Mēkaviṭutūtu


பிரபந்த வகை நூல்கள்

Back

மேகவிடுதூது



தூதுத் திரட்டு :
மணவை திருவேங்கடமுடையான் மேகவிடுதூது
ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை



Source:
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 58.
தூதுத் திரட்டு
TUTU-T-TIRATTU
Edited by : T.CHANDRASEKHARAN, M.A.,L.T
Curator, Government Oriental Manuscripts Library, Madras,
AND THE STAFF OF THE LIBRARY.
(Prepared under the orders of the Government of Madras.)
1957
This edition published under the name of Tututtirattu consists of six works.
1. periyAmpikai piLLai pEril mAn2 viTu tUtu
  • 2. veLLaiya rAcEntiran tukil viTu tUtu
  • 3. muttaivIrappa piLLai pEril mAn2 viTu tUtu
  • 4. cenkuntar tukil viTu tUtu.
  • 5. cangkaramUrti virALi viTu tUtu
  • 6. maNavai tiruvEngkaTamuTaiyAn mEka viTu tUtu



    மணவை – திருவேங்கடமுடையான் மேகவிடுதூது

    முன்னுரை

    இந்நூல், முதலில் காப்புச் செய்யுளின்றி பாடப்பட்டுள்ளது. தொடக்க முதலே நூல் ஆரம்பிக்கப்பட்டு 87 கண்ணிகளையும் இறுதியில் வெண்பாவொன்றையும் பெற்றுள்ளது. இஃது, பெண்பால் ஆண்பால் மீது விடுத்த தூதின்பாற்படும். அதுவும் மானிடரேயன்றி, கடவுளரையடைய கடவுளது மாலையை வாங்கி வரும்படி தூதுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இஃது கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என்னும் இலக்கணத்தின்பாற்படும்.

    இலக்கியக் கற்பனைப் படைப்புக்கள்கள் யாவும் உண்மைப் பொருள்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக்
    கொண்டவை என்பதை நாம் மறத்தல் கூடாது. வாழ்வை வளம்படுத்தி இன்பமூட்டுவதற்குக் கற்பனை இன்றியமை
    யாது வேண்டப்படுகின்றது. வாழ்க்கையில் பெறமுடியாததை கற்பனையிற் பெறலாம். மனத்தின் தொழிலாகிய நினைவு,
    உணர்ச்சி, பகுத்தறிவு, துணிவு முதலிய யாவற்றினும் வேறுபட்டதாய் இவை யாவற்றையும் அடக்கி முழுமனத்தினதும்
    தொழிற்பாடாக விளங்குவதே கற்பனை என்பர் உளநூலார்.

    இக்கற்பனை இரண்டு வகைப்படும். புறத்திலே காணப்படும் பொருள்கள் முதலியவற்றை உள்ளத்தே தோற்றுவித்தல்
    ஒன்று. மற்றொன்று, வெளியே காணப்படும் பொருள்களைக் கொண்டு அவற்றின் உருவங்களைப் பலவாறு சேர்த்துப் புதுப்
    புதுப் படைப்புக்களை ஆக்குதல். இதனை ஆக்கக் கற்பனை (Constructive Imagination) என்று கூறலாம். இதுவே
    சிறந்தது. இது விஞ்ஞானம், கலை என இரண்டாகப் பிரிக்கப்படும். விஞ்ஞானம், உண்மைகளைக் காரண காரியம் கொண்டு
    நிறுவுவது. கலை, அழகினைப் படைத்து உணர்ச்சியைத் தூண்டி இன்பம் ஊட்டுவது. உலகம் அழகினால் வளர்கிறது.
    இந்த அழகைத் தருபவற்றைப் படைப்பதுதான் இக் கற்பனையின் கடமையாகும். அதுவே, விந்தை கருத்துக்கு விருந்தாக
    விளங்குவனவாகும். ஆகவே, அத்தகைய முறையில் சேர்ந்ததே, திருவேங்கடமுடையான் மேகவிடுதூது என்னும் நூலாகும்.

    இந்நூல், அன்பின் வழியதாய் இன்பந் துய்க்கும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை வழிச் செல்
    லும் அகத்திணையின்பாற்பட்டு, இறைவன் பெருமைகளையும் அருட் செயல்களையும் விளக்கிப் படிப்போரைப் பக்தி வெள்
    ளத்தில் திளைத்து மகிழச் செய்யுஞ் சிறப்பால் இதுவும் பேரின்பம் நல்கும் ஒரு வழிகாட்டியாக நல்லியல்பு சான்ற புலவர்
    வகுத்துக்கொண்டனர் என்பது கொள்ளத்தக்கது.

    இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர், ஊர் முதலியன அறியக்கூடவில்லை. ஆயினும், சொல் நயம், பொருண்நயம்படப்
    பாடியிருக்கின்றார். மணவைக்குத் தென்திருவேங்கடம், மணவாபுரி என்ற பெயர்கள் உண்டு போலும். இத்தலம்,
    நிலவளம் மிக்கதாய், சோலைகளும் தடாகங்களும் நிறைந்ததாய் நந்தா வளம்படைத்த சீவலவ நாட்டில் உள்ளது. சீவலவ
    நாடு என்பது பாண்டிய சீவலவமாறன் ஆண்ட எல்லைக்குட்பட்ட நாடுகட்குப் பெயராக வழங்குவது. இவன் திரு
    நெல்வேலியை வென்று தனதாட்சிக்குட்படுத்திய காரணத்தினால் நெல்வேலிக்கும் சீவலநாடு என்று பெயர் உண்டாயிற்று*.
    இப் பாண்டியனைப் பற்றிய செய்திகள் யாவும் பாண்டியர் வரலாறு என்னும் நூலில் பரக்கக் காணலாம்.

