Tañcai veḷḷaip piḷḷaiyār kuṟavañci


பிரபந்த வகை நூல்கள்

Back

தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி



தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை



    Source:
    தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
    பதிப்பாசிரியர் : புலவர் வீ. சொக்கலிங்கம், தமிழ்ப் பண்டிதர் (ஓய்வு)
    சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
    (1992) விலை : ரூ. 8-00
    தஞ்சாவூர் சரசுவதி மகால் வெளியீடு எண். 341.

    நூற்பதிப்பு விளக்கக் குறிப்பு
      நூற்பெயர் : தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
      பதிப்பாசிரியர் : புலவர் வீ. சொக்கலிங்கம்
      வெளியிடுபவர் : இயக்குநர், சரசுவதி மகால்
      வெளியீட்டு எண் : 341
      மொழி : தமிழ்
      பதிப்பு : இரண்டாம் பதிப்பு
      வெளியீட்டு நாள் ஜனவரி 1992
      அச்சிட்டோர் : ஸ்ரீ அபிராமி பிரிண்டர்ஸ், தஞ்சாவூர்
      பொருள் : சிற்றிலக்கியம்
      விலை : ரூ. 8-00
      -------------

    இரண்டாம் பதிப்பின் வெளியீட்டாளர் முகவுரை

    'தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி' என்னும் இந்நூலைச் சரசுவதிமகால் நூலகம் இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடுகிறது, இந்நூல், சரசுவதி மகால் நூலகத் தமிழ்த்துறையைச் சார்ந்த 614 (a) என்னும் எண்ணிடப் பெற்ற ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துப் பதிப்பிக்கப் பெற்றதாகும். இந்நூலின் பதிப்பாசிரியர் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களாவார்.

    'குறவஞ்சி இலக்கியம்' என்றவுடனேயே நமக்குத் திரிகூடராசப்பக்கவிராயரின் ‘திருக்குற்றாலக்குறவஞ்சி’யே மனக்கண்முன் தோன்றும். குற்றாலக் குறவஞ்சியின் சொல்லழகும் பொருளழகும் தமிழிலக்கிய வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவையாகும். குறவஞ்சி இலக்கிய நூல்களில் ஒன்றான இத்'தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி'யும் சொல்லழகும் பொருளழகும் கொண்ட எளிய இனிய பாடல்களைக் கொண்டு தனிப்பொலிவுடன் திகழ்கின்றது.

    இந்நூல் நடுவண் அரசின் நிதியுதவி பெற்று வெளியிடப்படுகின்றது. இந்நூலுக்கும் சரசுவதி மகாலின் பிற வெளியீடுகளுக்கும் நிதியுதவி நல்கி வரும் நடுவண் அரசிற்கு நூலகத்தின் சார்பாக எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்நூலைப் பள்ளியக்கிரகாரம் ஸ்ரீ அபிராமி அச்சகத்தினர் நன்முறையில் அச்சிட்டுள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

    இவ்விலக்கிய நூல் முதற்பதிப்பில் பெற்ற வரவேற்பை இப்பதிப்பிலும் பெறும் என்பது திண்ணம்.

    தஞ்சாவூர்.         தி. சண்முக ராஜேஸ்வரன் இ. ஆ. ப.,
    31-1-1992         மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இயக்குநர் (பொறுப்பு)
    சரசுவதி மகால் நூலகச் சங்கம்.
    ----------

    வேண்டுகோள்
    கருணையுள்ளம்கொண்ட நம் முன்னோர்கள், அரிய பெரிய இலக்கியங்களையும். பிறவற்றையும் பனையோலைகளில் எழுதிச் சுவடிகளாக நமக்குத் தந்தனர். அவை, பல்வேறு இடங்களில் முடங்கி உள்ளன. சுவடிகள் பழுதடைவதற்கு முன் சரசுவதி மகரலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துதவினால், அவை மக்களுக்குப் பயன்படும்.
    மகாலுக்குக்கொடுப்பதன் மூலம், சுவடி தந்தவர்களும், சுவடி எழுதியோரும் அழியாப் புகழை பெருமைசால் சரசுவதி மகால் உள்ளளவும் பெறுவர். அவை பதிப்பாகி வருமாயின் சுவடி தந்தார் பெயர் இடம் பெறுவதோடு, அப்பதிப்பில் ஐந்து பிரதிகளும் பெறுவர்.
    எனவே, ''நாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்'' என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள் தம்மிடமுள்ள சுவடிகளைச் சரசுவதி மகாலுக்குத் தந்துதவ வேண்டுகிறேன்.
            தி. சண்முகராஜேஸ்வரன், இ. ஆ. ப.,
            மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்
    தஞ்சாவூர்,         இயக்குநர் (பொறுப்பு)
    31-1-92.         சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
    --------------

    முன்னுரை

    ‘தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி' என்னும் இந்நூல் தஞ்சாவூர் சரசுவதி மகால் ஏட்டுச்சுவடி எண் 614 (a) என்னும் குறியீட்டையுடையது. பதினேழு ஏடுகளையுடையது. ஏடுகள் முற்றிலும் செல்லின் வாய்ப்பட்டன. இந்நூலுக்கு நூலாசிரியரால் இடப்பட்ட பெயர் இன்னதெனத் தெரியவில்லையாயினும், இந்நூலைப் பாதுகாத்தவர்களால் ‘பிள்ளையார் பேரில் குறவஞ்சி’ என்றும், ‘புள்ளையார் பேரில் குறவஞ்சி’ என்றும், ‘பிள்ளையார் சரித்திரம்’ என்றும், ‘வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி' என்றும் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1925-ம் ஆண்டு, தஞ்சை , சரசுவதி மகால், தமிழ் ஏட்டுச் சுவடிகளின் அட்டவணை தயாரித்த, திருவையாறு, தமிழ்க் கல்லூரி பேராசிரியர், உயர்திரு. L. உலகநாத பிள்ளை அவர்களால் இந்நூலுக்கு ‘தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி' என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இப்பெயர் பொருத்தமென்று கருதியே இந்நூலுக்குத் ‘தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி' என்ற தலைப்புக் கொடுத்துள்ளேன். முகப்பு ஏடு இல்லாததால் இந்நூலைப்பாடிய ஆசிரியர் பெயர்தெரியவில்லை. ஆயினும் இவருடைய காலம் இந்நூலின் இறுதிப்பாட்டால் ஒருவாறு தெரிய வருகின்றது. இக்குறவஞ்சி நூலைப்பாடி முடிக்கும் போது இவர்,
      “விசையரா கவசுவாமி மேன்மேலும் வாழி!
      மெச்சுதள வாய்வேங்க டேந்திரனும் வாழி!”
    என்று கூறுகின்றார். இதனால் இவர் கி பி. 1633 - 1673 வரை தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்க மன்னர் காலத்தவர் என்று தெரிகின்றது ‘இந்த மன்னன் காலத்தில் வேங்கடேந்திரன் என்பவர் தளவாயாக இருந்தார்' என்றும் தெரிய வருகின்றது. இந்நூல் இலக்கண வரம்புக்கு உட்படாமல் இருக்கிறது. மேலும், இந்நூலில் எங்கும் பிழைகள் மலிந்து கிடப்பதால் ‘இந்நூலாசிரியர் இவ்விறைவன்பால் கொண்டுள்ள பக்தி மீதூர்ந்த நிலையில் பாடியிருத்தல் வேண்டும்' என்று கருத இடமிருக்கிறது. செய்யுள் மாறாமல் கூடியமட்டிலும் பிழைகளைத் திருத்தம்செய்து எழுதியிருக்கிறேன். இக்குற்றத்தினைப் பொறுப்பதோடு ஏனைய இடங்களில் குற்றங்கள் காணப்படினும் முற்றுணர்ந்தோர் முனியாது மன்னிப்பார்களாக.

      ‘தாழ்ந்தோர் உயர்வர் என்று மிக உயர்ந்தோர் தாழ்வர் என்றுமறம்
      சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில்சூழ் கிடந்த தொல்லகழி
      தாழ்ந்தோர் அனந்தன் மணிமுடிமேல் நின்றன் றுயர்ந்த மணிவரையைச்
      சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன்றாட் கீழ் நின்றதுபோய்ச் சூழெயிலே'

    என்று பிரபுலிங்கலீலை (மாயையின் உற்பத்திகதி 14) யில் கூறப்பட்டபடி ஆழ்ந்த அகழியும் உயர்ந்த மதிலும் ஒரு நகருக்கு அரணாகும். அவ்வாறு ரகுநாத நாயக்க மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தஞ்சாவூர்க் கோட்டையும், அகழியும் இன்றும் தத்தம் பழம்பெரும் பண்பினைக் காட்டா நிற்கின்றன. இவ்வியல்பினைக் கொண்ட தஞ்சாவூருக்கு மூலவாயில் (Main gate) கிழக்கே இருக்கின்றது. பிற்காலத்தே தான், வடக்கு வாயிலும், பிறவாயில்களும் அமைக்கப்பட்டனவாம். கிழக்கு நோக்கி வாயிலமைத்துக் கோட்டை கட்டப் புகுந்த கொற்றனார், முதன் முதலில் (எக்காரியத்தையும் தொடங்குமுன்) இறைவணக்கம் (பிள்ளையார் வணக்கம்) செய்யப் புகுவான்வேண்டி அரசன் வைணவனான காரணத்தால் சைவ உருவாகிய பிள்ளையார் வழிபாட்டுக்குத் தடை வரும் எனக்கருதி, அதற்குப் பதிலாக, ஒரு ‘வெல்ல அச்சினை' வைத்து வணங்கித் தன் பணியினை மேற்கொண்டாராம்' இதனையுணர்ந்த அரசன் அதனை அகற்ற முயன்றபோது அவ்வுரு, இப்போது இருக்கும் உருவாக மாறியதாகவும் அதனால் அதற்கு ‘வெல்லப் பிள்ளையார்’ என்று பெயரிட்டதாகவும், அது 'வெள்ளைப் பிள்ளையார்' என்று ஆனது என ஒரு கர்ண பரம்பரைச் செய்தி இருக்கிறது.

    இந்நகரின் எல்லையில் அமைக்கப்பட்டதால், இதற்கு 'எல்லைப் பிள்ளையார்' என்று பெயரிட்டு, அது கால வழக்கில் வெள்ளைப் பிள்ளையாராக மாறியதாகவும் கூறுவர்.

    'வல்லபை' என்ற அம்பிகையோடு காட்சியளிப்பதால் இவருக்கு ‘வல்லபைப் பிள்ளையார்' என்ற பெயருண்டாயிற்று. அது கால வழக்கில் ‘வெள்ளைப் பிள்ளையார்' என்றாயிற்று, என்பாருமுளர். பிள்ளையார் மட்டும், கருவறைக் கடவுளாகக் காட்சியளிக்கிறார். வல்லபைக்குக் கருவறை உருவம் இல்லை. எழுந்தருளுரு மட்டுமுளது. ஆயினும் இந்நூலாசிரியர் 17-ம் பாட்டில்

      ''வனக்கிளியே தஞ்சைவெள்ளை வாரணத்தார் நாளை
      வலிமையிலே அசுரர்பெண்ணை மணம்புணர் வா ரம்மே'
    என்று கூறியிருப்பதால் வெள்ளைப் பிள்ளையாரை ‘வல்லபைப் பிள்ளையார்' என்று கருதியிருப்பதாகத் தெரிகிறது.

    “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்"; "வெண்மதி சூடி"; ''வெண்ணீறாடி" என றெல்லாம் தெய்வங்கட்குப் பெயர் இருப்பதுபோல பிள்ளையார்களில், இவர் வெள்ளைப் பிள்ளையாராக இருக்கிறார் போலும்.

    'குறவஞ்சி' என்பது ஒரு சிற்றிலக்கியம். இதனைக் 'குறத்திப்பாட்டு', 'குறம்' என்று கூறுவர். ‘குளுவ நாடகம்' என்பதும் இவ்வகையைச் சேர்ந்ததே. பெரும்பாலும் நாடகவடிவில் அமைக்கப்படும் இந்நூல் 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்றாகும். இது கடவுளரையோ, அரசர்களையோ, வள்ளல்களையோ, செல்வர்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவதாகும். தலைவன் உலா வருங்கால், அவனைக் கண்டு காமுற்ற தலைவி காமநோயால் வாடுகிறாள். அதுபோது குறத்தி வந்து கூட்டுப்பார்த்து, ''நீ விரும்பிய கணவனை அடைவாய்," என்று கூறுகிறாள், பின்னர் குளுவன் வந்து குறத்தியை அழைத்துச் செல்கிறான். இவைகளே சற்று விரிவாகவும், சுருக்கமாகவும், இதில் பாடப்பெறும்.

    'குறவஞ்சி' என்பதற்கு நேர்ப்பொருள் குறப்பெண் என்பதாகும். பாட்டுடைத் தலைவனும் தலைவியும் யாராக இருந்தபோதிலும் குறத்தியின் செயலும், குறிவகையுமே இன்றியமையாவிடம் பெறுவதால் இதற்குக் ‘குறவஞ்சி' எனப் பெயராயிற்று போலும்.

    குறவஞ்சி, நாடக வகையைச்சேர்ந்ததாகும் இதனைப் "பலவளஞ்சேர் குறவஞ்சி நாடகத்தை'' என்று ‘குற்றாலக் குறவஞ்சியும்,' ‘பொருட் குறவஞ்சி நாட்யம் புகன்றிட' என்று’ ‘அர்த்தநாரீசர் குறவஞ்சியும்' கூறுவதால் அறியலாம். மேலும் காலஞ்சென்ற தெலுங்குப்புலவராகிய வேடூரி பிரபாகர சாஸ்திரி அவர்கள், தாமியற்றிய 'சுக்ரீவ விஜயம்' என்ற தெலுங்கு நூலின் முன்னுரையில் 'யக்ஷகானப்பிரிவின்' பிறப்பு முதலியவைகளைக் குறிப்பிடுகையில் ''குறவஞ்சே'' என்று குறிப்பிட்டு; அதற்கு விளக்கங் கூறுகையில் "குறவ ஜாதி வாரி அஞ்சே (அஞ்சே-அடுகு-அடி) (நிருத்திய விசேஷமு-குறவஞ்சி) குறவர் இனத்தவரின் அடி; அதாவது நிருத்திய வகை குறவஞ்சியாகும்” என்று கூறுகிறார் (நிருத்தியம்- நடனம்)

    குறவஞ்சி வரிசையில் பல குறவஞ்சிகள் உள்ளன.

    எண். குறவஞ்சியின் பெயர் ஆசிரியர் பெயர்
    1. திருக்குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயர்
    2. கும்பேசர் குறவஞ்சி பாவநாச முதலியார்
    3. சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
    4. பிரகதீசுவரர் குறவஞ்சி கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
    5. திருவாரூர் தியாகராசக் குறவஞ்சி ?
    6. தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி ?
    7. அழகர் குறவஞ்சி ?
    8. ஞானக் குறவஞ்சி குமரகுருபர தேசிகர்
    9. ஞான ரெத்தினக் குறவஞ்சி பீரு முகம்மது
    10. பெத்லஹெம் குறவஞ்சி தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்
    11. பாண்டிக் கொடுமுடிக் குறவஞ்சி ?
    12. திருமலையாண்டவர் குறவஞ்சி ?
    13. நகுலமலைக் குறவஞ்சி- விசுவநாத சாஸ்திரியார்
    14. வண்ணைக் குறவஞ்சி விசுவநாத சாஸ்திரியார்
    15. சிற்றம்பலக்குறவஞ்சி- K.N. தண்டபாணிப்பிள்ளை
    16. கொடுமளூர்க் குறவஞ்சி முதுகுளத்தூர் நல்லவீரப்ப பிள்ளை
    17. சோழக் குறவஞ்சி கம்பர்
    18. தேவேந்திரக் குறவஞ்சி தஞ்சை சரபோஜிமன்னர்
    19. சஹாஜிராசன் குறவஞ்சி முத்துக் கவி
    20. அர்த்த நாரீசர் குறவஞ்சி ?
    21. தமிழரசிக் குறவஞ்சி புலவரேறு அ. வரதநஞ்சையப்பிள்ளை
    22. கொங்கர் குறவஞ்சி சா. தூ சு சோஜி
    23. மெய்ஞ்ஞானக் குறவஞ்சி முகம்மது
    24. திருவிடைக்காழிக் குறவஞ்சி ?
    25. முருகர் குறவஞ்சி நல்ல வீரப்ப பிள்ளை
    26. நல்லை நகர்க் குறவஞ்சி யாழ்ப்பாணம் கந்தப்பிள்ளை
    27. வைத்திலிங்கக் குறவஞ்சி கணபதி ஐயர்
    28. முத்தானந்தர் குறவஞ்சி ஆற்றூர் முத்தானந்தர்
    29. சுவாமிமலைக் குறவஞ்சி ?
    30. செந்தில் குறவஞ்சி ?
    31. காரைக் குறவஞ்சி யாழ்ப்பாணம் சுப்பையா
    32. வருணபுரிக் குறவஞ்சி மாரிமுத்துப் பிள்ளை
    33. கச்சேரி முதலியார் குறவஞ்சி இன்பக் கவி
    34. விராலிமலைக் குறவஞ்சி ?
    35. துரோபதைக் குறவஞ்சி ?
    36. மருங்காபுரிச் சிற்றரசர் குறவஞ்சி வெறிமங்கைபாகக்கவிராயர்
    37. சிதம்பரக் குறவஞ்சி செல்லப்ப பிள்ளை
    38. பெம்பண்ணக் கவுண்டர் குறவஞ்சி ?
    39. திருப்பாகையூர்க் குறவஞ்சி ?
    40. பிலிப்பு விராட்ரிக்கோ
    முத்துக்கிருட்டிணன் குறவஞ்சி
    இன்பக்கவி
    41. பொய்யாமொழி யீசர் குறவஞ்சி சிதம்பர தத்துவலிங்கையன்
    42. தத்துவக் குறவஞ்சி முருகேச பண்டிதர்
    43. குறவஞ்சி தாமோதரக் கவிராயர்
    44. டெல்லிக் குறவஞ்சி ?
    45. அனலைத்தீவுக் குறவஞ்சி ?
    46. நவ பாரதக் குறவஞ்சி ?
    47. மல்வில் குறவஞ்சி ?
    48. வள்ளிக் குறவஞ்சி ?
    49. மருதப்பக் குறவஞ்சி ?
    50. கச்சாய்க் குறவஞ்சி ?
    51. சந்திரசேகரக் குறவஞ்சி ?
    52. கதிரைமலைக் குறவஞ்சி ?
    53. இராஜ மோகனக் குறவஞ்சி கிரிராஜ கவி
    54. வாத ஜயக் குறவஞ்சி ?
    55. குறவஞ்சி (தெலுங்கு) ?

