Pirapantattiraṭṭu XXVII


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXVII
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" : பகுதி 27 (2027 - 2128)
திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி



காப்பு.
விநாயகர் துதி.


2027 - ஒருமான்கரத்துத்தரித்தபிராயனோடுநிறங்
கருமான்முதற்சுரர்யாருங்கொண்டாடுங்கதலிவனப்
பெருமானந்தாதியுரைக்கமுக்கட்டுப்பெருகிமதம்
வருமானற்றோட்டகிப்பூட்டிருதாட்டென்வயினுளதே. - 0

நூல்.
2028 - திருத்தாமரையிலனஞ்சேர்பைஞ்ஞீலிசிறக்கவளர்
கருத்தாமரையமர்கையாமுகில்கடுக்குங்குழலின்
மருத்தாமரையமிடவேற்றவாவினைவாட்டுதலி
னுருத்தாமரைபடுவேனையின்றாளவுரைத்தருளே. - 1



2029 - அருந்தவரும்பர்குழாம்புடைசூழவரம்பைவனத்
திருந்தவரும்பலுரித்தார்புரத்திடைநாணுமடும்
பெருந்தவரும்பணிவெற்பாக்கொண்டார்பிறங்கும்புயத்திற்
பொருந்தவரும்பணிபூண்டாரின்றென்னைப்புரப்பவரே. - 2



2030 - புரங்காவலரைமுன்செற்றாய்வெண்மேனிபொருந்தும்விடைத்
துரங்காவலர்கொன்றைத்தாராய்பைஞ்ஞீலியெந்தோன்றன்மன
மிரங்காவலநினக்கின்றாதலினின்றெடுத்தவுட
றிரங்காவலமருமுன்னெனையாண்டருள்செய்குவையே. - 3



2031 - . செய்யுந்தரம்பைக்கவானுமைக்கண்ணுஞ்செந்தாமரைப்பூங்
கையுந்தரளநகையுமெய்யாகக்கழறும்வெறும்
பொய்யுந்தரங்கொடனமுமுள்ளாரைப்புரிந்துலைவே
னுய்யுந்தரமுமுளதோபைஞ்ஞீலியென்னுத்தமனே. - 4



2032 - உத்தமனேயென்றும்பைஞ்ஞீலியாயென்றுமொண்கனல்சே
ரத்தமனேயென்றும்வாழ்த்தறியேனையின்றாண்டருள்வாய்
நித்தமனேயப்பனேயென்றலறுவர்நெஞ்சுறுவாய்
முத்தமனேகம்பொலிமுலைபாகவென்முன்னவனே. - 5



2033 - முன்னந்தவம்புரிந்தேனலனின்பதமுன்னுவதற்
க‌ன்னந்தவம்பொலிநெஞ்சேனையோவினியாழ்வினைக‌
டுன்னந்தவம்புக்கிடனாய்விடாதெனைத்தொண்டுகொள்வாய்
வ‌ன்னந்தவம்பிற்பயிலுங்கதலிவனத்தவனே. - 6



2034 - . வனக்காரிகையர்கணேற்றாற்குநீலிவனத்தவற்கு
மினக்காரிகைப்பில்பணியணிந்தாற்குவிளம்பிழைகொ
ட‌னக்காரிகைவளைசோர்ந்ததெல்லாமுபசாரஞ்சொல்ல‌
நினக்காரிகைக்குஞ்சுகப்பரிமாரனெருங்குமுன்னே. - 7



2035 - நெருங்குந்தனத்தியொருபாகனாரநிறைபழன‌
ம‌ருங்குந்தனத்திரள்சூழுங்கதலிவனத்துறைவோன்
பெருங்குந்தனத்திமுகனத்தன்மேற்சொலப்பெற்ற‌னன்யான்
சுருங்குந்தனத்தினரைப்புகழ்ந்தேகவிசொல்லலற்றே. - 8



2036 - சொல்லற்கரியயனாலுமொண்ணாப்புகழ்தொன்மையனே
ம‌ல்லற்கரியதள்போர்த்தாய்கதலிவனத்தையனே
வெல்லற்கரியதென்றாலுநின்றாளைவிரும்புமென‌
த‌ல்லற்கரியவருள்செயின்யானினக்கானவனே. - 9



2037 - . ஆனக்கரவம்பரிகலன்கச்சையென்றாதரித்தோய்
வானக்கரவஞ்செலவேதம்வாழ்த்தும்பைஞ்ஞீலிமன்னா
தானக்கரவல்விலங்குரியாய்வினையைத்தவிரா
யானக்கரவகன்றெஞ்ஞான்றுனைவந்தடைகுவதே. - 10



2038 - அடைந்தேனின்றாள்கதியென்றினிமேனினக்காளலன்போ
லுடைந்தெனின்றாலதுநன்றேவினைப்பட்டுழலுமென்முன்
மிடைந்தேனின்றாவென்றதென்றருணீலிவனமெய்யதேன்
குடைந்தேனின்றாதளைந்துண்டேனென்றாடிடுங்கொன்றையனே. - 11



