Pirapantattiraṭṭu XXIII


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXIII
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 23 (2670 - 2770)
மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி.



கணபதிதுணை.
விநாயகர்துதி.




2670 - ஒத வினிய தமிழ்க்கூட லோங்கு ஞான சம்பந்தர்
பாத யுகமே லொருபதிற்றுப் பத்தந் தாதித் தொடைசாத்தப்
போத மலர்நா ரினிதுதவும் பொல்லா வினையிற் புக்குழலு
மாத ரகஞ்சா ராவொருகோட் டாம்ப லடித்தா மரைமலரே. - 1
நூல்.




2671 - சீர்பூத்த திருமுகமுந்தேவிமுலைப்
       பால்பூத்த செய்ய வாயு,
மேர்பூத்த வருள்பொழியு மிருவிழியும்
       பொற்றாள மேந்து கையும்,
பேர்பூத்த தமிழ்க்கூடற் றிருஞான
       சம்பந்தப் பெருமான் செம்பொற்,
றார்பூத்த சிறுதண்டைத் தாளுமுளத்
       துள்ளிவினை தள்ளி வாழ்வாம். - 1



2672 - வாழிநெடு வழுதிபுறக் கூனிமிர்த்த
       நினக்கரிதோ மாறாச் சன்ம,
வாழியுழல் வேனகக்கூ னிமிர்ப்பதுதென்
       கூடலம ரமல வாழ்வே,
வீழியித ழுமையளித்த வள்ளநிறை
       பரஞான வெள்ளமுண்டாய்,
காழிவளர் மாமணியே கவுணியர்தங்
       கற்பகமே கலைவ லோயெ. - 2



2673 - கலைபுகழா யிரமுகத்தெய் வதமந்தா கினியுடைய
        கடவுண் மற்றை,
யலைபுனலாட் டவுமகிழு மதுபோற்றென்
        கூடலகத் தன்பர் வாழ்வே,
விலையில்கவு ணியமணியே வேதாதி
        முழுதுடையவிமல நீயோ,
தலையடையாச் சிறியேன்செய் புன்றுதிக்கு
        மகிழ்கூர்த றக்க தாமே. - 3



2674 - தக்கபடி யன்றியிரும் படியிடந்து
        வரையுருட்டிச் சலதி மோது,
மிக்கபுனற் பேர்யாற்றிற் பல்லோருங்
        கரையேறி விளங்கச்செய்தாய்,
தொக்கசுவைத் தமிழ்க்கூடற் கவுணியக்கன்
        றேயொருவேன் றொடர்ந்து நாளும்,
புக்கபவப் பேர்யாறுங் கரையேறச்
        செயினினக்குப் புகழன் றாமோ. - 4



2675 - புகழ்பரவு தமிழ்மதுரைப் புகலிகா
        வலசலசப் பூந்தார்மார்ப,
நிகழ்கருணைக் குரவமறை நிறைசெல்வ
        பரஞான நேய வாய,
வகழ்வினைய ருளத்தமரு மமரசிறு
        சிலம்பொலிக்கு மம்பொற் றாள,
திகழ்வினையி லமணரென வடியன்மல
        நினக்கெதிராய்ச் சிதைவ தென்றோ. - 5



2676 - என்றுநிகர் மணிமாடக் கூடலிட
        மோவிணையி லெண்டோ ளம்மா,
னன்றுதிரு வரத்துறையி லளித்தமணிச்
        சிவிகைகொலோ வருநோன் புற்று,
நன்றுமிகு சிவபாத விருதயர்தந்
        திருத்தோளோ நாயே னுள்ள,
மொன்றுதலி னீயுறைய மழவிளங்கன்
        றேமணியே யுவட்டாத் தேனே. - 6



2677 - தேனார்க்கு மலர்த்தடத்து மோட்டெருமை
        பாயவெரீஇச்சினந்த வாளை,
கானார்க்குங் கற்பகத்தின் கழுத்தொடிய
        மீப்பாயுங் கணிசூழ் கூடல்,
வானார்க்கும் பெரும்புகழாய் வண்புகலிப்
        பெருந்தகையே மறையோர் பேறே,
யானார்க்குங் குடியல்ல னினக்கடியேனுய்யுநெறி
        யருள்க வின்றே. - 7



2678 - அருண்மிகுபொற் றில்லைமூ வாயிரருங்
        கணநாத ராக வாங்கே,
தெருண்மிகுநன் னீலகண்டப் பாணருக்குக்
        காட்டியநீ தேமாஞ்சோலை,
பொருண்மிகுவிண் ணுலகளக்கும்
        புகழ்க்கூடற் சம்பந்தாபுலவரேறே,
வெருண்மிகுநா யேன்காண வொருநினைக்காட்
        டாதிருக்கும் விதமற் றென்னே. - 8



2679 - என்னையிவன் றனையடிமை கொள்கென்பா
        னடியார்தாமில்லை யோவென்,
றன்னையனை யாய்கூடற் சம்பந்தா
        நீநினையே லலகிலாச் செம்,
பொன்னையுடை யாருளதன் வரவைவெறுத்
        தாருமெவர் புத்த ரானோர்,
முன்னையடி யாராகக் கொண்டவனு நீயன்றி
        மொழியின் யாரே. - 9