    இனிக் குறம் என்ற வரிசையில் உள்ளன.

    1. மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபர அடிகள்
    2. விதுரர் குறம் புகழேந்திப்புலவர்
    3. மின்னொளியாள் குறம் ?
    4. திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம் ?
    5. அண்டவெளிக்குறம் ?


    குறவஞ்சிகளில் 'காலத்தால் முற்பட்டது' 'குற்றாலக் குறவஞ்சி' என்றும், 'பிற' குறவஞ்சிகள் இதன் வழித் தோன்றல்களே' என்றும் கலைக்களஞ்சியம் கூறுகிறது. திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் திரிகூடராசப்ப கவிராயர், கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி ஆசிரியர் கி.பி. 1633 -1673வரை தஞ்சையை ஆண்ட விசயராகவ மன்னனையும். அவரது தளவாய் வேங்கடேந்திரனையும் குறிப்பிடுவதால், இக்குறவஞ்சியே காலத்தால் முற்பட்டது எனலாம்.

    பெரிதும் முயன்றும் இந்நூலாசிரியர் பெயர் காணக் கிடைக்கவில்லை. இந்நூலின் முதலிரண்டு ஏடுகள் அதன் உருவில் முக்கால்பகுதியையே பெற்றிருக்கின்றன. பின்னர் உள்ள ஏடுகளில் சிறுசிறு பகுதிகள் சிதைந்துள்ளன. ஏடுகள் அனைத்துமே செல்லின் வாய்ப்பட்டன. இவைகளில் உள்ள எழுத்துக்களெல்லாம் தங்கள் ஊழ்வலியினால் சிதைந்தும், மாறியும், திரிந்தும், குறைந்தும், அழிந்தும், இடம் மாறியும், மெலிந்தும் பருத்தும் காணப்படுகின்றன. இவைகளை நோக்குங்கால் "ஏடெழுதத்தெரியாத ஒருவர் இதனை எழுதியிருத்தல் வேண்டும்'' எனத்தோன்றுகிறது. இவைகளைச் சீர்படுத்துவதற்கு நீண்டகாலமும், மிக்க உழைப்பும் ஆயிற்று. விடாமுயற்சியோடு உருவாக்கி அச்சேற்றப்பட்ட இந்நூலின், மூலத்தினைக் காண்போரே இத்தன்மையினை அறிந்துகொள்ள இயலும். இச்செய்யுட்களில் சற்றுத் தெளிவானது 13, 14, 15, 24 ஆகிய நான்கு பாடல்களே.

    இக்குறவஞ்சி; குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி போலல்லாது மதுரை, மீனாட்சியம்மை குறம் போன்றதெனலாம். தலைவன் பவனி வருதல் முதலான உறுப்புக்கள் இதில் காணப்படவில்லை, கடவுள் வாழ்த்து முடிந்ததும் குறத்தி வந்து விடுகின்றாள். தன்னுடைய வரலாறு, குலப்பெருமை முதலானவைகளைக் கூறுகின்றாள். பின்னர் ஒரு தலைவிக்குக் குறி கூறுகிறாள்.

    அவ்வரலாறு: ஒரு தலைவன், தலைவியோடு வாழ்கின்றான். அவர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. பிள்ளையில்லாத காரணத்தால் தலைவன் மறுமணம் புரிந்துகொண்டு இளையாளுடன் வாழ்கின்றான். மூத்தாளை மாமி முதலாயினார் நிந்திக்கின்றனர். இவ்வித இன்னல்களுக்குட்பட்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லுகிறாள். ''தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் அருளினால் பிரிந்த கணவன் மீண்டும் வரப்பெற்று மக்களைப் பெறுவாய்; நிந்தித்தவர்கள் வாயடைக்கும்படியாக வாழ்வாய்,'' என்று சொல்லுகிறாள். ஒவ்வொரு செய்யுளின் ஈற்றடியிலும், வெள்ளைப் பிள்ளையாரின் புகழும் செயலும் பேசப்படுகின்றன. இறுதியில் விசயராகவ மன்னனை வாழ்த்தி முடிக்கின்றார்.

    காலஞ்சென்ற, தஞ்சை சரசுவதி மகால் எழுத்தாளர் மீ குழந்தைவேலன் அவர்கள், இதனைக்கண்டு, இதில் சற்றுத் தெளிவான 24, 13, 14, 15. ஆகிய 4 பாடல்களோடும் முன்னுரையோடும், இரண்டு பக்கங்களில் 1947-ஆம் ஆண்டு (பகுதி VI எண் 2.) தஞ்சை சரசுவதிமகால் நாற்றிங்கள் மலரி (Journal) ல் வெளியிட் டிருக்கிறார். “இந்நூலை முற்றும் வெளியிடுவதற்கு அதிகமான முயற்சி வேண்டும்,'' என்பதனை மனத்தில் கொண்டு தனது முன்னுரையில் “சின்னாட்களுள் இதனை வெளியிடவும் கருதியிருக்கிறோம்,'' என்று எழுதியுள்ளார். இதனைக் கண்ட இறைவனாகிய வெள்ளைப்பிள்ளையார் "அன்பனே! நீ முதலில் நம்மிடம் வந்து அதனை வெளியிடு; பின்னர் வருகின்ற எனது அன்பர், புலவர். வீ. சொக்கலிங்கம் அதனை உலகுக்கு வெளிப்படுத்துவார்," என்று சொல்லித் தம்முடைய திருவடி நிழலில் அவரைச் சேர்த்துக்கொண்டார் போலும். அவரது புகழ் நிலவட்டும்.
    இந்நூலை ஆராய்ந்து வெளிப்படுத்த, எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருள் கூட்டுவித்தமைக்காகக் கற்றுவல்ல புலவர்களை வணங்கி, இப்பணியினைச் சிரமேற் கொள்ளுகிறேன்.

    தஞ்சாவூர்,         இங்ஙனம்,
    3-9-1962.         புலவர் வீ. சொக்கலிங்கம்,
            சரசுவதிமகால் நூல் நிலையம்
    ________________________________________
    உ - தமிழ் வாழ்க.

    தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி

    இறை வணக்கம்
      1. ஆனை முகன் அருள்பொழியும் ஆனந்த வல்லியுமை பிறைநாறு சீரடிக்கைம்
      மானையுள பெருவுடையார் சொக்கநாய கரும்வயித்தீ சருந்தஞ்சை நாயகரும்
      சோனைமலைக் கைலாயக் கனியீன்ற தொப்பாரங் கட்டிப்பிள் ளையாரும்
      மீனவெல்கோ ழிக்கொடி யோனும்மகிழ வெள்ளைப் பிள்ளை குறமெனக்கு முன்னடக்கவேணும்

    இதன் பொருள் : ஆனைமுகத்தையுடைய பிள்ளையாரும், ஆனந்தவல்லியாகிய உமையவளும், சடை முடியிலே விளங்குகிற மூன்றாம் பிறைச் சந்திரனையும், சிறந்த பாதங்களையும், கையிலே மானையும் உடைய (தஞ்சை நாயகர்) என்று சொல்லப்படுகின்ற பெருவுடையாரும், சொக்கலிங்கப்பெருமானும், வைத்தியநாதக் கடவுளும் இடையறாது மேகங்கள் தங்கியிருக்கின்ற கைலாயமலையில் வீற்றிருக்கின்ற, இறைவன் பெற்ற, தொப்பாரங்கட்டிப் பிள்ளையாரும், மீன்வடிவமுள்ள வேலா யுதத்தையும், கோழிக்கொடியினையும் உடையவனாகிய முருகனும், மகிழும்படியாக இந்த வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சிக்கு முன் நடக்கவேண்டும்.

    "இந்த வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சி இனிது பாடிமுடிய வேண்டி ஆனைமுகன் முதலான தெய்வங்கள் துணைசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்பாடலை பாடியிருக்கின்றார்.

    ஆனைமுகன் :- நகரெங்கணும் காணப்படுகின்ற பிள்ளையார்.
    ஆனந்தவல்லி :- தஞ்சைக்கு வடக்கே ஓடுகின்ற விண்ணாற்றின் தென்கரையில் திருவமிர்தகடேசுவரருடன் தோற்றமளிக்கும் இறைவி.
    பெருவுடையார் தஞ்சை நாயகர்: இராசராசனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன்.
    தஞ்சை நாயகர்:- விண்ணாற்றங்கரை ஆனந்தவல்லி சமேத தஞ்சேசர் எனினும் பொருந்தும் (சரபேந்திர குறவஞ்சி. 53-ம் பாட்டில் உ. வே. சுவாமி நாத ஐயர் குறிப்புரை)
    சொக்கநாயகர்: தஞ்சை கருந்திட்டைக்குடி, இராச வீதியில் கோயில் கொண்டுள்ள மீனாம்பிகையோடு கூடிய சோமசுந்தரர், ஐயன்குளம் வடகரையிலும் உள்ளார்.
    வைத்தீசர்: தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னரே கட்டப்பட்ட கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற கருந்திட்டைக்குடி கருணாமூர்த்தி. இவர் கருங்குட்டம் தீர்த்ததால் இவருக்கு ' கருங்குட்டம் தீர்த்த இறைவன் என்ற பெயர் உண்டு. ஆகவே இவரைத்தான் வைத்தீசராகக் குறித்திருத்தல் வேண்டும்.
    தொப்பாரங்கட்டிப் பிள்ளையார்: இவர் தஞ்சை நாணயக்காரச் செட்டித்தெருவின் கிழக்கே உயர்ந்த இடத்தில் எழுந்தருளியிருக்கின்ற “தொப்பைக்கு ஆரங்கேட்ட பிள்ளையார்''
    மீனவேல் கோழிக் கொடியோன்: தஞ்சை குறிச்சித் தெரு முருகர். 'மீனவேல்' என்பது சுவடியில் ‘மீனவெல்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஓசை நயங்கருதி இது ‘மீனவெல்' என்றே பாட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. இனி இப்பாட்டிலுள்ள ஏட்டின் மூலப்படி இங்குக் காட்டப் பட்டிருக்கின்றது.


    முதல் ஏட்டின் முதல் பக்கம்
      - னமுக அருமொழியு மானந்தவல்லி கயில - தர கொங்கணியீ......
      - னாம பிறைநாறுதீர அடிததாயமென திருவும மீனவெல களா கொடி-மைதா
      - னையுள பெறுவுடையா சொக்கநாயகருந கை தஞசை வெள்ளை பிள்ளை குறமென
      - ரவுடைய வயிததீசர தஞசை நாயகரும ககு முன்னடககவேணும,
      மகிழந தொபபாரங கட்டிப் பிள்ளையாருங

    முதல் ஏட்டின் 3-ம் பக்கம்
      - லபபெருமாள சிஙகபபெரு மணிகணடப பெருமாள மினமலை வெங்கடேசர
      பாரார ரெகுநாதப பெருமாள ஆதிகேசவன முகபபிலாசாரப் பெருமாள
      ஙகோடடை மெல கொத ணடப பெருமாள தாழிலனும் மார நீலகீவரன
      ரளவிதனமெ பொககுந தஞலச நரசிங்கபபெருமாள... ளைப்பிள வீர
      கருமுனனடகக வெனும ச கொசசிமலை குடகுமலை யாம் ரிமலை தளிலே

    கட்டுரைக் கவிதை

      2. கோபாலப்பெருமாள் சிங்கப்பெருமாள் மணிகண்டப் பெருமாள்
      மின்மலை வெங்கடேசர் ரகுநாதப்பெருமாள் ஆதிகேசவப் பெருமாள்
      முகப்பிலாறு முகப்பெருமாள் கருடங்கோட்டை மேல் கோதண்டப்பெருமாள்
      தாழியான் நீலமேகன் விதனமேபோக்குந்தஞ்சை நரசிங்கப்பெருமாள்
      ஏனையோருந் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார்குற வஞ்சிக்குமுன்னடக்கவேணும்

    (இ-ள்) முதற்பாட்டில் கூறிய சைவக்கடவுளர்களேயன்றி வைணவக் கடவுளரும் சைவக்கடவுளரோடு இக்குறவஞ்சிக்கு முன் நடக்க வேண்டும் என்பதாம்.
    கோபாலப்பெருமாள் :- தஞ்சை வடக்குவாயிலின் தெற்கேயுள்ள இராசகோபாலசுவாமி கோயிலில் உள்ள பெருமாள்.
    சிங்கப்பெருமாள் :- தஞ்சை , விண்ணாற்றங்கரை, ஆனந்தவல்லியம்மன் கோயிலின் எதிரே எழுந்தருளியிருக்கின்றார்.
    மணிகண்டப்பெருமாள் : - தஞ்சை கீழவீதி 'சர்ச்சா வாசல்' என்றழைக்கப்படும் சிறப்பு வாயிலுக்கு எதிரேயுள்ள நீல மிடற்றான்.
    மின்மலை வெங்கடேசர் :- தஞ்சை ஐயன்கடைத் தெருவுக்கருகில் (திருப்பதியில் எழுந்தருளியுள்ளதுபோல) உயர்ந்த இடத்தில் மிக மிக உயரமான உருவத்தில் காட்சியளிக்கும் வெங்கடேசப்பெருமாள்.
    ரகுநாதப்பெருமாள் :- தஞ்சை கீழக்கோட்டை வாயிலுக்கு மேற்கேயுள்ள கொண்டிராஜாபாளையத்தில் வடக்கு நோக்கித் தோன்றுகின்ற இராமசுவாமி பெருமாள்.
    ஆதிகேசவப்பெருமாள் :- இவர் முன்கூறிய வெங்கடேசப் பெருமாள் கோயிலின் தெற்குத் திருச்சுற்றில் எழுந்தருளியுள்ளார்.
    முகப்பிலாறுமுகப்பெருமாள் :- வடக்கு வாயிலில் உள்ள சுப்பிரமணியக் கடவுள். (தஞ்சைக் கோட்டை கட்டிய பிறகு இக்கோட்டைக்குக் கிழக்கிலும் வடக்கிலும் மட்டுமே வாசல்கள் இருந்தனவாகவும்; கிழக்குவாயிலுக்குப் பிள்ளையாரைக் காவலாகவும், முருகனைக் காவலாகவும் வைத்ததாகக் கூறுவர்.
    கருடங்கோட்டை: தஞ்சாவூருக்குக் கருடங்கோட்டை என்ற ஒரு பெயர் உண்டென்பர். இவ்வூர் ஒரு கருடப் பறவை உருவில் அமைக்கப்பட்டதென ஒரு காரணமும், இந்தக் கோட்டைக்குள் ஒருவருமே பாம்பு கடித்து இறந்ததில்லை. அப்படி இறக்க நேரிட்டாலும், தெய்வச் செயலாக அவர்கள் கோட்டைக்கு வெளியிலேயே சென்று இறப்பர் என்ற காரணமும் கூறுவர்.
    மேல கோதண்டப்பெருமாள்: தஞ்சை ஐயன் கடைத் தெருவில் உள்ள பெருமாள். மேற்கூறிய ரகுநாதப் பெருமாள் கோயிலின் மேற்கே இவர் இருப்பதாலும், பெருமாள் மேற்கு நோக்கி நிற்பதாலும் இவருக்கு ‘மேல கோதண்டப் பெருமாள்’ எனப் பெயரிட்டார் போலும்.
    தாழியான்: தஞ்சை மேலவீதி, பங்காரு காமாட்சியம்மன் கோயிலின் வடக்கில் உள்ள கிருஷ்ணன் எனலாம். ‘சகா நாயக்கன் வீதியில் உள்ள கிருஷ்ணன்' என்று கூறவும் இடமுண்டு.
    நீலமேகன்: முற்கூறிய விண்ணாற்றங்கரைச் சிங்கப்பெருமாள் கோயிலின் மேற்கே வீற்றிருக்கின்ற நீலமேகப்பெருமாள்.
    நரசிங்கப்பெருமாள் : இவர் முற்கூறிய கொண்டி ராஜாபாளையம் ரகுநாதப் பெருமாளைநோக்கி அமர்ந்திருக்கின்றார். இவர் சரித்திரப்புகழ் படைத்தவர். இவரைக் குறித்து ஒரு செவிவழிச் செய்தி கூறுவதாவது: இக்கோயிலின் திண்ணையில் கடைவைத்திருந்த ‘பெத்ததாசர்' என்பவர் வைணவப்பற்று மிக்கவர். இந்தக்கடவுளை இடையறாது பூசித்து வந்தாராம். திருநாமம் தரித்து வந்தவர்களைக்கண்டவுடன் எழுந்து அவர்களை வலம்வந்து வணங்கிவிட்டுப் பிறகுதான் தன் செயலை மேற்கொள்வாராம். அதுகேட்டு அக்கால அரசர் அவரைப் பரிகசிக்க எண்ணித் தனது அரசவையில் இரண்டு கழுதைகளைக் கொணர்ந்து ஒன்றிற்குத் திருமண் அணிவித்து, மற்றொன்றை வெறும் நெற்றியோடு நிறுத்திக்கொண்டு பெத்ததாசரை அழைத்து வரச் செய்தாராம். அவர் வந்து திருமண் தரித்த கழுதையினை வலம்வந்து, விழுந்து வணங்கி எழுந்து அரசரது ஏவலுக்குக் காத்திருந்தாராம்.
    "இந்தக்கழுதையினை ஏன் வணங்கவில்லை?'' என்று கேட்ட அரசருக்கு “இது (திருமண் தரிக்காதது) உன்னை ஒத்த கழுதை, அது (திருமண் தரித்தது) என்னை ஒத்த கழுதை,'' என்று பதிலளிக்கவே கோபம் கொண்ட அரசர் இவரைக் கழுவேற்றப் பணித்தாராம்.