2039 - கொன்றைக்க‌னியனகூந்தன்மின்னார்கள்குலமடங்க‌
வென்றைக்க‌னியமெனத்தள்ளியேநினக்கின்புறுவே
ன‌‌ன்றைக்க‌னியநன்மாச்சேர்பைஞ்ஞீலியையாவென்மனக்
குன்றைக்க‌னியவைத்துன்னடியாரொடுங்கூட்டுவையே. - 12



2040 - கூட்டப்படைகொள்புரத்தைவென்றாய்நறுங்கொன்றையனே
வேட்டப்படையுஞ்சடையாய்பைஞ்ஞீலிவிமலமின்னார்
நாட்டப்படைதெறவெம்பிநின்றாள்கணண்ணாமலெனை
வீட்டப்படைத்தவிதியார்பொருளிலென்வெஃகினனே. - 13



2041 - இனகரமைந்தர்மடவாரென்றெண்ணியிடைந்தவிவீர்
கனகரமேன்மழுவுள்ளார்கதலிவனத்தமரு
மனகரமாரனைசெற்றாரெனைத்தடுத்தாண்டவையர்
சினகரமேவித்தொழுவீர்விடுமுங்கள்சென்மங்களே. - 14



2042 - மங்காதசெல்வம்பெருகுங்கதலிவனத்தனைவான
றங்காதவன்பற்புடைத்தவெம்மானைச்சலந்தரனென்
வெங்காதகனைத்தடிந்தானையோதவிரும்பிலர்துன்
பங்காதவந்தகற்காளாய்நரகிற்படுபவரே. - 15



2043 - படந்தாங்குவெம்பணிப்பூணாய்பைஞ்ஞீலியப்பாவரிமண்
ணிடந்தாங்குநேடவெட்டாதநின்பாதத்திறைஞ்சியன்பாய்
கிடந்தாங்குநாட்டமற்றின்றிக்கதறிக்கிடந்துவினைக்
கடந்தாங்குநீரெனக்கண்ணீர்பெய்யேற்கென்கதியுளதே. - 16



2044 - கதிக்குந்தங்கைக்கொடுலகாண்டுமாற்றலர்கண்பிதுங்க
மிதிக்குந்தடக்கரிமேல்வரும்வேந்தர்பொய்வாழ்வைமெய்யா
மதிக்குந்தரத்தவரென்னாவர்நீலிவனத்தையனே
கொதிக்குந்தழற்கட்பிரானேயெனைப்பணிகொண்டவனே. - 17



2045 - கொண்டற்புரையுங்கருங்குழல்வெண்ணகைக்கோதையரைக்
கண்டற்புறுமனமேகனறூங்குகண்காட்டியன்பு
விண்டற்புடைக்குநிறத்தான்வரினென்விளம்புவையின்
றண்டற்புதனையெம்பைஞ்ஞீலிமேவியவத்தனையே. - 18



2046 - அத்தனைவாம்பரியேற்றனைநீலிவனத்தமர்ந்த
நித்தனைவாவென்றென்குற்றேவலுங்கொணிருமலனைக்
கத்தனைவாய்மனமெய்யாற்றொழார்முற்கருமங்கணூ
லெத்தனைவாசித்திருக்கினுநீங்குவதேதவர்க்கே. - 19



2047 - ஏதென்பணிகொண்டருள்வதின்றோவிரங்காமனமோ
வோதென்பணியதுனக்கியான் மந்தாகினியுற்றசடை
மீதென்பணிந்தவெம்பைஞ்ஞீலியைநல்வெற்பரையன்
மாதென்பணியைமொழியொருபாகமறைமுதலே. - 20



2048 - முதலிவனத்துச்சடையானெனமுன்னலின்றியைம்பா
லதலிவனத்துக்களந்தனங்களுஞ்சவரும்பெனவே
நுதலிவனத்துமடவார்பின்சென்றுறுநோயகலக்
கதலிவனத்துப்பெருமான்றிருவடிகண்டனனே. - 21



2049 - கண்டலப்போதைமுடிக்கணியாதமுக்கட்பரற்கு
வண்டலப்போதைமலியுங்கதலிவனத்தவற்கு
விண்டலப்போதைநகையுடைத்தாற்குவிருப்பிலைநீ
தொண்டலப்போதையலார்பாலுயிர்த்துணைசூழ்ந்துநெஞ்சே. - 22



2050 - நெஞ்சத்திருக்குமடவார்மயக்கமுநீங்குதல்செய்
தஞ்சத்திருக்குமரன்றாதையைவெள்ளனப்பெடைகள்
கஞ்சத்திருக்குமெம்பைஞ்ஞீலிநாதனைக்கண்டுதொழா
வஞ்சத்திருக்கும்விடுமோபிறப்புமரணமுமே. - 23



2051 - மரணங்கடந்துய்யலாகுங்கண்டீர்முன்வருங்கரியை
முரணங்கடங்கவுரித்தார்பைஞ்ஞீலிமுதல்வரொன்னா
ரரணங்கடங்கலிலாதெரித்தாரெனையாண்டவர்பொற்
சரணங்கடந்திடத்தொண்டாகிவாழுந்தரத்தருக்கே. - 24