2680 - மொழியுமறை யாயிரமு மெண்ணிறந்த
        மறையோர்க்கு மொழிந்தா சங்கை,
யொழிதரவைந் தெழுத்துமே யந்தியின்மந்
        திரமென்று முணர்த்தி நின்றாய்,
பொழிநறவப் பூஞ்சோலைப் புகழ்க்கூடற்
        சம்பந்தா புகலடைந்தேன்,
வழிதருமத் துணைவேண்டா வைந்தெழுத்தே
        யுணர்த்து கெனின் வருத்தமென்னே. - 10



2681 - வேறு.
வருந்துபொய்ப் பவஞ்ச வாழ்க்கையை
        மதித்துன் மலரடி யிணைமதி யாதே,
யிருந்தஞர்ப் பிறந்தை யுற்றுழல் வேன்கொ
        லின்னமு மிடையறா வன்பி,
னருந்தவர்க் கரசே யாலவா யமுதே
        யருட்கவு ணியர்குலக் கன்றே,
திருந்துபல் லோர்க்குஞ் சிவகதிப்
        பரிசுசேர்தர நல்குதே சிகனே. - 11



2682 - தேசினாற் பொலிநின் றிருமணத் தடைந்த
        செழுந்தவத் தவரொடும் விரைந்து,
கூசிலா தடியே னடைந்திலே னடையிற்குலவுவா
        னவர்க்கெலா மரிய,
வாசிலாப் பதப்பே றெளிதினி முன்னியாவதெ
        ன்னாவவென் செய்கேன்,
மாசிலா மணியே மதுரைவாழ்தருவே
        வளர்கவு ணியர்குல விளக்கே. - 12



2683 - குலவுநின் கருணை பெரியர்பா லன்றிக்
        குணமிலாச் சிறியனேன் பாலு,
நிலவுறப் புகுதல் வழக்கருண் மதுரை
        நிறைதிரு ஞானசம் பந்தா,
மலர்தலை யுலகில் வருபெரு வெள்ளம்
        வாரிவாய்ப் புகுவதே யன்றிப்,
புலர்தரு முறவி யளையினு மோடிப்
        புகுதனீ யறிந்திலாய் கொல்லோ. - 13



2684 - கொல்லையா னுகைக்குங் குழகனா
        ரிடப்பால்குடிகொளுங்கோதைமெல் லருப்பு,
முல்லைநேர் நகையாண் முலைபொழி
        தீம்பான்முற்றுமுண் டாங்குமிழ்ந் தாங்கு,
வல்லமா மறைநற் றமிழ்பொழிமதுரை
        வள்ளலே புகலிமா மணியே,
யில்லையன் பென்பா லாயினும் புரத்த
        லிலகுநின் னருட்கியல் பன்றே. - 14



2685 - இயறெரி புலவர் புகழுமோத் தூரி
        லேற்றுவன் பனையெலா மிலகி,
மயலறு கதியிற் புகவருள் புரிந்தாய்
        மற்றவை செய்தவன் பென்னே,
புயறவழ் குடுமி மாளிகை மதுரா
        புரியுறை முத்தமிழ் விரகா,
வுயலுற வெனையு மங்ஙன நினைந்தாண்
        டுன்னடி யிருத்துத லழகே. - 15



2686 - அழகிய மயிலை யத்தியைப் பூவை
        யரசுசெய் தனையுதவாமை,
பழகிய பெண்ணை பலவுமின் குரும்பை
        பலகொளப் பாடினைபற்பல்,
கழகமுற் றோங்கு மாலவா யமுதே
        கவுணியர் பெருங்குலவிளக்கே,
மழவிளங் களிறே யென்மனந் திருத்தின்
        மற்றுமப் புகழொடொன் றாமே. - 16



2687 - ஒன்றுவெங் காமம் வெகுளியுண் மயக்க
        மோங்குமும்மதமெனக் கொண்டு,
கன்றுமென் மனமாங் களிறகல்
        பவஞ்சக்காடெலா முழிதரு மதனை,
வென்றியா னடக்க வலியிலா
        மையினான்மேதகு கூடலென் றுரைக்குங்,
குன்றில்வாழ் தெய்வக் குருபர சமயகோளரி
        சரணடைந் தனனே. - 17



2688 - அடையல ரஞ்சுஞ் சூற்படைச் சொக்க
        ரங்கயற் கண்ணியோ டமர்ந்த,
நடைகெழு கூட னன்மறைக் கொழுந்தே
        நண்ணினர்க் கெய்ப்பினில் வைப்பே,
யிடையறா வன்பி னெண்ணிலார்
        குழுமியேத்துநின் சந்நிதா னத்திற்,
கடையனேன் புரியன் பறுதுதி நாணங்கழித்தெதி
        ரடையவும் பெறுமே. - 18



