Pirapantattiraṭṭu XXXIV


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXXIV
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
இயற்றிய ஸ்ரீ குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம்.
பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" பகுதி 34 (3409-3750)


திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய
ஸ்ரீ குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம்.


Source:
திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து மஹாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு
இது ௸ ஆதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்கள்
உதவியைக்கொண்டு ௸ பிள்ளையவர்கள் மாணாக்கரும் ஸ்ரீமீனாட்சி
தமிழ்க்காலேஜ் பிரின்ஸிபாலுமாகிய உ.வே. சாமிநாதையரால்
சென்னபட்டினம் கமர்ஷியல் அச்சிற்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
இரண்டாம் பதிப்பு, அக்ஷய ௵, ஆனி௴, 1926
விலை ரூ.5-10-0.
copyright reserved
--------------


சிவமயம்.

திருப்பனந்தாள் காசிமடத்துத்தலைவர்களாகிய
ஸ்ரீ குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம்.


கற்பக விநாயகர்.
3409. பூமேவு முகமணியாய்ப் புகழ்க்கோடு குடஞ்சுட்டா
யாமேவு கடமுகிலா யணிமேவு கரந்தருவாய்ப்
பாமேவு பதநிதியாய்ப் பழவடியர் மிடிதுரந்து
காமேவு பெருங்கருணைக் கற்பகக்கன் றினைத்தொழுவாம்.       (1)

காசி விசுவேசர்.
3410. உண்ணாடு பெருங்கருணை யொருத்தியிடஞ் சூழ்தலினா
லெண்ணாடு மற்றொருத்தி யேறியமே லிடநின்று
மண்ணாடு மாறிழித்து வலஞ்சூழச் செய்தமரும்
விண்ணாடு புகழ்க்காசி விசுவேசர் பதம் போற்றி.       (2)

ஸ்வர்ணாகர்ஷண பைரவர்.
3411.அன்னநெடுங் கொடியுயர்த்த வண்ணலுமொண் செங்கமலப்
பொன்னமரு மறுமார்பப் புத்தேளு நோக்குதொறு
மின்னமுமுண் ணடுங்கிடக்கொண் டிடுகபா லச்சூலச்
சொன்னவயி ரவப்பெருமான் றுணைப்பாதந் தொழுதெழுவாம்.       (3)

முருகக்கடவுள்.
3412. வரையெறியும் வெள்ளியகூர் வாய்வேல்கைக் கொடுபுலவர்
புரையெறியுங் கவிழிணர்மாப் போழ்ந்துபெரு விண்ணுலகில்
விரையெறிதார்க் கடவுளரைக் குடியேற்றி வெண்டாளந்
திரையெறியுஞ் செந்திலமர் செவ்வேள்பொற் பதம்பணிவாம்.       (4)

----------------

நூல்.

பாண்டிநாட்டுவளம்.
3413. பொன்பூத்த கைலாயப் புண்ணியநா யகனளவாத்
தென்பூத்த மலயவளம் விழைந்துதிரு முடிசூடிக்
கொன்பூத்த புரவலனாத் தேவியொடுங் குடிகொண்ட
மன்பூத்த மதுரையுடை வளத்ததுபாண் டியநாடு.       (1)

3314. செந்தமிழுஞ் சந்தனமுந் திசையெலாம் பரிமளிக்க
மந்தவளி யுமிழ்மலய வரைக்குடுமி நின்றிழிந்து
கொந்தவிழு மலர்வீசிக் குளிர்கெழுமுத் தெடுத்திறைத்து
முந்தவெழு புனற்பொருநை முழுவளத்த தந்நாடு.       (2)

3415. அன்றுதடா தகைப்பெயர்பூண் டரசளித்த மாதேவி
கன்றுதலில் பலவிருக்க நமையேகைக் கொண்டுயர்த்தா
ளொன்றுறநம் மியற்பெயரே யுறுத்தனள்கட் கெனமகிழ்ந்து
துன்றுகய றுள்ளுவபோற் றுள்ளுவநீர்க் கழனிதொறும்.       (3)

3416. வேலிபுரிந் திறையவனே விரும்பிநமைக் காக்குமெனிற்
சாலியெனு நமக்குளதோ குறையென்று தழைவனபோல்
வாலியநென் முளைவித்தி மள்ளர்நீர் பாய்ச்சுதலுங்
கோலியசெய் யிடங்கடொறுங் குலவியெழு வனபைங்கூழ்.       (4)

3417. வாங்குதிரை கொடுஞ்சிலையா வண்கமலக் கொடிநாணா
வோங்குவரால் கடிக்கணையா வொளிர்தருவா னுலகிலக்கா
வீங்குபுனற் றடஞ்செலுத்தும் வேம்பணிதிண் டோளான்போ
லாங்கொருதா னும்பகையை யடைந்துபொரு செயனேரும்.       (5)

3418. வீங்குவன மாதர்நகில் விளங்குவன மேனியொளி
யேங்குவன துடிமருங்கு லிரங்குவன காற்சிலம்பு
தூங்குவன குழல்வண்டு சுழலுவன கருநெடுங்க
ணீங்குவன மிடியாதி நெருங்குவன திருவாதி.       (6)

3419. கண்மருவு வனவெவர்க்குங் கதிர்க்குமுகம் போலகமு
மெண்மருவு பொருளாதி யோராறு மெம்மலரும்
பண்மருவு வண்டினமும் பாகூறு கழைக்கரும்பு
மொண்மருவு கஞ்சநா தமுமோங்கு தென்னையுமே.       (7)

3420. வானளவு கருஞ்சோலை மண்ணளந்த மாறிகிரி
தேனளவு கூடுபடி செவ்வானம் போர்த்தகலை
கூனளவு பிறையொருபாற் கொண்டசுரி மூகச்சங்கந்
தானளவு கதிர் நாப்பட் டயங்கல்கவுத் துவமணியே.       (8)

3421. சாலெலாம் வெண்டரளந் தளையெலாஞ் செஞ்சாலி
காலெலாங் கருங்குவளை காவெலாங் கனிச்சாறு
பாலெலாங் கழைக்கரும்பு பாங்கெலா மிகத்திருந்தி
நூலெலா நனிவிதந்து நுவல்வளத்த தந்நாடு.       (9)

3422. தெய்வநா யகன்சீர்த்தி திருந்தியவே டெதிரீர்த்துச்
சைவமே பொருளென்று தாபித்த திருநதிதான்
மெய்விரர் வுயிர்பொருவ விராவுதலாற் றிருவமிகும்
பொய்விரா வுதலில்லாப் புகழ்மிகுத்த தந்நாடு.       (10)

3423. மண்ணுலகத் தொருவேந்தன் றிருமகளை மணம்புரிந்து
கண்ணுதலார் கூடலுற வனையரிளங் கான் முளைசீர்
விண்ணுலகத் தொருவேந்தன் றிருமகளை வேட்டருளி
நண்ணுமொரு குன்றுமுடைத் தந்நாட்டு நலம்பெரிதே.       (11)

ஸ்ரீவைகுண்டநகரவளம்.
3424. ஆய்ந்தபுகழ்ப் போர்வையுடை யத்திருநாட் டினுக்கழகு
தோய்ந்ததிரு முகமென்னத் துலங்குநக ரொன்றதுதா
னேய்ந்தபெருஞ் சைவர்குழாந் திருக்கயிலை யென்றிசைப்ப
வாய்ந்தவயி ணவர்கடிரு வைகுண்ட மெனுநகரம்.       (12)

3425. முழவுபொலி வனவரங்க மூவுலகுங் கொண்டாடும்
விழவுபொலி வனமறுகு விண்ணியலும் வெண்பிறைக்கோட்
டுழவுபொலி வனமணிசெ யுபரிகையங் குதலைமொழி
மழவுபொலி வனதிருவ மல்குமா டங்களெலாம்.       (13)

3426. பெருகுவிறன் மைந்தரொடு பிணங்குமரி மதர்மழைக்கட்
கருகுமுகிற் குழன்மடவார் கழற்றிவீ சியகுழைக
ளருகுமணி மறுகிடைவீழ்ந் தளவாத பெருஞ்செல்வ
முருகுநிகர் மைந்தர்விடு முழுமணித்தேர்க் காறடையும்.       (14)

3427. கருங்குவளை மருட்டுவிழி காதளவோ டியமடவா
ரொருங்குபயின் மாளிகைமே லோங்குமர மியத்தலத்து
நெருங்குமலர்க் குப்பைகளை தொழின்மடவார் நெட்டுயிர்ப்ப
விருங்குளிர்வான் றருவுகுக்கு மெண்ணில்பல மலர்க்குப்பை.      (15)

3428. ஒங்குதிரு மாளிகைமே லொண்ணிலா முற்றத்து
வீங்குபரி யங்கமிசை மேவுமா டவர்மயங்கிப்
பாங்குபொலி மாதர்முக மென்றுபசுங் கத்தூரி
யாங்குமதிக் கிடுவரதைக் களங்கமெனு மறியாமண்.       (16)

3429. ஓவாது நீராட்டி னொள்ளியமென் றுகினனைந்து
தாவாத வல்குன்முலைத் தடந்தோன்ற மடமாதர்
மேவாத நாணமிக மைந்தர்விழி புதைப்பரவ
ராவாவிந் திரன் போற்கண் பெற்றிலமென் றயருவார்.       (17)

3430. பொன்செய்த மேனிலத்துப் பொற்றொடியா ரூடன்மிகத்
தென்செய்த சிலம்பொலிக்குஞ் சிறுபொழுது கூடன்மிகக்
கொன்செய்மே கலையொலிக்கும் பெரும்பொழுது குறித்துணர்ந்து
மன்செய்வா னவரழுக்கா றுறுதலான் மகவிழந்தார்.       (18)

3431. மாதரார் திருமுகமு முழந்தாளும் வயங்கலவன்
காதல்கூ ரவர்நகிலுங் கைத்தலமு முறுங்கிள்ளை
மேதகவாய் வருபாட்டுங் காதுமிளிர் தரும்வள்ளை
கோதகன்மற் றவர்குழலுங் கூறியகண் டமும்வண்டே.       (19)

3432. மரகதமா டத்துமிசை வயங்குறுசெவ் வான்படிதல்
புரவுயர்பச் சுருமாயோன் பொற்கலை போர்த் ததுநிகர்க்கு
முரவயிர மாடமிசை யொண்கருமே கம்படிதல்
கரவில்பளிக் குருப்பெருமான் கரித்தோல்போர்த் ததுநிகரும்.      (20)

3433. மறையவர்தங் குடியொருபால் வயங்குமர சாண்மையுடை
யிறையவர்தங் குடியொருபா லியைதரும்வா ணிகத்தமைந்த
நிறையவர்தங் குடியொருபா னிலவும்வே ளாண்மைபுரி
துறையவர்தங் குடியொருபாற் றுவன்றிடுமந் நகரத்து.       (21)

பாண்டி வேளாளர் சிறப்பு.
3434. இத்தகைய நகர்வாழு மெண்ணில்வே ளாண்குடியு
ளுத்தமமிக் கவர்பாண்டி வேளாள ரென்றுரைக்கு
மத்தகையர் நனிவாழ்வா ரளவுப்படாப் பெரும்புகழார்
வித்தகநல் லொழுக்கமுருக் கொண்டன்ன மேன்மையினார்.      (22)

3435. வளம்பெருகு முழவுதொழில் வாழ்க்கையால் யாவருக்கு
மூளம்பெருகு மகிழ்செய்வா ருண்மையே தலைநிற்பார்
களம்பெருகு காமாதி கடிந்துசிவ பரனடிக்குத்
தளம்பெருகு மலர்தூவித் தாழ்ந்தெழுநன் னியமத்தார்.       (23)

மகப்பேறுகருதி இருமுதுகுரவர் நோன்புழத்தல்.

3436. அன்னவரு ளொருவர்மனை யறம்வழாப் பெருநிலையி
லென்னருமொவ் வார்கற்பி னிரியாத மனைவியொடு
பொன்னனைய மகற்பெறுவான் போற்றுதிருச் செந்தூர்வாழ்
முன்னவனை யுளங்குறித்து முனிவிலா நோன்புழந்தார்.       (24)

3437. ஆறுமுகப் பெருமானா ரணிவிழாச் சேவித்துங்
கூறுபெருங் கோயில்வலங் கொடுபணிந்து மாரன்முத
லேறுவிசே டம்பொலிநா ளெய்தியுறச் சேவித்து
மாறுதவி ரடியார்க்கு மாறாது மடையிட்டும்.       (25)

புத்திரப்பேறு.
3438. இன்னுமள வாவிரத மிவ்வாறு புரிதருநாண்
மன்னுமவர் பெருங்கற்பின் மனைவியார் வயினின்றும்
பன்னுமலை வாயமர்ந்த பண்ணவனார் திருவருளா
லுன்னுமறங் குதுகலிப்ப வொருவரவ தரித்தனரே.       (26)

3439. பாலனா ரவதரித்த பண்பினிரு முதுகுரவர்
வேலனா ரருள்போற்றி வீடாத மகிழ்ச்சியெழச்
சாலநா ணாம்புரிந்த தவப்பயனுற் றோமென்று
கோலநான் மறையவராற் சாதகா திகள் குயிற்றி.       (27)

3440. மிடியனொரு செய்போற்றும் விதமெனவீ டுறல்குறித்த
படிமையன்ஞா னாசிரியன் றனைப்போற்றும் பண்பெனவங்
கொடிவில்வரி சைகளியற்றிப் போற்றிவளர்த் தனரோம்ப
மடிவில்பிறை போலவளர்ந்தார் மாதவத்து மைந்தனார்.       (28)

புத்திரர் பேசாமை தெரிந்து அவர்கள் வருந்தல்.
3141, ஓராண்டு பெருமகிழ்ச்சி யுற்றவிரு முதுகுரவ
ரீராண்டு முதலாகப் பேசுவரென் றெதிர்பார்த்தும்
பாராண்டு வருமுளையார் பேசாத பண்புணர்ந்து
நாராண்டு மகிழ்மனத்துத் துன்பமே நனிசுமப்பார்.       (29)

3442. பூங்கையா லெடுத்தணைத்துப் புல்லினருச் சியுமோந்து
நாங்கையா வினையாற்றி நன்றிதுபெற் றனமென்று
தீங்கையா யாதுகலை தேர்ந்தார்கள் யாவரையு
மூங்கையாக் கிடுவாரை மூங்கையா ரெனத்தெளிந்தார்.       (30)

3443. முன்செய்த தீவினையோ முற்றியது வேறுளதோ
பொன்செய்த கிண்கிணித்தாட் புண்ணியச்செந் தூர்ப்பெருமா
னென்செய்த வாறினிநா மென்செய்து மெனமயங்கிக்
கொன்செய்த கொடுங்கவலைக் குழிசியா யினர்மொழிவார்.      (31)

வேறு.
3444. செந்தில்வாழ் குமரப் புத்தேள் சேவடிக் கமலம் போற்றி
நந்துபல் விரதம்பூண்டு நாள்பல கழிந்த பின்றை
யந்தவா னவன்செ யும்பே ரருளினான் மூங்கை யேயாய்
வந்துதோன் றியதிச் சேயேன் மற்றினி யுரைப்ப தென்னே.       (32)

3445. சுற்றமு மிழிப்ப நட்டார் தொகுதியு நகைப்ப மண்மேன்
மற்றவர் யாரு மெள்ள வாயிலா மூகை மைந்தற்
பெற்றதிற் பொறாமை நன்று பெரும்பழி யின்மை யாலென்
றற்றமுள் ளொருவு மாறீ தமைதரத் துணிந்தார் மன்னோ.       (33)

திருச்செந்தூர் செல்லத்துணிதல்.
3446. வந்தவெங் கவலை தீர வாரிசூழ் திருச்செந் தூரிற்
கொந்தவிழ் கடப்பந் தாரான் கோயிலின் மூகை யாய
மைந்தரைக் கொடுபோய் விட்டால் வருவது காண்டு மென்று
சிந்தையிற் றுணிந்தெ ழுந்தார் சேயையுங் கூட்டிக் கொண்டே.       (34)

நன்னிமித்தப்பேறு.
3447. உற்றதோ ரைந்தா மாண்டி லொய்யெனச் செல்லா நிற்கு
மற்றவர் மனையி னின்று மறுகில்வந் தனரப் போது
பெற்றமொன் றிளங்கன் றோடு பெருமடி சுரந்த பாலோ
டுற்றது நேரே கண்டா ருலப்பிலா மகிழ்ச்சி பூத்தார்.       (35)

3448. மறையவ ரிருவ ரப்பால் வந்தன ரதுவுங் கண்டார்
குறையிலை போபோ வென்றோ ரேதிலன் கூறக் கேட்டார்
நறைகமழ் கின்ற தேமாங் கனிசிலர் நல்கக் கொண்டார்
நிறைதரு மகிழ்ச்சி பொங்க நடந்தனர் நிகரி லாதார்.       (36)

3449. வான்றவழ் மலய நின்றும் வருபெரும் பொருநை நீத்தந்
தான்றவழ் நடவை சற்றுந் தண்மலர்த் தருக்கண் மொய்த்தே
யான்றவழ் நடவை சற்று மாழிசா னடவை சற்றுந்
தேன்றவழ் புகழா ராகச் சென்றுசெந் தூரைச் சேர்ந்தார்.       (37)

திருச்செந்தூர்க்காட்சி.

