Pirapantattiraṭṭu XII


பிரபந்த வகை நூல்கள்

Back

பிரபந்தத்திரட்டு XII
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்



திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 12
திருவிடைமருதூர் உலா


திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 12
திருவிடைமருதூர் உலா

1705. ஆண்டபிள்ளையார் துதி.

    சீருலா வான்றோர் செவிக்க ணிடைமரு
    தூருலா வேற வொளிதரும்பை - யேருலவப்
    பூண்டமா தங்கமதுப் பூங்கொன்றை யாரளித்த
    வாண்டமா தங்க மது.

நூல்
1706. கலிவெண்பா.

    1 பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல
    மாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு

    2 மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற
    வைந்துதொழி லாற்று மருட்கொண்மூ - வைந்துதொழில்

    3 சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா
    னந்த மலையரைய னன்கீன்ற - சுந்தரப்பொற்

    4 கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான்
    றுன்னியெவற் றுந்தோய்ந்துந் தோய்விலான் - முன்னியமண்

    5 ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண்
    மோதிய வைந்தொழிற்கு மூலமாய்ச் - சோதி

    6 யுறுமுருவொன் பானுமுற்று மோருருவு மில்லான்
    மறுவின்மறை யாதி வகுத்தோன் - பெறுநெறியே

    7 யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப்
    போமுயிர்க்கே துன்பம் புணர்த்துவோ - னாம

    8 விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த்
    தெருள்சே ரிடையிற்கற் றீயா - யருள்சேருஞ்

    9 சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ
    னெத்தத் துவங்கட்கு மெட்டாதான் - முத்தன்றன்

    10 வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய
    நாமத்தைச் செய்விடமுன் னாள்யின்றோ - னேமத்தண்

    11 சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி
    வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோ - னல்லற்

    12 சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங்
    குறுகியிருள் கூடவைத்த கோமான் - றெறுபசியால்

    13 வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது
    தந்தமடைப் பள்ளி தனைக்கொடுத்தோன் - கந்த

    14 மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து
    ளலர்கட் கமலத் தழித்தோன் - பலர்வெருவத்

    15 தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக்
    கூற்றுயி ருண்ட குரைகழலான் - சாற்றும்

    16 பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார்
    முரணவிக்குங் கொன்றையந்தார் முன்னோ - னரணவரை

    17 மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால்
    கண்வைத்துங் காணாக் கழலினா - னெண்வைத்துக்

    18 கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல்
    வண்கையிடங் கொண்டவசி வாய்ப்படையா - னெண்கவினார்

    19 தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன்
    மன்னிரத நீர்வேணி வைத்தபிரான் - றுன்னுகணை

    20 வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன்
    றாளின் விரனுதியாற் றானடர்த்தோ - னாளும்

    21 புணரு மடியார் புரிபிழையு மேனோர்
    குணமு மிகந்தகுணக் கோமான் - மணமலிபூங்

    22 காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத்
    தோவினடஞ் செய்கயிலை யோங்கலிடை - மேவிநல

    23 மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந்
    தேவிக் குபதேசஞ் செய்தருள - மாவிற்கண்

    24 ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி
    யின்னலற நீவிற் றினிதிருக்கு - நன்னயவி

    25 சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச்
    சூடகச் செங்கைத் துணைகூப்ப - வாடமைத்தோ

    26 ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற்
    றங்கா தலியோ டமர்ந்தருளிப் - பங்காளுங்

    27 கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து
    மேதா வியர்புகழு மேன்மைபுனை - போதா;ருங்

    28 காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும்
    வாவி யிடைமருதூர் வாய்மேவ - வோவியநேர்

    தலவிசேடம்


    29. மின்னையு மாதவனும் வேதனுங் காணாத
    தன்னையு நாடிவந்த தன்னைபோற் - பன்னுபுகழ்

    30. வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ
    ரேகீ ரெனவந் திறுத்ததுபோல் - வாகார்

    31. திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும்
    விருப்புமிக நின்றேத்தும் வெள்ளிப் - பொருப்புப்

    32. பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா
    லொருமருத மாகியவ ணுற்ற - தருமையத

    33. னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித்
    தன்னிட நீங்காத் தலைவியைப்பார்த் - தின்னகையாய்

    34. மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப்
    பூவுல காக்கும் பொழில்பாராய் - தாவிமிசைப்

    35. பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப்
    பங்கமில்பொன் னாக்கும்விட பம்பாரா - யெங்குநின்மெய்க்

    36. காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி
    மாமையினன் காடு மயில்பாராய் - பூமருநஞ்

    37. சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று
    கூயமருந் தேமாங் குயில்பாராய் - மேயவிரு

    38. நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற்
    பைம்மேனி யாமாம் பழம்பாரா - யம்புலிக்

    39. கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர்
    மான்முதனீத் தாற்றிடுத வம்பாராய் - பான்மொழியே

    40. யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக்
    கொன்றுமகிழ் வாற்க ணுறைதுளிப்ப - வன்றதுமுற்

    41. காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென்
    பூணும் பெயரிலகப் பூண்டதன்மேற் - கோணிலவு

    42. சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா
    யோடி வடமேற் குதக்கெதிருங் - கூடுதடத்

    43. துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா
    னட்பாம் விதிக்கு ந்றுந்தடத்துப் - பெட்பா

    44. முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப்
    பெருத்தசிவ லோகமுற்ற பின்னர்த் - திருத்தவண்வாழ்

    45. தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய்
    வண்முனிவன் வந்துதவ மாமுனிவீர் - கண்ணொருமூன்

    46. றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை
    பற்றி முயலுமென்றப் பாற்போக - வெற்றி

    47. முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப்
    புனித தவம்புரியும் போது - நனிமகிழ்ந்து

    48. தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த
    வன்னேர் குழலு மவணடைந்து - பொன்னேர்

    49. வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன
    வளவிலா மாதவமங் காற்ற - வுளமகிழ்வுற்

    50. றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா
    ரம்மாவென் றியாரு மதிசயிப்ப - விம்மாநன்

    51. மேதினி நின்று வெளிமுகடு மூடுருவச்
    சோதியுருக் கொண்டெழுந்து தோன்றினோன் - றீதிலரு

    52. ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத்
    தானே யருச்சித்த தம்பிரான் - வானாட

    53. ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி
    யோதியருச் சிக்க வுவந்தருள்வோன் - போதியனீர்

    54. காகம் படியக் கனகவுரு நல்கிப்பி
    னேக வுருத்திரமெய் யெய்தவைத்தோன் - கோகநக

    55. மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி
    யாண்டமத வேழ மருச்சித்தோன் - பூண்டதவத்

    56. தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற
    கோதையொடு காட்சி கொடுத்தபிரான் - மேதை

    57. யொருவீர சோழ னொளிரா லயமும்
    வெருவா நகரமுஞ்செய் வித்துத் - திருவார்தைத்

    58. திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய
    வங்கட் கருணை யருளியகோ - னங்கண்மிரு

    59. கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை
    கொண்டுமிளிர் காட்சி கொடுத்தகோன் - றண்டாப்

    60. புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான்
    வரவுக் கெதிர்பார்க்கும் வள்ளல் - பரவுற்ற

    61. பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக்
    காசில்வினை யெச்ச மளித்தபரன் - காசிபன்றான்

    62. கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய
    வண்ணலது காட்டுவித்த வைம்முகத்தோன் - வண்ணக்

    63. குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி
    லமர நதியை யமைத்துத் - தமரமிகப்

    64. பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு
    கேசிக் கினிய கிளர்மதலை - வீசி

    65 யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த
    நினையுநதி யோரா நெறிக்கொண் - டினையலென

    66 வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக்
    கொன்னைக் குழமகனுங் கூடவந்து - முன்னையொரு

    67 வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர்
    மேவியெழுந் தென்ன வெளிவந்து - கூவிவரு

    68 மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச்
    சித்த மகிழ்ந்தருளிச் செய்தபிரா - னுத்தமச்சீர்

    69 வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ்
    சாய்த்தவுடற் கண்ணனுக்குந் தானுவந்து - பூத்த

    70 மதலைபல நல்கி வழிபட்டா ரென்று
    மதலைபல நல்கிய வள்ளல் - சுதமில்

    71 புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித்
    திகழ வழிபாடு செய்ய - மகிழ்சிறந்தோன்

    72 மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை
    மெச்சும் பராசற்கு வீட்டினோ - னச்சமிலா

    73 தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந்
    தேசார் மதிவணங்கத் தீர்த்தருளு - மீச

    74 னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு
    ணனைத்தவுடன் காயவைத்த நாதன் - வினைத்திறனோ

    75 ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த
    தெய்வப் பெருமான் சிவபெருமான் - குய்யம்வைத்து

    76 வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன்
    றேந்துபழிக் கும்பழிச்ச வீறுசெய்தோன் - போந்துதழல்

    77 காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண
    வீண்டரின்முற் றும்பரவ வீடழித்தோன் - மாண்ட

    78 குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி
    மறுவி லகோரவுரு வாய்ந்தோ - னுறுசீர்

    79 நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற்
    கருதியடை யாவண்ணங் காப்போன் - சுருதி

    80 நடையார் வருண னறுநீர் படியக்
    கடையார்சோத் தீப்படியக் கண்டோ - னடையுங்

    81 கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப்
    பெருமுழுநீர் மூழ்கவைத்த பெம்மான் - வருமொருதன்

    82 றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந்
    தாழ வுயர்த்துந் தனிமுதல்வன் - வாழ்வடைவா

    83. னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச்
    சாகா வரங்கொடுத்த தண்ணளியோன் - வாகான

    84. கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக்
    கண்ணன் களித்தருளுங் காபாலி - கண்ணுவணம்

    85. பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை
    மண்ணி யருளு மகாலிங்கம் - புண்ணியமே

    86. மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம
    தேவவுருக் கொண்டெதிர்ந்த தேவர்பிரா - னோவறமுன்

    87. கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு
    வாதனைப்பா டாணவுரு மாற்றுவித்தோன் - போதலர்கல்

    88. யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித்
    தேணறத்தீண் டிக்கொள்பழிக் கீறுசெய்தோ - னீணிலஞ்சே

    89. ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி
    வந்த கலியைக்கறுத்து மண்கொடுத்தோ - னந்துமதில்

    90. வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக்
    கள்ளக் கறுப்பகலக் கண்சிவந்தோன் - றள்ளரிய

    91. சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங்
    கூர்த்தவான் கங்கை குவலயத்தி - லார்த்துவரச்

    92. செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல
    கெய்தா விருக்க வினிதளித்தோன் - வையகத்துப்

    93. பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய
    வல்லார் மெய்க்கூற்றவனுக் கஞ்சவைத்தோன் - சொல்லுமந்நீர்

    94. வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும்
    வல்லா னெனச்சொல் வலியளித்தோ - னல்லார்

    95. திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர்
    புகழுற்றா டக்கருணை பூத்தோ - னிகழ்வற்ற

    96. வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன்
    வைத்தசா பங்கழுவ வைத்தவருண் - முத்த

    97. னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே
    ரிருகோட் டதற்கிடவுள் ளேய்ந்தோ - னொருவீர

    98. சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த்
    தீனமிலா வான்கைலை யேற்றினோன் - மானமிகு

    99. சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப்
    புத்திரனை நல்கும் புகழாளன் - சுத்த

    100. மறையோன் கனகதடம் வந்து படியக்
    குறையார் குருடொழித்த கோமா - னிறையோனோய்

    101 விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து
    மண்ணுலகை யாளும் வயவேந்தன் - றண்ணளிசேர்

    வரகுணபாண்டியதேவர் வழிபாடு.

