Pirapantattiraṭṭu XXI


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XXI
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 21 (2544 - 2644)
திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி.



[1] பழைசை - பட்டீச்சரம்; இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது.

சிவமயம்.

அழகியவிநாயகர் துதி.



2544 - ஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்
        பெருமா னிறையருட்குப்,
பாங்குபெறுவா னொருபதிற்றுப்
        பத்தந் தாதி யுரைசெய்ய
வாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்
        வாயைங் கரத்தலங்க,
டாங்கு சோதிக் குணப்பெருங்குஞ்
        சரக்கன் றடிகடலைக்கொள்வாம். - 1


நூல்.



2545 - பூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்
        றுயில்வோனும்,
நாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்
        பழைசை நாயகனே,
தேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்
        கருத்தி லிருத்தேற்கு,
மாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா
        னின்பே ரருட்கழகே. - 1



2546 - அழகா ருமையோர் பங்குடையோ யமர
        ரேத்துந் திருப்பழைசைக்,
குழகா கொன்றை முடிமிலைந்த கோமா
        னேநின் னடியரொடும்,
பழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி
        யேனைப் பவமென்னுந்
தழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்
        கொள்ள றக்கதே. - 2



2547 - தக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்
        கூற்றந் தனைவதைத்தாய்,
செக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்
        கொழுந்தோடரவணிந்தாய்,
முக்க ணுடையாய் திருப்பழைசை
        முதல்வா நின்றாட்கன்பில்லாப்,
பொக்க முடையே னானாலும்
        போற்றிக் கோடல் கடுனனக்கே. - 3



2548 - கடங்கால் பொருப்பி னுரிபோர்த்தாய்
        கண்ணார் நெற்றிப்புண்ணியனே,
விடங்கா லரவ மரைக்கசைத்த
        விடங்கா தடங்கணுமைபாகா,
தடங்கா மருவுஞ் செழும்பழைசைத்
        தலைவா பல நாணினைப்புகழா
தடங்கா வுள்ளம் பொறிவழியே
        யணுகத் திரிந்தேணுறவுள்ளே. - 4



2549 - உள்ளம் பொறியின் வழிநடையுற்
        றோடச் சுழன்றுமடமாதர்,
கள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே
        னாகித் திரிவேனைத்,
தெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து
        பணியப் பணித்தாண்டான்,
பள்ளவயற்கண் வளைமுத்தீன்
        பழைசைப் பதிவாழ் பெருமானே. - 5



2550 - மானேர் நோக்கி யொருபாகா மறைவாய்
        முழக்க நிறைபழைசைக்,
கோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா
        முக்கட்கொழுக்கரும்பே,
தேனே கனியே யன்பருளந் தித்தித்
        திருக்குந்தெள்ளமுதே,
வானே பெறினும் யானின்றாள்
        வழுத்து மன்பின்மாண்பருளே. - 6



2551 - மாணா வுள்ளப் பறவைமட
        மானார்மையற் கண்ணிவிழ,
நாணா துழன்று தடுமாறி நவவாய்ப்
        புழுக்கூ டதுசுமந்து,
வீணாள்கழிக்கு மறிவில்லேன் மெய்யா
        பழைசை யையாநின்,
பூணார் மலர்த்தாண் முடிக்கணிந்து
        புகழப் பெறுநா ளெந்நாளோ. - 7



2552 - என்னா யகனை விண்ணவருக் கிறையா
        யவனை மறைநான்கு,
முன்னா நிற்கும் வடிவானை மூவா
        தானை மூத்தானைப்,
பொன்னார் மேனிப் புய்லும்விரைப்
        பூந்தா மரைவே தனுநாடிப்,
பன்னாடிரிந்துங் காணானைப்
        பழைசை நகரிற் கண்டேனே. - 8



2553 - கண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்
        முடங்குமறிவிலிவாய்த்,
தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந்
        தன்மையெனக்கண் டுளங்களிப்புக்,
கொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்
        குளித்தேன் முகமலர்ந்தேன்,
விண்டேன் பண்டை வினைக்கடலை
        வேண்டேன் மற்றைத் தேவரையே. - 9



