற் றொடர்ந்து மறியாது
பிழைக்கு மலரோன் பெரும்பொய்யும்
       பிதற்றிப் பழியும் பூண்டதனாற்
   பிடித்த தெமையும் பழியதனைப்
       பெரிதுங் களைதல் வேண்டுமென
விழைக்குந் தவஞ்செய் தழற்காட்டி
       லிருத்தல் போற்செந் தாமைரக்காட்
   டெகினக் குழாங்க ளமாந்துமகி
       ழினிய காட்சிவயின்வயினே
தழைக்குந் தீர்த்த வளனருணைத்
       தனமே தாலோ தாலேலோ
   தருமம் வளர்க்கு மபீதகுசத்
       தாயே தாலோ தாலேலோ. - (1)

- 24.

செனிக்கு மவர்க்குக் கதியளிக்குந்
       திருவா ரூருஞ் சென்றுநின்று
   தெரிசித் தவர்க்குச் சித்திதருந்
       தில்லைப் பதியும் வசித்துமன
முனைக்கு மகிழ்வி னிறந்தவர்க்கு
       மோக்கங் கொடுக்குங் காசியுமுண்
   முதிரு மன்பி னெவ்வோர்வகை
       முத்தி நல்கும் பிறதலமு
மெனக்கு நிகரோ வெவரேனு
       மெங்கே யிருந்து நினைத்தளவி
   லீவன் வீடு சான்றிதுவென்
       றிலகு ஞானச் சுடர்காட்டித்
தனக்குத் தானேர் வளரருணைத்
       தனமே தாலோ தாலேலோ
   தருமம் வளர்க்கு மபீதகுசத்
       தாயே தாலோ தாலேலோ.  - (2)

- 25.

கூற்றை யுதைத்த பெருமானைக்
       குன்றக் கோமான் றருமானைக்
   குடியா யிருக்க முடியாரக்
       கொண்டு வானோர் குலவுபெரும்
பேற்றை யுடையேன் றனையரக்கன்
       பெயர்த்தா னெடுத்தா னாதலிலென்
   பெருமை குறைந்த தெனவடபாற்
       பிறங்குங் கயிலை மலைவெள்கி
யேற்றைப் போல வுருக்கொடுய்வே
       னென்றிங் குற்ற தெனவெள்ளை
   யேறூர்ந் தன்பர் தொழவுமையோ
       டீசர் காட்சி தரும்வீதிச்
சாற்றைச் சோற்றை வழங்கருணைத்
       தனமே தாலோ தாலேலோ
   தருமம் வளர்க்கு மபீதகுசத்
       தாயே தாலோ தாலேலோ. - (3)

- 26.

மலர்க்காற் சிலம்புஞ் செம்பகமு
       மருங்கிற் சேலை யுறும்வனப்பும்
   வளமார் களப மணிமுலையும்
       வரையம் புயமும் வளைக்கரமு
நலத்தா னனத்தாம் பன்னகையு
       நளினக் கண்ணார் செவித்தோடு
   நறையுண் கூந்தன் மாப்பொலிவு
       நண்ணுந் திருமா நதிபாயும்
புலத்தார் நாடு பொன்னாடாம்
       பொன்னா டென்று நந்நாட்டைப்
   புகழ்தன் முகம னெனவிமையோர்
       புகன்று பல்கா னோக்குபுகைத்
தலத்தா மரைகூப் பெழிலருணைத்
       தனமே தாலோ தாலேலோ
   தருமம் வளர்க்கு மபீதகுசத்
       தாயே தாலோ தாலேலோ. - (4)

- 27.

அவத்தைப் பேணிப் பற்பலகா
       லலைந்து நலிந்த தமையாதே
   யரிய வுயிரைக் கொன்றருந்தி
       யறிவிற் பெரியார் தமைவைது
பவத்தைப் பேணிச் செயுங்கொடிய
       பஞ்ச மாபா தகரேனும்
   பரிவின் றொருநாள் வழிச்செலவிற்
       பார்த்தா ரேனும் பவநீக்கிச்
சிவத்தைப் பேணிச் சித்திபெறச்
       சென்ம மேதுக் கெனத்தெளிந்து
   சித்த முருகிப் பேரன்பிற்
       றிளைத்துப் புலனை வளைத்தினிய
தவத்தைப் பேணச் செயுமருணைத்
       தனமே தாலோ தாலேலோ
   தருமம் வளர்க்கு மபீதகுசத்
       தாயே தாலோ தாலேலோ. - (5)

- 28.

அண்ட சராசர வுலக மடங்கலு
       மன்பொடு பூத்தவளே
   யத்தனை யுயிருமெ ளத்தனை முறையும
       றாவகை காத்தவளே
விண்டசனாதியர் வேண்டும் வரம்பெற
       விழிகொடு பார்த்தவளே
   மெய்யடி யார்புரி தொண்டை யுவந்தவர்
       வெவ்வினை தீர்த்தவளே
யெண்டச மூன்றினொ *டாறு மகன்றவ
       ரேத்துறு மூத்தவளே
   யாங்கன்செய் மாதவ மேயொரு வடிவா
       யிங்ஙனம் வாய்த்தவளே
தண்ட சரோருக சகிமாத் தவளே
       தாலோ தாலேலோ
   தக்கண கயிலா யத்தறை மயிலே
       தாலோ தாலேலோ.   - (6)

- 29.

அருமறை முதலிய மாகலை மேகலை
       யாக வுடுத்தவளே
   யருனிறை கொளுமுரு வெதுவது தகுமுரு
       வார வெடுத்தவளே
மருவும விறையடி வழிபடு நிலையவர்
       மார்பு வடுத்தவளே
   மலர்கொடு துதிபுரி யடியவர் வினைகெட
       வாழ்வு கொடுத்தவளே
வருதமிழ் மலர்கொடு மாலை தொடுத்தவர்
       வறுமை கெடுத்தவளே
   மற்றவ ருற்றிட மணிநூ புரவொலி
       மலிய விடுத்தவளே
தருமமெ ணான்கு நிரம்ப வளர்த்தவ
       டாலோ தாலோலோ*
   தக்கண கயிலா யத்துறை மயிலே
       தாலோ தாலேலோ.  - (7)

- 30.

வேறு
கடனிறை யொலிபுனல் கவர்தரு மெழிலுறு
       காலே நேர்மான் மார்பூடே
   கடிகமழ் நிழல்விரி துவளநல் வனம்வளர்
       கனோர் தேனே வார்பூமான்
மிடைவுறு பலவுல கமுமுறை மையின்விதி
       வேதா நாவே சேர்பாமான்
   மிளிர்சக சிரவிழி யமரர்க ளதிபதி
       மேன்மேன் மாலா வீழ்வான்மான்
தொடுமலர் வளைகழை கொடுசமர் புரிதரு
       தோலா வேடோ டோய்சீர்மான்
   காமக ளிர்கடவ மகிர்க டுதிசெய்து
       தோகாய் காவாய் காவாய்சே
வடிவிடு பணிபுரி குதுமென வவர்தமை
       யாள்வாய் தாலோ தாலேலோ
   யருமறை புகழிறை யுடனரு ணையுளுறை
       யாயே தாலோ தாலேலோ - (8)

- 31.

வேறு
கந்தனை யத்தி முகன்றனை முற்பெறு காவே பூவேகேழ்
        கஞ்ச மலர்ப்பத வன்பர் தமக்கெதிர் கானே தேனேநூன்
மந்தண முய்த்துண ருந்தவ ருக்குயர் வானே யேழேழ்பார்
       மன்பதை பெற்று மருந்தலி னற்றன மானே சீரேயாய்
வந்தனை யிற்றொழ நன்றறி கிற்றிலம் வாணா ணீணாளாய்
       வண்டமிழ் செப்பி நிரந்தர மன்புறும் வாழ்வே நீயீவாய்
சந்த விசைத்தமிழ் பொங்கரு ணைக்கொரு தாயே தாலேலோ
    சங்கர பத்தினி மங்கள வுத்தமி தாலோ தாலேலோ - (9)

- 32.

அத்த னணைத்திட முத்த முகப்பவ டாலோ தாலேலோ
    வற்புத மக்களை யற்பின் வளர்ப்பவ டாலோ தாலேலோ
பத்த ரினத்தவள் பக்க மிகுத்தவ டாலோ தாலேலோ
    பக்கல் வசிப்பவ டுக்க மறுப்பவ டாலோ தாலேலோ
சித்த நயப்பவண் முற்றருள் வைப்பவ டாலோ தாலேலோ
    சித்தி யளிப்பவண் முத்தி கொடுப்பவ டாலோ தாலேலோ
கத்த ருளக்கம லத்திலி ருப்பவ டாலோ தாலேலோ
    கற்றவர் மெச்சரு ணைப்பதி யுற்றவ டாலோ தாலேலோ - (10)

4. சப்பாணிப் பருவம்



- 33.

ஓமரைய னானபர ஞானவுரு வானவ
        னுவந்தொர்மரு காகிநம்பா
    லுற்றர்துல கிற்றமது நற்கருணை மற்றவர்க
        ளுய்த்துணர வைத்ததென்றே
யாமரைக் கணமுமக லாதபே ரன்பினா
        லார்ந்தமனை மேனையுடனே
    யழகான விமயகிரி யூடுபூம் பந்தரிடை
        யரியாதி யமரர்வாழ்த்தக்
கோமரை நிகர்த்தவிழி நின்றந்தை திருமணங்
        கூர்ந்துபுரி வித்தஞான்று
    குளிருநன் னீர்பெய்து தத்தஞ்செய் திடமகிழ்வு
        கொண்டேற்ற சிவபிரான்கைத்
தாமரையின் மீதுசெங் காந்தள்பூத் தனகையாற்
        சப்பாணி கொட்டியருளே
    தற்பேணு நர்க்கருள்செய் நற்சோண வெற்புலுமை
        சப்பாணி கொட்டியருளே.  - (1)

- 34.

