Kulōttuṅkacōḻaṉ kōvai


பிரபந்த வகை நூல்கள்

Back

குலோத்துங்கசோழன் கோவை
அருணாசலக்கவிராயர்



அருணாசலக்கவிராயர் எழுதிய
குலோத்துங்கசோழன் கோவை



அருணாசலக்கவிராயர் எழுதிய
குலோத்துங்கசோழன் கோவை

Source
"குலோத்துங்கசோழன் கோவை"
மதுரைத் தமிழ்ச்சங்கம் நூற்பரிசோதகர்
மு. ரா. அருணாசலக்கவிராயர் செய்த அரும்பதவுரையுடன்
மதுரை ஜில்லா முறையூர் ஸ்ரீமாந் பழ. சி. சண்முகஞ்செட்டியார்
அவர்கள் பொருளுதவியால்
மதுரை வேகபாநு அச்சியந்திரசாலையில்
பதிப்பிக்கப்பெற்றது.
சாதாரண வருடம் --- ஆவணி மாதம் ---
இதன் விலை அணா 12. ] காப்பிரைட்
-------------------------


இப்புத்தகத்திலடங்கியவை.
    1. முகவுரை.
    2. குலோத்துங்கசோழன்கோவை, 1-136.
    3. மேற்படி அரும்பதவுரை, 137 – 168.
    4. செய்யுள் முதற்குறிப்பகராதி, 169 – 173.
    5. பிழைதிருத்தம், - 173.
    6. அகப்பொருட்செய்திநாள்வரையறைச்செய்யுள்விளக்கம், 174.


சிவமயம்.

குலோத்துங்கசோழன் கோவை
1. முகவுரை


அறம் பொருள் இன்பம் வீடு என்னு நான்கனுளொன்றாகிய இன்பத்தைப்பற்றிய நூல்களுள் தலைமைவாய்ந்தது அகப்பொருட்கோவை யென்பது; அஃதாவது:- ** இருவகைப்பட்ட முதற்பொருளும் # பதினான்குவகைப்பட்ட கருப்பொருளும் $ பத்துவகைப்பட்ட வுரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளையாதிய அன்புடைக் காமப் பகுதியவாங் களவொழுக்கத்தினையுங் கற்பொழுக்கத்தினையுங் கட்டளைக் கலித்துறையால் ~ பன்னிரண்டகப் பாட்டுறுப்புந் தோன்றப் பல துறைகளமையப் பாடப்படும் அரிய பெரிய நூலாம். வாதுபாடில் வண்ணம்பாடு. யாவையும் பாடிக் கோவைபாடு என்னும் பழமொழியே யிதற்கொரு சான்றாதலறிக.

------------
** நிலம், காலம் என்பன.
# தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, வாச்சியம், யாழ், பண், தொழில் என்பன.
$ புணர்தல், புணர்தற்குக்காரணம், பிரிதல், பிரிதற்குக்காரணம்,
இருத்தல், இருத்தற்குக்காரணம், ஊடல், ஊடற்குக்காரணம், இரங்கல்,
இரங்கற்குக்காரணமென்பன.
~ திணை, கைகோள், கூற்று, கேட்போர்,
இடன், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை என்பன.

அன்புடைக்காமத்தைக் கூறுதலால் இத்தகைய கோவை, ஐந்திணைக்கோவை யெனப்படும். "ஐந்திணை யென்ப தன்புடைக் காமம்” என்னும் அகப்பொருள் அகத்திணையியல் 4-ஆம் சூத்திரத்தாலறிக. இவ் ஐந்திணைக்கோவையுட் பாடப்படுவோர் பாட்டுடைத் தலைவரென்றும் காமத்தலைவரென்றும் இருவராவார்; அவ்விருவருள் பாட்டுடைத் தலைவருக்கு நாடு, நகரம், பெயர்முதலியவை கூறப்படும். காமத்தலைவருக்கு அவற்று ளொன்றேனுங் கூறப்படாது; அங்ஙனமே, குமார குலோத்துங்கசோழனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்ட இக்கோவையென்னு நூல் மேற்சொல்லிய எல்லா இலக்கணங்களும் அமையப்பெற்றதுடன் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் விளங்கும் மோனை, எதுகை, சிலேடை, கற்பனையாதிய நயங்கள் முழுதும் பரக்க இருத்தலிற் படிப்பவர் மனத்தைப் பரவசப் படுத்தும் பான்மையுள்ளது.

இந்நூலை, திருநெல்வேலி வித்துவ சிகாமணியாகிய ஸ்ரீமான் நெல்லையப்பன் கவிராஜரவர்கள் அச்சியற்றி வெளிப்படுத்த நினைந்து சிலவருடங்கட்குமுன் தமது புத்தகசாலையிலிருந்த ஏட்டுப்பிரதியொன்றுடன், வேறுசில பிரதிகள் கொண்டு பரிசோதித்துத் தமது திருக்கரத்தாற்றீட்டிய புத்தகப்பிரதியொன்றையு மென்னிடங்கொ
டுத்தருளினார்கள். திருவருள் கூட்டாமையால் உடனே அச்சுப்பதிப்பதிற் சிறிது முயற்சிசெய்யாதிருந்தனன். தற்காலந் திருவருள் கூட்டியதனால் திருக்கயிலாச பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்திலிருந்து என்னுடைய பெரியபிதா அவர்களாகிய சேற்றூர்ச் சமஸ்தான வித்துவான் மு.கந்தசாமிக்கவிராயரவர்க ளெழுதிப்படித்த சுத்தப்பிரதியொன்றும், தென்காசி மகா-ள-ள-ஸ்ரீ முத்துக்குமாரசாமியா பிள்ளையவர்கள் ஏட்டுப்பிரதியொன்றுங் கிடைத்தமையால் எல்லாச் சுவடிகளையும் ஒப்புமைநோக்கி யாராய்ச்சிசெய்து உள்ளதை யுள்ளவாறே சுத்த பாடமாக்கிக் கல்லாதார் அறியும்பொருட்டு அரும்பதவுரை யொன்றெழுதிப் பிற்பாகத்திற்சேர்த்து மதுரைஜில் லா முறையூரில் கனவினுங் கற்றாருக்கே பெரும்பொருளீந்துவக்குங் கற்பகமாகிய ஸ்ரீமாதந் பழ. சி. சண்முகஞ்செட்டியாரவர்கள் பொருளுதவிபெற்று, அச்சியற்றி வெளிவரச்செய்தனன். ஏட்டுச் சுவடிகள் அதிகங் கிடையாமையா லதுபற்றிக் காலந் தாழ்க்காமல் பெற்றதுகொண்டு திருப்தியடையவோமென்னுங் கருத்தாலிங்ஙனம் விரைந்து பதிப்பித்து முடித்தேன்; இதினுந் திருத்தமான பாடங்கள் கிடைக்கப்பெற்ற கனவான்கள் எனக்குத் தெரிவித்து, அவற்றை யுதவுவார்களாயின் அவர்களுக்கு நன்றியறிதல் கூறி, இரண்டாம் பதிப்பில் அவ்வாறு பதிப்பித்து வெளிப்படுத்தும் பேரவாவுடையனாயிருக்கின்றேன்.

இந்நூலாசிரியராவார் இன்னாரென்று நூலுள் எங்கேனுங் குறிப்பாகக் கூடக் காணவில்லை. கன்னபரம்பரையில் மகாகவியாகிய ஒட்டக்கூத்தரென்று பெரும்பாலார் கூறுகின்றனர். ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழதேவர் காலத்திலிருந்து அவருக்கும், அவர் மைந்தர் குலோத்துங்கசோழதேவர் காலத்திலும், அவர் மைந்தர் இராசராச சோழதேவர் காலத்திலுமிருந்து, அவ்விருவருக்குந் தனித்தனி யொவ்வோர் உலாப்பிரபந்தம் பாடியுள்ளார்; அம்மூன்றுலாப்பெற்ற மூன்றரசர்களது வழியில், சில தலைமுறைகளுக்குப்பின் றோன்றியவன் சங்கமராசனென்னும் சோழனாவான்; இவனுக்கு மைந்தராகிய நல்லமன், குமாரகுலோத்துங்கன், சங்கரன் என்னு மூவருளொருவனாகிய குமார குலோத்துங்கன் காலத்திலுமிருந்து, கூத்தர் இக்கோவை பாடினாரென்ப தொருசிறிதும் பொருந்தாமைகாண்க.

அற்றன்று. கூத்தரது இரண்டாவது உலாப்பெற்றவனும் விக்கிரமசோழன் மகனுமாகிய குலோத்துங்கசோழனே இப்பாட்டுடைத் தலைவனென்று கொண்டாலென்னையெனின்? குமாரகுலோத்துங்கனென்றுஞ், சங்கரன் முன்னோன் குலோத்துங்கனென்றும், (63) சங்கமராச குலோத்துங்கன் (2) என்றும் இந்நூலுட் பிரயோகங்கள் காணப்படுவனவாதலால், இப்பெயர்கள் விக்கிரமசோழன் மகனாகிய குலோத்துங்கசோழனுக் கியையாமைகாண்க; சங்கமராசன் மகனே இக்குமாரகுலோத்துங்கன் என்பதும், இவன் சங்கரசோழனது சகோதரனென்பதும், சங்கரசோழ னுலாவில்

    "சங்கமன் றெல்லைத் தவம்போல.....
    வல்லமனாதி மனுவினு மேதக்க
    நல்லம னென்கின்ற நாயகற்கும்.....
    பைத்த பொருபுலியை பல்கோடி வேந்தணிய
    வைத்த குமார மகீதரற்கு – மெய்த்துணையாத்
    தோற்றிய சங்கர ராசன் சுரராசன்"

என வருவனவற்றாலறிக. ஆதலின், கூத்தருலாப்பெற்ற குலோத்துங்க சோழனும் கோவைப்பிரபந்தம்பெற்ற குமார குலோத்துங்க சோழனும் ஒருவரல்லரென்பதற்கும் கோவை நூலாசிரியர் கூத்தரல்லரென்பதற்கும் ஐயமில்லை.

இவற்றை விரிவாகத் தெரியவேண்டுமேல், மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் மூன்றாந்தொகுதி 164-ஆம் பக்கமுதல் 170-ஆம் பக்கம் வரையும் செந்தமிழ்ப் பத்திராசிரியர் ஸ்ரீமத் ரா. இராகவையங்காரவர்கள் தக்க பிரமாணங்களோடு நன்காராய்ந் தெழுதியுள்ளார்கள்; ஆண்டுக்காண்க. இனி, "கோவையுலாவந்தாதிக் கொட்டக்கூத்தன்" எனக்கூறியதென்னையெனின்? அது புதுவைக்காங்கேயன் மேற் கூத்தர்பாடியதாகத்தெரியும் நாலாயிரக் கோவை பற்றியே என்க; இஃதறியாதார் மேற்கூறிய வாக்கியங்களைக் கொண்டு குமார குலோத்துங்கன் கோவையே கூத்தர்பாடியகோவையென்று கன்ன பரம்பரையில் வழங்கிவந்தனர் போலும், ஒருவாற்றானும் இந்நூலாசிரியர் இன்னாரென்பது தெரியவிலை. பலவாற்றானு நுணுகிய ஆராய்ச்சியுள்ள பேரறிவாளர்க ளெங்காவது இந்நூலாசிரியரின்னாரென்று தெரிந்து தயைகூர்ந்து எனக்குத்தெரிவித்தால் இரண்டாம் பதிப்பிலேவெளிப்படுத்தச் சித்தனாயிருக்கின்றேன்.
சுபம், சுபம், சுபம்.

இங்ஙனம்,
மு. ரா. அருணாசலக் கவிராயர்,
மதுரைத்தமிழ்ச்சங்க நூற்பரிசோதகர்.

சிவமயம்.

குலோத்துங்கசோழன் கோவை.
காப்பு.


    கணைக்கோவை யேசொரிந் தன்றிலங் காபுரி காயரவி
    னிணைக்கோவை யீந்த கடாக்களி றேயெழு பார்க்குமொரு
    துணைக்கோவைக்கோழிக்குலோத்துங்கசோழனைச்சொல்லியவைந்
    திணைக்கோவை பாட வடிதொறுங் காக்கநின் சேவடியே.

நூல்.
முதலாவது: - களவியல்.


அஃதாவது-பொருளதிகாரத்துட் கூறப்பட்ட உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் பிறவுந் தம்முளொத்த பதினைந்தாண்டும் பத்துமாதமுஞ்சென்ற தலைவனும் பதினொராண்டும் பத்து மாதமுஞ்சென்ற தலைவியும் கொடுப்போரும் பிறருமின்றி யூழ்வயத்தாற் றாமேயெதிர்ப்பட்டுப் புணர்தற்றன்மை. இங்ஙனம் புணர்தல்- வேதத்துட்கூறிய எண்வகைமணத்துட் காந்தருவமணமாய்க் கைக்கிளை முதல் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதலீறாகிய பதினேழு கிளீவித்தொகைகளையுடையது. அவை வருமாறு :--

முதலாவது-- கைக்கிளை.

அஃதாவது-தலைவன்மாட்டாவது தலைவிமாட்டாவது நிகழுமொரு தலைக்காமம்; அவற்றுளிது-தலைவன்பாற்படு மொருதலைக் காமமாய்க் காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் என நான்குவகைப்படும்; அவை வருமாறு:-

காட்சி.

(இ--ள்.) தலைவன் தலைவியை ஒரு பூஞ்சோலையிடத்துக் காணுதல்.

    பொன்பூத்த தாமரை செங்குமிழ் நீலம்பொற் கோங்கரும்பு
    மின்பூத்த காந்தளும் பூத்தது வேவெகுண் டோருக்கெல்லாங்
    கொன்பூத்த வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லின்பூத்த கற்பகக் காநடு வேயொ ரிளங்கொடியே. (1)

ஐயம்.
(இ-ள்.) கண்டதலைவன் இவள் எந்த வுலகத்துப் பெண்ணோவென்று சந்தேகப்படுதலைக் கூறுதல்.

    சங்கம ராச குலோத்துங்க சோழன் றமிழுறந்தைத்
    துங்கன் வழிமுத லோனிட மோவவன் சூழிடமோ
    வங்கவ னுக்கிரு ணீங்கிட மோவன்றி நண்பிடமோ
    கொங்கவி ழுங்குழ லாட்கிட மேதெனக் கூறுவமே. (2)

துணிவு.

(இ-ள்.) சந்தேகிக்கப்பட்ட தலைமகள் பாதம்பூமியிற் படிதலாலுங் கண்புடை பெயர்ச்சியாலும் பூலோகத்துப் பெண்ணெனத்தெளிந்து கூறுதல்.

    முன்னம் பலரு நிலமீ துலாவரு மூரிமதன்
    பின்னம் பலரும் பெயருநெஞ் சேபெருங் காவிரிக்கு
    மன்னன் குமார குலோத்துங்கன் றஞ்சை வரையிலிந்தப்
    பொன்னங் கொடியனை யார்க்கிடம் வேறில்லை பூவிடமே. (3)

குறிப்பறிதல்.

(இ-ள்.) தெளிந்ததலைமகன் தலைவியின்வேட்கை அவள் பார்வையாற் றன்னிடத்துள்ள தென்றறிதலைக் கூறுதல்.

    பொங்கோத ஞாலத் தறிவொன் றிலாத புரவலர்தம்
    வெங்கோன் மையுமந்த வெங்கோன்மை யாவும் விலக்கியென்று
    நங்கோ னுறந்தைக் குலோத்துங்க சோழ னடாத்துமொரு
    செங்கோன் மையுமொத்த வாலிரு நோக்குமிச் சேயிழைக்கே. (4)

1-கைக்கிளை முற்றிற்று.
---------

இரண்டாவது - இயற்கைப்புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவதுகூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க. அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்குவகைப்படும்; அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு:-

இரந்துபின்னிற்றற் கெண்ணல்

(இ-ள்.) தலைவன் தலைவியை யாசித்துப் பின்னிற்றற்கு நினைத்தல்.

    மலையாக் குவிந்த தனங்களுள் ளார்கனி வாயிதழ்க்கே
    நிலையாச் சுரக்கு மமுதமுள் ளார்நில வேந்தர்க்கெல்லாந்
    தலையாக்குங் செம்பொற் சரணான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    லலையாக்குங் கூர்விழி யாரிரப் போர்க்கின் றளிப்பர்நெஞ்சே. (5)

இரந்துபின் னிற்றல்.

(இ-ள்.) அங்ஙனமெண்ணிய தலைவன் தலைவிக்கு இதஞ்சொல்லிப் பின்னே நிற்றல்.

    உள்ளக் கமலத்தி னுள்ளூ றியவென் னுவகையென்னும்
    வெள்ளத் தடத்தை விடாவன்ன மேவியன் பாவனைத்துந்
    தெள்ளத் தெளிந்த குலோத்துங்கன் கோழிச் சிலம்பின்மதன்
    கள்ளச் சலத்தையென் பாலினு நீக்கக் கருதுமின்றே. (6)

முன்னிலை யாக்கல்.

(இ-ள்) தலைவிநிற்பது தன் காரியத்திற்குவேண்டுங் காரணமென்றெண்ணி அவளைத் தலைமகன் முன்னிலையாக்கி மொழிதல்.

    மெய்யா னதுவியர் வாகுமென் றோவிளை யாடல்செய்வீர்
    கையா னதுசிவப் பேறுமென் றோமலர் காவிற்கொய்யீர்
    சையா சலப்பொன்னி நாடன் குலோத்துங்கன் றஞ்சையுன்னீ
    ருய்யானந் தன்னி லொருபாவை போனிற்ப தோதுமினே. (7)

மெய்தொட்டுப் பயிறல்.

(இ-ள்) தலைவன் தலைவி சரீரத்தினோருறுப்பைத் தீண்டிப் பழகுதல்; அஃதாவது: கூந்தலிலுள்ள வண்டுகளை யோட்டுதல்போலத் தோளைத் தொட்டுரையாடல்.

    கோடாத நீதிச்செங் கோலான் குலோத்துங்கன் கோழிமின்னார்
    தோடார் மலர்க்குழல் சூழ்வண்டு காடுய்ய பாடல்செய்தும்
    பீடார்பொற் றாமரைச் சங்கமுற் றும்பெருங் காவியங்க
    ளூடா டியுமிவர் நூலைய மேது முணர்ந்திலிரே (8)

பொய் பாராட்டல்

(இ-ள்.)தலைமகன் தலைமகள்மாட் டுள்ளது மில்லதுங்கூறிப் புகழ்ந்து கொண்டாடுதல். ஆயின், உள்ளது கூறுதலும் பொய் பாராட்டலோவெனின்? அற்றன்று. மற்றென்னையெனின்? இல்லது கூறுவான் உள்ளதை விட்டு விடுவானல்லனென்க.

    கண்டார் துதிக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வண்டார் குழலி முகநடை போல்வளந் தங்களுக்கு
    முண்டாக வேண்டி யிரந்திரந் தேயொரு நான்முகனைத்
    தண்டா மரையும்வெள் ளன்னமு மின்னமுந் தாங்குவவே (9)

இதுவுமது.

    திக்கானை யெட்டும்பின் காட்டிய வாறுஞ் சிலைவிந்தம்போ
    யிக்கா கினிபுக் கொளித்திடுமாறு மிரப்பவர்க்குக்
    கைக் காமதேனுக் குலோத்துங்கசோழன் கல்யாணி வெற்பின்
    மைக் காவியங்கண்ணி நின்கொங்கை யான்மன மானித்ததே (10)

இடம்பெற்றுத் தழால்.

(இ-ள்.) தலைவன் தலைவியைத் தழுவுதற்கு வாய்த்த இடத்தைக்கண்டு கூறுதல்.

    அத்தாரு நேருங் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    லெத்தா லினிமெலி வாய்மன மேயெழு பாரும்விற்கு
    முத்தார் வனமுலை யார்கண்ணி லேயுண்டு மொய்கருணை
    கொத்தார் வனமுலை யார்கண்ணி லேயுண்டு கூடி*டுமே (11).

வழிபாடு மறுத்தல்.

(இ-ள்.) இரந்துபின்னிற்றன் முதலாகப் பொய் பாராட்டலீறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவிமறுத்தல்.

    கூரும்வை வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வாருநம் மாதவி காளுங்கள் பான்மறைந் துய்யச்செய்யீர்
    நீரு மசோக மடைந்துநிற் பீரும்மை நேசித்தெய்தும்
    பேரு மசோக மடைந்துநின் றாலென் பிழையுமக்கே (12)

இடையூறு கிளத்தல்.

(இ-ள்.) தலைவி வெட்கமுற்றுக் கண்ணை மூடிக்கொண்டு நிற்றலினா லெழுந்த துன்பத்தைக் கூறுதல்.

    செம்மையிற் பைங்கொடி யீர்புண்ட ரீகத் திறங்கொண்டுநீர்
    வெம்மையிற் செங்கயன் மீனங்கொண் டீரிந்த வீரியம்போ
    விம்மையிற் செய்ய வடமே ருவுங்கொள்ளி லிப்புவியோ
    ரும்மையத் தஞ்சைக் குலோத்துங்க சோழனென் றோதுவரே. (13)

நீடுநினைந் திரங்கல்.

(இ-ள்.) புணர்ச்சியெய்தாமையா லிவளுள்ள மெஞ்ஞான் றியையுமோவென நெடுநேரந் தலைவனினைந்து தலைவியைப் பார்த்துக் கூறுதல்.

    என்றோ முகமெடுப் பீரெந்த நாட்செவ் விதழலர்ந்து
    நின்றோர் மொழியென் னுடன்மொழி வீர்நிரை யோட்டியபின்
    கன்றோட வோட்டுங் குலோத்துங்க சோழன்கல் யாணியன்னீர்
    குன்றோ வெனுங்கொங்கை யெந்நாட் டிறந்தென்னைக் கூடுவதே. (14)

மறுத்தெதிர் கோடல்.

(இ-ள்.) முன் வழிபாடு மறுத்ததனை மறுத்துத்தலைவி தலைவன் கூறியசொல்லை யேற்றுக் கோடலைக் கூறுதல். போரேற்றா னென்பதற்குப் போரெதிர்ந்தானென் புழிப்போல எதிர்தல் – ஏற்றல்.

    வெப்பார் வெகுளிக் களிற்றாளர் காமத்தின் வெள்ளத்தையா
    முப்பார் புணையிற் கடப்பதொப் பாயுவ ராழிசுற்றுங்
    குப்பாவை கேள்வன் குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றப்பா நிறைபொறுக் கச்செய்தி லேமெய்த் தவநெஞ்சமே. (15)

இதுவுமது.

    அள்ளற் கடலன்ன மாலா னவர்தமக் கங்கொருகல்
    விள்ளப் படாதன் றுருகிய தால்வெண்ணெய் வாரியுண்ட
    கள்ளத் தொருவன் குலோத்துங்க சோழன்கல் யாணியிலென்
    னுள்ளக் கனகவிம் மாலா னவர்க்கின் றுருகியதே. (16)

வறிது நகைதோற்றல்.

(இ-ள்), தலைவி முகத்திலே சிறுநகை தோன்றுதல். வறிது – சிறிது.

    என்னோ திருவுள மிப்பா வையர்க்கென் றிரங்குமிந்த
    மன்னோ யிருளுக் கிளநில வாயது வண்டமிழைச்
    சொன்னோரை வாழ்விக்குங் கோழிக் குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பொன்னோ வெனுநிறத் தார்முகத் தாமரைப் புன்னகையே. (17)

இக்கவி உரைப்போருங் கேட்போரு மின்மையாற் கவிக் கூற்றென்று கொள்க.

முறுவற் குறிப்புணர்தல்.

(இ-ள்.) தலைவி சிறுநகையின் குறிப்பைத் தலைவனுணர்தல்.

    மகத்தான பன்னிரு வெய்யவ ரான்மல ராதவென
    தகத்தா மரையை யலர்வித்த தாலன்றி ராவணனை
    யுகத்தான் பொருத குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பின்
    மிகத்தான் புதுமை யிவணகை யாமிந்த வெண்ணிலவே. (18)

முயங்குத லுறுத்தல்.

(இ-ள்.) தலைவி புணர்ச்சிக்குடன்பட்ட அருமையை வற்புறுத்திக் கூறுதல்.