    தஞ்சைக்கு மேற்கே சுமார் மூன்று கல் தொலைவில் உள்ள ஒரு மேட்டில் இருந்த கழுவருகில் இவர் அழைத்துச் செல்லப்பட்டாராம். இவரை அழைத்துச்செல்லும்போது இவர் வழிநெடுகிலும் “நரசிம்மா" “நரசிம்மா” என்று இப்பெருமானின் பெயரையே சொல்லிக்கொண்டு சென்றாராம். கழுமரத்தை அணுகியதும் கழுமரம் தீப்பற்றி எரிந்ததாம். அதுகண்ட அரசர், “என்னைக் கோபிக்காமல் இக்கழுமரத்தை எரித்தது என்மீதுள்ள இரக்கத்தினால்தான்,” என்று சொல்லி இவர் கால்களில் விழுந்து வணங்கினாராம்.

    மற்றுமுள்ள எல்லோரும் வணங்கினார்களாம். ‘பிரகலாதனை காத்த இறைவன் என்னையும் அவ்வழியிலேயே காப்பாற்றினார்' என்று இவர் கூறினாராம்.
    இவரைக் கழுவேற்ற இருந்த பகுதியையே இவருக்கு இனாமாக வழங்கியதாகக் கூறுவர். இவரைக் கழுவேற்ற அமைத்த மேடு “களிமேடு" ஆயிற்றென்பர். கழுதை காரணமாக இவருக்குக் கொடுக்கப்பட்ட மேடு "கழுதை மேடு" அது 'களிமேடாயிற்'றென்பாருமுளர்.

    இத்தகைய கொடிய விசனத்தைப் போக்கியதால் 'எத்தகைய விசனத்தையும் போக்கவல்லவர்' எனக்கருதி இவ்விறைவனை ''விதனமே போக்குந்தஞ்சை நரசிங்கப் பெருமாள்'' என்று அடைமொழி கொடுத்திருக்கிறார் போலும்,

    ஏனையோர் என்றதால், மேலவீதி கொங்கணீஸ்வரர், பங்காரு காமாட்சி, தெற்குவீதி காசிவிசுவநாதர் முதலான எல்லாக் கடவுளரையும் குறிக்க இடமிருக்கின்றது.
    மேற்கூடிய இரண்டு பாடல்களும் முழு உருவில் சீர்ப்படுத்த இயலாத நிலையிலுள்ளன. இருப்பினும் இயன்றவரை சீர்படுத்தப்பட்டுள்ளன.

    குறத்தி வருகை

      3. கொச்சிமலை குடகுமலை குமரிமலை தனிலே
              குறத்திமகள் குறத்தியெங்கள் கோத்திரங்கா ணம்மே
      வச்சிரக்கை வேடருக்குத் தலைவனெங்கள் குளுவன்
              வாலிசுக்கி ரீவகுலக் குறவனெங்கள் குளுவன்
      பச்சைமயில் வள்ளியினை வேலருக்குத் தந்தான்
              பாட்டியுட பாட்டியுட பாட்டியுட பாட்டி
      மெச்சுகுல னானவீர ரிருவருக்கு முன்னோன்
              வெள்ளைப் பிள்ளை யார்புகழை விரிக்கவந்தே னம்மே.

    (இ-ள்) அம்மே! 'கொச்சிமலை, குடகுமலை, குமரிமலை முதலான மலைகளில் வாழ்கின்ற குறத்தி' என்று சொல்லத்தக்க இலக்கணமுடைய 'குறத்தியின்மகள் குறத்தி' என்ற புகழ் பெற்றது எங்கள் வழிமுறையாகும். வச்சிராயுதம் போன்ற வலிமைமிக்க கைகளைக்கொண்ட வேடர்கள் பலருக்கும் தலைவனாக எங்கள் குறவன் இருக்கிறான். வாலியைப்போன்ற வீரகுணமும், சுக்கிரீவனைப்போன்ற பக்தி குணமும் பொருந்திய குலத்திலே பிறந்தவன்; குறவன் என்று சொல்லக்கூடிய குளுவன். பச்சைமயில் போன்ற சாயலையும், இயல்பையும் உடைய வள்ளியம்மையை முருகனுக்கு மணம் புரிவித்தவனும் அவனே. எங்களின் ஒன்பது தலைமுறைக்கு முந்திய பாட்டியின் காலத்தில் புகழ்ந்து பேசப்பட்ட குலத்தவனான வீரபத்திரன், முருகன் ஆகிய இருவருக்கும் மூத்தவனாகிய வெள்ளைப் பிள்ளையாரின் புகழை இங்கு நான் கூறவந்திருக்கிறேன்.

    ‘குமரிமலை' என்பது 'குமரிக்கோடு'. அது கடல் கொண்டொழிந்த குமரி நாட்டில் இருந்தது. இதனால் மலைகளெல்லாம் இவள் மிகப்பழமையான குலக்குறத்தி என்பது பெறப்படும். வாலி, சுக்கிரீவன்முதலானோர் வாழ்ந்த இடம் 'குமரிமலை' எனினும் அமையும். 'வாலி சுக்கிரீவ குலம்' என்றதால் மலைப்பக்கங்களிலும் காடுகளிலும் அதிகமாகக் காணப்படும் குரங்குகளின் தலைவர்களைக்குறித்து, அவர்களுக்கு உரிய குணங்களெல்லாம் எங்கள் தலைவர்களுக்கும் உண்டு' என்பது தோன்றுகிறது.

    பாட்டியுட பாட்டியுட பாட்டியுட பாட்டி என்றது தன்னையும் சேர்த்து ஒன்பது தலைமுறைகள். முப்பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, உளுந்துப்பாட்டி என்பது வழக்கு. இவைகளையும் கடந்து சென்றதால் இவள், காலத்தால் மூத்தபாட்டி என்பது தோன்றும்.
    குலவீரனான வீரர் இருவர் (1) வேடனாக வந்து வள்ளியை மணந்த முருகன் (2) வீரபத்திரர்.

    மலை நாடும் சொந்த மலையும் கூறுதல்
    கண்ணிகள்
      4. 1) வெள்ளிமலை இமயகிரி எங்களுட நாடு
      கிள்ளிமலை நேரிமலை எங்களுட நாடு
      2) பள்ளிமலை பொதியமலை எங்களுட நாடு
      வள்ளிமலை சந்தனமலை எங்களுட நாடு
      3) ஆனைமலை குதிரைமலை எங்களுட நாடு
      ஆரணத்தார் மலைகளெல்லாம் எங்களுட நாடு
      4) மானின் மலை கடம்பைமலை எங்களுட நாடு
      கானமலை நீலகிரி எங்களுட நாடு
      5) சொந்தமலை அருவிமலை எங்களுட நாடு
      சோணரி வையை நதி எங்களுட நாடு

    (இ-ள்) கைலாயமலை, இமயமலை, சோழ நாட்டு மலை, நேரிமலை, (திருச்சிராப்) பள்ளிமலை, பொதியமலை, வள்ளிமலை, கந்தன்மலை, ஆனைமலை குதிரை மலை, பிரான்மலை, மானின் மலை, கடம்பை மலை, கான மலை, நீலகிரி (மலை) முதலான எங்களுடைய நாட்டில் இருக்கின்றன. (ஆகவே அவைகளே எங்களுக்கு இருப்பிடம், ஆனால்,) எங்களுக்குச் சொந்தமான மலை 'அருவிமலை' எனப்படும் குற்றாலமலையாகும். அது வையை நதி பாய்கின்ற பாண்டி நாட்டதாகும். அதுமட்டுமன்றி 'சோணசைலம்' எனப்படும் திருவண்ணாமலையும் எங்களது சொந்தமலையேயாம்.

    'கிள்ளி' என்பான் சோழன். அவனது நாட்டில் உள்ள மலை 'கிள்ளிமலை' எனப்பட்டது. நேரிமலை சோணாட்டு மலைகளில் மிகச் சிறந்தது.

    'நேரியெங்கள் சிறந்தமலையம்மே', ‘நேரிமலை மேற்குடிசை நிலைக்க வைத்தோமம்மே,' 'நீடுமது எங்கள் குடி தழைக்க வைத்ததம்மே' (சரபேந்திர பூபால குறவஞ்சி (40-6,7) 'அரணத்தார் மலை' என்றது 'வேதநாயகன் மலை' என்பதாம். வேத நாயகன் பிரம்மா அல்லது சிவபெருமான்.
    அதனால் பிரான்மலை, பிரமன் மலை, பிராய் மலை, பராய் மலை, என்பன பொருந்த இடமுண்டு. ('பிரான் மலையுஞ் சிராமலையும் பிறமலையுமம்மே' - சரபேந்திர பூபால குறவஞ்சி) ' சோணகிரி என்பது 'சோணசைலம்' எனப்படுவது.
    ------------
    நாட்டுவளங் கூறுதல்

      5. கரும்புகளுங் கதலியுஞ்செங் கதிர்விரியு நாடு
              காவேரி நீர்வயல்கள் கரைபுரளும் நாடு
      குரும்பைகளும் இளநீரும் குலை நெருங்கு நாடு
              கோட்டகத்தில் நிறைமீன் கள் குழம்புகின்ற நாடு
      சுரும்பினங்கள் இசைமுழங்கும் சோலையெங்கள் நாடு
              தீந்தெங்கின் பாளையினம் சூழ்ந்ததெங்கள் நாடு
      விரும்பு(ம்)நெல் முப்போகம் விளையுமெங்கள் நாடு
              வெள்ளைப்பிள்ளையார் தஞ்சை மேவிய சோணாடு.

    (இ-ள்) கரும்புகளும், வாழைகளும் செழித்து வளருகின்ற நாடு. காவிரியாற்றில் நீர் வயல்களில் கரை புரண்டு நிற்கின்ற செழிப்புள்ள நாடு. தென்னை மரப்பாளைகளில் குரும்பைகளும், இளநீரும் அடர்த்தியாக நெருங்கி நிரம்பியிருக்கின்ற வளப்பம் பொருந்திய நாடு. குளத்தில் மீன்கள் மிகுதியால் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருக்கின்ற நாடு. வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த நாடு. பாளையின் இனமாகிய தென்னை, கமுகு, பனை முதலிய மரங்கள் சூழ்ந்திருக்கின்ற நாடு. வயல்களில் நெல் மூன்றுபோகம் விளைகின்ற நாடு. இத்துணை சிறப்பு வாய்ந்த நாடு, வெள்ளைப்பிள்ளையார் தஞ்சையில் வீற்றிருக்கும் சிறப்புடைய சோழ நாடாகும்.
    ------------

    வள்ளி முருகன் வழிபாடு

      6. திருப்பரங்குன் றெட்டிகுடி சென்னிமலை, வயலூர்
              திருத்தணிசுப் பிரமணியம், சித்தவல்ல புரமும்
      குருசரனெஞ் சோலைமலை, குகனேறும் பழனி
              குன்றக்குடி கதிர்காமக் குன்றுகழுக் குன்று
      திருப்பவள மலைசிரா மலைவிராளி மலையும்
              சென்றுசுனை யாடிசெய வள்ளியைத் தொழுவோம்
      தருகவனத் தழையுடுப்போந் தளிரையுமே விடுப்போம்
              தஞ்சைவெள்ளைப் பிள்ளையார்தந் தம்பியினைத் தொழுவோம்.

    (இ-ள்) திருப்பரங்குன்று, எட்டிகுடி, சென்னிமலை, வயலூர், திருத்தணி, சுப்பிரமணிய(புர)ம், சித்தர்வல்லபுரம், கூர்ச்சரம், சோலைமலை, முருகனேறி வீற்றிருக்கின்ற பழனி, குன்றக்குடி, கதிர்காமம், திருக்கழுக்குன்று, திருப்பவள மலை, திருச்சிராப்பள்ளி மலை, விராலிமலை, முதலான இடங்களுக்குச்சென்று, ஆங்காங்கேயுள்ள சுனைகளிலும் குளங்களிலும் நீராடிவந்து எங்கள் குலவிளக்காகிய வள்ளியம்மையைத் தொழுவோம். தாருகாவனத்திலுள்ள தழைகளை ஆடையாக உடுப்போம். அதன் தளிர்களை மாலையாக அணிவோம். தஞ்சை வெள்ளைப்பிள்ளையாரின் தம்பியாகிய முருகவேளைத் தொழுவோம்.

    மேற்கூறப்பட்ட மலைகள், ஊர்கள் யாவும் முருகன் வீற்றிருக்கின்ற இடங்களாகும். 'சென்னிமலை' என்பது 'சென்னிமலை', எனப்படும் முருகர் தலம். வயலூர் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். சுப்பிரமணியம்: இது உடுப்பி கள்ளிக்கோட்டைக்குத் தென்கிழக்கு 40 கல் தொலைவில் உள்ள இடம். அகத்தியர் கமண்டலத்தைக் காக உருவில் விநாயகர் கவிழ்த்தது (காவேரி). அகில இந்திய ஆலய வழிகாட்டி, (பக்கம் 135) சித்தவல்லபுரம் என்பது சித்தபுரமாக இருக்குமெனின் இதில் முருகன் கோயில் (பிரசித்தமாக) இருப்பதாகத் தெரியவில்லை. மேற்கூறிய யாவும் முருகன் தலமாக இருப்பதால் இது முருகன் பிரசித்திபெற்ற 'சத்தி முற்றம்' என்ற ஊராக இருக்கலாம் எனக் கருத இடமிருக்கிறது. குருசரன் என்றதனை கூர்ச்சரம் என்று எழுதியதிலும் முருகன் வீற்றிருக்கும், ‘கூந்தலூர்' எனல் பொருந்தும். மேற்கண்ட தலங்களில் நீராடி வள்ளியையும் முருகனையும் தொழுவதாகக் கூறுகின்றாள்.
    ------------

    நகரவரிசையும் தொழிலும்.

      7. தில்லைகச்சி, காளத்தி, திருவாரூர், காசி,
              திருவானைக் காவல், சீர்காழி,திருக் கடவூர்
      முல்லைவனம், நெல்லைவனம், முதுகுன்றங் கழுகூர்
             மூவலூர், செங்காடு, முறுவல்திருப் பனந்தாள்
      மல்லை,திரு வையாறு, மாயூரங், கொறுக்கை
             மறைக்காடு, வெண்காடு, மழபாடி, மயிலை
      வில்லைவயலூன் குளுவன் கொக்குகளைப் பிடித்து
             வெள்ளைப் பிள்ளையார்நாட்டில் வித்துவந்து பிழைப்போம்.