2689 - பெறலருஞ் செல்வ நின்னடி யேத்தும்
        பெருமையேயென்பது தெரிந்துந்,
திறல்கொண்முற் றவமில் லாமையால்
        வருந்தித்திகைத்திடு நெஞ்சமென் செய்கே,
னறவருள் விளக்கே யாலவாயமுதே
        யற்புதக் கற்பகக் கனியே,
புறவவண் களிறே போற்றுவார்பொன்னே
        பொங்குபே ரருட்பெருங் கடலே. - 19



2690 - கடல்விளிம் புடுத்த கண்ணகன் புவியிற்
        கழிதரு பொய்யெனு மெய்யை,
யடன்மிக யானென் றவாய்வினைச்
        சிமிழ்ப்புண்டவத்தைக டொறும்புகு மடியே,
னுடலபி மான முதலிய வெறுத்துன்
        னொண்சிலம் படியடை குவனோ,
மடல்விரி கமல வாவிசூழ் மதுரை
        மாநகர்க் கவுணியக் கன்றே. - 20



2691 - வேறு.
கன்றி யொருவே னிவண்வருந்தக் கடவ
        னோவங் கயற்கண்ணி,
யொன்றிமகிழு மொருமுதல்வ னுறைதென்
        கூடற் சம்பந்தா,
துன்றி வருத்து குளிர்க்கஞ்சித் தொண்டர்
        குழுமி முறையிடுமு,
னன்றி யுகவு நீலகண்ட நவின்று
        தீர்த்த நல்லோயே. - 21



2692 - நல்லாய் கூடற் சம்பந்தா நல்லார்
       போல நமைத்தொழநீ
கல்லாயென்று கைவிட்டாற் கடையே
       னுய்யு நெறியுளதோ,
செல்லாமழைபெய் யாதொழியிற்
       றிரைசூழ் புவிக்குய் வகையுண்டோ,
வல்லா யுறவென் றூழுதய மாகா
       விடிற்கண் ணறிவதெவன். - 22



2693 - அறிவ தறியும் வகையுணர்த்தி
       யால வாயி னகத்தொருநீ
செறிய வுறைத லாற்புகலித் தேவர்
       வடியர் சிறந்துய்ந்தார்,
வெறியனாயி னேனொருவேன்
       வெய்யோ னுதயத் தெவர்விழியுங்,
குறிகொளொளியே யடைமவிருள்
       கூகை விழிக ளடைவனபோல். - 23



2694 - அடைய வினிமை யருளுநின்பொன்
       னடிக ளடைந்தேனதற்கேற்ப,
விடைய றாத வன்பில்லே
       னெனினுங் கூடற் சம்பந்தா,
தடையி லடியா னினக்கென்றே
       சாற்றா நிற்ப ரெனையுலகர்,
மிடைசில் லுறுப்பி லார்தமையு
       மக்க ளென்றே விளம்புதல்போல். - 24



2695 - விள்ளுங் கருணைப் பெருந்தகையே
       விண்டாழ் பொழில்சூழ் வியன்மதுரை,
யுள்ளு மடியே னுள்ளுமுறை
       யொருவா பெருமுத் தமிழ்விரகா,
தள்ளு மமணர் குலகாலா
       தண்டைத் தாளா தனிமுதலே,
துள்ளுங் கயல்சேர் வயற்புகலித்
       தோன்றா லென்முன் றோன்றாயே. - 25



2696 - தோன்றாய் விழிமுன் மனமாசுந்
       துடையா யென்னோவருந்திமன,
மான்றா யென்றும் வாய்மலராய்
       மன்னன் றென்னன்மதுரைவளர்,
சான்றாய் பெருமா னிடப்பாகத்
       தையன் முலைப்பாலுண்டனே,
கான்றாய் போலின் றமிழ்பொழிந்த
       கருணாநிதியே யிதுதகவோ. - 26



2697 - தகவே யென்றுன் சரண்புகுந்தேன்
       றள்ளி விடநீ வல்லாயோ,
நகவே திரிவா னடியார்போ னடிக்குங்
       கள்வ னிவனம்பாற்,
புகவே தகானென் றுளத்தெண்ணல்
       புகழ்த்தென் கூடற் புகலியாய்
மிகவே யலைசெய் வாரிதியுள்
       விரைந்தங் கணநீ ரும்புகுமால். - 27



2698 - புகுமே பிறந்தை யென்பாலும்
       போமே பொறியின் வாய்மனமு,
நகுமே சகமு மெனை நோக்கி
       நண்ணு மேயுண் மயக்கமுநீ,
தகுமே யென்று தடுத்தாளிற்
       சம்பந் தாதோ மொருமூன்றுஞ்,
செகுமே லவர்க டொழுங்கூடற்
       றேவா குரவர் சிகாமணியே. - 28



2699 - மணியே யனையாய் திருப்புகலி
       மறையோர் பேறே மதுரைநகர்க்,
கணியே தோர் பலரையுநீ யடிமை
       கொண்டா யதற்காகத்
தணியே முனிவென் றுனைவெறுக்கத்
       தக்கார் சிலரு மிருந்தாரோ,
துணியே யெனையு மடிமைகொளத்
       துணிந்தால் வெறுப்பரெவரையா. - 29