    இப்பாண்டியன், 16-ஆம் நூற்றாண்டில் தென்பாண்டிநாட்டிலிருந்து அரசு செலுத்தியவன் என்றும், இவனே அதி
    வீரராம பாண்டியனாகும் என்றும், இவனுக்கு வீரமாறன் என்று பெயராகும் என்றும், கீழ்வரும் தமிழ் நாவலர் சரிதை
    வெண்பாக்களால் அறியக்கிடக்கின்றது.

      “தென்னவா மீனவா சீவலமா றாமதுரை
      மன்னவா பாண்டி வரராமா – முன்னம்
      சுரும்புக்குத் தாரளித்த தூயதமிழ் நாடா
      கரும்புக்கு வேம்பிலே கண்” (102)

      “மாப்பைந்தார்க் கல்லமுத்து வண்ணத்தார்க் கல்லவஞ்சி
      வேப்பந்தார்க் காசைகொண்டுவிட்டாளே – பூப்பைந்தார்
      சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவலமா றாதமிழை
      ஆய்ந்துரைக்கும் வீரமா றா!.

    - இவ்விரண்டு வெண்பாக்களின் கருத்துக்களையும் இந்நூலில் காணும் கீழ்வரும் கண்ணிகளோடு ஒத்திட்டு நோக்க
    மேற்கூறிய செய்திகள் புலனாகும்.

      “-கயலுகளச்
      செந்தா மரைமலருந் தெண்ணீர்ப் பழனவளம்
      நந்தாத சீவலவ நாட்டினான்”

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டில் பொருனைநதி வளங்குன்றாது, பொன்னும் முத்தும் நவமணிகளும் அடித்துக்
    கொண்டு ஆகாய கங்கைபோன்று செழிப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய பொருநை நதியின் வளமிக்க
    நாட்டில் பொதியமலை சீரும் சிறப்புமிக்கு, நாகம், பூகம், தேக்கு, சந்தனம், கோங்கு, தாரம், செண்பகம் முதலிய உறுதி வாய்ந்த
    நன்மரங்களடர்ந்த காடுகளை யுடைத்தாய், வடவரைபோன்று பீடுபெற விளங்குகிறது. இங்ஙனம் பொதியமலையும்;, பொருனை யாறும் உடைய சீவலவன் நாடாகிய திருநெல்வேலியில் மணவாபுரி என்னும் ஊர், வேதம் பலபகரும் தமியோர் குழாங்களையும், தாளாண்மை மன்னரும், வேளாண்மை மிக்க மக்களும் உடையதாய், வீதிகடோறும் முத்தமிழ் நூல் பயில்வோர் குழாம் குழாமாகத் திகழவும், குபேர நாடென்று சொல்லும்படி, பெருமையுற்றிலங்கும் நந்தா விளக்குப் போன்று திகழ்கிறது. இச் சிறப்பு வாய்ந்த பதியில் திருமால் கோயில் கொண்டுள்ளான் என்பதும், அவனது மார்பின் மீது அணிந்
    திருக்கும் திருத்துழாய் மாலையை விரும்பி பெண்ணொருத்தி மேகத்தை தூதுவிட்டாள் என்பதும் இந்நூலால் அறியக்கிடக்கின்றன.

    நூலின் போக்கு

    1-29 கண்ணிகளில்,மேகத்தின் வர்ணணை கூறப்பட்டுள்ளன.
    30-55 கண்ணிகளில், தசாங்கங்களின் வர்ணணை கூறப்பட்டுள்ளன.
    56-67 கண்ணிகளில், திருமாலின் அவதாரங்கள் கூறப்பட்டுள்ளன.
    68-75 கண்ணிகளில், திருமால் வைகுந் தலங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
    76-101 கண்ணிகளில் திருமாலின் சிறப்புக்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.
    101-125 கண்ணிகளில் திருமால் ஐந்தாம் நாள் திருவிழாவில், பவனிவருதலின் அழகைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
    126-140 கண்ணிகளில், திருமால் வரும் திருவுலாக் காட்சியைக் கண்டு காதல் கொண்டதை வருணிக்கப்பட்டுள்ளது.
    141-144 கண்ணிகளில், தலைவி, தலைவனைக் கண்டதும் தந்நாணழிந்ததைக் கூறுகிறாள்.
    145-149 கண்ணிகளில், மன்மதன் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இருந்து போர் தொடுத்ததைக் கூறப்பட்டுள்ளது.
    150-156 கண்ணிகளில், தலைவியின் காதல்நோய் தீர தோழிகள் வேண்டுவன செய்தலைக் கூறப்பட்டுள்ளது.
    156-187 கண்ணிகளில், தலைவி, மேகத்லைப் புகழ்ந்து கூறுதலும், அதற்குத் தூதுரைத்துவருங் காலங் கூறுதலும், தன் குறை இரந்து தூது செல்ல வேண்டுதலும், மாலை வாங்கி வரும்படி ஏவுதலும் ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. இதனோடு முடிகிறது இந்நூல்.

    இந்நூல், இந்நூல் நிலையத் தமிழ் கையெழுத்துச் சுவடி, R.570- ஆம் எண்ணிலிருந்து எடுத்து, ஒழுங்குசெய்து, அச்சிடப்
    பட்டுள்ளது. இது , நாங்குநேரி, வானமாமலை மடத்திலுள்ள ஸ்ரீ இராமாநுஜ ஜீயர் சுவாமி அவர்களிடத்திலுள்ள பிரதி
    யைப் பார்த்து எழுதி வைத்ததாகும். ஆகவே, இந்த ஆறு தொகுப்பு நூல்களையும் படித்துணர்வார்க்கு, தமிழ் நாட்டின்
    பண்டைக்கால வரலாறுகள் சிலவும், இலக்கிய வளர்ச்சியின் தன்மையும், பொதுநோக்கும், கற்பனைத் திறமும் ஆகியன புல
    னாகும் என்பது வெளிப்படை. இந்நூல்கள் அனைத்தும், ஓலைச் சுவடிகளில், கண்டது கேட்டதுபோல எழுதினோரால் எழுதப்
    பட்டிருந்ததால், வெளியிட வேண்டி பொருந்திய முறையில்திருத்தியும் புதுப்பித்தும் அச்சிடப்பட்டுள்ளன.