2052 - தரங்கந்தரும்பிறவிக்கடன்மூழ்கித்தளர்ந்துமனக்
குரங்கந்தமாதரைப்பற்றநிற்பேன்முன்கொடியகடாத்
துரங்கந்தறுகட்சமனேறிவேகத்திற்றோன்றுவனீ
யிரங்கந்தநாளினிற்பைஞ்ஞீலிமேவியிருப்பவனே. - 25



2053 - இருந்தனமீதெனவீட்டிமின்னார்களியம்புமொழி
மருந்தனமென்னடையென்றுழல்வீர்நமன்வந்துவிட்டான்
முருந்தனவெண்ணகைபங்கனைநீலிவதனமுதலைப்
பொருந்தனன்னெஞ்சமுறுமோவுறுதல்பொல்லாத்தரமே. - 26



2054 - தரத்தருக்கன்றனகர்சூழ்தரவச்சந்தந்தபத்துச்
சிரத்தருக்கன்வலிதேய்த்தார்க்கரம்பைசெறியுஞ்சிவ
புரத்தருக்கன்மலிகண்டர்க்குத்தொண்டர்புகழவருள்
வரத்தருக்கன்புடையேற்கேதிருவினைவாட்டுதலே. - 27



2055 - வாடாதிசைமலர்க்கண்மடவார்வலைப்பட்டுழன்று
நீடாதிசைவநெறிச்செல்கிலாதுநினதடிக
டேடாதிசைபகராதிருந்தாலுமென்றீமைகெடத்
தாடாதிசைதொழும்பைஞ்ஞீலிமேவியசங்கரனே. - 28



2056 - சங்கரனேசம்புவேயிறையேபொற்றனவமலை
பங்கரனேயெனப்பாடாவெனக்கருள்பாதமணிப்
பொங்கரனேசத்தணிந்தவனேமுக்கட்புண்ணியனே
செங்கரனேதிருப்பைஞ்ஞீலிமேவுஞ்சினகரனே. - 29



2057 - சினனாதனையில்வழியேசெலுஞ்சிறியேன்சிறிது
மனனாதனைச்சுத்தஞ்செய்யேன்பொல்லாமடவார்மயலா
மினனாதனைவிலனானாலுமோங்குமிருங்கதலி
வனனாதனைத்தொழுவேற்கில்லையோசிவமாநகரே. - 30



2058 - மானாடும்வாசவன்வானாடுமற்றயனாடுமினி
யானாடும்வண்ணமிலையேனென்றாலருளெம்பெருமான்
றேனாடும்பொங்கர்மலியும்பைஞ்ஞீலிச்சிவனுமையாள்
கோனாடுமஞ்ஞையுமூர்ந்தானுக்கத்தன்கொடுத்தனனே. - 31



2059 - கொடுக்குந்தருநன்னிழலிருந்தேயிகல்கொண்டடல்வே
லெடுக்குந்தருக்கர்குறும்போட்டிவாழ்தலுமெண்ணுகிலேன்
முடுக்குந்தருமன்சினந்தெதிராமுனையக்கரங்கா
னடுக்குந்தருணத்தில்வந்தாள்பைஞ்ஞீலியென்னாயகனே. - 32



2060 - அகத்தாசையற்றிலனின்னடியார்க்கன்பனாகிலனிச்
சகத்தாசையெங்குந்திரிந்துழன்றேசலித்தேனதனா
லுகத்தாசைநீக்கியெனையாளவேண்டினனுன்னையைந்து
முகத்தாசையிலச்சிலையாய்பைஞ்ஞீலியின்முக்கண்ணனே. - 33



2061 - கண்ணுதலிக்குப்பணைசேர்பைஞ்ஞீலிக்கடவுண்மலைப்
பெண்ணுதலிக்குறிக்கும்பாகமீந்தபெருமநினை
யெண்ணுதலிக்குமற்றங்கேனெனலன்றியேங்கிடுமென்
னொண்ணுதலிக்குமனமிரங்காததென்னுத்தமனே. - 34



2062 - உத்தமனத்தனமலைபங்காளனொளிர்சடையா
னித்தமனத்தன்முகிலூர்புரந்தரனேமியொடு
சுத்தமனத்தன்பணியும்பைஞ்ஞீலியெஞ்சுந்தரனிம்
மத்தமனத்தன்மட்னென்றெண்ணாதென்னுள்வந்தனனே. - 35



2063 - வந்தானைசீறிப்பொரும்போதுதுரித்ததன்மாவதளை
நந்தானையென்றரைமீதுடுத்தானைநஞ்சுண்டவனைப்
பந்தானைகொங்கைவயினுமைபாகனைப்பங்கயனைத்
தந்தானையம்பனைப்பைஞ்ஞீலியானைச்சரண்புகுமே. - 36



2064 - சரமாரனைச்செற்றவனைப்பைஞ்ஞீலிச்சயம்புவைமுப்
புரமாரனைவின்றியுண்ணக்கண்டானைப்பொருவில்பல
சிரமாரனைத்தொழுதேத்தீர்நுஞ்சென்மங்கடீர்வதற்கா
தரமாரனையர்கருப்பாழ்படாதங்கடுப்பவரே. - 37