2700 - ஐய வயனா னெடுமாலா லளந்து
       காணாப்பரம் பொருளைத்
துய்ய வொருகை விரலாலே
       சுட்டிக் காட்டுஞ் சம்பந்தா
வைய மதிக்குந் தென்கூடன்
       மணியே வயங்கு பொற்றாளக்
கைய வுன்னை யெனக்கறியக்
       காட்டி லதுவே போதுமால். - 30



2701 - வேறு
போது செறி பிரமபுரப் பொய்கையதன் கரையிடத்துத்
தாது செறி மலர்ச்சோலைத் தண்கூடற் சம்பந்தர்
யாதுரைசெய் கேன்ஞான வமுதுண்ட நாளமண
ரோதுகொடுங் கடியவிட முண்டார்போன் றுலைந்தனரே. - 31



2702 - உலையாத புகழ்க்கூட லுவமையின்முத் தமிழ்விரகர்
கலையாரு மதியனைய காமர்மணிச் சிவிகைமிசை
யிலையார்தண் பொழிலுலக மேத்தவே றியஞான்று
கொலையாரு மனத்தமணர் கூர்ங்கழுவே றினரொத்தார். - 32



2703 - ஒத்தபுக ழாலவா யுறையுமறைக் கவுணியனார்
சித்தமகிழ் திருமுனெழு திருச்சின்னப் பெருக்கோசை
வித்தகமி லமணருக்கு வெங்கூற்றி னோசைகொலோ
குத்திரவம் மறலிகடாக் குரலோசை யோவறியேம். - 33



2704 - அறிவுருவ னாலவா யாண்டகைமுத் தமிழாளி
செறிநிழல்செய் மணிமுத்தின் சிவிகைகுடை செழும்பந்தர்
பறிதலைய ரூற்றைவாய்ப் பதகர்முதற் பரசமய
வறியவருக்கு வேனில்வெயில் வயங்குதலொத் திருக்குமால். - 34



2705 - இருக்குமுத லோதாம லெளிதுணர்ந்த கவுணியர்கோன்
குருக்கிளர்சண் பையினின்றுங் கூடலடைந் திருந்தவுடன்
றருக்கமிகப் பேசிமயிர் தலைபறித்திட் டுழலமணக்
குருக்கள்புவி நின்றுகழுக் கூடலடைந் திருந்தனரே - 35



2706 - இருந்தவர்க ளேத்தெடுக்கு மெம்மிறைமுத் தமிழாளி
யருந்தமிழ்நா வலருறையு மாலவா யமரண்ணல்
‍பொருந்துதிரு மறைக்காட்டிற் புகல்சதுர மறைப்பாடல்
வருந்துமனப் பரசமயர் வாயடைத்த பாட்டன்றோ. - 36



2707 - பாட்டுவரிச் சுரும்புளரும் பைம்பொழிலிற் பசுமயிலிற்
கோட்டுமுலை யார்பயிறென் கூடன்மறைக் குலக்குருளை
வாட்டுவினை கடிமயிலை மட்டிட்ட வெனப்புகல்பா
வூட்டுபுகழ்ப் பெருஞ்சைவர்க் குயிர்கொடுத்த பாவன்றோ. - 37



2708 - அன்றுகனி ‍வொடுபோக மார்த்தபூண் முலையாண்மற்
றென்றுகவு ணியாமதுரைக் கிறைவாரு ளியபதிக
நன்றுசெறி நெறியொருவா நல்லறிவி னோர்முகங்கட்
கொன்றுபொலி வுறுத்தியதே லுவமையதற் குளதாமோ. - 38



2709 - உளரளிவண் பொழின்மதுரை யொப்பிலா மணிபுகலிப்
பளகில்கவு ணியக்கன்று பாலறா வாய்க்குருளை
வளமலிபா சுரமொன்றே வான்சைவ மீடேற
வளவிலமண் கழுவேற வாற்றெதிரே றியதம்மா - 39



2710 - மாமேவு திருவால வாய்ஞான சம்பந்தர்
பூமேவு திருக்காத்தாற் புரிந்தளித்த திருநீறு
கோமேவு வுழுதியுடல் குளிர்தரச்செய் தாங்கிருந்த
தீமேவு தொழிலமணர் சிந்தையில்வெப் புறுத்தியதே. - 40



2711 - வேறு
தேவர் தானவர் சித்தர்வித் தியாதரர்
       திசைபுரப் பவர்மற்றும்
யாவருள்ளவ ரவரெலாம் வந்துவந்
       தடியிணை தொழமேவு
மூவா தம்பிரா னாலவா யினிதமர்
       முத்தமிழ் விரகாயான்
பாவரோடுற வுறறுழ வாதுநின்
       பதத்துற வுறவுன்னே. - 41



2712 - உன்னு வார்பிறப் பொழித்திடு
       மொருவனை யுத்தமர்பெருமானைப்,
பன்னு வார்க்கினிப் பானைமெய்ஞ்
        ஞானவின் பாலறாவாயானை,
மன்னு வார்பொழின மதுரையா
       சிரியனை வழிபடா தவரெல்லாந்,
றுன்னு வார்பிறப் பொழிவரோ
       வொழிவார் தொழுதவத்தவரேனும். - 42