    இத் தொகுப்பிலுள்ள ஆறு நூல்களையும், மூலப் பிரதியிலிருந்து பெயர்த்தெழுதி, அச்சிடுவதற்குரிய வகையில் அமைத்துக்கொடுத்த, இந்நூல் நிலையத் தமிழாசிரியர், புலவர்; மு. பசுபுதி அவர்கட்கும், தொர்சன் அச்சகத்தாருக்கும் எனது நன்றியுரிய தாகும்.

    17-8-57
    சென்னை தி. சந்திரசேகரன்

    மணவை, திருவேங்கடமுடையான் மேகவிடு தூது.



    (மேகத்தின் சிறப்பு)

    பொன்பூத்த தண்ணம் புயல்பூத்த பூங்கமல
    மின்பூத்த சோதி மிளிர்மார்பா!-கொன்பூத்த
    நேமி சுடராய் நிலாவளை பான்மதியாய்
    பூமடந்தை மின்னுருவாய் பூவைநிறங்-காமர்
    புயல்முகந்த காவிப் புதுநிறமாய் பொன்நாண்
    இயல்முகந்த வில்லி னியல்பாய்-செயல்முகந்த
    மேகமே! எல்லா வுயிர்க்குமொரு வித்தாகத்
    தாகமே தீர்க்கும் தருமமே!-நாகத்துக்
    கொண்மூவே! விண்ணாடர் கண்டுதொழுங் தகைய
    எண்மூவர் தங்களுக்கு மேற்றமே!-தண்மூடு - 5


    மஞ்சே! குழற்குவமை வாய்ந்து தலைக்கொண்டே
    செஞ்சொல் விளிமாஏர் செல்வமே!-எஞ்சாத
    கொண்டலே! கொண்தண்டார் குறித்தநா ளின்றளவும்
    உண்டலே! ....... வுருகினேன்-தண்டாத
    மையே! மணவைமால் மாலழித்த நாளளவு
    மெய்யே! உருகிவெதும் பினேன்-பெய்யு
    மழையே! உலக மகிழ்விப்ப தன்றிப்
    பிழையேதுஞ் செய்யாத பேறே!-குழையும்
    எழிலியே! வானி லெழுந்துதிக்குந் திங்கள்
    அழலியே வீழ்ந்த மெழுகானேன்-பழியாத - 10


    காரே! புவிக்குதவுங் கற்பகமே! நின்னையல்லால்
    யாரே என்னாவிக் கிரங்குவோர்?-சேருங்
    குயினே! இளவுகமாய்க் கூடா திருக்கண்
    டுயினேர் வொருமாற்றஞ் சொல்லாய்!-பயமுடைய
    கந்தரமே! என்போல்வார் காதல் சுமந்திருப்ப
    தந்தரமே யாகுமால் பிந்தாத-வண்டுவே!
    ஏழிசையாம் வெவ்விடத்தை வாய்தோறு முண்டு
    வேயவே கக்குவது முண்மைகாண்!-தண்டாத
    மங்குலே! தண்டுளப மாலைபெறா நாளெனக்கோர்
    கங்குலே யூழியுகங் காட்டுங்காண்!-சிங்காத - 15


    மாலே! மணவை வருமாய னீங்காத
    காலேக வண்ணத்தைக் காடலோய்-நீலநிறச்
    செல்லே! அருள்சுரக்குந் தெய்வமே! மையல்வேள்
    வில்லே! கொடுங்கூற்றை வெல்லுங்காண்-நல்ல
    கனமே! இரங்காமற் காதலிக்குஞ் சுற்றந்
    தினமே பகைத்தா லென்செய்வேன்?-புனல்முகந்த
    சீதமே! வெண்ணிலவில் தேம்பித் தினந்தினமும்
    ஏதமே கூறாது ரட்சிப்பாய்!-நீதி
    முகிலே! துயர்தணிப்பான் முன்னுவாய் மின்னார்
    அகிலேறுங் கூந்தற் கணியே!-செகதலத்தோர் - 20


    காமப் பிணிதீர் கட்டுரைக்குந் தூதுசென்றோர்
    மாமத்தை நாடா நவிலுங்கால்-நேமியங்கை
    மையாழி வண்ணன் வருபாண் டவர்விடுப்பப்
    பொய்யாது போனதுவும் பொய்யாமோ?-மையலார்
    பாதிமதி வேணி பாவைக்குஞ் சங்கிலிக்குந்
    தூது நடந்ததுவுஞ் சொல்லாரோ?-சீதைபால்
    அன்றனுமன் தென்னிலங்கைக் காழி கடந்தகதை
    இன்றளவு மண்மே லிசையன்றோ!-வன்றிறல்சேர்
    தென்நிடத வேந்தர்கோன் தேவர்கோன் தூதாக
    முன்நடந்த தின்னும் மொழியன்றோ!-மன்னளவோ - 25


    மாகா வியங்கடொறு மன்னவர்தூ திற்பிரிதல்
    போகா வெழுத்தின் பொறியன்றோ!-நீகாதல்
    கொண்டார் வரவு குலமகட்குக் கூறியதும்
    எண்டா ரணிக்கு ளிசையன்றோ!-பண்டிவர்போல்
    தூது நடந்தவரைச் சொல்லப் பலருண்டு
    சீத முகிலே!யென் செல்வமே!-ஆதலால்
    என்பால் நிறையும் எழிலும் மடநாணுந்
    தன்பாற் கவர்ந்தானைச் சாற்றக்கேள்!-தென்பால்