விண்டுகத் தமரேசன் வெள்ளிவே தண்டத்தின்
        விமலர்திரு முன்னர்வீழ்ந்து
    வெஞ்சூர னரிமுகன் றாரகன் முதலோர்கள்
        விண்ணகரை யழல்கொளுவியே
புண்முகத் தெரியென்ன வெங்களைச் செய்கொடுமை
        போக்கவொரு மகவீகெனப்
    புரதகன னறுபொறி யளித்தனல னனிலனாற்
        பொங்குகங் கையினுய்த்திடத்
தண்முகக் கங்கையுஞ் சரவணையின் விடவாறு
        தனயராய்க் கார்த்திகைமினார்
    தனவமுத முண்டமரும் வேலையப் பரனாணை
        தாங்கித்த ழீஇக்கொளுமொர்சேய்
சண்முகற் கின்பால் வளத்தூட்டு செங்கையாற்
        சப்பாணி கொட்டியருளே
    தற்பேணு நர்க்கருள்செய் நற்சோண வெற்பிலுமை
        சப்பாணி கொட்டியருளே.   - (2)

- 35.

இண்டையணி செஞ்சடில ரெந்தைமுக் கணர்முறையி
        னியானுமுக் கணனறுமுகா
    வென்னைநீ வெல்லையோ வெனவிகட கணபதி
        யியம்பவென் றாய்முகமொடே
பண்டைமுக ராறுமுக ராயெற் பயந்ததாற்
        பதினெண்க ணுளனியானெனப்
    பகிர்கிலே னுந்தையார்க் காசிரியன் பாரோர்ந்து
        பார்த்தியென விளையான்சொல
வுண்டைமாங் கனிகொலா முலகெலாஞ் சுற்றியென்
        றுரைசெயங் குசமகனையு
    முன்பெரு வயிற்றினுக் கஞ்சிவிட் டேனிதனை
        யுணர்கவெனும் வேன்மகனையுஞ்
சண்டைவிளை யாதபடி யன்பினணை செங்கையாற்
        சப்பாணி கொட்டியருளே
    தற்பேணு நர்க்கருள்செய் நற்சோண வெற்பிலுமை
        சப்பாணி கொட்டியருளே. - (3)

- 36.

35 எண்ணமுத னாதனரு ளெட்டுழக் கிருநாழி
         யெனுமளவை நெற்பெருக்கி
    யெண்ணான் கறங்களும் வளர்க்குமே காம்பரை
         யிமாசலன் பெற்றசெல்வப்
பெண்ணமுத மெங்கள்குல தெய்வமெய்ஞ் ஞானமாம்
         பெருமாட்டி யொருகோட்டியபப்
    பிள்ளையைச் சண்முகப் பிள்ளையைப் பிறவும்
      பெறாதுபெறு கருணைமாதா
வுண்ணமுத மீகவென வாதுலர்க ளோதுமுன
         மோகையுடன் வானமுதினு
    மோங்குநால் வகையுண்டி யறுசுவை வளத்தினி
         லுணீருணீ ரென்றுநாளுந்
தண்ணமுத மூட்டிடுஞ் செய்யபூங் கைகளாற்
         சப்பாணி கொட்டியருளே
    தற்பேணு நர்க்கருள்செய் தற்சோண வெற்பிலுமை
         சப்பாணி கொட்டியருளே - (4)

- 37.

நீண்டவச் சிரபாணி குண்டிகைப் பாணியொடு
        நீனிறச் சாரங்கபாணி
    நிகழுமுப் பத்துமுக் கோடிதே வர்கள்வரா்க
        ணீள் பாணி கூப்பியேத்த
வீண்டவந் திடுதோற்ற மதுதுடிப் பாணியி
        னியைந்தநிலை தோய்பாணியி
    னீறனற் பாணியின் மறைப்பூன்ற டியினரு
        ளெடுத்ததிரு வடியிற்கொடே
பூண்டவப் புலிபதஞ் சலியடியர் கண்பகணி
        பொழியவா னந்தவடிவிற்
    பொன்னான சிற்பர வியோமத்து நாதனார்
        புரிநடங் கண்டடிகணுந்
தாண்டவஞ் சரிசரி யெனப்பபாணி கொட்டல்போற்
        சப்பாணி கொட்டியருளே
    தற்பேணு நர்க்கருள் செய் நற்சோண வெற்பிலுமை
        சப்பாணி கொட்டியருளே.   - (5)

- 38.

வேறு
சுட்டி யசைந்திட வேர்வை முகத்திற்
    சொட்டக் கண்முத்தஞ்
    சொரியப் பரிவிற் றோணி புரத்தொளிர்
    தூபியை நோக்குபுநின்
றெட்டிசை யோலத் தம்மே யப்பா
        வென்றழு மகவுபசிக்
    கின்னருள் செய்கென வெந்தை யியம்பிடி
        வெம்மனை நீசென்றே
வட்டிலி னுண்ணா முலைபொழி யமுதொடு
        வளர்ஞா னமுமூட்டி
    வளர்த்தனை யெங்கட் கென்னென வடியீர்
        மாழ்கலிர் வம்மினெனாக்
கொட்டி மலர்க்கை யழைப்பது மானக்
        கொட்டுக சப்பாணி
    கொற்றவர் மெச்சரு ணைப்பதி வித்தகி
       கொட்டுக சப்பாணி  - (6)

- 39.

ஆறுந் திங்களு நாறுங் கொண்றையு
        மணியெம் பெருமானுக்
    காலும் பத்திமென் மேலுங் கொண்டுமெய்
        யறிவே வடிவாகி
நீறுங் கண்டியும் வீறும் மந்திர
        நிகரக் கரமைந்தி
    னினைவிற் பூசியும் வனையுந் தொண்டர்க
        ணிகழிச் சன்மத்தே
யேறும் வல்வினை யாருந் தொல்வினை
        யியலத் துவ்வினையு
    மின்றா யொன்றா தொன்றியு மொன்றா
        மின்பம் பெறுவரெனக்
கூறுந் தன்மையி தாமெனல் போலக்
        கொட்டுக சப்பாணி
    கொற்றவர் மெச்சரு ணைப்பதி வித்தகி
       கொட்டுக சப்பாணி - (7)

- 40.

மாகன வாகன வானவன் மான்முதல்
        வர்க்கரு மைக்காணார்
    மானிட ரோவறி வாரறி யார்பிற
        மற்றுண ரப்படுமோ
சேகன தாமன வாதனை தீர்சிவ
        சித்திந லத்தாலே
    சீகதி நீரருள் வீரடி யாமிரு
        செக்கம லத்தாலே
காகன நாயக ரேயென வொதுபு
        கட்கம லத்தாலே
    காண்மகிழ் வாயதை யேவரு டாவரு
        கைக்கம லத்தாலே
கோகன காசன மாமக ணாயகி
        கொட்டுக சப்பாணி
    கோமளை சாமளை சோணை யுணாமுலை
       கொட்டுக சப்பாணி - (8)

- 41.

ஆடக மால்வரை சூழு மரிக்கொடி யைப்போலே
    யாதியு மீறு மிலாதவ ரைப்புணர் கற்போயே
நீடக வாமுலை தாவென மிக்கம ருற்றேசேர்
    நேய மகாரிரு வோரையு முத்த மளிப்போயே
யேடக மாமல ரானனம் வைத்தொளிர் நட்பாலே
    யேழைக ளாயடி வேலைசெய் பத்த ருளத்தேவாழ்
நாடக மாமயில் போலபவள் கொட்டுக சப்பாணி
    ஞான வுணாமுலை நாயகி கொட்டுக சப்பாணி - (9)

- 42.

தாரணி வானகம் யாவு மணக்கு மலர்க்கோதாய்
    தாவில் சராசரம் யாவும் வளர்க்கு மெழிற்றாயே
சீரணி யாகம சேத முரைக்கு மணிப்பூவாய்
    சீவர்க ளோகைகொள் வாழ்வு கொடுக்கு நடத்தோகாய்
பூரணி பூதர ராச னளித்திடு நற்பாவாய்
    பூசனை யீசனை யேபுரி பொற்புறு கைபோதால்
நாரணி யாரணி காரணி கொட்டுக சப்பாணி
   ஞான வுணாமுலை நாயகி கொட்டுக சப்பாணி  - (10)

சப்பாணிப் பருவம் முற்றிற்று.

5. முத்தப்பருவம்



- 43.

மைத்த நினது குழற் குடைகார்
        மலர்மா முகத்துக் குடைமதிய
    மதுர வாக்குக் குடைகரும்பு
        வன்னக் கழுத்துக்குடை குமுக
மொத்த தனத்துக் குடைகரிக்கோ
        டொப்பி லல்குற் குடையரவ
    மொளிர்க வானுக் குடைகதலி
        யுபய சரணுக் குடைகமலம்
வைத்த முத்த நகைக்குடைந்து
        வருந்தல் கண்டொண் டோட்குடைவேய்
    மன்னுந் தவஞ்செய் திடவதன்பால்
        வந்து கருணை புரிந்ததென
முத்தர் பரவு முக்கண்முத்த
        முகந்த முத்தந் தருகவே
    முத்தி யளிக்கு மருணையுண்ணா
       முலையாய் முத்தந் தருகவே. - (1)

- 44.