2713 - தவரெனப்படு வார்களு மும்மலத்
       தடையறு சிவஞானத்,
தவரெனப்படு வார்களு மிருவளி
       யடைத்தொரு வழிநிற்பா,
ரிவரெனப்படு வார்களுஞ் சிவகதிக்
       கெதுவழி யென்றோயாய்,
பவரெனப்படு வார்களு மதுரைச்சம்
       பந்தன்மெய் யடியாரே. - 43



2714 - அடியா செல்வமே யாலவாய்
       முத்தமி ழாளிகேண் மதிபொல்லாக,
கொடிய நாயினேன் விண்ணப்ப
       மொன்றுவான் குளிர்மதி நதிசூடு,
முடிய னையநிற கெனையனெற
       கனையைநீ முடிவினமறறவற்***,
நெடிய சீர்புனை யெனையனமற்
       றனையனோ நினக்கியானலலேனே. - 44



2715 - அல்லை நேர்களத் தண்ணறன்
       றிருவடிக் கருகரா யனைவோருந்,
தொல்லை மாவினைத் தொடரோழிந்
       தானந்தந் துயத்திடவருள்கூர்ந்து,
வில்லை வீசுபஞ் சாக்கர மோதிய
       வித்தக வியன்கூட,
னல்லை நீயடி யேற்குமவ் வாறரு
       ணலகிடி னுயவேனே. - 45



2716 - உய்ய லாம்வகை யொன்றுகண் டேனஃ
       துண்மையேயின்தோமன்,
வைய வாழ்வடை மயங்கியே யுழிதரு
       மாந்தாகாண் மடைநண்ணான்
... .... .... ...
       சம்பந்தன்,
.... ..... .... .....
       தொழும்புபூண்றேறானே. - 46



2717 - உறவும் வேனினண் பகலழ லிடைப்புகுந்
        துணங்குதலுணாநீத்தே,
யறவும் வாடுதன் மூச்சவித் திருத்தல்கா
        லாதிதுய்த்தலுமோவ,
லிறவு நேருமென் றிடக்குகை வனம்புகல்
        யாவுநீத்திடும்வம்மின்,
புறவ நாயகன் கூடல்வாழ் புண்ணியன்
        பொன்னடி யடைவீரே. - 47



2718 - அடையு நற்பசு விருக்கயான் கற்பசு
        வடைந்தனென் கறந்தெய்த்தே,
னடைகொ ளாலவா யிடையமர் தருபர
        ஞானபோனகக்கன்றே,
குடையும் யானமும் பந்தரு முத்தமாக்
        கொண்டமுத்தேபொன்னே,
மிடையு மும்மல மகன்றருள் பெறும்வகை
        மெய்யருள் புரிவாயே. - 48



2719 - வாய்ந்த செம்பொனாற் செய்கொழுக்
        கொண்டியான் வரகினுக் குழலுற்றே,
னேய்ந்த தீஞ்சுவைக் கனியொரீஇக்
        காய்கவர்ந்தென்றுமுண் பவன்போன்றே,
னாய்ந்த நாவலர் புகழ்மது ராபுரியண்ணலே
        யடல்கொண்டு,
காய்ந்த காமத்தர் கருதிடுங் கவுணியர்
        காவலா வருள்வாயே. - 49



2720 - அருந்து தற்கமை பாலைவிட் டருந்தினே
        னமைதராப் புளிங்காடி,
பொருந்து கங்கையா டப்புகுந் தள்ளலைப்
        பூசிடு பவன்போன்றேன்,
றிருந்து மாலவாய்த் தெள்ளமு தேவர
        சிரபுரத் தவரேறே,
மருந்து நேருன தருண்மொழி பெற்றியான்
        மலமறுத் துயலென்றே. - 50



2721 - வேறு.
என்றவ றனைத்து மெண்ணா தின்னருள் புரிய வேண்டு
நின்றசீர் நெடிய மாற னிலவுநன் னெறிக்க ணேவந்
தொன்றமுன் றடுத்தாட் கொண்டா யுவமைதீர் புகலி வாழ்வே
வென்றசீ ருடையாய் கூடல் விளக்கமே மெய்மமை யானே. - 51



2722 - யானென தெனுங்கோண் ஞான வழல்கொடு நிமிர்க்க வல்லான்
ஞானசம் பந்த னன்றி நாடின்மற றகிலத் தியாவ
ரீனமி லறவொர் சூழு மிருந்தமிழ்க் கூடல் சார்ந்து
மானமா ரனையா வள்ளன் மலரடி வணங்கு வீரே. - 52



2723 - வணங்குவா ருள்கு வார்வாய் வாழ்த்துவார் வழுத்து வாரோ
டிணங்குவார் நின்பொற் பாத மெய்துவா னெண்ணி யன்பர்
குணங்குலாந் துவாத சாந்தக் கூடனமே வியசம் பந்தா
விணங்குறாப் பவஞ்ச வாழ்க்கை யேட்டையே னென்செய் கேனே. - 53