2065 - அடுவாரணவுரிபோர்த்தபிரானையணிகளத்திற்
கடுவாரணலையெம்பைஞ்ஞீலியானைக்கனதனத்திற்
றொடுவாரணங்கொருபாகனையேத்தித்தொழார்களெல்லாம்
படுவாரணங்கிலெனமறைநான்கும்பகர்தருமே. - 38



2066 - தருமந்தகவின்றியேமடமாதர்தருமயல்பட்
டருமந்தகல்வியிழப்பீர்பைஞ்ஞீலியனைப்பணியீர்
தெருமந்தகன்றுதிரிந்தால்வெம்போத்தைச்செலுத்தியெதிர்
வருமந்தகன்விடமாட்டானெங்கோடிமறையினுமே. - 39



2067 - மறைவாயவர்புகழ்ந்தேத்துங்கதலிவனத்தினமர்ந்
துறைவாயன்றாழிமதித்திடுங்காலத்துதித்தவிடக்
கறைவாய்மணிமிடற்றெம்மையனேநினைக்காண்டலின்றித்
தறைவாயடியன்வருநதுவனோவினித்தாங்கிக்கொள்ளே. - 40



2068 - தாங்கரும்பாரமெனயான்பெறும்வினைதன்னொடென்று
போங்கரும்பாரமயக்கமெல்லாமுக்கட்புண்ணியனே
கோங்கரும்பாரமுலைபங்கனேகுற்றமற்றவனே
தீங்கரும்பாரஞ்செறியும்பைஞ்ஞீலிச்சிவபரனே. - 41



2069 - சிவசம்புசங்கரநின்மலதீஞ்செங்கழைகட்குமீ
துவசம்புமஞ்சளுமோங்கும்பைஞ்ஞீலியுறைபவபொற்
கவசம்புயங்கத்தநின்மேற்கவிபகரத்தலைவி
திவசம்புன்மைச்சிறியேனுக்குண்டாயதுன்செவ்வருளே. - 42



2070 - அரும்பன்னமென்முலைமேற்சாந்திடாவெனதாசைமுற்றும்
விரும்பன்னமேதுருப்பைஞ்ஞீலிமேவும்விமலற்கெதிர்
பொரும்பன்னகப்புலித்தோலணிந்தாற்குப்புகைந்துழலா
வரும்பன்னகப்பணியாற்கோதியிங்குவரச்சொல்வையே. - 43



2071 - வரந்தந்துதொண்டனையாளுங்கதலிவனத்தானை
நரந்தந்துதைகொன்றைத்தாரனைவாழ்த்தியெஞ்ஞான்றுமிரு
கரந்தந்துயர்கெடச்சென்னிவையார்கள்கணக்கில்பல்லா
யிரந்தந்துகற்றிருந்தாலும்விடாவினையீட்டங்களே. - 44



2072 - ஈட்டமரப்பனையேட்டைவிடாதெடுத்தேயெழுதும்
பாட்டமரப்பனையார்மீதன்பாகப்பகர்ந்தென்பெற்றீர்
வாட்டமரப்பனைவிக்குநஞ்சுண்டவனைக்கதலிக்
காட்டமரப்பனைப்பாடாதுழலுங்கவிஞர்களே. - 45



2073 - கவிக்குமகுடம்புனைந்துசெங்கோலொன்றுகையிற்கொண்டு
புவிக்குமனாகவிருக்கினும்வானம்புரக்கினுமெ
னவிக்குமகிழுஞ்சுரர்சூழரம்பைவனத்தனைக்கை
குவிக்குமனத்தன்புகொண்டிலராயிற்குறித்திடினே. - 46



2074 - குறித்தேனினியபைஞ்ஞீலியென்பார்முன்னுங்குற்றமற
முறித்தேனினித்திலப்பல்லார்மயலென்பர்முன்னுநிற்பாய்
வெறித்தேனினின்னருளாலடியேன்வினைவேரொடுங்கப்
பறித்தேனினியந்தகற்கொருநாளும்பயமிலையே. - 47



2075 - இலையம்புயனெடுமாற்குமெட்டாதபைஞ்ஞீலியெம்மான்
றலையம்புயங்கமணிந்தோனைப்பாடித்தழைமினிப
மலையம்புயர்கழையான்செயும்போரினறிவழிந்து
மலையம்புயவெனமூடரைப்பாடிவருந்துவிரே. - 48



2076 - வருந்தத்தைகாள்கைவளைசோர்ந்தனையர்மனம்வெறுக்க
விருந்தத்தையின்றறியீரோபைஞ்ஞீலியிறையவற்குப்
பொருந்தத்தையற்கொருபாகந்தந்தாற்கின்றுபோயெனது
பெருந்தத்தையோதிவருவீர்மதியம்பிறக்குமுன்னே. - 49



2077 - முன்னும்படியறிவில்லாதவென்முழுமூடநெஞ்சை
மின்னும்படிகமெனவாக்கிவெவ்வினைவேரறுத்தான்
மன்னும்படியெங்குங்கொண்டாடவாணிமலர்மகளுந்
துன்னும்படிக்குளப்பைஞ்ஞீலிமேவியசுந்தரனே. - 50