    நண்ணா ருழைக்குலஞ் சாயவெல் வேங்கை நடாத்தியெங்குங்குங்
    கண்ணாரக் காக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    பெண்ணா ரமுது முயன்றெய்து மாறு பெறப்புகுந்தேம்
    விண்ணா ரமுது முயன்றெய்த லாமினி மேதினிக்கே. (19)

இதுவுமது

    குடநாணுங் கொங்கைக் கரும்புக்கு மேல்விதிக் கோன்வளைத்த
    மடநாண வேலி பரீப்புண்ட தான்மலர்க் கோகனகை
    யுடனாக வாழுங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    கடநாக மாக வினிநாந் துணிவது காரியமே. (20)

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைக் கலத்தலான் மகிழ்தல்.

    தேனென்றும் பாலென்றுந் தேமாங் கனியென்றுந் தீங்கரும்பு
    தானென்றுஞ் சொல்வது நாமட்டன் றோவத் தயரதன்பாற்
    கானென்ற வாசம் பெறுமால் குலோத்துங்கன் காவிரிவாய்
    மீனென்ற கண்ணி யிதழ்த்தேன்றித் தித்ததென் மெய்யெங்குமே. (21)

புகழ்தல்.

(இ-ள்.) தலைவியினது நலத்தைத் தலைவன்வியந்து பாராட்டல்.

    ஒருகால் விரிதந் தொருகாற் குவிதரு மொண்கஞ்சமு
    மிருகாலும் வந்துதி யாமதி யாவது மீரருகும்
    பொருகா விரித்துறைத் தஞ்சைக் குலோத்துங்கன் பூங்கிரிவாய்
    வருகா ரிகைநின் முகம்போலு மென்பதெவ் வாசகமே. (22)

இப்பதினைந்து துறைகளுள், இரந்துபின்னிற்றற் கெண்ணல் முதல்நீடுநினைந்திரங்கலீறாகிய ஒன்பதினுள், வழிபாடு மறுத்த லொழிந்த எட்டும் வேட்கையுணர்த்தற்கும், வழிபாடு மறுத்தலொன்றும மறுத்தற்கும், மறுத்தெதிர் கோடலும் வறிதுநகை தோற்றலுமாகிய இரண்டும் உடன்படற்கும், ஏனையநான்குங் கூட்டத்திற்கு முரியன.

2-இயற்கைப்புணர்ச்சி முற்றிற்று.
-------------

மூன்றாவது-வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்; அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்; அவை: அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்ற லீறாகிய ஆறுவிரிகளையுடையன; அவை வருமாறு:-

அணிந்துழி நாணீய துணர்ந்து தெளிவித்தல்.

(இ-ள்.) புணர்ச்சியிடத்துத் தலைவி புனைந்த முத்தார முதலிய கொங்கையணி குழலணிகள் வேறுபட்டவற்றைத் தலைவன் றன் கையினால் வேறுபாடுதீரப் புனைந்துழித் தலைவி பாங்கியா லணியப்பட்ட அணிக்கு இவர் கையாலணியும் அணி வேறுபடுமென்றும் அதைப் பாங்கி யறியில் ஐயம் பிறக்குமென்றும் நாணுற்று வெட்கப்பட்டாளாக அதைத் தலைவனறிந்து தலைவியைத் தெளிவித்தல்

    செய்யுந் தருமத் துறையூர்க் குலோத்துங்க சென்னிவெற்பி
    னையுந் தொழிலொழி நன்னுத லேநடு வாதியந்தம்
    பெய்யு மணிகலன் முன்போ லணிந்தனன் பேரிகுளை
    கையுமென் கையு மொருவர்தம் பாலணி கற்றனவே. (23)

பெருநயப் புரைத்தல்.

(இ-ள்.) இனி, தலைவன் வருவானோ வாரானோவென்று தலைவி முகம் வேறுபட அதைத் தலைவன் குறிப்பாலுணர்ந்து தனது மிகுந்த காதலைக் கூறுதல்.

    மண்ணாடு காக்குங் குமார குலோத்துங்கன் வாழுறந்தைக்
    கண்ணாடி யெங்குந் திரிவண்டு காள்கதிர் மாமதிக்கே
    யுண்ணா ணுவதன்றி யம்மதி நாண வொளிருங்கஞ்சம்
    பெண்ணார் முகக்கஞ்சம் போலவுண் டோநும் பெருந்தடத்தே. (24)

தெய்வத்திறம் பேசல்.

(இ-ள்.) மேற்கூறியதைத் தலைவி தெளியாதவளாகத் தலைவன் அவளூழ் வலியின் றிறத்தைக் கூறுதல்.

    விதியார் பிணைப்பப் பிணைந்தநங் கூட்டம் விலக்கவல்ல
    மதியார் சிலருமிவ் வையத்துண் டோமண்டு காவிரிநன்
    னதியாதி சங்கம ராச குலோத்துங்க னாகைவெற்பிற்
    கதியான் மடவன்ன மேயென்ன மேனி கருகுவதே. (25)

பிரியே னென்றல்

(இ-ள்.) தலைவன் பிரிவனென்னுங் கவற்சியால் தலைவி யுடல் விளர்ப்பக்கண்ட தலைவன் உன்னைவிட்டுப் பிரியமாட்டே னென்று கூறுதல்.

    என்றேனு மெய்யு முயிருமொப் பாமென்ன யானஞ்சவே
    னொன்றே யலவிரண் டேயென்கை யாலொரு நாள்விளவிற்
    கன்றே யெறிந்த குலோத்துங்க சோழன்கல் யாணியன்னீர்
    சென்றே யுமைப்பிரி யேன்பிரிந் தாலெங்ஙன் றேறுவனே. (26)

பிரிந்து வருகென்றல்.

(இ-ள்.) பிரியேனென்றது கேட்டு மகிழ்ந்த தலைவிக்குத் தலைவன் பின் பிரிந்து வருவேனென்று கூறுதல்.

    நீங்கே னுனையொரு போதுமின் னேயன்றி நீஞ்கிலுயிர்
    தாங்கேன் வருவதுந் தாழ்ச்சிசெ யேன்றட மார்பிடத்துப்
    பூங்கே கயத்தன் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யாங்கே நிலாமுகிக் குண்டோ நிலாவிடுத் தாரிடமே. (27)

இடமணித் தென்றல்.

(இ-ள்.) தலைவனூர் தூரத்திலுள்ளதோ? சமீபத்திலுள்ளதோ? வென்று தலைவி வருந்திய அதனைக் குறிப்பாற்கண்ட தலைவன் ஊரிருக்குமிட மிகச் சமீபத்திலுள்ளதென்று கூறுதல்.

    தேனே யுனது விழிகாது சூழ்ந்தெனச் சென்றுனதூர்
    மானேயென் னூர்வள்ளை மேனாஅவை நீட்டுமெம் மன்னவர்க்குந்
    தானே தலைமைப் பெருமான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    பூநேரு நின்றிரூ மேனியென் வாடிப் புலம்புவதே. (28)

இவற்றுள் முன்னையமூன்றும் ஐயந்தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கு முரியன.

3-வன்புறை முற்றிற்று.
--------

நான்காவது – தெளிவு.

அஃதாவது – தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந்தாற்றுவது; இது – வகையும் விரியுமில்லாமனின்றது.

    வையார் நமைத்தனி வைத்தாலு மீள மனமறுப்புச்
    செய்யார்நங் காதலர் தேறுநெஞ் சேதெய்வ வேதம்பொய்த்தும்
    பொய்யாத சங்கம ராச வரோதயன் பொற்புயத்துக்
    கொய்யார மாலைக் குமார குலோத்துங்கன் கோழியிலே. (29)

4 – தெளிவு முற்றிற்று.
____________

ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.

அஃதாவது – பிரிந்துபோகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக்கண்டு தலைவன்மகிழ்தல்; இது – வகையினறிச் செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லலும் பாகனொடு சொல்லலுமாகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-

செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல்.

(இ-ள்.) புனர்ச்சிக் குறியிடத்தினின்றும் பெயர்ந்து செல்லா நின்ற தலைமகளது செலவைக்கண்டு தலைவன் றன்னெஞ்சொடு சொல்லுதல்.

    பின்னே சரிகொண்டை யோர்காந்த ளேந்தவும் பெய்கலையைத்
    தன்னே ரிலாதொரு தாமரை தாங்கவுந் தண்டமிழ்க்குப்
    பொன்னே பொழியுங் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யென்ன நடக்கின்ற வாநெஞ்ச மேயென தின்னுயிரே. (30)

பாகனொடு சொல்லல்.

(இ-ள்) தலைவன் றன்னைத் தேடிவந்த தேர்ச்சாரதியிடத்தில் தலைவி செல்லுதலைக் காட்டிக் கூறுதல்.

    முன்பார்த்த வச்சமுஞ் சோர்வோ டுயிர்ப்பு முகவெயர்ப்பும்
    பின்பார்த்த நோக்குமென் பேரன்பு மாய்ப்பெரு வேந்தரெல்லாந்
    தன்பாற் பணியுஞ் சரணான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
    மின்பார்த்த வேல்வல வாபார்க்கி லாயொரு மின்செல்வதே. (31)

5-பிரிவுழிமகிழ்ச்சி முற்றிற்று.
--------------------------------------------

ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.

அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது. அது - மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டுவகைப்படும். அவை: ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயாமோவென்றல் முதல் கண்படை பெறாது கங்குனோத லீறாகிய ஐந்து விரிகளை யுடையன;
அவை வருமாறு:-

ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.

(இ-ள்) தலைவியைப்பிரிந்த மாதர்கூட்டம் வந்து வழிபடுதலைக் கண்டு இம்மாதர் கூட்டத்துள்ளாளென்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ? வென்று தலைவன் மயங்கிக் கூறுதல்.

    விம்மாய துன்பத்துக் கண்மாய வெள்ளத்தை மீட்கநெஞ்சே
    தம்மாய வெள்ளந் தணந்திங்ங னேதச மாமுகனைக்
    கம்மாய வெய்த குலோத்துங்க சோழன்கல் யாணியன்னா
    ரெம்மாய மோகன வோமனம் போனமக் கெய்தியதே. (32)

வாயில்பெற் றுய்தல்.

(இ-ள்) தலைவி உயிர்ப்பாங்கி முகத்தை நோக்கிச் செல்லுதலைப் பார்த்துத் தலைவன் அப்பாங்கியைத் தூதாகப்பெற்று உய்வதாகக் கூறுதல். பாங்கி - பக்கத்திலிருக்கு முயிர்த்துணைவி.

    அம்மான் முகமரைக் கும்மதி மீதுக்கு மாதரிக்கு
    மிம்மான் விழிவண்டு மானுஞ்சென் றேறு மெடுத்தொரம்பாற்
    பொய்ம்மானை யெய்த குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யுய்ம்மா நலமொன்று கண்டுகொண் டேன்களிப் புள்ளத்திலே. (33)

பண்புபாராட்டல்.

(இ-ள்.) தலைவியின தழகைத் தலைவன் வியந்துகொண்டாடுதல். பண்பு - ஈண்டு அழகின்மேனின்றது.

    பொன்னே யழற்படு முத்தே துளையுண்ணும் பூப்புலரு
    மின்னே கரக்கும்பைந் தேனே யழிதரும் வெள்விடையோன்
    றன்னேயந் தன்னை மறவாக் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    லென்னேயிப் பூங்கொடிக் கொப்பாக நாமெடுத் தேத்துவதே. (34)

பயந்தோர்ப்பழிச்சல்.

(இ-ள்.) தலைவியைப் பெற்றோரைத் தலைவன்வாழ்த்தல்.

    மாமேரு பொன்ன்றை யாய்நாக லோக மணியறையாய்த்
    தாமேயிவ் வையத்து வாழிய ரோதமிழ்ப் பாவலர்க்குக்
    காமேக மன்ன குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    யாமே பெறவின்ப மீந்தாளைத் தந்த விருவருமே. (35)

கண்படைபெறாது கங்குனோதல்.

(இ-ள்.) அன்றிரவிலே தலைவி தந்த ஆசையால் நித்திரை பெறாது இருட்காலத்தைத் தலைவன் நொந்து கூறுதல்.

    தாயாய்ப் புவனம் புரககுங் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    வாயாற் கெடுபவர் தாமுமுண் டான்மலை வாணர்குலத
    தூயா ளளகத்தைக் கங்குலொவ் வாயென்று சொற்றகுற்ற
    மோயாம லென்னை வளைத்தது கோபித் துயிருண்ணவே. (36)

இவற்றுள் - முன்னையதொன்றும் மருளுற்றுரைத்தற்கும், பின்னைய நான்குந் தெருளுற்றுரைத்தற்கு முரியன.

6-பிரிவுழிக்கலங்கல் முற்றிற்று.

காட்சிமுதல் கண்படைபெறாது கங்குனோதலிறுதியாகக் கூறிய முப்பத்து மூன்று துறைகளும் முதல் நாள் நிகழ்ச்சியென்க.
------------

ஏழாவது--இடந்தலைப்பாடு.

அஃதாவது- இயற்கைப்புணர்ச்சியிற் கலந்த தலைவன் மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந்தருமெனச் சேறல் முதல் ஆயத்துய்த்தலீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:--

தந்ததெய்வந் தருமெனச்சேறல்.

(இ-ள்.) முன் கூட்டியவிதி யின்னுமவ்விடத்திற் சென்றாற் கூட்டுமெனத் தலைவன் சேறல்.

    இட்டாரெப் போது மிடுவா ரிடாரென்று மிட்டுண்கிலார்
    பட்டாங்கி லுள்ள படியிதன் றோபண் டிராவணனைக்
    கட்டாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்கல் யாணிமின்னைத்
    தட்டாது முன்னந் தருந்தெய்வ மின்னந் தருநெஞ்சமே. (37)

முந்துறக்காண்டல்.

(இ-ள்.) முன்போலத் தலைவியைத் தலைவன்காணுதல்.

    சிந்தா மணிவிளக் கோவிள ஞாயிற்றுச் சேயழகோ
    மந்தா கினிரத்ந மாலைகொ லோமத மாரிசிந்திக்
    கந்தாடு தந்திக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    கொந்தாடு காநடு வேநின்ற தீதென்று கூறரிதே. (38)

முயங்கல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் புணர்தல்.

    தேனுந் துவர்க்கும் பசும்பாகுங் கைக்குமத் தீங்கரும்பு
    தானும் புளிக்குங் கனிகளுங் காறுந் தசமுகன்பாற்
    கூனுஞ் சிலைக்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லீனுந் தளிர்நிறத் தாளிதழ்த் தேனுண்ட வென்னிதழ்க்கே. (39)

புகழ்தல்.

(இ-ள்.) தலைவன் றலைவியைப் புகழ்ந்து கூறுதல்.

    பிறையாயு மங்கை நுதலுக்கொவ் வாய்பிறை போய்க்கலையி
    னிறையாய போது முகத்துக்கொவ் வாய்நெடுங் காவிரிப்பூந்
    துறையாதி சங்கம ராசகு லோத்துங்க சோழன்வெற்பின்
    மறையாநிற் பாய்வரு வாயென்ன நாண மதியுனக்கே. (40)

ஆயத் துய்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை மகளிர் கூட்டத்துள் விடுத்தல்.

    தண்டா ரகையின் கணநடு வேயொரு தண்மதியங்
    கண்டா லலது சிறப்பில்லை யேநவ கண்டமெல்லாங்
    கொண்டாடுஞ் சங்கம ராச குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மண்டாய வெள்ளத் தெழுந்தருள்வாய்*மெள்ள வாணகையே. (41)

இவற்றுள் - தந்ததெய்வந் தருமெனச் சேறலொன்றுந் தெய்வந் தெளிதற்கும், காண்டல் முயங்கல் புகழ்தலாகிய மூன்றுங் கூடற்கும், ஆயத்துய்த்தலொன்றும் விடுத்தற்கு முரியன. இதுவரையும் இரண்டா நாள் நிகழ்ச்சி.

7- இடந்தலைப்பாடு முற்றிற்று.
-----------------

எட்டாவது - பாங்கற்கூட்டம்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியால் வந்த ஆசைநோய் தோழனா லன்றித் தீராதென்றெண்ணி அவனைச் சார்தல்.

    வெயிற்கே நிழலும் பசிக்கே யமுதும் வினைக்கறமும்
    பயிர்க்கே புனலுமுண் டாயது போற்பண்டு வாரியுண்ட
    தயிர்க்கேகட் டுண்ட திருமால் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    லுயிர்கேத நீக்க நமக்குயிர்ப் பாங்க னொருவனுண்டே. (42.)

பாங்கன் தலைவனை யுற்றதுவினாவல்

(இ-ள்.) பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு வந்ததற்குக் காரண மென்னை யென்று கேட்டல்.

-------
* மௌவல் வாணகையென்றும் பாடம்.

    தீதோரை மாற்றித் திசைகாத்த தோசெஞ்சொ லேழிசையிற்
    போதோடு பட்ட புலர்ச்சிகொ லோபொன்னி பூகச்சென்னி
    மீதோத மோது முறந்தைக் குலோத்துங்கன் வெற்பண்ணலே
    யேதோ வறிகின்றி லேன்றிரு மேனி யிளைத்ததுவே. (43)

தலைவ னுற்ற துரைத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கேட்ட பாங்கனுக்குத் தலைவன் றனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறுதல்.

    கானாகத் தார்புனை தோணண்ப னேயுட் கலையனைத்துந்
    தானாகச் சோர்ந்து தளரச்செய் தேதரை யேழுமொரு
    கோனாகக் காக்குங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மானாக மொன்று விழுங்கிய தாலென் மதியையின்றே. (44)

கற்றறி பாங்கன் கழறல்.

(இ-ள்.) வேதாகமங்கள்யாவுங் கற்றறிந்த பார்ப்பனப் பாங்கன் தலைவனை யிடித்துக்கூறல். இடித்துக்கூறல் – உறுதிச்சொற் சொல்லுதல்.

    அல்லோ வெயிலைப் பொருமிரு ளோவழ லோனைமொய்க்குங்
    கல்லோ குழையுங் கடலோ வுறங்குங்கல் யாணிப்பிரான்
    வில்லோத மீதுகுனித்தோன் குலோத்துங்கன் வெற்பிலொரு
    செல்லோதி யோநின் மனமயக் காநிற்குந் தேர்மன்னனே. (45)

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

(இ-ள்.) பாங்கன் கூறிய உறுதிமொழியைத்தலைவன்மறுத்தல்.

    பண்ணாசை பூண்ட குலோத்துங்க சோழன் பதித்தஞ்சைவாய்ப்
    பெண்ணாசை யார்க்கும் விடாதுநண் பாமுனி பெண்கொடிக்கா
    விண்ணாடர் கோன்கொண்ட காமத்தி னாலந்த வேள்கணைபாய்
    புண்ணா யிரங்களைக் கண்ணா யிரமென்னும் பொன்னுலகே. (46)

பாங்கன் கிழவோற் பழித்தல்.

(இ-ள்.) அங்ஙனங்கூறிய தலைவனைப் பாங்கன் நிந்தித்துக் கூறுதல்.

    மாநாக நாணிற் குழைந்துள்ள மேரு வரைதிரும்பப்
    பூநாக நாணிற் குழைந்ததன் றோபொரும் பேய்க்குத்தெவ்வ
    ரூனாக நல்குங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    கானாகத் தாழ்குழ லாட்கைய நீமனங் கட்டுண்டதே. (47)

கிழவோன் வேட்கை தாங்கற்கருமைசாற்றல்.

(இ-ள்.) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

    சுழிவேலை கட்டு முறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பில்
    வழிவேலை யன்ன கலைநண்ப னேயந்த மானனையாள்
    விழிவே லெறிந்தவென் புண்வழி யேவெய்ய தீயெனநின்
    மொழிவே லெறிகுவை யாலினி யாற்ற முடிவதன்றே. (48)

இதுவுமது.

    இந்நா ளொருத்தி தருகாமத் தீநண்ப யாரவிப்பார்
    பொன்னாருஞ் செல்வப் புகார்மன் குலோத்துங்கன் புண்ணியமாந்
    தொன்னாண் மரபிற் றொடுங்கடற் கேனுமத் தொன்மரபோர்க்
    கந்நாள் வருவித்த வானதிக் கேனு மவிக்கரிதே (49)

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

(இ-ள்.) அதுகேட்ட பாங்கன் எம்பெருமான் ஆற்றானா யிவ்வாறு கூறினால் அதற்கு நானென் சொல்வேனென்று தன்னுள்ளே வருந்துதல்.

    மேலாய் சான்றவர் வெய்யோனு நம்பெரு வேந்தனுமே
    போலா மெனவிருந் தேமிரு வோரையும் பூகண்டமோர்
    கோலா லளிக்குங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மாலாழி யன்றுமின் றும்மறைத் தாலென்ன வாய்நமக்கே (50)

இதுவுமது.

    தடமார் விசும்பினுக் கோர்மதி பார்க்கெந் தலைவர்மதி
    யிடமார் மதியிரண் டென்றிருந் தேமிரு மாமதியுங்
    கடமார் களிற்றன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    மடமா னிரண்டு *மறுச்செய்த தேதினி வாய்நமக்கே (51)
    -------------
    *வடுச்செய்ததென்றும் பாடம்.

பாங்கன் றலைவனோடழுங்கல்.

(இ-ள்.) இங்ஙனம் வருந்திய பாங்கன் சகியாதவனாய்த் தலைவனோடு வருந்துதல்.

    மேகம் பணியுங் குழலா ளொருத்திக்குன் மெய்வருந்து
    மோகம் பலசொல்லி யுந்தணி யாய்முனை வேலுடனே
    காகம் படருங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    பூகம்ப மெய்தி லதையார் தணிப்பர்தம் புந்திகொண்டே. (52)

எவ்விடத்தெவ்வியற்றென்றல்.

(இ-ள்.) பாங்கனிவ்வாறு கூறியும் தலைவன் வருந்துதலைக்கண்டு இவன் தலைவியைக் கூடாதொழியின் இறந்துபடுமென்று தேறித் தலைவனை நோக்கி நின்னாற் காணப்பட்ட உரு எந்தவிடத்து எந்தவியலையுடையதென்று வினாவுதல்.

    வாமா நகுலன் குமார குலோத்துங்கன் வாழுறந்தைக்
    கோமான் கொடியிருக் குங்குடி யோசெழுங் கோகனகப்
    பூமா னறிய விதழா யிரக்கடை பூட்டுமில்லோ
    காமானு மோதி யிடமே தியலெது காவலனே. (53)

அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல்.

(இ-ள்) தலைவன் என்னாற் காணப்பட்டவுரு இந்தவிடத்து இந்த இயலையுடையதென்று கூறுதல்.

    பண்ணாகுங் கண்டம் பயோதரங் கோடந்தப் பைந்தொடிக்குத்
    தண்ணாகுஞ் சொல்பிறை தான்குளங் காண்டமிழ் வாணர்தங்க
    ளெண்ணாகும் வண்மைக் குலோத்துங்க சோழ னிடத்துநண்பா
    கண்ணாகு மாவிடந் தோள்வரை காணிடங் காவிடமே. (54)

பாங்கனிறைவனைத் தேற்றல்.

(இ-ள்.) இவ்வாறு நீ வருந்தாதொழிக. நீ சொன்ன குறியிடத்துச் சென்று தலைவியைக்கண்டு யான்வருகிறேனென்று தலைவனைப் பாங்கன் தேற்றல்.

    கிளிபோய் மொழிகற்பக் கேகயம் போய்க்கிளர் சாயல்கற்ப
    வளிபோய் விழிகற்ப நிற்குமப் பாவை யழகுகண்டு
    களிபோ தகமன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    வொளிபோது நின்னிலை யான்காண் பளவு முளந்தெளியே. (55)

குறிவயிற்சேறல்.

(இ-ள்.) தலைவன் கூறிய குறியிடத்துத் தலைவியைக்காணப் பாங்ஙன் தேடிப்போதல்.

    முலைவான் பகைப்பந் தடிக்குங்கொ லோமுன் குழைப்பகையா
    லலைவாம்பொன் னூசலை யாட்டுங்கொ லோவள கப்பகையாற்
    கலைவாரி தேருங் குலோத்துங்க சோழன்கல் யாணிப்பிரான்
    மலைவாயக் காமலர் கொய்யுங்கொ லோமன்னன் மன்னுயிரே. (56)

இறைவியைக்காண்டல்.