பத்துத் திசையு மணத்தூது
        பரப்பிப் பயிற்றி நெக்குருகிப்
    பாடிப் பரவும் பத்துடைய
        பமரக் குழுக்கள் விருந்தயரச்
சத்துச் சித்தா னந்தநறை
        தாவா தொழுக்கிப் பவப்பசியைத்
    தடிந்து பரம சுகத்திருத்துந்
        தருமத் துருவத் தண்மலரே
மத்துக் கொடிய சூர்மாவை
        மடித்துத் தேவர்க் கமுதளித்த
    வடிவே லெடுத்து மயிலேறி
        வாழ்த்து வோர்மு னோடிவரு
முத்துக் குழந்தை முத்தமிடு
    முத்தே முத்தந் தருகவே
    முத்தி யளிக்கு மருணையுண்ணா
       முலையாய் முத்தந் தருகவே. - (2)

- 45.

மணக்குங் கமலந் தண்மதிய
        மைத்த மேகம் வளர்ப்பூக
    மதுரக் கன்னல் சுவைச்செந்நெல்
        வளத்த வாழை யுயர்வேழம்
வணக்குஞ் சரக்கோ டெழிற்கோடு
        மண்கீள் கேழ லின்கோடு
    வளையுங் கொக்கு வல்லுடும்பு
        மாநீர் முதலை விடுசிப்பி
பணக்குண் டலியூர் நந்துபொலி
        பாலான் பன்மா தர்கள் கழுத்துப்
    பாய்மீ னெனுமிப் பதிற்றிரட்டிற்
        படுமுத் தென்று பகர்கவிஞர்
கணக்கும் வழக்குங் கடந்தொளிர்நின்
        கனிவாய் முத்தந் தருகவே
    கருணை யருணைக் காமாட்சி
        கனிவாய் முத்தந் தருகவே - (3)

- 46.

நிறைந்த ஞானப் பூங்கொடியே
        நினக்கே னூட வெனத்தாழு
    நிமலப் பெருமான் றனைநோக்கி
        நிகழுமன்ன பூரணியாய்ச்
சிறந்த வறம்யான் வளர்ந்திருக்கத்
        திரைநஞ் சுண்ட தோதுமெனத்
    தீயநஞ்சுண் டமுதுபொழி
        திருக்கை யுடைய பொறைமகளே
மறந்தை கொல்வேடுவனூனும்
        வயவே ருழவன் மாவடுவும்
    வணிகக் கிழவி பிட்டுமென
        வள்ள லுரைக்க மென்மூரல்
கரந்த பாலி னுவந்தளிக்குங்
        கனிவாய் முத்தந் தருகவே
    கருணை யருணைக் காமாட்சி
       கனிவாய் முத்தந் தருகவே..  - (4)

- 47.

தொண்டர் வாக்குக் கருள்வாக்குந்
        துணைத்தாட் குவமை யாவவெனத்
    தோயத் தொருகா றனையூன்றித்
        தூய தவநீ டியற்றியிசை
வண்டர் வாக்குக் கினியநறை
        வாக்குங் கந்த வரவிந்தம்
    வரம்பெற் றதுகொல லதனினுஞ்செல்
        வாக்குப் பெறுவ தெவ்வகைவே
தண்டர் வாக்குக் கமுதளிக்குந்
        தண்வாய்க் குவமை யாவலெனத்
    தவத்தாற் குமுதந் தளவொடுநின்
        சசிவத திரத்துச் சார்ந்த தென்மைக்
கண்டர் வாக்குக் களிக்குமுத்தக்
        கனிவாய் முத்தந் தருகவே
    கருணை யருணைக் காமாட்சி
       கனிவாய் முத்தந் தருகவே. - (5)

- 48.

குளிக்குங் கடலின் முத்தங்கீழ்
        கொள்ளூ முத்த மெனக்கொண்ணேங்
    கும்பக் கரடக் கரிமுத்தங்
        கோட்ட முத்த மெனக்குறியே
மளிக்கு நறவா ரரவிந்தத்
        தவிரு முத்த மதுபங்க
    மாகு முத்த மெனவேண்டே
        மமைமுத் தந்தா னென்னினும்வேய்
தெளிக்கு முத்தம் வரைமுத்தஞ்
        செய்தி தெரிக்க வேண்டுங்கொ
    றிகழு முக்கட் கரும்பினிய
        செவ்வி தெரிந்து பெற்றுநனி
களிக்கு நினது செம்பவளக்
        கனிவாய் முத்தந் தருகவே
    கருணை யருணைக் காமாட்சி
       கனிவாய் முத்தந் தருகவே. - (6)

- 49.

அரும்புங் கண்ணீர் கம்பலையோ
        டாகங் குழைந்து சந்நிதியே
    யடைந்து பணிந்து சூழ்ந்துநட
        மாடிப் பாடிய நன்றுதியே
விரும்பு மன்பர் மலங்கழுவும்
        விமலானந்த வாரிதியே
    விண்ணுளோர்க்குங் கிடைப்பரிதாய்
        வீசு மமுத மாமதியே
திரும்புந் தரமின் றோங்குசெல்வச்
        சிறப்பை யளிக்கு முயர்கதியே
    சிவனார் தம்மை மாலையிட்டுத்
        திருக்கல் யாணங் கொளுந்ததியே
கரும்பு வளைக்கும் பார்வதியே
        கனிவாய் முத்தந் தருகவே
    கருணை யருணைக் காமாட்சி
       கனிவாய் முத்தந் தருகவே - (7)

- 50.

வேறு.
பூங்குற மினார்பரணி னூர்ந்துதினை கவரப்
        புகுந்தகுரு கீட்ட மோட்டப்
    பொற்கவணின் வைத்தமணி பட்டுநொந் தரமாதர்
        போந்துநீர் கீழ்க்குலத்தீர்
வாங்குறப் படைகொண்டு சூரட்ட வேற்கொள்பெரு
        மானுக்கொர் யானையீந்த
    வான்குலத் தேமையும் வருத்தலென் னேனவேட
        மகளிர்யாஞ் சிறைபுக்கிலே
மீங்குறவு முறையின்று கும்பிட்டு மகடந்த
        திலையெச்சி லுணிசேய்பணிந்
    திருகரங் கூப்பவும் மான்மகளை யீந்துமகி
        ழெங்குல முயர்ந்ததென்னப்
பாங்குறவு சுரமினார் கொளவோங்கு சோணப்
        பருப்பதமின் முத்தமருளே
    பரமசிவ வரதனம் மருவுதவ மரகதம்
       பவளமுத் தந்தருகவே..   - (8)

- 51.

ஒண்முத்த மொருமுத்த மீகென்று மேனைமுன
        முள்ளமுரு கிந்கேட்பநீ
    யோயாது தரவாங்க முடியாது மற்றுமவ
        ளுன்முத்த மமையுமெனலும்
விண்முத்தநிகருமிரு கண்முத்த மார்பினிடை
        வீழ்முத்த மாலையேய்ப்ப
    வேர்முத்த முளரியிலை மேன்முத்த மெனவொழுக
        விம்மிநீ பொருமிநோக்கத்
தண்முத்த மின்னுமென் பெண்முத்த மருள்கெனத்
        தன்கையி னணைப்பவந்தத்
    தாயாஞ் சகோர முண் மென்முத்த நிலவுநகை
        தந்திடுநி னருள்ளென் சொல்கேம்
பண்முத்த மிழ்க் கவிஞர் பாடுமெழி லருணைப்
        பருப்பதமின் முத்த மருளே
    பரமசிவ வரதனம் மருவுபொரு மரகதம்
       பவளமுத் தந்தருகவே.   - (9)

- 52.

மிக்குலகி னிற்புகழு மெச்சம திழைத்தடையும்
        விட்புவன முற்றவிடைவாழ்
    மெச்சுமம ரர்க்குமன் விருப்புதவு கற்பதரு
        விட்டகனி தட்பமலர்வீழ்
சொக்குநிழ லிற்குலவு பொற்பணையின் மற்றவர்க
        டுப்புரவு பெற்றுமிகுசீர்
    துற்றமணி பற்பநிதி நத்தநிதி புத்தமுது
        துய்த்தனுப வித்தன் முதலா
யிக்குவல யத்தினெளி திற்பெறவ ளித்திடும்
        திப்பொழுதி னற்புடையர்பா
    லித்தகு மகத்துவ மருத்துநின் முகத்திலுள
        திச்சையறி கிற்றியெனவே
பக்குவர்க டொக்குநிறை முத்தருவி வெற்பருணை
        பற்றுமை முத்தமருளே
    பத்தர்துதி சுத்தபதி சித்தமதி னித்தம்வதி
       பச்சைதுதி முத்தமருளே. - (10)

முத்தம் பருவம் முற்றிற்று.

6. வருகைப் பருவம்



- 53.