    102 மன்னன் மதுரை வயங்கு வரகுணத்
    தென்னன் பெருங்கானஞ் சென்றொருநாண் - முன்னுகடு

    103 மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர்
    தீவேட்ட வேதியனச் செல்வழியின் - மேவி

    104 மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா
    லுயங்கிக் கழிய வுணரா - னயங்கெழுசீர்

    105 பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர
    வுற்றதெவை யாலு மொழியாம - னற்றவர்சூ

    106 ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு
    ளேல விடைமருதூர்க் கேகென்னச் - சாலமகிழ்

    107 பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத்
    தீர்த்தருளிச் செய்திடவத் தென்னவனு - மாத்தலமா

    108 மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா
    ளத்த கொடுமுடி யாவரணம் - வித்தகமாய்ச்

    109 செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி
    செய்துசூழ்ந் துங்கரவு தேரொருவன் - செய்யநுதல்

    110 வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து
    நண்ணீ றிலாதபொரு ணன்களித்து - மெண்ணிநரி

    111 யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென்
    றெள்ளரிய வாடை யினிதளித்தும் - விள்ளாத்

    112 தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று
    திவண்மணிபொன் வாரிச் சிதறி - யுவகையுற்று

    113 மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான்
    றள்ளுண்ட வெச்சி றனைநுகர்ந்துங் - கொள்ளா

    114 விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண்
    டிழிகணீ ரோடுகரத் தேந்திக் - கழிவுற்

    115 றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக்
    குடியாமோ வென்றிரக்கங் கொண்டும் - படர்தளிமுற்

    116 புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து
    நன்குறவேம் பிற்குவிதா னஞ்சமைத்து - மன்புமுதிர்

    117 பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை
    மன்னு மியற்பகைக்கு மாறாக - முன்னு

    118 முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந்
    தயர்வறநீ கொள்கென் றளித்தும் - பெயர்வரிதா

    119 வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு
    மன்னுபுகழ் முத்தி வழங்கினோ - னன்னிலைமைத்

    120 தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறா;ப்புண்
    வல்லை வலஞ்சூழ மாற்றினோன் - வெல்லுமவன்

    121 மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி
    முந்தவலஞ் சூழ்முன் முருக்கினோ - னந்துவசு

    122 மான்வந்து சூழ்போது மற்றவன்ற னா;டவனைத்
    தான்வந்து சூழத் தலையளித்தோ - னீனந்தீ

    123 ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ்
    வஞ்சப் பிரமகத்தி மாய்த்தபிரான் - விஞ்சுபுகழ்ப்

    124 பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந்
    தாசற் றிரண்டுயிர்வா னண்ணவைத்தோன் - மாசற்ற

    125 நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க
    வாரம் படுகருணை வைத்தபிரான் - வார்மீ

    126 னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி
    யிணங்குலகத் தெய்தவரு ளேந்த - லுணங்கன்மீன்

    127 கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத்
    தண்டலில்பொன் னாகச் சமைத்தபிரா - னண்டர்தொழப்

    128 பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத்
    தன்னுருவி லாவுருவந் தான்றெரித்தோன் - பன்னுபொரு

    129 ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக
    ளார்தரச் செய்ய வருள்வைத்தோ - னோரு

    130 மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர்
    சுணங்கனுக்கு முத்திதந்த தூயோ - னிணங்குபொடி

    131 மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான்
    றைப்பூச மாடத் தகுமென்றோ - னெப்பேது

    132 மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக
    மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர்

    133 தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக
    வண்மாந் துறையிரவி வைப்பாக - வெண்மாறா

    134 நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக
    மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணுந்

    135 தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர்
    மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - வுன்னிற்

    136 றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக
    விடைமருதில் வீற்றிருக்கு மீச னடைதருசீ

    137 ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து
    போற்றவருள் செய்த புகழ்ப்பெருமான் - மாற்ற

    138 மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும்
    வணங்கு மருதவன வாண - னணங்கயர்புற்

    139 றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல்
    லாலுடையான் யாவரையு மாளுடையா - னூலுடையார்

    140 நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங்
    கூடுவோன் பொன்செய் குளிர்மன்றத் - தாடுவோ

    141 னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ்
    சீராழி யங்கைமகட் சேருவா - னேராகச்

    142 சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து
    நன்மதிகொ டன்வத னத்தொகைகொ - டுன்னுதிதிப்

    143 புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக்
    கட்கொடி யேற்றிக் களிசிறப்ப - விட்குலவு

    144 குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத்
    தொன்று பலரு முடனெருங்க - வன்றுமுதற்

    145 காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும்
    வேலையினு மார்ப்ப வியன்மறுகின் - மாலைபெற

    143 வெற்பு நிகர விளங்குபல வூர்தியினும்
    பொற்பு மலிபவனி போந்தருளி - யற்புமுதி

    147 ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு
    மொன்பதா நாளென்னு மொண்டிருநாண் - மின்பயில்பூண்

    148 வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று
    மேய்ந்த துயினீத் தினிதெழா - வாய்ந்தசெழும்

    149 பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த
    வம்பொற் றிருமண் டபமணுகி - நம்புற்ற

    150 வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே
    கூறு மபிடேகங் கொண்டருளி - நாறுகுழற்

    151 பெய்வளைத்தோ ளெங்கள் பெருநல மாமுலைதன்
    மைவளையு நீல மலர்நோக்கான் - மெய்வளைத்த

    152 பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக்
    காரழகு மேனி கலந்ததென - வீரமலி

    153 காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை
    போர்த்தி யிருந்த பொலிவென்னச் - சீர்த்திமிகு

    154 பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத்
    தென்முகத்து வண்ணமெங்குஞ் சேர்ந்ததெனத் - துன்னுபிறர்

    155 தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த
    குப்பாய மெய்ப்புனைந்து கொண்டதென - வொப்பேது

    156 மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப்
    பல்லாருங் கண்டு பசப்பெய்திப் - புல்லாளப்

    157 பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும்
    பட்டான் மறைத்த படியென்னக் - கட்டார்கொ

    158 ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர்
    பாதியுரு வுங்கவர்ந்த பான்மையெனத் - தீதின்மணம்

    159 பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி
    யெங்குநெருக் குற்றே றியவென்னத் - தங்கு

    160 மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத்
    தணவாத் திருச்சாந்து சாத்தி - நிணமலிவாய்

    161 வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும்
    வேங்கை கொடுத்தகலை வீக்கியே - யோங்குபய

    162 னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச்
    சாய்ந்து நிமிர்ந்த தனியிடத்து - வாய்ந்தபுனற்

    163 பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன்
    மைவிழிகா ணாமன் மறைத்ததெனக் - கைவல்லா

    164 ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத்
    தோற்றுகதி ரென்று சொலக்கவித்துப் - போற்றுபுக

    165 ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம
    னேற்றுமகிழ் பூத்த வியலிடத்துச் - சாற்றுபுனன்

    166 மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள்
    செங்கை புதவஞ் செறித்ததெனப் - பங்கமிலா

    167 மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற்
    றூமகர குண்டலமுந் தொட்டணியா - வேமவரை

    168 யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர்
    குன்றுபட மெல்கிக் குழையிடத்து - நன்றுதரு

    169 போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த
    வாகு வலயம் வயக்கியே - மாகவின்செய்


    170 கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற்
    றஞ்சச் சிறைவைத்த வவ்விடத்தே - விஞ்சுபுகழ்
    171 மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா
    மன்னுமணிக் கட்டு வடமணிந்து - பன்னுமுமை

    172 வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட
    மட்டினிலா விற்றரள மாலையிட்டு - முட்டரிய

    173 தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல
    மேவிய வாயிடைமேன் மேற்புனைந்து - தாவா

    174 மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல்
    லிடங்கீண் டெழுந்த விடத்தே - மடங்காக்

    175 கருவி தனக்குக் கருதுபிற வேண்டா
    விருமை மணிக்கடக மிட்டுக் - கருது

    176 மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா
    யிலகுமிடத் தாழிபல விட்டு - நலமருவு

    177 பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து
    மன்னுதர பந்தம் வயக்கியே - துன்னியொரு

    178 பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து
    சென்ற விடத்துச் சிலம்பணிந்து - நன்றவற்றுட்

    179 கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன்
    கண்ட விடத்துக் கழல்கட்டித் - தண்டாத

    180 மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய்
    மாதங்க வுத்தரிய மன்னுவித்துத் - தாதுவிரை

    181 தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட
    மோவாதாண் மேவ வுவந்தணிந்து - பூவார்கை

    182 கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி
    யுண்ட கடுங்கூற் றுறையிடத்தே - தண்டலில்பா

    183 லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே
    னாறுதிரி புண்டரநா னத்திலகம் - வீறுகொள

    184 விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய
    நட்டினது வைத்த நயமென்ன - வெட்டுணையு

    185 மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த
    தேசு மிகுவா சிகைசேர்த்துப் - பேசுபுக

    186 ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர்
    மட்டுறுதா ராரூரன் மன்னுவகை - யுட்டுளைய

    187 நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென்
    றென்மலர்வா மத்தா ளிசைத்தூட - நன்மைதிக

    188 ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ்
    செம்மை யுறவுகொண்டு சீர்படைப்ப - மும்மைப்

    189 புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப்
    பவளக்காற் கண்ணாடி பார்த்துத் - திவள்பருப்புப்

    190 பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர்
    துங்கமடை நெய்மிதக்குஞ் சொன்றியளை - தங்கயினி

    191 பாகு கருனை பகரும் வறையறுவை
    யாகு மிலட்டுகமெல் லாவியப்பம் - போகுசுவை

    192 நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ்
    சோலை யுதவு சுவைக்கனியுங் - காலை

    193 யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய
    வளநீர் கனிபிழிந்த மாநீ - ரளவா

    194 வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக்
    குவைகொள்விரைப் பாகடையுங் கொண்டு - நவையரிய

    195 மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ
    யோதுபசா ரங்க ளுவந்தருளிக் - கோதறுசீர்

    196. வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற்
    றோய்ந்தவடி யாருஞ் சொலவந்த - வாய்ந்த

    197 வெழுதா மறையு மெழுது மறையும்
    வழுவாது கேட்டு மகிழ்ந்து - தொழுவார்

    198 நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய
    வயங்கு மொருகோட்டு மாவுஞ் - சயங்கொள்சத

    199 கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத்
    தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும் -பாடியலா

    200 வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங்
    கேட்டை யுற்ச்சிவந்த கேடிலியு - நீட்டுமொரு

    201 கைத்தலைநால் வேதங் கமழ்வாய்த் தலையொன்று
    வைத்தலைநெய்த் தோரேற்ற வானவனு - நித்தமுந்தன்

    202 னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத்
    தாய்மனை யென்றழைக்கத் தக்கோனுந் - தூயவையை

    203 நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை
    யோரும் படியருள்கொ ளொண்மழவுந் - தீராத்துன்

    204 பாய கடலமண ராழ வரையொடலை
    மேய கடன்மிதந்த வித்தகனு - மாயவன்கண்

    205 காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின்
    மாணாகப் பூத்துழல வைத்தோனுங் - கோணாது

    206 மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை
    யாக வியற்றிய வாண்டகையும் - பாகமிலாத்

    207 தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ
    டாதையிரு தாளடைந்த சான்றவனு - மோதைகெழு

    208 கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி
    வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை

    209 யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய
    வாய்நீர் பொழியன்பு மாமுகிலும் - பாய்மை

    210 தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண
    மகவரிந் தூட்டியசீ மானு - நகமறைக

    211 ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு
    மான்றசொல்லி சைக்க வமைந்தாளுஞ் - சான்றதிரு

    212 மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது
    குங்கிலியங் கொண்டுவந்த கொள்கையனும் - வெங்கொடியோன்

    213 கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த
    னேச மறைத்தறியா நீதியனும் - வாசமுறத்

    214 தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத்
    தாய்ந்தபுகழ் மற்றை யடியாரும் - வாய்ந்த

    215 வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை
    மலர்துழாய் நாறவைத்த மானு - நிலவு

    216 முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ
    துலகறிய வுண்டுமிழ்ந் தோனு - மிலகுநடங்

    217 கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று
    கொண்டே விளங்கு குணத்தவருந் - தண்டேறல்

    218 பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச்
    செய்தவ ரென்னுமற்றைச் செய்தவருங் - கையிற்

    219 குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி
    வடவளை கட்டுண்ட மாலு - மிடவளையப்

    220 பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந்
    நாமேல்வெண் மாதுவைத்த நான்முகனு - மாமே

    221 வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி
    யிருசுவர்க்கம் வைகு மிறையும் - பொருவரிய

    222 வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த
    கற்பக மாலைக் கடவுளரும் - பொற்பகலாத்

    223 தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு
    வேந்தா மதுகுவிக்குவ் வெண்கதிருங் - காந்தாப்

    224 பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி
    யொலிபடைத்த பூதகணத் தோரு - மலியுமிசை

    225 பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ்
    சித்த ருரகர்முதற் செம்மையரு - முத்தமமீ

    226 தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற்
    றுண்போர் பலரு ளுயர்ந்தோனும் - பண்போ

    227 ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும்
    மணிக்கோவை சூட்டியகோ மானும் - பிணிக்கோதி

    228 லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற்
    கேதிலரா காதியற்று மெல்லோரு - நீதிநெறித்

    229 தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின்
    மிக்க திருக்கூட்ட மேன்மையரு - மொக்கவரப்

    230 பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா
    னண்பார்சந் தான நனிதழைக்க - விண்பார்

    231 புகழ வருங்குரவர் போரேறு ஞானந்
    திகழவரு மானந்தச் செல்வ - னிகழ்வி

    232 றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக்
    குறவுபூண் டெவ்வுயிரு முண்மை - பெறவுவக்கு
    233 ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு
    சான முடையார் தனித்துணைவன் - மானத்

    234 திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை
    மருவா வருநமச்சி வாயன் - பொருவா

    235 வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப்
    பிரமணிய தேசிகனெம் பெம்மான் - பரவுமுண்மை

    236 தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென
    வோங்குதிருக் கூட்டத் துடன்மேவ - வீங்குசெம்பொற்