    (இ-ள்) சிதம்பரம், காஞ்சீபுரம், திருக்காளத்தி திருவாரூர், காசி, திருவானைக்காவல், சீர்காழி, திருக்கடவூர், திருமுல்லைவாயில், திருநெல்வேலி, திருமுதுகுன்றம், (விருத்தாசலம்) திருக்கழுக்குன்றம், மூவலூர், திருச்செங்காட்டாங்குடி, திருமருகல், திருப்பனந்தாள், மாமல்லபுரம், திருவையாறு, மாயூரம், கொற்கை, திருமறைக்காடு (வேதாரணியம்), திருவெண்காடு, திருமழபாடி, மயிலாப்பூர் முதலான ஊர்களின் அருகிலுள்ள வயல்களில் உணவருந்த வருகின்ற கொக்குகளை எங்கள் குளுவன் பிடித்துவர, அவைகளை நாங்கள் (இந்த) வெள்ளைப் பிள்ளையாருடைய நாட்டில் விற்று, அதன் ஊதியத்தைப் பெற்றுவந்து பிழைப்போம்.'

    'மல்லை' என்றதனை 'மகாபலிபுரம்' எனலாம். 'வில்லை' என்றதனை 'ஸ்ரீ வில்லிபுத்தூர்' எனினும் அமையும். ஆனால் 'வில்லை' என்பதற்கு 'அண்டை'அருகில்' ஈண்டு சிறப்புடைத்து. 'தங்கள் தொழில்களில் ஒன்றுகொக்குகளைப் பிடித்து விற்பது' என்பது, இந்தப் பாட்டிலும் அடுத்த பாட்டிலும் கூறப்படுகிறது. இவை யாவும் சிவத்தலங்கள்: 'கொறுக்கை' என்ற ஊர் காரைக்கால் அருகில் உள்ளது.
    ------------
    நகர வரிசையும் தொழிலும்

      8. திருவரங்கம், குடந்தை,கச்சி, சிறுபுலியூர், உறையூர்
             சீராம விண்ணகரம், சேறைமழை பெய்யும்
      அரிமேய விண்ணகரம், ஆதனூ, ரழுந்தூர்
             ஆய்ப்பாடி, வடமதுரை, அத்தகிரி, புலியூர்,
      பரமேய விண்ணகரம், பாவனாசம், புவனம்,
             காமபாத கன்பள்ளி, பதரிகாச் சிரமம்,
      குருகூர்,வய லூர்களெங்கும் கொக்குகளைப் பிடித்து
             கூறிவிற் போந்தஞ்சைக் குஞ்சரவன் நாட்டில்.

    (இ-ள்) “திருவரங்கம், கும்பகோணம், காஞ்சீபுரம், சிறுபுலியூர், உறையூர், சீராமவிண்ணகரம், திருச்சேறை, மழை மிகப்பெய்கின்ற, திருமால் வீற்றிருக்கின்ற விண்ணகரம், ஆதனூர், திருவழுந்தூர், ஆய்ப்பாடி, வடமதுரை, அத்தகிரி, திருப்புலியூர், பரமேச்சுர விண்ணகரம், பாவனாசம், திருபுவனம், காமபாதகன்பள்ளி, பதிரிகாச்சிரமம், குருகூர் முதலான வைணவத்தலங்களிலுமுள்ள வயல்களில் மேய்கின்ற கொக்குகளையும் பிடித்து தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் நாட்டில் விற்போம்".

    திருவரங்கம் - ஸ்ரீரங்கம் - நாலாயிர திவ்யப்பிரபந்தம் - 108 திருப்பதிப் பிரபாவம் கும்பகோணம் - சாரங்கபாணி, சக்கரபாணிப் பெருமாள் கோயில்கள், திருக்குடந்தை,
    காஞ்சீபுரம் - வரதராஜப்பெருமாள் கோயில், உலகளந்தபெருமாள் கோயில், திருவூரகம்
    சிவபுலியூர் - திருச்சிறுபுலியூர்
    உறையூர் - நிசுளாபுரி
    சீராமவிண்ணகரம் - காழிச்சீராமவிண்ணகரம், சீர்காழி
    சேறை - ஸார க்ஷேத்திரம்
    அரிமேயவிண்ணகரம் - குடமாடுகூத்தர் கோயில்
    ஆதனூர் - ஆண்டளக்குமையன் பெருமாள்
    திருவழுந்தூர் - ஆமருவியப்பன் கோவில்,
    ஆய்ப்பாடி - கோகுலம்
    வடமதுரை - கோவர்த்தனம்
    அத்தகிரி - திருக்கச்சி- அத்திகிரி
    புலியூர் - திருப்புலியூர்--(கொட்டாரக்கரை)
    பரமேயவிண்ணகரம் - பரமேச்சுரவிண்ணகரம்

    'பாவநாசதீர்த்தம்' என்பது திருப்பதி மலையில் உளது ஆயினும் பாவநாசம், புவனம் என்பதனைச் சேர்த்து 'பாபநாசபுவனம்' எனல் பொருந்தும்.
    பாவனாசபுவனம் - திருபுவனம், சிவபெருமான் நரசிம்மத்தை அழிக்கச் சரப வடிவெடுத்த
    இடம். ஆலயவழிகாட்டி
    காமபாதகன்பள்ளி - இவ்வூரின் பெயர் விளக்கம் அறிதற்கிடமில்லை.
    பதரிகாசிரமம் - வைணவத்தலம் ஆலய வழிகாட்டி
    குருகூர் - ஆழ்வார் திருநகரி (நாலாயிர......... பிரபாவம்)
    'குருகூர் வயலூர்களெங்கும்' என்பதனை 'குருகூர் முதலான ஊர்களின் வயல்களெங்கும்' என்று சொல்லல் பொருந்தும். 'குஞ்சரவன்' என்பது யானை முகத்தோடுகூடிய பிள்ளையார். இப்பாட்டில் காமபாதகன் பள்ளி தவிர பிறவெல்லாம் வைணவத்தலங்களாகவே கூறியது நோக்கத்தக்கது.
    -------------

    குறத்தி குறி சொல்லப் புகுதல்

      9. கொங்குமலை, உத்தரகுரு தேசவங்க தேசம்.
             குமரிமுனை முதலாகக் குறிசொல்வே னம்மே
      மங்கலத்தை மூத்திடுவை; மக்களையும் பெறுவை
             மருமகனும் மருமகளும் மனைநிறைந்து வாழ்வை
      திங்களணி முகத்தாளே ! தேனேயஞ் சுகமே
             செழும்பாகு கற்கண்டே! சீனிமொழி யாளே
      வங்கணமே! செந்திருவே! தஞ்சைவரு வெள்ளை
             வாரணத்தார் வரவுசொல்ல வலக்கைதனைக் காட்டாய்.

    (இ-ள்) "அம்மே! நான் கொங்குதேசம், குருதேசம், வங்கதேசம், கன்னியாகுமரி முனை முதலாக எல்லாத்தேசங்களிலும் உள்ளவர்களுக்குக் குறிசொல்வேன். சந்திரனைப் போன்ற அழகுள்ள முகத்தையுடையவளே! தேன் போன்று இனிமையானவளே!! கிளி போன்றவளே! இனிப்பான பாகு, கற்கண்டு, சீனி இவைகளைப்போன்ற மொழியினை உடையவளே! அன்புடையாளே! இலக்குமி போன்றவளே!! தஞ்சையிலே வாழ்கின்ற வெள்ளைப் பிள்ளையாரின் வருகையினைக்கூற உனது வலது கையினைக் காட்டு அம்மே! நீ மங்கலத்தை மூத்திடுவாய். மக்களையும் பெறுவாய். மருமகனும் மருமகளும் மனை நிறைய நீ வாழ்வாய்.''

    ''நான் எல்லாத்தேசமும் சென்று குறி சொல்பவள். இந்த வெள்ளைப் பிள்ளையார் நாட்டிற்கு வந்து குறிகூறப் புகுந்தேன். (உனது வலது கையைப் பார்த்த மாத்திரத்தில்) நீ நீண்ட நாட்கள் கட்டுக்கழுத்தியாக இருப்பாய். மக்களைப் பெறுவாய். மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள் வீடு நிறைய இருப்பார்கள்,'' என்று குறத்தி கூறுகிறாள். 'மங்கலத்தை மூத்திடுவை' என்றது 'வயது முதிர்ந்தவளாக இருந்து கணவனோடு வாழ்வாய்' என்பதாம், மங்கிலியத்தை என்பது மங்கலத்தை எனப்பட்டது.
    ---------------

    கையின் சிறப்புக் கூறுதல்

      10. அன்னமில்லை என்னாம லார்க்குமிடு முன்கை,
              அந்தணர்க்குப் படியரிசி யளக்குமடி யுன்கை
      இன்னமின்னம் வருவிருந்துக் கிடைவளரு முன்கை
              எந்நாளும் பிள்ளைப்பால் வார்க்குமடி யுன்கை,
      பொன்னையே யள்ளியள்ளி யளையுமடி யுன்கை,
              புண்ணியத்தி லேகொடுத்துப் புகழ்படைக்கு முன்கை
      கன்னிகா தானமே செய்யுமடி உன்கை
              கணபதியார் தம்மையே வந்தனைசெய் கையே.

    (இ-ள்) "அம்மே ! எல்லோருக்கும் 'சோறு இல்லை என்று சொல்லாமல் சோறிடுகின்ற கை உனது கை. அந்தணர்களுக்குப் படியரிசி கொடுக்கின்ற கை உனது கை. மேலும் மேலும் வருகின்ற விருந்தினருக்கு உணவளித்து, இனி வருகின்ற விருந்தினரை எதிர்பார்க்கின்ற கை உனது கை. பாலில்லாப் பிள்ளைகளுக்கு பால் வார்க்கின்ற கை உனது கை. புலவர்களுக்கெல்லாம் பொன்னையள்ளிக் கொடுக்கின்ற கை உனதுகை. புண்ணியமான காரியங்களுக்குத் தருமம் செய்து புகழ் படைப்பது உனது கை. கன்னிகாதானம் செய்யும் இயல்பினை உடையது உனது கை. வெள்ளைப் பிள்ளையாரை வணங்குகின்ற கையும் உனது கையேயாகும்".

    "அள்ளியள்ளித் தருமமெல்லாம் செய்யுமிந்தக் கையே'' என்பது பெத்லகேம் குறவஞ்சி. மேலும், தலைவி 'அன்ன தானம்' செய்வாள் ; அழகிய தண்ணளியை உடைய அனைவருக்கும் அரிசியின் மூலம் அன்னதானம் செய்வாள் என்பதாம்.
      "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பார்
      நல்விருந்து வானத் தவர்க்கு' (குறள்-86)
    இதனையே இன்னமின்னம் வருவிருந்துக்கிடைவளரு முன் கையாகக் கூறப்பட்டதாம். எந்நாளும் பிள்ளைப் பால் வார்ப்பது; 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பதாகச் சொல்லப்பட்டது போலும், பொன்னையளைதல்; 'வீறாக நவ நிதியம் அளையுமிந்தக் கையே’ (குற்றாலக் குறவஞ்சி, பாட்டு 28) என்றாற் போலக் கூறப்பட்டது. புண்ணியத்திலே கொடுத்துப் புகழ்படைக்கு முன்கை என்றது, குற்றாலக் குறவஞ்சி 28ம் பாட்டில் ''மனையறத்தால் அறம்பெருக்கித் திறம் வளர்க்கும் கையே'' என்றதனோடு ஒப்புநோக்கற் பாலது. அத்துடன் பெத்லகேம் குறவஞ்சியில் “தெள்ளு தமிழ்ப் பாவலரைப் பரிசளிக்குங் கையே'' என்றதாலும் புகழ் படைத்தல் பெறப்படும்.

    இவளுடைய கையைப் பார்த்தமாத்திரத்தில் ‘இவள் மகராசி' என்று அறிந்த குறத்தி 'உன்கை கன்னிகாதானம் செய்யும்' என்று கூறுகிறாள், ஆகவே “இவளுக்குப் பிள்ளைப்பேறு உண்டு'' என்று முன்னதாகவே கூறிவிடுகிறாள். இவளுக்குப் பிள்ளையில்லாக் குறையால் கணவன் இவளை விலகியிருக்கிறான், குறத்தி இப்படிச் சொன்னதால் தலைவி மகிழ்ந்திருத்தல் வேண்டும்.
    ----------------

    குறத்தி செயல்

      11) முறத்தில்ரொம்ப நெல்லுதனை மொண்டுவந்து வைத்து
              முன்னிருந்து கேட்கிலதை மூணாகப் பகுந்து
      குறத்திமகள் குறத்திமெச்சக் குறிசொல்வே னம்மே.
              குஞ்சானுக் கஞ்சாறு கஞ்சிவா ரம்மே.
      சிறுகுழந்தைக் கிவன்மூத்தான் காக்கைகத்த லறிவான்;
              செண்டடித்துச் செண்டடித்துச் சிங்கிகளும் பிடிப்பான்
      விறல்திறத்தில் அரசுமெச்சுங் குறம்பாடுந் தஞ்சை
              வெள்ளைப்பிள்ளை யார்கேட்டு மெச்சினர்கா ணம்மே.

    (இ-ள்) முறத்தில் கொஞ்சம் நெல்லைக் கொண்டு வந்து வைத்து அதன் முன்னாக இருந்து கேட்டால், அந்நெல்லை மூன்றாகப் பகிர்ந்து எங்கள் குலக்குறத்தி மகள் குறத்தியே மெச்சும்படியாக நான் குறி கூறுவேன். என் குழந்தைக்கு ஐந்தாறு சோற்றுடன் கொஞ்சம் கஞ்சி ஊற்றம்மே. எனது கைக்குழந்தைக்கு மூத்தவன் இவன். காக்கை கத்துவதைத் தெரிந்து கொள்வான். செண்டாலடித்தடித்துச் சிங்கிகளைப் பிடித்துவிடுவான். நான் வலிமையின் திறமையினால் பாடிய குறியினைக்கேட்டு, அரசர்கள் மகிழும்படியாகக் குறம்பாடுகின்ற தஞ்சையில் வீற்றிருக்கின்ற வெள்ளைப்பிள்ளையார் மெச்சினாரம்மே."

    “முறத்தில் இட்ட நெல்லை வறுத்துப் பார்த்துக் குறி கூறுவேன்,''
    (திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் 74)

    முறத்தில் நெல் கேட்டல் (கும்பேசர் குறவஞ்சி - 67/2ம் பாட்டில் ‘நிறைய முறத்தில் செந்நெல்' என்று குறத்தி கேட்பதாகக் கூறியதால்) குறத்தியர் இயலாகும். மேலும் அவர்கள் தங்கள் கையில் ஒரு பிள்ளையுடன் (பெரும்பாலும்) வருவர். அக்குழந்தையின் பெயரால் உணவு கேட்பது வழக்கம். ஆகவே ''குஞ்சானுக் கஞ்சாறு கஞ்சிவாரம்மே'' என்றார். நெல்லை மூணாகப்பகிர்ந்து சொல்லவே "முச்சிரங்கை நெல்லளந்து கொடுவா'' (மீனாட்சி குறம்-26) என்று கூறியதுபோல் கூறினார் போலும். மேலும் “பாங்குடனே நிறைநாழி பூங்கொடியே வைப்பாய்'' (திருமலையாண்டவர் குறவஞ்சி), “முத்துக் கொண்டு வாடி நிறைநாழி'' (அர்த்தநாரீசர் குறவஞ்சி). என்பனவாலும் அறியலாம். 'சிங்கி' என்றது 'நண்டு' எனலாம். நண்டினைச் செண்டாலடித்தடித்துப் பிடிப்பது வழக்கம். ஆகவே “சிறுபிள்ளை செண்டாலடித்து நண்டு பிடித்தான்'' எனல் பொருந்தும். சிங்கிப் பறவை எனினுமாம்.

    தஞ்சாவூர் அரசர்கள் மெச்சும்படியாகக் குறம் பாடினால் அது, உலக முழுவதும் ஏற்புடைத்து' என்பது. இவர் காலத்தில் மட்டுமல்ல; இப்போதும் தஞ்சை மக்கள் ஏற்றுக்கொண்டால் எல்லா ஊர்மக்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். ஆகவேதான் ''அரசு மெச்சுங் குறம்பாடுந் தஞ்சை" என்றார்.
    ----------------

    குறி பார்த்தல்.

      12. உள்ளங்கை நெற்குறியால் ஒத்தைபடத் தொட்டாய்
             எண்ணிரண்டு நாளையிலே உன்கணவன் வருவான்
      வள்ளியம்மை யாணையெந்தன் குறக்கூடை யாணை
             மகனாணை, மகளாணை, வலதுகண்ணி னாணை
      கள்ளமில்லை என்னாணை, என்குறிபொய் யாது,
             காசியுள தேசளவுங் கைகண்ட தம்மே
      வெள்ளிமலை தனிலுறையுஞ் சிவமகனார் வெள்ளைப்
             பிள்ளையாரு மறிவார்; வேலவரு மறிவார்.

    (இ-ள்) உள்ளங்கை நெல்குறியில் நீ எடுத்த நெல் ஒற்றைப்படையாக இருப்பதால் பிரிந்திருக்கின்ற உனது கணவன் இன்னும் பதினாறு நாட்களில் வருவான். இது உண்மை. வள்ளி நாயகியின்மேல் ஆணையாகவும், என் குறக்கூடைமேல் ஆணையாகவும், என் மகன்மேல் ஆணையாகவும், மகள்மேல் ஆணையாகவும், எனது வலது கண்ணின்மேல் ஆணையாகவும், கள்ளமில்லாமல் என்மேலாணையாகவும் சொல்கிறேன். எனது குறிபொய்க்காது. உலகத்திலுள்ள எல்லாத்தேசங்களிலும் என் குறி கை கண்டது. இதனைக் கைலைமலையில் வாழ்கின்ற சிவனுடைய பிள்ளைகளாகிய வெள்ளைப்பிள்ளையாரும், வேலவரும் அறிவார்கள்.