மணிகொண்ட மணம்வீசு மேலக் குழற்காடு
        மலர்வதன நுதிலினீடும்
    வட்டநுண் பொட்டுநன் சுட்டியும் பட்டமும்
        மன்னுமுக் கணிசெய்சேடுத்
தணிகொண்ட தளவாம்ப லுளவாம்பல் வீடுந்
        தயாநயன மேவுதோடுஞ்
    சங்கக் கழுத்துமா தங்கத் தனக்கோடு
        தாங்கமுடி யாது வாடும்
பணிகொண்ட விடையூடு பட்டும்பொன் வண்டாடு
        பாணியுந் தொண்டர்பாடும்
    பதிகவண் டமிழ்வேத நூபுரஞ் சூடும்
        பதாம்புயமு மமரர்தேடு
மணிகொண்ட நின் சேவை யாங்காண வன்போடு
        மருணைநா யகிவருகவே
    யரியநே யர்களுருக வுரியபே றதுபெருக
       வருளுணா முலைவருகவே. - (1)

- 54.

தொண்டரண வற்றவர்க ளுண்டுமகிழ் வுறவாறு
        சுவைநாலு வகையுண்டியுஞ்
    சோராம னாணாளு மீந்தறம்வ ளர்த்திடுந்
        தூயர்கள மர்ந்துவாழும்
வெண்டரள வண்சுண்ண மாடங்கள் சிவபிரான்
        வெண்ணீற்று மேனிகாட்டி
    மேலோங்கி மேகமண் டலமண்மி யத்தியுரி
        வேய்ந்தமைப் போர்வைகாட்டி
வண்டரர விந்தநறை யுண்ணவரு கதிரவன்
        மண்டிலத் தார்ந்து செய்ய
    வார்சடையி னெழில்காட்டி மதிமண் டலம்புக்கு
        வளரிளம் பிறைகாட்டிநீண்
டண்டரணி மலைரையுடு மண்டலத் திற்காட்டு
        மருணைநா யகிவருகவே
    யரியநே யர்களுருக வுரியபே றதுபெருக
       வருளுணா முலைவருகவே.   - (2)

- 55.

கானார்ந்த பூந்துளவ மார்பனென் கண்ணெனக்
        கண்டுவகை கொண்டுவாழ்த்தக்
    கடல்வந்த பொன்மங்கை யென்கோயி லென்றுளங்
        களிகூர்ந்து சார்ந்துபோற்ற
வூனார்ந்த வுலகெலாந் தந்தமறை விதியா
        னுதிக்குமிட மென்றிறைஞ்ச
    வுருவிலான் மகிழ்வினா னளவிலான் கழைவிலா
        னுய்க்குமம் பென்றுதாழ
வானார்ந்த வேதமந் திரபீட மார்ந்தசிவ
        வள்ளன்முடி வனை கொன்றையின்
    மணமார்ந்த துய்யசெந் தாமரைச் சீறடி
        வருந்துமென நினையல்கன்றை
யானார்ந்த விண்பா வருத்தவரு மன்பான
        லருணைநா யகிவருகவே
    வரியநே யர்களுருக வுரியபே றதுபெருக
       வருளுணா முலைவருகவே. - (3)

- 56.

மாணிக்க வண்ணமண வாளனார் பல்லுயிரு
        மகிழ்தூங்க உவளகத்துண்
    மலரணையி னமர்போதி னிலகுமர கதவண்ண
        மணவாட்டி பொன்னாருமென்
வேணிக் கடும்பாம்பு மதியுமுற வுறவைத்த
        வேடிக்கை நோக்குகென்ன
    மிளித்தெய்வ மணியணி விளங்குசடை நாகமுக
        விமலமதி காணிரென்றும்
பாணிக் கலங்கார மானையறி யென்னவிரு
        பார்வைமா னுணருமென்றும்
    பயில் கங்கை வைத்தெனென யான்கங்கை வைத்தனன்
        பற்றுநும் பற்றதென்றே
யாணிக்க னகமன்று ளாடினரை யாட்டிமகி
        ழருணைநா யகிவருகவே
    யரியநே யர்களுருக வுரியபே றதுப்பெருக
       வருளுணா முலைவருகவே. - (4)

- 57.

கொண்டலுங் கங்கையுந் திங்களும் பாந்தளுங்
        கொன்றையும் மானுமனலுங்
    குஞ்சரத் தோலும்பு லித்தோலு மெனக்
        கொழுங்கோடு மேந்தியோங்கி
விண்டலத் தளவியும் மண்டலத் துருவியும்
        வேடரடி வாரத்தினின்
    மேவியன் புறவீர வருவிமிக் கொழுகியும்
        மிளிருமொரு பவளமலையின்
முண்டகமு நீலமுங் குமிழுமவ் வல்லியும்
        முல்லையும் வள்ளையுஞ்சீர்
    முன்னுபைங் கோங்கமும் மகிழமுங் காந்தளு
        முகிழ்த் தொர்கொடி படர்காட்சியி
னண்டரும முனிவருந் தொண்டருந் தொழவருந
        லருணைநா யகிவருகவே
    யரியநே யர்களுருக வுரியபே றதுபெருக
       லருளுணா முலைவருகவே - (5)

- 58.

வேறு.
தேடுந் தனமே தனகனமே
        தெய்வ மணியே செழும்பணியே
    தேவ தருவே மலர்மருவே
        தேயாமதியே நவநிதியே
நாட்டுந் தவமே யனுபவமே
        ஞானச் சுடரே சுகக்கடலே
    நாதவடிவே மறைமுடியே
        நவிலற் கரிய பரம்பொருளே
பாடுங் கிளியே யிசையளியே
        பருகுந் தேனே மடமானே
    பச்சைக் கொடியே யிளம்பிடியே
        பரம ருளமே யம்பலமா
யாடு மயிலே யம்பிகையே
        யருணைக் குயிலே வருகவே
    யலகில் விளையாட் டயருமெங்க
        ளம்மே வருக வருகவே.  - (6)

- 59.

என்பால் வருக வென்னுயிரே
        யென்றே யிமவான் கைநீட்ட
    வென்கண் மணீயென் பால்வருக
        வென்றே மேனை கண்காட்ட
வன்பா லிருவீர் வாதிட்டு
        வருகென் ரழைத்தால் வருவேனோ
    மற்றும் யானே வருவேனீர்
        வாளா விருமி னெனக் கூறித்
தன்பா றன்பா வெனத்தருக்குந்
        தந்தை தாயர் தண்கரத்தில்
    சார்தல் போல வேமாற்றிச்
        சதங்கை கலிக்க வோடோடி
யன்பா லிருவர் நடுவணம்
        ரருணைக் கிளியே வருகவே
    யலகில் விளையாட் டயருமெங்க
        ளம்மே வருக வருகவே..   - (7)

- 60

மிடித்தா மரைக்கை நொடியினற
      விழிக்கும் விழியா மயிலுமியன்
    மேவு மயிலும் பகைகடக்க
      விரைவிற் றருகென் றிளையோனு
முடித்தா மரைச்சேர் தோட்கரும்பு
      மொழியின் னமுதும் பசிதீர
    முன்னீ தருகென் றுளமிளிகி
      மூத்த மகனுங் கேட்கமுனந்
தடித்தா மரைக்குத் துயர்செயம்மந்
      தருவன் வருகென் றணைத்தெடுக்கச்
    சாமிநாத னதுவயிற்றான்
      றனக்கே யெனக்கே னெனவோட
வடித்தா மரைசேப் புறத்தொடரு
      மருணை யனமே வருகவே
    யலகில் விளையாட் டயருமெங்க
      ளம்மே வருக வருகவே. - (8)

- 61.

வஞ்ச மிகுந்த மனத்தாலே
      வளருங்கொடிய வினையாலே
    மன்னு மூன்று மலத்தாலே
      மயங்கிப் புகுந்த பிறப்பாலே
    கஞ்சம் படரு மிலைமேலே
      கலந்து தளும்பும் சலம்போலே
    கலங்கு மடியா ருணர்வாலே
      கனிந்துள் ளுருகிப் பணியாலே
    தஞ்சம் புகுந்துன் னருளாலே
      சரண கமல நிழலாலே
    சாந்தி யடையுந் திறம்போலே
      தழைக்க வெளியேந் தம்பாலே
    யஞ்சந் தொடரு நடையாளே
      யருணைப் பிடியே வருகவே
    யலகில் விளையாட் டயருமெங்க
      ளம்மே வருக வருகவே - (9)

- 62.

மருளே யுடைய பவப்பிணிக்கு
      மருந்தே வருக வாழ்வளிக்கு
    மணியே வருக மனம் விளக்கு
      மதியே வருக குறையாத
பொருளே வருக மாற்றறியாப்
      பொன்னே வருக பொன்னாய
    பூணே வருக வேதாந்தப்
      பொலிவே வருக சித்தாந்தத்
தெருளே வருக சிவஞானத்
    தேனே வருக திருவாளர்
    தேடி வைத்த பேரின்பத்
      திரளே வருக சன்மார்க்க
வருளே வருக திருவருணை
      யருந்தா முலையாய் வருகவே
    யலகில் விளையாட் டயருமெங்க
      ளம்மே வருக வருகவே - (10)

வருகைப்பருவம் முற்றிற்று.

7. அம்புலிப் பருவம்



- 63.