(இ-ள்.) அங்ஙனந் தேடிச்சென்ற பாங்கன் தலைவியைக் காணுதல்

    முலையே முறுவன் முலையே நளின முகிழ்மருங்கு
    லிலையே வயிறும் வடத்திலை யேயெண்ணி லாதவெண்ணெண்
    கலையே தெரியுங் குலோத்துங்க சோழன்கல் யாணிப்பிரான்
    மலையே யிடமு மிவரேநங் கோன்சொன்ன மாதருமே. (57)

இகழ்ந்த்தற்கிரங்கல்.

(இ-ள்.) தலைவி பேரழகைக் கண்ட பாங்கன் காணாமுன்னம் எம்பெருமானை யறிவின்றியிகழ்ந்தன மென்றிரங்கிக் கூறுதல்.

    கண்ணார் வெருவப் பொருவேற் குலோத்துங்க னாகைவெற்பிற்
    பெண்ண ரமுதி னழகறி யாமலப் பெண்ணமுதின்
    கண்ணாகுங் கூற்றி னலைப்புண்ட வேந்தனைக் கல்வியிலேன்
    பண்ணாருங் கூற்றி னலைத்திகழ்ந் தேன்முன்பின் பார்த்திலனே. (58)

தலைவனை வியத்தல்.

(இ-ள்.) தலைவிகண்வலையிற்சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்துவந்தது வியப்பென்று பாங்கன் அதிசயித்துக்கூறுதல்.

    சாயாத சொற்க மகன்றே யரிவைகுந் தந்தணந்தே.
    யோயாத மேக பதங்கடந் தேயுடைந் தோடினரைக்
    காயாத சிங்கங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    சேயா னினிதுவந் தான்வந்த தாலறத் தேர்ந்தவனே. (59)

தலைவியை வியத்தல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கன் வியந்துகூறுதல்.

    கரும்பே யிவளவன் கைக்களி றேகடுந் தேறலிவள்
    சுரும்பே யவனிவண் மாந்தளி ரேயவன் சொற்குயிலே
    யரும்பேய் முலையுண் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    றரும்பே ரமிர்தத் துளியிவ ளேயவன் சாதகமே. (60)

இவ்வைந்து பாடலும் பாங்கன்றன்னுட்கூறியவை.

தலைவன்றனக்குத் தலைவிநிலைகூறல்.

(இ-ள்.) தலைவிகுறியிடத்துத் தனித்துநிற்கின்ற நிலையைப் பாங்கன் கண்டுவந்து தலைவனுக்குக்கூறுதல்.

    கண்ணாஞ் சகோதரத்தை நீணில வாய்வைத்துங் காய்கதிரா
    வுண்ணாண் முளரி யுனைநோக்கி யேவைத்து மொண்புயத்துத்
    தண்ணார மாலைத் தலைவன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    பெண்ணா ரணங்குநின் றாளண்ண லேயப் பெரும்பொழிற்கே. (61)

தலைவன் சேறல்.

(இ-ள்.) தலைவன் பாங்கன் சொற்படி குறியிடத்துப் போதல்.

    தள்ளாப் பதமிரண் டாப்பிறந் தேமன்றித் தாவிவிழும்
    புள்ளாய்ப் பிறந்தில மேநெஞ்ச மேபுனல் வேணியனை
    யுள்ளாகக் கொள்ளுங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    கள்ளாரக் காவினிற் பார்தமைக் கூடிக் கடுகுதற்கே. (62)

தலைவியையக் காண்டல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப்பார்த்தல்.

    நன்னித் திலங்க ளிருபாலுஞ் சிந்தநந் தோடொழுகும்
    பொன்னித் துறைவன் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யுன்னிக் கனியு முளத்தா மரையினுள் ளேறுமொரு
    கன்னிக் களியன்ன மென்னாவி நோக்கியிக் காநின்றதே. (63)

கலவியின் மகிழ்தல்.

(இ-ள்.) புணர்ச்சியின் மகிழ்தல்.

    தேனார் கடலுந் திருப்பாற் கடலுந் திரைபுரண்டொன்
    றானாலெத் தன்மையத் தன்மையன் றோவகி லாண்டமெலாங்
    கோனாகுஞ் சங்கமன் முன்னோன் குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மானாரும் யானு மணந்தவிப் பேரின்ப மாகடலே. (64)

புகழ்தல்.

(இ-ள்.) தலைவன் புணர்ந்தபின் றலைவியைப் புகழ்ந்துகூறுதல்.

    மட்டார் குழலி கலவியி னீக்கிய வார்திரும்பக்
    கட்டா தொருகணந் தாழ்த்தன ளேற்கவி வாணர்செம்பொற்
    கொட்டார மன்ன குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லெட்டா னையுநிலை கெட்டோடு மூதண்ட மென்படுமே. (65)

பாங்கியொடு வருகெனப்பகர்தல்.

(இ-ள்.) இனிநீ யுன்னுயிர்ப் பாங்கியுடனேவருவாயென்று தலைவிக்குத் தலைவன் கூறுதல்.

    கோங்கார் முகிண்முலை யாய்மெய்யு நீழலுங் கூர்பொருளும்
    பாங்கா முரையும் பிரிவதுண் டோபண் டிராவணனை
    யாங்காரந் தீர்த்த குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    னீங்காநின் காதலி தன்னுடன் வாவினி நீவரிலே. (66)

பாங்கிற்கூட்டல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்துதல். ஆயம் – மாதர் கூட்டம்.

    அணியே பசும்பொன் னொராயிரங் கோடிகொண் டாக்கினடு
    மணியே யமைத்தில ரேற்சிறப் போவணங் கார்சிரத்தைத்
    துணியே தரப்பொருங் கோழிக் குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பணியே நினக்குச் செயுமாயம் போந்தருள் பான்மொழியே. (67)

இவற்றுள் முன்னைய மூன்றுஞ் சார்தல் கேட்டல் சாற்றலென்னு மூன்றற்கும், பாங்கன் கழறல் முதல் கிழவோன்வேட்கை தாங்கற் கருமை சாற்றலீறாகிய நான்கும் எதிர்மறைக்கும், பாங்கன்றன் மனத் தழுங்கல்முதல் தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறலீறாகிய பதுனொன்றும் நேர்தற்கும், தலைவன்சேறல் முதல் புகழ்தலீறாகிய நான்கும் கூடற்கும், தலைவன் றலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் தலைவன் றலைவியைப் பாங்கிற் கூட்டலுமாகிய இரண்டும் பாங்கிற் கூட்டற்குமுரியன.

8-பாங்கிற்கூட்டமுற்றிற்று.
______________

ஒன்பதாவது--பாங்கிமதியுடன்பாடு.

அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்; அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானேகூட்ட முண்மையறிதல்; அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலென மூன்றாம்; அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்; அவை வருமாறு:-


நாற்றங்கண்டையுறல்.

(இ-ள்.) பாங்கி தலைவியிடத்துப் பண்டுபயின்றறியாததோர் புதிய வாசனை கண்டு ஐயுற்று ஆலோசித்தல்.

    கையாப் பெருமண மெய்துமுன் னேயிந்தக் காரிகைதன்
    மெய்யாற் பெருமண மெங்கெய்தி னாள்விரி காவிரிபோய்ச்
    செய்யார்க்குங் கோழிக் குலோத்துங்க சோழன் சிலைக்கொல்லிவா
    யுய்யாக் குறியிதென் னோவந்த வாறென் றுணர்கிலனே. (68)

தோற்றங்கண்டையுறல்.

(இ-ள்.) புணர்ச்சியாற் பெற்றதோ ரழகுகண்டு சந்தேகித்தல்.

    பொன்னுற்ற கொங்கையுஞ் சோர்வுற்ற கூந்தலும் பூந்தளிரா
    மின்னுற்ற மேனியு மெங்கணுற் றாள்வெகுண் டோருக்கெல்லாங்
    கொன்னுற்ற வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழியன்னாட்
    கென்னுற்ற வோவறி யேன்சிறி யேனெஞ் சிளைக்கின்றதே. (69)

ஒழுக்கங்கண்டையுறல்.

(இ-ள்.) தெய்வந்தொழாமை முதலியகண்டு சந்தேகித்தல்.

    ஒன்னாரை வெந்கண்ட வேலான் றனதடி யோரிரண்டாற்
    கன்னாரி யாக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    பொன்னாண் கழுத்தில்வந் தேறுமுன் னேயிந்தப் பூவைதனக்
    கிந்நா ணுறுப்பெங்கு மேறிய வாறென் னினிச்சொல்வதே. (70)

உண்டிகண் டையுறல்.

(இ-ள்,) முன்னைநாளிற் குறைந்த வுணவுகண்டு சந்தேகித்தல்.

    நிறையுண்ட செவ்வந்தி வான்சூழ் பிறையன்ன நீள்குருதிக்
    கறையுண்ட வாட்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லறையுண்ட பாற்கடன் மேனாட் கடையமு தேனுநஞ்சாய்க்
    குறையுண்டி யாகக் குறையுண்ட தேதெங் குலக்கொடியே. (71)

செய்வினை மறைப்புக்கண் டையுறல்.

(இ-ள்.) தலைவி தலைவன்பாற்பட்ட தன்னினைவுந் தொழிலும் பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்கண்டு சந்தேகித்தல்.

    சேணாடர் காலைந்து மொன்றாங் கரதலச் சென்னி பொன்னிச்
    சோணாடு காக்குங் குலோத்துங்கச் சோழன்றுன் னாருக்கன்றோ
    நாணாளுஞ் செய்யும் வினைமறைத் தோடுகை நங்கொடிக்குங்
    காணா தெனைமறைக் கும்வினை போந்ததெக் காரணமே. (72)

செலவுகண் டையுறல்.

(இ-ள்.) தலைவி ஆயத்தை நீங்கித் தனியே பெயர்தல்கண்டு சந்தேகித்தல்

    பந்தா டலுந்தண் சுனையா டலும்பைம்பொ னூசன்மிசை
    வந்தா டலுமறந் தேபுறம் போய்வண்டு கோடிகிண்டக்
    கொந்தாடு தாதகித் தாமன் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    சந்தாடுங் கானடந் திம்மா னுலாவருந் தன்மையென்னே. 73)

பயில்வுகண் டையுறல்.

(இ-ள்.) தலைவியெப்போது மோரிடத்தே நிற்றல்கண்டு சந்தேகித்தல்.

    பன்னாட் டரசர் மனைத்திரு வாகும் பலவுமொன்றாய்த்
    தென்னாட்டுங் கோழிக் குலோத்துங்க சோழன் றிருமனைக்கே
    தொன்னாட் பயின்றதற் கேநிற்ப தாமெனத் தோகைக்கென்னோ
    விந்நாட் பயிலு மிடமே யிடமி தெனநிற்பதே. (74)

பிறைதொழு கென்றல்.

(இ-ள்.) பிறைச்சந்திரனைக் காட்டிப் பாங்கி தொழுது நின்று தலைவியை நோக்கி "நீயுமிதனைத் தொழுவாயாக" வென்று கூறி அவளது புணர்ச்சிநிலையை யறிதல், கன்னியர் பிறைதொழுவதுங் கலந்தவரது செய்யாமையும் உலகவழக்கு.

    போதே யுதித்து மிமவான் புகுந்தும் புலக்கலையை
    மீதே வளர்த்தும் விளங்குத லால்வியன் பாவனைத்துங்
    கோதே பிரித்தெறி கோமான் குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மாதேமுத் தேவியர் காண்டொழ வேதகும் வான்பிறையே. (75)

ஐயங்கரந்து தையலை வினாவுதல்.

(இ-ள்.) பலவாறாகத் தோன்றிய சந்தேகத்தைப் பாங்கி தன்னுண் மறைத்துக்கொண்டு தலைவியை வினாவுதல்.

    குடைத்தனை யோசுனை கொய்தனை யோதழை குன்றெதிர்கூஉ
    யடைந்தனை யோவண்ட லாடினை யோவம்பு யாசனத்தின்
    மடந்தைமன் கோழிக் குலோத்துங்க சோழன் மனைக்கொல்லிவாய்
    விடந்தயங் கும்விழி யாயென்கொன் மேனி மெலிந்தனையே. (76)

கரந் துரை.

(இ-ள்.) பாங்கி தன் கள்ளத்தை வெளிப்படுத்தப் பலகால் வினாவியும் அக்கள்ளத்தை யொளித்துத் தலைவி வேறு கூறுதல்.

    சுரிவண் டிமிர்கட நாகக் குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பரிவண்டு தோழி நினையொழிந் தேநென்னற் பாணியினுஞ்
    சரிவண் டொலிப்ப வொலிசுனை யாடலுந் தாழ்குழல்சூழ்
    வரிவண் டலைத்தமெய் வாட்டமல் லாதில்லை வாட்டங்களே. (77)

சுனைவியந் துரைத்தல்.

(இ-ள்.) தலைவியங்ஙனங்கூறப்பின்னும் விடாதவளாய்ப் பாங்கி தலைவியுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுத்தச் சுனையை வியந்து சொல்லுதல். சுனை - நீர்நிலை.

    கொத்தாரு மல்லிகை கிஞ்சுகம் பூப்பக் கொடியவத்தி
    யத்தா மரைமல ரச்செய்த தாலளி வாயலம்பும்
    புத்தார மாலைக் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்ச்
    சித்தா வதும்வரு மோதிரு வேநின் செழுஞ்சுனைக்கே. (78)

இதுவுமது.

    கருமேக வண்ணன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    றிருமேனி நாணுந் திருவுரு வாய்செய்ய வாய்வெளுப்பு
    முருமேற் பசப்பும் விழிமேற் சிவப்பு முடல்வியர்ப்புந்
    தருமேற் குடைவ னடியேனு மந்தத் தடஞ்சுனையே. (79)

நாணநாட்டம்.

(இ-ள்.) தலைவி நினைவை வையமறத்துணிந்த தோழி அவள் நாணும்படி நாடுதல்.

    கூரம்பு ராசிபண் டெய்தோன் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    போரம்பு நேரப் பொருங்கணல் லாய்புனை சாந்தகிலுஞ்
    சீரம்பு சாதப் பதபஞ்சுந் தொய்யிலுஞ் சிந்துரமு
    மீரம் படாது சுனையா டியவண்ண மெவ்வண்ணமே. (80)

தகையணங்குறுத்தல்.

(இ-ள்.) தலைவிவேற்றழகுகண்டு அவளைத் தெய்வப் பெண்ணாகப் பாங்கி வலியுறுத்திக் கூறுதல்.

    மன்னாக வந்த குலோத்துங்கன் கோழி வரையனையா
    யுன்னாக மன்ன வொருத்தியென் காதலி யுண்டுனது
    பொன்னாகும் வண்ணமு முத்தாகும் வாயும் புதுப்பகழி
    மின்னாகுங் கண்ணுமொவ் வாண்மற் றெலாமொக்கு மெல்லியலே. (81)

நடுங்கநாட்டம்.

(இ-ள்.) தலைவி நடுங்கத்தக்கதாகப் பாங்கி யாராய்ந்தல்.

    கொங்கோட்டும்வேங்கைக்கொடியோன்குலோத்துங்கன் கோழிவெற்பி
    லங்கோட்டு மென்களத் தாயென்சொல் வேனரன் மூத்தமைந்தன்
    வெங்கோட்டி யானை முகனைமுன் பாய்வெய்ய கோட்டுருவாஞ்
    செங்கோட்டி யானைகண் டேனஞ்சி னேனஞ் சிலம்பிலின்றே. (82)

இப்பதினான்கும் முன்னுறவுணர்தலின் வகையாகிய ஐயமுற்றோர்தலின் விரியென்க. ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலாகிய இரண்டின் விரி காணப்படவில்லை. இத்துணையு மூன்றா நாள் நிகழ்ச்சியென்க.

முன்னுறவுணர்தல் முற்றிற்று.
______________

குறையுறவுணர்தல்.

அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக்கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-

பெட்டவாயில்பெற் றிரவு வலியுறுத்தல்.

(இ-ள்.) இயற்கைப்புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவுழிக் கலங்கலின்வாயில் பெற்றுய்தலென ஆண்டுவிரும்பப்பட்ட பாங்கியைத் தலைவன் தூதாகப்பெற்றுக் குறையிரத்தலை வற்புறுத்திக் கூறுதல்.

    கோடே பிடித்துமென் போதுகொய் வார்வரைக் கோடுறுந்தே
    னீடேணி யைக்கொடு நேயர்கொள் வார்நில வேந்தர்க்கெலாங்
    காடே கொடுக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லேடே கமழுங் குழலியைப் பாங்கியி னெய்துவமே. (83)

ஊர்வினாதல்.

(இ-ள்.) தலைவன் கண்ணியுந் தழையுமேந்திக் குறையற்றவன் போலவந்து நின்று ஊர்யாதென்று பாங்கியைக் கேட்டல்.

    யானா தரிக்கின்ற நும்வடி வேகண் டெறிகடலே
    மேனாளை யூருமக் கென்றிருந் தேனெழு மேதினிக்குங்
    கோனாகுஞ் சங்கம ராச குலோத்துங்கன் கோழிவெற்பி
    னூனாரும் வேற்கணல் லீரிந்த நாளெந்த வூர்சொல்லுமே. (84)

பேர்வினாதல்.

(இ-ள்) வெளி.

    திருவோ விரதிகெர லோசசி யோதெய்வ மோகினித
    னுருவோவந் நாளுங்கள் பேரறி யேனுயர் வாணர்கீகைந்து
    தருவோ வெனுங்கைக் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
    மருவோதி யீருமக் கிந்நாளெப் பேர்சொல்லும் வாய்மலர்ந்தே. (85)

கெடுதிவினாவல்.

(இ-ள்.) கெட்டபொருளைத் தலைவன் பாங்கியிடத்து வினாவுதல்.

    முலையொன்று மானுடன் கன்றுமுன் போட முழங்கருவி
    நிலையொன்று சோரிபின் போடவம் போடு நிழற்கொடிசூழ்
    கொலையொன்று வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழியன்னீர்
    கலையொன்றிங் கோடிநொந் தேவந்த தோவுங்கள் காவலிலே. (86)

நெஞ்சு வினாதல்.

(இ-ள்.) தலைவன் தன் மனத்தைப் பாங்கியிடை வினாவுதல்.

    நஞ்சோ டெதிரு மொருவாளி தைத்துநை வாங்கலைபின்
    மஞ்சோ டுவமிக்கும் வார்குழ லீரந்த வானவர்கா
    வஞ்சோட நல்குங் குலோத்துங்க சோழ னளகையிலென்
    னெஞ்சோடி வந்ததுண் டோசொல்லும் வாய்மலர் நீர்திறந்தே. (87)

வழிவினாதல்.

(இ-ள்.) தலைவன் றான்செல்லும் வழியைப் பாங்கியிடைக் கேட்டல்.

    போகா வழிபுகுந் தேதாகும் போம்வழி யென்றுநின்றாற்
    பாகார் மொழியிற்சொன் னாற்பழு தோபத்தி யாலுருகி
    நாகா பரணனை யேத்துங் குலோத்துங்க னாகையன்னி
    ராகாது பெண்மைக் கிளநெஞ் சலால்வன்னெஞ் சாய்நிற்பதே. (88)

மொழியாமை வினாதல்.

(இ-ள்.) பாங்கி யொன்றும் பேசா திருத்தலைத்தலைவன் கேட்டல்.

    சொல்லே சிறிதொன்று சொன்னாற் குழைந்துமெய் சோர்ந்துவிழீர்
    கல்லே கவணுக் கரிதென்ப தோகளத் தோடி னரைக்
    கொல்லே னெனுஞ்சொற் குமார குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வல்லே பொருங்கொங்கை யீர்திற வீருங்கள் வாய்மலரே. (89)

இடைவினாதல்.

(இ-ள்.) தழையைக்காட்டித் தலைவன் றன்கருத்தறிவித்து நுங் குழலுமுலையு மதிபாரமாயிராநின்றன; இவையிவ்வாறுநிற்றலெங்ஙனம்? நும் இடை யெங்கே? யென்று தலைவியைக் கேட்டல்.

    தரும்போது கற்பக நேராங் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    சுரும்போதி யீரொன்று கேட்கநின் றேன்சுனை சூழ்புனத்தைக்
    கரும்போ தகங்கலை மேய்வதென் றேகடி தோட்டுதற்கு
    வரும்போது கொண்டு வரமறந் தீர்கொன் மருங்கினையே (90)

ஊர்பெயர் கெடுதியோடொழிந்தவை வினாதல் முற்றிற்று.
_______________

தேர்தல்.

(இ-ள்.) வெளி.
யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத்தேர்தல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு கண்ணியுந்தழையு மேந்திவந்து ஊர் முதலியவை வினாவி நின்றவர் யாவரோ? இவர் மனத்தினினைப்பு யாதோ? எனப்பாங்கி தன்மனத்தில் ஆராய்ச்சி செய்தல்.

    நெறியாயு மென்பர் நடுவிலை யோவென்பர் நீண்டகலைக்
    குறியாயு மென்பர் கரிகூறு மென்பர்செங் கோகனகை
    பிறியா வுறந்தைக் குலோத்துங்க சோழன் பெருங்கிரிவாய்ச்
    செறியா வழகின ராரோ விவர்க்கென்கொல் சிந்தனையே (91)

எண்ணந்தெளிதல்.

(இ-ள்.) தலைவனினைப்பைப் பாங்கிதெளிதல்.

    வானோர் விழுங்கு மதிக்கலை யோமலை வாணர்மின்னா
    ரானோ ரிடைக்கலை யோவிலை யாக வவனிக்கெலாந்
    தானோர் தலைமைப் பெருமான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    யானோருங் காலிவர் வேட்ட மெலாமிங் கிவள்பொருட்டே (92)

இவ்விரண்டுங் குறையுற வுணர்தலின் விரியென்க.

குறையுறவுணர்தல் முற்றிற்று.
__________

இருவருமுளவழியவன் வரவுணர்தல்

அஃதாவது-தலைவியுந் தானுமொருங்கிருந்த விடத்தில் தலைவன் றனிவரப் பாங்கிகண்டு அதனானே கலப்புண்மை யறிதல், அதன்விரி வருமாறு:-
கையுறையேந்திவருதல்.

(இ-ள்.) தலைவியும் பாங்கியுஞ் சேர்ந்திருப்பது கண்டு தலைவன் கையுறை யேந்திவருதல். கையுறை-காட்சிப்பொருள்.


    ஒருகோ டரத்தி னிருகிளி யாமென்னெ வோரிதண்மேன்
    முருகோடும் வண்ணநின் றாரிரு வோரு முழங்குபொய்கைக்
    குருகோடி யார்க்குங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லருகோடி நங்குறை யாற்றுகைக் கேசெவ்வி யாமிதுவே. (93)

புனங்கண்டு மகிழ்தல்.

(இ-ள்.) அவ்விருவரு மிருக்கப்பெற்ற வனத்தின் வளப்பத்தைப் பார்த்து மகிழ்தல்.

    தாயுந் தமரு மெனத்தமிழ் தாங்கியத் தண்டமிழை
    யாயுங் கமகன் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    லேயுந் திருவனை யார்புனத் தேயிதண் மீதிருக்க
    மேயுங் கிளிக்கும் பிணைக்குங்கைம் மாறெம்மில் வேறில்லையே (94)

இருவரும் உளவழிச்சேறல்.

(இ-ள்.) பாங்கியுந் தலைவியுந் தனித்திருக்குமிடத்துத் தலைவன் செல்லுதல்.

    குடையாற் புவிகவித் தாளுங் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    புடையார்க்குந் தோகையி லன்னமன் னீர்முன்பு போதப்பின்பு
    நடையாற் பிடியு மொழியாற்பைங் கிள்ளையு நன்னயனக்
    கடையாற் பிணையு மழைத்தழைத் தோபுனங் காப்பதுவே (95)

தலைவனவ்வகை வினாதல்.

(இ-ள்.) தலைவன் முன் கெடுதிவினாதல்போல மீண்டுங் கலை வந்ததோவென்று வினாவுதல்.

    சுருதி கறங்கு முறந்தைக் குலோத்துங்க சோழனொன்னார்
    கருதிய செல்வமு மாவியும் போங்கடுந் தீநிமித்தம்
    பருதியுண் மூடி முகில்சோரி பெய்தெனப் பாவைநல்லீர்
    குருதிபின் சோரவிங் கேவந்த தோவொரு குஞ்சரமே (96)

எதிர்மொழி கொடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன் வினாவுக்கு விடைகூறுதல்.