    (தசாங்கங்கள்)
    (மலை)
    வடவரை யீதென்ன வயங்கியு முங்கட்கு
    இடமெனவே கண்டுயிலுக் கேய்ந்துங்-கடகளிறும் - 30


    கோளரியுங் கொல்புலியுஞ் சாரங்கமு மதியும்
    வாளரவு மொன்றி மறங்கூறா-தாளுநறுஞ்
    சந்தனமும் காரகிலும் கோங்குந் தகரமுஞ்
    சிந்தூரமும் சாதிச் சிறுதேக்குங்-கொந்தவிழ்நன்
    காகமும் செண்பகமும் நற்கதலி யுந்தாற்றுப்
    பூகமு மாகப் புயறடவி-மோகிக்கும்
    பொன்னும் புதுமணியுந் தண்டமிழுங் கொண்டருவி
    மன்னும் பொதியவரை மீனான்-புன்னாகப்

    (நதி)

    போதுங் கரிக்கோடு பூங்கவரி யும்புதுப்பூந்
    தாது மகிற்குறடுஞ் சந்தனமும்-மோதுந் - 35


    திரைதோறுந் தெண்ணீர்ச் சிறைதோறு மேறுங்
    கரைதோறுங் கால்தோறுங் கான்று-நிரைநிரையே
    தூர்க்குங் கடவுட் சுரநதிபோ லெஞ்ஞான்றும்
    ஆர்க்குந் திரைப் பொருனை யாற்றினான்-வார்க்கோலக்

    (நாடு)

    கொங்கைத் தரளநகைக் கோதையர்பூ கத்ததிக
    மங்கைவடந் தோட்டூச லாடியுந்-துங்கக்
    குயிலோடு கூவியுங் கோலக் குடு
    மயிலோடு மாடி மகிழ்ந்தும்-பயிலுநறுந்
    தண்டலையும் வாவித் தடமுந் தடமலர்மேல்
    வண்டலையுந் தேமா வனநிரையுங்-கொண்டாடும் - 40


    இடலமுக மலருந் தரளைக் குழாமும்
    மடலவிழும் பூக வனமும்-குடவளையின்
    ஆரமும் சென்னலணி தாளமுங் கரும்பிற்
    சேரு மணியுஞ் செற்றிவாம்பில்-ஆர
    வயலி லயலோடும் வாய்க்காலில் மள்ளர்
    செயல்புரியுஞ் சாலிற் றிகழக்-கயலுகழச்
    செந்தா மரைமலருந் தெண்ணீர்ப் பழனவளம்
    நந்தாத சீவலவ நாட்டினான்-பந்தைப்

    (ஊர்)

    பழிக்கும் படாமுலையா ராடங்கும் வேதம்
    கொழிக்குந் தமிழோர் குழாமும்-பழிப்பில்லா - 45


    வேதம் பலபகரும் வேதியரும் மென்னரம்பின்
    நாதம் பலபகரும் நாட்டியருங்-கோதிலாத்
    தாளாண்மை மன்னர் தனிச்செல்வம் போன்றதொழில்
    வேளாளர் சூழ்ந்திருக்கும் வீதியும்-வானொளிசேர்
    மாட மறுகும் மறுகுதொறும் முத்தமிழ்நூல்
    பாட லிசைகழகப் பந்தியுங்-கூடித்
    திகழும் பெருவளத்தாற் சேமப்பொன் நாடென்னப்
    புகழும் மணவர் புரியான்-பகையரண்

    (யானை)

    நீறுபட வெகுண்டு நேரிலா நின்றதிரத்
    தாறுபடு மதமா லானையான்-மாறாமல் - 50


    (குதிரை)

    ஆயும் ஒருநான்கு வேதமணி தாளாய்
    பாயுந் திறல்வாம் பரியினான்-காயுலகலிற்

    (முரசு)

    தெம்முறை கெட்டோட செழுந்தேவர் கைகுவிப்ப
    மும்முறைநின் றார்க்கும் முரசினான்-வெம்மைக்கா

    (கொடி)

    மோட்டரவ மாயெட்டு முழுமேனிக் காரமெனக்
    கோட்டுங் கருடக் கொடியினான்-பாட்டளியின்

    (மாலை)

    பண்ணார் தாமரையாள் பாயலென வீற்றிருக்குந்
    தண்ணார் வண்டுளபத் தாமத்தான்-விண்ணாடர்

    ((ஆணை)

    ஓது கலையு மொழிந்த பலகலையும்
    ஆதிமறை யுத்துதிக்கு மாணையினான்-சோதி - 55


    (திருமால் வடிவங்கள்)

    உருவாய் உருத்தோறு முண்மையாய்த் தோன்றா
    வருவாய் ஓரணு வாகித்-தெருளாய்
    ஒளியா யொளிமயமாய் உற்றுணர்ந்தோர்க் கெட்டா
    வெளியாய் வெளிக்குளோ ருயிரன்னாய்-வளியாய்க்
    கனலாய் விசும்பாய் காசினியில் நீண்ட
    புனலாய் மணங்கமழும் போதாய்த்-தினகரனும்
    விண்மதியு மாயுயர்ந்த வெற்பாய் சராசரமாய்க்
    கண்மதிக்க வொட்டாதக் காந்தியாய் - உண்மதிக்கும்
    அண்டமாய் அண்டத் தடுக்காய் அதிலுறையும்
    பிண்டமாய்ப் பேதாதி பேதமாய்க்-கொண்டதோர் - 60