    237 றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற்
    றூரும் பிறவுமுவந் தூர்தருபல் - லோருள்ளு

    238 முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப்
    பின்னூர்வோ ரம்முறையே பெற்றூரப் - பொன்னூரு

    239 மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத்
    தன்பணியி னந்தி தலைநிற்பக் - கொன்பரவு

    240 வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு
    மூரி விடைக்கொடி முன்போத - வேரிவரு

    241 மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன்
    ஞாலவட்டஞ் சொல்பலவு நண்ணிமொய்ப்பக் - கோல

    242 முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன
    வெழுவெண் குடைமே லிலகப் - பழுதில்

    243 பதலை முழவம் படகந் திமிலை
    முதல முகிலின் முழங்க - நுதலினொளிர்

    244 கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம்
    பெண்ணுடையான் வந்தான் பிரான்வந்தா - னெண்ணினருக்

    245 காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான்
    றாய்தந்தை யில்லா தவன்வந்தான் - பாய்தந்த

    246 நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை
    வல்லா ரணிமருத வாணன்வந்தான் - புல்லார்

    247 நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான்
    வயந்தழைவெங் கூற்றுதைத்தான் வந்தா - னயர்ந்தயன்மால்

    248 சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம்
    மூவா முழுமுதன் மூர்த்திவந்தான் - றாவாத

    249 பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று
    சின்னம் பலவுமெதிர் சேவிப்ப - வன்னமணி

    250 யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு
    மேத்திமறை வாழ்த்த வினிதெழுந்து - தாத்திரிநின்

    251 றம்பொன்முடி யண்ட மளாவவெழு கோபுரநற்
    பைம்பொன்மணி வாய்தல் பலகடந்து - செம்பொன்மலர்

    252 தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி
    னேற்ற வழியே யெழுந்தருளித் - தோற்றத்

    253 தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி
    னிலங்கு திருத்தேர்மே லேறி - நலங்கொளரி

    254 யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண்
    டாதரத்து மேவவந்த வன்னமெனச் - சீதநிழல்

    255 வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த
    கேழ்கிளர்செந் தார்ப்பசுங் கிள்ளையெனத் - தாழ்சடைமேன்

    256 மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த
    மன்னு கலாப மயிலென்னப் - பொன்னிறங்கைத்

    257 தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த
    கூய்க்குலவு தேமாங் குயிலென்னச் - சேய்க்குமுன

    258 மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த
    வாவு மிளமட மானென்னத் - தாவாத

    259 வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக்
    கொண்டருகு வந்த கொடியென்ன - மண்டு

    260 சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா
    யிடையடைய வந்தமின லென்ன - வுடையதனைக்

    261 கோணில் பிரணவ குஞ்சர மென்பதுளம்
    பேணி யடைந்த பிடியென்ன - வாணிலவு

    262 விண்ணுலக மேயபல மின்னாரும் வாரிதிசூழ்
    மண்ணுலக மேய மடவாரு - நண்ணுபெரும்

    263 பாதலத்து மேய பலமா தருமாட
    மீதலத்துஞ் செய்குன்ற மேனிலத்தும் - பூதலத்துஞ்

    264 சோதிமணிச் சாளரத்துஞ் சூழ்பசும்பொன் மன்றிடத்தும்
    வீதியிடத் துஞ்சதுக்க மேவிடத்து - மோதிமநேர்

    265 மாடமலி சோபான வைப்போ டரமியத்து
    மாடகஞ்செய் வேதி யதனிடத்தும் - பாடமையு

    266 மின்னென்று சொல்சடையீர் வின்மா ரனையெறித்த
    தென்னென்று கேட்க வெழுந்துநிற்ப - தென்னக்

    267 குருமுடிக்கா ரோடுறவு கொள்ளவிழைந் தென்னப்
    பெருமுடிக்கா ரோதி பிறங்கத் - திருமுடியில்

    268 வாழும் பிறைவடிவும் வண்ணமுமொத் தேமென்று
    வீழும் பொடிநுதன்மேன் மேல்விளங்கப் - போழுங்

    269 கருவிழிச்சேல் கங்கை கலப்பமுயன் றென்னப்
    பொருவிலிரு பாலும் புரள - வொருவின்முடி

    270 யவ்வாய் மதிநட் பமைந்தவரக் காம்பலெனச்
    செவ்வாய் மலர்ந்துசுவைத் தேனூற - வொவ்வா

    271 வலக்கணுற வுற்று வயங்குகம லம்போ
    னலக்க முகம்பொலிவு நண்ண - நிலக்கண்

    272 டனைவேய்கொண் டாங்குறவு தாங்கொளவுற் றென்னப்
    புனைவேய் வளைத்தோள் பொலிய - வனையும்

    273 வரையைக் குழைத்த வரைகுழைக்கு மாபோல்
    விரையக் குவிமுலைகள் விம்மப் - புரையறுதன்

    274 கண்ணெதி ராகாக் கணைமதவே ளன்றென்னு
    மெண்ணெதி ராகா விடைதுவள வண்ணவரைத்

    275 தன்பணியை வெல்லத் தருக்கியெதி ருற்றெனச்செம்
    பொன்பணி யல்குல் புடைவீங்க - நன்புவியோ

    276 ரெண்ணியறேர் யாத்த வெழிலரம்பை முற்றும்வெலக்
    கண்ணியடைந் தாங்குக் கவான்பொலியப் - புண்ணியத்தன்

    277 பாடியறேர் மேவப் பழகுதல்போற் றன்பழைய
    நீடியறேர் மேவுபத நேர்சிறப்பக் - கூடி

    278 யெழுகடலு நாண வெழுந்தபெரு வெள்ள
    முழுகு நெடியசடை மோலி - யொழுகழகும்

    270 வையமிகழ் தக்கன் மகக்கூற் றவதரித்த
    செய்யவிழி நெற்றித் திருவழகு - முய்யப்

    280 பகலிரவு செய்யம் பகத்தழகும் வேத
    மகலரிய செவ்வா யழகும் - பகரடியார்

    281 மெய்த்தசுவைச் சொல்லமுதே வேட்ட செவியழகு
    மொய்த்த கருணை முகத்தழகு - மொத்துலகங்

    282 காத்தமணி கண்டக் கறுப்பழகு மேருவலி
    தேய்த்த தடந்தோட் சிவப்பழகும் - வாய்த்தசிவ

    283 ஞானங் குடிகொ ணகுபூண் முலையுழக்குந்
    தானமெனு மார்வத் தனியழகு - மானகுநீ

    284 ரோடையெனுந் தன்முகத்தி னொண்கணெனும் பூவமைக்குங்
    கூடையெனுஞ் செந்தாட் குலவழகும் - வாடையுத

    285 வெண்ணுற்ற வில்லோ வெனும்வா சிகையழகு
    நண்ணுற்ற புன்மூர னல்லழகுங் - கண்ணுற்றார்

    286 மாலானார் கண்ணிமைப்பு மாறினா ரோவியமே
    போலானார் நெஞ்சம் புழுங்குவார் - சேலான

    287 கண்முத்தஞ் சூடிக் கதிர்த்தமுலை மேற்பழைய
    வெண்முத்தம் போக்கி வெதும்புவா - ரொண்மைச்

    288 சுரிகுழ றாழ்ந்திடையைச் சூழ வுடுத்த
    விரிகலை போக்கி மெலிவார் - பிரிவரிய

    289 நன்னா ணெடுகதிரு நாணுமணி கோத்தபல
    மென்னாணும் போக்கியுளம் விம்முவார் - பொன்னான

    290 கன்று கழன்றகறல் காணா ரிளந்தென்றற்
    கன்றுகழ லாதடைதல் கண்டயர்வார் - நன்றுநன்று

    291 பொன்செய்த செஞ்சடையார் போற்றியா - நோக்கியதற்
    கென்செய்தா ராலென் றிரங்குவார் - மின்செயொரு

    292 பங்காட்டி செய்தவமே பாடுற் றதுவீணே
    யங்காட்டி நாம்பயில்வ தம்மவென்பார் - செங்காட்டுப்

    293 பிள்ளைப் பழிகொண்டார் பெண்பழிக்கு நாணுவரோ
    கொள்ளைப் பழிகொள் கொடியரென்பார் - வள்ளைப்

    294 பயம்பணையார் கூடற் பழியஞ்சி யாரென்
    றியம்பு வதுமுகம னென்பார் - நயம்படரப்

    295 பொங்கரவப் பூணுவந்தீர் புன்க ணுதவுமக்குச்
    சங்கரென் னும்பேர் தகாதென்பார் - துங்கமிகு

    296 வேய்வன மேவல் விரும்பீரெம் பொற்றொடித்தோள்
    வேய்வன மேவல் விரும்பீரோ - காயரவின்


    297 வாயமுது கொண்டு மகிழ்வீரஞ் செம்பவள
    வாயமுது கொண்டு மகிழீரோ - மேயமலர்க்
    298 கொங்கைச் சிலம்பு குழைத்தீரெம் மார்பிடங்கொள்
    கொங்கைச் சிலம்பு குழையீரோ - பங்கமிலிப்

    299 பொற்றேர் விரும்பிப் புண்ர்ந்தீரெம் மல்குலெனும்
    பொற்றேர் விரும்பிப் புணரீரோ - கற்றலஞ்சேர்

    300 வாழை யடவி மருவினீ ரெங்குறங்காம்
    வாழை யடவி மருவீரோ - தாழ்விழியாச்

    301 சீத மதியைமுகஞ் சேர்த்தீரெம் பொன்வதனச்
    சீத மதியைமுகஞ் சேரீரோ - நாதவரு

    302 டாவென்ற வோரன்பர் தம்பாற்சென் றுன்மனையைத்
    தாவென்ற தூர்த்தருநீர் தாமலவோ - மாவென்றிப்

    303 பூதஞ் செயும்படையீர் பொன்னனையாள் பாலிரத
    வாதஞ்செய் தன்புற்றார் மற்றெவரோ - சீதமலர்

    304 மட்டார் புனன்மதுரை வாழ்வணிக மின்னார்கை
    தொட்டாரும் வேறுமொரு சுந்தரரோ - கட்டார்கொ

    305 ளோதியமைப் பாராநீ ரோரரசன் முன்கொடுத்த
    மாதினையெவ் வேதுவினுள் வைத்திருப்பீர் - மோது

    306 புரத்தை யெரித்ததுமெய் போர்புரித லால்வேள்
    புரத்தை யெரித்ததுநீர் பொய்யே - சிரத்தையின்மாற்

    307 காழி கொடுத்தநுமை யாதரித்த நாங்கள்கைப்பல்
    லாழி யிழப்ப தழகாமோ - வாழ்தேவூர்க்

    308 கன்றுக் கிரங்குங் கருணையீர் தீருமெங்கைக்
    கன்றுக் கிரங்காவன் கண்மையெவ - னன்றோர்

    309 நகரி லமண்சுருக்கி நங்கூறை தீர்த்திந்
    நகரி லமண் பெருக்க னன்றோ - புகரில்

    310 கருங்குயிலும் பாலடக்கக் கற்றீர் வருத்துங்
    கருங்குயிலெம் பாலடக்கக் கல்லீர் - நெருங்குமுலை

    311 யுள்ளிடத்தும் வைத்தீ ரொருத்தி கவர்ந்துகொண்டு
    தள்ளிடத்து மெம்மைவைத்த றாஞ்சகியீர் - வெள்ள

    312 மடக்குந் திறலீரெம் மம்பகம்பெய் வெள்ள
    மடக்குந் திறல்சற்று மாளீர் - கடுப்பின்

    313 மதிமயங்கா வண்ணமுடி வைத்தீர் பரவெம்
    மதிமயங்கா வண்ணம்வைக்க மாட்டீர் - புதியகரு
    314 மஞ்சமையு மெங்கண் மணிக்கூந்தற் கட்டவிழ்ப்பீர்
    பஞ்சவடிக் காங்கொலெனப் பார்த்தீரோ - வஞ்சம்

    315 பயில்கொக் கிறகு படர்சடைவைத் தீர்வெங்
    குயில்பற் றிறகெவனீர் கொள்ளீர் - வெயிலின்

    316 மணியுடைநும் பூணுணவு மாற்றும் விரத
    நணியனகொ றென்ற னடுக்கும் - பிணிதவிர்மெய்

    317 யந்திவா னென்றே யமைத்தோ மமைப்பதற்கு
    முந்திக் குவிந்த முககமல - நந்திப்

    318 பரவு சடைமுகிலைப் பார்த்தவுடன் சொல்லாய்
    விரவு குயிலொடுங்கி விட்ட - வுரவிற்

    319 றிகம்பரரா நும்மைத் தெரிந்தடைந்த யாமுந்
    திகம்பரரே யாகிச் சிறந்தோஞ் - சகம்பரவு

    320 மத்திக் கருளி யறங்கொண்டீ ரெங்கண்முலை
    யத்திக் கருளி யறங்கொள்ளீர் - பத்தியருக்

    321 கேற்று வருவீ ரிடர்க்கடலுண் மூழ்குமெமக்
    கேற்று வராமை யியம்புவீர் - போற்றியனும்