2078 - சுந்தரத்தார்நின்பதத்தணிந்தாடித்துதித்துவிடக்
கந்தரத்தாவெனப்போற்றறியேற்குன்கழறருவாய்
குந்தரத்தாவெங்கொடுங்காலற்செற்றகுரைகழலா
யந்தரத்தார்தொழும்பைஞ்ஞீலிமேவியமரத்தனே. - 51



2079 - அத்தத்திலங்குசபாசமுள்ளாற்கத்தனைவினையேன்
சித்தத்திலங்கும்பரனைப்பைஞ்ஞீலியிற்சென்றுதொழார்
கத்தத்திலங்குழைப்பார்போல்யமன்கசக்கத்திரிபட்
டுத்தத்திலங்குமழிந்திங்குந்தோன்றியுலைபவரே. - 52



2080 - உலகஞ்சவெம்மைகொண்டோங்குஞ்சமனையுதைத்தவனே
பலகஞ்சமீதுபொற்றூவிசெங்கால்பசுஞ்சூட்டுடனே
யிலகஞ்சமேவும்பைஞ்ஞீலியசற்றுமிரக்கமிலேன்
கலகஞ்சங்கேந்தியுங்காணாநின்றாள்கொளக்கண்டனனே. - 53



2081 - கண்டனஞ்சத்திவரைகடுப்பாள்பங்கனேகொதிப்புக்
கொண்டனஞ்சத்திறல்குன்றவுண்டாய்குளத்தாமரையில்
வண்டனஞ்சத்திக்கும்பைஞ்ஞீலிநாதமனமயங்கு
தொண்டனஞ்சத்தினம்வாட்டிடுமோவினைத்தொல்லைகளே. - 54



2082 - தொல்லையிலாயவினையாற்சுழன்றடைந்தேன்மனத்தை
யொல்லையிலாக்குடிகொள்வாய்பைஞ்ஞீலியென்னுத்தமனே
வெல்லையிலாதரன்றந்தாய்பொற்கோபுரமேவுதிருத்
தில்லையிலாடியதாளாய்த்தீவினைதீர்வதற்கே. - 55



2083 - தீராக்கவலையுடையேனையன்பரிற்சேர்த்தருளிச்
சீராக்கவலைப்புனல்வாவி்யிலுகள்சேலைக்கண்டு
சாராக்கவலைச்சிரல்கொள்பைஞ்ஞீலித்தலைவகைக்குப்
பேராக்கவலையொப்பாமென்னகந்தையைப்பேர்த்தருளே. - 56



2084 - பேரரம்பைக்குலமோங்கும்பைஞ்ஞீலியர்பெய்மதுவார்த்
தாரரம்பைச்சடைவைத்தவர்முப்புரந்தம்மைவென்ற
வீரரம்பைப்பணிபூண்டவர்மேவமிரும்பியவென்
னோரரம்பைக்கனையாளையின்றாளவந்துற்றிலரே. - 57



2085 - உற்றவர்தொண்டர்வினைவேரறுப்பதற்கும்பருட
னற்றவர்சூழ்திருப்பைஞ்ஞீலிமேவியநாயகர்பொற்
கற்றவர்கொண்டருள்புண்ணியர்தாளையென்கன்னெஞ்சமே
பற்றவரன்றிமற்றாரேகொடுப்பர்பரகதியே. - 58



2086 - பரமனையன்புசெறிநெஞ்சியற்பகையார்க்குமுத்தி
தரமனையிற்சென்றவனையெம்மானைத்தழங்குகனற்
கரமனையோங்குங்கதலிவனத்துமுக்கண்ணனைநல்
வரமனைவர்க்கும்கொடுப்பானைவாழ்த்திவரங்கொணெஞ்சே. - 59



2087 - வருந்தாரெனமகிழ்ந்தேனிற்றைஞான்றுவரையுஞ்சும்மா
விருந்தாரனுப்புதலின்றிவண்டீரின்றுபோய்ச்சொலுங்கோள்
பெருந்தாரணிபுகழ்ந்தேத்தும்பைஞ்ஞீலிப்பெம்மானுக்குத்தேன்
றிருந்தார்முடியுடையாருக்குத்தேவர்தந்தேவருக்கே. - 60



2088 - தேவிக்குருவம்பகிர்ந்தார்பைஞ்ஞீலிச்சிவபுரர்க்குப்
பாவிக்குருகுமனமிலராயபரமருக்குத்
தூவிக்குருமணிநந்தினஞ்சிந்துந்துறைமலியும்
வாவிக்குருகினங்காள்சொல்லுவீரென்றன்மையலையே. - 61



2089 - மையற்கடாக்களிறல்லாநடத்திவருமதனப்
பையற்கடாததென்செய்தேனெஞ்ஞான்றும்பகைத்துவெங்கோன்
மொய்யற்கடாவினனாகப்பைஞ்ஞீலிமுழுமுதலென்
னையற்கடானையுரித்தாற்குறுமையலாயினனே. - 62



2090 - ஆயனையம்பனுமையொருபாகனரம்பைவனத்
தூயனையம்பன்மினாரிடத்தேற்றவன்றூத்திரையான்
சேயனையம்பகத்தாலெரித்தானைச்சிலகவிதந்
தாயனையம்பதவென்றோதிடவென்றளர்விலையே. - 63