    தரிக்கும் புவனம் புரப்போன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பர்
    விரிக்கும் பிணைகரி யாங்கண்டி லேமெய் யிலாதுபொய்யே
    யிரிக்கும் பிணைக்கும் பிணையல்ல வேயெவ ரேனுமெய்யுங்
    கரிக்குங் கரியல்ல வேயெங்க ளேனலுங் காவலுமே. (97)

இறைவனை நகுதல்.

(இ-ள்.) தலைவனப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி அசதியாடல். அசதியாடல்-சிரித்துப் பேசுதல்.

    அலையேபண் டெய்த குலோத்துங்க சோழ னழகைக்கொல்லி
    மலையே வருமன்னர் வேட்டைக் கெலாமறு மாற்றஞ்சொல்வேங்
    கலையே யெனிற்கலை கற்றோரைக் கேளுங் கரியெனிற்கொல்
    லுலையே செலும்பின் கயங்களி றேற்புகு மோடையிலே. (98)

இதுவுமது.

    வம்போடு தாதகித் தாரான் குலோத்துங்கன் வாழுறந்தைக்
    கம்போடு நேர்திருக் கந்தரத் தாயிந்தக் காவலர்மான்
    கொம்போடு மெய்தன ராமொரு யானையைக் கோத்தெய்தவில்
    லம்போ டடிச்சுவ டும்போன தோவந்த யானைகொண்டே. (99)

பாங்கி மதியி னவரவர் மனக்கருத்துணர்தல்.

(இ-ள்.) பாங்கி தன்னறிவால் தலைவன் தலைவியென்ற இருவர் மனக்குறிப்பை யாராய்தல்.

    கொந்தார மாலைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    னந்தா திருவர் கருத்துங்கண் டேநம்மை யேகரந்து
    சந்தார் புனத்திருந் தார்முலை மேலிரு தாமரையும்
    வந்தார் புயத்தினி னீலமுஞ் சால மலர்ந்தனவே. (100)

இதுவுமது.

    வள்ளலுந் தாருவு நேராங் குலோத்துங்கன் வாழ்கொல்லிசூ
    ழள்ளலம் பூருஞ் சுனைச்சா ரலுக்கே யடுத்திருவ
    ருள்ள மெலாமித் தனைநாட்சொல் லாதிங் கொளித்திருந்த
    கள்ள மெலாமின் றறிந்தே மிவர்தங் கடைக்கணிலே. (101)

இவ்வேழு மிருவருமுளவழியவன் வரவுணர்தலின் விரியென்க.

9-பாங்கி மதியுடன்பாடு முற்றிற்று.
______________

பத்தாவது- பாங்கியிற்கூட்டம்.

அஃதாவது-பாங்கியாற்கூட்டுவிக்கத் தலைவன் தலைவியைக் கூடுங் கூட்டம், அஃது – இரந்துபின்னிற்றல் சேட்படை மடற்கூற்று மடல் விலக்கு உடன்படல் மடற்கூற்றொழிதல் குறைநயப்பித்தல் நயத்தல் கூட்டல் கூடல் ஆயங்கூட்டல் வேட்டல் எனப் பன்னிரண்டு வகையினையுடைத்து; அவை வருமாறு:-

தலைவ னுட்கோள்சாற்றல்.

(இ-ள்.) தலைவன் தான் தன்னுள்ளத்தின்கட் கொண்ட காதலைக் கூறுதல்.

    திங்கட்கண் ணாடியுந் தாரகை யாரமுந் தெய்வக்கங்கை
    யங்கட் சுனையு மெனத்தரு வேமங்கை மேருவன்ன
    வெங்கட் களிற்ற னுறந்தைக் குலோத்துங்கன் வெற்பனையீ
    ரெங்கட்கு வேண்டுவ துங்கடைப் பார்வைகொண் டேவுவதே. (102)

பாங்கி குலமுறைத்தல்.

(இ-ள்.) தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குலமுறைமையா லியையாதென மறுத்துக் கூறுதல்.

    மீன்சூழ் மதிகழி மீனெய்து மோவிடுந் தேரிரவி
    வான்சூ ழலகையந் தோபுகு மோமழு வாளியைப்போய்த்
    தான்சூழ் தருதிருத் தாளான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    கான்சூழ் குறமின்னை யோமன்ன நீமனங் காமிப்பதே. (103)

தலைவன் றலைவிதன்னை யுயர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை யுயர்த்திக் கூறுதல்.

    மீனீன்ற மீன்கந்தி யைக்குரு வேந்தன் வேற்குகனு
    மானீன்ற வள்ளியைச் சேர்ந்தில ரோமழை யேழுமொன்றாய்த்
    தானீந் தெனத்தமிழ்க் கீவோன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    கானீன்ற பூங்குழ லாய்நல மேகுலங் கன்னியர்க்கே. (104)

இதுவுமது.

    எச்சுற்ற மான்புலி கண்டா லெனத்தெவ்வ ரேற்றெதிரே
    வைச்சுற்ற வேற்கைக் குலோத்துங்க சோழன் வரையனையீர்
    நச்சுத் தருமிசைத் தேன்பிறந் தாலு நக்வையிலையாற்
    கச்சுத் தடமுலை யாய்நல மேகுலங் கன்னியர்க்கே. (105)

பாங்கி யறியாள்போன்று வினாதல்.

(இ-ள்.) தலைவன் தலைவியிடத்துக் காதல்கொண்ட தறியாள்போல நீ யெவளிடத்துக் காதல்கொண்டாயெனப் பாங்கி வினாதல்

    பந்தா டுநருங் கழங்கா டுநரும் பனிச்சுனைவாய்
    வந்தா டுநரும் பலகோடி யான்மத மாரிபெய்து
    கந்தாடும் யானைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    சந்தாடுந் தோண்மன்ன யார்கண்ண தோநின் றனதுகண்ணே. (106)

இறையோனிறைவி தன்மையியம்பல்.

(இ-ள்.) தலைவன் தான் காதலித்த தலைவி தன்மை கூறுதல். தன்மை – இலக்கணம்.

    ஓதியு நூன்மருங் கும்மங்கு லாமொண் முலைமொழிதோள்
    சோதியின் வேழங்க ளாமணங் கேதொல்லை ராவணனைக்
    காதிய வீரன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லேதியு நீலமு நீயுங்கண் ணாமென தின்னுயிர்க்கே. (107)

பாங்கி தலைவி யருமைசாற்றல்.

(இ-ள்.) தலைவி கிடைத்தற்கரியளென்று பாங்கிகூறுதல்.

    மாமேருப் பொன்னு மலயா சலச்சந்தும் வானமுதுங்
    காமேன் மலர்க்குல மும்மெளி தாயினுங் காரரக்கர்
    கோமேதை பேய்க்கிடும் வில்லான் குலோத்துங்கன் கோழிவெற்பா
    யாமேயிவ் வண்ணஞ் சொலற்கரி தாமெங்க ளேந்திழைக்கே. (108)

தலைவனின்றியமையாமையியம்பல்.

(இ-ள்.) தலைவியில்லாது வாழ்வெனக்கில்லையெனத் தலைவன் கூறுதல்.

    தாரா தரமந்தச் சாதகந் திங்கள் சகோரமுண்ணச்
    சேரா தொழியி னுயிருய்யு மோசெய்ய வேழமுய்யக்
    கூராழி யன்றெறி கோமான் குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வாராது மாதிருந் தாலணங் கேயெங்ஙன் வாழ்வெனக்கே. (109)

இதுவுமது.

    தளத்தே கொடிப்புலி முன்னேவித் தானைபின் னேவித்தெவ்வைக்
    களத்தே துரக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வளத்தே மொழியுங்கண் மங்கைதன் பேரை வருந்தியவென்
    னுளத்தேசற் றுன்னினும் போமுயிர் மீளுமென் னோதுவதே (110)

பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.

(இ-ள்.) தலைவியினிடத்துநினக்கு வேண்டுவனவற்றை நீயே சொல்லென்று பாங்கிகூறுதல்.

    வந்தார்க்கும் வண்டும் பறவையும் போதும் வனக்கனியுஞ்
    சந்தாற் கொணர்ந்துண்ணு மோவண்ண லேதடங் கோடுதொறு
    நந்தார்க்குங் காவிரி நாடன் குலோத்துங்க னாகைவெற்பிற்
    செந்தார்க் குழலிக்கு நீயே விளம்புநின் சிந்தனையே (111)

பாங்கியைத் தலைவன்பழித்தல்.

(இ-ள்.) தலைவன் பாங்கியை நிந்தித்துக் கூறுதல்.

    நாற்றா ரணிபணி கோழிக் குலோத்துங்க னாடனையாய்
    தேற்றா தவட்கென் குறைகூறென் றாயென்ற தீயவெஞ்சொன்
    மேற்றாவி வெய்யில் சுடும்போது காய்ந்தநெய் மேல்விடலு
    மாற்றாத புண்ணுக் கழல்வே னுழைத்தலு மாய்விட்டதே (112)

குறையுறவுணர்தன்முத லிதுகாறு நான்காநாள் நிகழ்ச்சியென்றுணர்க.

பாங்கிபேதைமை யூட்டல்.

(இ-ள்.) தலைவி பிறர்துயரமறியாளென அவளது பேதைமையைப் பாங்கி தலைவனுளங் கொளச் சாற்றல்.

    வெஞ்சா வுயிருக்குண் டாகவெய் தூனுணும் வேடர்கன்னி
    யஞ்சாளுன் சோர்வை யறிந்தண்ண லேகதி ராயிரந்தோய்
    செஞ்சாலி யங்கதிர்த் தஞ்சைக் குலோத்துங்க சென்னிவெற்பி
    னஞ்சா மரக்கனி யின்னமு தாவதிந் நாட்டில்லையே. (113)

காதலன்றலைவி மூதறிவுடைமை மொழிதல்.

(இ-ள்.) அவ்வாறு கூறிய பாங்கியை நோக்கி முதிர்ந்த அறிவினையுடையாள் தலைவியாதலின் அவளை யங்ஙனங் கூறற் பாலை யல்லையென்று தலைவன் கூறுதல்.

    மீன்போத வெந்தண்ட கோழிக் குலோத்துங்கன் வெற்பனையாய்
    தேன்போது சொல்லியைப் பேதையென் றாய்சிந்தை வாட்டமுடன்
    யான்போதக் கண்டுகண் ணீருகுத் தாணின் புனத்தயனீ
    தான்போதக் கண்டந்த நீர்துடைத் தாளிடைத் தானைகொண்டே (114)

முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட பாங்கிமுன் நின் வேட்கை தீர்த்தாளென்று கூறினையே அங்ஙனமே யின்னங்கூடுகவென்று கூறுதல்.

    முன்னே திருவரப் பெற்றா ரொருவர்தம் முன்புகுந்து
    பின்னே திருவென் றிரப்பவர்கொல் லோபெருந் தாமரைச்செம்
    பொன்னே புணருங் குலோத்துங்க சோழன் புகாரண்ணலே
    மின்னேயுன் சோர்வறிந் தாற்பிறர் பாலென்கொல் வேண்டுவதே (115)

தன்னிலை தலைவன்சாற்றல்

(இ-ள்.) அது கேட்ட தலைவன் வேட்கை நோயால் வருந்துந் தன்னிலைமையைப் பாங்கிக்குக் கூறுதல்.

    எத்தா மரையும்பைந் தேனுக்குத் தேனல்கு மேனுஞ்செவ்வி
    மொய்த்தா யிரங்கதிர் தந்திட வேண்டு முதுபுலவர்
    புத்தா ரமுதங் குலோத்துங்க சோழன் புகாரனையா
    னொத்தாலு நீயன்றி யுண்டோ புணர்ப்பவ ரொண்ணுதலே (116)

பாங்கி யுலகிய லுரைத்தல்.

(இ-ள்.) உலகில் வேட்கை கொண்டார் சான்றோரை முன்னிட்டு வரைந்துகொள்வர். அவ்வாறுலகியலாதல் நீயும் வரைந்து கொள்கவெனப் பாங்கி கூறுதல்.

    வாயிற் பலசொல்லி யென்னோ வுனதுமெய்ம் மார்பணிக்கே
    யாயிற் பிறிதொன் றியம்புகின் றேனம்பு சாதமலர்க்
    கோயிற் கொடிகொண்ட மார்பன் குலோத்துங்கன் கோழிவெற்பா
    தீயிற் கரியினல் லாதிணங்கா தெங்கள் செய்யபொன்னே (117)

தலைமகன் மறுத்தல்.

(இ-ள்.) அவ்வுலகியலைத்தலைவன் வேட்கை யாற்றானாய் மறுத்தல்.

    மண்மேன் முகுந்தன் குலோத்துங்க சோழன் வயலுறந்தைப்
    பெண்மேன் மணஞ்செய்து கூடுகென் றாய்பெருந் தீவயிற்றுக்
    குண்மே லிராப்பக லூடாட வாடு மொருவர்க்கந்த
    விண்மே லமுதுவந் தோபசி தீர்ப்பது மெல்லியலே. (118)

இதுவுமது.

    ஆறே யிழுக்கப் படுவார்க்கொ ரோட மமைப்பதற்குத்
    தூறே செறிவனஞ் செய்வதொப் பாந்தொல்லை வாலியிரு
    கூறே படக்கண்ட வில்லான் குலோத்துங்கன் கோழிமின்னை
    மாறே யரிய மணஞ்செய்து கூடென்கை வாணுதலே. (119)

பாங்கி யஞ்சி யச்சுறுத்தல்.

(இ-ள்.) இந்நிகழ்ச்சி பிறரறிவரென்று பயந்தவளாய்த் தலைவனை யப்புனம்விட்டுப்போக அச்சமுறுத்திக் கூறுதல்.

    போதே புகுந்த திருளே வளைந்தது பூம்புனத்து
    மீதேயெம் மையர் வரச்செவ்வி யாயது மெய்த்தமிழைக்
    காதே புனையுங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    தீதே யினிநிற்ப தேகுவம் யாமுந் திருமனைக்கே. (120)

தலைவன் கையுறைபுகழ்தல்.

(இ-ள்.) இனிக்காலந் தாழ்க்கலாகாதென்று தான்கொண்டு வந்த கையுறையைத் தலைவன் புகழ்ந்து கூறுதல். கையுறை காட்சிப் பொருள்.

    பாம்பாடி கைக்குடைக் கேதழ லாடி பழமனைக்கே
    தேம்பாயு மித்தழை தேடிற்கிட் டாது செழுநிரையைக்
    காம்பா லழைத்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    வேம்பா கெனுமொழி யீருடைக் காமுங்கண் மெல்லிடைக்கே. (121)

இதுவுமது.

    திருமான் கமலத்து மாயோன் பணிலத்துந் தென்றலந்தேர்ப்
    பெருமான்கை வேழத்தும் வெண்குடை யாகத்தும் பேரகிலத்
    தொருமார னான குலோத்துங்க சோழ னுறந்தையன்னீர்
    வருமா நலமுத்தம் யான்கொணர்ந் தேனுங்கண் மாமுலைக்கே. (122)

பாங்கி கையுறைமறுத்தல்.

(இ-ள்.) அங்ஙனம் புகழப்பட்ட கையுறையைப் பாங்கியிகழ்ந்து மறுத்துக் கூறுதல்.

    பேய்தரும் பான்முலை யுண்டோன் குலோத்துங்கன் பேருறந்தை
    வாய்தருங் கொல்லி மலையண்ண லேமகிழ் வாலெமக்கு
    நீதரு மாந்தழை பின்னல ராங்கிளை நீள்வடுவாங்
    காய்தரு மூரெங்கும் பல்காலு மிந்தக் கனிபொருட்டே. (123)

இதுவுமது.

    முன்னொரு வேய்முத்தந் தாங்கப் பொறாது முனையரக்கர்
    மன்னொரு மேனி வருந்திநைந் தான்மலர்க் கோகனகப்
    பொன்னொரு வாத குலோத்துங்க சோழன் புகாரண்ணலே
    மின்னொரு நூலிடை யோதாங்கு நீதரும் வேய்முத்தமே. (124)

ஆற்றா நெஞ்சினோ டவன்புலத்தல்.

(இ-ள்.) பாங்கி மறுத்தலைச் சகியாத நெஞ்சுடனே தலைவன் வருந்திக் கூறுதல்.

    எய்தாப் பொருளென்று மெய்தாதிங் கெய்தும் பொருணெஞ்சமே
    நொய்தாக் கிடைக்குமென் றாரறி யார்பல நூற்புலவோர்க்
    குய்தா பரனங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பின்
    வெய்தா வுயிர்ப்பை தழையோடு வாடுவை மின்பொருட்டே. (125)

இதுவுமது.

    கையோ மெலிந்தன கையுறை யேந்தியிக் காலிரண்டு
    மையோ வருந்தின போயும்பின் மீண்டுமிங் காருயிரு
    முய்யோநெஞ் சேநங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பின்
    மெய்யோ நமக்கின்பம் பொய்யோ வறிகில மேற்செய்வதே. (126)

பாங்கி யாற்றுவித் தகற்றல்.

(இ-ள்.) இங்ஙனம் வருந்துதலைக்கண்ட பாங்கி தலைவனை யஞ்சாதே! நாளைவாவெனக் கூறிவிடுத்தல்.

    அலைமேன் முனிந்த குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    சிலைமே னுதலியை யின்றிரப் பேன்சென்று காலைதனின்
    மலைமேற் கதிர்வர நீவரு வாய்மலை மேற்கதிராய்
    முலைமேற் பொலியச்செய் வேனுன்கைம் மாணிக்க மொய்ம்மணியே. (127)

இவற்றுள்-தலைமகன் கூற்றாயினவெல்லாம் இரந்து பின்னிற்றற்கும், பாங்கி கூற்றாயினவெல்லாஞ் சேட்படுத்தற்கு முரியன. இதுகாறும் ஐந்தாநாள் நிகழ்ச்சி யென்க.

இரந்துகுறைபெறாது வருந்தியகிழவோன் மடலேபொருளெனமதித்தல்.

    சுழிகொண்ட பொன்னிக் குமார குலோத்துங்க சோழன்வெற்பில்
    வழிகொண்ட பெண்ணை மடற்பரி யேறி மலர்க்கணையே
    பொழிகொண்ட விற்படை நீங்காது வீதி புகுந்துமின்னார்
    விழிகொண்ட நம்மன மீட்பேமிவ் வாறன்றி வேறில்லையே (128)

(இ-ள்.) மறுநாட் காலையில் வந்த தலைவன் பாங்கியாற் காரியமின்றெனக்கருதி இரந்து குறைமுடியாதாயினோமென்று வருத்த முற்று இனி நமக்குப்பொருளாவது *மடலேறலேயெனத் தன்னுள்ளே மதித்துக் கூறுதல்.

பாங்கிக் குலகின்மேல் வைத்துரைத்தல்.

(இ-ள்.) தலைவன் அம்மடலேற்றின் யுலகின்மேல் வைத்துப்பாங்கிக்குக் கூறுதல்.

*மடலேறலாவது - பனங்கருக்காற் குதிரையும் பனந்தருவினுள்ளன வற்றால் வண்டி முதலானவுஞ்செய்து அக்குதிரையின் மேலேறுவது. அங்ஙன மேறுவான் நிருவாணியா யுடலெங்கு நீறு பூசித்தான் காமித்த தலைவியினுருவை யொருபடத்திற் றன் கையாலெழுதி அப்படத்தின் றலையிலே தன்பெயரை யெழுதித் தன்கையிற் பிடித்து நடுவூருள்ளே நாற்சந்தியி லாகார நித்திரையின்றி அப்படத்தின் மேற்பார்வையையு மனத்தையுமிருத்தி ஆசைவயத்தனாய் வேறுணர்ச்சியின்றி ஆவுரிஞ்சினும் அழல் மேற்படினு மறிதலின்றி மழை வெயில் காற்றான் மயங்காதிருப்புழி, அவற்றைக்கண்ட அவ்வூரிலுள்ளார் பலருங் கூடி வந்து நீ மடலேறிச் சோதனை தந்தால் நீ யிச்சித்த பெண்ணைக் கொடுக்கச் செய்வோமென்று கூற, அதற்கவனிசைந்தானாயி னரசனுக் கறிவித்து அவனேவலால் ஏறவேண்டும்; அங்ஙனமேறும்போது பூனையெலும்பு எருக்கம்பூ இவைகளாற் கட்டிய மாலைபுனைந்து கொள்ளல் வேண்டும். அக்குதிரையின் வடத்தை யிழுத்தலும் அக்குதிரை யந்திரத்தினுருளை யுருண்டோடும்போது பனங்கருக்கு அறுத்த வீடமெல்லாம் இரத்தம் வெளிப்படாது வீரியம் வெளிப்படின் அப்போதவளை யலங்கரித்து அவனுக்கு அரசன் கொடுக்கச்செய்தல் வேண்டும். இரத்தம் வெளிப்படி லவனை யரசனாற் கொலைசெய்துவிடல்வேண்டும் என்பது புலவரா னிருமிக்கப்பட்ட வழக்கு.

    புயலாகும் வெள்ளப் புணையா வனபுறத் தாருவினங்
    கயலாகுங் கண்ணி பலவுண்டு காண்கடற் காசினியோர்க்
    குயலாகுங் காவற் குலோத்துங்க சோழ னுறந்தைமின்னார்
    மயலாகும் வெள்ளப் புணைபெண்ணை யேயென்னு மாநிலமே (129)

அம்மடலேற்றினைத் தன்மேல்வைத்துச் சாற்றல்.

(இ-ள்.) தலைவன் அம்மடலேறுவேனென்றுபாங்கிக்குக்கூறுதல்.

    மேலாகும் வையத் துடனண்ட கோளகை மீதளந்த
    காலான் குமார குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னாலா மலர்க்குழ லீரின்று வேண்டுவ னாளையப்பான்
    மாலாகும் யான்சிவ னாகச்செய் வேனுங்கண் மன்றகத்தே. (130)

பாங்கி தலைமக ளவயவத் தருமைசாற்றல்.

(இ-ள்.) அவ்வாறு கூறக்கேட்ட பாங்கி படமெழுதியபின்னன்றோ? மடலேறுவது. ஆதலால் தலைவியவயவந் தீட்டுதற் கருமையென்று கூறுதல்.

    தருக்கோடி யன்ன குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பா
    மருக்கோ கனக மலரகத் தாளும் வணங்குமெங்க
    ளுருக்கோதை மேனிக்கந் தாதியைத் தீட்டி லுலாவென்பதுந்
    திருக்கோவை தீட்டிற் கிளவியு நீயெங்ஙன் றீட்டுவையே (131)

தலைமகன் றன்னைத்தானே புகழ்தல்.

(இ-ள்.) இவ்வாறெழுத லரிதென்று கூறிய பாங்கியைநோக்கித் தலைவன் றன்னைத் தானே புகழ்ந்து கூறுதல்.

    கூரேறு வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    காரேறு பூங்குழற் காரிகை யாய்கைக் கிழியகத்தே
    சீரேறு பூவை வினையே னமைக்குந் திறமைகண்டா
    லீரேழு வைய மமைத்தா னமைப்பினு மேறுமின்றே (132)

பாங்கி யருளியல் கிளத்தல்.

(இ-ள்.) அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட பாங்கி அருண் முறைமை கூறுதல்.

    இங்கோர் கரும்பனை யார்தமைக் கூடுவ தேய்ந்திடுமா
    றங்கோர் கரும்பனை யாரைக்கொன் றோவங்க மீழம் வங்கங்
    கொங்கோடக் குத்துங் களிற்றான் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    செங்கோன் முறைபிறை வாதகு மோநின் றிருவருட்கே (133)

கொண்டுநிலை கூறல்.

(இ-ள்.) தலைவனுயிரைத் தாங்கிக்கொண்டு நிற்கு நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறுதல்.

    கொலைபார்த் துழலுங்கண் ணாளண்ண லேநின் குறைமறுக்கி
    னிலைபார்த்துப் பின்கிழி நீபிடிப் பாய்நெடுங் கொத்துப்பத்துத்
    தலைபார்த்துப் பார்த்தந்தப் பார்வையில் வாமச்செந் தாமரைக்கைச்
    சிலைபார்த்த கோழிக் குலோத்துங்க சோழன் செழுங்கிரிக்கே (134)

இவற்றுள்-தலைமகன் கூற்றாயின வெல்லா மடற் கூற்றிற்கும் பாங்கி கூற்றாயின வெல்லாமடல் விலக்கிற்கு முரியன.