    322 மேனிதழ லென்றுரைப்பார் மெய்யே யருகடைந்தே
    மேனிதழ லாய விதத்தென்பார் - மேனா

    323 ளுணங்கன்மீன் றுள்ள வுவந்தீர்நீர் கண்மீ
    னுணங்கன்மீ னாக வுவப்பீ - ரிணங்கு

    324 மிடைமருதா னந்தத்தே னென்பா ரருளா
    வடைவினிம்ப நெய்யென் றறைவோ - முடையவரே

    325 கோதை தரினுவப்புக் கூடு மறுக்கின்மிகு
    வாதையுறு மென்னுமட வாருளொரு - பேதை

    பேதை


    326 விடராய வாடவராம் வெவ்வரவம் பற்றத்
    தொடரா மதிப்பிஞ்சு தோலா - நடமுடையார்

    327 தேறுந் திறத்தமருந் தெய்வமரு திற்பறந்
    தேறுஞ் செயலி லிளங்கிள்ளை - மாறுபடு

    328 சூர்மாவென் றுள்ளந் துணிந்ததோ நாமறியோ
    மூர்மா விவர்ச்சி யுறாதகுயி - றார்மார்

    329 படலுடைய மார னவாவியினி தேறத்
    திடமருவு றாதவிளந் தென்றல் - படம்விலக்கி

    330 யென்மார்பி னில்லா விரண்டு புடைப்பன்னாய்
    நின்மார்பி லுற்றமைசொ னீயென்பாள் - பொன்மார்பத்

    331 தேறுகைத்தா ரன்ப ரிதயம்போல் வஞ்சமுதன்
    மாறு விளையா மனத்தினா - டேற

    332 வல்லையே பாலிம் மரப்பாலைக் கூட்டமுலை
    யில்லையே யார்கொடுப்பா ரென்றழுவாள் - வல்லா

    334 ரெழுதுமொரு பூசையைக்கண் டின்றே கிளிக்குப்
    பழுதுவரு மென்றோட்டப் பார்ப்பா - டொழுகுலத்தின்

    335 முற்று தமிழ்விரகர் முன்னமணர் வாதம்போ
    லுற்றுமுடிக் கப்படா வோதியாள் - பற்று

    336 குடியிற் பொலிமாதர் கொண்டநாண் போலக்
    கடியப் படாக்குதம்பைக் காதாள் - படியி

    337 லடுக்கும்விடங் கொள்ளா வராக்குருளைப் பல்லே
    கடுக்கு மெனப்புகலுங் கண்ணாண் - மடுக்குமுயி

    338 ரொன்று கழிதரமற் றொன்றுபுகு மூலருடம்
    பென்ரு கரையு மெயிற்றடியா - டுன்று

    339 வினைபெற்ற மேருவல்லா வெற்பினங்கள் போனாண்
    டனையுற் றறியாத் தகையாள் - வனையுங்

    340 குழலும்யா ழுங்கைப்புக் கொண்டடீமென் றெண்ணி
    யுழலுமா றோர்சொ லுரைப்பா - ளழகு

    341 பருவ மிரண்டுட் பருவமே யொப்பப்
    பெருக வளைந்த பிணாக்க - டெருவி

    342 னெருங்கப் புகுந்து நிறைகல்வி யான்றோர்
    சுருங்கச் சொலன்முதலாத் தோற்றி - யொருங்கு

    343 பொருள்புணர்த்திப் பாடப் பொலிசெய்யுண் முன்னந்
    தெருளுணர்ச்சி சாலாச் சிறியர் - மருள்வகையிற்

    344 பாடுகின்ற செய்யுளெனப் பற்பலவாஞ் சிற்பமெலாங்
    கூடுகின்ற மாடக் குலமுன்னர் - நீடுபெரு

    345 வீடுசிறு வீடென்று மேன்மே லுறவியற்றிக்
    கூடு மவர்புனையுங் கோலமென - நாடுவிரற்

    346 கோலம் புனைந்து குலாவி யவருவக்குஞ்
    சீல மெனவுவக்குஞ் செவ்வியிடைச் - சாலு

    347 மருவு முருவு மனலும் புனலு
    மிருவுங் கொடையு மிரப்பு - மொருவா

    348 விரவும் பகலு மினனு மதியும்
    புரவு மழிப்பும் பொருந்திப் - பரவுசிறப்

    349 பாணுருவும் பெண்ணுருவு மாலா லமுமமுதுங்
    காணு மரவுங் கலைமதியும் - பேணுதிறல்

    350 யோகமும் போகமு முள்ளா ருரைபலவு
    மேகமு மாய விடைமருதர் - மோகப்

    351 பெருந்தேர் நடத்திவரப் பெட்டனைமா ரோடவ்
    வருந்தேர் தொழுதற் கடைந்து - திருந்துமனை

    352 மார்வணங்கும் போது வணங்கினாண் மான்முதலோர்
    நேர்வணங்குந் தெய்வவுரு நேர்கண்டாள் - காரும்

    353 வணங்கோதி யன்னை வதனமலர் நேர்பார்த்
    திணங்கோ திவர்யாவ ரென்றா - ளணங்கே

    354 யிடைமருது வாழீச ரெல்லா வுலகு
    முடையர் நமையா ளுடைய - ரிடையறநன்

    355 றூரும் விடைகருட னூர விடைகொடுத்தார்
    சாருந் தமைப்புணர்ந்து சாத்தனையீன் - றாருங்

    356 கொடிபுணரச் செம்பொற் கொடிகொடுத்தார் மூன்று
    கடிமதிலும் வேவக் கறுத்த - வடியுடைப்பே

    357 ரம்புசுமந் தெய்வ வகத்தியனார் தம்மைக்கொண்
    டம்பு கொடுத்த வழகரென - நம்புமிவ

    358 ரித்தெருவிற் றேரேறி யேன்வந்தார் சொற்றியென
    முத்தமொளிர்ந் தென்ன முகிழ்நகைசெய் - தத்தரிவர்

    359 நம்மையெலா மாட்கொண்டு நாம்வேட் டவையளிக்க
    வம்மையொடும் வந்தா ரறியென்னச் - செம்மைமயி

    360 லப்படியா னானன்றே யையர்முடி யம்புலியென்
    கைப்படியு மாறு கரையென்னச் - செப்பும·

    361 தந்த விடம்பெயர்ந்தா லந்தோ வுருக்காண
    லெந்த விடத்து மிலைகண்டாய் - முந்த

    362 முனிதக்கன் சாப முராரிமுத லோருந்
    தனிதக்க தென்னத் தகுமோ - வனிதா

    363 யெனவதனைக் கூவமன மில்லையெனிற் கைம்மான்
    றனையெனக்கு வாங்கித் தருதி - யனையேயென்

    364 றோத வி·தென்னென் றுண்ணகைத்தம் மான்முழக்கஞ்
    சாத மெவர்செவிக டாமேற்கும் - போத

    365 வொருமுழக்கஞ் செய்யி னுதிருமே யண்ட
    முருமுழக்கம் யாவுமிதற் கொப்போ - திருவே

    366 யடங்குகென மற்றதுவு மப்படியே லாட
    றொடங்குமரப் பாவைக்குச் சூட்டத் - தடங்கொளிவர்

    367 தோண்மே லணிந்த தொடையா வதுவாங்கென்
    றாண்மேற் கலைதொட் டலைத்திடலும் - வாணெடுங்க

    368 ணன்னை முனிவாள்போ லாங்கு முனிந்தொருநீ
    பின்னையெச்ச தத்தர்தரு பெண்ணல்லை - முன்னைத்

    369 தவம்பெரிது வேண்டுவாய் தன்னை யடக்கென்
    றவஞ்சிறிது மில்லாதா ளாற்ற - நிவந்த

    370 திருத்தேரை யப்பாற் செலுத்துதரங் கண்டு
    திருத்தே ரனையொடுமிற் சென்றாள் - பொருத்துசிலை

    371 கோட்டாது வண்டுநாண் கூட்டாது வாளியொன்றும்
    பூட்டாது வேடேர்ப்பின் போயினான் - மீட்டுந்

    பெதும்பை

    372 ததும்பு மணிக்குழைதோ டாம்வருடி யாடத்
    ததும்புகொடி போலுமொரு தையற் - பெதும்பை

    373 யலரும் பருவ மடுத்ததென்று மைந்தர்
    பலருமெதிர் பார்க்கவொளிர் பைம்போ - திலகுமெழின்

    374 மாட மிசைத்தவழு மாமுகிலின் றோற்றங்கண்
    டாடமனங் கொள்ளு மழகுமயி - னீடுகடல்

    375 கூடிக் கடைநாள் குடநின்றுந் தேவர்கலந்
    தேடிப் புகுதாத தெள்ளமுத - நீடுசண்பை

    376 நாட்டிறைவ னாரெண் ணகத்தமண ரைச்செயல்போற்
    கூட்டிமுடித்த குழலினாள் - வேட்டுவஞ்ச

    377 முந்து களவு முனிவுங் குடிபுகுத
    வந்துவந்து பார்க்கும் வரிவிழியா - ணந்து

    378 கறியமைத்தார் தள்ளுங் கருவேப் பிலைபோ
    லெறிகுதம்பைக் காதி னியலா - ளறிகயத்தின்

    379 கொம்பு வெளிப்படன்முற் கூர்முனை தோற்றுதல்போல்
    வம்பு முலைதோற்று மார்பினா - ணம்புபல

    380 பூமாலை சூடுதற்கும் பூணாரம் பூணுதற்கு
    மாமாலை தாக வமைந்துள்ளாள் - காமரசப்

    381 பேறுங் குலமாதர் பேணும்பூ ணென்னுநாண்
    வீறுஞ் சிறிதரும்பு மெய்யினா - டேறுசிலை

    382 வேளா கமத்தின் விதம்புகல்வார் வார்த்தைசற்றுங்
    கேளா தவள்போலக் கேட்டமர்வா - டாளாம்

    383 பெரும்பகையெண் ணாதுவரை பேர்த்தான்போற் கொங்கை
    யிரும்பகையெண் ணாத விடையா - ளரும்புபெருங்

    384 காதலுடைத் தோழியர்கள் கைகலந்து சூழ்தரமிக்
    காதலுடை வாவி யணைந்தாடிச் - சீதப்

    385 பலமலருங் கொய்து பனிமாலை கட்டி
    நிலமலரு மாதவிநன் னீழல் - குலவுபளிங்

    386 காரப் படுத்தெழின்மிக் காக்கியதா னத்தமர்ந்து
    சேரப் படைக்குந் திறல்படைத்தா - னோர்தான்

    387 படையா தமைந்த பரிகலநல் கூரு
    முடையா தெதிர்ந்தமத வோங்கல் - புடையாருங்

    388 கொம்புபட்ட போர்வை கொடுத்த தனியூரு
    மம்புவிட்ட தின்மை யதுதெரிந்துஞ் - சம்பு

    389 விடாதுவா ழூரும்விதி வீநா ளரசு
    படாதுவா ழூருமருட் பற்றுக் - கெடாது

    390 பதியே பசுவாய்ப் பயங்கொடுத்த வூரும்
    விதியேமே னோக்குதிறம் வெய்ய - கொதிதழலுக்

    391 கன்றிப் புனற்கென் றதிசயிப்பச் செய்யூரு
    மன்றிமதன் றீக்குவிருந் தாமூரு - நன்றிதரு

    392 தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்தபின்னும் வேறோருவர்க்
    கண்டாய்விற் போற்றவருள் காலூரு - மண்டிப்

    393 பிறந்தார் பிறவாத பேரூரு நாளு
    மிறந்தா ரிறவாத வூருஞ் - சிறந்தநலத்

    394 தாட்டை விரும்பி யடுபுவியு மாடரவு
    மோட்டை படாம லுறையூரு - மேட்டைதவிர்

    395 கன்னியொரு பாற்கலந்து காலில்கட கம்புனைந்து
    மன்னியிட பத்து வரைத்தனுக் கொண் - டுன்னியொரு

    396 தம்பத் துதித்தசிங்கந் தான்றருமுட் சாத்தணிவார்
    கும்பத் துதித்துக் குலவூரு - நம்புபொறை

    397 யாதியடை யானு மரிக்கரிய செங்கமலப்
    போதியைய மார்பேற்கப் பூட்டூருஞ் - சோதிமணி

    398 வாய்திறந்து பாடி மணியம் மனைகொண்டு
    தாதியரோ டாடுஞ் சமயத்தி - லோதி

    399 மழையனைய வோரணங்கு வந்து பணிந்து
    கழையனைய செஞ்சொற் கனியே - விழையு

    400 மொருபாற் பசப்பா யொருபாற் சிவப்பா
    யிருபாலு மொன்றி னியையும் - பெருமான்

    401 கொடுங்கோளூர் மேய குழகன் கொடுமை
    விடுங்கோ ளிலியுமமர் மேலோ - னொடுங்கா

    402 விடைச்சுரத்து வாழ்வா னிடைமருத மேயா
    னடத்துதிருத் தேரணித்தே நண்ணிற் - றடத்தியெழு

    403 சேவிக்க வம்மெனச்சூழ் சேடியர்க ளோடெழுந்தா
    ளாவிக் கினியான்மு னண்மினா - டேவியொடு

    404 வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டுவளை
    யேற்றிருக்கு மங்கை யிணைகுவித்தா - ளூற்றிருக்கு