தன்னாத னடிமலர்கண் மறவாத வத்திரித்
        தவமுனிக ணுற்றதானுந்
    தனதாயை யனநேயை கனதூணை யனசூயை
        தகவன்பு வைத்தலானு
மன்னாத ரத்தினப் பரன்முடிக் கணியா
        வனைந்திடும் பெருமையானும்
    வயவின்று தானீன்ற மன்னுயிர் தழைத்திட
        மகிழ்ச்சிவிளை வித்தலான
மின்னாத கற்றியரு டன்வித்தி னேராள
        ரிடுபயிர் வளர்த்தலானு
    மெம்பிராட் டியுநினைச் சமமாக வெண்ணியே
        யிங்குவரு கெனவழைத்தா
ளன்னாத வுன்னுடைய திட்டமென் சொல்லுகே
        மம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
       டம்புலீ யாடவாவே.   - (1)

- 64.

தருமவாக் கம்மிசையி னாளிவளு நீயுமோ
        தருமவாக் கம்மிசையினான்
    றாமரைக் கண்ணன்வி னாளிவளு நீயுமோ
        தாமரைக் கண்ணன்பினான்
கருணையா கத்திகழு வாளிவளு நீயுமோ
        கருணையா கத்திகழுவான்
    கனகமலை வரனிலவி னாளிவளு நீயுமோ
        கனகமலை வரனிலவினா
னிரவலர்கக் கனமளிப் பாளிவளு நீயுமோ
        விரவலகக் கனமளிப்பா
    னிக்குவிலை யப்புதையி னாளிவளு நீயுமோ
        விக்குவிலை யப்புதையினா
னருமையி னழைக்குமெம் மம்மைநிகர் போலுநீ
        யம்புலீ யாடவாவெ
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியோ
        டம்புலீ யாடவாவே.   - (2)

- 65.

64. மெய்ஞ்ஞான மணம்வீசு பூங்கோதை யிரவுண்டு
      மிளிருமுக மதியமுண்டு
    வியனமன மானுண்டு செவ்வாய்க்கு முதமுண்டு
      மென்மூரன் மீனமுண்டு
விஞ்ஞான ருண்டுமகி ழருளமுத முண்டுபர
      வெளியுண்டு சிவசூரியன்
    விழைவுண்டு மூழ்கியெழ வின்பவா ரிதியுண்டு
      மேவுகுண மேருவுண்டு
பொய்ஞ்ஞானர் காண்பரிய மேலான பதமுண்டு
      புரணவாழ் வுண்டுண்டுகாண்
    புண்ணிய மலர்ந்தபொற் கொடியிடையுன் னினுமிக்க
      புகழ்கொண்ட தன்மைதேர்ந்தே
யஞ்ஞான நீங்கிநீ யெஞ்ஞான்றும் வாழலா
      மம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே. - (3)

- 66.

பங்கயக் கண்ணனும் பங்கயச் செல்வியும்
      பங்கயத் தணைவிதியும் வெண்
    பங்கயப் பாரதியு மாலுமயி ராணியும்
      பஞ்சபா ணனுமிரதியுஞ்
சங்கையற் றுணர்தவரு மவர்மனைவி மாருமிவள்
      சந்நிதி யடைந்துசூழ்ந்து
    தாழ்ந்துவிழி வார்ந்துதுதி நேர்ந்துகளி கூர்ந்துமிகு
      சம்பத் தடைந்திருப்ப
வெங்கயப் பிணியுமா சாபமும் பாபமும்
      மெய்க்கூனு மற்றுமுளநீ
    விதிகொலோ மதிகொலோ விவணடைந் திடரெலாம்
      வீட்டுகிலை யேனுமெந்தா
யங்கயற் கண்ணியருள் வைத்தழைத் தனள் காண்டி
      யம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே. - (4)

- 67.

செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
      திருப்புலி நகர்க் கணடனஞ்
    செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
      சிறப்புலிக் கருளுநாதன்
வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
      மெய்ப்புலி நகைத்துரைக்கின்
    வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
      வேண்டிவரு கென்றனளெனக்
கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
      கவுரியருள் பெற்றுய்யலாம்
    கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
      காயினென் செய்வதென்னி
லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
      யம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே..  - (5)

- 68.

திருமான் மகிழ்ந்துபுணர் கருமா னயந்துபெறு
        செய்யமா நளினனீன்ற
    திலோத்தமைப் பெண்மானை யிச்சையான் மானுருச்
        சேருபுது ரத்தவருணைப்
பெருமா னெனாவந்த வந்தமா னிந்தமான்
        பெம்மா னளிக்கவுய்ந்தாள்
    பிரமனும் பவநீங்கி யேத்தினன் குரவற்
        பிழைத்தபவ நீயுமகல்வா
யொருமா னிவர்ந்துனது மருமா னிழைத்தபவ
        மோவியிந் திரவிமான
    மூர்ந்தும்ப ருற்றவித் தலமகிமை யோர்ந்தடையி
        னுவமான மற்றவெங்க
ளருமான் விழிக்குமரி தருமான் மகிழ்ச்சிபெரி
        தம்புலி யாடவாவே.
    யண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியொ
        டம்புலீ யாடவாவே.  .   - (6)

- 69.

காரஞ்சு மேனிமா மாயனும் பிரமனுங்
      காணரிய வடிமுடியெமான்
    கனவடிவ நுதல்விழியொர் கரநட வனந்திருக்
      கார்த்திகைந னாட்டீபமோ
டோரஞ்சு தலமவையி நித்தலப் பூதமா
      யொளிர்தழற் கடவுண்மகவா
    யுற்பவித் தாறுமுக மைந்தன் மெய்த் துணைவனா
      யுளனென்று நின்னை நோக்கி
வாரஞ்சு வர்க்கவமு துள்குவா ருள்குமிடை
      வந்துபொழி கருணைமாதா
    வருகென் றழைத்திடப் பெற்றனை யுனக்கெந்த
      வரம்வேண்டி னுந்தருவளிவ்
வாரஞ்சு லாவுநகை வாய்க்குமுத வனகையுட
      னம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே.   - (7)

- 70.

தேசத்தி னுயருந்த தலேச்சுரங் கவுரிநகர்
      தேசுநகர் முத்திநகரஞ்
    சிவபுரந் தென்கயிலை யென்னுமரு ணைத்தலஞ்
      சேர்தலிரு வினையொப்பதா
நேசத்தி னற்றீர்த்த மாடன்மல பரிபாக
      நேர்ந்ததாந் திருமலைவல
    நினைவுடன் செய்தல்சத் தினிபாத மாஞான
      நீள்சுடர்ச் சேவைவீடா
மாசத்தி கலியாணி சிவகாமி யபிராமி
      வாமியிவ ளருள் வடிவமிம்
    மகிமைபெறு தலமென்று நீயறிகி லாய் காலோ
      மண்ணோரும் விண்ணோரும்வந்
தாசத்தி பெறுசந்நி தானத்தி பத்தியுட
      னம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே.   - (8)

- 71.

மாறுஞ்சு மரவினைக் கவணாக்கி மைந்தர்க்கு
      வன்னிவா கனமளித்தோன்
    மற்றுமிந் திரனிரவி வருணன் குபேரனையு
      மாற்றியவர் வாகனந்தா
னேறுஞ்சு தந்தர னியமனைக் கடாவிழித்
      திருகாலி னேகவிட்டோ
    னேமாந்த நின்னையும் விமானத் துடன்பிழிந்
      தினியவமு தாச்சுவைத்தோன்
வீறுஞ்சு ராரிமகி டன்றன்னை மதியாது
      வெம்மைசெய வம்மையிவடான்
    விந்தைதனை யுந்தவள் வந்தவனெ டுந்தலையை
      வெட்டிமிதி யடியாக்கினா
ளாறுஞ்சு பாவமில ளவளையுன் மேல்விடுமு
      னம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே.  - (9)

- 72.

பரசிவழி வழியடிமை புரியுமவர் கொடியவினை
      பாற்றவருண் ஞானசோதிப்
    பரசிவ பிரான்மகுட கோடீர மன்னிவாழ்
      பாக்கியம் பெற்றுளமெனச்
சிரசிவர்ப கீரதிசெய் போதனைக் குள்ளாய்ச்
      செருக்கினை யிருத்தியொருகாற்
    சீறுமிவள் சீறடியின் வறளாற்றி னொருசார்பு
      சிதையோட மாதிகண்டாய்
விரசிவளை மதியாத தக்கன்செய் வேள்வியினை
      வீரபத் திரனழித்த
    விந்தைகளை யறியாய்கொ றேய்ப்புண்டு காய்ப்புண்ட
      வெள்ளைமதி கிள்ளைமொழியா
ரரசிவர தக்கையப யக்கையம் பிகையுமையொ
      டம்புலீ யாடவாவே
    யண்ணா மலைக்கினிய வுண்ணா முலைக்கனியொ
      டம்புலீ யாடவாவே   - (10)
அம்புலிப்பருவம் முற்றிற்று.

8. அம்மானைப் பருவம்


- 73.

வாளாவி யிருந்தபொழு தென்னுடைய தாமென்று
      வாணியுரை யாடமலர்நேர்
    வண்கையினெ டுத்தததி யென்னுடைய தேயென்று
      மாமாது வாதாடமே
னீளாரு மைவிழிப ரப்பிநீ யாடவதை
      நின்றவிரு வோருநாடி
    நெஞ்சமய லாடநின் னகையினா மாதுமுக
      நிழலாட வமராடிமேற்
கோளாய நீக்கவது மீளா வருங்காலை
      கோகனகை வென்றேனெனாக்
    கூத்தாட மற்றுமுள மாதர்கள் குழீஇக்குழீஇ
      கொண்டாட வேத்திவாழ்த்தி
யாளான வடியவர்க் கருளம்மை முத்தான
      வம்மானை யாடியருளே
    யருணாபு ரக்குமரி கருணாக ரக்கவுரி
      யம்மானை யாடியருளே - (1)

- 74.