3450. ஒருவரை மார்பம் போழ்ந்த துணர்ந்துபே ரச்சம் பூண்டு
பெருவரை யனைத்தும் போந்து பிறங்குறு வெள்வே லையன்
றிருவருள் பெறுவா னெண்ணிச் செறிந்தன நிற்றல் போலும்
பொருவில்பன் மாடமோங்கிப் பொலிதிரு வீதி கண்டார்.       (38)

3451. வள்ளலைச் சூழ்த ராது வானத்துக் கிடுக்கண் செய்த
கள்ளமும் மதிலும் வெந்து கருகிய துள்ளத் தோர்ந்து
வள்ளலைச் சூழ்ந்து நாளும் வானத்தைத் தாங்கா நிற்குங்
கள்ளமில் லாத செம்பொற் கடிமதிற் பொலிவு கண்டார்.       (39)

3452. அடுத்தடி வணங்கு வோரை வாழ்விக்கு மருளை யுன்னிக்
கடுத்துமுன் போல வின்னுங் கைப்படை செலுத்தே லென்று
விடுத்திட வரிய முத்தும் வித்துரு மமுமி றைத்து
மடுத்தவெண் டிரைக்கை யாழி வள்ளலை வணங்கல் கண்டார்.       (40)

3453. திரிபுர மெரியுண் மூழ்கச் சினந்துசெற் றிடுவா னம்மான்
வரிசிலை மேரு வாக மலர்க்கரங் கொண்ட ஞான்று
பரிவுறு மண்டந் தாங்கப் படைத்துவே றிருத்தி யென்னப்
புரிதரு வான்றோய் செம்பொற் கோபுரம் பொலிதல் கண்டார்.       (41)

3454. ஒருட லமர்ந்த தங்க ளுண்மையை விளக்கி யாங்கு
மேருவுஞ் சமழ்ப்ப வோங்கும் விரிமணிக் கோபு ரத்துப்
பேருரு மயிலு முட்காற் சேவலும் பிறங்கா நின்ற
காருருக் கலங்க வோங்குங் கொடிமிசைக் கலத்தல் கண்டார்.       (42)

3455. முற்றிய வருள்சா லாறு முகப்பிரான் றரிசனத்தாற்
பற்றிய வகமே போலப் புறத்தினுங் குளிர்ச்சி பம்பச்
சுற்றிய வாச நூற்றுக் காவதந் துனைந்து வீசு
மொற்றிய சாந்து பூசி யுறு பெருங் குழாங்கள் கண்டார்.       (43)

இலைவிபூதி.
3456. இலையமில் குமர வேண்முன் வணங்குவார்க் கென்றுந் துன்ப
மிலையடு பகைசற் றேனு மிலைபடு பிணிநி ரப்பு
மிலையளற் றுழன்று வீழ்த லிலைபல பவத்துச் சார்பு
மிலையென விலைவி பூதி யெடுத்தெடுத் துதவல் கண்டார்.       (44)

3457. இன்னபல் வளனு நோக்கி யெம்பிரான் றிருமுன் சென்று
பொன்னடி வணங்கிப் போற்றிப் புண்ணிய முதல்வா விந்தப்
பன்னரு மதலை தானின் னடைக்கலம் பார்த்துக் கொள்ளென்
றுன்னருந் தம்மூ ருற்றா ருறுதவம் புரிந்தீன் றோரே.       (45)

3458. ஈன்றவ ரொழிந்த பின்றை யிசைத்திடா மதலை யாருக்
கான்றநல் லறிவு செந்தூ ரண்ணலா ரருளிற் றோன்றச்
சான்றவர் மதிக்குந் தெய்வச் சண்முக விலாசம் வைகித்
தோன்றலா ருருவ முள்ளே தோன்றக்கண் டிருந்தா ரன்றே.       (46)

செந்திலாண்டவன் திருவருள் புரிதல்.

3459. இவ்வணஞ் சிலநாள் வைக வெரிமருள் சூட்டுச் சேவல்
கைவண்ணக் கொடியாக் கொண்ட காங்கேயன் கருணை பூத்துச்
செவ்வண்ணக் குமர னாவோர் திருவுருக் கொண்டு தோன்றி
யவ்வண்ணப் பொருள்யா மேயென் றறிதர வாய்ம லர்ந்து.       (47)

3460. மருவிய நீயா ரென்ன வாய்திறந் தடியே னென்னப்
பொருவிலக் கரமுப் பானும் பொலிதரு மைம்பத் தொன்றுந்
தருமிரு மொழிகட் குள்ள வியலெலா முணரச் சாற்றிப்
பெருகிலக் கியமுங் கூறிப் பிறழ்தராப் புலமை செய்து.       (48)

3461. கடன்மடை திறந்தா லென்னக் கவிபுகல் வாக்கு நல்கி
யடல்கெழு பிரசங் கத்தி னமைபெருஞ் சிறப்பு நல்கி
மடனிகு சமய மாதி வயங்குதீக் கைகளுஞ் செய்து
படர்மறை யனைத்துந் தேறாப் பதமலர் சென்னி சூட்டி.       (49)

3462. தவலருந் தவத்தா லெய்துஞ் சைவசித் தாந்த வுண்மை
நுவலுமுப் பொருளுந் தெள்ளி நூற்குரு பரனே யாதி
கவலில்செங் கற்றோ யாடை கவின்சடை வேடந் தாங்கி
யவமில்பக் குவர்க்கெம் முண்மை யறிவியென் றுபதேசித்து.       (50)

3463. திருந்துவெண் ணீறு நல்கித் திருவுருக் கரந்தா னையன்
வருந்துத லின்றி யெல்லாம் வாய்த்தமா தவத்தின் மிக்கார்
பொருந்துசெங் கற்றோ யாடை பூண்டு செஞ் சடைக டாங்கி
யருந்திற லாறு கட்டி வேடமு மமையப் பூண்டு.       (51)

வேறு.
குமரகுருபரரென்று பெயர்பெறுதல்.

3464. கோலமலி திருச்செந்தூர்க் குமரவேள் கருணையினாற் குமர னாகிச்
சீலமலி குருபரனீ யாதியென வாய்மலர்ந்த திறத்தை யோர்ந்து
ஞாலமலி தவர்குமர குருபரனென் றுரைக்குமொரு நாமந் தாங்கி
மூலமலி முதற்குரவ னருணினைந்தா னந்தவெள்ள மூழ்கி னாரே.       (52)

இவர் நூல் செய்யக்கருதுதல்.

3465. ஒருகுமர குருபரமா முனிதமையாட் கொண்டருளி னுபதே சித்த,
குருபரனைத் துதிசெய்வான் கருதியெது கோடுமெனக் குறிக்க லுற்றா,
ரருமையபன் மொழிகளுளுந் தென்கலையும் வடகலையு மநாதி யாய,
பொருவிலிரண் டனுக்குமுத லாசிரியன் பிறைமுடித்த புகழ்ப்புத் தேளால்.       (53)

3466 அனையனிடைக் கேட்டுணர்ந்து விரித்தவிரு வருமுனிவர்க் கரசா வுள்ளார்,
நினையுமிவை யொத்தனவே யாயினுமிவ் விரண்டனுளு நிகரி லாத,
வனைபுகழ்த்தென் மொழிமறையிற் சிறப்பெழுத்தைந் தெனவைந்தே வயங்கக் கொண்ட,
தினையவிசே டமுமன்றி யடிமுடிமா லயனின்னு மெய்தா முன்னோன்.       (54)

3467. பித்தனென விகழ்ந்ததுமெண் ணாதுபா டுகவெனவும் பெண்பாற் றூது,
சித்தமகிழ்ந் ததுவேட்டுச் செலவுமினுஞ் செயற்கரிய செயவுந் தானே,
யொத்தமுதற் புலவனென வுறவுமெழு திடுவானாவுறவு மோங்கு,
வித்தகவண் கயிலையகம் வருவித்துக் கேட்டிடவுமேய தம்மா.       (55)

கந்தர் கலிவெண்பா.

3468. ஆதலிற்றென் கலையேநாங் கோடுமெனத் துணிந்துபெருகன்பு போர்ப்ப
மேதகப்பூ மேவுமுத லெடுத்தணிமுற் சிறந்தகலிவெண்பா வொன்று
போதகனா கியபெருமாற் கோதியள வருங்கேள்விப் புலவர் சூழக்
காதலினா யிடையமர்ந்தா ரறங்கடலை யெடுக்கவந்த காட்சி யாரே.       (56)

வேறு.
3469. இனையரிவ்வாறு மேவ வீன்றவ ரீது கேட்டுத்
துனைதர மகிழ்ந்து செந்தூர் புகுந்தமர் தோற்ற நோக்கித்
தனையரென் றெண்ண றீர்ந்து தங்குல தெய்வ மென்றே
நினைதரு முளத்த ராகித் தொழுதனர் நீங்கி னாரே.       (57)

கைலைக்கலம்பகம்.
3470. பின்னர்வண் புலவ ரேறாய்ப் பிறங்குவார் செந்தூ ரண்ணல்
பொன்னடி வணங்கிப் போற்றிப் புறவிடை கொண்டெ ழுந்தே
யன்னமென்னடையார் சூழ வவிர்திருக் கயிலை சார்ந்து
கன்னவில் சிலையி னார்க்குக் கலம்பக மொன்று பாடி.       (58)

திருநெல்வேலி முதலிய ஸ்தலதரிசனம்.
3471. ஆங்குநின் றெழுந்து வேயீன் றருளிய முத்த மென்ன
வோங்கு புண்ணியனார் மேய நெல்வேலி யுவந்து போற்றி
வாங்குவெஞ் சிலையி ராமன் வழிபடப் பழியொழித்துத்
தாங்குநன் னகரி ராமேச் சரம்புகூஉத் தாழ்ந்து போற்றி.       (59)

3472. மின்னிய மோலி வானோர் மேவெழி லரம்பை மாதர்
முன்னிய மொய்ம்பின் வேடர் மொய்கொடிச் சியரே யாகித்
துன்னிய சார றோறுந் துதைந்துவாழ் குற்றாலத்து
மன்னிய குறும்ப லாவாழ் வள்ளலார் பாதம் போற்றி.       (60)

3473. ஒருதுணை மாலை பாகத் துவந்தவர் சுழியல் போற்றிக்
கருவுறா தருள வல்லார் கானப்பேர் நகரம் போற்றிப்
பருவர லெமக்கு நீப்பார் பற்றுமா டானை போற்றிச்
செருமலி சூலத் தையர் திருப்புன வாயில் போற்றி.       (61)

3474. பேணிய தருள வல்லார் பெருந்துறை புகுந்து போற்றிக்
கோணிய பிறைமு டித்தார் குளிர்கொடுங் குன்றம் போற்றி
யேணியங் கரத்து நாத ரிருந்தமிழ்ப் புத்தூர் போற்றிப்
பூணிய லெலும்பாக் கொண்டார் பூவண நகரம் போற்றி.       (62)

3475. செய்யவேண் மகிழ்ந்து மேய திருப்பரங் குன்றம் போற்றி
யெய்யயா வருக்கு நல்கு மேடக நகரம் போற்றி
யையதீ வினைய றுப்பா ராப்பனூ ரடைந்து போற்றிப்
பொய்யவர்க் கொளிக்கு மற்றைத் தலங்களும் புகுந்து போற்றி.       (63)

3476. சகத்தியன் முழுது நீத்துத் தத்துவ முணர்ந்த யோக
ரகத்தியல் குமரப் புத்தே ளகத்தியற் குணர்த்தி யாங்குச்
சுகத்திய லுண்மை முற்றுந் துணிதர வருளப் பெற்றார்
நகத்தியல் சிலையார் மேய கூடலை நண்ண வந்தார்.       (64)

3477. அறங்கிளர் கல்வி யானு மணிகிள ரொழுக்கி னானு
நிறங்கிள ருண்மை யானு நிகரிலாப் பெருமை யாளர்
திறங்கிளர் விருப்பாற் சென்ற சென்றபல் லிடத்து முள்ள
மறங்கிளர் செருக்கின் மூழ்கும் புலவரை வாதில் வெல்வார்.       (65)

3478. சிலரையைந் திலக்க ணத்தாற் சிலரைமிக் கிலக்கி யத்தாற்
சிலரைவண் பிரசங் கத்தாற் சிலரைநன் கியற்றும் பாவாற்
சிலரைநே ருரைக்குஞ் சொல்லாற் சிலரைமெய்ஞ் ஞான நூலாற்
சிலரைமற் றுள்ள நூலாற் சிறப்புற வெல்லு வாரே.       (66)

3479. அருண்மலி யினையர் கூட லால்வாய்ப் புறத்தி லெய்தப்
பொருண்மலி யவ்வூர் மேய புண்ணிய ரெதிர்கொண் டெய்தித்
தெருண்மலி தரப்பணிந்து சேர்ந்தன ரளவ ளாவிக்
கருண்மலி சோலை யாதி காட்டுபு மகிழ்ச்சி செய்வார்.       (67)

மதுாாநகரக் காட்சி.
3480. நிறங்கொடு பொலியு மேனி நின்மலக் குமர வேளைப்
புறங்கொடு சுமத்தல் செய்வ பொலிந்தகங் கொடுசு மக்கு
மறங்கொடு மேய நும்மைக் கண்டன மகிழ்ச்சி மேய
திறங்கொடு குலவா நிற்குஞ் செழுமயி னடனங் காண்க.       (68)

3481. இரும்பொழி லடிக ளாக விணர்க்குழை முகம தாக
வருட்பவிழ் மலர்வா யாக வருங்கனி செய்யு ளாகத்
தருங்கனி துளியா நிற்குந் தண்ணறா வனைய செய்யு
ளொருங்குறத் துளியா நிற்குஞ் சுவை பொரூஉ முதுவுங் காண்க.       (69)

3482. நமையணி பவர்மா ணாக்கர் நாடி நந் நீழல் வாழ்வார்
தமையடி வணங்க வந்தார் சான்றதக் கோரே யென்று
ளமைதரக் குறித்து மேன்மேன் மகிழ்ந்தல ருகுப்ப தென்னச்
சுமைதரு தார்ப்பூச் சிந்துங் கடம்பமர் சூழல் காண்க.       (70)

3483. முடிகளோ ராறுந் தாங்கு முருகவே ளருளப் பெற்ற
வடிகணுங் கவியு ளொவ்வொன் றவாய்ப்பிறி தவாவார் போல
வொடிவில் பல் கனிகளுள்ளு மொவ்வொன்றே யவாவி வேறு
கடிதரப் பலப ழுத்த பொழிலைநுங் கண்ணிற் காண்க.       (71)

3484. சேவலங் கொடிக்கைச் செவ்வே டிருந்தனுக் கிரகம் பெற்ற
பாவல ராய வுங்கள் பாட்டில்யாம் வீழு மாபோற்
காவலங் குறுப லாக்கள் கனிந்தபல் கனியை நச்சி
மேவரும் பலவீ மொய்த்து வீழ்தரு வளமுங் காண்க.       (72)

3485. சித்தநல் லொழுக்க மோவாத் தேசிகப் பொலிவு வாய்ந்த
வுத்தம வடிகே ளுங்கள் செய்யுளுட் பொருளே போலப்
பைத்தபூம் பொழிலு ளீரப் பலாப்பழுத் தடிமண் கீள
மொய்த்தபல் கனிசெறிந்த முழுவளஞ் சிறிது காண்க.       (73)

3486. செய்யகற் றோய்ந்த வாடை திருவரை யுடுத்துப் போந்த
வையரே யுமைக்கண் டோடும் புன்கவி யாளர் மானக்
கொய்ம்மலர்ச் சோலை மேலாற் குளிரெனும் பவன மேவ
மெய்ந்நடு நடுக்குற் றோடு மிக்கவா னரங்கள் காண்க.       (74)

3487. எண்ணிலா வோடு கால்களியைதரப் பெற்று மென்றுந்
தண்ணிலா வழிவாழ் வேந்தர் நாட்டினைத் தணவா தாகிக்
கண்ணிலா நெய்தல் வேலிக் கடலகம் புகுதா தாகி
மண்ணிலா விந்த வையை மாநதி வளமுங் காண்க.       (75)

3488. அடிகணும் மடிசார்ந் தோரை யளற்றகம் புகுத ராது
முடிவிலின் பெய்த வுய்க்கு முறைமைபோற் றன்பாற் சார்ந்த
மடிவரு வெள்ள முற்றும் வாரிதி யுவர்பு காது
படியிலின் பெய்த வுய்க்கும் பழநதி யிதுவே யன்றோ.       (76)

3489. என்றுபல் வளமுங் காட்டி மகிழ்விக்கு மியல்பி னாரோ
டொன்றுபன் மாடக் கூட லுட்புகுந் தோங்கு செம்பொற்
குன்றுநின் றனைய தாய கோபுர மருங்கு தாழ்ந்து
துன்று பன் மணியி மைக்குஞ் சுடர்ப்பெரு வீதி சூழ்ந்து.       (77)

3490. கொடியவெந் நிரயத் தாழ்தல் குறித்து வெங் கூற்ற மேய
கடிநகர் புகுவா ரென்றும் புகுதராக் கனகக் கோயி
லடியவ ரெதிர்கொண் டேத்த வன்பிடை யறாது பொங்க
நெடியகை குவித்துப் புக்கார் நிகரின்மா தவத்தின் மிக்கார்.       (78)

3491. விழைவர நல்குஞ் சித்தி வேழத்தை வணங்கி மேருக்
குழைசிலை யொருகைக் கொண்ட குழகர்பொற் பாதம் போற்றித்
தழைதர வுலக மெல்லாந் தண்ணளி மிகையா லீன்ற
மழைமதர்க் கயற்க ணம்மை முன்சென்று வணங்கி நின்றார்.       (79)

3492. வணங்கிநிற் பாருக் கெல்லா வுலகமும் வாய்ப்ப வீன்றுங்
குணங்கெழு குமரி யேயா யெற்றைக்குங் குலவு மன்னை
யிணங்குறு மகவாந் தெய்வக் கோலமங் கினிது காட்ட
வுணங்கிய வினையார் கண்டு முடிதரா வுவகை யுற்று.       (80)

அங்கயற்கணம்மை பிள்ளைத்தமிழ்.