    405 முள்ளங் குழைய வொருத்தியிவர் பாலமர்ந்தாண்
    மெள்ள வவளார் விளம்பென்றாள் - கள்ளமில

    406 மாதே யனைத்தும் வருந்தாது பெற்றவணா
    மாதேய மற்றவளே யாதாரங் - கோதேயா

    407 வன்னையவ ளேயுலகுக் காக்க மெனக்கோடி
    பின்னையது நாம்பெற்ற பேறுகா - ணென்ன

    408 வெனையு மருகே யிருக்கவைப்பீ ரென்னப்
    புனையு மலர்க்குழலார் பூவாய் - நினையுந்

    409 தரமோவத் தாயர் தமக்கேயல் லாதப்
    புரமேவ யார்க்குப் பொருந்து - முரமேவ

    410 நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம்
    போயவர்பூ ணாகிப் பொலியுமே - தூயமன

    411 மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர்
    தேனக்க கோதைகளுஞ் சென்றேறி - மேனக்க

    412 பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி
    விஞ்சவெவர் கற்களுமெய் மேவுமே - துஞ்சு

    413 மிருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும்
    பொருவரிய மேனி புகுமே - மருவுசிலை

    414 வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை
    வேடரெச்சி லும்முணவாய் மேவுமே - நாடுமறை

    415 நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலா
    நாறும் பரிகலமா நண்ணுமே - தேறுமொரு

    416 மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரு
    மான்மோ கினியாய் மணப்பரே - நான்மறைசொல்

    417 வல்லா னவனையன்றி மாலா தியபசுக்க
    ளெல்லாம் பிரம மெனப்படுமே - வல்லார்

    418 திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவுந்
    திருவருட்பா வென்னச் செலுமே - பொருவா

    419 வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
    பிரமணிய தேசிகன்போற் பேண - வுரனமையா

    420 வெல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே
    நல்லாயென் சொன்னாய் நகையன்றோ - சொல்லாதே

    421 யோலையிட்ட வள்ளை யொருத்திபோன் மாதவத்தான்
    மாலையிட்டாய் கொல்லோ மறவென்ன - மாலை

    422 யிடுவேனிப் போதென் றெழலு முருகர்
    தொடுமாலை யன்றே சுமக்க - வடுமாறில்

    423 வேழஞ் சிதைத்ததுகொன் மேதகுமூக் கோர்மயிற்குத்
    தாழவரி வித்துச் சமைந்ததுகொல் - வாழி

    424 திருமான் முகத்திற் றிருக்கா யதுகொல்
    பொருமானின் கைத்தொடையிற் பூண்பூ - வெருவாத

    425 கண்ணப்பர் பாதங் கமழ்செருப்புத் தோயுமென
    வெண்ணப் படுவ திதற்குண்டோ - கண்ணன்முழந்

    426 தாளில் விசயன்முன்னாட் சாத்தியபூ வோவிந்த
    நாளினின்கை மாலை நறியபூ - வாளா

    427 விருத்தியென்றா ளெண்ணியது மிப்படியோ வென்று
    விருத்தியுற சென்றமன மீட்டாள் - பொருத்தி

    428 மடக்கினான் வின்னாண் மதவேள் சினத்தை
    யடக்கினான் றேர்ப்பி னடைந்தான் - விடற்கரிய

    429 செங்கைநடத் தாரப்பாற் றேர்செலுத்தல் கண்டந்த
    நங்கைமனை நோக்கி நடந்தாளோர் - மங்கை

    மங்கை


    430 திரையிற் பிறவாத தெள்ளமுத மோங்கல்
    வரையிற் பிறவா வயிரந் - தரையிற்

    431 பிறந்த மதியமைந்தர் பேராசை கொள்ளச்
    சிறந்த பசுங்காம தேனு - வுறந்த

    432 புரிகுழல் கட்டவிழ்க்கும் போதா டவர்த
    மரிய மனமுங்கட் டவிழ்ப்பா - டெரியமுடி

    433 செய்துமலர் சேர்த்துச் செருகும்போ தேபனித்தல்
    செய்யுயிருஞ் சேர்த்துச் செருகுவாள் - வெய்யவிட

    434 முண்டா னுமிழ்ந்தான்கொல் லோவென்று மால்பிரமன்
    கண்டா னடுங்குமிரு கண்ணினா - டண்டாமை

    435 கொண்டமைந்தர் நெஞ்சங் குடிபுகுந்தா டப்பொன்னாற்
    கண்டதிரு வூசலெனுங் காதினா - ளண்டம்

    436 வளைத்தாள் கதிர்மதிய மாக்களங்க மாற்றி
    முளைத்தா லனைய முகத்தா - டிளைத்தபெருங்

    437 காமரச மெல்லாங் கமழ வடைத்தசிறு
    தாமச்செப் பென்னுந் தனத்தினா - ணாமமறத்

    438 தன்னை யறிந்துபரந் தானேயென் பான்பொருவத்
    தன்னை யறிந்து தருக்குவாள் - கொன்னே

    439 பெருத்து முலைகணமைப் பின்பு வருத்தத்
    திருத்துமெனத் தேர்ந்த விடையாண் - மருத்துப்

    440 பொதியமலை நின்றுவரப் போயேற்பாள் பின்ன
    ருதியமைதீப் போல்வ துணராண் - மதிய

    441 மெழுந்துவரக் கண்டுவப்பா ளீதே வடவைக்
    கொழுந்துபொரு மென்றுட் குறியாள் - செழுந்தரளக்

    442. கோவை புனைந்து குவட்டருவி யொத்ததென்று
    பூவை யொருத்திசொலப் புந்திசெய்வா - டாவிக்

    443. கரைகட வாத கடல்போல வன்னை
    யுரைகட வாமே யுறைவாள் - வரையின்

    444. பகையிந்தி ராணி பணைமுலைதோய் காலந்
    தகையினுளங் கொள்ளுந் தகையா - ணகைசெய்

    445. மனைமுகப்பி லெண்ணின் மடவாரோ டெய்தி
    நினையு நிலாமுற்ற நின்று - புனையு

    446. முலைப்பகை யாகி முளைத்த துணர்ந்து
    தலைப்பகை கொண்டுசெங்கை தாக்கு - நிலைப்பென்னப்

    447. பந்தடித்து முத்தம் பலமுகத்து நின்றுதிரச்
    சந்தத் தனத்துமுத்தந் தாம்பிறழ - நந்த

    448. விளையாடு போதில் விரும்புதாய் வந்து
    வளையாடு செங்கைமட மாதே - யிளைய

    449. ரியங்கு தலைமாற்று மெண்ணமோ மேலாய்
    வயங்கு துறவுமடி யாதோ - பயங்கொள்

    450. கருப்புவில்லி காணிற் கனகமய மான
    பொருப்புவில்லி யோடு பொரவோ - விருப்பார்

    451. திருமங்கை கண்டறிஞர் செந்நா வகத்த
    மருமங்கை யாதன் மதித்தோ - வருமந்த

    452. பொன்னே மணியே புறவே பசுமயிலே
    மின்னேயிவ் வாடல் விடுகென்ன - வந்நேர

    453. மண்டம் புவன மனைத்தும் விளராமற்
    கண்டங் கறுத்த கருணையான் - பண்டு

    454. வெருவருமா லாதிவிண்ணோர் மெய்வலியெ லாஞ்சிற்
    றொருதுரும்பு கொண்டளந்த வும்பன் - பெருவரையைப்

    455. பண்டு குழைத்த படிகருதா தம்மைசெங்கை
    கொண்டு தழுவக் குழைந்தபிரான் - மண்டுபுலா

    456. லேங்கொடுக்க மாட்டாதென் றெங்கட் குரைத்தொருவர்
    தாங்கொடுக்கும் போதெல்லாந் தானுண்டா - னீங்கிடுமின்

    457. பொன்மேனி மாதர் புணர்திறத்தை யென்றுரைத்துத்
    தன்மேனி யோர்பாலோர் தையல்வைத்தான் - பன்மாடக்

    458. கூடல் வழுதியடி கொண்டு பலவுயிர்க்குஞ்
    சாட லமையாத் தழும்பளித்தா - னாடு

    459. மொருவன் றலையை யுகிராற் றடிந்து
    பொருவில்கழு வாயெவர்க்கும் பூட்டுந் - திருவ

    460. னறிந்தடிமை செய்வார்பொன் னாடை யுடுக்கச்
    செறிந்தசிறு தோலுடுக்குஞ் செல்வ - னறந்தழைய

    461. வெல்லா முடையா னிறத்தல் பிறத்தலிவை
    யில்லானென் றெல்லாரு மேத்தெடுப்பான் - வல்ல

    462. விடைமருத வாண னிமைக்குந் திருத்தே
    ரடையவணித் தேகண் டணைந்தாள் - புடைவிரவு

    463. தையலா ரோடு தடங்கைகுவித் தாண்மாலு
    மையலார் மேனி வனப்புணர்ந்தா - ளையோ

    464. முளையாத காம முளைத்ததுசெங் கைவில்
    வளையா மலர்சொரிந்தான் மார - னிளையா

    465. ளுடுக்கை நெகிழ வுறுவளைகை சோர
    விடுக்கை யடைந்து மெலிந்தாள் - கடுக்கை

    466. புனைவான் கடைக்கண் பொருத்தினான் போல
    நினைமூர றோற்றி நெடுந்தேர் - தனையப்பா

    467. லுந்தினான் வேளுமுடன் றொன்றுபத்து நூறுமேற்
    சிந்தினா னாகிச் செருச்செய்தான் - முந்தித்

    468. தலையமைந்த தோழியர்கைத் தாங்கத் தளரு
    தலையடைந்தாண் மாளிகையுட் சார்ந்தா - ணிலைநின்று

    469. காதள வோடுங் கருங்கண்ணா ரெல்லாருஞ்
    சீதள மெல்லாஞ் செயப்புகுந்தார் - போத

    470. வவைக்குப் பொறாளா யயர்தல்கண்டு காமச்
    சுவைக்குத் தகுதோழி சொல்வா - ளெவைக்குந்

    471. தகச்செய்தா னீங்குந் தகாமை செய்தாற் பெண்கா
    ணகச்செய்வ தாகு நலமோ - மிகப்படுத்த

    472. மாந்தளிரை நீக்கி மகாலிங்க மேயமரு
    தாந்தளிரைச் சேர்த்தா லறமுண்டே - காந்த

    473. வணிதரளம் போக்கி யமரர்பெரு மான்கண்
    மணிபுனையிற் சாந்தம் வருமே - பிணிசெய்

    474. பனிநீரைப் போக்கிப் பரமர்சடை மேய
    பனிநீரைப் பெய்தல் பயனே - கனிசந்

    475. தனம்போக்கி யையர் தவளப் பொடியின்
    மனம்போக்கு மின்மறுக்க மாட்டாள் - சினந்த

    476. பலமொழியா லென்ன பயன்மருத ரென்னு
    நலமொழியே யென்று நவில்வீர் - குலவிசெய்ய

    477. வாம்பன் மலரை யகற்றி யமையமரு
    தாம்பன் மலரை யணிந்திடீர் - மேம்படிவை

    478 யல்லாற் பிறிதுசெய லத்தனையுந் தக்கன்மக
    மொல்லாதே யாயதிற மொக்குமே - யெல்லா

    479. மறிவீரென் றோத வறைந்தமொழி யெல்லாஞ்
    செறிநோய் மருந்தாய்த் திருந்த - வெறியார்

    480. தடந்தார்க் குழலியுயிர் தாங்கி யமர்ந்தாள்
    விடந்தா னெனப்பொலியும் வேற்கண் - மடந்தைவலி

    மடந்தை.