2091 - இல்லாதவாதனையீராகவையனிரும்புகழைக்
கல்லாதவாவுற்றுழல்வீர்கதலிவனத்தமர்ந்தோன்
பல்லாதவாவற்றினையோவென்றியாரும்பகரச்செய்தோ
னல்லாதவானவனுண்டோநுந்தீமையறுப்பதற்கே. - 64



2092 - அறுகாரணிசடையாற்குயரோங்கலரையனன்பாய்ப்
பெறுகாரணியொருபாகற்குத்தேவர்பிராற்கிலங்கு
மருகாரணிதிருப்பைஞ்ஞீலியாற்கென்வருத்தஞ்சொல்லி
யுறுகாரணியலகொணர்ந்தாலென்னாங்கொலிவ்வொண்மதியே. - 65



2093 - மதித்தலையாழிகடைவேலைவந்தநஞ்சுண்டவனே
விதித்தலையார்கரத்தோனேபைஞ்ஞீலியெம்வித்தகனே
துதித்தலையான்செய்திலனேனுமின்னந்தொடர்ந்தனைபா
லுதித்தலையாமலெனையாளநீயென்றுடம்படலே. - 66



2094 - படப்பணிபூண்டபுயத்தபைஞ்ஞீலிப்பரம்பரபூங்
கடப்பணிவேளத்தசெங்கையின்வண்டுகழலமுத்து
வடப்பணிசிந்திமலர்ப்பாயனீத்துமருவவெண்ணி
நடப்பணிற்பாடிகைப்பாளுயிர்ப்பாளெங்கணன்னுதலே - 67



2095 - நன்னத்தனேடும்பொற்பாதத்தனேநல்லரம்பைவன
மன்னத்தனேரில்லாபைஞ்ஞீலியனேமருவாரைவெல்வேன்
மின்னத்தனேகமருப்பன்விரும்பும்விருப்பத்தனே
யென்னத்தனேநினையல்லான்மற்றியாரையுமெண்ணலனே. - 68



2096 - எண்ணாதவனன்பொடுநின்பதத்தையென்றாலுமெனை
யுண்ணாதவன்னஞ்சமுண்டதுபோலவுவந்தருள்வாய்
விண்ணாதவன்கதிர்தோற்றாவரம்பைவியன்வனமுக்
கண்ணாதவனன்குடையார்மனத்துறைகாரணனே. - 69



2097 - காராழியொக்குநிறத்தான்செய்பூசனைகண்டினிதா
வாராழிமுன்னமளித்தாய்பைஞ்ஞீலியமர்ந்தவனே
பாராழித்தேருடையாய்மடவார்மயல்பட்டுழலும்
பேராழியவினையேனுன்னருளென்றுபெற்றுய்தலே. - 70



2098 - பெற்றனடாவும்பெருமான்பைஞ்ஞீலிப்பெம்மானிலங்கும்
பொற்றனடாவுழைக்கண்ணிபங்கானன்புபூண்மனத்திற்
குற்றனடாமற்குணநடுமூன்றுகட்சோவைத்தொழக்
கற்றனடாவந்தகாவந்துபாரொருகையினியே. - 71



2099 - கையத்திலங்கறத்தோலுரித்தவன்காலற்செற்றோன்
மொய்யத்தியங்குஞ்சடையான்பைஞ்ஞீலிமுழுமுதல்வன்
வையத்தியங்கொள்பொற்றேரானையன்றிவருத்தம்வினை
செய்யத்தியங்கினும்பாடேனினிமற்றொர்தேவரையே. - 72



2100 - தேவாகருங்குழல்பாகாபைஞ்ஞீலிச்சிவபுரனே
மாவாகருங்குலவேதருந்தேடுமறைமுதலே
பூவாகருங்குன்றுபன்னிரண்டாற்குப்பொருந்தத்தனே
நீவாகருங்குண்டைமேலம்மையோடென்முனேயமுற்றே. - 73



2101 - உற்பத்தியாவதுஞ்சாவதுமன்றியுன்றாண்மலர்க்கு
நற்பத்திகொண்டுய்ந்தறியேன்பைஞ்ஞீலியென்னாயகனே
கற்பத்தினான்சக்கரத்தானின்றேத்தக்கடும்புரம
திற்பத்திவேவச்செற்றாயுய்யுமாறருள்செய்தருளே. - 74



2103 - செய்க்குவளைக்குநிகர்நேத்திரம்புனல்சிந்துவதுங்
கைக்குவளைக்குலஞ்சேராததுஞ்சுகங்காள்சொலுநன்
மைக்குவளைக்குங்கடல்சீறிடுமுன்மதியெழுமு
னைக்குவளைக்குழைபாகற்கரம்பையடவியற்கே. - 75



2103 - அடவிக்கதலிபிபசுங்குருத்தோடியகல்விசும்பைத்
தடவிக்கதறக்கதிரோன்குரகதத்தைத்தகர்த்துக்
கடவிக்கதனஞ்செய்பைஞ்ஞீலிமேவுங்கடவுண்மதன்
படவிக்கதமுறச்செற்றாயருணின்பொற்பாதத்தையே. - 76