வாரமா மலர்சொரிந் தர்ச்சனைபு ரிந்தன்பர்
        மனமுவந் துய்யும்வண்ணம்
    வருகவருள் பெறுகவென வாய்மலர்தல் போன்மெய்ம்
        மறைச்செஞ் சிலம்புகொஞ்சு
மீரமா மலரன்ன தாண்டைக் கருள்விழிக்
        கின்மொழிக் கொப்பியாம்வே
    றிலையென்று வருவக்கிராங்கமறு காறத்தை
        யென்னுமிவை பேர்வினாவிச்
சாரமா வன்னமளி சுகமென்று வந்தலீர்
        தக்கவ ரலீர்போபெனாத்
    தண்கையி னெடுத்தெடுத் தந்தரத் தெறிதல்போற்
        றாதியர்கள் சரிசரியென
ஆரமுந் நீலமும் பச்சையு மிழைத்தநல்
        லம்மானை யாடியருளே
    யருணாபு ரக்குமரி கருணாக ரக்கவுரி
        யம்மானை யாடியருளே - (2)

- 75.

வெம்மைதரு மும்மைமதி லெய்தநாள் வளைவில்லும்
        வீற்றிருக் கின்றவில்லும்
    மேனியும் வேய்மலரு மீக்கோளு நம்பெயரின்
        மிளிருவன வெனவுவந்து
நம்மையும் பணிகொண்ட நாதர்மண வாட்டியாய்
        நல்லிமய வல்லியான
    நாரிக்கு விளையாட வம்மனை யளித்துமென
        நவில்கீழை நாகர்வைத்த
செம்மைமா ணிக்கமிவை காண்கவென விருகோள்கள்
        சிந்தைதனி னாணமெய்தச்
    செங்காந்த ளங்கையி ளெடுத்தந் தரத்துச்
        செலுத்துவன போலவெங்க
ளம்மைசிவ காமிதவ வாமியபி ராமிமணி
        யம்மைனை யாடியருளே
    யருணாபு ரக்குமரி கருணாக ரக்கவுரி
        யம்மானை யாடியருளே - (3)

- 76.

கனக்கவள நிலவுகயி லையிரலரனு நீயுமோங்
      கலையின்மிகு கரிபிடியதாய்க்
    காதலி னளித்தகண பதிவேழ முணவினிய
      கவளமின் றளவுமீவாய்
மனக்கவலை தீர்ந்துய்ய வாதுலர்க் கன்னம்
      வழங்கறம் வளர்த்துநின்றாய்
    மற்றும்யா னின்னடிக் குற்றேவல் செய்வனின்
      மருகியை வளர்த்தெடுத்தே
னெனக்கவள மன்னமின் றேநாவ லூரருக்
      கேறும்வா கனமுமானே
    னின்புறும் பொற்சேடி யுடனுதித் தேனெனா
      வேத்தும்வெள் ள்ளானையுண்ண
வனக்கவள மெறிதல்போ லழகான முத்தான
      வம்மானை யாடியருளே
    யருணாபு ரக்குமரி கருணாக ரக்கவுரி
      யம்மானை யாடியருளே.  - (4)

- 77.

நம்மானை யனையாரை யாசைநீ ரோடையி
      னலித்துமான் மானையேவி
    நம்மையு மழித்தவனை நாமழித் திடுதுமென
      நற்றரு வனத்தரோட்டும்
வெம்மானை முனமானை யுரிகைக்கொள் பெருமானை
      வெஃகிவெ ணிலாக்குடைக்கீழ்
    விரையிதழி மாலைவேய்ந் தெனையா ரசைப்பரென
      வேணிமிசை யினிதுவாழும்
கம்மானை யசையா தசைத்தொழுக வைப்பலுங்
      கண்மானை மகிழ்வியுமெனாக்
    கலைமானை மலர்மானை விழிமானி னாற்சொலிக்
      கனகவம் மனைவீசியவ்
வம்மானை முடியசைப் பிக்கும்வித மெனவெமனை
      யம்மானை யாடியருளே
    யருணா புரக்குமரி கருணாக ரக்கவுரி
      யம்மானை யாடியருளே.   - (5)

- 78.

வேறு
மாயிரு ஞாலத் துயிர்களென் மகவுகண்
      மற்றவை யின்புறநீர்
    மன்னுதி ரல்லது தீமை புரிந்து
      வருந்துதி ரேலொளிகூர்
ஞாயிறு திங்கள்செவ் வாய்புதன் வியாழந்
      நவில்வெளி சனிகேது
    நண்ணு மிராகுவெ னுங்களை மாற்றி
      நவக்கோள் வைத்திடுவேன்
சேயிரு கைத்தல வல்லமை நோக்குதிர்
      தெரிவுற வேண்டினிவண்
    செய்குவ னென்று பயங்காட் டுதல்போற்
      றிகழ்தரு நவமணியா
லாயின வம்மனை கொண்டெம தம்மனை
      யாடுக வம்மனையே
    யருணைக் கோர்நிதி கருணைப் பார்வதி
      யாடுக வம்மனையே.   - (6)

- 79.

வலைமான் வலைமா தெனனமா மலனான்
      மாழ்குநர் சிவெனவே
    மழுமா னேந்தியோர் செழுமா னேறிமுன்
      வருகோ மானொருபான்
மலைமான் மலைமா னீகையி னான்விடு
      மணியம் மனையானே
    மற்றொரு நொடியிற் பற்றுவ னென்றது
      மாட்டா தோடோடிக்
கலைமான் கலைமா னென்ன வயர்ந்திடல்
      கண்டு நகைத்திதுபார்
    கைப்பற் றுவலென வொப்பச் சூண்மொழி
      கழறிப் பற்றகிலா
தலைமா னவைமா னாயிட வம்மனை
      யாடுக வம்மனையே
    யருணைக் கோர்நிதி கருணைப் பார்வதி
      யாடுக வம்மனையே.   - (7)

- 80.

சமரச் சூர்முத றொலையக் கூரயி
      றான்விடு மம்மனையே
    தகைமைச் சேயென வருள்வைத் தேபெறு
      சாமளை யம்மனையே
கமலத் தோனொடு மரிமுற் றேடுறு
      காரண வம்மனையே
    கனகச் சோதிமெய் வடிவுற் றேயொளிர்
      காதல ரம்மனையே
நிமலத் தூமலர் கொடுநிற் பூசைசெய்
      நேயரு ளம்மனையே
    நிகரத் தேவொடு வளர்நற் பூரணி
      நேயகி யம்மனையே
யமருற் றேயிரு விழிவைத் தேமினி
      யாடுக வம்மனையே
    யருணைக் கோர்நிதி கருணைப் பார்வதி
      யாடுக வம்மனையே.   - (8)

- 81.

காரணி நீல கிரீவன்மு னூர்நகை
      காலையின் வெவ்வலிசேர்
    கார்முக மாய்நெடு நாணொடு நீடலை
      கால்வளை வண்மினனால்
தாரணி யேமுத லாவுல கீனுமொர்
      தாயுமை கைம்மிசையே
    சார்வுறின் மேலெழு சீர்முக மாகுவ
      றானிது செவ்வியெனா
யேரணி மேரு வநேக விநோதமொ
      டேய்தரு மம்மனையோ
    யாமறி யோமென வாணிபொ னோதிட
      வேமுறு மின்னகையோ
டாரணி நீபொனி னாயன பாணியி
      னாடுக வம்மனையே
    யாதி யணாமலை நீதி யுணாமுலை
      யாடுக வம்மனையே.   - (9)

- 82.

மூவகை யாருயிர் மூவகை யாமல
      மூசுறு மும்முறையே
    மோசன மாயுய ரீசன தோர்பத
      மூதறி வின்னடைசீர்
மேவரு தாயுன தாரருளேயென
    வேதமு தன்மொழியான்
மேலவர் தாமுணர் வார்சிறி யோர்களு
    மேலுண ருந்நெறியே
மாவளர் தூமணி சேமணி நீன்மணி
    வாய்குண மும்முறையே
வாவுற வாயின காணுதி ராலென
    வானெறி தன்மையினே
ராவலின் யாமுய நீயரு ளோடிவை
    யாடுக வம்மனையே
யாதி யணாமலை நீதி யுணாமுலை
    யாடுக வம்மனையே.   (10)
அம்மானைப் பருவம் முற்றிற்று

9. நீராடற் பருவம்



- 83.

உரைதரும் பொருளாய வொப்பிலாப் பரமருக்
      குடலாகி யளவிலாத
    வுயிரெலாங் கருவிலா தீன்றருள் சுரந்தாட்டு
      முண்ணாமு லைச்செல்விநீ
வரைபுரிந் திடுதவக் குமரியா தலினிங்கு
      வந்துவந் தாடவென்ன
    மாதவஞ் செய்தன னெனக்குங்கு முஞ்சாந்த
      மலர்நாவி மணிபொனாரந்
திரையெனுங் கரமேந்தி நளினமுக வல்லிவாய்த்
      திகழ்முத்த மூரல்காட்சிச்
    செறிநீல நயனம் பரப்பியுள் ளங்குளிர்மை
      சேர்ந்துபுள் ளொலியினாற்கூய்
விரைவின்வரு கென்னுநின் சேடியாந் திருநதியின்
      வெள்ளநீ ராடியருளே
    விழவுமலி சோணவரை யழகுபொலி ஞானபரை
      வெள்ளநீ ராடியருளே.  - (1)

- 84.