    ஒரு சிரங்கை நெல்லை எடுத்து அதனை இரண்டிரண்டாக எண்ணினாள்; மீதி ஒன்று இருந்தது. அதுவே ஒற்றை படத்தொட்டது. இதற்குக் ‘கட்டுப்' பார்த்தல் என்று பெயர். இப்படிப் பார்த்துக் கூறுபவர் 'கட்டுவிச்சியர்' எனப்படுவர். இதனைக் குறுந்தொகை 23ம் பாட்டால் அறியலாம். “இந்நாழி நெல்லையு முக்கூறு செய்தோர் கூற்றை யிரட்டைப்பட எண்ணினபோ தொற்றை பட்டதம்மே'' (மதுரை மீனாட்சியம்மை குறம்-26) மேலும் ‘உதயமான சுளகுநெல்லும் ஒற்றைப்பட்ட தாதலால்’ (அருணைக்கலம்பகம் - 50) என்பதால் அறியலாம்.

    ஆணையிட்டுச் சொல்லுதல் குறத்தியர்க்கு மிகச் சாதாரணம். 'காசியுள' என்றவிடத்து மூலம் சற்று சிதைந்துளது.
    ---------

    குறத்தி தன் குலப்பெருமை கூறுகிறாள்

      13. வள்ளியம்மை தனைக்கேட்க மகதேவ ருமையும்
             வந்துவந்து நடந்ததெங்கள் வாசலில்கா ணம்மே
      பிள்ளையுட பிள்ளைகளை ஒருபுறத்தி லிடுக்கி
             பெண்களுட பிள்ளைகளை ஒருபுறத்தி லிடுக்கி
      அள்ளியவர் அளைந்தயெச்சி லத்தனையு முண்டு
             அவர்கள்வைய யிவர்கள்வைய அடிபடுமே யம்மே
      வெள்ளிமலை தனிலுறையுஞ் சிவமகனார் தஞ்சை
             வெள்ளைப்பிள்ளை யார்தாளை வேண்டுவங்கா ணம்மே.

    (இ-ள்) “முருகனுக்கு மணம்புரிவிக்க வள்ளியம்மையைப் பெண் கேட்டுப் பரமசிவனும், பார்வதியும், எங்கள் வாசலில் வந்து வந்து பலமுறை கேட்டுச் சென்றார்கள். (நாங்கள் தரமறுத்தோம்) அப்படிப்பட்ட வாசலில் நான் எனது பிள்ளை வயிற்றுப் (பேரப்) பிள்ளைகளை ஒரு பக்கத்தில் அணைத்துக்கொண்டு, பெண் வயிற்றுப் பிள்ளைகளை ஒரு பக்கத்தில் அணைத்துக்கொண்டு, அப்பிள்ளைகள் அளைந்து எஞ்சிய எச்சில் சோற்றையுண்டு இருப்பேன். இதற்காக எனது பிள்ளைகளும் பெண்களும் என்னை வைவதால் என்பெயர் அடிபடும், இவைகளுக்காக நாங்கள் எல்லோருமே வெள்ளிமலையில் வாழ்கின்ற சிவனார் மகனாகிய தஞ்சை வெள்ளைப்பிள்ளையாரின் திருவடிகளை வணங்குவோம்.''

    'பெண்கேட்கப் பன்முறை நடப்பார்கள் பிள்ளைகளைப் பெற்றவர்கள்.’ இவ்வழக்குப்படி நடந்ததாகக் கூறுகிறாள் குறத்தி. மேலும் தன் குடும்பத்தில் மகன், மருமகள், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் எல்லோரும் மனை நிறைய வாழ்தலைக் கூறுகிறாள். பேரப்பிள்ளைகளுக்குச் சலுகை கொடுப்பது பாட்டிகள் இயல்பு, அது காரணமாக மகன், மகள் முதலானவர்களிடம் வசவு பெறுவதும் வழக்கம். இது இங்கு கூறவேண்டிய காரணமென்னவெனில் ''நான் (வயது சென்ற) அனுபவமிக்கவள், எனது குறி பொய்க்காது'' என்பதுவே. தனது குறியினை நம்ப வைக்க இந்த அனுபவத்தைக் கூறினாள் போலும்.
    ----------

    குறத்தி மெய்க்குறி கூறல்

      14. வாளின் விழி தொட்டாலும் மக்களின்று வருவர்
             மங்கிலியந் தொட்டாலுன் பங்கிலவர் வருவர்
      தாளிணைகள் தொட்டாலுந் தாய்தகப்பன் வருவர்
             தளிர்க்கையது தொட்டாலுந் தம்பிமார் வருவர்,
      தோளிணைகள் தொட்டாலுந் தோழிமார் வருவர்
             தொந்திதொடி லந்திக்குச் சம்பந்திமார் வருவர்,
      வேளிரதி யாயிதனில் ஒன்றுதொடில் தஞ்சை,
             வெள்ளைப்பிள்ளை யார்வந்து மேவுகுறி சொல்வர்

    (இ-ள்) “அம்மே! உனது வாள்போன்ற கண்களைத் தொட்டால் (உனக்குக்) குழந்தைகள் தோன்றுவார்கள், உனது தாலியைத்தொட்டால் உனது கணவர் பக்கத்தில் வருவார், கால்களைத் தொட்டால் உன் தாய் தந்தையர் வருவார். தளிர்போன்ற கைகளைத் தொட்டால் உனது தம்பிமார் வருவார்கள், தோள்களைத் தொட்டால் உனது தோழியர்கள் வருவார்கள், வயிற்றினைத் தொட்டால் இன்று மாலையில் உன் வீட்டுக்குச் சம்பந்திமார்கள் வருவார்கள், மன்மதனுடனிருக்கின்ற இரதி தேவியே! இவைகளில் ஏதேனும் ஒன்றைத்தொட்டால் தஞ்சை வெள்ளைப்பிள்ளையாரேவந்து உனக்கு குறி சொல்லுவார்.

    கண்ணைத்தொட்டால் (கண்மணிகளாகிய) பிள்ளைகள் வருவார் என்பது குறிபோலும். இவ்வாறே பிறவுமாகும்: இது மெய்தொட்டுக்குறி சொல்லுகின்ற வழக்கம், உடம்பில் உள்ள அடையாளங்கண்டு குறி கூறியதாகச் சரபேந்திர பூபாலகுறவஞ்சி, பாட்டு 51; 9-12 கூறுகிறது.
    ---------------

    குறத்தி தலைவியின் குல தெய்வங்களைக் கூறுகிறாள்

      15. மங்கிலியக் கழுத்திதுகில் கேட்குறா ளம்மே!
             மனையில்வாழ் தெய்வமொன்று தோணுதடி யம்மே!
      எங்கள் குல தெய்வமொன்று பொங்கலென்கு தம்மே!
             ஊத்துக்காட் டம்மைபலி யுண்டென்கு தம்மே!
      திங்களணி யீசர்பலி வருந்துறா ரம்மே!
             செத்தவளா யொருத்திஎதிர் நிற்கின்றா ளம்மே?
      தங்கையரே! பிள்ளையுச்சிக் கெண்ணைவார் துணிதா !
             தஞ்சைவெள்ளைப் பிள்ளையார் தழுவுகுறி சொல்வர்

    (இ-ள்) ''அம்மே ! உன் வீட்டுத் தெய்வமாகிய மங்கிலியக்காரி தனக்குச் சேலைகேட்கிறாள். அப்படிப்பட்ட பெண் தெய்வம் உன் வீட்டுத் தெய்வமாகத் தோன்றுகிறது. எங்கள் குலதெய்வமாகிய முருகன்கூட இவ்வீட்டிலிருந்துகொண்டு தனக்குப் பொங்கல் வேண்டுமென்று கேட்கிறான். ஊத்துக்காட்டு மாரியம்மை 'எனக்கும் இவ்வீட்டில் ஒரு பங்கு உண்டு' என்று கேட்கிறாள். திங்களையணிந்த சிவபெருமான் தனக்கும் பூசை வேண்டுமென்று கேட்கிறார். உன் வீட்டில் இறந்துபோன சுமங்கிலி ஒருத்தி எதிரே நிற்கிறாள். என் தங்கைபோன்றவளே! என் பிள்ளையுச்சிக்கெண்ணெய் ஊற்று; துணி கொடு. தஞ்சையிலேயுள்ள வெள்ளைப் பிள்ளையார் உனக்கு தழுவுகுறி சொல்லுவார்.

    முன் பாட்டில் மெய்க்குறிசொல்ல ஏதேனும் ஒன்றைத் தொடும்படி வேண்டினாள். அதில் அவள் தாலியையே தொட்டிருத்தல் வேண்டும். அதனால் அதுகொண்டு குறத்தி வீட்டுத் தெய்வங்களைக் கூறுகிறாள். வீட்டில் உள்ள தெய்வங்களை மறந்து அவைகளுக்குப் பூசனை முதலானவைகள் செய்யாத காரணத்தால்தான் இக்குறை ஏற்பட்டது' என்பதனை மறைமுகமாகக் கூறுகிறாள். வீட்டுத்தெய்வங்கள் பூவாடைக்காரி, தாலிக்கழுத்தி, மகமாயி முதலியவர்கள், இவர்களுக்குப் பட்டாடை வைத்துப் படைத்தல் மரபு. அதனைத் துகில் கேட்டதாகக் கூறினள் போலும். 'வீட்டில் தாலிக்கழுத்தோடு இறந்தவர் வீட்டில் தெய்வமாக நின்று காப்பர்' என்று சொல்வர். அதனையும் குறத்தி சொல்லுகிறாள்.

    'பிள்ளையுச்சிக் கெண்ணைவார் துணிதா' என்றுகூறும் மரபு, ‘பிள்ளைதலைக் கொருகரண்டி யெண்ணே யூற்றிடம்மே’ (சரபேந்திரகுறவஞ்சி) (பாட்டு 50;-2) என்றதால் அறியலாம். 'தழுவு குறி' என்றது பிரிந்த கணவன் கூடுகின்ற குறியாகும்.
    ------------

    குறத்தி தலைவியை வியத்தல்.

      16. கரும்பனைய மொழியாளே! கழுகுக்கழுத்தாளே !!
             கால்முளைக! விழிகுவளை!! கமலமுகத் தாளே !!!
      சுரும்பனைய குழலாளே !! இதழ்பவளத் தாளே !!
             தோள்கழைகள் முலைமலைகள் துடையரம்பை யாளே!
      அரும்பனைய நகையாளே! அல்குல்படைத் தாளே!
             அஞ்ஞானக் குந்தமரிய அடிபதுமத் தாளே!
      விரும்புவிர லைஞ்ஞான்குங் கொழுநனை யனைய
             வெள்ளைப்பிள்ளை யார்வரவு மேல்வழுவா தம்மே.

    (இ-ள்) கரும்பு போன்ற இனிய மொழியையுடையவளே! பாக்கு மரம் போன்ற கழுத்தையுடையவளே! மூங்கில்கள் போன்ற கால்களையுடையவளே! குவளை மலர்போன்ற விழிகளையுடையவளே! தாமரை போன்ற முகத்தை உடையவளே, வண்டுபோன்ற கருமையான கூந்தலையுடையவளே! பவளம் போன்ற உதடுகளை உடையவளே! மூங்கில் போன்ற தோள்களையுடையவளே! மலைகள் போன்ற நகில்களையுடையவளே! வாழைமரங்கள் போன்ற துடைகளை உடையவளே ! அரும்புகள் போன்ற பற்களை உடையவளே! (சிறந்த) அல்குலைப் பெற்றிருக்கின்றவளே! அறியாமையாகிய குதிரை அழியும்படியாக நடக்கின்ற தாமரை மலர்கள் போன்ற பாதங்களைப் பெற்றிருக்கின்றவளே! உன்னுடைய விரும்பத்தக்க விரல்கள் ஐந்நான்கு (20)ம் உன் கணவனோடு பொருந்தும்படியாக வெள்ளைப்பிள்ளையார் வரவு தவறாது.

    பிற உறுப்புகளுக்கு உவமைகூறிய ஆசிரியர் அல்குலுக்கு உவமைகூறவில்லை எனினும் “அரவின் படம் போன்ற அல்குலைப் பெற்றவளே'' எனலாம். “புற்றரவல்குல் புனமயிலே போதராய்'' (திருப்பாவை-11), இத்தலைவி நடக்கும்போது எழுகின்ற ஒலியால் "அஞ்ஞானம் அழிந்தது'' என்று சொல்வதுபோல் இருந்ததாகக் குறித்து “அஞ்ஞானக் குந்தமரிய'' என்றார் போலும்.

    ‘விரலைந்நான்கும் கொழு நனையணைய' என்றது ‘இவளது கைவிரல்கள் 10ம் கணவனது கைவிரல்கள் 10ம் பொருந்தும்படியாகத் தழுவுதல்' எனினும் அமையும்.
    “வெள்ளைப் பிள்ளையார் வருவார், அவருடைய கருணையினால் நீ உன் கணவனையடைவாய்" என்பது கருத்தாம். இது முதல் மூன்று பாடல்கள் மிகவும் சிதைந்துள்ளன.
    -----------------

    குறத்தி தான் வாழ்க்கைப்பட்ட விதமும் தலைவியின் நிலையும் கூறுதல்

      17. கனக்குறவன் கொண்டுவந்து பரிசமிட்டான் பத்துக்
             கழுதைக்குநான் வாக்கப்பட்டேன் காரிகையே கேளாய்!
      எனக்கிளையாள் வாக்கப்பட்ட திருநாலுக் கழுதை
             யிவட்கிளையா ளதுவுமில்லை, எப்பொழுது வந்தாள்
      உனக்குமொரு சக்களத்தி ஓவியமாய் வரவும்
             உன்னையவள் தள்ளிவிட நெற்குறியிற் கண்டேன்
      வனக்கிளியே! தஞ்சைவெள்ளை வாரணத்தார் நாளை
             வலிமையிலே அசுரர்பெண்ணை மணம்புணர்வா ரம்மே!

    (இ-ள்) என்னை மணக்கவந்த குறவன் பத்துக் கழுதைகளைக் கொண்டுவந்து கொடுத்துப் பரிசமிட்டான். அவனுக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். எனக்கிளையாளாகிய இரண்டாமவள் எட்டுக்கழுதைகள் பரிசத்தின் பேரில் வாழ்க்கைப்பட்டாள். (சக்களத்தியும் நானுமாக வாழ்ந்த நாளில்) அவளுக்கும் இளைய மூன்றாமவள் ஒருத்தி அதுவுமில்லாமல் என் கணவனை அடைந்தாள், எப்பொழுது வந்தாள்' என்று சொல்வதற்கில்லை.
    அம்மே! உனக்கும் ஒரு சக்களத்தி வந்தாள். அவள் உன் கணவனை வசப்படுத்திக்கொண்டு உன்னைத் தள்ளி விட்டாள். இதனை நான் நெற்குறியில் கண்டேன். வனக்கிளியே! நாளை வெள்ளைப் பிள்ளையார் வலிமையோடு அசுரர் பெண்ணாகிய வல்லபையை மணம் புரிவார்.

    முதலிரண்டடிகளால் "குறவர்கள் கழுதைகளைக் கொடுத்துப் பரிசமிடுதல் பழங்கால மரபு'' என்பது தெரிய வருகிறது. தலைவியின் கணவன் மூத்தாளிடம் பிள்ளையில்லாக் காரணத்தால் அவளைத் தள்ளிவைத்து விட்டு, மற்றொருத்தியைத் திருமணம் புரிந்து வாழுகிறான். இளையாளின் மையலில் மயங்கிய தலைவன் மூத்தாளை மறந்து விடுகிறான். தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியின் நிலையைத் தன் கதையைக்கூறி ஆற்றுகிறாள் குறத்தி.