    481. முற்றிச் சிலைவேண் முதுசமரா டற்குயர்த்த
    வெற்றிக் கொடியின் விளங்குவாள் - பற்றுமல

    482 ரைங்கோ லுடையா னரசு நடாத்திக்கொள்
    செங்கோ லனையபெருஞ் செவ்வியா - டிங்கட்

    483 குடையான் மகுடமெனுங் கொங்கையளன் னானே
    யுடையா னெனப்புகறற் கொத்தா - ளிடையா

    484 வனைய னினிதமரு மத்தாணி யென்னுந்
    தனைநிகரி லல்குற் றடத்தாள் - புனையுங்

    485 கிழக்குமுத லெத்திசையிற் கிட்டினுஞ்சோர் வித்தாள்
    வழக்கறுக்கும் பார்வை வலியாண் - முழக்கறிவி

    486 னேய்ப்பெய் துறாமுனிவ ரெல்லார் தவங்களையும்
    வாய்ப்பெய் திடுங்கவவு வாணகையாள் - பார்ப்பினிய

    487 வோதியாஞ் சைவலத்தா லொண்முகமரந் தாமரையாற்
    கோதியலா மைக்கட் குவளையா - லாதரச்செவ்

    488 வாயாங் கழுநீரால் வண்காதாம் வள்ளையா
    னேயார் கபோலமெனு நீர்நிலையா - லேயு

    489 மதரமாஞ் செங்கிடையா லங்கழுத்தாஞ் சங்கால்
    பொதியுமுலை யாம்புற் புதத்தா - லிதமாய

    490 வுந்தி யெனுஞ்சுழியா லொத்தமடிப் பாமலையாற்
    சந்தி பெறுமுழந் தாண்ஞெண்டா - லுந்துகணைக்

    491 காலாம் வராலாற் கருதப் பொலிந்தபுறங்
    காலா மொளிர்பொற் கமடத்தா - லேலாவெங்

    492 காமவிடாய் பூண்டு கலங்கா டவர்மூழ்கி
    யேமமுறும் வாவி யெனப்பொலிவா - டாம
    493 மணிநிலா முற்றத் தளவிலார் சூழ
    மணிநிலா வெண்ணகையாள் வைகிக் - கணிதமறத்

    494 துன்றுபன்மே லண்டத் தொகையுங் கடந்தப்பாற்
    சென்று பொலியுந் திருமுடியு - மொன்றுதிற

    495 லென்று மதியுமிவை யென்னப் பகலிர
    வென்றும் விளைக்கு மிருவிழியு - நன்றமைய

    496. மும்மை யுலகு முகப்பவே தாகமங்கள்
    செம்மை யுறவிரித்த செவ்வாயு - மம்ம

    497. வடுக்கு மிரவு மவிரும் பகலு
    முடுக்கும்வளி வீசுமென் மூக்குந் - தடுப்பரிதா

    498. யெந்தப் புவனத் தெவர்கூறி னாலும·
    தந்தப் பொழுதேயோ ரஞ்செவியு - முந்தவரு

    499. காவருநங் கூற்றடங்கு காரா கிருகமென்று
    தேவர் பரவுந் திருக்கழுத்து - மேவு

    500. பெருந்திசைப்போக் கன்றிப் பிறிதில்லை யென்னப்
    பொருந்தி வயங்கும் புயமுந் - திருந்திய

    501. விண்ணுலகுங் கீழுலகு மேல்கீழு மாகவைத்து
    மண்ணுலக மேயாய் வயங்கரையு - நண்ணு

    502. மெழுபா தலமு மிகந்துமால் கண்டு
    தொழுமா றிலாத்தாட் டுணையு - முழுதாள்வோன்

    503. மன்னு மிடைமருத வாண னருட்பெருமை
    யுன்னுந் திறத்தா ளொருத்தியைப்பார்த் - தென்னே

    504. யிடைமருதென் றோது மிதன்பெருமை யாரே
    யடைய வகுப்பா ரணங்கே - யுடையவரே

    505. பேணு மருதின் பெருமை யெவருரைப்பார்
    காணுந் தரமில் கயிலைகாண் - பூணுமன்ப

    506. ரெல்லாரு நாவரச ரென்ன வடநாட்டிற்
    செல்லா திருக்கத் திருந்தியதா - னல்லா

    507. யிதுகண்ட நாமற் றெதுகாண்டல் வேண்டு
    மதுகண் டவரா யமைந்தேஞ் - சதுர

    508. ருருத்திரர்க ளோர்பன் னொருகோடி யாரும்
    பொருத்த முறவந்து போற்றுந் - திருத்தகுசீ

    509. ரிந்தத் தலமேய தித்தல மான்மியமற்
    றெந்தத் தலத்திற் கியைந்துளது - நந்த

    510. விழிதலை யொன்றனைக்கை யேந்தியொரு வேந்த
    னழிதுயர் பூண்டதெங்கென் றாயா - யிழிதருநாய்க்

    511. கட்டந் திருமுற் கலப்பதோ வென்றிறைகை
    யிட்ட முடனெடுத்த தெத்தலத்தில் - வட்டமதில்

    512. சூழுமது ராபுரியிற் றொட்ட பழிநீக்கி
    வாழும் படிபுரிந்த மாத்தலம்யா - தேழுலகும்

    513. போற்றுமொரு தன்னுருவைப் பொன்னுருவி னிற்புகுத்தி
    யேற்றும் பெருமையுற்ற தெத்தலங்காண் - கூற்றமஞ்சு

    514 மிந்தத் தலத்துதிக்க வெத்தவஞ்செய் தோமென்று
    சந்தக் குயின்மொழியா டானுரைத்து - நந்தக்

    515 களிக்கும் பொழுது கசிந்தார்க்கே யின்ப
    மளிக்கும் பிரான்றே ரணுக - வெளிக்கணந்த

    516 மாதரொடும் வந்து வணங்கினாள் காண்பார்க்கு
    மோத மளிக்கு முகங்கண்டாள் - காதற்

    517 றிருத்தோளுங் கண்டா டிருமார்புங் கண்டாள்
    பெருத்தாண் மயக்கம் பெருவே - ளுருத்தான்

    518 பலகணைதொட் டெய்தானப் பைங்கொடிதான் சோர்ந்து
    சிலதியர்மேல் வீழ்ந்து திகைத்தா - ளலமருவா

    519 ளென்னை யுடையா னிவள்செய்கை நோக்கானாய்
    நன்னயத்தே ரப்பா னடத்தினான் - பின்னைத்

    520 தொடர்ந்து செலுமதனன் றோகைமேற் பல்லே
    வடர்ந்து செலப்பெய் தகன்றான் - கிடந்தவளாய்ச்

    521 சோருங் கருங்குயிலைத் தோழியர்கள் கைத்தாங்கிச்
    சாரு மனையிற் றகப்புகுத்தி - நேரு

    522 மலரணையின் மேற்கிடத்தி யான்ற பனிநீ
    ருலர்தர மேன்மேலு மூற்றிக் - குலவுநறுஞ்

    523 சாந்தமுங் கோட்டித் தகுசிவிறிக் காற்றெழுப்பக்
    காந்துவது கண்டு கலங்கினாண் - மாந்தளிர்மு

    524 னாயவுப சார மனைத்துஞ் செயலொழிமி
    னேயமுள தேலென்பா னீவீரென்று - தூய

    525 மணிவாய் திறந்தாண் மருதரே யும்மைப்
    பணிவாருக் கீதோ பயன்கா - ணணியல்

    526 சடைமே லதுகொடுத்தாற் றத்துதிரைக் கங்கை
    விடைமேலீர் நும்மை வெறுப்பா - ளடையு

    527 மிடத்தோ ளதுகொடுத்தா லெவ்வுலகு மீன்ற
    மடப்பாவை கோபநுமை வாட்டு - மடுத்த

    528 வலத்தோ ளணியன் மருவ வளித்தாற்
    சொலத்தா னொருவருண்டோ சொல்லீ - ருலத்துயர்தோள்

    529 வெய்ய சிலையாரூன் மென்றுமிழ்வ தாயிருந்தாற்
    செய்ய மணிவாய் திறந்தருள்வீ - ரையரே

    530 யார்த்தார் கழைவண் டமைத்தொரு பூத்தொடுக்கப்
    பார்த்தா லலவோகண் பார்த்தருள்வீர் - சீர்த்தகதிர்

    531 பன்மோதி னீருயிரைப் பாற்றிடுவ லென்றுதலை
    கன்மோதி னாலன்றோ கைதருவீர் - நன்மையெனுங்

    532 கோளெறிந்த தந்தை கொடுவினையை நோக்கியவன்
    றாளெறிந்த போதன்றோ தாரருள்வீ - ராளும்

    533 பிரியமுடை யீரென்று பேரருள்செய் வீரென்
    றிரியுமுயிர் தாங்கி யிருந்தா - ளரிவை

    அரிவை.

    534 யிளையான் குடிமாற ரெய்ப்பொழிப்பான் சென்று
    முளைவாரும் போதுநிகர் மோகம் - விளைகுழலா

    535 டேவர்க்கூ றாக்கினரைத் தேர்வலெனுங் கண்ணப்பர்
    கோவச் சிலைநேர் கொள்ளுநுதலாள் - காவற்செய்

    536 நெல்லுண்டாள் பாலுண்சேய் நீக்கலற மென்றேற்றார்
    கொல்லுண்ட வாள்போற் கொடுங்கண்ணாள் - சொல்லரசர்

    537 பேராலப் பூதிப் பெயரா ரமைத்ததடத்
    தேராரும் வள்ளை யெனுஞ்செவியாள் - சீரார்

    538 கணநாதர் நந்தவனக் கட்சண் பகம்போன்
    மணநாறு நாசி வடிவாள் - புணருமருள்

    539 வாயிலார் தொன்மயிலை வாரித் துறைப்பவளச்
    சேயிலார்ந் ?தோங்குகுணச் செவ்வாயா - ணேயமுற

    540 முன்னங்கண் ணப்பர் முறித்தமைத்த கோற்றேனி
    லின்னஞ் சுவைகூரு மின்மொழியா - ளன்னம்

    541 பயில்கட னாகையதி பத்தர் துறையிற்
    பயில்வெண் டரளமெனும் பல்லா - ளியலருளப்

    542 பூதியார் முன்னம் புரிந்த தடக்கமலச்
    சோதியா மென்னச் சுடர்முகத்தா - ளாதியருட்

    543 சம்பந்த மேவவொரு தண்டீச னார்நிறைத்த
    கும்பந்தா மென்றேத்து கொங்கையாள் - வம்பவிழ்தா

    544 ரானாயர் முன்ன மரிந்தெடுத்துக் கொண்டவே
    யேநாமென் றோது மி?ணைத்தோளா - ளானாத

    545 மூல ருறையநிழன் முற்றக் கொடுத்துவப்பி
    னாலரசின் பத்திரம்போ லல்குலாண் - மேலா

    546 யிலகியசம் பந்தரோ டேற்ற வமணர்
    குலமெனத் தேயுமருங் குல்லா - ணலவரசாஞ்

    547 சிட்ட ரமுதுசெயத் திங்களூர் நாவரசு
    தொட்ட கதலித் துடையினா - ளிட்ட

    548 மடுத்த வதிபத்த ரங்கை யெடுத்து
    விடுத்தவரால் போற்கணைக்கால் வீறாண் - மடுத்தவருட்

    549 கண்ணப்பர் கையிற் கலந்ததவ நாய்நாவின்
    வண்ணப் பொலிவின் வருபதத்தாள் - வண்ணஞ்

    550 சிறக்கு மொருசித் திரமண்டப பத்தி
    னிறக்குங் குழலார் நெருங்கப் - பறக்கு

    551 மளியினங்கள் பல்ல வளகத் தலம்பக்
    களிமயிலிற் சென்று கலந்து - தெளிய

    552 விருக்கும் பொழுதோ ரெழில்விறலி வந்து
    பருக்குமுலை யால்வளைந்த பண்பின் - முருக்கிற்

    553 சிவந்ததா டாழ்ந்து திருமுன்னர் நிற்ப
    நிவந்த கருணையொடு நேர்பார்த் - துவந்து

    554 வருபாண் மகளே வடித்தகொளை வீணை
    யொருவாது கொண்டருட்பே றுற்றார் - திருவாய்

    555 மலர்ந்ததிருப் பாட்டனைத்தும் வாய்ப்பப்பா டென்ன
    வலர்ந்த முகத்தி னவளு - நலந்தழையும்

    556 பத்தர்யாழ்ப் போர்வையப்பாற் பாற்றி யெதிரிருந்து
    வைத்த நரப்பு வளந்தெரிந்து - புத்தமுத

    557 வெள்ளம் படர்ந்தென்ன வேணுபுர நின்றெங்க
    ளுள்ளம் படர்ந்த வொருதமிழும் - பள்ளப்

    558 பரவை சுமந்தமணர் பாழியிற்கல் வீழ்த்தா
    தரவை யடைந்த தமிழு - முரவங்

    559 குரித்தவா ரூர்த்தெருவிற் கூற்றுதைத்த கஞ்சஞ்
    சரித்திடச் செய்த தமிழும் - பரித்தவுயிர்

    560 தன்னடியே வேண்டத் தருபரமற் கோர்வழுதி
    தன்னடி வாங்கித் தருதமிழு - மன்னுபொது

    561 வாடி யருளி னமர்தலங்கட் கொவ்வொன்றாப்
    பாடி யருளியவெண் பாத்தமிழு - நீடியதோர்

    562 பேயேயென் றோதப் பிறங்கியு நம்பெருமான்
    றாயேயென் றோதத் தருதமிழு - மாயோர்பா

    563 னீங்க லரிய நெடுந்தகைநீங் காதமரு
    மோங்கன் மிசையே றுலாத்தமிழுந் - தேங்கரும்பி

    564 னுற்றோ தரிதா முறுசுவையோ பற்றறுப்பார்
    பற்றோவென் றோதுமிசைப் பாத்தமிழு - முற்றுமருள்

    565 பூண்டுவாழ்த் தோறும் புராணன் விருப்புறப்பல்
    லாண்டுவாழ்த் தோது மருந்தமிழும் - வேண்டு

    566 பிறவுமெடுத் தோதப் பெருமருத வாணற்
    குறவு நனிசிறந் தோங்கத் - துறவு

    567 சிதைக்கும் விழியாள் சிறந்தமருங் காற்கூற்
    றுதைக்குந் திருத்தா ளுடையான் - பதைப்புற்

    568 றதிரோதை யிற்பல் லனைத்துங்கொட் டுண்ணக்
    கதிரோன் முகத்தறையுங் கையா - னெதிராநின்