2104 - பாதம்பணியும்வகையறியேற்குன்பசும்பணியும்
போகம்பணியுமைபாகபைஞ்ஞீலியபொற்சடையின்
மீதம்பணியும்விமலமன்றேறிவிமலையுடன்
வாதம்பணியும்பரேத்தநின்றாடுமறைமுதலே. - 77



2105 - மறைவழியேநின்றிருப்பகழோதிமனங்கனிந்து
முறைவழிபாடுபுரியமுன்னாதிருப்பேற்குமனக்
குறைவழியத்தயைசெய்தாண்டருள்வைபொற்குன்றுவில்லாய்
நறைவழியுங்கதலிச்சோலைமேவியநாயகனே. - 78



2106 - அகலப்படவரவாய்த்தேரைபோலுமம்மாதர்விழி
யிகலப்படவரந்தைக்கிடனாய்க்கொடியேய்கடன்மே
வுகலப்படவரவந்தீர்ந்தபோலுமுள்ளேற்குளத்தா
சுகலப்படவரம்பைக்காடவோடத்துரத்துதியே. - 79



2107 - உதிக்கின்றவம்புலிவெம்புலியாகியுறவவ்வுடு
பதிக்கின்றவம்புரிந்தேன்சந்தம்பூசப்பருமுலைமேற்
கொதிக்கின்றவம்பல்செய்வேனோபெண்காளென்குறையுரையீர்
மதிக்கின்றவம்பலத்தாடும்பைஞ்ஞீலிவரனுக்கின்றே. - 80



2108 - வரம்பலமாவொன்றுநாயேற்குதவுமருமலர்ச்செ
யிரம்பலமாமொய்யனைச்செற்றவாநல்லிருங்கதலி
மரம்பலமாப்பலசேரும்பைஞ்ஞீலிமறைமுதலே
சிரம்பலமாலையணிந்தாய்நின்றாட்கன்புசெய்வதற்கே. - 81



2109 - செல்லைக்கடுத்தகுழலார்பிறையைச்செயித்துவரி
வில்லைக்கடுத்தநுதலார்மயக்கைவிரும்பிவினைத்
தொல்லைக்கடுத்தவுடம்பெடுத்தேனைநின்றொண்டரிற்சே
ரொல்லைக்கடுத்தருக்கோட்டீபைஞ்ஞீலியுறாபவனே. - 82



2110 - பவனாசனப்பனெம்பைஞ்ஞாலிநாதன்பருப்பதவிற்
சிவனாசனங்கயிலாயவெற்பான்செஞ்சடைப்பெருமா
னிவனாசன்மக்கடனீத்தேறுவனென்றியம்பவமைந்
தவனாசன்வஞ்சனென்றென்னையெண்ணாதினிதாண்டனனே. - 83



2111 - ஆண்டலைப்பத்திரக்கேதனத்தாற்கத்தனேயணிகொள்
பூண்டலைப்பத்திரியேற்றாய்பைஞ்ஞீலியனேநின்பொற்றாள்
காண்டலைப்பத்தியினாலறியாக்கள்வனேற்குவினை
யீண்டலைப்பத்தியங்கித்திரிவேற்கென்றிரங்குவையே. - 84



2112 - இரக்கஞ்சற்றுங்கிடையாமனத்தேற்கஞ்சலென்றுநின்செங்
கரக்கஞ்சங்காட்டிநின்றொண்டர்குழாத்திற்கலக்கவைப்பாய்
தரக்கஞ்சமுன்னமுரித்தாய்பைஞ்ஞீலித்தலைவமிக்க
விரக்கஞ்சர்ப்பந்தரித்தாய்மழுவேந்தும்விடையவனே. - 85



2113 - அவனிவனென்றலையாமனெஞ்சேயென்னையாளுடைய
சிவனிவரேறுடைப்பைஞ்ஞீலிநாதன்றிசைமுகத்தோன்
புவனிவனிதைபுணர்வோன்கிளைத்தபுரனுமைக்கோர்
தவனிவரும்பவந்தீர்ப்பான்பொற்றாளிணைசாருவையே. - 86



2114 - சாருக்கனையமொழியாயிரதிதவனடத்தும்
போருக்கனையர்பகைக்கினிச்செய்வதென்பூங்கதலித்
தாருக்கனையடர்பைஞ்ஞீலிமேவுந்தலைவனெம்மான்
மேருக்கனையக்குழைத்தானிங்கெய்தின்மிகவுநன்றே. - 87



2115 - நன்றத்தம்வேண்டினனீகெனமூடரைநண்ணியம்பொற்
குன்றத்தடம்புயனேயெனப்பாடிக்குறைந்தலைந்து
வன்றத்தளாவித்திரியாமனீலிவனத்தவபொன்
மன்றத்தயானினக்கேகவிபாடமனந்தந்ததே. - 88



2116 - தந்தக்கரியதள்போர்த்தான்பைஞ்ஞீலித்தலைவனுள்ளு
வந்தக்கரியணிந்தான்கோலமாகிமலரடியை
முந்தக்கரியவன்றேடநின்றானென்முழுவினைநோய்
சிந்தக்கரியப்புரிந்தாண்டருடருந்தேசிகனே. - 89