    இவள் குறிசொன்ன நாள் பிள்ளையார் பிறந்தநாளாக இருத்தல் வேண்டும். ஒவ்வோராண்டும் விநாயக சதுர்த்தியின் மறுநாள் பிள்ளையாருக்கும் வல்லபைக்கும் திருமணம் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. (இவ்வழக்கம் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோயிலில் நடைமுறையில் இருந்து வருகிறது.) அசுரர் பெண் வல்லபையாக இருத்தல் வேண்டும். ‘வல்லபை' என்பாள் மரீசி முனிவருக்கும், தேவவல்லியம்மைக்கும் பிறந்தவள். (விநாயக புராணம் 417ம் பக்கம். கடைசி 6 வரிகள்) ஆனால் மரீசி முனிவரின் புதல்வர் காசியபர். காசியபருக்குத் திதியின் வயிற்றில் பிறந்தவர்கள் அசுரர்கள் (கலைக்களஞ்சியம்). அதனால் 'அசுரர்குலத்தில் தோன்றியவள் வல்லபை' என்றார் போலும். 'வல்லபை’ என்பாள் வெள்ளைப்பிள்ளையாரின் அம்பிகை. இதனைக் கும்பேசர் குறவஞ்சி 10ம்பாட்டு 3ம் சரணத்தில் காணலாம். ‘வல்லபை' என்பாள் சூரபன்மனின் தாய். 'முருகனுக்கும் சூரபன்மனுக்கும் சண்டை நேரிடுங்கால் வல்லபை தன் மகனுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான வீரர்களைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். போரில் களைத்துப்போன முருகன் தன் அண்ணனாகிய பிள்ளையாரை வேண்ட, அவர் பேருருவங்கொண்டு வல்லபையின் மகப்பேறு வாயிலைத் தன் துதிக்கையால் அடைத்தார். நாணத்தால் தோற்ற வல்லபை, பிள்ளையாரின் அழகில் மயங்கி அவரையே திருமணம் செய்து கொண்டாள் என்பர். அதன்படியும் 'வல்லபை அசுரர் பெண்' என்பது பெறப்படுகிறது.
    ----------------

    குறத்தி தலைவியின் எதிர்காலம் கூறுதல்

      18. சக்களத்தி வயறடைக்க, உன்வயிறு திறக்கத்.
             தலைவருந்தன் கைவசமாய்த் தழுவிவாழ்ந் திருக்க
      மக்களைநீ பெற்றெடுக்க மாமிவா யடைக்க,
             மச்சினிமார் கொழுந்தன்மார் வாய்திறவா திருக்க,
      ஒக்கவரு ஓரகத்தி மார்களுனை வணங்க.
             ஒண்டொடியே! மருந்துண்டை உன்னாணை தருவேன்
      கைக்குழந்தை தனக்குமுலை சுரக்குதில்லை யெனக்கு
             கஞ்சிவார் தஞ்சைவெள்ளைக் கணபதியார் திருவே

    (இ-ள்) தஞ்சை வெள்ளைப் பிள்ளையாரின் செல்வமே! உனது சக்களத்திக்குக் குழந்தையேயில்லை, உன் வயிற்றில்தான் குழந்தைகள் உண்டாகும், (உன் தலைவன் உன்னுடனே கூடி) நீ பலகாலம் வாழ்வாய். மக்களைப் பெற்றெடுப்பாய், இதுவரை உன்னைக் குறைகூறிவந்த மாமியார் வாயடைக்கும்படியாகவும், மச்சினிமார், கொழுந்தன்மார் முதலானவர்களும் வாய்திறவாதிருக்கவும், ஓரகத்திகள் உன்னை வணங்கவும், ஒண்டொடியே! உனக்கு மருந்து உருண்டை தருகிறேன்; உன்னாணை அது பலிக்கும். எனக்கு முலைப்பால் சுரப்பதில்லை ஆகவே எனது கைக்குழந்தைக்குக் கொஞ்சம் கஞ்சிஊற்று.

    தலைவன் இளையாளோடும் சிலகாலம் இருந்து அவளுக்கும் குழந்தை உண்டாகவில்லை' என்று தலைவியிடம் வந்து சேருவான். அதனால் இதுவரை குறைகூறிய 'மாமி, நாத்தனார், கொழுந்தன்மார், ஓரகத்திகள் எல்லோருடைய வாயும் அடங்கும்படியாக மக்களைப்பெறுவாள்' என்றாள். மருந்து உருண்டை கொடுத்தல் குறத்தியர் இயல்பு, அது கருத்தரிக்கச் செய்யுமாம், 'மச்சினிமார்' என்றது நாத்தியரைக் குறிக்கும்.
    -----------------

    குறத்தி குறி கூறுதல்

      19 கொக்குமணி யக்குமணி வக்காவின் மணியுங்
             குட்டிநரிக் கொம்புடனே குளிசங்கட்டி தருவேன்
      சக்களத்தி கீழ்விழுவா ளுன்பேச்சு மேலாம்,
             சந்ததமு நின்கணவன் உன்னுடனே வாழ்வான்
      பக்குவத்தி பாலகனார் பதினாறும் பெறுவை!
             பாக்கியமும் பெறுவையதில் பெண்மூன்றும் பெறுவை
      கைக்குளொரு நெல்பிசைந்து கையில்விழ உதிர்ப்பேன்
              கைநிறையில் தஞ்சைவெள்ளைக் கணபதியார் திருவே.

    (இ-ள்) கொக்குமணி, அக்குமணி, வக்காமணி ஆகிய மணிகளும், குட்டி நரிக்கொம்பும் கொண்டு குளிசம் கட்டி நான் தருகிறேன். இவைகளை நீ வைத்திருந்தால் உன் சக்களத்தி பேச்சு கீழாகும். உன் பேச்சை எல்லோரும் கேட்பார்கள். எப்பொழுதும் உன் கணவன், உன்னுடனேயே வாழ்வான். மேலும் தஞ்சை வெள்ளைப்பிள்ளையாரின் செல்வமே! கைக்குள் ஒரு நெல்லை வைத்துப் பிசைந்து மறுகையில் விழும்படியாக உதிர்ப்பேன். அது கைநிறைய இருந்தால் நீ புதல்வர்களைப் பெறுவாய், மூன்று பெண்களைப் பெறுவாய்; பதினாறு வகையான பாக்கியங்களையும் பெறுவாய்.

    கொக்குமணி, வக்காமணி, அக்குமணி, குள்ளநரிக்கொம்பு முதலானவைகள் இருந்தால் சில தீமைகள் அணுகாவாம். ஆகவே, அது காரணமாக நலம் பிறக்கும் என்கிறாள். நெல்குறி பலவிதம் உண்டு. அதில் கையில் கொஞ்சம் நெல்லெடுத்துக் கசக்கியதும் அது பெருகி விழுந்தால், ‘நெல் பெருகியது போல மனை பெருகும்' என்பது அறிகுறி போலும். அப்படி இவள் குறியில் விழுந்திருக்க வேண்டும், அதனால் இவள் குறி கூறுங்கால் 'பாலகனார் பதினாறும் பெறுவாய்' என்கிறாள், பதினாறும் பெறுதல் ஆசிமொழியேனும்! அது பேறுகள் பதினாறைக்குறிக்குமே தவிரப் பிள்ளைகள் பதினாறல்ல. எனினும் வழக்கில் பதினாறும் பெறுதல் கூறுவதால் பாலகனார் பதினாறும் என்றார் போலும்.

    பதினாறுவகைச் செல்வங்கள் :-1. புகழ், 2, கல்வி, 3. வலி, 4. வெற்றி, 5. நன் மக்கள், 6. பொன், 7. நெல், 8. நல்லூழ், 9. நுகர்ச்சி, 10. அறிவு, 11. அழகு ,12; பெருமை, 13. இளமை, 14. துணிவு, 15. நோயின்மை, 16. வாழ்நாள்.
    ---------------

    தங்கள் வேலையும் இங்கு வந்த காரணமும்

      20. இளையவளும் மூத்தவளும் எனக்கிளையா ளிருவர்
             எங்கும்போய்க் குறம்பாடிச் சோறுகொண்டு வருவோம்
      களவறியா என்குளுவன் நாட்டிலெங்குந் திரிந்து
             கழுதைகளும் மேய்த்துக்கொண்டு, கறியுங்கொண்டு வருவன்
      துளபமணி அரங்கேசர் சன்னதியில் வாழ்வோம்
             துறைபரந்த காவேரி நதியாடி வருவோம்
      விளைவயல்சூழ் தஞ்சைவளர் வெள்ளைப்பிள்ளை யார்தான்
             வேண்டுஞ்சோ றிடுவரென்று விரும்பியிங்கே வந்தோம்.

    (இ-ள்) இளையவளும் மூத்தவளுமாக நாங்கள் மூவரும் எங்கும் போய்க்குறிகூறிச் சோறுபெற்றுவருவோம். எங்களுடைய கள்ளமறியாத குளுவன் நாடெல்லாம் திரிந்து கழுதைகளை மேய்த்துக்கொண்டு (பறவைகளை வேட்டையாடி அவற்றின்) கறியைக்கொண்டு வருவான். நாங்கள் இதுவரை திருவரங்கத்தில் துளபமாலை அணிந் துள்ள அரங்கேசர் சந்நிதியில் வாழ்ந்தோம். தினமும் காவிரி நதியில் நீராடுவோம். விளைச்சல்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த தஞ்சையில் வீற்றிருக்கின்ற வெள்ளைப் பிள்ளையார், நிறைந்த உணவு கொடுப்பாரென்று கேள்விப்பட்டு விருப்போடு இங்கு வந்தோம்.

    முதலடியின் முதற்பகுதி சரியானபொருள் முடிபுடையதாகக் காணப்படவில்லை, 'குளுவன் வேட்டையாடும் பொழுது கழுதைகளையும் மேய்த்து வருவான்' எனத் தெரிகிறது. அக்காலக் குளுவன் இக்காலத்தவனைப் போலல்லாமல் 'களவறியாதவன்' என்று கூறுவதனால் ‘சிறந்தவன்' என்பது பெறப்படுகிறது. அவன் பொல்லாதவனாக இருந்தாலும் மனைவி தன்கணவனை உயர்த்திக் கூறுதல் மரபு அல்லவா?

    மலைக் குறத்திகள்தான் அடிக்கடி நீராடுவது வழக்கமில்லை. தஞ்சைக் குறத்தி காவிரியாடிக் கடவுளைத் தொழுகிறாள். தஞ்சையின் வளமும் பிள்ளையார் அருளும் இறுதியடிகளில் கூறப்பட்டிருக்கின்றன.
    -------------

    குறத்தியர் உணவு

      21. வழக்கறிந்த பெருமாள்தன் வடமலையில் வாழ்வோம்
             வாழைப்பழந் தாழைப்பழ மாம்பழமுங் கிழங்கும்,
      பளபளனத் தக்காளிப் பழமலைப் பழமும்,
             பாலைப்பழம் நாவல்பழம் பனம்பழமுந் தின்று,
      சளசளனப் பனங்கள்ளுஞ் சாராயங் குடிப்போம்
             தாழையிலைக் குடிசைகட்டிக் கட்டிலுண்டு படுப்போம்
      விளக்குமில்லைச் சுகங்கொடுத்து வீண்துயில்வோந் தஞ்சை
             வெள்ளைப்பிள்ளை யார்கோவில் விருந்தையுண்டு களிப்போம்.

    (இ-ள்) அம்மே! (தமிழ்) வழக்கறிந்த பெருமாளாகிய திருமாலினுடைய வடவேங்கடமலையில் நாங்கள் வாழ்வோம். வாழைப்பழம், தாழைப்பழம், மாம்பழம், கிழங்கு, ஒளியுள்ள தக்காளிப்பழம், மலைப்பழம், பாலைப்பழம், நாவல்பழம், பனம்பழம் இவைகளைச் சளசளவெனத் தின்று பனங்கள்ளையும், சாராயத்தையும் குடிப்போம். தென்னங் கீற்றினால் குடிசை வேய்ந்து (அதனுள்) கட்டிலிலே படுப்போம். (எங்கள் வீட்டில்) விளக்கில்லை. (நாங்கள் எங்கள் கணவனுக்குச்) சுகத்தினைக் கொடுத்து வீணாகவே துயில்வோம். தஞ்சையில் உள்ள வெள்ளைப் பிள்ளையார் கோயிலில் இடுகின்ற விருந்துச் சோற்றையுண்டு களித்திருப்போம்.

    வழக்கறிந்த பெருமாள்: முன்பொரு காலத்தில் காஞ்சிப் பல்லவ மன்னனின் கோபத்துக்காளாய திருமழிசையாழ்வார் திருமாலைப் பார்த்து,
      "கணிகண்ணன் போகலுற்றான் காமருபூங் கச்சி
      மணிவண்ணா நீகிடக்க வேண்டா- துணிவுடைய
      செந்நாப் புலவனும் போகலுற்றே னீயுமுன்
      பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்"
    என்றுசொல்ல அதன்படியே திருமால் திருமழிசையாழ்வார் பின்சென்றுவிட இதனையறிந்த பல்லவராயன் ஆழ்வாரிடம் மன்னிப்புக் கேட்கவே, ஆழ்வார் மேற்கூறிய பாடலை,
      “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
      மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
      செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன். நீயுமுன்
      பைந்நாகப் பாய்படுத்துக் கொள்''
    என்று பாடவே திருமால் மறுபடியும் கோயிலில் எழுந்தருளியதாகக் கூறுவர். இதனால் திருமாலைத் ‘தமிழறிந்த பெருமாள்' என்றும், 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’, என்றும், ‘வழக்கறிந்த பெருமாள்' என்றும் கூறுவர்.
    'வழக்கறிந்த பெருமாள்' எனுங்கால் பெருமாள் தமிழிலுள்ள இயல்புவழக்கு, தகுதிவழக்கு ஆகியவைகளை அறிந்திருத்தல் வேண்டும். இவர் தமிழ்ப் புலவனின் பின் சென்றதே இதற்குச் சான்றாகும்.

    மேலும் பெருமாள் 'சொன்னவண்ணஞ் செய்வார்' என்பதற்குத் தஞ்சையிலும் ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அதாவது: தஞ்சையில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலின் வலம்வரும் வழியின் தென்பகுதியில் உள்ளவர் ஆதிகேசவப் பெருமாள். இவரைப் பூசித்து வந்தார் ஒரு அர்ச்சகர். இந்தப் பெருமாளுக்கு அரசர் மலர்மாலைகள் முதலியவைகள் பூசைக்காக அனுப்புவது உண்டு. அவ்வப்போது அரசர் தானேசென்று பெருமாளை வழிபடுவதும் உண்டு. ஆனால் தினந்தோறும் செல்வதில்லை. ஒருநாள் அரண்மனையிலிருத்து சிறந்தமலர்கள் பெருமாளுக்காக அனுப்பப்பட்டிருந்தன. அம்மலர்களின் சிறப்பைக்கண்ட அருச்சகர் அம்மலர்களைத் தன் காமக்கிழத்தியாகிய அக்கோயிலின் தேவதாசிக்குக் கொடுத்துவிட்டார். அவளும் அதனைக் குழலில் சூட்டிக்கொண்டாள். அன்று அரசர் பெருமாளை வழிபடுவதற்காகப் புறப்பட்டார். இதனை அறிந்த அருச்சகர் தேவதாசியிடம் ஓடிவந்து அவள் கூந்தலிலிருந்து (அரசர் கொடுத்த) மலர்களை எடுத்துக்கொண்டுபோய் ஒருதட்டிலே வைத்துப் பெருமாளின் பிரசாதமாக அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அரசர் அம்மலர்களைக் கண்களில் ஒற்றிக் கொள்ளப் புகுங்கால் அவற்றில் தலைமயிர் ஒன்று இருக்கக்கண்டார். அதுபற்றி அருச்சகரை வினவ, அவர் “எம் பெருமாளுக்குக் கேசம் உண்டு'' என்று கூறிவிட்டார். அரசரும் அடுத்தவாரம் வந்து காணுவதாகக் கூறிவிட்டுச் சென்றார். அதுமுதல் அருச்சகர் பெருமாளை நோக்கித் தவங்கிடந்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அரசர் வந்து பார்த்தார். அவர் கண்களுக்கு மட்டும் பெருமாளின் கேசம் காணப்பட்டது. அது முதல் அப்பெருமாளைக் 'கேசப்பெருமாள்' என்றனர். அப்பெயர் ('கேசி' என்ற அரக்கனைக் கொன்ற) 'கேசவப்பெருமாள்' என்றாயிற்று என்பர். இவரையே ''ஆதிகேசவப் பெருமாள்'' என்பர். இவர் இப்பெயரோடு இந்நூலின் 2ஆம் பாட்டில் பேசப்படுகிறார். இவர் அருச்சகர் சொன்னவண்ணம் செய்தார்.
    தாழைப்பழம்: என்பது (கல்தாழை) கற்றாழை வகையைச் சேர்ந்த சப்பாத்திப்பழமாகும். இது தின்பதற்குச் சுவையாயிருக்கும். இந்தச் சப்பாத்திப்பழத்தைப்பற்றிய ஒரு நாட்டுப்பாடல் உண்டு.
      முதல் நிலை
      காட்டுக் கத்தாழம்பழமே உனை நத்தி வந்தனமே
      இடை நிலை
      ஏழைகள் தின்றுவிட்டால் இல்லாத கொடுமை என்பார்
      சீமான்கள் தின்றுவிட்டால் தேகசுக மென்றிடுவார்
      (காட்டுக்)
    இச்சப்பாத்திப்பழத்தைச் சாப்பிடும்போது அப்பழத்தின் உள்ளே இருக்கும் நடுமுள்ளை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். எடுக்காமல் சாப்பிட்டால் அம்முள் தொண்டையிலேயே மாட்டிக்கொள்ளும். அதனால் இதற்குத் தொண்டைமுள் என்று பெயர். இது இந்நாட்டுப்பாடலின் இறுதியில் ‘தொண்டைமுள்ளு குத்திகிட்டுத்துடிக்கிறார்கள் வேலியோடே (காட்டுக்)’ என்றும் கூறப்படுகிறது. செந்தாழையின் பழம் எனினும் அமையும்.
    கிழங்கு: பலவகைக் கிழங்குகளாகும்.