3493. அருமைபா ராட்டுஞ் சான்றோ ரம்மைசந் நிதிமுன் னாகத்
திருமட மொன்று காட்டச் சென்றதி லமர்ந்து தெய்வ
மருமலர்க் கூந்த லம்மை மகத்திருக் கோல முன்னிக்
கருதுதோ றினிக்கும் பிள்ளைக் கவிப்பிர பந்தஞ் செய்தார்.       (81)

அரங்கேற்றல்.

3494. முந்துபே ரருளா லம்மை மொய்த்தபல் வளமு மேவி
நந்துமந் நகராள் வேந்தர் நாயகர் கனவிற் சென்று
சந்துசூழ் வரைவாழ் நஞ்சேய் தன்னருள் பெற்றா ரீங்கு
வந்துபா டியது கேட்கும் வாஞ்சையே மென்றுகூற.       (82)

3495. நலமலி பத்தி வாய்ந்த நாயகர் துயிலெழுந்து
குலமலி யமைச்ச ராதி யறிஞரைக் குறித்து நோக்கி
நிலமலி நம்மூ ருள்ள விசேடமென் னிகழ்த்து மென்னப்
புலமலி யவரு மோர்ந்தா ருள்ளது புகலுவாரால்.       (83)

3496. நாதனே திருவை குண்ட நகரினி லவத ரித்தா
ராதர மிலாத மூகை யாயவ ரையாண் டெல்லை
மேதகு திருச்செந்தூரில் வேலவ ரருளப் பெற்றே
யோதல் செய் பன்னூல் வல்லா ராயின ரொருவரின்னும்.       (84)

3497. செய்யகற் றோய்த்த வாடை திருவரை யுடுத்து மின்போன்
மொய்யொளிச் சடைக டாங்கி முன்னிய வேடம் பூண்டு
தெய்வவெண் ணீறு கண்டி திகழ்தரத் தலங்க டோறு
மையறச் சென்று சென்று வணங்கியித் தலத்து வந்தார்.       (85)

3498. வந்தவர் கயற்க ணம்மை மலரடி வணங்கிப் போற்றிச்
சந்தமிக் கமைந்த பிள்ளைத் தமிழ்ப்பிர பந்தம் பாடிச்
சுந்தர வல்லி முன்பு தொழுதரங் கேற்றல் செய்வா
னுந்துதம் முள்ளத் தெண்ணி யிருந்தன ருணர்தி யென்றார்.       (86)

3499. மனநெக வறிஞர் கூறும் வார்த்தையுங் கயற்க ணம்மை
கனவில்வந் துரைத்த வாறுங் கடைப்பிடித் தரசு தேர்ந்தே
யனகமார் கனவை யாரு மறிதர வெடுத்துக் கூறித்
தனையரு மகிழ்ச்சி பொங்கத் தலைமிசைக் கரங்கள் கூப்பி.       (87)

3500 யாவருந் தொடர்ந்து செல்ல வெவ்விடத் திருந்தா ரந்த
மேவருந் தவத்த ரென்று வினவியவ் விடத்தைச் சார்ந்து
தேவரும் பெறுதற் கொல்லாத் திருவருள் பெற்றீர் நும்மைப்
பாவருந் தவத்தாற் பெற்றே மெனப்பல வுரைத்துப் போற்றி.       (88)

3501. யாதுநீர் செய்தீ ரெங்க ளம்மைமே லியம்பு மென்னத்
தாதுசெய் பூணீர் பிள்ளைத் தமிழ்ப்பிர பந்த மென்ன,
வோதுநு மன்பா லம்மை யுரைத்தனள் கனவி லென்ன
வேதுநு மன்பே யம்மை யெழுந்தரு ளுதற்கென் றோதி.       (89)

3502. வெள்ளிய நீறு நல்கி மேதகு மாசி கூற
வள்ளிய குணத்தான் மிக்க நாயகர் மகிழ்ந்தேற் றேயங்
குள்ளிய நன்னா டேர்ந்தார் சுதினமு முடனே மேவத்
தள்ளிய வினையி னாரைத் தாழ்ந்தன ரழைத்துக் கொண்டு.       (90)

3503. சொல்லிய பலவாற் றானுஞ் சுடரலங் காரஞ் செய்தே
யல்லிய மலர்ப்பைங் கூந்த லங்கயற் கண்ணி யம்மை
நல்லியற் றிருமுன் வைகி நற்றமிழ் தனைப்பூ சித்துப்
பல்லிய முழக்கி யாரம் பஞ்செய வேண்டு மென்றார்.       (91)

3504. ஆர்கொண்ட சடையார் மைந்த ரருளுப தேசம் பெற்றார்
கார்கொண்ட முதலா வோதிப் பிரசங்கங் கவினச் செய்து
பார்கொண்ட பருவ மொன்று பகருமத் தினத்துத் தீர
நார்கொண்ட மகிழ்ச்சி பூத்தார் நாயக ராதி யோரும்.       (92)

3505. செற்றமில் புலவர் சிங்கந் தினமொரு பருவ மாக
வற்றமி லறிஞர் மெச்ச வணிந்தரங் கேற்றும் போது
பற்றிய புகழ்வா ரரனைப் பருவத்தின் மழவா யம்மை
வெற்றிநா யகர்ம டிக்கண் மேவிவீற் றிருந்தா ளன்றே.       (93)

3506. நாயக ரிறும்பூ துற்றார் நான்மறை யவர்பு கழ்ந்தார்
தூயமற் றுள்ளோர் யாருந் தோன்றுதெய் வீக மென்றார்
மேயவிச் சிறப்பி னோடு மெய்த்தவத் தலைவ ரானோ
ராயவிப் பிரபந் தத்தை யணிபெற முற்று வித்தார்.       (94)

3507. முன்னிய பெரியோர்க் குற்ற மகத்துவ முழுதுந் தேர்ந்து
மன்னிய வரசர் செம்பொ னரியணை யேற்றி வைத்துப்
பொன்னியன் மணிக ளாலே பொருந்தபி டேகஞ் செய்து
மின்னியல் வீர கண்டை மிளிரெழிற் றாளிற் சேர்த்து.       (95)

3508. மழைமதக் களிறு பாய்மா மாமணிச் சிவிகை நல்கி
விழைகுடை கொடிமுன் னான விருதுகள் பலவு மீந்து
தழைதிருமடமொன் றம்மை சந்நிதி யுறச்ச மைத்துக்
குழைதரு மன்பு பொங்கிக் குலவமற் றிதுவுஞ் செய்வார்.       (96)

நீதிநெறிவிளக்கம். வேறு.
3509. இருபதினாயிரங்கலிப்பொ னியைந்தவரு வாயுடைய
வரியநா யகபுரமென் றறையுநக ரொன்றுதவி
மருவியநீ தியைச்சுருக்கி வகுத்தருள வேண்டுமெனப்
பொருவிலா நீதிநெறி விளக்கமுறப் புகன்றருளி.       (97)

மதுரைக்கலம்பகம்.

3510. அம்மையென மகிழ்ச்சிசெயு மையரையு மெனப்பணிந்து
செம்மையுடைப் பலரிரப்பச் சிறந்தகலம் பகம்பாடி
வெம்மைதவிர் நாயகர்பால் விடைபெற்றுப் புறம்பேர்ந்து
தம்மைநிகர் பவரில்லார் வடதிசையே சாருவரால்.       (98)

திரிசிராப்பள்ளியையடைதல்.

3511. எண்ணரிய தருச்செறியு மிருங்கானுங் கருங்குன்றுங்
கண்ணரிய கான்யாறுங் கடந்துபரி சனஞ்சூழ
விண்ணவரு முனிவரரும் விழைந்தேத்தத் தாயான
பண்ணவர்வாழ் திரிசிராப் பள்ளிநக ரருகடைந்தார்.       (99)

3512. ஓதாம லுணர்ந்தவர்தம் வருகைகேட் டுளமகிழ்ந்து
போதாரும் புனற்றடஞ்சூ ழங்நகரப் புரவலனார்
மீதாரும் பெருஞ்சிறப்பால் விரும்பியெதிர் கொடுவந்து
பாதார விந்தமலர் பணிந்தழைத்துக் கொடுசென்றார்.       (100)

3513. விண்ணளவு நெடுஞ்சிகர மேவுசிரா மலைப்பெருமான்
கண்ணளவு திருவடிகள் கண்டுதொழச் செய்வித்து
மண்ணளவு பெரும்புகழ்சான் மாதவர்க்குப் பலவரிசை
தண்ணளவும் படிசமைத்துத் தணவாது மருவுவார்.       (101)

வேறு.
3514. வள்ளைக் குழைமா மறுமார்ப மாலே யனைய நாயகருங்
கொள்ளைத் தமிழார் பிரசங்கங் குலவக் கேட்டு மனமகிழ்ந்து
பிள்ளைப் பெருமாளையங்கார் வந்து பிரிய முறக்கலப்ப
வெள்ளைத் திறமி லிருவரையு நோக்கி யீது விளம்புவார்.       (102)

3515. பேசு முலக முவந்துகொளப் பெருக வியற்றி நவமாகக்
காசு பரப்ப வேண்டுமதில் வைக்குங் குறிநீர் கரைமினென
மாசு தவிருங் கருடனென முந்தி வகுத்தா ரையங்கார்
வீசு புகழ்சால் விடையென்றார் வேற்கைப் பிரானார் மாணாக்கர்.       (103)

3516. செம்புள் பறந்து செல்லுமென வட்ட மிட்டுச் செல்லுமது
நம்பு விடைதான் முட்டமுட்டச் செல்லு நலத்த தென்றுரைப்ப
வம்பு மொழிந்தா மெனச்சாம்பி வதனஞ் சாய்த்தா ரையங்கார்
பம்பு மொழியின் பொருளுணர்ந்து மகிழ்ந்தா ரனைய பார்த்திவரே.       (104)

3517. சந்தப் பொருப்பி னமர்குமர சாமி யருள்பெற் றவருரைத்த
வந்தப் படியே வெள்விடைக்கா சகிலம் வியப்பப் போகட்டு
நந்தப் பெருகு மனமகிழ்ச்சி யடைந்தே யொருநா யகரிருந்தா
ரிந்தப் புவனத் தறந்தழைப்ப வுதித்தார் பின்ன ரிதுசெய்வார்.       (105)

வாட்போக்கிழதலிய ஸ்தலதரிசனம்.

3518. பாக மொருபெண் குடியிருக்கும் பரமானந்தர் வீற்றிருக்குங்
காக மெரியக் கனல்வீசும் பொருப்புங் கடம்பந் துறைப்பதியு
மாக முகிறோய் தருமீங்கோய் மலையுந் திருப்ப ராய்த்துறையு
மாக மணிமால் பணிபாச்சி லாச்சி ராமப் பெரும்பதியும்.       (106)

3519. இமையார் வணங்கு பைஞ்ஞீலி யென்னுந் தலமுந் தவத்துறையு
மமையா வளங்கண் மிகப்பெருகு மானைக் காவும் பாற்றுறையு
நமையா ளொருமூக்கீசரமு நன்றே பொலியுங் கற்குடியுங்
கமையா வெறும்பி யூர்மலையுங் கவலை களையு நெடுங்களமும்.       (107)

3520. பற்று முருக்குந் திருக்காட்டுப் பள்ளி நகரு மற்றுளவுஞ்
சற்றும் விலகாப் பரிசனங்கள் சூழச் சார்ந்து சார்ந்துபணிந்
தெற்று திரைநீர்க் காவிரிசூழியலார் திரிசி ராமலைக்க
ணுற்று மகிழ நாயகர்க்குங் காட்சி கொடுத்தங் குறைகின்றார்.       (108)

சமயவாதம்.
3521. ஆய பொழுது கருடனைக்கொண் டவையிற் றோற்ற வையங்கார்
மேய பலவை ணவர்கடமை யேவ வவருள் விரைந் தொருவர்
பாய புகழ்சால் குமரகுரு பரமா முனிவர் முனம்போந்து
மேய சமய வாதமது செய்வோம் விருப்ப முறினென்றார்.       (109)

3522. என்றபொழுது முறுவலித்தே யெங்கு நிகழும் பெரும் புகழா
ரொன்ற வதனுக் குடம் பட்டா ருணர்விற் சிறந்த நாயகரு
மன்ற வறிஞர் பலரும்வர வழைத்தார் பாஞ்ச ராத்திரர்முற்
றுன்ற நெடுமால் புகழெடுத்துச் சொல்வா ரதுசற் றெடுத்துரைப்பாம்.       (110)

வேறு
3523. அவர் திரு நெடுமா லாதி யென்றன ரறிவின் மிக்க
விவரஃ துண்மை யந்த மென்பது முண்டே யென்றா
ரவர்நறுந் துளவத் தாரோ னரூபமே யென்றா ராய்ந்த
விவர்பெருங் கபாலத் தேற்ற தெவருடற் செந்நீ ரென்றார்.       (111)

3524. அவர்மறு மார்பன் ஞானச் சோதியென் றறைந்தார் சான்ற
விவரவன் மாயை தோயா திருப்பனே லுண்மை யென்றா
ரவரி மாயை போக்கும் வல்லனென் றறைந்தா ரப்போ
திவரொரு மான்பொய்ம் மானென் றெண்ணுறா தென்னையென்றார்.       (112)

3525. அவர்திகி ரியன்சு வேச்சை யாலுருக் கொள்வ னென்றா
ரிவர்மகத் தெச்ச னாப்புக் கிழந்தனன் றலையை யென்றா
ரவர்கரு மேனிச் செம்ம லாரண முரைத்தோ னென்றா
ரிவர்சிவ மாதி நான்கு வாக்கையு மெழுப்பு மென்றார்.       (113)

3526. அவர்திரு மனாளன் யாவு மளித்தருண் முதல்வ னென்றா
ரிவர்புதல் வரைக்கா வாம லிருந்ததா லியையு மென்றா
ரவர்பிறப் பொழிக்க வல்லோ னாழியான் றானே யென்றா
ரிவர்பரிப் பிறவி தீர்ந்த தில்லையே யின்னு மென்றார்.       (114)

3527. அவர்பிர ணவத்தின் மேய பொருளரி யாவ னென்றா
ரிவர்நறுங் கடுக்கை சூடு மிறையவர் யாவ ரென்றா
ரவர்மதக் களிறு கூவ இடைந்தவ னரியே யென்றா
ரிவரிறை யவன்செல் வானோ வேவல னிருக்க வென்றார்.       (115)

3528. அவர்புரு டோத்த மன்கா ணருளுடை முகுந்த னென்றா
ரிவரொரு சாத்தன் றாயென் றியாவரு மறிவ ரென்றா
ரவரிரா வணனைக் கொன்றே யமரரைக் காத்தா னென்றா
ரிவரிரா வணனென் பேராய்ந் தெண்ணுக வீரமென்றார்.       (116)