    ஆணா யலியா யழகுதிகழ்ந் தொளிருங்
    கோணாதப் பெண்ணுருவின் கோலமாய்-மாணமைந்த
    வேதமா யெண்ணிறந்த வேதண்டத் துச்சியின்மேல்
    ஆதரமாய் மற்றுமோ ராதியாய்க்-கோதிலா
    மூலமா யீறாய் நடுவாய் முருக்கியபேர்
    ஆலமா யுண்ணு மமுதாகி-ஞாலம்
    படைத்து மளித்தும் படைத்தவெல் லாமீளத்
    துடைத்தும் விளையாடித் தோன்றிக்-கடற்றலையின்
    மீனமாய்க் கூர்மமாய் மேதினியைக் கீண்டகோட்டு
    ஏனமா யாளரியா யீன்றாளுந்-தானிகனாம் - 55


    வாமனமாய் வில்லுமழு வும்வலமுங் கைக்கொண்டி
    ராமவுரு மூன்றா யிகல்புரியுங்-கோமளஞ்சேர்
    கண்ணர் பிரானுமாய்க் கல்கியுமாய் மேனாளில்
    வண்ண மெடுக்கும் வடிவினான்-தண்ணார்ந்த

    (திருமால் வைகுந் தலங்கள்)

    பொன்னி நடுவுட் புளினத் தரங்கத்து
    மன்னுந் திருக்குடந்தை மானதரிற்-றென்னாட்டு
    அனந்தாப் புரியிலவர் நட்டாற் றிடையிலன்பிற்
    கனந்தா வுகாற்கரையிற் கஞ்சத்-தினந்தழையுந்
    தென்புலி யூரிற் றிருவைகுந் தாபுரியில்
    பொன்பொலியு மாடப் புளிங்குடியில்-நன்கமைந்த - 70


    தங்காவில் மேவுகுழந் தாபுரியில் வெள்ளரையில்
    கொங்காருஞ் சோலைக் குறுங்குடியில்-மங்காத

    நாவாயிற் கோளூரில் நாகை நகரில்
    பூவார் கனமங்கைப் பொன்நகரில்-மேவியே

    நின்று மிருந்துங் கிடந்துநிலை பேறாகி
    என்றும் பயிலுமியல் தக்குபுபொற்-குன்றில்

    வருவேங் கடத்துரையு மாய விதுதென்
    திருவேங் கடமெனத் தேர்ந்து-தருவோங்கு

    சோலைத் தமிழ்மணவைத் தொன்நகரத் தோர்தவத்தால்
    ஞாலத் தவர்துதிக்க நண்ணினோன்-மேலொருநாள் - 75


    திருமாலின் சிறப்பியல்பு

    ஆர்க்குங் கடல்புவன மெல்லா மணிவயிற்றில்
    காக்குந் திருவேங் கடநாதன்-மேக்குயர்ந்த

    பண்டை யிலங்கைப் பதிக்கேத வாரியணை
    கண்ட திருவேங் கடநாதன்-அண்டர்பிரான்

    நீட்டும் பழிசுமந்த கல்லுருவை யேந்திழையாய்க்
    காட்டுந் திருவேங் கடநாதன்-தோட்டிய

    நாலு கடல்புவியு முண்டு நறுங்கனிவாய்க்
    காலுந் திருவேங் கடநாதன்-நீலநிறக்

    கண்ணன் சிறைவண்டு கட்டவிழ்க்குங் காயாம்பூ
    வண்ணன் கரியமணி வண்ணன்-விண்ணவர்கோன் - 80


    வாய்முலைப்பால் வைத்தவள்தன் மன்னுயிரோ டுங்கொடிய
    பேய்முலைப்பால் உண்ட பெருவாயன்-வேயிசையால்

    ஆக்குவிய வெற்பேந்தி யண்டர்கோன் கன்மாரி
    போக்குவித்த தண்டுழாய்ப் பூந்தாமன்-தேக்குகடல்

    ஆலமென முதலை யன்றடர்த்தப் போதுகைமா
    மூலமென வோடி முன்வந்தோன்-நீலக்

    கடல்சிவப்பத் தாமரைப்பூங் கண்சிவப்ப விற்கொண்டு
    அடல்சிவக்குந் திண்டோள் அபயன்-மடலெடுத்தப்

    பூந்துழாய்க் கோதை புதுவா புரிக்கோதை
    சாந்துழாவும் பொற்றடங் கொங்கை-மோந்து - 85


    முயங்கக் கிடையாதால் மொய்குழலிற் சூட்டித்
    தயங்கக் களைந்த பூந்தாமம்-வயங்கும்

    இடந்தோறுந் தேடி யெடுத்ததனைச் செங்காட்டுத்
    தடந்தோறும் தோள்தோறும் சாத்தி-நடம்புரியுங்

    கூத்தன் குடக்கூத்தன் கோபாலன் பூபாலன்
    பார்த்தன் தடந்தேர்ப் பரிபாகன்-ஏத்துந்

    ததிபாண்டு வின்கைத் தலத்தில் அகப்பட்டு
    மதியாத வந்தாமம் வைத்தோன்-புதியதமிழ்ப்

    பாமாலை ஒன்பதிமர் பாடலுந் தென்புதுவை
    பூமாலைக் கோதை புனைதமிழும்-ஓம - 90


    முனிவோர் மொழிந்த முதுமொழியும் வேதந்
    தனியோதி யம்முறைமை தானுங்-கனியவே

    ஒண்மாடக் கூடப் பொருனைத் துறைக்குருகை
    நன்மா நகரில் நயந்தழைவா!-முன்மால்

    உருக்கொண் டுதையவன்போ லுற்பவித்த மாறன்
    மருக்கொண்ட தண்ணிலஞ்சி மார்பன்-இருக்குமுதல்