2554 - வரைமா திருக்கு மொருகூறு மழுமா
        னணிந்த திருக்கரமு,
மரைசேர் வேங்கை யதளுடையு மரவா
        பரணத் தகன்மார்பும்,
விரைசேர் கொன்றை முடியுமரை
        மேவுமடியும் வெளித்தோற்றி,
நரைசேர் விடையான் றிருப்பழைசை
        நகரி லருளப் பெற்றேனே. - 10



2555 - வேறு.
பெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்
        பெய்வளைகூறானைச்,
சுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்
        சுந்தரப் பெருமானை,
யற்ற மின்மதி முடியனைப் பொடியணி
        யையனைக் கரங்கூப்பிப்,
பற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்
        பவக்கடல் கடந்தாரே. - 11



2556 - கடத்த யானையின் சருமமே யங்கக
        பாயெனக் கொண்டானைப்,
படத்த ராவணி புயத்தனை நயத்திருப்
        பழைசையம் பதியானை,
நடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின
        நாடுவா ரெவரேனும்,
வடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்
        வாழ்த்தவீற் றிருப்பாரே. - 12



2557 - இருப்பை நேரும்வன் னெஞ்சனாய்
        மானமி லீனனாயெழிலாரும்,
மருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்
        வைத்துழன் றலைவேனைக்,
கருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்
        கண்ணிசூட்டிடச்செய்தான்,
பொருப்பை வாங்கிய புராதனன்
        பழைசைவாழ்புண்ணியப் பெருமானே. - 13



2558 - பெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்
        பெருங்கலந் தகர்ந்தோடத்
திருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்
        திறந்துணச் செயலின்றிக்,
கருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்
        கனிதருசெந்தேறல்,
பருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்
        பரம்பரன் விளையாட்டே. - 14



2559 - ஆட்ட மன்றிடைச் செய்பவன்
        பழைசைவா ழந்தணனந்தாத,
நாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய
        நண்ணியஞ் சலிப்பாரே,
வாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து
        வானிடைப் புகுந்தாங்கு,
வேட்ட போகமுந் துய்த்துப்பின்
        சிவபுர மேவிநன் குறைவாரே. - 15



2560 - வாரு லாமுலை மாதர்பா லாதரம்
        வைத்துழன் றலைவீர்காள்,
தேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்
        திருப்பழைசையிற்சென்றே,
காரு லாமணி கண்டனைக் கண்டுகண்
        களிப்புறத்தொழுதன்னா,
னேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ
        ரெழுபிறப் பறுமாறே. - 16



2561 - மாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை
        மதியிலா மடநெஞ்சே,
தாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்
        சார்ந்துசந்தனக்கொங்கை,
கூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை
        குவித்துக்கண் ணீர்வார,
நீறுகொண்டணிந் துருகிலை யெங்ஙன
        நிறையருள் பெறுவாயே. - 17



2562 - வாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்
        வணங்கவு மடங்காச்செந்,
தீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்
        செய்தவமுனமில்லேன்,
பேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்
        பிறைமுடிப் பெம்மானிற்,
றோயு மாறினி நின்னடிக் காம்பவந்
        தோன்றிடவருள்வாயே. - 18



2563 - அரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,
முரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,
விரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்
பணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே. - 19



2564 - தான வாறிழி தரவரு வாரணச் சருமமே னியிற்போர்த்த,
ஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,
கானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,
ஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ. - 20



2565 - வேறு.
அருவரை யேய்க்குங் குஞ்சரவுரித்தா
        ரமுதொழு கியமதி முடித்து,
மருவிய வரிண மழுவணி கைத்து
        மாண்டசெஞ் சூட்டகிப் பூட்டு,
கருநிற வேனங் காணருந் தாட்டுக்
        கனலவிர் மத்தகக்கட்டு,
தருவடர்பழைசை யென்னவென் னுளத்துஞ்
        சார்ந்தினி திருந்தபே ரொளியே. - 21