3529. அவர் முதற் குணத்தனென்று மாழியம் படையோ னென்றா
ரிவரவற் கதுசெ யற்கை யியற்கைதா மதமே யென்றா
ரவர்சுர ரமா ராக வாழிமுன் கடைந்தா னென்றா
ரிவர்கரு விடமுண் ணானேல் யாவரு மிறப்ப ரென்றார்.       (117)

3530. அவரரி யோமென் றாதி யறைகுவ துணர்வீ ரென்றா
ரிவரஃ தம்மை யப்ப ரியற்றிரு நாம மென்றா
ரவருல கனைத்து மாக்க வயனைமுன் னீன்றா னென்றா
ரிவருல களிக்க மாலை யீன்றனன் பிரம னென்றார்.       (118)

3531. அவரிமை யவர்ச காய னரவணைச் செல்வ னென்றா
ரிவர்துவட் டாவின் மைந்தன் செய்ததெச் சகாய மென்றா
ரவர் திறல் வாணன் போரி லிரிந்தவன் யாவ னென்றா
ரிவர்தவம் புரியத் தானே தருவா மெண்ணி யென்றார்.       (119)

3532. அவரவ னசையி னன்றி யணுவுமற் றசையா தென்றா
ரிவர்பரன் யோகின் வேளை யேவிய தெற்றுக் கென்றா
ரவரிரு கண்ணு மெங்க ளரிக்கிரு சுடரே யென்றா
ரிவருமை பரன்கண் பொத்த விருண்டதெ னுலக மென்றார்.       (120)

3533. அவரடுத் தவரை வஞ்சி யாதவன் றிருமா லென்றா
ரிவரிது மெய்யே லோர்பெண் ணெய்திய தெவ்வா றென்றா
ரவருல கோது நாரா யணனிஃதறிவீ ரென்றா
ரிவர்நுனித் துணருநாரா யணியென்பாள் யாவ ளென்றார்.       (121)

3534. அவரரி முழந்தாட் பூநும் மண்ணல் சூ டினனே யென்றா
ரிவரரி தானந் தானி யெம்முடை யிறைவ னின்னு
மவரவர் விழைந்த தேத்தே யருளுவான் முலைகன் றாப்போ
டிவரெழு முதல வற்றி னிழிந்ததோ முழந்தா ளென்றார்.       (122)

3535. அவர்வியா பகனா வுள்ளா னற்புத நெடுமா லென்றா
ரிவர்சிலை யடியோ மத்தோ வெங்கணும் பட்ட தென்றா
ரவர்வரங் கொண்டேற் றானை யட்டனன் றிருமா லென்ற
ரிவரவன் றன்னை யட்ட தெவ்வர வலியா லென்றார்.       (123)

3536. அவருல குண்ட காலை யகப்படா ரெவரே யென்றா
ரிவரகப் படான்கா ணண்டங் கடந்தவ னென்று மென்றா
ரவர்மறை யவர்க்குத் தேவா மரவிந்தக் கண்ணனென்றா
ரிவரவ ரியம்புங் காயத் திரிப்பொருள் யாவனென்றார்.       (124)

3537. அவரர வணையான் சார்பே யுயர்ச்சியென் றறைந்தா ராய்ந்த
விவர்பணி கருடன் றன்னை வினவிய தெண்ணு மென்றா
ரவருயிர் மயக்கம் போக்கி யருள்பவ னரியே யென்றா
ரிவர்மயக் கொழிக்குங் குல்லை யாதலா லிதுமெய் யென்றார்.       (125)

3538. இன்னண மவர்சொல் வார்த்தை யாவையு மறுத்துப் பின்னு
மன்னநா யகரை மற்றை யறிஞரை யினிது நோக்கி
முன்னவ னாய வெங்கண் முதலவன் பெருமை சற்றே
நன்னர்யாம் புகல்வோங் கேண்மி னென்றனர் நவில லுற்றார்.       (126)

வேறு.
3539. ஓங்கு காயத் திரிமனுவுக் குரிய பொருளா தலினானுந்
தாங்கு தாச ரதிவணங்கித் தாபித் தேத்து தலினானும்
வீங்கு கயிலைப் பொருப்படைந்து மேன்மேற் கண்ணன் விழைந்திரப்பப்
பாங்கு பெறுநற் குணத்தமைந்த மகப்பே றுதவும் பரிசானும்.       (127)

3540. வயங்கு மொருநேத் திரமாய மலரோ டோரா யிரங்கமல
நயங்கொண் மலர்கொண் டெம்மானை யரிநன் கருச்சித் தலினானு
மியங்கு மசுரர் தலைசாய்ப்ப வெஃக மதுதந் திடலானு
முயங்க வெழுந்த வாலால முவப்பி னருந்து திறத்தானும்.       (128)

3541. கரும்பு குழைக்குங் காமனுடல் கருக விழித்த திறத்தானும்
விரும்பு மதலை நடுங்கவரு வெங்கூற் றுதைத்த விறலானு
மிரும்பு முதலா மும்மதிலு மெரியின் மூழ்கச் செயலானு
மரும்பு கொடிய மனத்தக்கன் வேள்வி யழித்த வதனானும்.       (129)

3542. வலிய பாசு பதப்படைகாண் டீபற் குதவு வளத்தானு
மெலிய வொருமா னிடமடங்கல் வீரங் கெடுத்த வதனானும்
பொலிய மகடூஉ வரியாகப் புணர்ந்து சாத்தற் பெறலானு
மொலிய புனல்வைப் பிடத்தான்றோ ரநேகர் போற்ற வுறலானும்.       (130)

3543. அன்னர் தமக்கு வேண்டுவன வெல்லா மளித்த வருளானு
நன்ன ரொருபான் பிறப்பினுமால் பூதித் தேத்து நலத்தானு
முன்ன ரிருவ ரடியினொடு முடியுந் தேட வெழலானுஞ்
சொன்ன முதலீறாதியுயிர்க் குணநீத் தொளிருந் துணிபானும்       (131)

3544. காசிவரைப்பிற் பொய்ம்மொழிந்தோன் கைதம் பித்தவதனானு
மாசின் மதில்செற் றிடுஞான்று மாலே றாய்த்தாங் குதலானும்
வாச மலரோ னளவிரலை மாலை யணியும் பொலிவானும்
பாச மறஞா னமும் வீடும் வேட்டோர்க் குதவும் படியானும்.       (132)

3545. துன்று கருணைப் பசுபதியே சொற்ற பலவா னவருள்ளு
மென்று முயர்ந்தோ னெனத்தெளிவீ ரின்றோ நேற்றோ வொருவனியற்
றன்று குழைமண்ணிடுநீவி ரந்தோ சைவ நிந்தைகொள
லொன்று புழுதி மண்வாயி லிட்டுக் கொளற்கோ வுரையீரே.       (133)

3546. என்னா முடிவு படவுரைத்தா ரெங்கள் சைவ சிகாமணி யார்
மன்னா வவையி லிருந்தோர்கள் யாரு மெழுந்து வணங்கினார்
பொன்னான் மணியா லபிடேகம் புரிந்தார் மகிழ்ந்து நாயகரும்
பின்னா ளொருமா மடமியற்றிக் கொடுத்தார் மலைபோற் பிறங்கவே.      (134)

3547. அன்ன பணியிற் பொலியரசர் தம்பால் விடைபெற் றங் ககன்று
சின்ன முழங்கக் குடைநிழற்றச் செம்பொற் சிவிகை மேற் கொண்டு
பன்ன வரிய பரிசனமும் பாங்கு சூழ வழிக்கொண்டார்
கன்னல் கமுகிற் பொலிதருகீழ்க் காட்டை நோக்கி நடக்கின்றார்.       (135)

அன்பிலாலந்துறைமுதலியவற்றைத்தரிசித்தல்.
3548. அண்ண லிடங்கொண் டமரன்பி லாலந் துறையை வழி பட்டுக்
கண்ண வினிய கதிகாட்டுங் கானூர்க் கரும்பைக் கைதொழுது
வண்ண மதில்சூழ் மழபாடி வானோர் புகழு நெய்த்தான
மெண்ண மருவப் பணிந்தேத்தி யெதிர்தோன் றையா றெய்துவார்.       (136)

வேறு.
3549. சதிர்கொளை யாற்றமர் தக்க யாவரு
மெதிர்கொள வவரொடு மெய்தி நீண்முடிக்
கதிர்தவ ழாலயங் கருதி யுட்புகூஉ
வதிர்மறை முதலித னடிகள் போற்றினார்.       (137)

3550. பகரர சினைவெளிப் படுத்த வாவியு
நிகரறு கயிலையு நீள்வி மானமும்
புகரற வறம்வளர்த் தவள்பொற் கோயிலு
நகர்வள முழுமையு நன்று நோக்கினார்.       (138)

3551. பொய்யிலி யாரமர் பூந்து ருத்தியூர்
வையகம் புகழ்தர வயங்கு கண்டியூ
ரையர்சோற் றுத்துறை பழன மாதியா
மெய்யமை தலமெலாம் விரும்பிப் போற்றினார்.       (139)

3552. ஆயிடை நின்றெழுந் தறிவின் மேலவர்
மாயிரும் புவிக்கெலாம் வரங்க ணல்குபு
தாயன தங்குரு சாமி வைகுதன்
மேயதோர் திருமலை விருப்பிற் போற்றினார்.       (140)

3553. திருவலஞ் சுழியொடு திகழ்பட் டீச்சரம்
பொருவருஞ் சத்திமுத் தம்பொன் மேற்றளி
யருள் செறி தருபழை யாறை மற்றவுந்
தெருளுறப் பணிந்துபோய்க் குடந்தை சேர்ந்தனர்.       (141)

3554. முற்றிய வருட்குட மூக்கு வள்ளலார்
பற்றிய பற்பல தளியுஞ் சென்றுசென்
றொற்றிய வன்பினா லுவந்து போற்றினார்
சுற்றிய நகரமுஞ் சூழ்ந்து தாழ்ந்தரோ.       (142)

3555. பொருதுறை புகுமயிற் புலவர் மாணவர்
விருதுறை பரிசன மேவிச் சூழ்வர
வெருதுறை தம்பிரா னினிது மேவிய
மருதுறை மாநகர் வந்து போற்றினார்.       (143)

3456. வீழ்தர மறமெலாம் விரும்பி நல்லறம்
வாழ்தர வவதரித் தோங்கு மாண்பினார்
தாழ்தர லிலாதறந் தழையப் பிப்பிலஞ்
சூழ்திரு வாவடு துறைவந் தெய்தினார்.       (144)

3557. அருண்மலி மாசிலா மணியை யம்மையைத்
தெருண்மலி மூலரை யரசைச் சேவியா
மருண்மலி மனத்தருட் புகர்த மாண்புசால்
பொருண்மலி திருமடம் புகுதன் மேயினார்.       (145)

3558. பற்பல ரெதிர்கொளப் பாங்கி னேகுபு
மற்பொலி யருட்டிரு மாளி கைப்பிரான்
சிற்பர வுருநமச் சிவாய தேசிகன்
பொற்பமர் திருவடி புகழ்ந்து போற்றினார்.       (146)

3559. வெள்ளிய நீறுகண் மணியு மேதக
வொள்ளிய காவிதோ யுடையும் வேடமுந்
தெள்ளிய சடையுமுண் டிதமுஞ் செவ்விசால்
வள்ளிய குழாங்களை மகிழ்ந்து நோக்கினார்.       (147)

3560. தாதமார்க் கத்தருந் தழுவு மைந்தரென்
றோதமார்க் கத்தரு முலப்பிலாச்சக
நீதமார்க் கத்தரு நெடுஞ்சன் மார்க்கராம்
போதமார்க் கத்தரும் பொலியக் கண்டனர்.       (148)

3561. சாற்றுமித் தானமோர் தானந் தானெனாப்
போற்றுசீர்க் குருநமச் சிவாய புண்ணிய
னாற்றுபே ரருணினைந் தகம கிழ்ந்தனர்
தோற்றுபே ரறந்தலை யெடுப்பத் தோன்றினார்.       (149)

3562. தரமலி குமரசு வாமி சற்குரு
வரவர வெனத்திரு வாய்ம லர்ந்திடக்
கரமலர் குவித்தனர் வணங்கிக் காமர்சா
லூரவரு கிடனுற வுவந்து வைகினார்.       (150)

3563. போதத்திற் சித்தியிற் பொருந்த மற்றுள்
மேதகு நூல்களிற் பலவி னாவியே
யாதரங் கூர்தெளி வுண்மை யாய்ந்தன
ரோதுநங் குரவனே யெனவுள் ளோர்ந்தனர்.       (151)

3564. மருவுற வளவளாய் மகிழ்ந்து பின்னெழீஇப்
பொருவரு வடமடம் பூசை யாற்றிவந்
தருள்செறி பந்தியி லமுது கொண்டனர்
வெருவிலவ் விடனொரீஇ விடைபெற் றேகினார்.       (152)

3565. பிரிவரும் பரிசனம் பெட்பிற் சூழ்தரப்
பரிவரும் விருதுகள் பலவு மொய்த்திடத்
திரிவரு வளஞ்செய்மா யூரஞ் சேர்ந்தனர்
புரிவரு சடையரைப் போற்றித் தாழ்ந்தனர்.       (153)

3566. அங்குநின் றெழுந்துபோய்த் தருமை யண்ணுபு
சங்குநின் றவிர்குழைத் தரும லிங்கர் தம்
பொங்குமென் மலரடி போற்றிப் புக்கனர்
தங்குமெய்ஞ் ஞானசம் பந்தர் தந்தளி.       (154)

3567. ஆவயி னெதிர்கொளு மளவி லாரொடு
மேவரு ஞானசம் பந்தர் மேன்மைமுற்
றோவற வுணர்ந்தவ ருணர்ந்து போற்றினார்
தேவரும் பெறற்கருஞ் சித்தி பெற்றவர்.       (155)

3568. நுவலுமித் தானமு நோக்க லாமெனக்
கவலறு மனத்திடைக் கருது மேல்வையி
லவமகல் பலரெழுந் தருள வேண்டுமா
லுவமையி லீரென வுவந்து சென்றனர்.       (156)

3569. திருமடத் துட்புகுந் தருளித் தேசிக
ரருகுசென் றிருந்தன ரான்ற கேள்வியின்
மருவிய பற்பலர் வந்து சூழ்ந்தனர்
பொருவற வளவளாய் மகிழ்ச்சி பூத்தனர்.       (157)

3570. நடைகெழு கல்வியு நயக்கு ஞானமுங்
தடையற வெழுபிர சங்க வாய்மையு
மடையுடைந் தெனக்கவி வடிக்கும் வாக்குமிக்
குடைமயி னோக்கியாங் குளர்வி யந்தனர்.       (158)

3571. மாசறு பெரும்புகழ் மாசி லாமணித்
தேசிகர் பெருவளச் செந்தி லாதிபர்
வீசிய பேரருள் சுமந்த மேலவர்
தேசுசான் முகங்குறித் திதனைச் செப்புவார்.       (159)

3572. குற்றமில் கல்வியுங் கோதின் ஞானமு
மற்றமில் குமரவே ளருளிற் பெற்றவர்
மற்றவன் றந்தையார் மலர டித்தொழும்
புற்றவர் தமைவணங் கார்கொ லோவென்றார்.       (160)

3573. வெள்ளிய நீறணி மேனி யாரெலாம்
வள்ளிய தொழற்குரி மாண்ப ராயினுந்
தெள்ளிய தாயவாச் சிரம் பேதத்தா
னள்ளிய விதியையு நயப்ப ரேயென்றார்.       (161)

3574. மனத்திடை மாசிலா திருத்தன் மாண்பற
முனப்படு பிறவெலா மோசை நீரவே
யெனப்புக லுதலெவ னென்ன மாசறன்
மினப்படு காட்சியன் றென்று விண்டனர்.       (162)

3575. காட்சியே கருதுதல் கந்த வேளருண்
மாட்சி நும் போலுநர் மரபன் றாலென
வாட்சிசா லுண்மையை யறித ராவணப்
பூட்சிதா னருளொடு புணர்த ராதென்றார்.       (163)

3576. பிறரறி தலினெவன் வருதல் பேசுமென்
றறமலி தருமைவா ழவரு ரைத்திட
நெறியின் ரினையரென் றுணர்ந்து நீணிலங்
குறிவழி பாடுசெய் துய்யக் கொள்கென்றார்.       (164)

3577. ஆடல்வாம் புரவியோ ரரச ராயினார்
வேடமே பொருளெனக் கொண்டு விண்ணரு
நாடரும் பெரும்பத நண்ணி னாரது
கோடலே பொருளெனப் பின்னுங் கூறினார்.       (165)

3578. ஐந்துபே ரறிவெனுஞ் செய்யு ளத்தமென்
முந்துநீ ரியம்புகென் றவர்மொ ழிந்திட
நந்துமச் செய்யுளின் பொருண விற்றுகே
னுந்து நீர் செம்மையேற் றுறினென் றாரரோ.*       (166)

-------
[$] இதன் பின்னிருந்த 7- பாடல்கள், வரலாற்று முறைமையைச் செவ்வனே
தெரியாதவர்கள் சொல்லக் கேட்டுச் செய்யப்பட்டமையின், கொள்ளத் தக்கனவல்ல
வென்று பிள்ளையவர்கள், நாங்கள் பாடங்கேட்ட காலத்திற் சொல்லியிருந்தமையின்
அவற்றை இங்கே பதிப்பிக்கவில்லை.
இந்தப்பாகத்திற் குரிய பாடல்களைப் பின்பு அவர்கள் இயற்றவில்லை.
----------

வேறு.
3579. எங்க ளாரியன் மேற்றுதி யாங்களெப் போது
முங்கள் பேரரு ளாற் செயல் வேண்டுமற் றுதற்குத்
திங்கள் சூடியோன் றிருமக னாரருட் செல்வ
நங்கள் வாழ்வெனப் பெற்றுளீர் நயந்தருள் புரிவீர்.       (167)

3580. என்று வேண்டலு மும்மணிக் கோவையொன் றியம்பி
யொன்று மாதுதித் திருமினென் றவர்கரத் துதவிச்
சென்று நீள்வட மடம்புகூஉப் பூசனை செய்து
வென்றி மேவுவார் சிலபபகல் விழைந்தவ ணமர்ந்தார்.       (168)

3581. கோல மார்தரு மாசிலா மணிப்பெருங் குரவர்
சால வன்பு செய் தன்மையாற் பந்தியிற் றாமுஞ்
சீல மார்தரு திருவமு துண்டுடன் றிளைத்தார்
ஞால மேத்து செந் தூர்ப்பிரா னயந்தமா ணாக்கர்.       (169)

3582. மன்னு மாதரங் கூர்தர விங்ஙன மருவித்
துன்னு மப்புரப் பாங்குறு தலஞ்சில தொழுது பன்னு
மேன்மையா ரூர்ப்பிரான் பங்குனித் திருநாள்
கொன்னு மார்வத்திற் பணிதரல் குறித்தெழுந் தனரே.       (170)

வழவூர்ழதலியவற்றைத் தரிசித்தல்.