    வேதவுப நிடதமெய் ஞானத் துட்பொருளை
    ஆதிமுறை நூற்பஞ்ச வதிகாரத்-தோதுந்

    திருவாய் மொழியெனுமத் தெள்ளமுதுக் காகத்
    தருவாக நின்று தயங்கும்-உரக - 95


    புளிக்கா வணநிழற்கீழ் புத்தேளி ரோடும்
    அளிக்கால் இமிர்துழாய் ஆடும்-வளைப்புயங்கள்

    தம்மின் நெருங்கத் தனியே நெருக்குண்டு
    மும்மைத் தமிழ்புனைந்த மூதுணர்வோன்!-கைம்மாவின்

    கோடுஞ் சகடுங் கொடும்புரியும் பைப்பாம்பும்
    ஓடும் படியடக்கு முள்ளத்தான்!-பாடியே

    அன்று ஆநிரைப்பின் அயர்ந்தோன்! கவடுபடுங்
    கன்றால் விளவின் கனிவீழ்த்-தொன்றுரல்வாய்

    நண்ணிக் குடத்தயிர்பால் நாடிக் குடத்தியர்கைக்
    கண்ணிச் சிவதாபாற் கண்டுண்டோன்!-வண்ணவிழிச் - 100


    சீதையொடுந் தம்பியொடுந் திண்கா னகம்புகுந்து
    தாதைமொழி நிறுத்துந் தாசரதி!-நீதியிலும்

    திருமால், பவனி வருதலின் சிறப்பு

    தொண்டர் வணங்குபுர சாதித் திருநாளில்
    கொண்ட றடிங்கோம மறுகில்-தண்டான

    காவணமு மென்பூங் கமுகுங் கலியுங்
    கோவணஞ் செய்து கிளர்ந்தோங்கப்-பூவணி

    தோரணி நின்று சுடர்தூண்டப் பத்திதொறும்
    பூரண கும்பம் புடைவீங்க-வாரண

    வேதிய ராசி விளம்ப விளங்கிழை
    மாதர்கள் பல்லாண்டு வாழ்த்தெடுப்ப-ஆதி - 105


    மறைத்தமிழ் மாலை வைணவர் செபிப்ப
    முறைத்தமிழ் வாணர் மொழிய-நிறைத்தசெழுஞ்

    சந்தனமுங் கற்பூரஞ் சாந்தும் பசுந்தாதும்
    சிந்தி யிளைஞர் செறிந்தீண்ட-வந்ததோர்

    துந்துபி யோங்கச் சுரிசங்க மார்ப்பெடுப்ப
    வந்தவை சின்ன மெடுத்தூத-முந்திய

    பல்லிய வாத்தியங்க ளெங்கும் பரந்தார்ப்ப
    வில்லியல் கொண்டநுதல் மெல்லியரால்-சொல்லுங்

    குயில்போல் அனப்பெடைபோற் கொம்புபோற் கோல
    மயிபோல் கலையகலா மான்போற்-பயிலும் - 110


    பிடிபோல் அழகும் பிறங்க மலர்பஞ்சு
    அடிபோத நூபுரங்க ளார்ப்ப-நெடிநெருங்கப்

    பத்திப் பவளத்திற் பொன்னிற் பசுமணியில்
    முத்தில் பதித்தகுடை மொய்த்துவர-நெய்த்துப்

    பொருவால் வண்கவரி பொற்காம்பிற் சேர்த்த
    திருவால வட்டந் திகழ-நிரைநிரையாய்

    பத்தர் குழாங்கள் பதுமக் குழாமாக
    மந்தத் தமிழ்மா ருதம்வீச-நந்தாத

    தென்மாறை வேந்தன்! செழுந்துழாய்ப் பூந்தாமன்!
    முன்மால் வளங்கண்ட மூதறிவோன்!-நன்மைதரு - 115


    நம்பி வைணவர்கள் நம்பி அழகிய
    நம்பி குலத்தொண்டர் நயந் தேத்த-செம்பொனொளி

    ஓங்கு சிவிகையும் பொன்னூஞ்சல் திருக்குறடும்
    பாங்கவர்க்குப் பூணுமணி பணியும்-பாங்காய்

    அளித்துத் திருமா லிருஞ்சோலை ஆழ்வான்
    களித்து நின்றுபோற்றிக் கருத-வெளிக்கிசைந்த
    மையுந்து மேருவைப்போல் மன்னுசித்ர கூடமொன்று
    செய்யுந் தலமறிந்து உகந்தோன்!-வைகுந்தை
    நாயனருள் போற்றி யடியான் நரபாலன்
    தூய சரணம் தொழுதிறைஞ்ச-ஆய்வளையார் - 120


    (ஐந்தாம் நாள் திருவிழா)

    வந்து நெருங்க மணவைநகர் வேங்கடமால்
    சிந்தை மகிழ்ந்தஞ்சாந் திருநாளில்-தந்ததோர்
    தாயவலந் தீரத் தமனியச்செம் பூடுதித்த
    தூயசிறைக் கருடன் தோண்மீதிற்-சேயொளிசேர்
    செம்பொற் பொருப்பிற் செறியுங் கருமுகில்பொல்
    அம்பொற் றருவி லளிக்குலம்போல்-பம்பிய
    செக்கர் விசும்பில் செறிந்தகரு ஞாயிறுபோல்
    மிக்குடையோர் வேள்வி விழுப்புகைபோல்-புக்கெழுந்த
    வீதிவாய் சிற்றில் விளையாட நீணிலத்து
    மாதரா ரோடு மணங்களித்துப்-போதவே - 125


    (தலைவி, திருவேங்கட நாதனின் திருவுலாக் காட்சியைக் கானுதல்)