2566 - ஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு
        மொழுகுமுக் கடத்தகுஞ் சரத்தை,
அளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட
        வொருமுடச் சிறுவன்,
தெளிவுற நினைத்த தேய்க்குமாலடியேன்
        சிற்றறிவா னின்றன் பெருஞ்சீர்,
களியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்
        பழசையம் பரனே. - 22



2567 - அம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்
        டொடுமுழு வெலும்பு,
வெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்
        விரும்புமூண் வெய்யவெங் காளம்,
பம்புவெம் பேய்கள் படையெனி னருளார்
        பட்டிலிங் கேசனைப் பழிச்சு,
மும்பர்தம் பிரானை மண்ணுல கடியா
        ருற்றுநின் றேத்தலெவ் வாறே. - 23



2568 - எவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்
        திந்திரி யச்சுற வரித்துக்,
கவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்
        கதறுவேற் கின்னருள் புரிந்தான்,
மவ்வலங் கோதை தன்னையோர் பாகம்
        வைத்தவன் பட்டிலிங் கேசன்,
தெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்
        சிரித்தவன் றேவர்தம் பிரானே. - 24



2569 - தேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா
        செப்பரு மொப்பினின் குணங்கள்,
தாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்
        சரணடைந்தேனலேன் றோலுந்,
தீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்
        செறிமுடைத் தலைகளு நமக்கே,
யாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு
        மதிசயங் கண்டடைந் தேனே. - 25



2570 - ஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்
        திடுமொலி யெழுகட லடைக்கும்,
வானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்
        வாழ்த் தொலிமுகின் மாற்று,
மானமா முனிவர் மறைமுழக் கொலியெண்
        மாச்செவி களைச்செவி டாக்கும்,
ஞானநா யகனைப் பழசையிலடியே
        னாவழுத் தொலியெங்குப் புகுமே. - 26



2571 - எங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற
        தெடுத்துரை யாடிவீற் றிருப்பார்,
செங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்
        சிந்திப்பா ரவையெலா முணரேன்,
பொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்
        புகுந்தன னென்மன மலையுங்,
கொங்குலா மிதழிப் பட்டிலிங்கேசா
        குழைத்தெடுத் தாளுவை யெனவே. - 27



2572 - எனக்குநீ யருளு நல்வர மொன்றஃ
        தியாதெனி னெப்பிறப் புறினுங்,
கனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்
        கற்பகா டவிநிழ லிருந்து,
மனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து
        வாழினும் வரையிடை யுதித்த,
வனக்கொடி பாகா பட்டிலிங் கேசா
        மலர்புரை நின்னடிக் கன்பே. - 28



2573 - அடிநினைந் துருகித் தொடுமணற் கேணி
        யதனினுங் கண்களூற் றெடுக்கப்,
படிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்
        பாடிடே னாடிடேன் பணியேன்,
முடிவது மறியேன் மூர்க்கனே னெனையு
        முன்னிநீ யருள்புரி வாயோ,
பொடியணி மேனிப் புண்ணியா பழசைப்
        புராதனா பூரணப் பொருளே. - 29



2574 - பொருளலா வதனைப் பொருளென மதித்துப்
        பொறிவழிப் புலன்செலப் போக்கி,
மருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்
        செய்கையு மின்றித்,
தெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ
        சையில்விருப் புடையாய்,
இருளுலா மிடற்றா யமரர்நா யகநின்
        னிணையடிக் கறாதவன் பருளே. - 30



2575 - வேறு.