2724 - செயம்மலி துவாத சாந்தத் திருநக ரொருசம் பந்தா
..... .... .... .... ....
மெய்யம்மலி செல்வ ரின்பம் விழைத்தனர் புகுநின் றாளிய
பொயம்மலி யேழை வாழ்க்கைப் புன்மையென புகலொ ணாதோ. - 54



2725 - ஒண்ணுத லுமையாள் கொங்கை யூறிய பரமெய்ஞ் ஞானங்
கண்ணுத லருளா லுண்ட கவுணியர் காளாய் மேலோ
ரெண்ணுதல் செய்யுங் கூட லுடையநீ யென்னோ டூடல்
பண்ணுத றகாதுன் றீராப் பரவருட் பெருமை நோக்கின். - 55



2726 - நோக்குயர் கூடல் வாழ்வே நோன்மைசா லருட்சம் பந்தா
தேக்குசீர் வீரட் டானச் சிவபிரா னாடல் கண்டா
யாக்கிய புகழின் மேலா மையநின் சித்த மென்றன்
பாக்கிய மலர ருட்கட் பார்வைக்கே பார்வை வைத்தேன். - 56



2727 - வையகத் தன்பு பூண்டார் குற்றமு மற்றஃ தில்லார்
செய்யநற் குணமு முள்ளஞ் செறித்திடாக் கருணை வாழ்வே
பொய்யகன் மதுரை மூதுர்ப் புகலியாய் நின்றா ளன்றி
வெய்யவேழ் பிறவி யென்னும் வீரைக்கோர் மதலை யின்றே. - 57



2728 - இன்றடம் பொழில்சூழ் கூட லெழிற்கவு ணியர்தங் கன்றே
யொன்றவைந் தெழுத்தி னுள்ளே யோதுமுப் பொருளுந்தேற
நன்றடி யவர்க்கு ணர்த்தி நலமுறுத் திடுதல் போலெற்
கென்றருள் புரிவை யென்றே யிருந்தன னெதிர்பார்த் தம்மா. - 58



2729 - அம்மைபா லுண்ட ஞான வருட்பெருங் குருளை கூட
லெம்மையா ளுடைய தெய்வ மிலகரு ணோக்கஞ் செய்ய
நம்மையாய் புரிந்த பாச நசித்திடு நம்பு நெஞ்சே
வெம்மையார் கதிரோன் றோன்ற வீடிடா விருளு முண்டோ. - 59



2730 - உண்டுடுத் துழல்வேன் றெய்வ முண்டெனு முறுதி நெஞ்சுட்
கொண்டுசற் றறியேன் காமக் கொள்கல னாகி நிற்பேன்
றொண்டுபட் டுன்றா ளேத்தத் துணிவனோ கணித மில்லா
வண்டுதுற் றியபூஞ் சோலை மதுரைமா ஞான வாழ்வே. - 60



2731 - வேறு.
வாழு மாறுளத் தெண்ணினன் மற்றது மருவத்
தாழு மாறுனைத் தாழ்ந்தில னாகிலென் றவறே
சூழு மாதவிச் சோலையின் மலர்தொறுந் தும்பி
வீழு மாலவாய் மேவிய சிரபுர வேந்தே. - 61



2732 - வேந்த ராகிலென் முப்பகையறுத்தற விளங்குஞ்
சாந்த ராகிலென் றக்கவ ராகிலென் றவஞ்செய்
மாந்த ராகிலென் மதுரையிற் கவுணியன் மலர்த்தா
ளேந்த வாய்ந்தநெஞ் சுடையரே சிறந்தவ ரென்றும். - 62



2733 - என்று நேர்மணி மாளிகைக் கூடல்வா ழிறையை
யன்று ஞானபோ னகமினி துண்டவா ரமுதைக்
கன்று சூழ்வினை களைந்தடி யார்க்கருள் கனியை
நன்று கண்டுதோத் திரஞ்செயார் நாவென்ன நாவே. - 63



2734 - நாவ லோர்புகழ் ஞானசம் பந்தனை நல்லோ
ராவ லோடணை யாலவா யிருந்தரு ளமுதைத்
தேவ லோகமே யெனச்சொலுஞ் சிரபுரச் செல்வர்
காவ லோனைநேர் கண்டிடார் கண்ணென்ன கண்ணே. - 64



2735 - கண்ண கன்புவி தொழுதெழ வாலவாய் கலந்தே
யெண்ண வம்புரி யமணரைக் கழுவில்வைத் தியார்க்கும்
வண்ண நீறளித் திருந்தருண் ஞானமா மணியின்
றிண்ண வண்புகழ் கேட்டிடார் செவியென்ன செவியே. - 65



2736 - செவிய வாவுமின் றமிழ்பொழி செய்யவாய்த் தேனைப்
புவியு ளோர்புகழ் மதுரைமா நகருறை பொன்னைச்
சவிவி ராங்கவு ணியர்குல மணியைவெண் டாளக்
கவிகை யாளியை யருச்சியார் கையென்ன கையே. - 66



2737 - ஏல வார்குழ லுமையருண் ஞானமுண் டெழுந்து
சால வெங்கணும் பொழிதமிழ்க் கொண்டலைத் தாவாச்
சீல மாதவ ராலவாய் மேவிய கேவைத்
தால மேலுற வணங்கிடார் தலையென்ன தலையே. - 67