    கட்புலனுக் கெட்டக் கவின்றழையும் பொற்சிறகாப்
    புட்பிடரில் அம்மானைப் போற்றுதலும்-பெட்புறவே
    தேவியர்கள் நோக்குதோறும் செம்பொற் குழைகிழிக்குங்
    காவிநிறங் கொண்டக் கருநிறமும்-பூவுதித்த
    சானகிக்கு வில்லிறுத்தத் திண்டோளும் தண்கமல
    மானிருக்கும் அம்பொன் மணிமார்புந்-தேனிருக்கும்
    பூந்துழாய்த் தாமம் பொலியும் அபிடேகமும்
    சேந்த மதிபோற் றிருமுகமும்-வாய்ந்த
    கருணையறாக் கண்ணுங் கனிவாயுஞ் சோதி
    வருணத்தாள் வைகும் வனப்பும்-இருணீக்குங் - 130


    கோல மகரக் குழைக்காது மங்கறத்தூர்
    நீலத் திருநாம நெற்றியும்-ஞாலமெல்லாம்
    ஈன்றாளைத் தாமரையோ டீன்றதிரு வுந்தியும்
    வான்றாவு பீதாம்பர மருங்கு-மேன்றொருவன்
    புல்லுருவ மெண்ணாத பூங்கொடிக்கு நீங்காத
    கல்லுருவ மாற்றும் கழற்காலும்-தொல்லாழி
    சங்குந் தனுவுந் தனித்தண்டும் நாந்தகமுந்
    பொங்கிப் புடைவயங்கும் பொற்பிணையு-மங்கப்

    (தலைவி, திருவேங்கடநாதன்மீது காதல் கொள்ளுதல்)

    புளக மெழக்குறித்துப் போற்றினேன் போற்றி
    உளமகிழ்வுற் றாவியும் உவந்தேன்-வளமலியும் - 135


    புள்ளுக் கரசனொடும் பூந்துழாய் வேங்கடமால்
    உள்ளுக் கரசா யும்வந்திருந்து-மெள்ளமெள்ள
    வீதிவாய்ப் போதரலும் வேதச் சிறையுடையாய்!
    ஆதியாய்! அன்னைக் கமுதளித்தாய்-போதியேல்!
    இன்னும் ஒருகால் எளியேன் எதிர்கொணர்ந்து
    பின்னகல் எற்கென்னப் பேசினேன்-அன்னவொலி
    கேளார்போல் முன்புசிறை பெற்ற கிளர்வரைபோல்
    வாளா மறுமறுகில் வாய்ந்தகன்றான்-கோளரவு
    நன்றேயம் மாருதியு நல்லவனே கேசரியும்
    இன்றேறு வானி லிறங்குமே-என்றுலைவேன் - 140


    (தலைவி, தலைவன்பால் நாணழிதல்)

    ஆழிதனை யாழியால் அங்கை வளைவளையால்
    சூழ்ந் துகில்போல் துகிலினால்-தாழாத
    நாணும்போல் நாணால் நல்லெழிலுந் தன்னெழிலால்
    காணுங் குறிகாட்டிக் கைக்கொண்டான்-பாணிக்
    கரையின் மகளிர் கலைபல கொண்டார்க்கென்
    அரையிற் கலைதான் அரிதோ?-தரைமீதில்
    அன்றுபதி னாறாயிரர்க் கன்பளித் தாருக்கு
    இன்றெனைமா லாக்குவதும் எண்ணமோ?-நின்றேன்முன்

    (மாறன் போர் தொடுத்தல்)

    அந்தப் பவனிபோய் ஆடல் அனங்கவேள்
    மந்தத் தமிழ்மா ருதத்தேரிற்-சிந்தக் - 145


    கரும்பே சிலையாய்க் கடிகமழு மென்போது
    அரும்பே பெரும்பாண மாகிச்-சுரும்புருவ
    நாணாகி வேழமே நள்ளிருளாய் வெண்கலைவிற்
    கோணா மதியே குடையாகி-ஆணை
    குறிக்கின்ற சின்னங் குயிலாய்க் கடல்வாய்
    மறிக்குந் திரைமுரச மாகி-வெறிக்குழலார்
    சேனையாய் பூந்தாது செண்ப ரகமாய்த்
    தானையோ டும்போந்து சமரடக்க-மானனையார்

    (தலைவியின், காதல்நோய் தீரவேண்டுவன செய்தல்)

    கொண்டு பெயர்ந்தார் குளிர்பளிங்குப் பள்ளியின்மேல்
    தண்டளிர் மென்பூந் தளிமத்து-மண்டு - 150


    தழலிற்கிடத்துவபோற் றட்பங்கள் செய்தார்
    அழலு நிலாமுத் தளித்தார்-நிழலொழுகப்
    பூசினார் சாந்தம் புனைந்தார் தரளவடம்
    வீசினார் போலவே மதுப்பினார்-ஆசைநோய்
    வெம்மை பிடித்தவரை வெம்புனலில் வீழ்த்தினால்
    மும்மடியா மென்பதனை முற்றுவித்து-கொம்மை

    (தலைவி, வெம்மைநோய் தாங்காது வருந்தல்)

    முலையார் அறிவிலர்போல் மொய்த்த திதஞ்செய்ய
    மலையான் நிலக்கொழுந்து வாட்டக்-கொலையுருவாய்த்
    திங்கள் பரந்துசிறு சாளர நுழைய
    வங்கக் கடன்முரசின் வாய்முழங்க-அங்கமெல்லாம் - 155


    நொந்தேன் உலைந்தேன் நுவலுவதும் போனேன்
    செந்தேனை வெவ்விடம்போற் சிந்திதேன்-நந்தா

    (தலைவி, மேகத்தைப் புகழ்ந்து கூறல்)