அன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்
பின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே
னென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ
தென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே. - 31



2576 - மேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்
காய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்
வேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான்
தீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே. - 32



2577 - கொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து
கள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்
தெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென
துள்ளமுநான் மறைமுடியு முறையிடமாக் கொண்டானே. - 33



2578 - ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்
கூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட
றானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ
வானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே. - 34



2579 - அடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்
தொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட
மடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்
புடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே. - 35



2580 - பட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்
மட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே
கட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்
ஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே. - 36



2581 - அடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்
முடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை
பொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்
கொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே. - 37



2582 - எய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று
பொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்
மெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்
செய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே. - 38



2583 - ஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்
தேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே
லூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்
வானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே. - 39



2584 - இருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்
மருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்
பெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்
டிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே. - 40



2585 - வேறு.
கொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்
தண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்
புண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ
வண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே. - 41



2586 - கலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா
நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்
கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு
மிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே. - 42



2587 - இயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி
வயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்
சயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்
தயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே. - 43



2588 - சீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்
தாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்
போரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்
வாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே. - 44



2589 - என்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி
மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்
பொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா
சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே. - 45



2590 - செய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்
கையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்
பொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி
யையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே. - 46



2591 - எங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்
றிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத
பங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா
ரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே. - 47



2592 - யானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி
வேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி
னூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற
பானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே. - 48



2593 - வணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்
குணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்
பணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்
மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே. - 49



2594 - அருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்
திருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை
யுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள்
கருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே. - 50



2595 - வேறு.
படவர வணிகலம் பலிக்க லந்தலை
யுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்
விடமுண வுடையதண் மேவக் கண்டும்வா
னடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே. - 51



2596 - ஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை
யோவருங் கல்லென வுருகித் தேம்பியே
பாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்
கேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே. - 52



2597 - பேரருண் மேனியன் பிறைமு டித்தவன்
தாரணி கொன்றையன் சரும வாடையன்
பார்புகழ் பழசையன் பதக னேனையு
மோரடி யானென வுயக்கொண் டானின்றே. - 53



2598 - இன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்
பொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்
பன்றிகண் டறிவரு பழசை வாணன்றா
ளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே. - 54



2599 - என்னினி யான்பெறு மிலாப மாவது
பன்னரும் புகழுடைப் பழசை நாயகன்
பொன்னடி மலர்தலை பூணப் பெற்றது
மன்னிய சீர்த்திவாய் வாழ்த்தப் பெற்றதே. - 55



2600 - பெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்
சிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை
யறக்கொடி பாகனை யமரர் நாதனை
மறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே. - 56



2601 - நெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்
வெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்
பஞ்சடி கூறுடைப் பழசைநாயகன்
செஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே. - 57



2602 - பின்னிய குழன்முடிப் பேதை பாகனார்
பன்னிய மறையொலிப் பழசை வாணனார்
பொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ
ரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே. - 58



2603 - அற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்
நற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை
சற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை
மற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே. - 59



2604 - செய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்
மெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா
மையனை யன்றிமற் றவரை நாயினேன்
கையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே. - 60



2605 - வேறு.
நோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை
யாக்கும் வாய னருளும் பழசையான்
தேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்
வாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே. - 61



2606 - துன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம்
புன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே
னின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்
கன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே. - 62



2607 - வையு லாமயின் மானு நெடுங்கணார்
மையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்
பைய ராவணி பட்டிலிங் கேசவென்
னைய வுய்ய வளித்தருள் செய்வையே. - 63



2608 - செய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா
நெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே
பொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்
மெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே. - 64



2609 - மேவி ராமன் வணங்கும் விமலனார்
தேவ தேவர் சிறக்கும் பழசையார்
தாவின் மெல்லடித் தாமரை வாழுமே
தீவி னைச்சிறி யேனுட் சிலையினே. - 65



2610 - சில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை
புல்லும் பாகன் புரக்கும் பழசையான்
எல்லை யில்வினை யாவு மடியனேற்
கொல்லை நீக்கின னோரில் வியப்பிதே. - 66



2611 - இதையந் தீமெழு கென்ன வுருகுவார்
புதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்
சிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா
ருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே. - 67