3583. மலையி னின்றிழி யருவியின் மும்மதம் வடிக்குங்
கொலையி னின்றுநீங் காப்பெருங் கொடுங்களி றுரித்தார்
நிலையி னின்றவர் செறிவழு வூரைநேர்ந் தருணூற்
றலையி னின்றதாட் டாமரை மலர்பணிந் தெழுந்தார்.       (171)

3584. கரிய கண்டர்வாழ் தருதிரு வம்பர்மா காள
மரிய மாதவர் தொழுதெழு வீழிநன் றமையும்
பெரிய வாஞ்சிய முதலிய பெருந்தல மெல்லா
முரிய காதலிற் போற்றியா ரூர்மருங் குற்றார்.       (172)

3585. கோல மார்தலத் தார்பலர் வந்தெதிர் கொள்ளச்
சீல மாதவப் பெரியவர் சிறப்பொடு சென்று
ஞால மேத்தணி முடிநெடு கியநல் வீதிப்
பால லோசனன் றிருவருள் பெருக்கெழப் பணிந்தே.       (173)

3586. ஓங்கு கோபுர வாயிலுட் புகுந்துமிக் குயர்சீர்
வீங்கு கின்றதே வாசிர யப்பெயர் மேவத்
தாங்கு காவணம் பணிந்துபூங் கோயிலுட் சார்ந்தார்
தேங்கு காதலிற் புற்றிடங் கொண்டவர் திருமுன்.       (174)

3587. கரையி லன்புமீப் பொங்கிடக் கைதலை முகிழ்ப்ப
விரைய மார்பணி நீற்றினை விழிகணீர் கரைப்பப்
புரையி லாதகண் பெற்றபே றிதுவெனப் போற்றி
யுரைசெ யாதபே ரானந்தந் திளைத்துவப் புற்றார்.       (175)

3588. மாயன் மார்பமும் வானக நாடுமுண் மதியா
தாய பேரெயில் சூழுமத் தளியகத் தமர்ந்து
மேய நந்தியா கேசரை விருப்பொடு கண்டு
பாய கிண்கிணித் தாள்பணிந் தெழுந்தனர் பரிந்தே..       (176)

3589. பரவு சீரச லேச்சுர முதலிய பலவும்
விரவு மன்பினாற் சென்றனர் மேதகப் பணிந்து
புரவு சாலொரு திருமடம் புக்கினி தமர்ந்தா
ரரவு நீர்ச்சடை யண்ணலார் புகழ்விரித் தறைவார்.       (177)

திருவாரூர் நான்மணிமாலை.
3590. அன்பு மீக்கொடு நான்மணி மாலையொன் றறைந்தாங்
கின்பு மீக்கொடு பலர்வியப் புறவரங் கேற்றி
வன்பு மீக்கொடு நலிமல மாய்த்தவர் மகிழ்ந்தார்
துன்பு மீக்கொடு சிலசம் வாதர்க டொக்கார்.       (178)

சமயவாதமும், மறுப்பும்.
3591. படிமை யாளர்நீர் பலவகை நூல்களும் பயின்றீர்
மடிமை யின்றியெப் பொருள்களு முரைத்திட வல்லீர்
கடிமை யார்கொளுஞ் சமமெனல் கடிந்துநீ ராண்டா
னடிமை யென்றுரை செய்வதெவ் வாறுசற் றறைவோம்.       (179)

3592. அநாதி நித்திய மகண்டபூ ரணசிவ முயிரு
மநாதி நித்திய முத்தியிற் சமமென வறைந்தா
ரநாதி நித்தியன் சருவவல் லவனுயி ராய
வநாதி நித்தியன் சுதந்தர கீனனென் றறுத்தார்.       (180)

3593. பச்சை மாமயில் பாகனும் பகருமான் மாவு
மிச்சை ஞான நற்கிரியையென் றியம்பிடு மூன்றால்
விச்சை யாளர்கள் சமமென விரித்துரை செய்வார்
கொச்சை யீரலீ ரிதற்கிறை கொடுத்திடு மென்றார்.       (181)

3594. ஏயு மிச்சைமுன் மூன்றையு முயிர்ப்பொருட் டிறைவன்
றோயும் யார் பொருட் டனையமூன் றையுமுயிர் தோயும்
பாயு நூன்முறை யின்றியா ரியரெனப் பயில்வுற்
றாயு நூலுணர்ச் சியரென வழக்கெடுத் தறைவீர்.       (182 )

3595. என்று கந்தவே டிருவருள் பெற்றவ ரியம்பக்
குன்று வார்சிலை கோட்டுபு நாணராக் கூட்டி
யன்று மாற்கணை பூட்டிமுப் புரத்தெரி யமைத்த
மன்று ளாடிமாத் திரங்கொலோ சித்தென வகுத்தார்.       (183)

3596. உண்மை யென்பது சற்றுமோர் கிலிர்தனை யுணர்வார்க்
கண்மை யாகிய தம்பிரான் போல்ல னான்மா
வண்மை யாயுணர்த் திடவுணர் சிததென மதியா
வெண்மை யீரநுமக் குரைத்தலிற் பயனிலை யென்றார்.       (184)

3597. திருந்து ஞானசம் பந்தர்வெள் ளெலும்புபெண் செய்தார்
பொருந்து மாமுய லகனொழித் தளித்தனர் பொன்போற்
றிருந்து மோர்கொடிக் கோர்பவுத் தன்றலை சிதைத்தார்
வருந்து மாறென வோதினர் மற்றவர் மீட்டும்.       (185)

3598. இரும்பு தீயடுத் தழற்றிடு மழற்றுவ திரும்போ
வரும்பு செந்தழ லோசிறி தாய்ந்துபார்த் துரைப்பீர்
விரும்பு மீசனுஞ் சீவனுஞ் சமமென விரித்துப்
பொரும்பு ராணரே யென்றனர் புகழ்ப்பெரும் புலவர்.       (186)

3599. என்று கூறலு மெத்தனை நாள்களிங் கிவரோ
டொன்று வாதநாஞ் செய்யினு மறுப்பரென் றுன்னிக்
கன்று நெஞ்சராய் மறுத்துரை யாமலே கழிந்தார்
நன்று நன்றிவர் வாதமென் றிவர்நனி நகைத்தார்.       (187)

தலயாத்திரை.
3600. ஆய காலையி லத்தல நின்றெழுந் தரனார்
மேய தூய்மையின் மிகப்பொலிந் தோங்குகீழ் வேளூர்
பாய மாமறைக் காடு நூல் பரவுநன் னாகை
தீய தாயது தீர்த்தருள் செறிக்குநள் ளாறு.       (188)

3601. திங்கள் சூடிதன் றிருப்பணிப் பெருமையைத் தெரிப்பா
னெங்க ணாவினுக் கரசுழ வாரங்கை யேந்தி
யங்க ணார்பணி புரிபுக லூரரு மகவாற்
றங்கள் வெம்பசி தணித்தவர் தயங்குசெங் காடு.       (189)

3602. பாங்கு சால்கட வூரருள் பதிந்தவெண் காடு
தேங்கு மற்றுள தலமெலாஞ் சென்றுசென் றிறைஞ்சி
வாங்கு நீர்த்திரை வாவியில் வாளைமீன் பாய
வோங்கு சீர்கொள்புள் ளிருக்குவேளூரைவந் துற்றார்.       (190)

3603. விருப்பி னாலெதிர் கொள்ளுவார் தம்மொடு மேவிப்
பொருப்பி னாற்சிலை செய்துமுப் புரமடு புராண
ரருப்பி னாற்புரி முலையுமை யாளொடு மமர்ந்த
சுருப்பி னாற்பொலி மலர்செறி சுடர்த்தளி புகுந்தார்.       (191)

3604. வந்து ளாருடற் பிணியொடு பவப்பிணி மாய்க்கு
மிந்து வாழ்முடி வயித்திய நாதனை யிடுகித்
தந்து நேரிடைத் தையலைக் கண்டனர் தாழ்ந்தார்
முந்து கண்கணீர் பொழிதர வானந்த முதிர.       (192)

3605. தமாது தீரரு மன்புபின் றள்ளவந் நின்று
நமாது கண்மணி போல்பவர் நீங்கிநன் குள்ள
மமாகு ழைந்திட வானந்த முகிழ்த்தெழ முத்துக்
குமார புங்கவன் றிருமுனர்க குறுகினர் மாதோ.       (193)

3606. துதிக்க முந்திடு நாச்சுடர்த் திருவுருக் கோல
மதிக்க முந்திடும் விழியருள் வடிவினை வாங்கிப்
பதிக்க முந்திடு மனநிறை யின்பத்திற் படிந்து
கதிக்க முந்திடுங் கருமலத் தடைதவி ரறிவே.       (194)

3607. ஆடு வார்மனங் குழைதர வரகர வென்று
பாடு வார்விழி பொழிதரு மருவியிற் படிவார்
நீடு வார்பெருங் களியொளி தகழநெட் டுயிர்த்து
மூடு வார்புள கத்தினான் மேனியை முன்னோர்.       (195)

3608. இந்த வாறுபே ரானந்த முகிழ்த்தெழ வேத்திச்
சந்த மாரொரு திருமடம் புகுந்தனர் தணவா
வந்த நாயக ரருள்குறித் துறங்குமப் பொழுதக்
கந்த னாரிளங் குழவியாய்த் தோன்றினார் கனவில்.       (196)

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்.
3609. இங்கு நம்மை நீ பாடுறா தேகலை யென்று
தங்கு பேரரு ளானுதற் பூதியுஞ் சாத்திப்
பொங்கு பேரெழிற் புண்ணியர் மறைந்தனர் விழித்தா
ரெங்கு மாய்விரிந் தெழுந்துபைங் கொழுந்துகொளிசையார்.       (197)

3610. குமிழ்ம றிந்தகட்டையறான் மகனருள் குறித்தாங்
கிமிழ்பெ ருங்களி யோடுபொன் பூத்தவென் றெடுத்தே
யமிழ்து முற்சுவை புறந்தரச் சுவையமை பிள்ளைத்
தமிழ்மு டித்தனர் பாடுபு புலவர் தந் தலைவர்.       (198)

3611. இன்ன செந்தமிழ் யாருமேத் திடவரங் கேற்றி
யன்ன மாநகர் தனிற்சில நாள்வதிந் தகன்று
பொன்ன வாங்கணைக் காழிநா யகனடி போற்றிச்
சொன்ன மாமதிற் றில்லையை யடைந்தனர் தொழுதே.       (199)

3612. எதிர்கொள் வாரொடும் பெருந்திரு வீதியை யிறைஞ்சிச்
சதிர்கொள் செம்மணிக் கோபுர வாய்தன்முன் றாழ்ந்து
பிதிர்த ராத்திரு மாளிகை வலங்கொடு பெயர்ந்து
முதிரு மன்பினாற் றிருநட ராசர்முன் சென்றார்.       (200)

3613. நீடு மானந்த நிறைந்தெழ நெஞ்சநெக் குருகக்
கூடு மஞ்சலி யிருகரஞ் சென்னிமேற் குவியத்
தேடு மாலயற் கரியராய்ச் சிதம்பர மன்று
ளாடு வார் நடங் கண்டன ரவசராய்த் திளைத்தார்.       (201)

3614. ஐயர் வாழ்திரு மூலட்டா னமும்புன லவல்வாய்ச்
செய்ய தாமரை மலர்திரு வேட்கள் நகருங்
கைய ரோவுநெல் வாயிலுங் கண்டவர்க் கருளே
பெய்ய வாழ்கழிப் பாலையும் பெட்டடைந் திறைஞ்சி.       (202)

3615. தில்லை மாநட ராசர்த நடனமுஞ் சேவித்
தெல்லை யில்லதோர் களிப்பினா லாவயி னிருப்பார்
வல்லை மாமடம் வளம்பல மலிதரச் சமைத்துத்
தொல்லை மாவினை தீர்ந்தவர் சூழ்சிறப் போடும்.       (203)

சிதம்பரமும்மணிக்கோவை.
3616. ஈண்ட வாவயி னிங்ஙன மமர்தரு மேல்வை
கூண்ட செம்பொருள் செறியொரு மும்மணிக் கோவை
யாண்ட குஞ்சிதச் செய்யதா மரையடிக் கணிந்து
நீண்ட பேரின்ப முழுகினர் நிகழுமப் போது.       (204)

சிதம்பாச்செய்யுட்கோவை.
3617. பூதி சாதனக் கிழமையர் சிலர்வந்து போற்றி
நீதி நூன்முதற் பலவுரைத் தீர்நிகழ் யாப்பிற்
காதி நாளுதா ரணமெலாம் பரமத மவாவு
மோதி யாமுயு மாறருள் செய்விரென் றுரைப்ப.       (205)

3618. காவை நேர்தர மகிழ்ந்துளங் கனிந்துபல் செய்யுட்
கோவை யாப்பியற் காட்டினி துரைத்தனர் கொடுத்தார்
மாவை வெண்டிரை வாரியை விலங்கலை மாய்த்த
தூவை வேலுடைத் தோன்றலார் சேவடித் தொழும்பர்.       (206)

சமயவாதம்.
3619. அரிய செய்யுணுண் பொருளெலா மடைந்தவர்க் கருளிப்
பெரிய ராயிரக் காற்பெரு மண்டபம் பிறங்க
வுரிய சான்றவ ரோடுறை பொழுதிலங் கொருசார்
விரிய வந்தகம் பிரமவா தியர்புடை மிடைந்தார்.       (207 )

3620. அன்று கந்தனார் புரிதரு பேரரு ளடைந்தோ
மென்று வந்தொரு சைவசித் தாந்தியா ரீங்கு
நன்று மேவின ரென்பரா லவரெவர் நாங்க
ளொன்று பேசிட வந்தன மெனவிதந் துரைத்தார்.       (208)

3621. சோதி நாமென மருளுறச் சொற்றலை மாயா
வாதி யாருரை கேட்டலுங் குறுநகை மலர்ந்து
நீதி யாரவரிக்குழாத் தேயுளார் நீங்க
ளோதி யானிறுத் துவிரென மற்றவ ருரைப்பார்.       (209)

3622. ஏக மேயென மறையெலா முழங்கவு மென்னோ
மோக நீரராய் மூன்றென லென்றவர் மொழிந்தார்
பாக வாய்மையாற் பரவுமெய்ஞ் ஞானநற் பயனான்
மாக நாட்டினு நும்மையொப் பாரெவர் மதிக்கின்.       (210)