    பாலைப்பழம்: வேப்பம்பழம் போலவே தோற்றம் இருக்கும். மிகச் சுவையாக இருக்கும். இப்பழத்தில் உள்ள வெண்மைநிறப் பால் உதட்டில்பட்டால் உதடுகள் ஒட்டிக்கொள்ளும். சோணாட்டில் மிக அதிகம். இதன் மரம் உறுதியானது.
    தாழை: தென்னை (“மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்'') தென்னைமட்டையின் கீற்று குடிசைக்குப் பயன்படுவது.
    'விளக்கு மில்லைச் சுகங்கொடுத்து வீண் துயில்வோம்' என்ற வரி தெளிவில்லை. வலிந்து பொருள் கொள்ளப் பட்டிருக்கின்றது.
    --------------

    குறியின் பெருமை

      22. முக்கணனார் மனைதோறும் பலியிரப்ப ரென்று
             மூவுலகுஞ் சொன்னவளென் முப்பாட்டி யம்மே!
      தக்கனுக்கு எக்கியத்தில் தலைபோகு தென்று,
             சகமறியச் சொன்னவளென் சக்களத்தி யம்மே!
      அக்கினிக்கு அக்கணமே கையறுகு தென்று
             அம்புவியில் சொன்னவளென் னன்னையடி யம்மே!
      விக்கினமாய் ஒருகொம்பு ஒடியுதென்று தஞ்சை
             வெள்ளைப்பிள்ளை யார்க்குரைத்த மெய்க்குறத்தி னானே!

    (இ-ள்) அம்மே! முன்பொரு காலத்தில் 'முக்கண்களையுடைய சிவபெருமான் பிக்ஷாடன உருவோடு தாருகாவனத்து இருடிகளின் வீட்டில் பிச்சை கேட்க வருவார்' என்று மூவுலகிலும் சொன்னவள் என் முப்பாட்டியாவாள். 'தக்கனுக்கு யாகத்தில் தலையறுபடு’ மென்று உலகம் அறியக் கூறியவள் என் சக்களத்தியாவள். அதே சமயத்தில் ‘அக்கினி பகவானுக்குக் கையறுந்துபோகும்' என்று பூவுலகில் சொன்னவள் என் தாயாவாள். தஞ்சையிலுள்ள வெள்ளைப் பிள்ளையாரிடம் 'உனக்கு ஒரு கொம்பு ஒடிந்து விடும்' என்று உரைத்த உண்மையான குறத்தி நானேயாவேன்.
    இப்பாடலின் மூன்று வரலாறுகள் காணக்கிடக் கின்றன. முதலாவது பிக்ஷாடனத் திருக்கோலம்:

    தேவதாருவன முனிவர்கள் சிவபக்தியில்லாராகி வேள்வியையே செய்துவந்தனர். இதனையறிந்த சிவபெருமான் திருமாலின் காமவல்லி உருவினால் அம்முனிவர்களின் தவ வலிமையைக் குறைக்கச் செய்ததோடு தானும் (ஆடையற்ற உருவோடு) பிக்ஷாடனராகிக் கையில் கபாலமேந்தி, இரப்பார் போல அம்முனிவர்களின் இல்லக்கிழத்தியர் இருப்பிடம் செல்ல, அவர்கள் சிவனைக்கண்ட மாத்திரத்தில் தங்கள் தங்கள் ஆடை நெகிழ்ந்தும், வளைகழன்றும், நாணமழிந்தும், மோகித்துக் கற்பிழந்து, நாற்பத்தெண்ணாயிரம் மக்களைப்பெற்றனர். இதனையே 'சிவபெருமான் (தாருவன முனிவர்களின்) மனை தொறும் பிச்சைகேட்பார்' என்றார் போலும்.
    இரண்டாவது:

    தக்கன் தலையறுபட்டது: தக்கன் சிவபெருமானை அவமதித்துச் செய்யப் புகுந்த வேள்வியை வீரபத்திரக்கடவுள் அழித்து அவனுக்கு உதவிபுரியவந்த தேவர்களையெல்லாம் வென்று தக்கனுடைய தலையையும் தடிந்தார். பின்னர் சிவபெருமானால் தக்கன் ஆட்டுக்கிடாய்த் தலையையும் உயிரையும் பெற்றான்.

    அக்கினிக்குக் கையறுபட்டது: தக்கனுடையவேள்வியில் தக்கனுக்கு உதவியாக இருந்த தேவர்களில் அக்கினியும் ஒருவர். இதனை
      "சோற்றுப் பாவகன் வெந்தனன் சூழ்திசை
      வேற்றுத் தேவ ரெழுவரும் வேவவே"
             (தக்கயாகப்பரணி-577)
    என்பதாலறியலாம். சோற்றுப்பாவகன்:அக்கினித்தேவன் “தக்கன் வேள்வியில் வீரபத்திரர் அக்கினியின் கரத்தை அறுத்தார்" என்று கூறப்படுகிறது.
    (சிவபராக்கிரமம் பக். 292)
    மூன்றாவது:
    பிள்ளையாருக்கு ஒரு கொம்பு ஒடிந்தது: மேரு மலையில் பிள்ளையார் தனது ஒற்றைக் கொம்பினை ஒடித்து, வியாச முனிவர் சொல்ல, மகாபாரதத்தினை எழுதினார். இதனை,
      “நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
      வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்ன நான்
      ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன்
      கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ"
              (வில்லிபாரதம், கடவுள் வாழ்த்து 1)
    என்பதால் அறியலாம்.
    இவளுடைய உறவினர்கள் சிவபெருமான் யாசிக்கப்போவதையும், தக்கனுக்குத் தலையறுபடப்போவதையும், அக்கினிக்குக் கையறுபடப் போவதையும் உலகுக்குக் கூறினார்கள். ஆனால் இவள் (வெள்ளைப்) பிள்ளையாருக்கே நேரில் “உன் பல் ஒடி படும்" என்று கூறியிருக்கிறாள்.
    ------------

    குறவர்கள் பெருமை.

      23. கந்தனுக்கு மயில்பிடித்துக் குடுத்தவனென் குளுவன்
             கணபதிக்குப் பெருச்சாளி குடுத்தவனென் தமையன்
      அந்தணனுக் கன்னம்பிடித் தளித்தவனென் தகப்பன்!
             அரிதனக்குக் கெருடன்பிடித் தளித்தவனென் மாமன்
      சந்ததம் மிகுந்திடவே மிருகம்பட்சி பிடிப்போம்!
             தஞ்சைவெள்ளைப் பிள்ளைமுதல் சகலருக்குங் கொடுப்போம்!

    (இ-ள்) அம்மே! முருகனுக்கு (ஊர்தியாக) மயிலைப் பிடித்துக் கொடுத்தவன் என் கணவனாகிய குளுவன். பிள்ளையாருக்கு (ஊர்தியாக) பெருச்சாளியைப் பிடித்துக் கொடுத்தவன் என் அண்ணன். பிரம்மாவுக்கு (ஊர்தியாக அன்னத்தைப் பிடித்துக் கொடுத்தவன் என் தந்தை. திருமாலுக்கு (ஊர்தியாக) கருடனைப் பிடித்துக்கொடுத்தவன் என் மாமன். (இப்படியாக நாங்கள்) எப்போதும் மிருகங்களையும் பட்சிகளையும் பிடிப்போம். தஞ்சையிலே உள்ள வெள்ளைப்பிள்ளையார் முதலான எல்லோருக்கும் கொடுப்போம்.

    தேவர்களின் ஊர்திகளாக விலங்கு பறவை முதலியவைகள் இருப்பதால், அவைகளை அவர்களுக்குக் கொடுத்தவர்களே தாங்கள்தான் என்று தங்கள் குலத் தொழிலைப் பயன்படுத்திக் கூறுகிறாள். தாங்களேயன்றித் தங்கள் குறவர்களும் திறமைமிக்கவர்கள் என்பதை எடுத்துக் கூறினாள் போலும்.
    இப்பாட்டில் மூன்று வரிகளே உள்ளன. இடையில் ஒரு வரி காணப்படவில்லை.
    -------------

    குறியின் பெருமை.

      24. உந்தியிலே வேதாவை அரிபெறுவ ரென்று,
             உலகமெங்குஞ் சொன்னவளென் ஓரகத்தி யம்மே!
      நந்தனிட மனையில்மால் வளருவா ரென்று,
             நாடறியச் சொன்னவளென் நாத்தியடி யம்மே!
      பெந்துவாய் ரெகுநாதர் தசரதனார் வயிற்றில்
             பிறப்பரென்று சொன்னவளென் பேத்தியடி யம்மே
      விந்தனிட மாதுமையாள் வயிற்றிலே தஞ்சை,
             வெள்ளைப்பிள்ளை செனிப்பரென்று சொன்னவளென் தமக்கை !

    (இ-ள்) அம்மே! ''பிரமன் திருமாலின் உந்தியிலே பிறப்பார்'' என்று உலகில் சொன்னவள் என் ஓரகத்தியாவாள். திருமால் கண்ணனாக நந்தகோபனுடைய வீட்டில் வளருவாரென்று நாடறியச் சொன்னவள் என் நாத்தியாவாள். “தசரதனார் வயிற்றினின்று (மகனாக) இராமபிரான் பிறப்பர்'' என்று சொன்னவள் என்று பேத்தியாவாள். இறைவனின் கிழத்தியாகிய “உமையவள் வயிற்றினின்றும் தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் பிறப்பார்'' என்று சொன்னவள் என் தமக்கையாவாள்.
    இப்பாடலில் திருமாலின் செயல்களைக் கூறுகிறார். இதிலுள்ள வரலாறுகளும் மூன்றாகும்.

    முதலாவது உந்தியிலே வேதாவை அரிபெற்றது:
    உலகனைத்தையும் நீரால் அழித்துவிட்டுத் திருமால் ஆதிசேடன் மீது பள்ளிகொண்டார். மறுபடியும் விளையாட்டைத் தொடங்க எண்ணிய திருமால் தனது உந்திக்கமலத்தினின்றும் பிரம்மாவைத் தோற்றுவித்து ஒரு புது உலகினை உண்டாக்குமாறு செய்து அதன்மூலம் சீவராசிகளை உண்டாக்கினார். பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமன் உந்தியினின்றும்தோன்றிய (சற்று உயரத்தில்) ஒரு தாமரை மலர்மீது நான்கு முகங்களோடு அமர்ந்திருக்கும் பிரம்மாவின் தோற்றம், இன்றும் திருவரங்கம் முதலான இடங்களில் காணக்கிடைக்கின்றது. இதுவே உந்தியிலே வேதாவை அரி பெற்றதாகும்.

    இரண்டாவது நந்தன் மனையில் மால் வளர்ந்தது:
    தேவகிக்கும் வசுதேவருக்கும் மகவாகக் ‘கிருஷ்ணன்' என்ற பெயரோடு திருமால் அவதரித்தார். கஞ்சனிடமிருந்து காப்பாற்றும்பொருட்டு, வானொலியின் சொற்படி கண்ணன் வாசுதேவரால் ஆயர்குலத்து நந்தகோபருடைய மனைக்குக் கொண்டுவரப்பட்டு, யசோதை, நந்தகோபன் முதலானவர்களால் வளர்க்கப்பட்டான்.

    மூன்றாவது ரெகுநாதர் தசரதனார் வயிற்றில் பிறந்தது:
    அயோத்தியை ஆண்ட தசரதர் தனக்கு மூன்று மனைவியரிருந்தும் பிள்ளைப்பேறின்மையால் சுமந்திரர் சொற்படி ரிஷ்யசிருங்க மகரிஷியைக்கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்து நான்கு பிள்ளைகளைப்பெற்றார். அவர்களில் மூத்தவனாகத் திருமால் 'இராமன்' என்ற பெயருடன் அவதரித்தார்.

    இனி மலையரைய மகள் பார்வதியின் மகவாகத் தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் தோன்றியது:

    முன்பொரு காலத்தே சிவபெருமானும் உமையவளும் கைலையில் உள்ள நந்தவனத்தைக் கண்டுவருகையில் அங்குள்ள சித்திர மண்டபத்தில் காதன் மடப்பிடியோடு களிறு புணரும் ஒரு சித்திரத்தைக் கண்ட அவ்விருவரும் அதனை அன்புகூர்ந்து உற்றுநோக்க, முடிவில் அது காரணமாகப் பிள்ளையார் உதித்தார்.
    அதனால் சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் பிள்ளையார் பிள்ளையானார்.

    'உந்தி' என்பது கொப்பூழ்' அது 'தொப்பூழ்' எனவும் வழங்கப்படும். 'ஓரகத்தி' என்பது 'ஓர்ப்படி' என்று வழக்கில் உள்ளது. 'பந்து' என்பது 'உறவு' எனப்படுவது. 'பந்துவாய்' என்பது 'பெந்துவாய்' என்று நூலில் பேசப்பட்டிருக்கிறது.
    இப்பாடலினால் 'தெய்வங்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே தங்கள் குடும்பத்தவர்கள் குறிசொல்லிப் பலித்திருக்கிறது' என்பதனைக் கூறித்தன் குலத்தையும் குறியையும் உயர்த்திக் கூறுகிறாள்.
    ---------

    குலப் பெருமை

      25. சீதைதனை ரெகுநாதர் மணம்புணர்வ ரென்று,
             செகமறியச் சொன்னவளென் சிறியதா யம்மே!
      கோதமனார் அகலிகையைக் கூட்டிக்கொள்வ ரென்று,
             குவலையத்தில் சொன்னவளென் கோப்பாட்டி யம்மே !
      காதலியே யுன்னுடைய கன்னியரை நாளைக்
             காளையாய் ஒருபிள்ளை மணம்புணர வருவன்
      வேதமொழி பொய்த்தாலு மென்மொழிபொய்யாது
             வெள்ளைபிள்ளை யாரறிவர்! வேலவரு மறிவர்!!

    (இ-ள்) அம்மே! ''சீதையை இராமர் மணந்து கொள்வார்'' என்று ஊரறியச் சொன்னவள் என் சிறிய தாயாவாள். “கௌதம முனிவர் சாபத்தால் கல்லாயிருந்த அகலிகை இராமனுடைய பாதம் பட்டு உயிர்பெற்றவுடன் மறுபடியும் அவளைக் கௌதம முனிவர் சேர்த்துக்கொள்வர்'' என்று ஊரறியச்சொன்னவள் என் கொள்ளுப்பாட்டி யாவாள். (ஆகையால்) அன்புடையவளே! உன்னுடைய பெண்ணை ஓரு காளை போன்றவன் வந்து மணம் கொள்வான். உறுதியாகச் சொல்கிறேன். வேதவாக்கு பொய்த்தாலும் என் குறி பொய்க்காது. இதனை வெள்ளைப் பிள்ளையாரும் அறிவர். வேலவரும் அறிவார்.

    சீதைதனை ரெகுநாதர் மணம் புணர்ந்தது: தசரதன் மகனான இராமன், மிதிலை மன்னன் சனகன் மகளான சீதையை வில்வளைத்து மாலையிட்டார்.

    கோதமனார் அகலிகைதனைக் கூட்டிக்கொண்டது: கோதமமுனிவர் அகலிகையோடு வாழ்ந்து வந்தார். அதுபோது தேவேந்திரன் அகலிகைமீது ஆசைகொண்டு களவு செய்தான். இதனையறிந்த கௌதமர் இந்திரனுக்குச் சாபம் வழங்கியதோடு அகலிகையையும் கல்லாகச் சபித்தார். சாபவிமோசனம் கேட்ட அகலிகைக்கு 'இராம பிரானின் பாதம் படும்போது சாபம் நீங்கும்' என்று கூறினார். அவ்வாறே இராமபிரான் திருவடி பட்ட மாத்திரத்தில் சாபம் நீங்கப்பெற்ற அகலிகைதனைக் கௌதமர் சேர்த்துக்கொண்டார்.

    பிள்ளைப்பேறில்லாத தலைவிக்குக் குறிசொல்லப் புகுந்த குறத்தி "உனக்கு மருமகன் வருவான்" என்று அவளது வருத்தத்தைப் போக்கித் தன் குறியை அனுபவமுள்ளவர்களான வெள்ளைப் பிள்ளையாரும் வேலவரும் அறிவார்கள் என்று கூறி மெய்ப்பிக்கின்றாள்.
    இப்பாட்டின் மூன்றாவது வரி வலிந்து பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
    ---------

    தாங்கள் தஞ்சை வந்த காரணம்.

      26. குருவிகளும் நரையானுங் கொக்குகளுங் குஞ்சுங்
             கோட்டானுந் தட்டானுங் கோழிகளுங் குயிலும்,
      எருவைகளு முள்ளானு மாந்தைகளுஞ் சிட்டும்,
             இனத்துடனே நாரைகளும் சினத்துடனே பிடித்து,
      அரிமீனு மாராலும் வாளைகளுங் கெளிறும்,
             ஆனைமீன் பாஞ்சாலும் பாயும்பனை மீனும்,
      விரிமுரலும் குறவைகளும் அகழ்மேவுந் தஞ்சை,
             வெள்ளைப்பிள்ளை யார்நாட்டில் வேட்டைவந்தோ மம்மே.