2612 - ஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை
தேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்
வாடு வீரிங்கு வம்மின் பழசையைக்
கூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே. - 68



2613 - கூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்
றேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்
தோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்
காத்த ளிப்பன் கருணை வடிவனே. - 69



2614 - வடியுண் கண்ணியோர் கூறன் மழுவலான்
பொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா
னெடிய பாத நினைப்பவர் யாங்கணு
முடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே. - 70



2615 - வேறு.
இருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்
றொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று
துருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி
மருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே. - 71



2616 - மணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்
பணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்
பிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி
னணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே. - 72



2617 - நாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு
வாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்
றோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா
ஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே. - 73



2618 - அரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்
வரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்
தெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்
பரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே. - 74



2619 - படரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்
கடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்
றொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று
மிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே. - 75



2620 - இனிய வாசக மிதுபறி தலையிக லருகர்
முனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்
புனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே
நனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே. - 76



2621 - நாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்
தூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்
பாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி
மேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே. - 77



2622 - ஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா
ஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்
வாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்
போத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே. - 78



2623 - உன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே
பன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்
மன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச
மன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே. - 79



2624 - ஆக மாதுற வருளிய பழசையம் மானே
யேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ
போக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்
வேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே. - 80



2625 - வேறு.
விளம்புவதொன் றுளதுனக்கு மடநெஞ்சே
        கேட்டியருள் வேட்டுநின்று,
வளம்புகுநன் மணச்சோலை வளர்பழசைப்
        பெருமானை வானோ ருய்யத்,
தளம்புதிரைக் கடனஞ்ச முண்டவனைக்
        கண்டுகரந் தலைமேற் கூப்பிக்,
களம்புனையா தாடிடுவை பாடிடுவை
        யவன்றிருத்தாள் காணுமாறே. - 81



2626 - காணியிது வெனமண்ணைக் கருதியரைக்
        காணியருள் வேறுங் காணா,
தூணியைபொன் மனைமாத ரெனவுழல்வீ
        ருய்யுமா றுரைப்பக் கேண்மின்,
சேணியைகற் பகந்தாழுஞ் செழுஞ்சோலைத்
        திருப்பழசைத் தேவதேவன்,
வேணியிலொண் புனறரித்தான் றாள டைமி
        னுங்கள்வினை வீயத் தானே. - 82



2627 - வீயாத பெருவாழ்விங் கடிமைநா
        யேற்கிதனின் மேலுமுண்டோ,
வேயார்மென் றடந்தோளி யொருபாகன்
        றிருப்பழசைமேவு மையன்,
தீயார்தம் புன்சமையத் தீநெறியிற்
        செலுத்தாது தேவர் வாய்வாழ்த்,
தோயாத தன்னடிக்கே யெனைப்புகுவித்
        தாண்டதையிங் குணருங் காலே. - 83



2628 - காலனார் விழச்சினந்த கழற்காலா
        பழசைநகர்க் கடவுள் கேட்டீ,
கோலவா ளரக்கன்முடி நெரித்துமண்டோ
        தரிக்கின்பங்கொடுத்தாய் நட்புச்,
சாலவியற் பகைபாற்சென் றென்னேற்றாய்
        பொன்னனையா டனக்கென் செய்தா,
யேலவிவை கண்டலவோ வம் மையுடற்
        பாதிகொண்டா ளென்செய் வாளே. - 84



2629 - செய்யேந்துந் திருப்பழசை யெம்பிரா
        னுடையின்றிச் சென்னியோடு,
கையேந்தி யரவசைத்துச் சண்ணித்த
        நீறுகவின் புதைப்பக்காள,
மையேந்து மிடற்றொடுசென் றிடுபலியேற்
        றான் கண்ட மாயோன் மாழ்கிப்,
பையேந்து மரவல்கு லாவானேற்
        பெண் கள்மயல் பட்டிடாரே. - 85