3623. ஏக மென்றுமா மறையுரைத் திடுமென விசைத்தீ
ரேக மென்றெவர்க் குரைத்ததம் மறையசத் தேலா
தேக மென்றது பதியையே யிதுசிறி தெண்ணா
தேக மென்றதா லென்பிர் நும் மறிவுநன் றென்றார்.       (211)

3624. ஏக மென்றதே துணிபெனி னியம்பிய மறைதா
னேக மென்பதை மறந்து மூன் றிசைத்திடுங் கொல்லோ
வேக மென்றதை யன்றிமூன் றென்னெனி னிசைப்போ
மேக வாதர்காண் ஞாதிரு வாதிமூன் றென்றார்.       (212)

3625. என்ற காலையி லவித்தைவல் லவரிஃ துரைப்பா
ரொன்று கூறுகே மென்னையத் துவிதமென் றுரைத்த
னன்று மற்றித னுண்மையை நவிலுக வென்றா
ரன்று மற்றதற் கிறைகொடுப் பாரறி வாளர்.       (213)

3626. உரைசெய் நூல்களத் துவிதமென் றுரைத்திடு முண்மை
கரைசெய் வாமது வேறன்மை யாதல்கட் டுரைக்கும்
வரைசெய் மற்றித னாலுள மன்னுயிர் யாவுந்
திரைசெய் வைப்பிற்றா னாநிற்கும் பதியென்று தெளிமின்.       (214)

3627. என்ற காலையிற் றத்துவ மசியென லென்னே
யொன்ற வோதுமி னென்றன ருண்மை நோக்காது
மன்ற யாம்பர மென்றளற் றழுந்திடு மதியோர்
நன்ற வாயினீர் நவிலுதுங் கேண்மென நவில்வார்.       (215)

3628. ஆய தத்துவ மசியெனு மறைப்பொரு ளமல
னேய மாரிய மானனென் றிருபொரு ணிகழ்த்தி
யேய வேறிலா மையைவிரித் திசைத்ததே யன்றித்
தூய மாமறை தனியென்ற தின்றெனச் சொற்றார்.       (216)

3629. ஏக வாதம்யாஞ் செய்யவந் தனமென விசைப்பீர்
மோக மாயெவ ரிடஞ்செய முன்னினீர் பிழையே
யாக விவ்வுரை பிதற்றலென் னடங்குதி ரென்று
பாக மேவினார்க் கருளுமுத் தமர்பினும் பகர்ந்தார்.       (217)

3630. இந்த வார்த்தைகேட் டனையர்தோற் றிருந்தன ரெங்கள்
சந்த னாசலச் சாமியா ரருள்பெறு தக்கோ
ரந்த மாதலத் தடிகள்பால் விடைகொடங் கெழுந்து
பந்த மோவுமற் றுள்ளபஃறலமெலாம் பணிவார்.       (218)

தல யாத்திரை.
3631. பொருவி லாவள மலிதிருப் பாதிரிப் புலியூர்
திருவி லார்குறித் தடைதராத் திருத்தினை நகரங்
கருவி லாருடன் மாணிதாழ் குழிகருக் குழியி
லிருவி லாத்திரு வதிகைமுற் பலவுஞ்சென் றிறைஞ்சி.       (219)

வேறு.
3632. விரைகெழுசந் தனக்குறடு மேதகுகா ரகிற்றுணியும்
வரைகெழுமு பலபொருளும் வரன்றிவரு பெரும் பெண்ணைத்
திரைகெழுதண் புனல்வளங்கூர் திருவெண்ணெய் நல்லூரிற்
புரைகெழுமு பெரும்புகழார் பரிசனத்தி னொடும் புகுந்தார்.      (220)

3633. நாவலூர் நம்பிதனைத் தடுத்தாண்ட நம்பெருமான்
மேவுமா லயம் புகுந்து மேதினிமார் புறப்பணிந்து
பாவுபே ரன்புமிகப் பரிந்துவிழிப் புனல்வாரத்
தாவிலா னந்தமெழப் போற்றிசைத்துப் புறஞ்சார்ந்தார்.       (221)

3634. வானோங்கு கயிலாய மலையோங்கு நந்திபிரான்
றானோங்கு பேரருளாற் றந்தவருட் டகை நூலைத்
தேனோங்கு செந்தமிழாற் றிருந்தமொழி பெயர்த்தருணங்
கோனோங்கு தளிபுகுந்து கும்பிட்டா ருள்ளுருகி.       (222)

3635. தீராத பெருங்காதல் சிந்தையெழப் பணிந்தெழுந்து
நேராதார் புரம்பொடித்த நித்தரைவண் டிருத்துறையூ
ரோராவங் கணைந்தேத்தி யுள்ளுருகி யருணந்தி
தாரார்பொற் பூங்கழலும் தாழ்ந்துபணிந் தின்புற்றார்.       (223)

3636. அரியபுக ழாளர்சக லாகமபண் டிதரடிகள்
பிரியமன மஞ்சினராய்ப் பேதுற்றுப் புறவிடைகொண்
டுரியசிவ பெருமான்வா ழோங்குமதி லாமாத்தூர்
பிரியமிகு கோவலூர் பேணுபுசென் றிறைஞ்சினார்.       (224)

3637. பூமேவு நான்முகத்துப் புத்தேளு மறுவினொடு
மாமேவு வனமார்ப மாயவனு முரணடங்கத்
தாமேவு விண்கிழித்துத் தழலுருவ மாய்நின்றார்
தேமேவு திருவடிகள் சென்று புகுந் திறைஞ்சினார்.       (225)

3638. ஆயபெருந் தலநின்று மஞ்சிவிகை மேற்கொண்டு
பாயபரி சனஞ்சூழப் பழமலைபோய்ப் புகுந்துமிகத்
தூயமணி முத்தாறு தோய்ந்து பெரு மகிழ்திளைப்பத்
தாயனைய பெருமானார் சரண்பணிந்து புறம்போந்தார்.       (226)

3639. தூங்கானை மாடமுதற் சுற்றுமுள தலமெல்லா
நீங்காத காதலொடு நேர்சென்று தொழுதெழுந்து
பூங்காவின் மயிலாலும் புனற்பாலி நாட்டு மறந்
தேங்காத மறைச்சிலம்பாந் திருக்கழுக்குன் றினையடைந்தார்.       (227)

3640. திருவாத வூரருக்குச் செய்யபெருந் துறைக்கோல
மொருவாது காண்பித்த வும்பர்பிரான் றாள்பணிந்து
பொருவாத வளம்பரவு மிடைச்சுரமும் புகுந்தேத்தி
மருவாதார் புரம்பொடித்தார் கச்சூரும் வணங்கினார்.       (228)

3641. தேவர்கள்வந் தமுதாட்டுந் திருவான்மி யூர்பணிந்து
யாவருங்கை குவித்தேத்த வெய்திமயி லையும்பணிந்து
பாவருவண் புகழ்படைத்த வொற்றியூர் பாசூர்பைங் -
காவருவண் டிருமுல்லை வாயிலும் போய்க் கைதொழுதார்.       (229)

3642. அம்மைதிரு நடங்காணு மாலங்கா டணைந்திறைஞ்சிச்
செம்மை திகழ் திருச்செந்தூர்த் தேசிகனாரினிதமரும்
வெம்மையக றிருத்தணிகை வெற்படைந்து பணிந்தேத்தித்
தம்மைநிகர் வரியர்சில நாளங்குத் தரித்திருந்தார்.       (230)

3643. மேதகுவேங் கடகிரிவேந் தரும் விளங்கு திருநகரிக்
காதன்மிகு மன்னவரு மெதிர்கொண்டு கனவரிசை
யாதரவிற் செயப்பெற்றே யன்னவரோ டளவளாய்ப்
போதவுரு வார்பிறவும் போய்ப்பணிவான் குறிக்கொண்டார்.       (231)

3644. முத்திமுதல் வனைத்தணிகை முன்னவனை யொளிர்ஞான
சத்திதரன் றனையங்கு விடைகொண்டு சார்ந்தோர்க்குப்
புத்திமுத லெப்பயனும் பொருத்துமொரு திருக்காஞ்சி
யத்தியுரிப் பெருமானை யடிவணங்க நினைந்தெழுந்தார்.       (232)

3645. பல்லாரு மெதிர்கொள்ளப் பரவுகாஞ் சியையடைந்து
சொல்லாரு மறைமாவி னொருமூலச் சுடரொளியை
வல்லாரு முலைச்சுவடும் வளைச்சுவடுங் கொண்டு மகிழ்
வில்லாரு மெய்ப்பொருளை வீங்குகா தலிற்பணிந்து.       (233)

3646. எவ்வுலகு மீன்றாளை யின்காமக் கோட்டத்துச்
செவ்விதெரிந் தடிபணிந்து தேசிகனா கியபெருமான்
முவ்வுலகுந் தொழுதேத்த முன்னிவள ரிடமாய
வவ்வியமில் குமரகோட் டம்பணிந்தா ரருட்பெரியர்.       (234)

3647. கற்றபல ரொருங்கணைந்து கைகுவித்துத் தொழுதேத்தி
யுற்ற பெரு மகிழ்ச்சியினா லளவளா யுடன்மருவப்
பொற்றபுகழ்க் காஞ்சியிடைப் புண்ணியமா தலம்பலவு
மற்றமறப் பணிந்திருந்தா ராறுமுகற் கன்புடையார்.       (235)

3648. அன்னதலத் திடைநின்று மெழுந்தருளி யருங்கானு
முன்னரிய பெருவரையு முழங்கிவரு பன்னதியு
மின்னவைகள் கடந்தேகி யெண்ணில்பரி சனஞ்சூழப்
பொன்னசலச் சிலையாளர் காளத்தி போய்ப்புகுந்தார்.       (236)

3649. அன்னமலி புனற்செந்தூ ராறுமுகப் பெருமானா
ரின்னருள்பெற் றவரிங்கே யெய்தினா ரெனமகிழ்ந்து
பன்னரிய காளத்திப் பார்த்திபனா ரெதிர்கொள்ள
நன்னர் மகிழ்ச் சியிற்சிறந்து நல்லாரங் கினிதடைந்து.       (237)

3650. பிறங்கிவரு பொன்முகரிப் பெருந்தீர்த்தம் படிந்தாடி
யறங்குலவு மால்வரையி னடிமருவிப் பணிந்தெழுந்து
நிறங்கிளருஞ் சோபான வழியேறி நேயமிக
மறங்கிளர்வெஞ் சூற்படையார் மன்னுதிரு வடிபோற்றி.       (238)

3651. அன்பு திரண் டோருருவா யமைந்தருகி னிற்பாரை
யென்புருகப் பணிந்தேத்தி யெல்லையிலா னந்தமுற
வன்புதவிர் மனங்கரைய மாறாது விழிபொழியத்
துன்புதவிர்ந் துய்ந்தேனென் றினிதுதுதித் தனர்மீண்டார்.       (239)

3652. அந்தநகர்ப் புரவலனா ரளவிலா வரிசையொடு
சந்தமட மொன்றியற்றித் தரச்சிலநா ளங்கமர்ந்து
பந்தமிறம் பெருமானார் பாற்சென்று விடைபெற்றுக்
கந்தர்திரு வருள்பெற்றார் காசிநகர் குறித்தெழுவார்.       (240)

வேறு.
3653. உரைமலி சிவிகை மேற்கொண் டுலப்பிலா விருது மொய்ப்ப
வரைமலி மதமால் யானை வாம்பரிக் குழாங்கள் சூழக்
கரைமலி சின்ன மார்ப்பக் கல்லென வியங்க ளேங்கத்
தரைமலி வளமை சான்ற தண்டக நாடு நீத்து.       (241)

3654. செறிதரு கானுங் குன்றுஞ் சிலைத்தெழு நதியும் யாரு
மறிதரு நகரு மாக வமைதரு தெலுங்கந் தள்ளி
வெறிதரு நெய்தல் பூத்துத் திசையெலாம் வீசும் வாசக்
குறிதரு கைதை வேலிக் கருநடங் குலவ நீத்து.       (242)

3655. மழைமுகி றவழா நிற்குஞ் சோலையு மருத வைப்புங்
கழைகெழு வரையு மாக மாளவங் கடந்து சென்று
குழைபொடி சுரமுங் காடுங் கொண்டல்கண் படுக்குங் குன்றும்
விழைதரு நகரு மாக விராடமுங் கடந்து சென்று.       (243)

3656. குடம்படு செருத்தன் மேதி குறுகுபு கனைத்துப் பாய
விடம்படு தடத்து நின்று மெழுந்திள வாளை தாவத்
தடம்படு வானந் தோயுந் தாழைமுப் புடைக்காய் சிந்த
வடம்படு முலையா ரஞ்சு மத்திய தேய நீத்து.       (244)

3657. வெங்கைமால் வரையின் கோடும் விரைத்தசந் தனத்தின் றுண்டுங்
கொங்கையார் மலரு முத்துங் குருமணி களுந்த ரங்க
வங்கையால் வாரி வாரி யருகிரு கரைப்பால் வீசுங்
கங்கைசூழ் கிடந்த தெய்வக் காசிமா நகரம் புக்கார்.       (245)

காசிநகரக்காட்சி.
3658. அவிர்புனற் கங்கை பொங்கி யலையெறி கின்ற தோற்றந்
தவிர்தலின் றடைந்து காசித் தலத்திடை யிறப்போர்க் கெல்லாந்
தவர்சிலை யாகக் கொண்ட தம்பிரா னருளாற் சென்னி
யிவர்தர வேண்டு மென்ப தெண்ணுபு போலு மாதோ.       (246)

3659. மண்ணகழ்ந் திரைத்துச் செல்லும் வரநதி திரைக்கை யாலே
யெண்ணரும் புலிமால் யானை யெடுத்தகன் கரைமேல் வீசல்
கண்ணக னாங்கு வைகிக் கழிபவ ருடுக்கப் போர்க்க
வுண்ணயந் தீட்டி வைக்குஞ் சூழ்ச்சியே யொக்கு மாலோ.      (247)

3660. சுரநதி யென்னுங் கங்கைத் துறையெறி நுரையி னீட்ட
மரனரு ளாலங் கெய்தி யாருயிர் கழிப்போர்க் கெல்லாம்
வரனமை தோளிற் சாத்த வெண்டலை மாலை கோத்தே
யுரனுற விடங்க டோறு மமைத்ததை யொக்கு மாலோ.       (248)

3661. வரையினின் றிழிந்து செல்லும் வரநதித் திரையின் வீக்கம்
புரையறு தவத்தா லாங்குப் போந்துயிர் கழிப்போர்க் கெல்லாம்
விரையக றோளிற் சூட்ட வெய்யகட் செவியின் கூட்டங்
கரையறச் சேர்த்து வைக்கப் புரள்வது கடுக்கு மம்மா.       (249)

மருவறை வாங்குமேவிறை சாடுபு.
3662. கோலங்கொள் கங்கை யாற்றின் குரைபுனற் கயலை வௌவுஞ்
சீலங்கொள் குரண்ட மெல்லாந் திரண்டுடன் பொலியுந் தோற்ற
ஞாலங்கொ ளாங்கு மேவிக் கழிபவர் முடிமே னண்ணுங்
காலங்கொள் வதுகு றித்துக் கவின்றன போலு மாதோ.       (250)

3663. பொருவருங் கங்கை யாற்றுப் புகழ்ப்பெருந் துறைக டோறு
மொருவரு மீனங் கூர்ம மொய்த்தன வுறந்த தோற்ற
மருவியங் கிறந்தோர்க் கெல்லாம் வளங்கொள்கை விரல்சே ராழி
திருவியன் மார்பத் தாரஞ் செறித்திடச் சேர்த்தன் மானும்.       (251)

3664. புண்ணியக் கங்கை யாற்றின் பொருவறு கரையின் பாங்க
ரண்ணிய மறையோர் யாரு மாரழல் வளர்க்குந் தோற்ற
நண்ணியங் கிறந்தோர் நெற்றி நடுக்கர நடுவித் தேத்துக்
கண்ணிய செந்தீ யேற்ற வளர்ப்பது கடுக்கு மாலோ.       (252)

3665. இருகரை யுடைத்துப் பொங்கி யிரைத்தெழு கங்கை யாறு
தருவியல் கானக் கொன்றை சாடுபு கொணருந் தோற்ற
மொருவற வாங்குமேவி யுடல்கழிப் பவர்தந் தோளின்
மருவணி சூட்டச் சேர்த்து வைத்திடு காட்சி மானும்.       (253)

3666. வரைநடந் தனைய காட்சி வயக்கஞ்சால் கங்கை யாற்றின்
றிரைபல முகங்க டோறும் வளையெடுத் தெறியுஞ் செய்கை
யுரையிறந் தங்கண் மாண்டோ ரொள்ளிய செவியிற் றூக்கும்
புரையறு குழைக ளாக வெண்ணில வீசல் போலும்.       (254)