தலைவி யிளமைத்தன்மை பாங்கி தலைவற் குணர்த்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவியினது மங்கைப்பருவ நிரம்பாமையைத் தலைவனுக்குக் கூறுதல்.

    குந்தப் படையிற் கொடிசூழ் குலோத்துங்கன் கோழிவெற்பி
    லிந்தத் துயருனக் கேனண்ண லேயிருள் போலிருண்ட
    கந்தக் குழலிக் கரும்பிய வாறின்னங் கண்டதுண்டோ
    தந்தத் திளமுலை வாயினு மார்பகந் தன்னினுமே (135)

தலைவன் தலைவி வருத்திய வண்ணமுரைத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறீய இளைமைப்பருவமே தன்னை வருத்திய விதத்தைத் தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

    குன்றியின் காஞ்சிரத் தின்கர வீரத்தின் கொம்பிளமை
    யொன்றிய வாருயி ருண்பதன் றோவுவ ராழிகட்டும்
    வென்றியன் கிள்ளிக் குலோத்துங்கன் கோழியின் மின்னனையாய்
    துன்றிய நுங்கொம் பிளமையு மாமத் தொழிலினுக்கே (136)

பாங்கி செவ்வியருமை செப்பல்.

(இ-ள்.) பாங்கி தலைவியின் சமையத்தினருமை தலைவனுக்குக் கூறுதல்.

    ஆடாள் சுனைகந் துகங்களங் கூசலப் பாவையிசை
    பாடாள் சிறுமணற் சோறும டாள்பட ராயமுடன்
    கூடா ளுறந்தைக் குலோத்துங்கன் கொல்லியங் குன்றனையாள்
    சூடாள் மலரண்ண லேயெங்ஙனேயுன் றுயர்சொல்வதே (137)

தலைவன் செவ்வி யெளிமை செப்பல்.

(இ-ள்.) தலைவன் றன்குறைசொல்லுதற்குத் தலைவி சமைய மெளிதெனக் கூறுதல்.

    மனத்தா மரைமல ருங்கரத் தாமரை வாய்குவியுந்
    தனத்தா மரைமுகை தம்வா ரறுத்தெழுந் தாண்டவஞ்செய்
    கனத்தா மரையன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னினத்தா மரையின் மயிலுக்கென் பேர்சொலி னேந்திழையே (138)

பாங்கி யென்னை மறைத்தபி னெளிதென நகுதல்.

(இ-ள்.) நீ விரிருவரு மெனக்குத் தெரியாமன் மனமொத்துக் கலந்தபின் இக்களவொழுக்க மொழுகுதற்கினியெளிதென நகையாடிப் பாங்கி கூறுதல்; எனவே யென்னையன்றி யுங்கள் களவொழுக்க நிகழாதென்பது குறிப்பாற் பெறப்பட்டது.

    கண்ணும் பொருளும்வெற் பாகலந் தாலும் கலந்தபொரு
    ணண்ணுஞ் சுடரன்றிக் காண்பரி தாமுங்க ணல்வினையா
    லெண்ணும் பொருத்த மிருவோர்க்கு மியானின்றி யெய்துங்கொலோ
    தண்ணங் கவிகைக் குமார குலோத்துங்கன் றஞ்சையிலே (139)

அந்நகை பொறாஅ தவன்புலம்பல்.

(இ-ள்.) பாங்கி நகையாடிக் கூறுதல் சகியாமற்றலைவன் வருந்திக்கூறுதல்.

    ஒண்பா வளர்க்குங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பின்
    வண்பாவை யன்ன வடிவினல் லாயென் வருத்தமெண்ணாய்
    பெண்பா லுனக்குமற் றண்பால் புராரிக்கும் பேதமல்லால்
    வெண்பா லொழுகு நசையா லிருவர்க்கும் வேறில்லையே (140)

பாங்கி தலைவனைத் தேற்றல்.

(இ-ள்.) அங்ஙனம் வருந்திய தலைவனைப்பாங்கி நின்கருத்து முடிப்பலெனத் தெளிவித்தல்.

    அழலாய துன்புற லையாவத் தையலென் னாதரவிற்
    கழலாது யான்செய்த வாறுசெய் வாள்பண்டு கானிரையைக்
    குழலா லழைத்த குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    னிழலாடிப் பாவையும் பார்க்கின்ற பார்வையு நேரெனவே. (141)

பாங்கி கையுறை யேற்றல்.

(இ-ள்.) தலைவன் கொடுத்த காட்சிப் பொருளைப் பாங்கி யங்கீகரித்து வாங்கிக்கொள்ளுதல்.

    மொழியேயக் கையுறை தாரே லெனச்சொல்லு மொய்குழலாள்
    விழியே தரச்சொல்லுங் காணண்ண லேவெண்ணி லாப்பணிலஞ்
    சுழியேயும் பொன்னிப் புகார்மன் குலோத்துங்க சோழன் வெற்பி
    லுழியேயுன் கைத்தழை யீவாய் வலிதுங்க ளூழ்வினையே. (142)

கிழவோனாற்றல்.

(இ-ள்.) தலைவன் துன்ப நீங்கிச்சொல்லுதல்.

    ஏவிய தன்பணிக் கெய்தாத வேந்த ரெடுத்தபடை
    தாவிய வெம்பரி வீரன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    லாவியங் கண்ணிநம் போற்புல ராதுதன் னங்கைகொண்ட
    காவியங் கண்ணிக்குக் கைமாறு வேறொன்றுங் காண்கிலமே. (143)

இவற்றுள்-பாங்கி கூற்றாயின வெல்லாங் குறைநேர்தற்குந் தலைவன் கூற்றாயின வெல்லாமடற் கூற்றொழிதற்கு முரியன.

இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி யிறைவிக்கவன் குறையுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வருத்தந் தணிப்பலென்று சொல்லிய பாங்கி அவ்வருத்தத்தைத் தலைவிக்குக் கூறுதல்.

    வருவா ரொருவர்வந் தேதுஞ்சொல் லார்புன மாட்டகலார்
    தருவார் தழைகுழை வார்திரு மேனியுந் தையனல்லார்க்
    குருவார் மதனன் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    றிருவா ரணங்கனை யாயென்கொ லோவ்வர் சிந்தனையே. (144)

இறைவியறியாள் போன்று குறியாள் கூறல்.

(இ-ள்.) பாங்கி யிவ்வார்த்தைகூறவே தலைவிகேட்டுத் தானொன்று மறியாள்போல மனத்திற் கருதாதவேறொன்றைக் கருதிக்கூறல்.

    மரைமான் கவைய முலைப்பால் பளிங்கு மணித்தரள
    நிரைமாண் சுடர்திருப் பாற்கட லாய்நெடுஞ் சோலையெல்லாந்
    தரைமான் கமலமின் கோமான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    விரைமாண் பசுந்தொங்கன் மாலா யழகு மிகநின்றதே. (145)

பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனின்வயத்தனாக வந்தவதனைக் கண்டேனென்று கூறுதல்.

    தண்ணார் மதியக் கவிகைக் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    பெண்ணா ராமுதனை யாய்தலை நாணம் பெரும்புனத்தே
    யுண்ணா டியவன் புரிமையெல் லாமொரு வர்க்கொருவர்
    கண்ணான் மொழியக்கண் டாரைக்கண் டேன்வண்டற் காவகத்தே. (146)

பாங்கியைத் தலைவி மறைத்தல்.

(இ-ள்.) தலைவி தன்களவொழுக்கத்தைப் பாங்கிக்கு மறைத்துக் கூறுதல்.

    மானானை வேட்டைசெய் வார்புனத் தேவழி கேட்டெய்துவா
    ரானார் மனத்தென்னை யாதரித் தோவகி லாண்டமொரு
    கோனாகக் காக்குங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றேனான சொல்லியென் சொன்னாய் பொறாதென் செவிக்கிதுவே. (146)

பாங்கியென்னை மறைப்ப தென்னெனத் தழாஅல்.

(இ-ள்.) இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியை யுனக்கு நான் வேறோ? வென்று உவகையாகத் தழுவிக்கொண்டு கூறுதல்.

    உன்னா வியுமென தாவியு முள்ளத் துணர்வுமொன்றாய்த்
    தொன்னாண் முதலெனைக் காத்தனை யேதொல்லை நாளத்தந்தி
    தன்னாவி காத்த குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    லிந்நாண் மறைப்பதற் குத்தக்க நாண்வந்த தேதணங்கே. (148)

பாங்கி கையுறை புகழ்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன்கொடுத்த காட்சிப் பொருளைப் புகழ்ந்து கூறுதல்.

    கூராருந் தாரைக் கினிதாந் தரளங்கள் கொங்கைக்குமாஞ்
    சோராநிற் குந்துடிக் காமணங் கேதொல்லை மாமனுநூ
    லாராயு நீதிக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    காராய நின்குழற் காம்வெற்ப ரீந்தவென் கைம்மணியே. (149)


இவற்றுள் – பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லா மறுத்தற்கு முரியன.

தோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல்

(இ-ள்.) பாங்கி தலைவனது வேட்கைகொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக் கூறுதல்.

    காலைக்கு நேமியம் புண்மகிழ் வாவன கண்டுஞ்செம்மை
    மாலைக்கு மேனி மெலிவன நோக்கியு மாதுயிலுக்
    காலைக் கவருங் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    லோலைக் குழையணங் கேயெனைப் பார்ப்ப ருயிர்ப்பரன்றே. (150)

மறுத்தற்கருமைமாட்டல்.

(இ-ள்.) இவ்வாறு பாங்கி கூறிய சொற்கட்கு விடையின்மையால் இனி அத்தலைவன்வரி லென்னான் மறுத்தற்கரிதெனப் பொருத்திக் கூறுதல். மாட்டல் – பொருத்தல்.

    நற்பாவை யாயுங் குமார குலோத்துங்க னாகைக்கொல்லி
    வெற்பாய் வயங்கு முகிண்முலை யாய்வெற்பர் வாடக்கண்டும்
    பொற்பாவை யாகியு நீயுரு காயினிப் போக்கரிதென்
    கற்பா வையுமுரு கும்மவர் காமக் கடுங்கனற்கே. (151)

தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல்.

(இ-ள்.) தலைவனெண்ணுங் குறிப்பு நம்பாலிரப்பவன்போற் றோற்றவில்லை. வேறு நினைப்பானாகத் தோன்றியதென் றொழுங்குபடப் பாங்கி கூறுதல்.

    நீலாம் பரனுங் குடநாடர் வேந்தனு நீடிருதோண்
    மேலாம் புனைதொங்கல் கொய்வனென் றார்வெம் புலியுயர்த்தே
    நாலாம் புணரியுங் காப்போன் குலோத்துங்க னாகைமுந்நீர்ச்
    சேலாம் பொருவிழி பாயென்கொ லோவவர் சிந்தனையே. (152)

பாங்கி தலைவியை முனிதல்.

(இ-ள்.) தலைவி யொன்றுக்கு மறுமொழி கொடாளாக அவளைச்சினந்து பாங்கி கூறுதல்.

    மழையீந்த செங்கைக் குலோத்துங்க சோழன் வயலுறந்தைத்
    தழையீந்த மன்னவர் தங்குறை யோதழை வாங்கிவந்துன்
    னுழையீந்த வென்குறை யோவீந்த நாளி னுறுகுறையோ
    பிழையீந்த தென்னென் ற‌றிகின்றி லேனின்னும் பேரணங்கே. (153)

தலைவி பாங்கியை முனிதல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறிய பாங்கி சொற்களைப்பொறாதவளாய்த் தலைவி பாங்கியைக் கோபித்துக் கூறுதல்.

    பயந்தார் பொறார்நங் கிளைக்கும் பழுதிது பார்க்கிலென்று
    வியந்தாவி நைவதுங் கண்டுநை வாய்வெங் கராப்பொரமுன்
    கயந்தா னழைத்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னயந்தா யிலையெனை யென்குறை கூறினை நன்னுதலே. (154)

தலைவி கையுறை யேற்றல்.

(இ-ள்.) அங்ஙனங்கூறியபின் இனி, பாங்கியையன்றி யொன்று முடியாதென்று கருதி அவள் கொடுத்த கையுறைப் பொருளைத்தலைவி வாங்கிக் கொள்ளுதல்.

    கொண்டாற் பழியுங் கொளாவிடிற் பாங்கி கொடுமுனிவுந்
    தண்டாப் புறவல ருந்தரு மாமத் தசும்பில்வெண்ணெ
    யுண்டாற்றுங் கொண்டல் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    பண்டாற் றியவினை யோவினை யேன்கொளப் பட்டதுவே. (155)

இவற்றுள் – பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லாங் குறைநேர்தற்கு முரியன.

இறைவி கையுறையேற்றமை பாங்கி யிறைவற்குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தழைமுதலியவற்றை யேற்றுக்கொண்டமையைத் தலைவனுக்குப் பாங்கி கூறுதல்.

    கைக்காந் தளந்தழை கோங்குபைங் கொன்றை கருவிளையின்
    மிக்காந் தழைகிஞ் சுகப்பூந் தழைவிரி நாண்முளரி
    யக்காந்தை காந்தன் குலோத்துங்க சோழ னளகைவெற்பா
    விக்காந் திருமொழிக் குன்மாந் தழைவஞ்சி யீர்ந்தழையே. (156)

இதுவுமது.

    ஒத்தேநின் மாந்தழை மாணிக்க வார முடனணிந்தாள்
    கொத்தே படுதண் குழலிதன் மேனியுங் கோத்தகவிக்
    கத்தேனு வன்ன குலோத்துங்க சோழ னளகைவெற்பா
    முத்தே வியர்திரு மெய்யாயி னாளென் மொழிவதுவே. (157)

பாங்கி தலைவனுக்குக் குறியிடங் கூறல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு ஒருஅறிகுறியுள் இடத்தைப் பாங்கி கூறுதல். அறிகுறி – அடையாளம்.

    குத்துங் களிற்றன் குமார குலோத்துங்கன் கோழிப்பிரான்
    கத்துங் கவிகையிற் சிந்திடம் போலுங் கறங்கருவி
    முத்தும் வயிரமு மாணிக்க ராசியு முன்கொழித்துத்
    தத்தும் வரையிடம் யாம்பக லாடிடந் தார்மன்னனே. (158)

பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டுசேறல்.

(இ-ள்.) முன்சொன்ன அடையாளமுள்ள இடத்துக்குத் தலைவியைப் பாங்கி கூட்டிக்கொண்டு செல்லுதல்.

    கண்ணாற் குவளையுங் கையாற்செங் காந்தளுங் கட்டுரையின்
    பண்ணாற் சிலம்புங் குறையச்செய் தேபல நாடுகொண்ட
    மண்ணாட் டரசன் குலோத்துங்க சோழன் மலைக்கொல்லிவாய்
    விண்ணாட்டு வல்லியொப் பாய்நடப் பாய்வென்று மீள்வதற்கே. (159)

பாங்கி தலைவியைக் குறியிடத்துய்த்து நீங்கல்.

(இ-ள்.) கூட்டிச்சென்ற தலைவியைக் குறியிடத்து நிறுத்திவிட்டுப் பாங்கி நீங்குதல்.

    மூரல் கூரங்கண் ணிதழ்ப்பகை யாமுல்லை காந்தள்கஞ்சஞ்
    சோரமென் பிண்டிமின் னேகொய்து மீள்வனிச் சோலைநிற்பாய்
    கோர நெடும்பரிக் கோமான் குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வீரர்முன் செல்லப் பொரும்போரிற் பின்னிற்கும் வேந்துமுண்டே. (160)

நீங்கும் பாங்கி தலைவற்குணர்த்தல்.

(இ-ள்.) அங்ஙனநீங்கிய பாங்கி தலைவியைத் தலைவனுக்குக் கையடையாகக் காட்டிக்கொடுத்துக் கூறுதல்.

    என்பாங் கினளென்று மின்றுதொட் டேயிந்த வேந்திழையா
    ளுன்பாங் கினளிவட் குள்ளுயிர் நீயு மொருகமலப்
    பொன்பாங்க னெங்கள் குலோத்துங்க சோழன் புகாரண்ணலே
    பின்பாங் கறிந்தினி வேறெது கூறுவம் பேதையமே. (161)

இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல்

(இ –ள்) தலைவியைத் தலைவனேரே வந்து காணுதல்

    புளகாசலக் கொங்கை யாலிடை வாடப் பொழிசென்தே
    னுளகா வகத்தென்முன் வந்துநிற் பீருமக் காகாவுள்ள
    மிளகாநின் றேனை மயற்பசி யாற்ற வெனநினைந்தே
    வளகாபுரிமன் குலோத்துங்கன் மால்வரை யாரமுதே 162

இதுவுமது

    நடையாற் களியன்னநல்லிய லாள்மஞ்ஞை நன்கிளவி
    தெடையார் குயின்முலை யாலிளங் கோங்கந் துணைமலர்கட்
    படையாற் சகோரமிங் கெல்லாமொன் றாயன்றுபாற்கடலைக்
    கடையாத் துளவன் குலோத்துங்கன் கோழியங்கா வந்ததே 163

புணர்ச்சி மகிழ்தல்
(இ-ன்) வெளி

    வருந்தத் தவஞ்செய்த வல்வினை யேற்கு மனமிருதோள்
    பொருந்தத் தவஞ்செய்த வார்முலை மார்புடன் போர்விசையந்
    திருந்தத் தவஞ்செய்த கோழிக் குலோத்துங்கன் சென்னி வெற்பிற்
    லருந்தத் தவஞ்செய்த வாயிதழ் மானித ழாரமுதே 164

இதுவுமது

    மையோடரிக் கண்ணி தந்த சுகானந்தவாரி கண்டா
    லையோ வரியுந்த னாழிய டானைந்து நான்குதடக்
    கையோ னையெய்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வெய்யோ னுமாயு யெழுந்து விழுந்த வேலையிலே 165

புகழ்தல்
(இ-ள்) வெளி

    தண்டா மரையெனிற் பேதைக்குப் பேதை தகைபிறிதா
    மண்டாத திங்களு மத்தன்மை யாயழ காண்மை யெல்லாம்
    தண்டார் கொண்டாடுங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    விணுடார் குழலி முகத்துக் கொப்போ தினிக்கே 166

தலைமகளைத் தலைகன் விடுத்தல்
(இ-ள்) தலைவியைத் தலைவன் ஆயக்கூட்டத்தில் செல்ல விடுதல்

    நந்தா மலரெத் தனைமலர்ந் தாலுமந் நாண்மலர்க்குட்
    செந்தா மரையன்றிச் சீரெய்து மோதிருத் தோளிணையிற்
    கொந்தார்பைந் தாமக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வந்தாளுஞ் செந்திரு வேயுன தாய மருவுகவே. (167)

பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்.

(இ-ள்.) குறியிடத்து நிறுத்திப்போயின பாங்கி தலைவன்போ யினபின் தான் கையுறை கொண்டுவரப்போயின பாவனையாகக் கையுறை கொண்டுவந்து காட்டல்.

    பண்முல்லை யாழ்மொழி யாய்ச்சியர் மாலெழப் பைம்புறவத்
    தொண்முல்லை மேய குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பில்
    வெண்முல்லை வாணகை யாய்முல்லை மாலை மிகக்கொணர்ந்தேன்
    வண்முல்லை சூடுவ தேநலங் காண்குல மாதருக்கே (168)

தலைவியைப் பாங்கிற்கூட்டல்.

(இ-ள்.) பாங்கிதலைவியை மகளிர் கூட்டத்திற் சேர்த்தல்.

    மையுறு காவிற் பிரிந்தே நெடிதிங்கு வைகியதற்
    கையுறு வார்நம தாயத்துள் ளாரடை யார்முடியைக்
    கொய்யுறும் வாட்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    னெய்யுறு கூர்விழி யாய்விரைந் தேகுவம் யாமினியே (169)

நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல்.

(இ-ள்.) தலைமகளை ஆய்த்துட்சேர்த்து மீண்டுவந்து பாங்கி தலைவற்கு ஓம்படை சொல்லுதல். ஓம்படை - மறவாமை.

    அடிநின்ற மீனமுஞ் சாபமு மாளி யடவிபுகக்
    கொடிநின்ற வேங்கை யுயர்த்தோன் குலோத்துங்கன் கோழிவெற்பா
    கடுநின்ற நோக்கிக்கு நீயுல காளுங் கருணைக்குமிந்
    நடுநின்ற பாவிக்கு மேத முறாவண்ண நண்ணுகவே. (170)

உலகியன் மேம்பட விருந்து விலக்கல்.

(இ-ள்.) உற்றார் அயலூரிலிருந்து வந்தாலவர்க்கு உணவு கொடுத்துபசரித்-தலுலகியல் பாதலா லவ்வுலகியல் பெருமைப்படத் தலைவனை யெம்மூர்க்கு வந்திருந்து விருந்துண்டு போமெனப் பாங்கி தலைவன் செல்லுதலை விலக்குதல்.

    உண்ணீர் முகிற்கைக் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்ப
    ரெண்ணீர் விருந்தின் றருந்துதற் கேயெங் குலத்துவள்ளி
    கொண்ணீர்மை யன்பிற் றினைமாவுந் தேனுங் குழைப்பவுண்டு
    தெண்ணீரு முண்டில தோவெங்கண் மால்வரைத் தெய்வமுமே (171)

விருந்திறை விரும்பல்.

(இ-ள்.) அவ்வுணவைத் தலைவன் விரும்பிக் கூறுதல்.

    நனையார மார்பன் குலோத்துங்கன் சோழனன் னாட்டிளஞ்சே
    யனையார் பிறந்தகத் துட்பிறந் தீரனை யார்பிடிப்ப
    வினையாய நஞ்சமு தாயதென் றாலுங்கண் மென்கைபிடித்
    தெனையாள நல்குந் தினைமாவுந் தேனுமிங் கென்படுமே (172)

இவற்றுள்- பாங்கி கூற்றாயினவெல்லாம் கூட்டற்கும் பாங்கிற்கூட்டற்கும், தலைவன் கூற்றாயினவெல்லாங் கூட்டற்கும், வேட்டற்கு முரியன.
இத்துணையும் ஆறாநாள் நிகழ்ச்சியென்க.
10-பாங்கியிற் கூட்ட முற்றிற்று.
____________


பதினொராவது - ஒருசார் பகற்குறி.

அஃதாவது-ஒருகூற்றுப் பகற்குறி; அது - யாதெனில்? தலைவன் மறுநாள் தன்வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்துவந்து நிற்கத் தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக்கூறத் தலைவன் வருந்திப்போதல். ஆதலாற் பகற்குறியாகாது ஒருசார் பகற்குறியாயிற்று; அஃது-இரங்கல், வன்புறை இற்செறிப்புணர்த்தலென மூவகைப்படும்; அவை வருமாறு:-

கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுதுகண்டிரங்கல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு தலைவன் பிரிந்துபோகத் தலைவி மாலைக் காலத்தைக் கண்டுவருந்துதல்; இக்கூற்றுப் பாங்கியை நோக்கிக் கூறுதலு மாலையை நோக்கிக் கூறுதலுந் தன்னுட் கூறுதலுமென மூன்றாம்; அவற்றுளிது தன்னுட் கூறுதல்.

    நன்னாண் மதியக் குடையான் குலோத்துங்க னாகைவெற்பிற்
    பொன்னா ளயோத்தியி னுண்டாய பாவம் புனத்துமுண்டோ
    வந்நாளும் பெண்பழி கொண்டது மாலையென் றாருஞ்சொல்வ
    நிந்நாளும் பெண்பழி கொள்ளவிம் மாலை யெதிர்ப்பட்டதே (173)

பாங்கிபுலம்பல்.

(இ-ள்,) தலைவி வருத்தங்கண்டு பாங்கி வருந்துதல்.

    கூருந் திகிரித் திருமால் குலோத்துங்கன் கோழிவெற்பி
    லாரும் பொருவ தெளிமைகண் டோவந்த வேந்தன்விடுந்
    தேரும் பரியும் புறம்போகக் கண்டு சிலைக்கரும்ப
    னூருங் கரிநங் கரும்பினை நாடி யுறாநின்றதே. (174)

தலைவனீடந் தலைவி வருந்தல்.