2630 - பட்டாரு மிடையாளைப் பாகத்து
        வையாயேற் பழசை வாணா,
கட்டாருங் குழலார்நீ பலியேற்ற
        ஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,
முட்டாத மால்கொண்டா னெடுமாலா
        தலினழகு முழுதுங் கண்ணுற்,
றெட்டாமன் மலர்மாதர் முதலரம்பை
        மாதரெல்லா மிகல்செய் வாரே. - 86



2631 - செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா
        ளையை விழியாற் சினந்து சுட்டீ,
ரையிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங்
        கற்றோய்த்த வாடை கொண்டீர்,
மையிருக்கு மணிமிடற்றீர் துறவி
        யர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,
பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு
        கொண்டதென்னை புகலு வீரே. - 87



2632 - வீரமழு வலந்தரித்த பழசைநகர்ப்
        பெருமானே வெய்யோர் மேவு,
மாரலொரு மூன்றுமெரித் தம்மூவர்
        நிரயம் வீழ்ந் தாழா தாண்டாய்,
சோருமறி வுடைநாயே னின்றிருத்தா
        ளன்றியொரு துணையுங் காணேன்,
சீரருடந் தாண்டிடினுய்ந் திடுவேன்
        கை விடில்வாடித் தியங்கு வேனே. - 88



2633 - வேனில்வேள் கணைகிழிக்கப் பொறிவழிச்சென்
        மனமலைப்ப வெம்பி வாடிப்,
பானலார் கண்ணியர்வாய்ப் பட்டுழலு
        வேற் குமருள் பாலிப் பாயோ,
கானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்
        போய்க் கழுநீர் பாயுந்,
தேனவாம் பொழிற்பழசைச் சிவபுரத்
        தில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே. - 89



2634 - குன்றனைய முலைமடவாள் கூறானை
        நீறானைக் கொன்றை வேய்ந்த,
பொன்றிகழ்செஞ் சடையானை விடையானைக்
        கருமிடற்றுப் புனிதன் றன்னை,
வன்றறுகட் கூற்றொடுங்கச் சினந்தானை
        மானேந்து மலர்க்கை யானை,
கன்றுகுணி லாக்கொண்டோன் காணானைப்
        பழசைநகர்க் கண்டே னியானே. - 90



2635 - வேறு.
கண்ட பேர்க்குடன் காணு மற்புதம்
பண்ட மாடமார் பழசை வாணனார்
வண்டு லாங்குழல் வல்லி பாகனார்
தொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே. - 91



2636 - ஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்
போற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்
கூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்
பாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே. - 92



2637 - வள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்
றள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்
கொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்
பள்ள வாவிசேர் பழசை யப்பனே. - 93



2638 - அப்பு லாஞ்சடைப் பழசை யையனே
துப்பு லாமிதழ்த் தோகை பாகனே
கப்பு லாவுடல் கழிய நின்னருள்
வெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே. - 94



2639 - வேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்
பூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா
மூண்ட வென்வினை விலக முன்னினு
மீண்டுய் வேனருள் பழசை யெந்தையே. - 95



2640 - எந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்
நந்த லில்சுக நல்க வேண்டினூல்
வந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்
பந்த நான்மறைப் பழசை பாடுமே. - 96



2641 - பாட வேண்டுநின் பழசை யம்பதி
கூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்
தேட வேண்டுநின் செம்பொற் சீரடி
வீட வேண்டுமென் வினைகள் யாவுமே. - 97



2642 - வினையி லாதவன் விடையொன் றுள்ளவன்
புனைந றுங்குழற் பூவை பங்குளான்
றனைய டைந்தனன் பழசை யந்தலத்
தினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே. - 98



2643 - எய்யு மாரனை யெரித்த வீரனார்
பைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்
செய்ய தாண்மலர் சிரத் திருத்தியே
யுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே. - 99



2644 - வம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்
கைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்
றெம்மை யாளென வெளிமை யின்மைவெம்
பொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே. - 100


திருப்பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி முற்றிற்று.
----------------

Comments