செம்மையுறு மாதவஞ் செய்துனைப் பெற்றுமகிழ்
      சீர்த்தியிம வான்சிவபிரான்
    றீக்கண்ணர் தீக்கையர் தீவடிவர் தீக்காடர்
      தீக்கடவு ளென்றறிந்து
நம்மையுடை யாரென் றுனைத்திரு மணஞ்செய்து
      நல்கிமகிழ் மல்கியுற்றா
    னம்பாதி யாருடற் செம்பாதி கொண்டுநீ
      நாளும்வா மத்துறைதலா
லம்மைநின் பூமேனி யழல்கொண் டிருக்குமென
      வறிவிலே மெண்ணியெண்ணி
    யாற்றாமை யாலிதைச் சாற்றாதி ருந்திடவு
      மாகாமல் வேண்டுகின்றோம்
வெம்மையா மகலமிகு தண்மையாந் திருநதியின்
      வெள்ளநீ ராடியருளே
    விழவுமலி சோணவரை யழகுபொலி ஞானபரை
      வெள்ளநீ ராடியருளே.   - (2)

- 85.

ஏலவார் குழல்பெரிய நீலமுகி லிற்சரிய
      வேமாந்த பாகியிரிய
    வெழின்முகத் தருளொழுக வனசங்க ணீர்முழுக
      விதழ்கிளர் வல்லிதளரக்
கோலவா ரமுதவிழி செய்யவொளி செய்யவெதிர்
      கொண்டகரு நீலநையக்
    குலவுகந் தரமிலக வளைவிலக வளர்கொங்கை
      குடையநீள் குமிழியுடைய
மூலவா ணவமோட நோக்குபுற வடிநீட
      மோட்டாமை கண்டுவாட
    மூர்த்தமெனு மெட்டிலொரு மூர்த்தமிஃ தாகுமென
      முன்னியுள மன்புமன்னி
மேலவா வளையிகுளை மாருடன் றிருநதியின்
      வெள்ளநீ ராடியருளே
    விழவுமலி சோணவரை யழகுபொலி ஞானபரை
      வெள்ளநீ ராடியருளே.   - (3)

- 86.

கண்ணினதி சயமுறக் காணினுநி னைக்கினுங்
      கையினாற் பரிசிக்கினுங்
    காதலுட னாடினும் பருகினும் வினவினுங்
      கழறினுங் கடல் சூழ்ந்தவிம்
மண்ணினதி பாதகமெ லாநீக்கி யிம்மையும்
      மறுமையுஞ் சுகமளிக்கு
    மாட்சியொடு காட்சிதரு மெண்ணினதி முதலிடையின்
      மன்னுமென் னுடையநாம
நண்ணினதி னுயர்வுடைய வென்பர்க ளிலக்கண்ண
      நயந்தேரு நாவலோர்க
    ணாதரண் ணாமலையி னருளருவி யானிறையு
      நன்மையுள வெனை யொக்குமே
விண்ணினதி யெனல்போல வொலிசெயுந் திருநதியின்
      வெள்ளநீ ராடியருளே
    விழவுமலி சோணவரை யழகுபொலி ஞானபரை
      வெள்ளநீ ராடியருளே.   - (4)

- 87.

86. தொக்கர மடந்தையர்கள் சூழவரு மயிராணி
      தூய்மையிற் சுரநதியெனாச்
    சொல்லுமுன மம்மைநீ சூர்த்தநோக் கொடுபாய்ந்து
      தோய்ந்து தோய்ந் தாடனோக்கித்
தக்கரதி யன்பினொடு காளந்தி நதியெனச்
      சார்ந்துகலை மாதுகளபஞ்
    சாந்துகுங் குமமஞ்சள் சார்த்திநீ ராட்டியிது
      தண்பவள மேனிகொண்ட
நக்கரக மகிழ்சோண நதியென்ன வதுகேட்ட
      நளிணையென் னதிநதியெனா
    நவிலவோர் சங்கையிலை யென்றன்னை பானகையி
      னந்நதியெ னச்சகலரு
மிக்கரவ முறவாழ்த்தி யேத்தவொளிர் திருநதியின்
      வெள்ளநீ ராடியருளே
    விழவுமலி சோணவரை யழகுபொலி ஞானபரை
      வெள்ளநீ ராடியருளே.   - (5)

- 88.

வேறு
கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
      கொடியும் பாலைக் குமரிக்குக்
    கொடுங்கோள்ளரியுஞ் செழுமுல்லைக்
      கோவிந் தனுக்குக் குழல்வேயு
மற்ற மருதப் போகிக்கு
      மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
    மன்னும் புலவு தீர்மணமும்
      வழங்கு வேனிற் கென்னளிப்பெ
னுற்ற துணையே யென்னனையே
      யுவந்து நீவந் தெனைத் திளைக்கி
    னுருகிப் பெருகிப் பேரின்ப
      வுததி படிவே னெனவொலிக்குங்
கற்ற பெரியர் சூழருணைக்
      கமலைப் புதுநீ ராடுகவே
    கமழு முண்ணா முலையமிழ்தே
      கமலைப் புதுநீ ராடுகவே.   - (6)

- 89.

குயின்மேற் சென்று மீன்றடவுங்
        கொக்கைக் கிழித்தங் கொரு கூற்றைக்
    கோழி யாக்கிப் பிடித்துமற்றைக்
        கூற்றை மயிலாய்ச் செய்தந்த
மயின்மேற் புகுந்து சுரயானை
        வளர்த்த பெண்யா னையை மணந்து
    வனத்துட் பொன்மா னீன்றகுற
        மானைக் கவர்ந்த பெருமானை
வயின்மேற் பெறாது பெற்றமலை
        மானே மானேந் தம்மானை
    மருவு மயிலே யிமவானை
        மகிழ்வின் வேட்ட தவமேனை
கயின்மேற் கிளியே திருவருணைக்
        கமலைப் புதுநீ ராடுகவே
    கமழு முண்ணா முலையமிழ்தே
       கமலைப் புதுநீ ராடுகவே.   - (7)

- 90.

மதனைப் பொடித்த வசத்தேசர்
        மருவுந் திருக்கார்த் திகைத்தீப
    மகிழ்ந்து சேவை செய்வதற்கு
        வருமெய் யடியா ரிளைப்பாற
விதமாத் தென்ற லெதிர்கொள்ள
        வின்சொற் கிளிகள் வருகென்ன
    வினிதி னளிக ளிசைபாட
        வெழிலார் மயில்க ணடமாட
மதுரக் கரும்பு மிளநீரும்
        வாழைக் கனியும் பலாக்கனியு
    மாவின் கனியு நறுந்தேனு
        மலரு மடைக்காய் முதலாய
கதுமென் றளிக்கும் வளனருணைக்
        கமலைப் புதுநீ ராடுகவே
    கமழு முண்ணா முலையமிழ்தே
       கமலைப் புதுநீ ராடுகவே..  - (8)

- 91.

பண்ணார் திமிழி னருட்பாடல்
        பாடிப் பாடித் தலங்கடொறும்
    பரவிப் பரவி வருங்காழிப்
        பால றாச்செவ் வாய்ப்புதல்வ
ரண்ணா மலையார்த் தரிசித்திங்
        களவி னாம மவர்க்கிருப்ப
    வவையெ லாம்விட் டுன்னுடைய
        வருமைத் திருநா மம்முதலா
வுண்ணா முலையென் றெடுத்தோத
        லுண்ட பாலி னுவப்பென்றே
    யொருங்கே யுன்மே னியைத்திளைக்க
        விருகிக் கமல முகநீலக்
கண்ணா னோக்கல் காட்டருணைக்
        கமலைப் புதுநீ ராடுகவே
    கமழு முண்ணா முலையமிழ்தே
        கமலைப் புதுநீ ராடுகவே.   - (9)

- 92.

தெற்குத் திசையிற் பெண்ணைநதி
        சிறந்த வடபாற் சேயநதி
    சேர விருப்ப மேற்றிசையிற்
        செறிபுண் ணியப்பேர் நதியிருப்ப
நிற்குத் தொழும்பு செயுமுதன்மை
        நேய முளமா நதியென்றோ
    நீவந் தாட விசைந்ததுதா
        னிகழு மெங்க டவந்தாயே
பொற்குன் றளித்த விளம்பிடியே
        புனித வாழ்வே மெய்ஞ்ஞானம்
    பூத்த கொடியே மறைமுடியே
        புலவோர் கலந்து கொண்டாடிக்
கற்குஞ் சங்கத் தமிழருணைக்
        கமலைப் புதுநீ ராடுகவே
    கமழு முண்ணா முலையமிழ்தே
        கமலைப் புதுநீ ராடுகவே.   - (10)
நீராடற்பருவம் முற்றிற்று

10. ஊசற்பருவம்



- 93.