3667. முன்னிய நாகர் வைப்பு முழுதளா யெழுநீர்க் கங்கை
மன்னிய வங்கு மேவி மாண்டவர் களத்து நஞ்சந்
துன்னிய புகுத்தற் கெண்ணி யுறையிடந் துருவிச் சென்று
மன்னிய விளைவு நோக்கி வருமொரு பரிசு போலும்,       (255)

3668. சொல்லரும் பெருமை சான்ற தூத்திரைக் கங்கை யாற்றி
னெல்லையில் வளங்கண் முற்று மிருவிழி விடுத்து நோக்கி
யல்லல்வெம் பிறவிப் பாச மலைத்திடு நன்னீ ராடி
யெல்லையி லின்ப வெள்ள மெய்தின ரப்பாற் செல்வார்.       (256)

3669. விண்ணவ ரொருங்கு சூழும் விச்சுவ நாதர் மேய
வண்ணலஞ் சிகரக் கோயி லணைந்திரு கண்ணீர் வாரக்
கண்ணரு மன்பு பொங்கக் கைகுவித் திறைஞ்சி வீழ்ந்தார்
பண்ணமு தனைய தீஞ்சொற் பைந்தமிழ் வடிக்க வல்லார்.       (257)

துண்டிவிநாயகர்பதிகம், காசிக்கலம்பகம்.
3670. வெருவரு மருள்சா றுண்டி விநாயகப் பெருமான் மீது
பொருவரு விருத்தம் பத்துப் புகழ்ச்சியிற் பாடிப் போற்றி
யிருவரு முணரா விச்சு வேசர்மே லியம்பு வோர்கள்
கருவரு நீர ராகக் கலம்பகம் புனைந்து பாடி.       (258)

3671. ஆனந்த முயிர்க ளெய்த வானந்த வல்லி யோடு
மானந்த மகார்க ளோடு மானந்த வனத்து மேய
வானந்த வடிவார் தம்மை யானந்தச் செய்யுள் பாடி
யானந்தம் பயப்பப் போற்றி யானந்த மெய்து நாளில்.      (259)

3672. இத்தகு தலத்தே நாளு மறம்பல வியற்ற வேண்டு
மத்தகை யறங்க ளாற்றற் கமைதரு மிடமும் வேண்டும்
பைத்தவிந் நகராள் வேந்தைப் பார்க்கவும் வேண்டு மென்னாச்
சித்தம்வைத் திருந்தார் செந்தூர்ச் செல்வர்தந் திருமா ணாக்கர்.       (260)

3673. சொல்லுமிந் நகராள் வேந்தர் துருக்கரா யிருத்த லாலே
யொல்லுமற் றவர்தம் பாடை யொருங்குநாந் தெரிய வேண்டும்
புல்லுமற் றதற்கெஞ் ஞான்றும் பொருந்துபல் வாக்கு நல்க
வல்லும் வெண் கமலச் செல்வி மாண்பினைத் துதிப்பா மென்று.       (261)

சகலகலாவல்லிமாலை.
3674. புந்தியுண் முடிய வெண்ணிப் பொலியுநா மகளை நோக்கி
முந்திய பிரம னாவி னமர்ந்தமுற் றிழைம டந்தாய்
நந்திய வெள்ளை மேனி நின்மல நங்கா யென்று
சிந்திய வினையார் மாலை சிறப்புற வொன்று பாட.       (262)

3675. கலைமகள் கருணை பூத்துக் காட்சிதந் தருளி யங்கு
நிலைபெறு துருக்கர் பாடை நிகழ்மனு மறைமுன் னாய
தலைமைகொள் பலவுஞ் சால வல்லராய்த் தழையு மாறு
மலைவறு மருள்செய் தாளுண் மகிழ்ச்சியிற் றிளைத்தா ரன்றே.       (263)

3676. அந்நகர் புரக்கும் வேந்தர்க் கமைந்தவா ரியர்பாற் சென்று
பன்னரு மனையார் வேத மாதிய பலவி னாவி
முன்னரு மவருக் குள்ள சங்கைகண் முழுதுந் தீர்த்தா
ரென்னரு மிறும்பூ தெய்த வனையரு மெய்தி னாரே.       (264)

3677. மற்றவர் வள்ள லாரை மகிழ்ந்துட னழைத்துக் கொண்டு
கொற்றவர் முன்பு சென்று குலவிவர் பெருமை தேற்ற
வுற்றவர் தாமுங் கல்வி யுண்மையா திகளோர்ந் தேபற்
றற்றவ ரென்று பட்டாங் கறிந்தனர் சிறப்புச் செய்தார்.       (265).

3678. நயம்படு சிருங்கா ரத்தினகுபிர சங்கங் கேட்டு
வயம்படு வீர ரெல்லா மயங்குபு சோர்ந்து வீழ்வார்
வியம்படு வெம்போ ராற்று மிகுபிர சங்கங் கேட்டுப்
பயம்படு முதியோ ருங்கண் சிவந்துமே லெழுந்து பார்ப்பார்.       (266)

காசியில் மடமமைத்தல்
3679. இன்னண நிகழு நாளி லெண்ணருந் துருக்கர்க் கெல்லா
மன்னவர் திருச்செந் தூர்வாழ் வள்ளலா ரருள்பெற் றார்பாற்
பன்னரு மகிழ்ச்சி கூர்ந்து பரவுமக் காசி வைப்பின்
மின்னகு மடமொன் றாற்றிக் கொடுத்தனர் விழைந்து மாதோ.       (267)

3680. எண்ணற வுலகத் துள்ளோர் யாவரும் புக்க போதுங்
கண்ணக லறையொன் றேற்று வெளியிடங் காட்டு மாறு
பண்ணிய மடத்து மேவிப் பரந்தநீர்க் கங்கை யாடி
வண்ணவான் பூசையாற்றி மகிழ்ந்தினி திருப்பா ரானார்.       (268)

3681. அரசராற் பொருத்தப் பட்ட வளவறு நிதியங் கொண்டு
பரவுதம் மடத்து வந்தார் பசித்தழ லவியு மாறு
விரவறு சுவைநான் குண்டி விழைதர வூட்டி யூட்டிப்
புரவுற மற்று முள்ள வறமெலாம் போற்றி வாழ்நாள்.       (269)

கேதாரேசர்கோயிற்றிருப்பணி.
3682. சடைமுடிப் பெருமா னார்கே தாரநா யகனா ரன்னார்
மிடைதரு கனவில் வந்து வெய்யவெங் காடு சூழ்ந்து
புடை நெருங் கிடம றைந்தேம் புரிந்து நீ வெளிசெய் யென்றே
யடைவுற வருளிச் செய்தா ரறிந்தன ரறிவின் மேலார்.       (270)

3683. ஆயிடைப் பலரோ டெய்தி யடர்பெருங் காடு போக்கித்
தாயினு மினிய னான தம்பிரான் றன்னைக் கண்டு
மீயுயர் மகிழ்ச்சி பொங்க விருப்பொடு பணிந்தெழுந்து
பாயுயர் செம்பொற் கோயில் பகரருஞ் சிறப்பிற் செய்வார்.       (271)

3684. மன்னிய கோயி லாக்கி மறையவர் முதலோர் சூழ
வின்னிய முகிலி னேங்க வெண்ணிய காலந் தோறும்
பன்னிய பூசை யோங்கப் பண்புறச் செய்வித் தேத்தி
நன்னிய மத்து நீங்கார் நாடியங் கமரா நின்றார்.       (272)

துருக்கக் குருக்கண்மார்களின் அழுக்காறு.
3685. இன்னரிவ் வாறு மேவ வேற்றமிக் கவ்வூ ராளு
மன்னர் தம் பிரிய மேன்மேல் வளர்ந்தெழு வண்ணங் காணுஉ
வன்னர்தங் குருவா யுள்ளார் மடமையா லளவ ளாவு
முன்னர்நட் பொழிந்து தீரா மூண்டெழு மழுக்கா றுற்றார்.       (273)

3686. உறுமழுக் காறென் றோது மொருபெரும் பாவி யந்தோ
செறுதலி றிருவஞ் செற்றுத் தீயுழி யுய்க்கு மென்று
மறுவறு சான்றோர் சொற்ற வார்த்தையு முணரா ராகிக்
கறுவிறம் மரசர் தம்பாற் சென்றிது கழற லுற்றார்.       (274)

3687. மறந்தரு பகைவ ரெல்லா மலரடி வணங்கிப் போற்ற
வறந்தரு செங்கோ லோச்சு மண்ணலே தென்பா னின்று
முறந்தவிந் நகரம் புக்கீங் குன்னருள் பெற்றார் நூலிற்
சிறந்தவ ரெனினுங் கொண்ட தெய்வமாத் திரம்பொய் யென்றார்.       (275)

3688. குருக்களா ருரைத்த வார்த்தை கொற்றவர் செவியிற் கேளா
வுருக்கிள ரடிகே ணீங்க ளுரைத்தது தகுமோ வென்னத்
திருக்கியா முரைத்தே மல்லேஞ் சிறந்ததும் மவையிற் கூவிப்
பொருக்கெனச் சோதித் தப்பாற் புகலுவி ரெம்மையென்றார்.       (276)

3689. என்றலு மியல்பே யங்க ணெய்தின ராக வெங்கண்
மன்றலங் கடப்பந் தண்டார் வள்ளலார் திருமா ணாக்கர்
நன்றென வரசர் தாமு நகைமுக மலர்ந்து முன்போற்
கன்றலி லிருக்கை நல்கிச் செயத்தகு கடனுஞ் செய்து.       (277)

3690. எங்கடங் குருக்க ளாவா ரியம்புதல் கேண்மி னென்ன
வங்கவர் நீங்கள் கூறும் வார்த்தையை யறைமி னென்ன
வுங்கடந் தெய்வம் பொய்யே யுண்மையே லகங்கை தம்முள்
வெங்கன லிரும்பை யேந்திக் காட்டுமின் விளங்க வென்றார்.       (278)

3691. அவ்விய மனத்த ராகிக் குருக்களா ரறைந்த வார்த்தை
செவ்விய மனத்தார் கேட்டுச் செய்யவாய் முறுவல் பூத்து
நவ்வியங் கரத்து முக்க ணாயனா ருண்மை யிந்த
வெவ்விய மனத்தார் தேற விளக்குது மெனவுட் கொண்டு.       (279)

சபதஞ் செய்து மழு ஏந்தல்.
3692. வெருவுற விருப்புக் கட்டி வெந்தழற் புகுத்திக் காய்ச்சி
வருவியிங் கென்ன மன்னர் வயங்குகொல் லுலையி லிட்டுப்
பொருவருந் துருத்தி யூதி யிருந்தைபோ கட்டுக் காய்ந்த
வுருவமற் றதனை யங்கு வருவித்தா ருலக மஞ்ச.       (280)

3693. எதிர்வரக் கண்ட வேந்த ரிருவிழி வெதுப்ப முற்றார்
முதிர்சினக் குருக்க ளென்பார் முகம் பொதி யுரோம முற்று
மதிர்தரத் தீக்கு மென்றே யஞ்சின ரகன்றி ருந்தார்
சதிரறி யாமை தீர்த்தார் சாற்றுவா ரெழுந்து நின்றே.       (281) -

3694. புரையக லுயர்வு சால்வே தாகம் புராணங் கூறு
முரைபிர மாண மென்னி னுவமையில் சைவ மொன்றே
கரைதரு சமய மென்னிற் கருதுமச் சமயங் கூறு
நரைவிடை யுயர்த்த தேவே நாடரும் பிரம மென்னின்.       (282)

3695. ஈன்றிகொள் விபூதி யக்க நகுமணி யெழுத்தோ ரைந்துந்
துன்றிய வன்பிற் கோடல் சாதன மென்னிற் றோலா
வென்றிசெய் சரியை யாதி நான்குமே விளங்கா றென்னி
னொன்றியொன் றாம் லின்பத் துறுவதே முத்தி யென்னின்       (283)

3696. எண்ணிலா வுயிரீ டேற வெடுத்தருள் வேட மெங்க
ளண்ணலங் கைலை யாளி யடியவர் வேட மென்னிற்
கண்ணரு மனையார் பாதம் வழிபடு கடமை பூண்டோர்
மண்ணரும் பிறவிப் பௌவம் வறப்பது மெய்ம்மை யென்னின்.       (284)

3697. பதியெனுஞ் சிவனுக் கென்றும் பங்கய னெடுமால் வேந்தன்
மதிகதிர் வானோர் யாரும் வழிவழி யடிமை யென்னிற்
பொதிதரு கற்றோ யாடை புனைந்தயான் புனைந்து கூறும்
விதிவழு வாது நிற்கு மேதக வுடையே னென்னின்.       (285)

3698. யானுயர் திருச்செந் தூர்வா ழிறைவன்மா ணாக்க னென்னிற்
றானுயர் தரும் நாளுந் தழைத்திட லுண்மை யென்னி
னானுயர் கொடிப் பிரானா ராலயப் பொருளை நாளு
மீனுயர் கடல்வி டுத்த விடமெனக் குறித்தே னென்னின்.      (286)

3699. இதுசுடா திருக்க வென்றே யாவரு மறியக் கூறிச்
சதுமுக னெடுமா றேறாத் தனிப்பர சிவனே மெய்யென்
றதுகர மலரி லேந்தி யவையுளார் யாருங் காணக்
குதுகுதுப் பெய்தி நின்றார் குவலய முய்ய வந்தார்.       (287)

3700. ஆதனத் திருந்த வேந்த ரிழிந்தக நடுநடுங்கிக்
காதலிற் போற்றி யென்ன காரியஞ் செய்தோ மென்றார்
போதமிக் குடையோ ராகிப் புரிந்தவை யிருந்தார் யாரு
மேதகு சிவனே தெய்வம் வேறிலை யென்று தேர்ந்தார்.       (288)

3701, நீடிய பொறாமை யாலே நிறைபெருங் கலகஞ் செய்து
கூடிய குருக்கள் சென்னி குனிந்துமார் பழுந்தா நிற்கு
நாடிய முகரோ மத்தை நகங்களிற் கீறிக் கொண்டு
வாடிய மனத்த ராகி மாண்பொழிந் திருந்தா ரன்றே.       (289)

3702. எரிதழல் விழுங்கப் பட்ட விரும்பைக்கீ ழிடுக வென்று.
புரிமதி யரசர் வேண்டப் பூமியி லதைப்போ கட்டு
விரிதர வனையார் நல்கும் விருதுமுற் பலவும் பெற்றுப்
பரிதியின் விளக்க மிக்கார் பரவுதம் மடத்திற் புக்கார்.       (290)

3703. முன்னையிற் செல்வ நாற்றி முனிவற வரசர் நல்க
வென்னையிக் குருக்கள் செய்த சகாயமென் றுவகை யெய்தி
நன்னயத் தறங்கண் மேன்மே னானிலம் பரவ வாற்றி
யன்னையிற் பொலியு மெங்க ளையர்தா மிருந்தா ரன்றே.       (291)
முகாங்கிமடம்.
3704. மாதவத் துயர்ந்தா ராய வாகீச முனியை நோக்கிக்
காதல்செய் விபூதிக் கேற்ற கண்மணி விளையும் பூமி
மேதகக் கொளினன் றென்ன வவர்முக ரங்கி மேவி
யோதுமப் பூமி கைக்கொண் டுயர்மட மொன்று செய்தார்.       (292)

பாம்பரையோர்.
3705. அற்புதம் பயப்ப விவ்வா றமர்பவர் தமக்குப் பின்பு
சொற்பயி லறம்பா லிக்குந் தூயவர் யாவ ரென்று
கற்பனை கழன்ற தம்பாற் பணிபுரி காட்சி யாருட்
பொற்பமை சொக்க நாத முனிவரைப் புகன்று கொண்டே       (293)

3706. அன்னவர் தமக்குத் தீக்கை யாதிய வமையச் செய்தே
யுன்னருங் குமரப் புத்தே ளுண்மையுந் தெளியத் தேற்றிப்
பன்னருந் தம்போற் செய்து பாலிப்பா யறங்க ளென்று
நன்னலம் பயக்குஞ் சொக்க நாதரைக் கயற்க ணாளை.       (294)

3707. மேதகு திருச்செந் தூர்வாழ் வேலுடைக் கடவு ளாரை
யாதரம் பயப்ப நல்கி யமைதரப் பூசி யென்று
காதல்செ யிடபத் திங்கள் கருதிய கண்ண பக்கந்
தீதறப் பொலிந்து தோன்றுந் திரிதியைத் திதியின் மாதோ.       (295)

3708. அன்றொரு திருச்செந்தூரி லணிகெழு குமர னாகி
நன்றுவந் தருளிச் செய்த நாதரைத் தியானஞ் செய்தே
தொன்றுறு கலப்பிற் செம்பொற் றுணையடிக் கமல நீழ
லொன்றியொன் றாதுமேவி யுலப்பிலா னந்த முற்றார்.       (296)