2738 - தலைமை வைதிக மெய்தவுந் தெய்வமாச் சைவ
நிலைமை யெய்தவு ஞானவா ரமுதுண்ட நிதியை
யிலைகு லாம்பொழில் சூழ்மது ராபுரி யிறையைக்
கலைவ லாளனைச் சூழ்தரார் காலென்ன காலே. - 68



2739 - காலி னார்பொழிற் கனியுதிர் தரவெழுங் கடுப்பிற்
சேலி னார்வயற் றிருமது ராபுரித் தேவைச்
சாலி னார்மறைக் கவுணியன் றனைத்தொழச் சாரா
மாலி னாருடைப் பிறப்பையெப் பிறப்பென வகுக்கேன். - 69



2740 - வகைசெய் மூலமா விலக்கிய மாகவு மறையிற்
றகைசெய் பல்பொருண் முற்றவுந் தமிழ்பொழி தருவை
முகைசெய் வான்பொழி லாலவாய் மேவிய முதலைத்
தொகைசெ யுந்துதி சொற்றனன் சிறந்ததென் றுணிவே. - 70



2741 - வேறு.
துணியு மாறொன்று சொல்லுவன் யார்க்கும்வான்
பணியுங் கூடற்சம் பந்த னடிதொழிற்
றணியும் வெவ்வினை சார்த லறும்பவ
மணியு மொன்றியொன் றாக்கதி யாருமே. - 71



2742 - யாரு மேத்து மியன்மது ராபுரிச்
சீருந் தேசுந் திருந்துசம் பந்தர்தா
மூரும் யானமுன் றாங்கின ரொண்பதந்
தேரு நீரிலென் சிந்தையுந் தாங்குமே. - 72



2743 - தாங்கு பேரருட் சம்பந்தன் கூடலா
னோங்கு மாமுறை யோதி யெழுதினோ
ரேங்கு வேனுக் கெழுவகைச் சன்மமுந்
தேங்கு மாறெழு தாவகை தீர்ப்பரே. - 73



2744 - தீரன் ஞான சிகாமணி பூந்தரா
யூரன் கூட லொருக்கன் றிருமுன
ரார வொண்டிருச் சின்னம தூதுவார்
வீர மல்கென் வினையையு மூதுவார். - 74



2745 - வாரு மன்பினர் வாழ்த்தும் பகலியார்
தேருங் கூடற் றிகழ்கரு பிள்ளையார்க்
கோரு மன்பின் விருந்தமு தூட்டினா
ராரு மெற்கரு ளாரமு தூட்டுவார். - 75



2746 - ஊட்டி யன்புயிர்க் கோரெழு சன்மமும்
வீட்டி யாளும் விரகர்சம் பந்தர்க்கு
நாட்டின் மிக்கநல் லாலவா யீதென்று
காட்டி னாரெற் கருங்கதி காட்டுவார். - 76



2747 - வார மிக்க மதுரையிற் சம்பந்தர்
சேர வாற்றியெண் ணாயிரந் தீக்கழு
வார வஞ்ச வமணருக் கூன்றினார்
பார வாங்கதிப் பாடெனை யூன்றுவார். - 77



2748 - ஊன்ற வுள்ளத்தி னுள்ள பொருளெலா
மீன்ற மாதொடு மின்றமிழ்க் கூடல்வா
ழான்ற சம்பந்தர்க் காக வொதுக்கினார்
மான்ற வென்னை மலநின் றொதுக்குவார் - 78



2749 - குவல யம்புகழ் கோமது ராபுரித்
தவல ரும்புகழ்ச் சம்பந்தப் பிள்ளையா
ருவமை தீரடித் தொண்டருக் கொல்லையே
கவலி றொண்டுசெய் வார்கன வானரே. - 79



2750 - வான வாழ்வு மதிப்பரி தாஞ்சிவ
மோன வாழ்வெனு முத்தியு நல்குமிக்
கான கூடன்மெய் யாறு முகத்திரு
ஞான சம்பந்தர் நாண்மலர்ப் பாதமே. - 80



2751 - வேறு.
பாதக மும்மல பந்தத் தாலுறு
நோதக வொழிதர நூலு ணர்ச்சிசான்
மேதக வோர்குழு மேவு மாலவாய்ப்
போதகன் கவுணியன் புகழ்வி ரும்புவாம். - 81



2752 - விரும்பிடப் படுவது மெய்ம்மை யாவதுங்
கரும்பினு மினிப்பதுங் கவலை தீர்ப்பதுஞ்
சுரும்புளர் நறுமலர்ச் சோலை யாலவா
யிரும்புகழ்ப் பிள்ளையா ரிணையில் சீர்த்தியே. - 82



2753 - சீர்மலி யாலவாய் திகழும் வானகம்
பேர்மலி கவுணியப் பிள்ளை யார்மதி
யார்மலி யவர்புக ழம்ம திக்கதிர்
நார்மலி யடியவர் சகோர நாளுமே. - 83