    569 றெள்ளுந் திறம்படைத்த தென்னென் றொருதலையைக்
    கிள்ளுந் திறம்படைத்த கேழுகிரான் - றுள்ளுமொரு

    570 மீனவிழி சூன்ற விரலான் றிரிபுரங்கள்
    போன வெனப்புரியும் புன்னகையான் - வானம்

    571 வழுத்து மிடைமருத வாணன்றேர் தேமாப்
    பழுத்து விளங்குமவட் பம்ப - வெழுத்து

    572 முலையா ளெழுந்துதிரு முன்ன ரடைந்தாண்
    மலையா ளெனுந்தாயை வாமத் - தலையாள்

    573 பெருமான் றிருவுருவம் பெட்புற்றுக் கண்டா
    டிருமா னொருத்திகொலோ செய்தா - ளருமைப்

    574 பெருந்தவ மென்றாள் பெருமூச் சுயிர்த்தாள்
    வருந்தமத வேள்விடுக்கும் வாளி - பொருந்தாளாய்

    575 நேரே தொழுது நிலாவை வருத்துகவென்
    றாரே சுமப்பா ரறைதிரே - பாரறிய

    576 வன்றுதேய்த் தாரென் றறைவா ரதைப்புதுக்க
    வின்றுதேய்த் தால்வருவ தெப்பழியோ - குன்று

    577 குழையக் குழைத்ததிறங் கொள்ளமுலைக் குன்றுங்
    குழையக் குழைக்கினன்றோ கூடுங் - கழைமதவே

    578 ளங்க மெரித்தீ ரவன்சிலைநா ணம்பாய
    வங்க மெரிப்பதனனுக் காற்றீரோ - பொங்குவளி

    579 யம்பு புணர வமைத்தீர்தென் காற்றைமத
    னம்பு புணர வமைத்திலீ - ரம்பு

    580 புணரினது வேறாகிப் போழுமோ மேனி
    யுணரி ன·தெவருக் கொப்பாங் - குணமிலா

    581 வந்தக் குரண்டத் திறகமைத்தற் காயசடை
    யிந்தக் குயிலிறகை யேலாதோ - முந்தத்

    582 தனிநீ ரடக்குங் சடாமுடியில் வெய்ய
    பனிநீ ரடக்கப் படாதோ - முனிவிடமா

    583 மன்ன விருளை யடக்குந் திருக்கண்ட
    மின்ன விருளடக்க வெண்ணாதோ - சொன்னமைக்கு

    584 வாய்திறவீர் பூம்புகார் வாழ்வணிக ரில்லத்து
    வாய்திறவீ ரென்னின் வருந்தேனே - மாயவனார்

    585 கண்ணைச் சுமந்த கழற்காலீர் சென்னிமேற்
    பெண்ணைச் சுமந்ததென்ன பேதைமைகாண் - மண்ணைமுழு

    586 துண்ணும்விடை யீரென் றுரையாடி நிற்கும்போ
    தெண்ணு முடையா ரிளநகைசெய் - தண்ணுகன

    587 கத்தேரை யப்பாற் கடாவினா ரப்போது
    முத்தேர் நகைமாது மூர்ச்சித்தாள் - சித்தம்

    588 பருவந் தழிதருங்காற் பாங்கியர்க டாங்கித்
    திருவந்த மாளிகையிற் சேர்த்து - மருவந்த

    589 பாயற் கிடத்திப் பசுஞ்சாந் தளாய்ப்பனிநீ
    ரேயப் பொருத்தியிருந் தெல்லோரு - நேயத்

    590 திடைமருத வாண னிடைமருத வாண
    னிடைமருத வாண னெனலு - மடையு

    591 மரிவை யுயிர்தாங்கி யாற்றியொரு வாறு
    பரிவை விடுத்தமர்ந்தாள் பைம்பூட் - டெரிவைமறை

    தெரிவை.

    592 வாசியான் கண்டம் வதிவதைநூற் றேமணநெய்
    பூசிமுடித் தன்ன புரிகுழலாண் - மாசிலொளிப்

    593 பாதி மதியம் படர்சடைநீத் திங்கமரு
    நீதி யெவனென்னு நெற்றியா - ளாதிநாள்

    594 விண்ட கமருள் விடேலென் றொலிதோற்றக்
    கொண்ட வடுவகிர்போற் கூர்ங்கண்ணா - ளண்டமுழு

    595 தீன்றவொரு பாற்கை யெடுத்தமல ரைந்துளொன்றாய்த்
    தோன்ற விளங்குஞ் சுடர்முகத்தா - ளான்ற

    596 நெடிய கடற்புகுந்து நீள்வலைவீ சிக்கொள்
    கடிய சுறாத்தலைபோற் காதாண் - முடிவிற்

    597 குருவடிவங் கொள்ளக் குறித்தடியர் சாத்து
    மருமலரே போலுஞ்செவ் வாயா - ளொருவரிய

    598 தன்போல் வெறாதுமதன் றன்னாணொன் றேவெறுத்த
    கொன்பூ வனைய கொடிமூக்கா - ளன்பர்வரு

    599 நாண்முன் குருகாவூர் நன்கமைத்த நீர்நிலையே
    காணென் றுரைக்குங் கபோலத்தாள் - யாணரிசை

    600 மூட்டு மிருவர் முயன்றமர்தா னத்தழகு
    காட்டுங் குழைபோற் கழுத்தினா - ணாட்டுமொரு

    601 முத்தென் றுரைக்க முயன்றுதனை யீன்றதா
    யொத்த தெனவுரைக்கு மொண்டோளா - ளத்தவுடம்

    602 பேத்தமிளிர் பச்சை யினிதளித்த தானத்துப்
    பூத்தசெய்ய காந்தள் பொரூஉங்கையாள் - கோத்தபெரு

    603 வெள்ளத்துத் தற்றோற்ற மேன்மிதந்த கும்பமென்றே
    யுள்ளத் தகும்பொ னொளிர்முலையாள் - வள்ளற்

    604 றரத்தின் மரீஇய தனக்குநிழ னல்கான்
    மரத்தினிலை போலும் வயிற்றாள் - புரத்தின்

    605 மடங்கூர் முனிவர் மடிக்கவிட்ட பாம்பின்
    படம்போ லகன்றநிதம் பத்தா - டடங்காமர்

    606 வாழ்வளங்கூர் நீலி வனத்தி னிழல்கொடுத்துச்
    சூழ்கதலி யென்று சொலுந்துடையா - ளாழ்கடல்சூழ்

    607 வையம் புகழ்காஞ்சி வைப்பினிழற் றுஞ்சூதச்
    செய்யதளிர் போற்சிவந்த சீறடியாள் - பையரவ

    608 வல்குன் மடவா ரளவிலர் தற்சூழ்ந்து
    புல்கும் வகையெழுந்து பொம்மன்முலை - மெல்கு

    609 மிடைக்கிடுக்கண் செய்ய விலங்குமணிப் பந்தர்
    படைத்தநிழ லூடு படர்ந்து - புடைத்த

    610 விளமாம் பொதும்ப ரிடைக்கனகத் தாற்செய்
    வளமாருங் குன்ற மருவி - யுளமார்

    611 விருப்பி னமர்ந்துவளை மின்னாருட் கொங்கைப்
    பருப்பதத்தோர் தோழிமுகம் பார்த்துத் - திருப்பதத்தான்

    612 முன்ன மரக்கன் முடிகணெரித் தார்பச்சை
    யன்னங் கலப்புற் றமரிடத்தார் - சொன்ன

    613 வரைகுழைத்தா ராடல் வரம்பில்லை யேனு
    முரைசிறக்குஞ் சில்ல வுரைப்பா - மரைமலர்க்கண்

    614 விண்டு பணிந்திரப்ப வேதாவைக் காதலனாக்
    கொண்டு மகிழ்தல் குறித்தளித்தார் - வண்டு

    615 படுமலரோன் றாழ்ந்திரப்பப் பைந்துழா யண்ண
    னெடுமகவாய்த் தோன்றுவர நேர்ந்தார் - வடுவின்

    616 மலரொன் றெடுத்திட்ட மாரவேண் மேனி
    யலர்செந் தழலுக் களித்தார் - பலக

    617 லெடுத்துநா டோறுமெறிந் திட்டுவந்தார்க் கின்ப
    மடுத்த பெருவாழ் வளித்தார் - கடுத்த

    618 சிறுவிதி யென்பவன்முன் செய்புண் ணியத்தைத்
    தெறுதொழின்மா பாதகமாச் செய்தா - ருறுதிபெறக்

    619 கண்ணியதண் டீசர்புரி கைத்தமா பாதகமா
    புண்ணியமே யாகப் பொருத்தினார் - திண்ணியமா

    620 வென்றிக் கனக விலங்கல்குழைத் தாரொருபெ
    ணொன்றித் தழுவ வுரங்குழைந்தார் - நன்றா

    621 மொருபா லொருவடிவ முற்றாரென் னேமற்
    றொருபா லொருவடிவ முற்றார் - வெருவாத

    622 வெய்ய பகையாம் விடவரவு மம்புலியுஞ்
    செய்ய சடாடவியிற் சேரவைத்தார் - வையம்

    623 பழிச்சுபெரு வாழ்வு பழிச்சற் களிப்பா
    ரிழிச்சுதலை யோடேற் றிரப்பார் - வழுத்துசித

    624 நல்லாடை யும்புனைத னாட்டுவார் மற்றுஞ்செங்
    கல்லாடை யும்புனைதல் காட்டுவார் - பொல்லாத

    625 மாலூரு மூன்றூர் மடிய வளங்கெடுத்தார்
    நாலூர் பெருகுவள நன்களித்தார் - மேலா

    626 ரருத்தி செயப்பொலியு மையா றிகவா
    ரிருத்திய வாறா றிகப்பார் - விருத்தி

    627 மணம்வீசு கைதை மலரை மலையார்
    மணமி லெருக்கு மலைவார் - குணமாய

    628 பொன்னு மணியும் புனையார் நரம்பெலும்போ
    டின்னும் பலவு மெடுத்தணிவார் - முன்னமா

    629 றேடப் பதங்காட்டார் தேடிப்போ யாரூரன்
    பாடற் றலைமேற் பதித்திடுவார் - நாடுமிவ

    630 ராட லெவரா லறியப் படுமென்று
    நாட லுடையா ணவின்றிடுங்கா - னீடு

    631 மலைவந்தா லென்ன மருதர்திருத் தேரத்
    தலைவந் ததுகண்டா டாவா - நிலைவந்த

    632 வண்ணமடைந் தாரின் மகிழ்ந்தாள் விரைந்தெழுந்தா
    ளண்ணன்மணித் தேர்மு னணுகினா - ளெண்ணம்

    633 பதிக்குந் திருமுகமும் பாரத்திண் டோளுங்
    கதிக்கு மகன்மார்புங் கண்டாள் - விதிக்க

    634 முடியா வனப்பு முழுதுந் தெரிந்து
    கொடியா யிடைகை குவித்தா - ணெடியானு

    635 நான்முகனு மின்னு நணுகருமெய்ப் பேரழகைத்
    தான்முகந் துண்ணத் தலைப்பட்டாண் - மான்முகந்தா

    636 ளந்தப் பொழுதே யடல்வேள் கழைச்சிலைநாண்
    கந்தப் பகழிபல காற்றியது - முந்தத்

    637 தடுமாற்றங் கொண்டா டவாமயக்கம் பூண்டா
    ணெடுமாற்றம் பேச நினைந்தாள் - கொடுமை

    638 மடுத்தசெய லின்மருத வாணரே நும்மை
    யடுத்தவெமக் கென்னோ வளித்தீ - ரடுத்தநுமைக்

    639 கும்பிட்ட கைம்மலர்கள் கோலவரி வண்டிழத்த
    னம்பிட்ட மாமோ நவிலுவீர் - நம்பிநுமைக்

    640 கண்ட விழியழகு காட்டுங் கரியழியக்
    கொண்டன் மழைபொழிதல் கொள்கைகொலோ - தண்டலின்றிக்

    641 காணும் விருப்பங் கடவ நடந்தபதம்
    பூணு நடையிழத்தல் பொற்பாமோ - பேணு

    642 முமைப்புகழ்ந்த செவ்வா யுறுகைப்பு மேவி
    யமைத்தவுணா நீங்க லறமோ - வமைத்தடந்தோள்

    643 செய்ய நிறநுந்தோள் சேர நினைந்ததற்குப்
    பையப் பசந்த படியென்னே - யையரே

    644 வேய்முத்தா நும்மை விரும்பியவென் கொங்கைகட
    லாய்முத்தஞ் சூட லடுக்காதோ - வாய்தோ

    645 ணிதிய மலையை நினைத்தவெனை யிந்தப்
    பொதியமலைக் கால்வருத்தப் போமோ - துதியமைநும்

    646 பார்வையடைந் தேற்குப் பனிமதியம் வேறுபட்டுச்
    சோர்வையடை யத்தழலாய்த் தோன்றுமோ - நீர்செ

    647 யருள்யா வருக்கு மருளாய் முடிய
    மருளா யெனக்கு வருமோ - தெருளாமற்

    648 காதலித்த தன்றே கருணையீர் நும்மழகின்
    காத லொருத்திக்கே காணியோ - வாதலுற

    649 வொன்று முரையீ ருரைத்தால் வருபழியென்
    னென்று பலவு மெடுத்தோதிக் - கன்று

    650 கழலவிழி முத்தங் கழல மனமுஞ்
    சுழல விழுந்து துடித்தா - ளழலொருகை

    651 யேந்தினா னொன்று மிசையானாய்த் தேர்நடத்த
    வேந்தினா ராகி யிகுளையரிற் - போந்தார்

    652 விருப்ப வமளி மிசைக்கிடத்தி வெய்ய
    வுருப்பந் தவிர்த்திடுத லுன்னிப் - பொருப்பா

    653 மிடைமருதின் சீரு மிடைமருத மேவ
    லுடையதலச் சீரு முவந்து - புடைவிரவு

    654 தீர்த்தப் பெருஞ்சீருஞ் சேவுகைக்கு மாமருத
    ரேர்த்தபெருஞ் சீரு மெடுத்தியம்பப் - போர்த்தமயல்

    655 வாரிக் கொருபுணையாய் மற்றவைவாய்ப் பச்சற்றே
    மூரிக் குழலாண் முகமலர்ந்தாள் - பேரிளம்பெ

    பேரிளம்பெண்.