(இ-ள்.) தலைவன் வாராது நாழிகை நீடிக்கத் தலைவி வருந்திக் கூறுதல்.

    சேனா சமுத்திர வெய்யோன் குலோத்துங்கன் றென்னுறந்தைக்
    கானார் சுனைக்கய லுண்ணும்புள் ளீரொரு காலுமெழுந்
    தானாத செவ்வந்தி தான்வரப் போனவ ராழ்கடல்வாய்
    வானா ரலரிவந் தும்வந்தி லாரென்ன வன்னெஞ்சரே. (175)

தலைவியைப் பாங்கி கழறல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை நீ வருந்துவது முறைமையன்றெனக் கட்டுரைத்தல்-கழறல்-கட்டுரை, இடித்துக் கூறல், உறுதிச்சொல்.

    திருவும் பணியணங் கேபிரி வார்தினங் கேள்வரென்று
    மருவும் பழங்க ணுழப்பதென் னோவறி யோர்க்கருளும்
    பொருளும் புரிந்த குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்ப்
    பிரிவும் புணர்ப்பும் பிறப்பவர் யார்க்கும் பெருவிதியே. (176)

தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்.

இ-ள்.) பாங்கி யெதிரே நிற்கவுந் தலைவி அவண்மேல் வெறுப் பாலவளை நோக்கிக் கூறாது புறமாய்க் கூறுதல்.

    தீராத புன்கணுங் காமவெந் நோயுஞ் சிறையுமுற்ற
    பேராயின் மற்றன்றி யாரறி வார்பெரும் பாரனைத்துஞ்
    சோராமற் காக்கு முறந்தைக் குலோத்துங்க சோழன் வெற்பிற்
    கூரா சையுமென் றனிமையும் யார்க்கினிக் கூறுவதே. (177)

தலைவி பாங்கியொடு பகர்தல்.

(இ-ள்.) வெறுப்பால் முன்னிலைப் புறமொழிகேட்ட பாங்கி தலைவியை யுபசரித்தலாலவ் வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு தலைவிகூறுதல்.

    வாரா திருக்கில் வராரோவென் றேங்கும் வரிலணங்கே
    சேரா தினிப்பிரிந் தாலோவென் றேங்குந் திசைபுரக்குங்
    கூராழி யங்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    பேராசை கொண்டவர் நெஞ்சுக்கெப் போதும் பெருந்துயரே. (178)

தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறியுந் துன்பமுறுந் தலைவியை யது நீங்குமாறு பாங்கி பயமுறுத்திக் கூறுதல்.

    கோவாய கோழிக் குலோத்துங்கன் மால்வரைக் கோவிருப்பாற்
    பூவா யிதணும் பொருந்திநிற் பாய்புட் புகாதெறியாய்
    பாவா யுழலுங் குழல்போற் புறம்பல காலுஞ்செல்வாய்
    மாவாய கண்ணனை கண்டாற் புனத்துன்னை மாற்றுமின்றே. (179)

நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.

(இ-ள்.) தலைவன் றன்னைவிட்டு நீங்கற்கருமையைத் தலைவி நினைந்து தன்னுள்ளிரங்கிக் கூறுதல்.

    ஓங்குங் கவிகைக் குலோத்துங்க சோழ னுறந்தையன்னாய்
    நீங்கும் படிக்கரி தென்றல்ல வோநில வோநில மாமடந்தை
    தேங்குங் கலையிற் பெருமானை வைத்தனள் செந்திருவுந்
    தாங்கும் பிறந்தகத் தேவைத்து நாளுந் தழுவினளே. (180)

தலைவிக் கவன் வரல் பாங்கி சாற்றல்.

(இ-ள்.) அங்ஙன மனமிரங்குந் தலைவிக்குத் தலைவன் வருதலைப் பாங்கி கூறுதல்.

    பொருந்தானைத் தஞ்சைக் குலோத்துங்கசோழன்பொருப்பர்வந்தார்
    வருந்தாது தேர்வரு முன்மறை வேமறைந் தேயவர்தம்
    மருந்தா மரைக்கண் புதைப்பவுன் பேரை யழைப்பதுவுங்
    கருந்தாரை வஞ்சி பிறர்பே ரழைப்பதுங் காண்பதற்கே. (181)

தோழிசிறைப் புறமாகச் செறிப்பறுவுறுத்தல்.

(இ-ள்.) தலைவன் சிறைப்புறமாக்க் குறியிடத்துவரப் பாங்கி தங்களுக்குள்ள செறிப்பை யறிவுறுத்திக் கூறுதல். சிறைப்புறம்-வெளிப்புறம். செறிப்பு-கானவர் தினைகொய்யப் புறத்தினில் வந்திருத்தல்.

    அணையாழி கட்டுங் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    பணையார் புனத்தினி னாளைக்கென் றேபகர்ந் தார்கணியார்
    துணையாய கன்னிகும் பத்தேசெம் பொன்வருஞ் சூழ்குழைபோ
    யிணையாய மீனத்தி லேமழைக் கோள்வரு மென்பதுவே. (182)

தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி மொழிந்தறிவுறுத்தல்.

(இ-ள்.) தலைவன் முன்னிலையாய் நிற்பத் தோழி தலைமகளைக் காணாதவள் போலப் புறமொழியாய்ப் புட்கள் விலங்குகளை நோக்கிக் கூறுவாள் போன்று செறிப்பறிவுறுத்தல்.

    நறவார் புனக்கிள்ளை காண்மஞ்ஞை காணவ்வி காள்கலைகா
    ளுறவா லுமக்கொன்று கூறுகின் றேனுல கேழளிக்குந்
    திறவாளி தஞ்சைக் குலோத்துங்க சோழன் சிலம்பிலெம்மை
    மறவா திருமன்ப ரெங்களன் பேது மறக்கினுமே. (183)

பாங்கி தலைமகன் முன்னின் றுணர்த்தல்.

(இ-ள்.) தோழி தலைவனுக்கேதிரேநின்று தினையறுத்தலாலினி யெம் மூர்க்குப் போவோம் இப்புனத்திகண் வருதலொழிகவெனக் கூறுதல்.

    இருவீருஞ் சூழ்புன நான்முகத் தோன்சென்னி யெம்மைபர்வாள்
    பொருவீர வில்லி யுகிர்க்கிணையா மின்று போதுகின்றேங்
    கருவீர மேகங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வருவீர்கொ லோவன்ப ரேமற வாதெங்கண் மாநகர்க்கே. (184)

பாங்கி முன்னின்றுணர்த்தி யோம்படைசாற்றல்.

(இ-ள்.) அங்ஙன முன்னின்று கூறிய பாங்கி யெம்மை மறவாமைக் காக்கவேண்டுமென்று கூறுதல்.

    ஒண்பூவை வண்ணன் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பா
    வண்பூ வெனும்வனங் காவல்விட் டேமற வாமலென்றுந்
    தண்பூவை நாடிய பேரொளி போலத் தளர்ந்துசெலும்
    பெண்பூவை நாடி வரவேண்டு நின்னுளப் பேரளியே. (185)

கிழவோன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வேறோர் பற்றுக்கோடு பெறாமல் நெஞ்சுடன் கூறுதல்.

    தலைமேன் மெளலி பொறுத்தோன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    னிலைமேல் வெறுந்தனி நிற்குநெஞ் சேநெடி தேதினமு
    மலைமேற் கதிர்கண் முளைக்கின்ற வாறென வாய்தினையிம்
    மலைமேற் கதிர்கண் முளைக்கிலன் றோவுயிர் வாழ்வதுவே. (186)

இதுவுமது.

    படிபோ தவும்விண் முடிபோ தவும்பண்டை நாளளந்த
    வடிபோ தனைய குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    பிடிபோ னடைதளர் வாய்க்கொடி போனதன் பின்வழியே
    குடிபோ யினைநெஞ்ச மேயெந்த நாளெனைக் கூடுவையே. (187)

இவற்றுள் – கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டிரங்கலும் பாங்கி புலம்பலுந் தலைவனீட்த் தலைவி வருந்தலு முன்னிலைப்புறமொழி மொழிதலுந் தலைவி பாங்கியொடு பகர்தலும் நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கலுங் கிழவோன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிழத்தலுமாகிய வேழு மிரங்கற்கும், தலைவியைப் பாங்கி கழறலும் பாங்கி யச்சுறுத்தலும் பாங்கி யவன்வரல் சாற்றலும் வன்புறைக்கும், பாங்கி சிறைப்புறமாகச் செறிப்பறி வுறுத்தலு முன்னிலைப் புறமொழி மொழிந் தறிவுறுத்தலு முன்னின்றுணர்த்தலு மோம்படை சாற்றலுமாகிய நான்கு மிற்செறிப்புணர்த்தற்கு முரியன. முன்னைய வேழில் நெஞ்சொடுகிளத்தலொழிந்த வாறும் வரைதல் வேட்கைக்கும் பின்னைய நான்கும் வரைவுகடாதற்கு முரியன.

11. ஒருசார் பகற்குறி முற்றிற்று.
__________


பன்னிரண்டாவது – பகற்குறியிடையீடு.

அஃதாவது:- பகற்குறிக்கண்வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடுபட்டுப் போதல். இடையீடு – தடை; அது-விலக்கல் சேறல் கலக்கமென மூவகைப்படும்; அவை வருமாறு:-

இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்.

(இ-ள்.) இனி அடிக்கடி தாய்வருவன். நீவந்தாற் பழியுண்டாமென்று தலைவனைப் பகற்குறியிடத்து வராதேயென்று பாங்கிகூறுதல்.

    தாயே யெனுந்தண் ணளியான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    றீயே யனையசெவ் வேலிறை வாதினந் தோறும்பல்கா
    லாயே வருமிடங் காண்புனங் காப்பு மகன்றதுதா
    னீயே யினிவருங் கால்வருங் காண்பி னெடும்பழியே. (188)

இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல்.

(இ-ள்.) பாங்கி தலைவியைநோக்கி யுன்னுடைய தன பாரங்களினழகை யையுற்றுத் தாய் பார்த்துக் கவல்கின்றன ளினியிப்புனத்தில் வரலொழிவாயென்று கூறுதல்.

    மெய்ச்சாரும் வாய்மைக் குமார குலோத்துங்கன் வெற்பணங்கே
    கச்சாரு நின்முலை மேனியிற் பாரமுங் கட்டழகும்
    பொய்ச்சா ரிடைநுடங் கும்மன்னை நோக்கிப் புகையுயிர்த்தா
    ளிச்சாரல் வந்தினி நாம்வண்ட லாடு மிடமல்லவே. (189)

இறைமகளாடிடநோக்கி யழுங்கல்.

(இ-ள்.) தலைவி தான் விளையாடிய இடங்களைவிட்டுப் பிரிதற் கஞ்சி வருந்தல்.

    தண்டேன் சுனைப்புன மூசல்பந் தாடலிச் சாரலெல்லாங்
    கொண்டே குவன்பின் வராமலை யோகொற்ற வேந்தரைப்பின்
    கண்டே பொருத குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    பண்டேநங் குன்றைச் சிறகறுத் தான்விண்ணிற் பாவியுமே. (190)

பாங்கி யாடிடம்விடுத்துக்கொண் டகறல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கி விளையாடிடத்தைவிட்டுத் தம்மூர்க்குக் கொண்டுபோதல்.

    அளைபோ ய‌யிலுங் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    கிளைபோ தவிழும் பொழில்வண்டு காள்கிள்ளை காளிறைவர்
    முளைபோலுந் தோளிக் கொடிபோம் வழியை மொழியுமென்றால்
    வளைபோ யொழுகு மடையாளஞ் சொல்லி வரச்சொல்லுமே. (191)

இதுவரையும் ஏழாநாள் நிகழ்ச்சி யென்க.
___________

பின்னாள் நெடுந்தகை குறிவயி னீடுசென்றிரங்கல.

(இ-ள்.) எட்டாநாள் தலைவன் குறியிடமாகிய மாதவிப் பந்தரிடத்துவந்து காலநீட்டித்துத் தலைவியை நினைந்து வருந்துதல்.

    நெறிக்கே விழிவைத்து நீடுயிர்ப் போடெதிர் நிற்பவரிக்
    குறிக்கே வரக்கண்டி லேனென்செய் வேன்குடப் பாடிவெண்ணெ
    *****க்கே கவருங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    *****க்கே கயவினங் காளென்று மீள்வரப் பூவையரே. (192)


தலைவன் வறுங்களநாடி மறுகல்.

(இ-ள்.) தலைவியில்லாத தினைப்புனத்தை நோக்கித் தலைவன்வருந்துதல்.

    ஆவிக் கமலங் கலந்தென்னை யாள்பவ ராழ்கடலோ
    வாவிக் கமலங்கொ லோபுகுந் தார்வணங் காவரசைக்
    கோவிக்கும் வேங்கைக் கொடியோன் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றூவிக் களிமயில் காளெங்ங னேகினர் சொன்மின்களே. (193)

இதுவுமது.

    மின்னாரி சென்ற வடியைக்கண் டேனந்த மின்பிறகே
    யென்னாவி சென்ற வடிகண்டி லேனிப மோலமெனப்
    பொன்னாழி விட்ட குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    முன்னாள் வினைமுற்றி யிந்நாட் டினைவந்து முற்றியதே. (194)

குறுந்தொடி வாழுமூர்நோக்கி மதிமயங்கல்.

(இ-ள்.) தலைவியி னூர்தேடிச் செல்வோமானால் அறிந்திலமென்று தலைவன் மதிகலங்கிக் கூறுதல்.

    மீனவர் சேரரை வெந்கண்ட வீரம் விழுக்கவிஞ
    ரானவர் பாடுங் குலோத்துங்க சோழ னளகைவெற்பில்
    வானவ ரூரமிர் தைப்பசித் தோர்பெற வாஞ்சிப்பதிக்
    கானவ ரூரமிர் தைத்தமி யேன்பெறக் காமிப்பதே. (195)

இவற்றுள்-இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலு மிறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், ஆடிடம் விடுத்துக்கொண் டகறலொன்றுஞ் சேறற்கும், இறைமகளா டிடநோக்கி யழுங்கல் முதலிய நான்கும் கலக்கத்திற்குமுரியன.

12.- பகற்குறி யிடையீடு முற்றிற்று.
____________________


பதின்மூன்றாவது - இரவுக்குறி.

அஃதாவது:- தலைவன் றலைவியை யிரவுக்குறியிற் கூடுதல்; அது-வேண்டல் மறுத்தல் உடன்படல்கூட்டல் கூடல் பாராட்டல் பாங்கிற் கூட்டல் உய்ங்கல் நீங்கல் ஆகிய ஒன்பது வகைப்படும்; அவை வருமாறு:-

இறையோ னிருட்குறி வேண்டல்.

(இ-ள்.) தலைவன் இருட்குறியைவிரும்பிப்பாங்கியுடன் கூறுதல்.

    பொருவா ளபயன் குலோத்துங்க சோழன் புகாரனையார்
    பெருவாள் விழிமய லாற்றுகி லேன்பகல் பேர்ந்தகல
    வருவார் மதனல்ல வென்னெஞ்ச மோவல்ல வாங்குமது
    திருவார் மருங்கல்ல யான்வரு வேனிச் செறிகங்குலே (196)

பாங்கி நெறியின தருமைகூறல்.

(இ-ள்.) அதுகேட்ட தோழி தலைவன் வரும்வழியில் சிங்க முதலிய மிருகங்கள் சஞ்சரித்தலால் அவ்வழிவர லரிதென்று கூறுதல்.

    பணியா லுருத்திர னாற்றால் வருணன்பல் பேய்க்கணத்தி
    னணியாற் பயிரவி யாநெறிக் கேயறிந் தார்க்குச்சிந்தா
    மணியாங் குமார குலோத்துங்க சோழன் வரையிறைவா
    தணியாக் கடுந்தெய்வ மாங்கங்குல் வாயெங்ஙன் சார்வதுவே. (197)

இறையோ னெறியின தெளிமைகூறல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறிய வழியிலுள்ள மிருகங்களுக் கஞ்சேனாதலால் அவ்வழி வருத லிலேசென்று தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

    நடைபோதங் கற்ற நெறியான் குலோத்துங்க னாகைவெற்பின்
    கடைபோதுங் கங்கு னெறிக்கணங் கேயுங்கள் கன்னியல்குற்
    புடைபோலு நாக முலைபோலும் வேழம் பொலங்கலைசூ
    ழிடைபோலுஞ் சிங்க மெனக்கெளி தாம்வந் தெதிர்க்கினுமே. (198)

பாங்கியவனாட்டணியியல்வினாதல்.

(இ-ள்.) தலைவனது நாட்டுப் பெண்களணியுமணியையு மியலையும் பாங்கி வினாவுதல்.

    ஆடும் புனலுங் கலையுங் கலனு மணிமணமுஞ்
    சூடுந் தெரியலும் யாதண்ண லேதுன்ன லார்மடியக்
    கோடுஞ் சிலைக்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    னாடும் படியெனக் கோதுங்க ணாட்டிள நங்கையர்க்கே. (199)

தலைவ னவணாட் டணியியல் வினாதல்.

(இ-ள்.) பாங்கி குறிப்பறிந்து தலைவன் அவளுடைய, நாட்டிலுள்ள வணிகலன் முதலியவற்றை வினாவுதல். குறிப்பறிதல் – வேண்டுவன கொடுத்தற்கென்க.

    என்னாட் டணியியல் சொல்லியென் னோவந்து யான்புரக்கு
    மந்நாட் டணியியல் காண்பைகொல் லோவம ராரையெல்லாம்
    பொன்னாட்டில் வைக்குங் குலோத்துங்க சோழன் புகாரனையாய்
    நின்னாட் டணியியல் நீகூ றெனக்கென் னினைவறிந்தே (200)

தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல்

(இ-ள்) வெளி

    சுனையாடல் பைந்தழை யாடை கழைமுத்தந் தூயசந்தம்
    புனையா மசோக மலரண்ண லேபொருந் தாவரசைக்
    கனையாழி யேற்றுங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னனையாரும் பூங்குழ லாரணி வாரெங்க ணாட்டணியே (201)

இறைவிக் கிறையோன் குறையறிவுறுத்தல்

(இ-ள்) பாங்கி தலைவனை யோரிடத்து நிறுத்திவிட்டுத தலைவியிடத்திற்சென்று தலைவன் குறையையறிவித்தல்.

    ஏதா மிறைவர் குறிப்பறி யேனின் றிலங்கிழையா
    யோதா துணர்ந்த குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பி
    னீதா மரைகதிர் தாமென வாழ்ந்த நெறிவிடுததார்.
    தாதார் குமுதமுந் திங்களு மாதலைச் சாற்றினரே (202)

நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்

(இ-ள்) இவ்வாறு கூறக்கேட்ட தலைவி யியையாது தன்னெஞ்சுடன் சொல்லுதல்

    விரவுஞ் சிறுபஞ்சுங் காலினென் றாலஞ்சும் வேந்தரையோ
    வரவுங் கரியுந் திரியிருட் கேயடுத் தார்க்கருளும்
    புரவும் புரி்ந்த குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    வரவுந் துணிவைகொல் லோநெஞ்ச மேயென்னவன்கண்மையே (203)

நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்.

(இ-ள்.)நெஞ்சொடு கூறியதலைவி தோழியோடுடன்பட்டுக்கூறுதல்.

    கற்றார்புகழுங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னெற்றாலுஞ் சொல்லறி யேனணங் கேயென் னுயிரனையா
    ரற்றா விருளில் வருவரென் றாயல்ல வாமிதென்று
    சொற்றா லிருவகைக் கும்மன் பிலேனெனத் தோற்றுமின்றே. (204)

நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல்

(இ-ள்) தலைவி யுடன்பட்டமையைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்

    மாகை யிரு்ட்குறி யான்வேண்டும் போது மகிழ்ச்சியளி
    யோகை யுளக்கஞ்ச மீதுற்ற தாலொலி நீருடுத்த
    நாகை புரக்குங் குலோத்துங்க சோழனன் னாட்டினிலென்
    றோகை யடிக்கஞ்ச மீதேயென் கைவண்டு சூழ்ந்தபின்னே. (205)

குறியிடை நிறீஇத் தாய்துயிலறிதல்

(இ-ள்) பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது நித்திரையையறிதல்

    வனேமேய சந்தன மல்லிகை மாதவி மௌவலெல்லாஞ்
    சினமேய தோரத்தி சாய்க்கின்ற தாற்சிலம் பேகுடையாக்
    கனமே தடுத்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லனமே யுணர்ந்தில ரோகடி தோதுயி லன்னையர்க்கே (206)

இறைவிக் கிறைவன் வரவறிவுறுத்தல்.

(இ-ள்) தலைவிக்குத் தோழி தலைவன்குறியிடத்துவருதலை யறிவித்தல்.

    இறங்கிய மன்னர்தன் சேவடிசூட விடிமுரசங்
    கறங்கிய முன்றிற் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    பிறங்கிய நந்தண் டலைத்தலை வாய்மலர் பெய்குடம்பை
    யுறங்கிய புட்களெல் லாமுறங் காதுகொல் லொண்ணுதலே (207)

இதுவுமது.

    கொடிமேற் புலிவைத்த கோமான் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    கடிமேற் பொதும்பினின் னன்பர்வந் தார்கடுந் தேர்ச்சுடரு
    முடிமேல் வெயிலும் வடிவேல் விளக்கமு மொய்கழல்சூ
    ழடிமே லெறிப்புமெல் லாமிரு ணீக்கிய தாரணங்கே (208)

தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்

(இ-ள்) தலைமகன் வந்துநிற்குங் குறியிடத்துக்குத் தலைவியைப் பாங்கி யழைத்துக்கொண்டு செல்லுதல்.

    மஞ்சேயும் வண்மலர்க் கையுறை யுங்கொண்டு வாளுமின்னும்
    பஞ்சேய் விளக்கெனக் கங்குல்வந் தாரையப் பண்ணவர்கா
    வஞ்சே யெனுங்கைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    னெஞ்சேமுன் போதப்பின் போதுகம் வாவெதிர் நேரிழையே. (209)

குறியுய்த்தகறல்.

(இ-ள்.) பாங்கிதலைவியைக் குறித்தகாவிடத்திலே செலுத்திநீங்குதல்.

    மாமே கலையைச் சிலம்போ டொதுக்கிநின் மாணிக்கப்பூ
    ணாமே யெனும்விளக் காநிற்றி யாலந்த மேருவெனுங்
    கோமேவு வேங்கைக் குலோத்துங்கன் கோழிக் கொடி யனையாய்
    தேமே வலர்கொய்து நான்வரு வேனிச் செழும் பொழிறகே (210)

வண்டுறைதாரோன் வந்தெதிர்ப்படுதல்

(இ-ள்.) தலைவன் தலைவியை நேர்வந்து காணுதல்.

    சுற்றாழி யென்னு மொருபெற்ற தாயுந்துஞ் சாதலர்வீ
    டுற்றா யிரங்கடை யுந்திற வாதுத னொண்புயத்தே
    பொற்றா ரணியுங் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    முற்றா முலைவந்த வாறெந்த வாறிந்த மொய்யிருட்கே. (211)

பெருமக ளாற்றின தருமை நினைந்திரங்கல்.

(இ-ள்.) தலைவிதலைவன் வரும்வழியின தருமை நினைந்து வருந்துதல்

    அருட்டோய வாரிக் குலோத்துங்க சோழ னளகைவெற்பா
    வுருட்டோட வோடிய தேர்ப்பக லோனையு முள்விழுங்கு
    மிருட்டோமு னிட்ட வடிதெரி யாதிங்கி யானுமொரு
    பொருட்டோ வரவுந் திருமேனி சாலப் புலரவுமே. (212)

புரவலன் றேற்றல்.

(இ-ள்.) அங்ஙனம் வருந்திய தலைவியைத் தலைவன்றெளிவித்தல்.

    விரிதா மரைநண்பர் போயிடும் பேரிருள் வேலியையான்
    புரிதாழை நண்பர் திறக்கவந் தேன்பொய்கை யூடுபண்டு
    கரிதா னழைத்த குலோத்துங்க சோழன்கல் யாணிய்வெற்பிற்
    சுரிதார் குழலி திருமேனி வாடியென் சோர்கின்றதே. (213)


புணர்தல்

(இ-ள்) வெளி

    தண்ணார் நிதம்ப விடநா கமுந்தமி யேற்கமிர்த
    முண்ணா டியவின்பந் தந்தமை யாலுந்தி நாண்முளரிக்
    கண்ணார் பிரமன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    விண்ணா ரமுதங்கொண் டோவகுத் தானிவண் மெய்யெங்குமே (214)

புகழ்தல்.