    (இ-ள்) அம்மே! குருவிகளையும், காகங்களையும், கொக்குகளையும், குஞ்சுகளையும், கோட்டான்களையும், தட்டான்களையும், கோழிகளையும், குயில்களையும், கழுகுகளையும், உள்ளான் குருவிகளையும், ஆந்தைகளையும். சிட்டுக்குருவிகளையும், நாரைகளையும் மிக்க கோபத்தோடு கூட்டமாகப் பிடித்துக்கொண்டு, உழுவை மீனும், ஆரா மீனும், வாளை மீனும், கெழுத்தி மீனும், யானை போன்ற பருத்த மீன் எதிர்த்தாலும் சளைக்காது பனை மரத்திலேறிப் பாய்கின்ற பனையேறிக் கெண்டை மீனும், விரிந்த முரல் மீனும், குறவை மீனும் தங்கியிருக்கின்ற அகழ் சூழ்ந்த தஞ்சை வெள்ளைப் பிள்ளையாருடைய சோழ நாட்டில் நாங்கள் வேட்டைக்கு வந்தோம்.

    'நரையான்' என்பது காகம். 'தட்டான்' என்பது ஒரு பூச்சி. இதனை விளையாட்டாகப் பிடிப்பது வழக்கம். ‘அரி மீன்' என்பது உழுவை மீன், அரி என்பது திருமால். திருமாலவதாரம் மச்சாவதாரம். அது உழுவை மீனாகும். இம்மீனின் இதயம் ஆலிலை வடிவில் இருப்பதைக் காணலாம்.
    -----------

    குறத்தியர் வாழ்க்கை.

      27. பூனைகளு மளுங்குகளு மாமைகளு முடும்பும்,
             புள்ளிமான் முதலைகளு முள்ளம்பன்றி முயலும்,
      மானுகளுங் கடமாவும் மலையணிலும் நரியும்,
             வங்கெலியு முள்ளெலியும் வரப்பெலியுந் திம்போம்,
      தேனுகளுந் தினைமாவுங் காட்டுவள்ளிக் கிழங்கும்,
             சிறுகிழங்கு தேமாவின் கனியுமுண்டு சுகிப்போம்
      மீனுகளுஞ் சங்குகளும் அகழ்மேவுந் தஞ்சை
             வெள்ளைப்பிள்ளை யார்நாட்டில் வேட்டைவந்தோ மம்மே!

    (இ-ள்) அம்மே! நாங்கள் மீன்களும் சங்குகளும் மேய்கின்ற, அகழ்சூழ்ந்த தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் நாட்டில் வேட்டைக்கு வந்தோம். மேலும் நாங்கள் பூனைகளையும், அளுங்குகளையும், ஆமைகளையும், உடும்புகளையும், புள்ளி மான்களையும், முதலைகளையும், முள்ளம்பன்றிகளையும், முயல்களையும், (கலை) மான்களையும், காட்டுப் பசுக்களையும், மலையணில்களையும், நரிகளையும், வெள்ளெலிகளையும், முள்ளெலிகளையும், வயலெலிகளையும் தின்போம். தேனும், தினைமாவும், காட்டு வள்ளிக்கிழங்கும், சிறுகிழங்கும், தேமாங்கனியும் சாப்பிட்டுச் சுகமாக வாழ்வோம்.

    இப்பாட்டின் தொடக்கத்தில் இரண்டெழுத்துகள் இல்லை. ஆகவே ‘பூனை' என்று சேர்க்கப்பட்டிருக்கிறது. “வங்கெலி" என்பது ஒருவகை எலி. 'தேனும்' என்றும் கூறவேண்டிய இடத்து எதுகை நோக்கித் 'தேனுகளுந்' என்று கூறப்பட்டிருக்கிறது. அதுபோலவே 'மீன்களும்’ என இருக்கவேண்டியவிடத்து 'மீனுகளும்' என்றுளது.
    -----------

    தங்கள் தொழில்.

      28. நாவிப்பிள்ளை கீரிப்பிள்ளை அணிப்பிள்ளை புறாவு,
             நாகணவாய்க் கீரிப்பிள்ளை நலத்துடனே பிடித்து,
      கோவைக் கனியிதழாய்! குறிஞ்சித்தேன் மலைத்தேன்,
             கொம்புத்தேன் சிறிதேனுங் குடிக்குமுனே வடித்து,
      காவிக்கயல் விழிமாதர் மனையிலே கொடுத்து,
             கள்ளுண்டு, காணாமல் பூனைகுத்தித் திம்போம்.
      தாவிக்கையால் ரெட்டைப்பிள்ளை முதுகிலே கட்டித்
             தஞ்சைவெள்ளைப் பிள்ளையார் சத்திரத்தி லுண்போம்.

    (இ-ள்) கொவ்வைக்கனி போன்ற உதடுகளையுடைய அம்மே! கஸ்தூரி மான்குட்டியையும் கீரிப்பிள்ளையையும் அணிற்பிள்ளையையும், புறாவையும், நாகணவாய்ப்பறவையையும், கிளிப்பிள்ளையையும் பக்குவமாகப் பிடித்துக் குறிஞ்சித்தேன், மலைத்தேன், கொம்புத்தேன் ஆகியவைகளை அவ்வந்தத் தேனீக்கள் குடித்துவிடுவதற்கு முன்னமே அவைகளை எடுத்துத் தேனை வடித்து சிவந்த கெண்டை மீனைப்போன்ற கண்களையுடைய மாதர்கள் வீட்டில் கொடுத்துக் (காசுபெற்றுப் பிறர்) காணாமல் கள்ளுண்டு பூனையைக் குத்திக்கொன்று அதனை (ச்சமைத்து)த் தின்போம். மேலும் எங்கள் இரண்டு பிள்ளைகளையும் கைகளால் தாவி எடுத்து முதுகிலே கட்டிக் கொண்டு தஞ்சை வெள்ளைப்பிள்ளையாரின் சத்திரத்திலே சோறு உண்போம்.

    'நாவிப்பிள்ளை ' என்பது கஸ்தூரிமான் குட்டி; “சீறு தேனுங் குடித்துடனே வடித்து'' என்று மூலத்தில் காணப்படுகிறது. ஈண்டு பொருள்படவில்லை. குறத்தி தான் குடித்ததாக அமைத்துக்கொண்டால் உடனே அதனை (குடித்ததனை) வடித்தல் பொருத்தமின்று. ஆகவே சிறிதேனுங் குடிக்குமுனே வடித்தெனக் கொள்ளப்பட்டது. மூன்றாம் அடியின் பிற்பகுதியும் நான்காம் அடியும் தெளிவிலது.
    ---------

    புழுகுச்சட்டம் முதலியன கொடுத்தல்

      29. கூடைமுறங் கட்டித்தொம்பைக் கூடுகட்டிக் குளுவன்,
             குண்டுமணிச் சூடுகட்டிக் கூறிவித்து வருவன்,
      காடைமயில் கவுதாரி கொண்டலான் தாராக்
             காட்டுப்பண்ணிக் குட்டிமான் குட்டிகளு முனக்கு
      வாடைவருங் கஸ்தூரி மிருகம்பட்சி பிடித்து,
             மங்கையரே புழுகுசட்டம் சவரிக்கொத்துத் தருவேன்
      மேடைதனி லிருவருமாய் விளையாடுந் தஞ்சை
             வெள்ளைப்பிள்ளை யாருடனே மிகவாழி! வாழி!

    (இ-ள்) அம்மே! என் குளுவன் குண்டுமணிச்சூடு கட்டிக்கொண்டு, தொம்பைக்கூடு கட்டிக்கொண்டு, கூடை முறங்கட்டுவதோடு, காடை, மயில், கவுதாரி, கொண்டலான் குருவி, தாரா, காட்டுப்பன்றிக்குட்டி, மான்குட்டி இவைகளைக்கூறி விற்றுவருவன். மங்கையே! உனக்கு நான் மணமிக்க கஸ்தூரி, மிருகம், பறவைகள் இவைகளைப் பிடித்துத்தருவதோடு, புனுகுச்சட்டமும், சவுரிக்கொத்தும் தருகிறேன். மேடை மீது காதலர்கள் இருவருமாய் விளையாடும் தன்மையுடைய தஞ்சையில் வெள்ளைப் பிள்ளையாருடனே மற்றவர்களும் மிகமிக வாழ்வதாக.
    'தொம்பைக்கூடு' என்பது நரியின் தோலால் செய்யப்பட்ட பையாகும். இது (தற்காலப் பர்மா பைபோல) தோளிலிருந்து இடுப்புவரை தொங்குவது. இதனைத் 'தொம்பன் கூடு' என்றும் கூறுவதுண்டு. அப்படித் 'தொம்பங்கூடு' எனில் குறவர்கள் ஈச்சமட்டையினால் பெரும் அளவில் செய்த குதிர் ஆகும். சில பகுதிகளில் குறவர்கள் இதனைச்செய்து விற்றுவருவர். குறவர்கள் இடுப்பில் கோவணமே கட்டியிருப்பர். ஆனால் தலையில் பெரிய தலைப்பாகை உண்டு. ஒருவகையாக அத்தலைப்பாகை கட்டுதலைக் “குண்டுமணிச் சூடுவைத்துக் கட்டுதல்'' என்பர். மேடைதனிலிருவருமாய் விளையாடு தலை ‘வெள்ளைப்பிள்ளையார் வல்லபையோடு விளையாடுதல்' எனினும் அமையும். பொதுவாக இப்பாடலின் பொருள் தெளிவிலது.
    -------------

    வாழ்த்து.

      30. கோணாமல் வளர்ரெங்க னாதபுரம் வாழி!
             குருநாதர் எல்லம்மன் வீரேசர் வாழி!
      வாணாளும் பூமாலை ராவுத்தரும் வாழி!
             மண்டபங்கள் கோபுரங்கள் மாநகரும் வாழி!
      சோணாடு மிகவாழி சூத்திரங்கள் வாழி!
             சுருதிநூ லறநூல்கள் சுகமாக வாழி!
      பூணார மணிமார்பப் பூவையர்கள் வாழி!
             புகழ்வெள்ளைப் பிள்ளையார் பூசைகளும் வாழி!

    (இ-ள்) அரங்க நாதபுரம் குறைவின்றி வளர்ந்து வாழ்வதாக. (எனது) குருநாதர் வாழ்வதாக. எல்லையம்மனும், வீரபத்திரரும் வாழ்வதாக. பூமாலை ராவுத்தர் நீண்ட நாள்கள் வாழ்வதாக. மண்டபங்கள், கோபுரங்கள், சிறந்த நகரங்கள் வாழ்வதாக. வேத நூல்கள், தர்ம நூல்கள் நிலையாக வாழ்வதாக. மணிமார்புடைய கணவர்களோடு வாழ்கின்ற கற்புக்கரசிகள் நெடுநாள்கள் வாழ்வதாக. புகழ்பெற்ற வெள்ளைப் பிள்ளையாருக்கு வழக்கமாக நடைபெற்று வருகின்ற பூசைகள் நாணாளும் வாழ்வதாக.
    முதலடியினால் இந்நூலாசிரியரின் ஆசிரியர் அரங்கநாதபுரம் 'வீரேசர்' என்றும், ஆசிரியர் மனைவி ‘எல்லம்மாள்' என்றும் கூறலாம்.

    'எல்லம்மன்' என்பது தஞ்சாவூர் கோட்டைக்குள் தெற்குவீதியோடு தொடர்புடைய ஒரு தெருவில் உள்ள கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவி எனலாம். இதனை 'எல்லையம்மன்' என்பர். இத்தெருவிற்கும் ‘எல்லையம்மன் கோயில் தெரு' என்று பெயர் வழங்கி வருகின்றது.

    இதனால் ''மிகப் பழங்காலத்தில் தஞ்சாவூரின் கிழக்கு எல்லையில் காவல் கடவுளாக இத்தெய்வம் இருந் திருக்க வேண்டும்'' என்று கருத இடமிருக்கிறது. இத் தெய்வத்தினை ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகை என்பாருமுளர். இத்தெய்வத்தின் உருவம் மார்புக்கும் கீழ் தெரியவில்லை. பாதிமார்பு, கழுத்து, தலை இவைகளே காணப்படுகின்றன. இவ்வுருவத்தின் முழுத்தோற்றம் இவ்வுருவத்தின் பின்னுள்ள சிலையினால் காணக்கிடைக் கின்றது. இதனைப் பரசுராமனின் தாய் என்பர்.

    பூமாலை ராவுத்தர்: வெள்ளைப்பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்கே சிறிது தூரத்தில் 'பூமரத்தான் கோயில் தெரு' என்கிற ஒரு தெரு இருக்கிறது. அத்தெருவின் கீழ்ப் பகுதியில் 'பூமரத்தான் கோயில்' என்றழைக்கப்படும் ''பூமாலை ராவுத்தன் கோயில்'' உள்ளது. அக்கோயிலில் உள்ள இறைவன் பெயர் வைத்தியநாதன். இவரை முதல் பாட்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர் கரந்தைக் கருணாசுவாமியேயன்றி இவரையும் குறிப்பிடல் பொருந்தும். இக்கோயிலில் 'பூமாலை ராவுத்தர்' என்று ஒரு சிலை உளது. அதுபற்றி மக்கள் கூறுவதாவது: மாணிக்கவாசகருக்காக இறைவன் பூமாலை தரித்துக் கொண்டு (அரேபியா நாட்டுக் குதிரைக்காரன் போல) இராவுத்தர் வேடம் புனைந்து கொண்டு நரிகளைப் பரியாக்கிக் கொண்டு இங்கிருந்து தான் மதுரையம்பதிக்குப் புறப்பட்டார்.
    அதனால் தான் இவருக்குப் 'பூமாலை ராவுத்தர்' என்று பெயருண்டாயிற்று என்பர்.

    “மணிமாரப் பூவையர்கள்'' என்று மூலத்தில் உளது. எப்படிக்கொண்ட போதிலும் ''கட்டுக்கழுத்தியர்" என்பது பெறப்படும். கடைசிப் பகுதியில் புகழ் வெள்ளைப் பூசைகளும் வாழி' என்று இருக்கிறது. சந்தமும் பொருளும் கருதிப் புகழ் வெள்ளைப்பிள்ளையார் பூசைகளும் வாழி! என்று அமைக்கப்பட்டிருக்கிறது.
    -------------

    வாழ்த்து

      31. விசையரா கவசுவாமி மேன்மேலும் வாழி!
             மெச்சுதள வாய்வேங்க டேந்திரனும் வாழி!
      திசையாளுந் துரைமக்கள் வெள்ளாளர் வாழி!
             செட்டியரும் பட்டுடையன் செந்தமிழும் வாழி!
      அசையாத தஞ்சாவூர் அட்டதிக்கும் வாழி!
             அறம்வாழி சாத்திரங்க ளறுசமயம் வாழி!
      இசையாக வேவெள்ளைப் பிள்ளையார் வாழி!
             இக்குறத்தைக் கேட்டவரும் கற்றவரும் வாழி!

    இதன் பொருள்: விசையராகவ நாயக்கமன்னர் வாழ்க. அவர் மெச்சுகின்ற தளவாய் வேங்கடேந்திரன் வாழ்க. எல்லாத் திக்குகளையும் ஆளுகின்ற சிற்றரசர்கள் வாழ்க. வெள்ளாளர்கள் அனைவரும் வாழ்க. செட்டியார்கள் வாழ்க. வெண்பட்டுடையவளான கலைமகளின் செந்தமிழ் வாழ்க. என்றும் மாறுபடாத தஞ்சாவூர் எட்டுத் திசைகளும் வாழ்க. தர்மம் வாழ்க. ஆறு சாத்திரங்கள் வாழ்க. ஆறு சமயங்கள் வாழ்க. வெள்ளைப் பிள்ளையார் புகழுடன் வாழ்க. இந்தக் குறவஞ்சி நாடகத்தைக் கேட்டவர்களும் கற்றவர்களும் வாழ்க.

    'விசையராகவனையும், தளவாய் வேங்கடேந்திரனையும் வாழ்க' என வாழ்த்துவதாலும், விசையராகவ நாயக்கன் காலத்தில் தளவாயாக வேங்கடேந்திரன் உண்மையாலும் இந்நூல் எழுதிய காலம் கி. பி. 1633-1673 (இதற்குட் பட்ட காலம்) எனலாம். 2-வது அடி தெளிவில்லை

    நளன் சனி பகவானிடம் “என் வரலாற்றைப் படித்தவர்களையும். கேட்டவர்களையும் நீ தொடரலாகாது" என்று கேட்டுக் கொண்டதுபோல இந்நூலாசிரியர், இக்குறத்தைக் கேட்டவர்களும், கற்றவர்களும் வாழட்டும் என்று கூறுகிறார். தன் பெயரைக் கூறாமல் மற்றவர்களை வாழ்த்துதல் மிகப் பெருந்தன்மையாகும். இந் நூலாசிரியரின் புகழ் வாழ்க.
      'எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
      அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.’
      (தாயுமானார்)
    தமிழ் வாழ்க!

Comments