3709. பின்னர்வண் சொக்க நாதர் பிறங்கறம் பெருகச் செய்து
பன்னெடு நாள்கள் வைகிப் பகரரு ணாசலப்பேர்
மன்னிய வடிக டம்பால் வயங்குதம் முரிமை நல்கி
நன்னர்செ யிடப் மாத நயந்தரு கண்ண பக்கம்.       (297)

3710. துவாதசித் திதியிற் செந்தூர்ச் சுப்பிர மணியர் பாதத்
தவாவறுத் தடைந்த தங்க ளாரியன் பாதத் துற்றார்
தவாவரு ணாசலப்பே ரடிகளுந் தருமம் யாவு
முவாவுற நடத்திப் பன்னா ளொழுக்கத்து வைகிப் பின்னர்.       (298)

3711. அம்பல வாண தேவர்க் கமைந்ததம் முரிமை நல்கி
நம்புறு மகர மாத நயந்தசுக் கிலபக் கத்திற்
பம்பிய திதிபன் னான்கிற் றங்குரு பாதஞ் சேர்ந்தா
ரிம்பரம் பலவா ணப்பே ரிறைவரும் பன்னாள் வைகி.       (299)

3712. அறத்தினை விருத்தி செய்தே யருட்சடை யப்ப தேவர்க்
குறத்தம துரிமை நல்கி யொளிகெழு கும்ப மாத
நிறத்தசுக் கிலபக் கத்தி னிகழ்திர யோத சிக்கண்
விறற்பெருங் குரவன் பாத மேவின ருவப்பு மேவ.       (300)

3713. சடையப்ப தேவ னாருந் தரைமிசைப் பன்னாள் வைகி
யடையப்போ ரறங்க ளெல்லா மமைதர விருத்தி செய்து
நடையுற்ற நலஞ்சா றில்லை நாயக மூர்த்தி யார்பான்
மிடையுற்ற வுரிமை நல்கி விளக்கஞ்சான் மேட மாதம்.       (301)

3714. பூரணைத் திதியி லாசான் பொன்னடிக் கமலஞ் சார்ந்தார்
நாரணை மனத்துத் தில்லை நாயக வடிக ளாரும்
பாரணை யறங்க ளோங்கப் பண்ணுபு காசி வைப்பிற்
சீரணை யொருவர் தம்மைக் காரியஞ் செய்ய வைத்து.      (302)

திருப்பனந்தாட்காசிமடம்.
3715. திரைமலி பொன்னி நாட்டுத் திருப்பனந் தாளின் மேவி
யுரைமலி மடமொன் றுண்டு பண்ணியவ் வூரின் மேய
வரைமலி சிலைகை யேந்தும் வன் சடை யப்பர் கோயிற்
புரைமலி பணிகள் பல்ல பொற்புற வியற்றிப் பின்னர்.       (303)

3716. தந்திரு மடத்து மேய தம்முடை யடியார்க் கெல்லா
நந்திய மகிழ்வி னூட்ட நன்னிலம் பலவுந் தேடி
முந்திய வாசா னாம முனிவருக் குரிமை நல்கி
யுந்திய மீனமாத முற்றிடு கண்ண பக்கம்.       (304 )

3717. நற்றிர யோத சிக்கணலமலி யாசான் பாதத்
துற்றினி தமர்ந்தார் பின்ன ரொருமுதற் குரவ னாமம்
பெற்றவர் பன்னாள் வைகிப் பெருகிய வறங்கண் முற்றுங்
கொற்றவர் மகிழ்ச்சி மேன் மேற் கொளக்குறை யறநடாத்தி       (305)

3718. சிதம்பர நாத தேவர் கொளத்திரு வுரிமை நல்கிக்
கதம்படு விருச்சி கப்பேர் கலந்திடு திங்க டன்னி
லிதம்படு கண்ண பக்கத் தேற்றசத் தமியி லாசான்
பதம்படு நீழ லுற்றுப் பரவுபே ரின்ப முற்றார்.       (306)

3719. அச்சிதம் பரநா தப்பே ரடிகளார் பன்னாள் வைகி
நச்சிய காசி யாதி யறமெலா நயக்க வோம்பி
மெச்சிய சடையப் பர்க்கு விரும்புதம் முரிமை நல்கி
யுச்சமார் கும்ப மாதத் துற்றசுக் கிலபக்கத்தில்.       (307)

3720. மருவிய தசமி தன்னிற் குரவர்த மலர்த்தா ளுற்றார்
தருவினுஞ் சிறந்த வண்கைச் சடையப்ப வடிக ளாரும்
பொருவில் பல் லறமும் பன்னாள் பொற்பொடு பொலிய வோம்பி
யருமையா முரிமைதன்னைக் கணபதி யடிகட் கீந்து,       (308 )

3721. மகரமா மதியிற் கண்ண பக்கத்து நவமி வாய்த்த
நிகரறு திதியி லாசா னின்மல பாத முற்றா
ரகமலர்ந் தறங்க ளோம் பிக் கணபதி யடிக ளாரு
மிகலறப் பன்னாள் வைகியிசைப்பல வீட்டிப் பின்னர்.       (309)

3722. முழுதுண ரிராம லிங்க மூர்த்திகட் குரிமை நல்கிப்
பழுதக லிடப மாதம் பரவிய கண்ண பக்கந்
தொழுதகு சிறப்பு வாய்ந்த துவாதசித் திதியிற் றிங்க
ளெழுதரும் புகழ்ப்பே ராசா னிணையடிக் கமல முற்றார்.       (310)

3723. முன்னிய விராம லிங்க மூர்த்திக டாமும் பன்னாண்
மன்னிய வறங்களோம்பி வளமலி யுரிமை யாரும்
பன்னிய சொக்கலிங்க வடிகட்குப் பரவ நல்கித்
துன்னிய மேட மாதஞ் சுக்கில பக்கந் தன்னில்,       (311)

3724. வருசதுர்த் தசியி லாசான் மரைமலர்ப் பாதஞ் சேர்ந்தார்
பெருகருட் சொக்க லிங்கப் பெயர்பெறு மூர்த்தி யாரு
மொருவறப் பன்னாள் வைகி யுற்றபல் லறமு மோம்பிக்
கருதரு முரிமை தன்னைக் கணபதி யடிகட் கீந்து.       (312)

3725. துகளறு கடக மாதஞ் சுக்கில பக்கந் தன்னி
லிகழ்விலே காத சிக்க ணெழிற்குரு பாதஞ் சேர்ந்தார்
புகழ்மிகு கணப திப்பேர் பூண்டபே ரடிக ளாரு
மகமகிழ் பன்னாள் வைகி யறங்கள்பற் பலவு மோம்பி.       (313)

3726. முழுப்புக ழிராம லிங்க மூர்த்தியார்க் குரிமை நல்கி
விழுப்பமார் துலாமா தத்தின் மேயசுக் கிலபக் கத்தி
லிழுக்கிலே காத சிக்க ணேற்றமார் ஞான மோன
வொழுக்கமார் குரவன் பாத முற்றினி திருந்தா ரன்றே.       (314)

3727. பூரிய ரென்றுஞ் சாராப் புகழ்மிகு செந்தூர் மேய
கூரிய வடிவேற் செங்கைக் குமரவே ளருளப் பெற்ற
வாரிய ராதி யாகக் கணபதி யடிக ளீறாச்
சீரிய வொருபான் மூவர் திறமிவை தெரித்தா மன்றே.       (315)

இந்நூலை ஆக்குவித்தவர் சிறப்பு.
3728. இவர்பெரும் புகழை யானோ வெடுத்துரை செய்ய வல்லேன்
குவலயத் தறிஞர் யாருங் கூறினு முடியா வாகுந்
தவலறச் சொல்லி முற்றாத் திறத்தினுந் தாழ்வொன் றில்லை
யவமகல் சேட னாலு மறைந்திட முற்றா தென்னின்.       (316)

3729. சதுமறை முடிவுந் தேறாத் தத்துவ முணர்ந்து ளீர்கா
விதுவரை யுரைத்த தோர்ந்தீ ரினிமகிழ் வாய்மை மேன்மை
பொதுவக மொழுக்க மாதி யாவுமோ ருருவாய்ப் போந்த
முதுமதி யிராம லிங்க மூர்த்தியார் சீர்த்தி சொல்வாம்.       (317)

3730. ஆரரு ளுமையாள் பாக னாலயப் பொருள்க டம்மு
ளோரணு வேனும் வெளவு மறக்கடை யோரைக் காணிற்
கார்கெழு நஞ்ச மென்றுங் கறுத்தெழு கூற்ற மென்றும்
போர்கெழு வடவை யென்றும் பொருக்கென வஞ்சு நீரார்.       (318)

3731. காணுதற் கெளியா ராயுங் கடுமொழி யடையா ராயும்
பேணுதற் குரிய வான வொழுக்கத்துட் பிறழா ராயும்
வாணுதற் கொடியோர் பாகர் பணிவயக் கிடுவா ராயும்
பூணுதற் கமைந்த தென்றும் பொறையெனப் பொலியு நீரார்.       (319)

3732. திருவளர் திருவாப் பாடிச் சிவபிரா னமருங் கோயி
லுருவளர் தரப்பு துக்கி யுறுவிழா வாதி யோம்பிக்
குருவளர் மணிப்பூ ணாடை குடை கொடி யாதி யாவுந்
தருவளர் கொடையு நாணக் கொடுத்துளந் தழைக்கு நீரார்.       (320)

3733. தம்முதற் குறவற் கன்று தவாவருட் குரவ னாய
மும்முதற் கடவு ளார்க்கு முதலவன் றிருச்செந்தூரில்
விம்முறப் பூசை யாதி விருப்பொடு நடக்கு மாறு
செம்முதற் பொருணி ரப்பிக் கட்டளை செய்து வைத்தார்.       (321)

3734. தில்லைமா நகரந் தெய்வச் சேய்ஞலூர் திருப்பனந்தா
டொல்லைமா வினைக ணீக்கிச் சுடர்திரி லோக்கி நாளும்
வில்லைவீ சுயர்பொன் மாட மிளிர்திரு வாலவாய்மு
னெல்லையி றலங்க டோறுங் கட்டளை யியங்கச் செய்தார்.       (322)

3735. சீலமார் பெருமான் மேய சிலசில தலங்க டம்மின்
ஞாலமார் கிலமின் றென்னப் பணிபல நகந டாத்திக்
காலமார் பூசை யாதிக் கட்டளை நியம மேவக்
கோலமார்ந் திலங்கு செம்பொற் கும்பாபி டேகஞ் செய்தார்.       (323)

3736. தருப்பல செறியுங் கோயிற் றாடகை யீச்சு ரஞ்சார்
திருப்பனந் தாளின் முன்னாந் திருமடம் புதிய தாகப்
பொருப்புக்கள் பிளந்தெடுத்துக் கொடுவந்து பொருள்கள் வீசித்
திருப்புகழ் மேன்மே லோங்கச் செய்தனர் வலிய தாயே.       (324)

3737. அவனியிற் றங்கி ராம மாகிய பலவற் றுள்ளு
முவமையில் கருங்கல் செங்க லெனப்படு முவைகள் கொண்டே
தவலறும் பூசை யாற்றத் தகுமிட மட்டி னாளு
மிவர்புனற் கூவலோடு மடம்பல வியற்றி னாரே.       (325)

3738. வடமொழி பயின்று ளார்க்குந் தென்மொழி வளங்கற்றார்க்கு
மிடவிய வில்லம் பற்பல் பொலிவொடு மியற்றி நல்கிப்
படர்சுவைப் பாலூ ணாடை முதற்பல வளமு நல்கி
மடனறக் காணுந் தோறும் வரிசையி னுவப்புச் செய்வார்.       (326)

3739. இன்றுப நயனஞ் செய்ய வேண்டுமென் றியம்பு வார்க்கு
மின்றுகல் யாணஞ் செய்ய வேண்டுமென் றியம்பு வார்க்கு
மின்றுசோ பனமி யற்ற வேண்டுமென் றியம்பு வார்க்கு
மின்றுசீ மந்தஞ் செய்ய வேண்டுமென் றியம்பு வார்க்கும்.       (327)

3740. இன்றுபுத் திரன்பி றந்தா னென்றுவந் தியம்பு வார்க்கு
மின்றுநாஞ் சிராத்தஞ் செய்ய வேண்டுமென் றியம்பு வார்க்கு
மின்றுசெல் கின்றோந் தீர்த்த யாத்திரைக் கெனச்சொல் வார்க்கு
மின்றுநம் மிடத்தென் னார்பொன் னெண்ணில வுதவு நீரார்.       (328)

3741. தென்மொழி வல்ல ராய சீரியர்க் குறுபொன் வீசிப்
பன்மொழி களிலு முள்ள பரம்பரன் சரித மெல்லா
நன்மொழிச் செய்யு ளாகச் செய்து நல் குகவென் றோதி
மென்மொழி முகமன் கூறி யாக்குவர் மேன்மே லம்மா.       (329)

3742. ஆகம புராண மெல்லாம் பழையன வாகக் காணிற்
போகுயர் பனையிற் கொண்ட செழுமடற் புத்த கத்தி
லோகையி னெழுது வோரைக் கொண்டுற வெழுது வித்துச்
சேகறு கருமை யூட்டிப் பாசமுஞ் செறித்துச் சேர்ப்பார்.       (330)

3743. காசியே முதலி ராமேச் சுரங்கரை யிறுதியாக
மாசிலாத் தரும நாளும் வளர்த்திடு மதனுக் கேற்பப்
பேசிய பொதுப்பே ரானும் பெருஞ்சிறப் புப்பே ரானும்
வீசிநீ ருலகந் தேற விளக்குவார் விளக்க மிக்கார்.       (331)

3744. பொருந்திய திருப்பனந்தாட் பொலிதிரு மடத்தி னுள்ளாத்
திருந்திய வாதி யாசான் றிருவுருப் பதிட்டை செய்து
பரிந்தபி டேகந் தூய நிவேதனம் பகரு மற்றை
விரிந்தபல் லுபசா ரங்கண்டத்திடு மேன்மை மிக்கார்.       (332)

3745. விடலரும் வேதி கட்டி மிக்கெருப் பெய்து நாளுங்
கெடலருங் கொடிவி ருக்க மாதிய கெழும வாக்கி
யுடலருங் களையுங் கட்டே யொண்புனல் வழியப் பாய்த்திப்
படலரு நந்த னங்கள் பலபணி விடைக்காச் செய்தார்.       (333)

3746. சலிப்பற விடத்தை யோம்பித் தமக்குப்பின் றாங்கா நிற்கு
மொலிப்புகழ்க் கருவி யாய துண்மையி னுணர்ந்து தேடி
வலித்ததென் மொழியி னோடு வடமொழி யுறக்கற் பித்துக்
கலித்தநல் லொழுக்கம் யாவுங் கற்பித்துச் சிறப்புச் செய்வார்       (334)

3747. அடிமணல் பரப்பி மண்ணா லமைகல மதன்மேல் வைத்துக்
கடிபடு நறும்பூ விட்டுக் கமழ்செயச் சுத்த நீரும்
படியினீர் மோரு மற்றும் பரப்பிய தண்ணீர்ப் பந்தர்
குடிகொள் மார்க்கந் தோறுங் கோடைவைத் துவக்கு நீரார்       (335)

3748. கருங்கடல் குடிக்குங் கொண்மூக் கற்பகங் காமதேனு,
விருங்குணப் பதுமஞ் சங்க மெனப்பொலி நிதியி ரண்டு,
சுருங்குத லில்லா மேன்மை தொகுசிந்தா மணியிவ் வெல்லா,
மொருங்குசேர்ந் துருக்கொண் டென்னப் பொலிகொடை யுடைச்செங் கையார்.       (336)

3749. அகலிடத் தனைத்துஞ் சங்கை யறவறி பவர்தா மேனு
மிகலருந் தமது செல்வ மிவ்வள வெனத்தே ராமை
புகலரு முன்பெற் றோர்பின் புகினுமங் கறித ராமை
பகலரு மிவ்வி ரண்டு நீங்குறாப் பண்பு மிக்கார்.       (337)

வேறு.
3750. பூமேவு திருச்செந்தூ ராறுமுகப் பெருமானார் பொற்றாள் வாழ்க
தேமேவு மவரருள்சார் குமரகுரு பரமுனிவர் சீர்த்தி வாழ்க
மாமேவு மவர்மரபிற் பதின்மூவர் புகழுமப்பால் வந்தோ ராகித்
தாமேவு மிராமலிங்க வடிகளும் பின் வருவோருந் தழைத்து வாழ்க.       (338)

குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம் முற்றிற்று.
---------------

Comments