    656 ணென்பா ளொருத்தி யிளம்பருவத் தாரனையென்
    றன்பா லழைக்க வமைந்துள்ளா - ணன்புவியோர்

    657 நாடு கதிருதய நாழிகையைந் தென்னுங்காற்
    கூடுமிருட் டன்ன குழலினா - ணீடு

    658 கதிருதய மாதல் கருதி யடங்கு
    முதிரு மதிபோன் முகத்தாள் - பிதி?ர்வறவெங்

    659 கண்ணார்மை தீட்டுகென்று கைகளுக்கோர் வேலையிட
    லெண்ணா திருக்கு மிணைவிழியாள் - பண்ணார்பொன்

    660 னோலையன்றி வேறுவே றுள்ளனவெ லாமணிதன்
    மாலை மறந்த வடிகாதாள் - சாலுமடைப்

    661 பையேந் துவமென்று பண்பினுமிழ் காற்சிலர்தங்
    கையேந்து செய்ய கனிவாயாண் - மெய்யே

    662 முடியவுத்த ராசங்க முன்னுவ தல்லாது
    தொடியில் விருப்பமுறாத் தோளாள் - கொடியிடைக்குச்

    663 சேர வருத்தந் திருத்தியதா லுட்பெருநாண்
    கூர முகஞ்சாய்த்த கொங்கையா - ளாரமுலை

    664 தாந்தளர்முற் சோராது தாங்குஞ் சலாகையென
    வாய்ந்த வுரோமமணி வல்லியா - டோய்ந்தமையக்

    665 கூடுமோர் பேழை குறித்துத் திறக்கவெழுந்
    தாடுபாம் பின்படம்போ லல்குலா - ணீடுகண்டை

    666 யொன்றேகொள் வீர ரொளிர்கால் பொருவப்பூ
    ணொன்றே யுவக்கு மொளிர்தாளாள் - குன்றே

    667 யிணையுமுலைத் தோழியரெண் ணில்லார் நெருங்க
    வணையுமொரு வாவி யருகே - பிணையுங்

    668 குளிர்பந்தர் சூழ்ந்து குலவ நடுவ
    ணொளிர்மண்ட பத்தே யுறைந்தாள் - களிகூரச்

    669 செவ்வாய் திறந்தாளோர் சேடி முகம்பார்த்தா
    ளெவ்வாயும் வாயான்சீ ரேத்தெடுப்பா - ளொவ்வா

    670 மருதவ னத்தன் மலைமகட்கு மாற்கு
    மொருதவ னத்த னுடையான் - கருது

    671 திருத்தவ னம்பன் சிலையெடுத்தான் றேம்ப
    விருத்தவ னம்ப னிறைவன் - பெருத்த

    672 பருப்பத முள்ளான் பணியார்க்குக் காட்டத்
    திருப்பத முள்ளான் சிவன்மால் - விருப்பன்

    673 றுருத்தி யிடத்தான் றுணையாக மேய
    வொருத்தி யிடத்தா னொருவன் - விருத்தியற

    674 லாலங்காட் டத்த னடல்காட்டி னான்வளங்கூ
    ராலங்காட் டத்த னருட்பெருமான் - சீல

    675 விருப்பத் தவரான் மிகப்புகழ்வான் மேருப்
    பொருப்புத் தவரான் புராணன் - கருப்புவயற்

    676 கச்சிப் பதியான் கனிந்துருகார் செய்பூசை
    யிச்சிப் பதியா னிலையென்பா - னச்சன்

    677 வெருவா விடையான் விரியும் படப்பாம்
    பொருவா விடையா னுயர்ந்தான் - மருவாரூ

    678 ரெற்றம் பலத்தா னெனக்கொண்டா னேத்துதில்லைச்
    சிற்றம் பலத்தான் சிவபெருமா - னுற்ற

    679 விடைமருத வாணனுல கெல்லா முடையா
    னடைய விருப்ப மமைத்த - மிடைசீர்

    680 மருதவட்ட மான்மியம்போன் மற்றொன்றுண் டென்று
    கருதவட்ட ஞாலத்துக் காணேன் - கருதின்பால்

    681 வந்து புகுந்தபதம் வான்பதமெல் லாம்புகுது
    முந்துதெரி கண்ணிரண்டு மூன்றாகு - நந்திதனைக்

    682 கும்பிட்ட கையிரண்டுங் கூடவொவ்வோர் கைமேவ
    நம்பிட்டம் வாய்க்கும்வகை நான்காகும் - பம்பிதனா

    683 லித்தலத்து மான்மியமற் றெத்தலத்து மில்லைபயன்
    கைத்தலத்து நெல்லிக் கனிகண்டாய் - முத்தலமு

    684 நாடு மிதிற்பிறந்த நம்மா தவம்பெரிதாக்
    கோடுமினி யென்ன குறையுடையோர் - மாடும்

    685 படியெடுத்த பாதமலர் பற்றிநாம் வாழ்தற்
    கடியெடுத்த பேறீ தலவோ - தொடிபுனைகை

    686 யாவியன்னாய் மேலுலக மாதரிப்பா ரித்தலத்து
    மேவி யமர்கை விரும்பாரோ - நாவிகமழ்

    687 வாசத் துறைமேலை வானதிதோய் வாரீங்குப்
    பூசத் துறைதோய்தல் பூணாரோ - நேசமிக

    688 மான்றுற்ற நெஞ்சமின்றி வாழ்சூழ்தல் காதலிப்போர்
    தோன்றித் தலமொருகாற் சூழாரோ - வான்றவிண்ணின்

    689 முந்திருக்கை வேண்டி முயலுவா ரித்தலத்து
    வந்திருக்கை யோர்நாண் மதியாரோ - நந்துதமை

    690 வானாடி யம்ப மதிப்பார் மருதாவென்
    றேநாடி யோர்கா லியம்பாரோ - மானேயென்

    691 றோது மளவி லுடையான்பொற் றேர்வரலு
    மாதுபல ரோடு மகிழ்ந்தெழுந்தா - ளோது

    692 பெருமான்முன் சென்றுமிகு பெட்பிற் பணிந்தா
    ளொருமான் மதித்தபுர வோவித் - திருமலர்மே

    693 னான்முகன்றோற் றாத நலமார் திருமேனி
    யூன்முகமாங் கண்ணா லுறக்கண்டாண் - மான்முகந்தா

    694 டுள்ளி மதவே டொடுத்தான் பலகணைய·
    துள்ளி வருந்தி யுயிர்சோர்ந்தாள் - வள்ளலெனச்

    695 சொற்ற நமைத்தொழுவார் சோர வருத்துகென்றோ
    வுற்ற மதனுக் குயிரளித்தீர் - செற்றகுயில்

    696 காதுமெனி னீர்முன் கடிந்ததுபொய் யென்பார்மற்
    றேது புகல்வா ரிறையவரே - யோதுவீர்

    697 மோது கடல்விடத்தை முன்னடக்கி னீரதற்கம்
    மோதுகட லென்னை முனியுமோ - போதுமதன்

    698 கைதை மலர்நீர் கடிந்தா லதற்காக
    வெய்தெனவந் தென்னுயிரை வீட்டுமோ - பையரவுன்

    699 காதன்மதி நுஞ்சடிலக் காட்டிலிருந் தாலென்னை
    வேத லியற்ற விதியுண்டோ - மீதார்ந்

    700 துறுமலைதீப் போற்கா லுடன்றுவீ சற்கோ
    சிறுமுனியை வைத்தழகு செய்தீர் - மறுவிலா

    701 வாய்முத்த மென்னை யழலாய்ச் சுடுவதற்கோ
    வேய்முத்த மாகி விளங்கினீர் - தாயிற்

    702 சிறந்தபிரா னென்றும்மைச் செப்புவார் தீயிற்
    சிறந்தபிரா னென்றென்னோ செப்பா - ரறந்தழுவும்

    703 வேயிடத்து நீர்முளைத்து மேம்பா டியற்றினந்த
    வேயெழுமோ ரோசை வெதுப்புமோ - நாயகரே

    704 யேறுநுமைத் தாங்குறினவ் வேற்றின் கழுத்துமணி
    மாறுபுரிந் தென்னை வருத்துமோ - தேறும்வகை

    705 யந்தி நிறநீ ரடைந்தா லதற்காவவ்
    வந்திநிற மென்னை யடர்ப்பதோ - முந்தவொரு

    706 வாழை யடிநீர் மருவி னதுகுறித்தவ்
    வாழைமுடி யென்னை வருத்துமோ - காழ்பகையின்

    707 வாசநீ ரென்னை வருத்துமெனின் மற்றதற்காப்
    பூசநீ ராடப் புகுவதோ - மூசு

    708 மயக்க மிதுதெளிய மாண்பார்கோ முத்தி
    நயக்குங் குருநமச்சி வாயன் - வியக்கும்

    709 வரமணியென் றேயறிஞர் வாஞ்சித் திடுஞ்சுப்
    பிரமணிய தேசிகன்பாற் பேணித் - திரமடைவே

    710 னன்னவனு நீரேயென் றான்றோ ருரைத்தக்கா
    லென்ன புரிவே னிறையவரே - யன்னவன்போல்

    711 யோகி யெனநீ ருறைந்தீரல் லீர்சிறந்த
    போகி யெனவே பொலிந்துள்ளீர் - போகியெனற்

    712 கென்னோ வடையாள மென்றானும் பாகத்தாண்
    மின்னோ வலங்கரித்த வேறொன்றோ - முன்னவரே

    713 விண்ணைக் கடந்தமுடி மேலா னுமைப்போலோர்
    பெண்ணைச் சுமந்தமரும் பித்தரா - ரெண்ணேன்

    714 வலியவந்து மேல்விழுந்து மார்பி லெழுந்து
    பொலியு முலைஞெமுங்கப் புல்வேன் - பொலிய

    715 வொருத்தியிடப் பாக முறவைத்தீ ரற்றால்
    வருத்தி யதுபுரிய மாட்டேன் - றிருத்தி

    716 புரிந்தன்றிப் போகிலீர் போவீரேன் மேன்மேல்
    விரிந்தபழி வந்து விளையுந் - தெரிந்தவரே

    717 யென்று புகல்போ திடைமருத வாணரவ
    ணின்று கடவ நெடுமணித்தேர் - துன்று

    718 நிலையுற் றதுதெரிந்து நெட்டுயிர்த்துக் கோடுஞ்
    சிலையுற்ற கண்ணிமனைச் சென்றா - ளுலையுற்ற

    719 தீயின் வெதும்பித் திகைத்தாண் மருதரரு
    ளேயி னுயலாகு மென்றமர்ந்தா - ளாயுமிளம்

    720 பேதை முதலாகப் பேரிளம்பெ ணீறாகக்
    கோதையெழு வோருங் கொடிமறுகில் - வாதை

    721 மயலடைந்து தேம்பி மறுகிச் சுழலுற்
    றுயலடையப் போந்தா னுலா.


திருவிடைமருதூர் உலாச் சிறப்புப் பாயிரம்
இந்நூலாசிரியர் மாணாக்கராகிய திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியாரவர்கள் இயற்றியது.

விருத்தம்
707 பூமேவு மடமாதர் களம்பொலிய வோரன்பு பொலிய முன்சேர்
நாமேவு களங்களத்தி லமைத்தவிடை மருதவள நாதன் சீர்கொ
டேமேவு முலாச்சிறப்பை விளக்குமுலா வைப்புலவோர் செவிவி ருந்தா
மாமேவு மீனாட்சி சுந்தரநா வலரேறு மகிழ்ந்து செய்து,
(1)
708 பொன்பூத்த ஞானவளம் பொலியவா வடுதுறையிற் பொலிந்து மேவு
மன்பூத்த வருணமச்சி லாயகுரு சாமிபத மலர்கள் பூத்த
தென்பூத்த வுளத்தடத்தன் சிவதாணு முனிவர்பிரான் திலக மாகக்
கொன்பூத்த பேரவையாம் பெருங்களிமூழ் குறவிரித்துக் கூறி னானே.
(2)
திருவிடைமருதூர் உலா முற்றிற்று.

Comments