(இ-ள்) வெளி.

    நந்திதன் பாதம் பணிவோன் குலோத்துங்க னாகைவெற்பிற்
    பந்தியம் பூண்முலைப் பாவைநல் லார்தம் பனிமொழியை
    முந்திய நான்முகன் கையால் வகுத்தமுன் னாள்விரற்கீழ்ச்
    சிந்திய பேரொழுக் கோதுருப் பாற்கட றேன்கடலே (215)

இறைமக ளிறைவனைக் குறிவரல் விலக்கல்.

(இ-ள்) யானையைச் சிங்கமோது மிராக்காலத்திலே வரிற்றுன்ப மிகவுண்டாமென்று பயந்து தலைவிதலைவன் வருதலை விலக்கல்.

    முன்பாய் கரியை யரிதாவக் கோடி முதுபிடிபோய்த்
    துன்பா யரற்று மிராவண்ண லேதுத்தி வாளுரக
    நன்பாய் வளரும் வளவன் குலோத்துங்க னாகைவெற்பி
    லன்பால் வரினுமென் பாலினி நீவர வஞ்சுநெஞ்சே (216)

இறைவியை யில்வயின்விடுத்தல்.

(இ-ள்) தலைவன் றலைவியை வீட்டினிடத்துச் செல்லென விடுத்தல்.

    தேன்றாழ் குழலிநின் கொங்கை பொறாமையிற் சென்றொடிந்தால்
    வான்றா ழிடைக்கிடை மற்றில்லை யேமனு நூலுழக்குஞ்
    சான்றாண்மை யார்துதி நீதிக் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    னீன்றா ரெழாது சிலம்பதி ராதங் கெழுந்தருளே (217)

இறைவியை யெய்திப் பாங்கி கையுறைகா்டல்

(இ-ள்) குறியிடத்து நீங்கிய பாங்கி தலைவியையடைந்து கையுறை காட்டுதல்

    கைக்கேசெங் காந்த ணகைக்கே தளவங் கனியிதழின்
    மெய்க்கே குமுதம் விழிக்கேகல் லாரமுன் வேற்றரசர்
    புக்கே வணங்குங் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யிக்கே மொழிதிறை யாய்வரக் காட்டின விம்மலையே. (218)

பிற்சென் றிறைவனை வரவு விலக்கல்.

(இ-ள்.) தோழி தலைவியை மனையிற் சேர்த்தபின்பு தலைவன் பாற்சென்று இவ்விருளில் நீ வராதேயென்று விலக்கிக் கூறுதல்.

    குனியார் சிலைக்கை யபயன் குலோத்துங்கன் கோழிவெற்பா
    வினியா ரிரவு வரலொழி வாய்வரி லீண்டுவரப்
    பனியா ழியிற்கஞ்ச மோபக லோன்விடும் பாரத்திண்டேர்த்
    தனியா ழியிற்கஞ்ச மேதிரு மாளிகை தையலுக்கே. (219)

பெருமகன் மயங்கல்.

(இ-ள்.) பாங்கி யிவ்வாறு இரவுக்குறி விலக்கியசொற் கேட்டுத் தலைவன் மனங்கலங்கிக் கூறுதல்.

    மன்னும் புகழ்க்கொல்லிக் கோழிக் குலோத்துங்க மன்னன்வெற்பிற்
    றுன்னுஞ் சகோர நிலாவுண்ணத் தோன்றுஞ் சுடரும்விண்ணீ
    ருன்னும் பறவைக் குறுங்கோ டையுமென்ன வொண்ணுதலாய்
    மின்னுந் தமியனுங் கூடுமிக் கூட்டம் விலக்கினையே. (220)

தோழி தலைமக டுயர்கிளந்து விடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனுக்குத் தலைவிக்குநேருந் துயரைக் கூறி நீ ஊர்போய்ச் சேர்ந்த செய்தி யாமறியும்படி அடையாளங் காட்டென்று கூறிவிடுத்தல்.

    காதுங் களிற்றுக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    யாதுங் கருகு மிருட்குறி வாயிடை யீண்டகன்ற
    போதுங்கொம் பாவியிங் குய்யவங் கூரிற் புகுந்தளவே
    யூதுங்கொம் பாலறி வேனினத் தார்க்கின முண்டென்பதே. (221)

திருமகட் புணர்ந்தவன் சேறல்.

(இ-ள்.) தலைவியைக் கலந்த தலைவன் றன்னூர்க்குப்போதல்.

    பூங்கே கயமன் குலோத்துங்க சோழன் புகாரனையாய்
    தாங்கேத மேது வரினுமஞ் சேன்றனி போமிருளுக்
    கீங்கே யளக முகின்மின்னுக் கேதுணை யென்றனக்கே
    யாங்கே யாக முகின்மினெல் லாந்துணை யாய்வருமே. (222)

இவற்றுள் - இறையோ னிருட்குறி வேண்டலும் நெறியினதெளிமை கூறுதலும் தலைமகனவணாட் டணியியல் வினாதலும் பாங்கி இறைவிக்கு இறையோன் குறையறிவுறுத்தலுமாகிய நான்கும் வேண்டற்கும், பாங்கி நெறியின தருமை கூறலும் இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கலும் பாங்கி இறைவனை வரவு விலக்கலுமாகிய மூன்றும் மறுத்தற்கும், பாங்கி யவனாட் டணியியல் வினாதலும் அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கி சாற்றலும் நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தலுமாகிய மூன்றும் உடன்படற்கும், தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைவற்-குணர்த்தலும் குறியிடை நிறீஇத்தாய் துயிலறிதலும் இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தலும் அவட்கொண்டு சேறலுமாகிய நான்குங் கூட்டற்கும், தலைமகன் தலைமகளை யெதிர்ப்படுதலும் தேற்றலும் புணர்தலுமாகிய மூன்றும் கூடற்கும், தலைமகன் புகழ்தலும் கையுறை காட்டலுமாகிய இரண்டும் பாராட்டற்கும், தலைமகன் தலைவியை யில்வயின் விடுத்தலும் பாங்கி தலைமகளை இற்கொண்டேகலுமாகிய இரண்டும் பாங்கி கூட்டற்கும், நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தலும் தலைமகள்
ஆற்றினதருமை நினைந்திரங்கலும் பெருமகன் மயங்கலும் தோழிதலை மகள் துயர்கிளந்துவிடுத்தலுமாகிய நான்கும் முயங்கற்கும், பாங்கிகுறியுய்த் தகறலும் திருமகட் புணர்ந்தவன் சேறலுமாகிய இரண்டும் நீங்கற்கு முரியன. முயங்கல் - வருந்துதல்.

இதுவரையும் எட்டாநாள் நிகழ்ச்சி.

13 - இரவுக்குறி முற்றிற்று.
----------


பதினான்காவது - இரவுக்குறி யிடையீடு.

அஃதாவது - இரவுக்குறிக்கண்வந்த தலைமகன் அல்ல குறிப்பறிதலால், இடையீடுபட்டுப்போதல்; அஃது - அல்லகுறியெனவும் வருந்தொழிற் கருமையெனவு மிரண்டு வகைப்படும்; அவை வருமாறு:- [இடையீடுபடுதல் - குறி தவறுதல்.]

இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்.

(இ-ள்.) மறுநாளிரவில் தலைவன் வருதலைத் தலைவிக்குப் பாங்கி கூறுதல்.

    தூயோத முத்து நகையாயிக் கங்குற் சுடிகையராப்
    பாயோ னளகைக் குலோத்துங்க சோழன் பகைஞரைப்போன்
    மாயோன் பெருமுன் னவன்புய மாலை மடற்குடம்பைச்
    சேயோன் பரியின மென்னோதுஞ் சாது தெளிக்கின்றதே (223)

தான் குறிமருண்டமை தலைவி யவட்குறைத்தல்

(இ-ள்) தலைவி தான் அல்லற்குறியிடத்துத் தலைவனைக் காணாமையால் மீண்டு விடியற்காலத்து வந்து பாங்கியுடன் கூறுதல். அல்லகுறியிடம் = குறிதவறிய இடம்

    புவியாளு மன்னர் குறிபிழைத் தார்க்கங்குல் போமளவுந்
    தவியாநின் றேன்சென்று மீண்டுவந் தேன்றமிழ் வாணர்தெய்வக்
    கவியா பரணன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    குறியாதென் கண்ணுமப் புள்வாயுஞ் செய்வதென் கோமளமே 224

குறிபிழைத்தழுங்கல்
(இ-ள்) அடையாளமிட்ட இடம் தவறியதாற் தலைவி தலைவனைக் காணாது வருந்துதல்

    குனிவந்த விற்கைக் குமார கு§¡த்துங்கன் கோழிவெற்பிற்
    கனிவந்த காவிற் குருகெழுந் தோறுமிக் காரிருள்வாய்ப்
    பனிவந்த பூங்கைதை காணெய்தல் காள்பல காலுமென்கா
    றனிவந் தயர்ந்ததெல் லாஞ்சொல்லு வீர்நந் தலைவனுக்கே 225

பாங்கி தலைவனின் தீங்கெடுத் தியம்பல்
(இ-ள்) தோழி தலைவன் பொல்லாங்கை யெடுத்துக் கூறுதல்

    தொல்லாழி வேந்தன் குமார குலோத்துங்க சோழன்வெற்பிற்
    கல்லார மாலைக் கருங்குழ லாய்கண்ட காலந்தொட்டு
    நல்லா ரவரென்றிருந்தேம் வரவர நன்றிலராய்
    பொல்லா ரெனத்துணிந் தார்குறித் தாரின்று பொய்க்குறியே 226

தகைவன் புலர்ந்து போதல்
(இ-ள்) தலைவன் தான் குறிக்கப்பட்ட இடத்திலிருந்து தலைவி
அல்லகுறியடைந்து வாராமையால் வருந்தி தன்னூர் போதல்

    நண்ணார் முடிதொடுந் தாளான் குலோத்துங்க னாகைவெற்பிற்
    கண்ணா னதுந்தெரியாக் கஙகுல் வாய்க்கடையாயிரஞ்சூழ்
    தண்ணார் கமல மனையென்றுந் தாய்விழி நீலமென்று
    மேண்ணாமல் வந்தன மேயவ மேயின் றிவ் வேந்திழைக்கே 227

இதுவரையும் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல்.

(இ-ள்.) ஒன்பதாநாள் இருள்புலர்ந்தபின் தலைவி வெற்றிடத்தைக் கண்டு வருந்துதல். இருள்புலர்தல் - விடிதல்.

    பூமேன் முகுந்தன் குலோத்துங்க சோழன் புகார்வண்டுகாண்
    மாமே லிரவிங்கு வந்தன ரோவந்த போதெதிர்போ
    யாமே குறியின் மருண்டுபல் காற்சென் றிளைத்தமைநீர்
    தாமே யுரைத்தனி ரோவில்லை யோநந் தலைவருக்கே. (228)

தலைவி தன்றுணைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தன்றுன்பத்தைத் தன்றோழிக்குச் சொல்லுதல்.

    கரனாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னுரநா யகர்வந்த துண்மைமின் னேநென்ன லோங்குகங்கு
    லரனார் பரியி லவனேமி மூன்றுமொன் றாமொருபேர்
    வர*நா னிலமுஞ்சங் கும்மாய பேரை மலர்ந்த்துவே. (229)

தலைமக ளவலம் பாங்கி தணித்தல்.

(இ-ள்.) தலைவியின் றுன்பத்தைத் தோழி தணித்துக்கூறுதல்.

    மட்டோ டவிழ்குழ லாய்வருந் தேல்வனத் தோர்தருவிற்
    கட்டோ டவிழும் பிறிதொரு போதைக் கடன்முரசக்
    கொட்டோ டதிர்முன்றிற் கிள்ளி குலோத்துங்கன் கோழிவெற்பி
    னிட்டோ டினரைவர் தூதுக்குத் தாமுன் னியைந்தவரே. (230)

இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்

(இ-ள்.) பத்தாநா ளிரவுக்குறியில் வந்த தலைவன்மேற் பாங்கி அல்லகுறிப்பட்ட குற்றமேற்றிக் கூறுதல்.

    கங்கே தெரிவரி தாந்துய ராய கடலுட்பட்டுச்
    செங்கே ழிதழியும் யானுநொந் தேஞ்செ யெலாந்தரளச்
    சங்கே தவழ்பொன்னி நாடன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பா
    வெங்கேயுன் மாநக ரங்கே வருகைக்கு மெண்ணினமே. (231)

இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்.

(இ-ள்.) மேற்கூறிய குற்றத்தைத் தலைவன் றலைவிமேலேற்றிக்கூறுதல்.
-----
** நானிலஞ்சங்கமாகிய பேரை என்றும் பாடம்.

    பூமறந் தாலும் வரிவண்டு பூவிற் பொதியவிழ்க்கு
    மாமறந் தாலும் வருங்கோ கிலம்வணங் காதவன்கட்
    கோமறந் தான்பொரு வேலான் குலோத்துங்கன் கோழிமின்னார்
    தாமறந் தாலும்பின் யான்மற வேனென்றுந் தாழ்குழலே (232)

இதுவுமது

    கோடாத் தனிச்செய்ய கோலான் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    பாடாக் கிளிவர யார்தடுப் பார்பாவி யேன்விரக
    மோடாப் புகையெழ வேலாக் கொடியில்லை யொண்ணுதலாய்
    வாடாத் தளிரில்லை தேடாத்திக் கில்லை வனமெங்குமே (233)

அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல்.

(இ-ள்.) தலைவி குறிமயங்கியதைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

    தடியுங் குருதியுந் தோய்வேற் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    படியுங் கயத்துக்குந் தேமாங் கனியும் பறந்தபுள்ளுங்
    கொடியுன் குறியென்று சோலையிற் போயுங் குழைந்துவந்து
    மடியும் விழியு மறத்தேயத் தேய்ந்த தருங்கங்குலே (234)

அவன் மொழிக்கொடுமைசென் றவளவட் கியம்பல்.

(இ-ள்.) தலைவன் சொல்லியகொடுமையைத் தோழி தலைவிக்குச் சொல்லுதல்.

    கூனுஞ் சிலைக்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பர்
    மானுங் கணையு நிகர்விழி யாய்நென்னல் வல்லிருட்கே
    கானுந்து புள்ளைப் பெடையொடு நீக்கக் கலைத்தகுற்றம்
    யானுந் துணைவி யுடனீங்கி னேனென் றியம்பினரே (235)

என்பிழைப் பன்றென் றிறைவிநேர்தல்.

(இ-ள்.) குறிபிழைத்தது என்பிழையன்றென்று தலைவி நேர்ந்து கூறுதல்.

    கனையே யெழுங்குரற் புள்வாய்க் குறியைத்தங் கைக்குறியா
    யனையே துயிலவும் யான்போயு மீண்டு மயர்ந்ததெல்லா
    முனையேவிட் டல்ல குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பின்
    வினையேன் பிழையன் றணங்கே முன்னாளை வினைப்பிழையே. (236)

இப்பன்னிரண்டும் அல்ல குறியின் விரியென்க. அல்லகுறி - குறிதவறுதல்.

இதுவரையும் பத்தாநாட் பகல் நிகழ்ச்சி.

தாய் துஞ்சாமை

(இ-ள்.) தாய் விழித்திருத்தல்.

    கோழிமன் சங்கம ராச குலோத்துங்கன் கொல்லிவெற்பர்
    தோழியிக் கங்குல் வருவதெங் கேசொல்லு நூற்புலவோ
    ரேழிசை யாளர் மடவார் விழிக்கிணை யென்சொலினு
    மாழியு நீலமு மேயிணை யாநம தன்னைகண்ணே. (237)

நாய் துஞ்சாமை.

(இ-ள்.) தாயுறங்கியபின் ஊரிலுள்ள நாயுறங்காதிருத்தல்.

    காரிதன் பொற்பரி துஞ்சா தொலித்ததிக் கங்குலெம்பா
    லாரியர் தேர்ப்பரி செல்வதெங் கேயம ராரைவென்ற
    சோரிவை வேற்கைக் குமார குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பாரிய னான்முகன் வெம்பரி யாநடைப் பைந்தொடியே (238)

ஊர் துஞ்சாமை

(இ-ள்.) நாயுறங்கினும் ஊரிலுள்ளா ருறங்காதிருத்தல். ஊர்- ஆகுபெயர்.

    பண்ணூ ரிறைவர் பரிவரு மாறெங்ஙன் பாவைநல்லாய்
    கண்ணூ ரவரிமை யாமையி னாற்கலை நாண்மதியத்
    தண்ணூர் தரளக் கவிகைக் குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
    மண்ணூரி தன்றந்த விண்ணூர தாம்பல வைகலுமே. (239)

காவலர் கடுகுதல்.

(இ-ள்.) ஊர் துஞ்சியபின் நகர்காப்போர் பறையடித்துக் கொண்டு ஊர் சுற்றிக் கடுகிவருதல். கடுகல் - விரைதல்.

    தயிர்போய்க் கரந்துண்ட மாயோன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    னயிர்போற் செறியகி லோதிநல் லாயிவ் வருங்கங்குல்வாய்ச்
    செயிர்போம் பறையல்ல விக்கா வலர்பறை தீவினையே
    னுயிர்போம் பறையொக்குங் காணினி வேறெங்ங னுய்வதுவே (240).

நிலவு வெளிப்படுதல்.

(இ-ள்.) தலைவன் வருதற்கிடையூறாய் நிலாவெளிப்படுதல்.

    பெறுவே மெனுமன்ப ரின்பம் பெறாதிப் பெருநிலவா
    லுறுவே தனைச்செய்த தொண்ணுத லாயுழு தாறடிதோய்
    நறுவேரி யாரப் புயத்தான் குலோத்துங்க னாகைவெற்பின்
    மறுவே மதியுற மூடாது போயதென் வல்வினையே. (241)

கூகை குழறுதல்.

(இ-ள்.) கூகை குழறக் கேட்ட தலைவி யஞ்சிக் கூறல்.

    பேறா முறந்தைக் குலோத்துங்க சோழன் பெருங்கிரிவாய்
    மாறாவிக் கங்குலின் மங்கைநல் லாய்வருங் கவ்வரிக்கே
    யாறா மெழுத் தொன்ப தாமெழுத் தாம்பெய ரார்த்தெழுந்து
    வீறாம் பதினொ ரெழுத்தாம் பெயரை விலக்கியதே. (242)

கோழி குரல் காட்டுதல்.

(இ-ள்.) இருவர்க்கு மிடையூறாய்க் கோழி கூவுதல்.

    ஒட்டா திறைவர் வரநின்று கூவுமின் றொண்டொடியாய்
    தட்டாது மூக னெனக் குகனாரைத் தடம்புயத்துக்
    கட்டாண்மை வீமன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லிட்டான் முன்சாபங் கொடிக்குமிட் டானில்லை யீசனுமே (243)

இவ்வேழும் இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற்கருமையின் விரி; இவ்வேழில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு நாழிகையாகக் கொள்க. இதுவரையும் பத்தாநாளிரா நிகழ்ச்சி.

14- இரவுக்குறி யிடையீடு முற்றிற்று.
------------


பதினைந்தாவது-வரைதல் வேட்கை.

அஃதாவது-இடையீடுபட்டதனாற் பதினொறாநாள் தலைவி மணஞ் செய்தலை விரும்பல்; அஃது-அச்சம் உவர்த்தல் ஆற்றாமையென மூன்றுவகைப்படும்; அவை வருமாறு:-

தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல்.

(இ-ள்.) தலைவி துன்பமுற்றிருத்தலைத் தோழி கேட்டல்.

    பொன்னே முலைக்கும்வெண் முத்தே விழிக்கும் புனைந்தலங்க
    லன்னேர் குழற்புனை யாதுநிற் பாயகி லாண்டமெங்கண்
    மன்னேயென் றேத்துங் குமார குலோத்துங்கன் மால்வரைவா
    யென்னே பழங்கண்ணி யானறி யாவெண்ண மேதணங்கே (244).

அருமறை செவிலி யறிந்தமை கூறல்

(இ-ள்) தலைவி யரிய களவொழுக்கத்தைச் செவிலித்தாயறிந்தமை பாங்கிக்குக் கூறுதல்

    மந்தா நிலமு நறுஞ்சாந்துந் தோய்ந்துமெய் வாடுதலைக்
    கொந்தார் குழலிநம் மன்னைகண் டாள்கொண்டல் போல்வழங்கு
    மந்தா மரைக்கைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    னொந்தாள் களவறிந் தாள்சிவந் தாளிரு நோக்கமுமே (245)

தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவி தலைவன், வருதற் கருமையைப் பாங்கிக்குக் கூறுதல்.

    உறங்குந் தொழிலிலைத் தாய்க்கு ஞமலிக்கு மூர்க்குமெங்குங்
    கறங்குந் துடியுங் குடிஞையுங் கோழியுங் காவலர்வந்
    திறங்குஞ் சரணன் குமார குலோத்துங்க னின்னிசைபோற்
    பிறங்கு நிலவும் வருவதெவ் வாறன்பர் பெய்வளையே. (246)

தலைமக னூர்க்குச் செலவொருப்படுதல்.

(இ-ள்) தலைவனிருப்பிடத்துக்குப் போதற்குத் தலைவி துணிந்து பாங்கிக்குக்கூறுதல்.

    சுழிகாட்டும் பொன்னிமன் கோழிக் குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பழிகாட்டு மென்றிரங் காதிருப் பார்தம் பதியளவாய்
    மொழிகாட்டும் பெண்பழி நன்றோமண் காக்கு முறைமைக்கென்ன
    வழிகாட்டி நெஞ்சமுன் செல்லச்செல் வோமின்று வாணுதலே (247)

பாங்கி யிறைவனைப் பழித்துரைத்தல்

(இ-ள்) தோழி தலைவனை நிந்தித்துக் கூறுதல்.

    பொய்யாகு மன்பர்மெய் யாவர்கொ லோபொய்யி லாதவன்பர்
    மெய்யாவ ரன்றிப்பொய் யாவர்கொ லோவென்றி வாணனைமுன்
    கையா யிரங்கொய் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    றையாலவ் வூர்க்குச்சென் றாலுமொன் றேயவர் தங்குணமே (248)

இறைவி யிறையோன்றன்னை நேர்ந் தியற்படமொழிதல்.

(இ-ள்) பாங்கி தலைவனியலைப்பழித்தது பொறாளாய்த் தலைவி தலைவனோடுடன் பட்டவளா யவனியலைக்கூறுதல்

    ஒருகாலந் துன்ப மொருகால மின்ப முதிக்கநமைத்
    தருகாலஞ் செய்தவன் செய்கையன் றோதரி யாரிரியப்
    பொருகால வேற்கைக் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்க்
    குருகாருங் கைவல்லி யன்பரை நாமென் குறைசொல்வதே. ( 249)

இதுவரையும் பதினொராநாள் நிகழ்ச்சி.

கனவுநலி புரைத்தல்

(இ-ள்) தலைவன் கனவிற்கூடினானாக, விழித்தபின்பு பொய்யாய்ப் போன துன்பத்தைப் பன்னிரண்டாநாள் தலைவி பாங்கியினிடத்திற் கூறுதல்.

    கொழித்துத் தமிழ்கொள்ளுங் கிள்ளிக் குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வழுத்தித் தலைவர் கனவில்வந் தார்வெண்ணெய் வாருகைக்கே
    யழுத்திக் கடையப் பெருந்தாழி யங்குடைந் தாலெனவே
    விழித்துக் கெடுத்தது தோழியென் பாவி விழித்துணையே. (250)

கவினழி புரைத்தல்.

(இ-ள்) விகாரத்தாற் றலைவிதன் னலனழிந்ததைப் பாங்கியுடன் கூறுதல்.

    சிந்தோத வாடை நிலமா னழகுமென் சீரழகு
    முந்தோதும் வேந்த ரிருவர்வ ராமல்வெண் முத்துமிழ்ந்து
    நந்தோடும் பொன்னித் துறையான் குலோத்துங்க னாகையன்னா
    யந்தோ விருளும் பசலையு மாய்வந் தழிக்கின்றதே. (251)

தன்றுயர் தலைவனுக்குணர்த்தல் வேண்டல்.