2117 - கனத்துப்புடைகொடனமதர்நோக்கங்கறுத்தகுழல்
வனத்துப்புடையிதழம்மைபங்காகஞ்சவாவிகளி
னனத்துப்புடைமலங்குந்துபைஞ்ஞீலிநம்பாநிற்றொழ
மனத்துப்புடையவனோவாதலாலெற்குவந்தருளே. - 90



2118 - வந்தித்தலையுடையார்க்கன்பனீலிவனத்துறைவோன்
பந்தித்தலையன்வரைக்கீழலறும்படிநெரித்தோன்
சிந்தித்தலைகடல்போலேகண்ணீர்மிகச்சிந்துமென்முன்
னிந்தித்தலைவருமுன்வருமாறியம்பெய்திமஞ்சே. - 91



2119 - மஞ்சனகண்டனைப்பைஞ்ஞீலிவாழுமறைமுதலை
வஞ்சனமன்புரளக்கழறூக்குமெம்மானையொண்கண்
ணஞ்சனமாதர்மயல்விழிவீழ்ந்தறிவற்றழிந்துழல்வீர்
வெஞ்சனனங்களைந்தீடேறியுய்யவிரும்புமினே. - 92



2120 - விரும்பன்னமீதில்லைபாலினுமில்லைவெண்முத்தணிகொ
ளரும்பன்னமென்முலைகாந்துவதாலவ்விருப்பமெங்ங
னிருப்பன்னமுண்டகஞ்சேரும்பைஞ்ஞீலியினெம்மிறைவர்
திருப்பன்னகந்தரித்தார்புயத்தேறுந்தெரியலினே. - 93



2121 - அலம்புகுவால்வினையெஞ்ஞான்றும்வாட்டவயர்ந்திருகண்
ணிலம்புகுமாறலறித்திரிவேனையென்றாண்டருள்வாய்
விலம்புகுலாநுதற்கண்ணிபங்காமிகுமென்கதலிக்
குலம்புகுகோயிலிருப்பாயடியன்குலதெய்வமே. - 94



2122 - குலமலையாவுந்தொழநின்றபொன்மலைக்கோனருளு
நலமலைபாகபைஞ்ஞீலியனேநதிபோலுமத
சலமலையுங்கவுட்டோலுரித்தாயென்னைச்சார்ந்துவினை
வலமலையாமலினிதாவென்றோதயைவைப்பதுவே. - 95



2123 - பதுமத்தனங்குடிகொள்ளும்பைஞ்ஞீலிப்பரசிரத்தில்
விதுமத்தனங்கையொருபாகவெள்ளைவிடையநினை
முதுமத்தனங்கம்வருந்தலுந்தேடலுமுன்னலைச்செய்
வதுமத்தனங்கொண்மடவார்க்கென்றாலெங்ஙன்வாழ்த்துவனே. - 96



2124 - வனத்தனையன்றொழும்பைஞ்ஞீலிமேவுமறைமுதலை
யெனத்தனையன்றுபுரமெரித்தானையிலங்கிலைவேற்
சினத்தனையன்குகனாகப்பெற்றானைச்செம்மான்மழுவாண்
மினத்தனையன்றிப்புகழேன்புறஞ்சிலவீணரையே. - 97



2125 - வீணாகவம்பரைக்கொண்டாடிப்பாடும்வெறும்புலவீர்
நாணாகவம்பலகோடலல்லாற்சற்றுநன்மைய்ண்டோ
பூணாகவம்பலர்கொன்றையவோங்குகதலிப்பொங்கர்
வாணாகவம்பற்றுமுன்வாவென்றோதும்வருந்தலின்றே. - 98



2126 - வருத்தத்தையாற்றுதல்செய்யேனினியத்தைமாற்றிவருங்
க‌ருத்தத்தையுந்தவிர்த்தாள்வாய்கடற்கட்டுகிரினிறப்
பொருத்தத்தைமேவுஞ்சடையாய்பைஞ்ஞீலியெம்புண்ணியனே
ம‌ருத்தத்தையார்கொன்றைத்தாராய்புரத்தொருமாதினனே. - 99



2127 - மாதப்புனற்குமனஞ்சேரொட்டாததைமாற்றுதல்செய்
தேதப்புனற்பரிற்கூட்டாதெனையுய்யவைத்ததுபூந்
தாதப்புனற்கொன்றைத்தாரானென்னம்மைதழுவிடத்தான்
சீதப்புனற்பணைப்பைஞ்ஞீலிநாதன்றிருவடியே. - 100

திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி முற்றிற்று

சிறப்புப்பாயிரம் *
* இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை


2128 - மறைநூறுகளையறவோர்ந்துளாருமகிழ்ந்துபவக்
க‌றைநூறுமாறுணர்ந்துய்ந்திடுமாறுகயிலையொப்ப‌
வுறைநூறுமாடங்கொள்பைஞ்ஞீலிநாதற்குவந்துகலித்
துறைநூறுசொற்றனன்மீனாட்சிசுந்தரத்தூயவனே. -



Comments