    மேகமே! எப்பொருட்கு மெய்ப்பொருளே! எவ்வுயிர்க்குந்
    தாகமே தீர்க்கும் தனிமருந்தே!-மோகிக்கும்
    இம்மா நிலத்தோர்க் கிரங்குவத லாலவர்பாற்
    கைம்மாறு கொள்ளாக் கடவுளே!-மெய்ம்மை
    உணர்வே! அலர்மே லுறைமங்கை மார்பன்
    மணவே சனவேங் கடவாணன்-குணநிறமும்
    எம்பால் அளகத்தி னிருணிறமும் பெற்றதால்
    நும்பால தன்றோ நுவலுவதுங்-கம்ப - 160


    (தலைவி, மேகத்தினிடம் தூதுரைக்குங் காலங்கூறல்)

    கரடதட வெண்கோட்டுக் கைம்மலைமேற் கொண்டு
    வருபவனி யூடெதிர்நீ வாராய்ந்தால்-பொருபகையென்
    றெண்ணப் படுமதுவிட் டேழாந் திருநாளில்
    வண்ணப் பசுமஞ்சள் வாய்ந்தநீர்-சுண்ணமட
    மாத ரோடு மகிழ்ந்துவிளை யாடுமிட
    மாகுமவ் விடத்துமே கரதடன்-மாவிற்
    சாரி வருமிடத்துச் சாரதே வன்பரிகொண்
    டாரி னகப்பட்டய் யாரமுதே!-ஊருந்
    திருத்தேர் வருமறுகிற் செல்லுமிட மென்றே
    கருத்தேற நீலக் ககனமே!-தெருத்தலையிற் - 165


    சத்தா பரணந் தனிற்பவனி யொன்றுண்டு
    கொத்தார் பூப்பந்தற் குளிர்நிழல்-மொய்த்துப்
    பலவாத் தியங்கள் பயிலார் பணிவோர்
    சிலவாக்கம் தீர்ந்து சேவிப்ப-நிலனமைந்து
    சொற்பா வலவர் தொக்கும் இயலிசையின்
    நற்பால் அமுதின் நலனுண்டு-பொற்புடைத்தாய்

    (தலைவி,தன்குறை இரந்து தூது வேண்டல்)

    போதுந் திருப்பவனி பொன்மறுகி லென்னுளத்துள்
    ஏதம் அனைத்தும் எடுத்தியம்பி-ஆதி
    பரனே! பராபரனே! வேட்டவை பாலிக்கும்
    அரனே! பரந்தாம வாழ்வே!-நரலையெழுந் - 170


    தெள்ளமுதே! தெள்ளமுதத் தீஞ்சுவையே! சிந்தித்தோர்
    உள்ளம் உணரும் உபாயனே!-புள்ளரசில்
    போதும் பவனிதனிற் பூவையரோ டுஞ்சிறிய
    மாதொருத்தி நின்னை வணங்கினாள்-யாதும்
    அறியாள் அடவியரோ டாடுவ தொன்றுங்
    குறியாள் உனக்குமால் கொண்டாள்-பிறிதுமொரு
    மாலானாள் யானவட்கு மாலாவேன் நீயுமொரு
    மாலானாய் பேயொன்றாய் வாய்த்ததால்-பால்வளைதன்
    சிந்தா குலந்தீரத் தேவதே வே! கருணை
    தந்தாலுந் தன்மை மனங்கொண்டால் - முந்துறநீ - 175


    அன்றெடுத்த வெற்பேபோல் ஆலக்கா லைபயந்த
    குன்றெடுத்தால் வேறு குறையுண்டோ!-வன்றிறல்கால்
    புள்வாய் குளித்தாய் பொருந்தனைக் கூ டங்குயிலின்
    வள்வாய் குளித்தால் வழக்குண்டோ?-வெள்ளைவிடார்
    ஆகு மதிபி னழலவிய வாதவன்மேல்
    ஏகுஞ் சுடராழி இல்லையோ?-மோகஞ்செய்
    நாவாய்க் கடலின் நலத்தினை யடக்குந்
    தீவாய்ப் பகழி திரந்தீரோ?-காவான
    தன்று பிடுங்கி யலைத்த நரம்பீனும்
    அன்றிலிள மாம்பனைக்கு மாட்டோமோ!-என்று - 180


    (மாலை வாங்கிவர, மேகத்தை ஏவுதல்)

    உரைக்கு முரையே யுரைப்பவெல் லாஞ்சொல்லி
    வரைக்குங் குமத்தோள் வனப்பும்-விரைக்கோலத்
    தாம மணிமார்புஞ் சங்காழிக் கைத்தலமுங்
    காம ரபிடேகக் காட்சியும்-பூமடந்தைக்
    கண்ணுக் கணியாங் கமலத் திருமார்பும்
    விண்ணுக் கணியான் மென்பதமும்-வண்ணக்
    கிளிநோக்கி பாதாதி கேசவரை எல்லாம்
    வளிநோய்க் கிலாது படைத்து-அளிகொண்டு
    நிற்கின்ற வண்ணமெலேம் நீலமுகி லேகிளிர்ந்த
    சொற்கொண் டிதம்பார்த்துச் சொல்லியு-முற்பணிந்து - 185


    வில்லியல் கொண்டரக்கர் வென்றிகொண்டு மேற்கொண்ட
    மல்லியல் கொண்டு மறங்கொண்ட-நல்லெழில்சேர்
    வண்டுளவத் தாதொழுகு மால்வேங் கடநாதன்
    வண்டுளவத் தார்வாங்கி வா.

    (வெண்பா)

    மேக மெனமணவை வேங்கடமா மாயனுக்கென்
    மோகமே சொல்லு முறைசொல்லி-தாகமே
    மாலைதர வேழையேன் வாடாமல் தண்டுளவ
    மாலைதர நீவாங்கி வா.


    மணவை திருவேங்கடநாதன் பேரில் மேகவிடு தூது முற்றும்

  • Comments