2754 - நாள்பல கண்டதென் மதுரை நற்றட
நீள்பல விதழ்மலர் நிலவு சம்பந்த
ராள்பல சீர்த்தியவ் வலரி லூறுதேன்
றாள்பல வளிக்குலந் ததைந்த வன்பரே. - 84



2755 - அன்பமை யாலவா யவிரு மோர்சிலம்
பின்பமை சம்பந்த ரினிய நீர்முகின்
மன்பெருங் கருணையம் மங்குல் பெய்யுநீர்
துன்பமி லடியவர் சூழு மாமயில். - 85



2756 - மயலகல் கூடல்லாள் வழங்கு வானக
முயல்புரி கவுணிய ரோங்கு கற்பகஞ்
செயன்மிகு பொருட்கொடை திருவ ருட்கொடை
யயல்விரா வடியவ ரளவில் வானவர். - 86



2757 - வானமும் புகழ்திரு மதுரை பாற்கடல்
ஞானசம் பந்தனார் நயக்கு நல்லமு
தூனமில் சைவர்க ளுவந்த வானவர்
தீனவெவ் வமணரே திதிதன் மைந்தர்கள். - 87



2758 - மைந்துசே ருதயமால் வரைதென் னாலவாய்
நந்துசீர் மழகதிர் ஞான சம்பந்தர்
முந்துபு முகமலர் முளரி சைவரே
சிந்திரு ளறிவிலா வமணர் தேரரே. - 88



2759 - தேருமின் கவுணியர் செய்ய சீரினி
தோருமி னவர்கனிந் துரைத்த மாமறை
சாருமி னாலவாய் சார்ந்து தாழ்வற
வாருமி னருங்கதி யகிலத் தியாருமே. - 89



2760 - மேவுதென் னாலவாய் விரும்பு புண்ணியன்
மூவுல கும்புகழ் முதல்வன் சம்பந்தன்
பூவுயர் பொன்னடி போற்று வார்மல
நோவுதீர்ந் துய்வது நுவல வேண்டுமோ. - 90



2761 - வேறு.
வேண்டாமை வேண்டேன் விழைந்தே திரிந்தேன்
பூண்டார் நினக்கன்பு பொய்ப்பாச மற்றா
ராண்டா தரிப்பா யருட்கூடன் மேய
தூண்டா விளக்கே தொழுஞ்சண்பை யானே. - 91



2762 - யானேது செய்கேனென் மனமெங்கு மோடுங்
கோனே தடுத்தாட் கொளிற்பொய்ய னுய்வேன்
றேனே கரும்பே திருக்கூடல் வாழம்
மானே பெருஞ்சண்பை வள்ளற்பி ரானே. - 92



2763 - பிரான்வேறும் வேண்டேன் பிதற்றித் திரிந்தே
னிராதார னாகாம னீயாண்டு கொள்வாய்
குராவாச மென்சோலை கொள்கூடன் மேவும்
பராஞான சம்பந்த பண்பாளர் பேறே. - 93



2764 - பேறே துதிப்பார் பெருஞ்சண்பை யாள
ரேறே தமிழ்க்கூட லின்பப் பிரானே
மாறே படும்புன் மனத்தேன் மதித்துன்
னாறே யடைந்துய்வ தறிகின்றி லேனே. - 94



2765 - ஏமங் குறித்தே யிருந்தே னதற்குன்
னாமங் குறித்தோத நாவைத் திருப்பேன்
பூமங்கை மேவும் புகழ்க்கூடல் வைப்பே
காமங்கை யாருட்பு காச்சண்பை வாழ்வே. - 95



2766 - வாழ்வான திருண்மாய மென்றெண்ண மாட்டேன்
றாழ்வான தேகொண்டு தடுமாறு கின்றேன்
சூழ்வான ரேத்தித் தொழுங்கூடல் வாழ்வே
யாழ்வாரி சூழ்காழி யாள்வார்க டேவே. - 96



2767 - தேவே கரும்பே தெவிட்டா ததேனே
கோவே திருக்கூடல் குடிகொண்ட பொன்னே
மாவேரி யொண்டா மரைத்தொங்கன் மார்பா
நீவேறு செய்தென்னை நீக்காம லாளே. - 97



2768 - ஆளா னவர்க்கே யருட்டே சுறுத்துந்
தோளாத முத்தே தொழுங்கூடல் வைப்பே
நீளாத ரத்தியாரு நின்றேத்து காழிக்
காளா யெனைக்கா கருப்பால் கடிந்தே. - 98



2769 - கடிமா மலர்ச்சோலை ககனந் துழாவும்
படிமே லெழுந்தண் பழங்கூடல் வைப்பே
கொடிமாட மிகுவெங் குருக்கொண்ட லேநின்
னடிமா மலர்க்கென்னை யான்செய்த பிழையே. - 99



2770 - பிழையாது செயினும் பிறக்கா தகற்று
மழையா ரருட்பெருமை வாழ்கவளர் கூடற்
றழையாறு முகஞான சம்பந்த குரவன்
விழையாறு நனிவாழ்க மிகவாழ்க சீரே. - 100

மதுரைத்திருஞானசம்பந்தசுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று


Comments