வேறு
மாமேவு வச்சிரக் கானாட்டி மிக்கவள
        வண்பவள விட்டமூட்டி
    மன்னுமெழின் முத்தவட மின்னுறப் புட்டியுயர்
        மாமணிப் பலகைமாட்டித்
தேமேவு கமலா சனங்கூட்டி யற்புதச்
        சித்திரந் தீட்டிவானத்
    தெய்வதத் தச்சன்செய் யழகெலாங் காட்டியித்
        திருவூச லாடுகென்று
மேமேவு மலர்சூட்டி மலர்மா திறையஞ்சயாழ்
        மீட்டிநா மகளிசைக்கும்
    வேதகீ தப்பாட்டி னரமாத ராட்டின்
        விநோதம் வேட் டினிதமர்ந்து
பூமேவு பதநீட்டி யாட்டியெம் பெருமாட்டி
        பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னலமை தென்னருணை யன்னையுமை
        பொன்னூச லாடியருளே   - (1)

- 94.

பாங்கார நின்றகம் படிமெய்த் திருத்தொண்டு
        பண்ணுமர விந்தையன்பிற்
    பரவருண்மு கத்தையுந் துன்னுங் குழைத்தோடு
        பாய்ந்தோடு நயனத்தையு
மோங்கார வத்தத்தை யோர்ந்துரை செயத்தத்தை
        யுலவியம ரத்தத்தையு
    முண்ணாத்த னத்தையு முந்தித் தடத்தையு
        முகந்தபா தத்தையும் பார்த்
தாங்கார நீக்குபர மானந்த வாரியினொ
        ரரவிந்த மலரின்மேன்மே
    லரவிந்த மலருமர விந்தைநீ யேயெனா
        வஞ்சலித் திடவணைத்தே
பூங்கார ளகமுடிது ளக்கிமகிழ் பூத்தகொடி
        பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
       பொன்னூச லாடியருளே   - (2)

- 95.

தண்ணிய விளம்பறை யணிந்தசடை யொருபுறந்
      தகுமலர்க் குழலொருபுறஞ்
    சாற்றறிய மும்மலந் தெறுசூல மொருபுறஞ்
      சந்தவுற் பலமொருபுறந்
திண்ணிய படங்கொண்ட பைந்நாக மொருபுறஞ்
      செம்போனற் பணியொருபுறஞ்
    செல்வமெல் லாந்தருந் திருவெணீ றொருபுறஞ்
      செழுமணச் சாந்தொருபுறம்
பண்ணியல் பழம்பாடல் புகழ்செய்கழ லொருபுறம்
      பரவுஞ் சிலம்பொருபுறம்
    பவளநிறமொருபுறம் பச்சைநிற மொருபுறம்
      பார்த்தன்பர் தொழவரனிடம்
புண்ணிய மலர்ந்தகொடி நின்சேவை யென்சேவை
      பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
      பொன்னூச லாடியருளே  - (3)

- 96.

95.தென்னாடு செய்தவம் விளங்கவரு தில்லைச்
      சிதம்பரச் சிற்சபையினிற்
    றிருநடம் புரியுநின் னாதர்நீ பொன்னூசல்
      சேர்ந்தாடு காட்சியுன்னி
முன்னாடு நாடகம் பின்னாடு வோமென்று
      முந்தியுனை நாடுமெல்லை
    முடியாடு நதியாடு மரவாடு நதிமாது
      முகம்வாடு மெனினுமாடு
நின்னாடு மவரையு முண்ணாடு முவகையா
      னீயாடு சிற்றியலையோ
    நெஞ்சாடு மன்பினொடும் யாமாட வருமையோ
      நிகழ்நாடு பலவுநாடும்
பொன்னாடு நாடுநடு நாடுவாழ் செல்வியே
    பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
    பொன்னூச லாடியருளே   - (4)

- 97

நந்தியம் பகவானு நாரணனு நான்முகனு
       ஞானமார்க் கண்டமுனியு
    நண்ணுமெய்க் கவுதம சதானந்த முனிவரரு
        நவிலரிய துருவாசனு
மிந்திரன் முதற்பாவ ரெண்மரும் வசுக்களா
        மெண்மருங் காந்திசாலி
    யியல்கலா தரனுமொளிர் வச்சிராங் கதமன்னு
        மிசையார்ந்த பிரதத்தனுஞ்
சுந்தர திலத்தமையும் வண்புளக வசுரனுஞ்
        சூழ்ந்தின்னு மின்னுமளவி
    றொண்டரும் பேறுபெறு மித்தலத் திறைவர்பால்
        தோய்ந்துலக வுயிர்மக்கடாம்
புந்திமகிழ் வாழ்வின்வளர் கருணைப்பெ ருந்தேவி
        பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
        பொன்னூச லாடியருளே.   - (5)

- 98.

பாணியின் முத்தவட மதுபற்றி மலர்மாது
        பாங்கர்நின் றினிதுகூறப்
    பாரதிநல் வீணையிற் பாகுசெந் தேனெனப்
        பாடலிறு னசெவியின் வார்ப்ப
நீணிதியின் மாலையொரு கற்பகப் பூமாலை
        நீட்டியயி ராணியேத்த
    நின்னருளி னென்கணவ னுய்ந்தன னெனாவிரதி
        நேயமாத் துதிவிளம்பப்
பேணிவட சாலயன சூயைமுத லுத்தமிகள்
        பிரியமுடன் வாழ்த்தல்செய்யப்
    பின்னுமுள கன்னியர்க ணன்னயமு டன்சூழ்ந்து
        பெரிதுமகிழ் கொண்டுநாடப்
பூணிலகு பொற்கொடியி னருள்பூத்த மரகதம்
        பொன்னூச லாடியருளே.
    பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
        பொன்னூச லாடியருளே   - (6)

- 99.

துங்கமலை வேந்தென்னு மிமயமலை நின்றந்தை
        துதிதவ மியற்றியீன்ற
    சுதையுனது பெருமையையு மருமையையு நோக்கயே
        சுரரெலாம் போற்றல் செய்யத்
தங்கமலை வில்லதாய் வெள்ளிமலை யில்லதாய்த்
        தங்குமுய ரண்ணாமலைச்
    சாமிநஞ் சாதியென் றுனைமணத் தீந்தனன்
        தகுகற்பி னுக்கரசியாய்ச்
செங்கமலை வெண்கமலை வாழ்த்துறக் கைம்மலைச்
        செம்மலைத் தணிகைமுதலாச்
    செழுமலை யெலாமுலவு சேயையும் பெற்றவர்கள்
        செழுமலை விநோதநாடிப்
பொங்கமலை நின்பெயரி னூசலெமை யாட்டுவாய்
        பொன்னூச லாடியருளே.
    பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
        பொன்னூச லாடியருளே. - (7)

- 100.

கன்மலை நிகர்த்தவெம துள்ளங் கரைந்துருகு
        கானவிசை பாடுமளியே
    கங்குலும் பகலுநல் நன்பருக் கெதிர்வந்து
        காதலொடு பேசுகிளியே
பன்மலையும் வளரவள ரண்ணாம லைப்பிரான்
        பவனிவரு சுத்தவெளியே
    பலவுயிரு மின்பமுற வானந்த வடிவினிற்
        பயிலவருண் மேவுதளியே
தென்மலைத் தமிழ் வட மொழிக்குமுத லாய்வந்த
        சீர்புலவ ருக்குளொளியே
    தெளிவிலா வென்னுடைய புன்சொல்லு நன்சொலாய்ச்
        சிந்தைவைத் துதவுதெளியே
பொன்மலையில் வந்துமா ணிக்கமலை மருவுபிடி
        பொன்னூச லாடியருளே
பொன்னகர மென்னவமை தென்னருணை யன்னையுமை
       பொன்னூச லாடியருளே.  - (8)

- 101.

மூர்த்தியின் பெருமையுங் கேத்திரப் பெருமையு
      முன்னுதீர்த் தப்பெருமையும்
    முரசவாத் தியமாதி வாத்தியப் பெருமையு
      மூலவா கமமுறையினார்
கார்த்திகைச் சுடர்விழாக் காட்சியின் பெருமையுங்
      கண்டுகளி கூர்ந்ததொண்டர்
    காதலொடு நதி மூழ்கி வெண்ணீறு பூசிக்
      கருத்துருகி யஞ்செழுத்து
மார்த்தியா யுச்சரித் தன்னதா னஞ்செய்யு
      மற்புதம டப்பெருமையு
    மணிமாட மணிமதின் மண்டபந் நந்தவன
      மாட்சிநவ கோபுரச்சீர்
பூர்த்தியுறு பெருமையு மென்மேலும் வளரநீ
      பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னவமை தென்னருனை யன்னையுமை
      பொன்னூச லாடியருளே. - (9)

- 102.

காவைநிகர் குழல்வாழி கருணை பொழி முகம் வாழி
      கருநீல நயனம்வாழி
    கனமருவு வேதங்க னிந்தசெவ் வாய்வாழி
      கமழ்முல்லை மூரல்வாழி
பாவைவின வுங்கதிர் மணிக்குழைச் செவிவாழி
      பகருமங் கலியநாண்சூழ்
    பகர்கம்பு கந்தரம் வாழிவேய்த் தோள்வாழி
      பைங்காந்த ளங்கைவாழி
கோவைமணி முத்தமணி மார்பின்வளர் ஞானக்கு
      ரும்பையங் கொங்கைவாழி
    குலவுமே கலையிலங் கிடைவாழி பரிபுரங்
      கொஞ்சுபதம் வாழியென்று
பூவையர்கள் மங்களம் பாடிநின் றாடநீ
      பொன்னூச லாடியருளே
    பொன்னகர மென்னவமை தென்னருனை யன்னையுமை
      பொன்னூச லாடியருளே. - (10)


Comments