(இ-ள்) தலைவிதன் றுன்பத்தைத் தலைவனுக்கு அறிவிக்க வேண்டுமென்று பாங்கியுடன் கூறுதல்.

    போவாரை யற்றவ ரன்பர்முன் னேதுன்பம் போயுரைக்கு
    நாவாரை யற்றவர் மால்கொள்வ ரோநவ கோடிதெய்வக்
    காவாருஞ் செங்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வேவா ரெனில்வந் தவியாருண் டோசொல்லு மெல்லியலே. (252)

துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல்.

(இ-ள்) யான் துயரடைதலைத் தலைவற்கு நீ சென்று சொல்லென்று தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கி கூறுதல்.

    சுடரான் மகிழுங் கமலமெல் லாமதி தோற்றுகின்ற
    படரான் மகிழுங்கொல் லோமயி லேபயந் தோடியந்தக்
    குடராசன் சேவிக்குந் தாளான் குலோத்துங்கன் கோழிவெற்பி
    லிடரார் மனத்தையு நீயேசொல் லுங்க ளிறையவற்க்கே (253)

அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி.

(இ-ள்) ஊரிலுள்ளார் சொல்லும் பழிச்சொல்லைக் கருதி அதனாலுற்ற பயத்தாற் றலைவி கூறுஞ்சொல்.

    நீரா லிருநிலத் தாற்கொடி யானெடுங் கோடதனால்
    வாரா மலரு மலரையல் லான்மலை கோடிகொண்டு
    காராழி கட்டுங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னூரார் பவளந் தொறுமலர் பூத்ததென் னூழ்வினையே (254)

ஆறுபார்த் துற்ற அச்சக்கிளவி.

(இ-ள்) வழியைப்பார்த்து அதனாடைந்த பயத்தாற் றலைவி பாங்கியைநோக்கிக் கூறுஞ்சொல். பார்த்தல்-கருதல்.

    தெண்ணீர் வரும்பொன்னி நாடன் குலோத்துங்கன் றென்னுறந்தைப்
    பெண்ணீர்மை யேன்பிறந் துய்வனை யோபெரு மாவெறிந்து
    புண்ணீர் மிதித்தநம் மன்பர்தஞ் சேவடி பூஞ்கொடியென்
    கண்ணீ ரினிற்கழு வித்தொழு வேன்றினங் கங்குலிலே. (255)

காமமிக்க கழிபடர் கிளவி.

(இ-ள்) தலைவி ஆசைமிகுந்து சிறப்பச் சிந்தித்துச் சொல்லுஞ் சொல்; இக்கிளவிக்கு கடல், கானல், விலங்கு, புள் முதலியவற்றை விளித்துத் தலைவி யிரங்கிக் கூறுதன்மரபு.

    பரசே தரித்த கரத்தான் முனிமதன் பைங்கொடியே
    முரசே பெருந்தந்கை மாலிகை யேவைய மூன்றினுக்கு
    மரசே செலுத்துங் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    கரைசேரு நாளெந்த நாள்வினை யேனுட் கவலைவிட்டே. (256)

இதுவுமது.

    ஓதக் கயலையுண் டண்ணாந்து விக்கி யுடல்குலுக்கிப்
    பாதத் துணைநிமிர்க் குங்குரு கீர்வெண் பணிலபங்க
    சாதத் திருநிதி யன்னான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    காதற் சிறையுங் குறையுங்கண் டாரில்லைக் கன்னெஞ்சரே. (257)

தன்னுட் கையா றெய்திடுகிளவி

(இ-ள்) தலைவி தன்னிடத்துத் துன்பத்தைப் பிறிதொன்றன் மேலிட்டுச் சொல்லுஞ்சொல்.

    நிலமே சுழித்தனை கீழ்வளை வீழ்த்தினை நீடலரின்
    குலமே சுமந்தனை யுள்ளலைந் தாய்குறு காரைமுந்நீர்க்
    கலமேற வேற்றிய கோழிக் குலோத்துஙகன் காவிரிவாய்ச்
    சலமே யுனக்குமுண் டோவன்ப ராலுள்ள சஞ்சலமே. (258)

நெறி விலக்குவித்தல்.

(இ-ள்) தலைவி தலைவன்வரும்வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல்.

    ஆராயு நீதிக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    றேராழிப் பானுவுஞ் சோமனுங் காணினுஞ் சேணினின்றும்
    பேராத வச்சங் கொளுமிருட் கானத்துப் பேயுமஞ்சி
    வாரா வழிநம தன்பர் வராதினி மாற்றணங்கே (259)

குறி விலக்குவித்தல்.

(இ-ள்) தலைவி தலைவன்வரு மிரவுக்குறியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல்.

    கனங்காக்குஞ் செங்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    மனங்காக்கு நம்மன்பர்க் கோதணங் கேகங்குன் மாலைக்கெலலாந்
    தினங்காக்கு மன்னை வரவரி தாங்குறி சேரப்பெறீர்
    புனங்காக்க மீள வருநாளங் கேபகற் போதுகென்றே. (260)

வெறி விலக்குவித்தல்

(இ-ள்) தாய்தந்தையர் வெறியாடுதலை விலக்கும்படி பாங்கிக்குத் தலைவி கூறுதல். வெறியாடுதல்-ஆடுவெட்டிப் பலியிடுதல்.

    விந்தைதன் கேள்வன் குமார குலோத்துங்கன் வெற்பனையாய்
    சிந்தையில் யான்கொண்ட மாலறி யாமற் சிலம்பகத்தே
    நிந்தை விடாவெறி கொண்டாடு மையைமுன் னேசித்ததோர்
    தந்தைதன் னோவுநந் தாய்பேதை மையுந் தவிர்த்தருளே. (261)

பிற விலக்குவித்தல்.

(இ-ள்) தலைவி யிதரவரவைத் தலைவற்குச் சொல்லி அவர் வரவை விலக்கெனப் பாங்கிக்குக் கூறுதல்.

    உறையோதை மாரிக் குலோத்துங்க சோழ னுறந்தையின்முன்
    னிறையோதை வேழமட் டாரையல் லாற்பிறர் நீண்மணத்தி
    னறையோதை வாரியைப் போன்முர சோதை யசுணநன்மாப்
    பறையோதை கேட்டெனக்கேட்டேண்டேன்விலக்கின்று பான்மொழியே. (262)

குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்.

(இ-ள்.) நந்தலைவர் விட்ட பெரியோர் மணம்பேசிவர அவரை நம்மவர் எதிர்கொண் டழைக்குமாறு செய்யெனத்தலைவி பாங்கியோடு கூறுதல்.

    முதிர்கொள்ளு நூல்விதி யேமணத் தூது முதல்விட்டா
    லெதிர்கொள்ளு மாறுநங் கற்பழி யாம லிகலைவென்று
    கதிர்கொள்ளும் வேற்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    வெதிர்கொள்ளு மால்வரை நந்தமர் யார்க்கும் விளம்பணங்கே. (263)

இவற்றுள் – அருமறை செவிலியறிந்தமை கூறலுந் தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றலும் அலர் பார்த்துற்ற அச்சக்கிளவியும் ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியும் நெறிவிலக்குவித்தலும் குறி விலக்குவித்தலும் வெறி விலக்குவித்தலும் பிற விலக்குவித்தலு குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தலுமாகிய ஒன்பதும் அச்சத்திற்கும், தலைமகனூர்க்குச் செலவொருப்படுதலும் பாங்கி யிறைவனைப் பழித்தலும் தலைவி யிறையோன்றன்னை நேர்ந்தியற்பட மொழிதலுமாகிய மூன்றும் உவர்த்தற்கும், பாங்கி பருவரல் வினவலும் கனவுநலிபுரைத்தலும் கவினழி புரைத்தலும் தன்றுயர் தலைவற்குணர்த்தல் வேண்டலும் துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லும் காமமிக்க கழிபடர் கிளவியும் தன்னுட் கையா றெய்திடுகிளவியுமாகிய ஏழும் ஆற்றாமைக்குரியன. பருவரல் வினவிய பாங்கியென்பதற்கு வினவலுமொரு துறையாக்லாற் சூத்திரத்திற் கூறிய பதினெட்டுக்குமேற் பத்தொன்பதாயிற்று.

இதுவரையும் பன்னிரண்டாநாள் நிகழ்ச்சி.

15-வரைதல் வேட்கை முற்றிற்று.
_____________


பதினாறாவது - வரைவுகடாதல்.

அஃதாவது – பாங்கி தலைவனுடன் வரைவுகடாதல். வரைவுகடாதல் – மணம் வினாவுதல்; அது பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென நான்கு வகைப்படும்; அவை வருமாறு:-

வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.

(இ-ள்.) முன் வரைதல் வேட்கையில் தலைவி அருமறை செவிலியறிந்தமை கூறியவதனைத் தோழி தன்னைச் செவிலி வினவியதாகவும் அதற்குத் தான் மறைத்துக் கூறியதாகவுந் தலைவற்குக் கூறுதல்; இக்கிளவிமுதல், பின்வருங் கவினழிபுரைத்த லீறாகக் கூறியகிளவிகள் பலவற்றுள்ளும் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவுகடாவியவாறு கண்டுகொள்க.

    அளியைத் தருங்கட் குலோத்துங்க சோழ னளகைவெற்பா
    வொளியைத் துறந்த முகத்தின ளாயுடல் வாடக்கண்டு
    தெளியப் படாத துயரேதென் றாளன்னை சிற்றில்வந்தென்
    கிளியைப் பருந்தெடுத் தேகிற்றென் றாளென் கிளிமொழியே. (264)

அலரறி வுறுத்தல்.

(இ-ள்.) ஊரில் தலைவியைத் தூற்றும் அலர்விரிந்ததென்று தலைவனுக்குப் பாங்கி யறிவுறுத்தல். அலர் - பழிமொழி. அறிவுறுத்தல் - அறியும்படி கூறுதல்.

    சோலை யிசைக்கும் வரிவண்டு சூழ்கொன்றை சூடும்பிரான்
    காலை யிசைக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வேலை யிசைக்குந் துறைவா பிறவென் விளம்புவதுன்
    மாலை யிசைக்கு மலர்பூத்த தூரெங்கும் வாணுதற்கே. (265)

தாயறி வுறுத்தல்

(இ-ள்.) தலைவியின் களவைத் தாயறிந்தாளென்று தலைவனுக்குத் தோழி யறிவுறுத்தல்.

    இரவா னதற்கு நடுவேசெவ் வந்தி யெழமணக்கும்
    வரவான தில்லையிந் நாட்டிலென் றாள்வெண்ணெய் வாருகைக்குக்
    கரவா னதுசெய் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லரவான வல்குல் களவறிந் தாளன்னை யாண்டகையே. (266)

வெறி யச்சுறுத்தல்.

(இ-ள்.) அன்னை வெறியாடுதல் செய்ய நினைத்தாளென்று தலைவனுக்குப் பயமுறுத்திப் பாங்கி கூறுதல்.

    உருப்பிற் கொடிய முடிவெந் தரைத்துரந் தோன்புவிபோய்ப்
    பொருப்பிற் பொறித்த குலோத்துங்க சோழன் புகாரனையாள்
    விருப்பிற் பெருமநின் னேயான் மெலியு மெலிவறியா
    ணெருப்புக் கடவுளைக் கானடை யாக்க நினைந்தனளே. (267)

பிறர்வரை வுணர்த்தல்.

(இ-ள்.) பிறர் மணங்குறித்து வந்ததைத் தலைவற்குப் பாங்கி கூறுதல்.

    வல்லும் பொருங்கொங் கையைமணப் பான்முடி மன்னர்விடச்
    செல்லும் பசும்பொன்னின் மேருவும் போந்தெவ்வ ரூர்மதிலைக்
    கல்லுங் களிற்றுக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    வல்லும் பகலுமொன் றாய்விடுங் காணென் னயல்சொல்வதே. (268)

வரைவெதிர் வுணர்த்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன் நோக்கி நீ மணங்குறித்துத் தூதனுப்பினால் தலைவி சுற்றத்தா ரெதிர்கொண்டு வருவரெனக் கூறுதல்.

    அரிதேரு மார்பன் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    சொரிதேன் மொழியை வரைதலுக் காச்செல்லுந் தூதுவிட்டால்
    விரிதேன் வரைத்தமர் வந்தே யெதிர்வர் விளக்கிருக்க
    வெரிதே டுவதண்ண லேவரை யாதிங் கிராவரலே. (269)

வரையுநா ளுணர்த்தல்.

(இ-ள்.) தலைவனுக்குப் பாங்கி மணஞ்செய்யுநாளை யறிவித்தல்.

    தங்கு மரணம் பிறிதொன்றி லாதந்தச் சாவகமுங்
    கொங்கு மிறைஞ்சுங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பா
    பொங்கு மளிமணத் தெய்தாத வேங்கைகள் பூத்தனகா
    ணெங்கு மளிமணத் தெய்தா திராதினி யாவர்க்குமே. (270)

அறிவறி வுறத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைமகளறிவைத் தலைவனுக் கறியக்கூறுதல்.

    திறற்கே புலியன்ன கோழிக் குலோத்துங்க சென்னிவெற்பி
    லுற்ற்கேதஞ் சொல்லி யுனைப்பழித் தேன்சுழித் தோடுபொன்னி
    யறற்கேச வல்லி யதற்குள நாணி யனைமுதலாம்
    பிறர்க்கே யொளிப்ப தொளித்தா ளெனக்கும் பெருந்தகையே. (271)

குறிபெயர்த்திடுதல்.

(இ-ள்.) பாங்கி யிக்குறி யியல்பல்ல வேறோர் குறியிடை வருகவென்று தலைவனுக்குக் கூறுதல்.

    நோயால் வருந்துமிம் மெய்விடுத் தேயும்பர் நோயறுமெய்
    தூயார் தவஞ்செய் தெடுத்தென வேதொல்லை நாணிரையை
    வேயா லழைத்த குமார குலோத்துங்கன் வெற்பண்ணலே
    நீயா யிழையுடன் செல்வாய் பிறிதொரு நீழலுக்கே. (272)

இதுவரையும் பதின்மூன்றாநாள் நிகழ்ச்சி.

பகல்வருவானை யிரவு வருகென்றல்.

(இ-ள்.) வெளி.

    தடுத்தாழி கட்டுங் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பா
    வடுத்தா யிழைக்குப் பகல்வருங் காலந்த வாயிழையும்
    வடுத்தான் வருமென்று மன்றே விலங்க மலைக்கயிலை
    யெடுத்தான் புரிநம் புரியான தில்லை யெனநையுமே. (273)

இரவு வருவானைப் பகல் வருகென்றல்.

(இ-ள்.) வெளி.

    முன்னேமி யுண்ட முதலேயென் றானை முறையிடுநாட்
    கைந்நேமி யேவுங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    வநநேமி யம்புட் பகற்காலத் தான்மகிழ் வாகவென்னோ
    தன்னேமி யம்புள்ளைப் பார்த்துநை வாளெங்க டையலுமே. (274)

இதுவரையும் பதினான்காநாள் நிகழ்ச்சி.

பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்.

(இ-ள்.) பகற்காலத்தும் இராக்காலத்தும் நெருங்கிவருகவெனப் பாங்கி தலைவற்குணர்த்தல். பயிலல் - நெருங்கல்.

    அடிவாளி விள்ளும் பகற்கால மாரிருட் காலமதன்
    முடிவாளி விள்ளு மியானென்செய் கேன்முடி பத்துந்தத்தத்
    தொடுவாளி யெய்த குமார குலோத்துங்க சோழன்வெற்பில்
    விடுவாளி யன்னகண் ணாளிரு காலு மெலிவதற்கே. (275)

பகலினு மிரவினு மகலிவணென்றல்.

(இ-ள்.) பகற்காலத்து மிராக்காலத்து நீ யிவ்விடத்து வராதேயென்று தலைவனைப் பாங்கி விலக்குதல்.

    தாயே யெனப்புவி தாங்குங் குலோத்துங்கன் றஞ்சைவெற்பா
    நீயோ விருகுறி யுந்தவிர் வாயெங்க ணேரிழையு
    மாயோ னிருகண்ணுந் துஞ்சலைப் போன்மழு மானெடுக்குஞ்
    சேயோ னிருகண்ணுந் துஞ்சில வாலென்று தேம்புநின்றே (276)

உரவோ னாடு முருங் குலனும் மரபும் புகழும் வாய்மையுங் கூறல்.

(இ-ள்) பாங்கி தலைவனைநோக்கி நாடுமுதலியவற்றாற் சிறந்த நீ மணஞ்செய்யாது வந்துபோவது தகுதியன்றெனக் கூறுதல்

    உருமார னன்ன குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    பெருமா னினது வளநாடு மூரும் பெருங்குலமும்
    வருமா மரபும் புகழுமெய் வாக்குமற் றேதுமென்னாந்
    திருமா னிரங்கவு நீயிரங் காது திரிகின்றதே. (277)

ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்.

(இ-ள்) வரும் வழியைக்கருதி அவ்வழியிற் றிரிதரும் விலங்காற்றோன்றும் பயத்தைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்.

    கைக்கேய் நிதியங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    மைக்கே நிகருங் கருங்குழற் காய்வருங் கானெதிரே
    புக்கே மனஞ்செலு நீயிருட் கேபொரு மாமுழங்குந்
    திக்கே செவிசெலுஞ் செல்லுங்கண் ணீருந் திருமுலைக்கே. (278)

ஆற்றாத்தன்மை யாற்றக் கூறல்

(இ-ள்) தலைவியின் ஆற்றாத்தன்மையை யாற்றுதல் செய்யத் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

    பேயாவி வெம்முலைப் பாலோ டருந்திய பிள்ளைமுகிற்
    காயா நிறத்தன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    தோயா தொருகணந் தாழ்த்தனை யேலங்ஙன் றோகையுயிர்
    மாயா தொருகணந் தாழா தினியென்ன வாசகமே. (279)

காவன் மிகவுரைத்தல்

(இ-ள்) குறியிடத்து நீ வருவதற்கும் அவள் வருவதற்கும் இடையூறாகிய காவல் மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

    அம்பொன்னின் மேருவில் வெம்புலி தீட்டு மளகைப்பிரான்
    பைம்பொன்னின் மார்பன் குலோத்துங்க சோழன் பனிவரையா
    யெம்பொன்னைத் தாய்புறங் காக்கின்ற வாறிரந் தோர்க்குதவாச்
    செம்பொன்னைப் பேய்புறங் காக்கின்ற வாறொக்குந் தேர்மன்னனே (280)

காம மிக வுரைத்தல்.

(இ-ள்.) தலைவி வேட்கை மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

    கதிக்குங் கனதனத் தாட்கைய நீதந்த காமச்செந்தீ
    பதிக்குந் தரளத் திரளும்வெண் ணீறெழும் பாவலர்வாய்
    துதிக்கும் புகழள கேசன் குலோத்துங்க சோழன்வெற்பின்
    மிதிக்கும் பசும்புல்லுந் தீயுமென் னாமினி மேற்சொல்வதே. (281)

கனவு நலிபுரைத்தல்.

(இ-ள்.) தலைவிக்குக் கனவினால் வந்ததுன்பத்தைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

    கூருந்திகிரித் திருமால் குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வாருந் தலைவரென் சொல்லொன்று கேளுமெம் மாதணைக்கே
    சோருங் கனாவந்து நீர்கொடு போன துயிலையின்னந்
    தாருங் கனாவினிற் கண்டாலு மும்மைத் தழுவுதற்கே. (282)

கவினழி புரைத்தல்.

(இ-ள்.) தலைவியழகழிந்திருத்தலைத்தோழிதலைவனுக்குக்கூறுதல்.

    காவிய வாரிக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    தீவிய வாண்மதி மாசுண்ட கோலமுஞ் சீரனிச்ச
    மேவிய மாந்தளிர் வெவ்வெயிற் கேவெம்பு மேனியும்பொன்
    னோவிய மேற்புகை யுண்டது மாமிவ ளுன்பொருட்டே. (283)

இவற்றுள் - வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப் பிறர் வரைவுணர்த்த லீறாகக் கூறிய வைந்தும் பொய்த்தற்கும், குறிபெயர்த் திடுதலும் பகல் வருவானை யிரவு வருகென்றல் முதலிய நான்கும் மறுத்தற்கும், உரவோன் நாடு மூருங் குலனு மரபும் புகழும் வாய்மையுங் கூறலொன்றுங் கழறற்கும், வரைவெதிர் வுணர்த்தல் முதலாகிய ஏனைய ஒன்பதும் எய்துதற்குமுரியன; இவையெல்லாங் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவுகடாவிய வாறுணர்க.

16 - வரைவு கடாதல் முற்றிற்று.
---------------------


பதினேழாவது - ஒருவழித் தணத்தல்.

அஃதாவது - மேற்கூறிய பாங்கியொடு வரைதற்குடன்பட்ட தலைவன் தன்னூர்க் கொருவழி போய்வருகிறேனென்று போதல்;

அது - செலவறிவுறுத்தல் செலவுடன் படாமை செலவுடன் படுத்தல் செலவுடன்படுதல் சென்றுழிக்கலங்கல் தேற்றியாற்றுவித்தல் வந்துழிநொந்துரைத்தல் என எழுவகைப்படும்; அவைவருமாறு:-

தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றல்.

(இ-ள்.) தலைவன் தன்னூர்க்குப் போய்வருதலைப் பீரங்கிக்குக்கூறுதல்.

    இந்நாட் பதியின் முடிக்குங் கரும மெனக்குண்டுபோய்ப்
    பின்னாட் புலரிக்கு முன்வரு வேன்பெருங் கோகனகப்
    பொன்னாளு மார்பன் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்க்
    கொன்னாரும் வேல்விழி யாய்மொழி யாய்நங் குலக்கொடிக்கே. (284)

பாங்கி விலக்கல்.

(இ-ள்.) தலைவன் பிரிதலைப் பாங்கி விலக்குதல்.

    தருங்கா வனைய கொடையான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    வருங்கா வலவொன்று கேளுசொல் வேனெங்கண் மானனையா
    ளொருங்காவி போம்பழி சூடாமுன் னாவியி னுள்ளனங்கன்
    கருங்காவி போந்தவஞ் செய்தபின் போவது காரியமே. (285)

தலைவ னீங்கல் வேண்டல்.

(இ-ள்.) தலைவன் பாங்கியை யுடன்படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக் கூறுதல்.

    மின்னாவி யிங்கெனக் கென்னா வியுமுங்கண் மின்னுக்கென்றாற்
    பின்னாவி நைவ தொருவருக் கோபெருந் தாமரைச்செம்
    பொன்னா தரிக்குங் குலோத்துங்க சோழன் பொருப்பனையா
    யுன்னாமுன் னாளை வருவேனில் லேனென தூரகத்தே. (286)

தலைவனைப் பாங்கி விடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை யூர்க்குப்போய்வருகென விடுத்தல்.

    கோவியர் கூறை கவர்ந்தோன் குலோத்துங்கன் கோழிவெற்பா
    மேவிய காலையில் மீண்டிலை யேல்விழி வென்றபழி
    லாவி மதன்கடை யம்பது வாங்க வரும்வரிலென்
    னாவியை யோவிய மென்பா யஃதுண்மை யாய்விடுமே. (287)

பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி தலைவன் பிரிவைச் சொல்லுதல்.

    மேற்காலம் வல்விசை யற்காப் பகலைவெங் கங்குல்செய்த
    போர்க்கால நேமிக் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்க்
    கார்க்கால னேர்கண்ணி யுன்னைவிட் டேகவுங் கால்வருமோ
    தேர்க்கால் கொடுநடந் தார்தம தூர்க்கின்று தேர்மன்னரே. (288)

தலைவி நெஞ்சோடு புலத்தல்.

(இ-ள்.) தலைவி மனத்தொடு வருந்திக் கூறுதல்.

    ஒருநாட் பிரிகில மென்றாரிப் போதொரு நாட்பிரிந்தால்
    வருநாட்பி னுண்டென்கை யாவர்கண் டார்மலர் மாளிகைச்செந்
    திருமார் பணிந்த வுறந்தைக் குலோத்துங்க சென்னிவெற்பி
    னருநாண் மதிக்குன் னுயிர்பிழைத் தாற்பின் னறிநெஞ்சமே. (289)

இதுவரையும் பதினைந்தாநாள் நிகழ்ச்சி.

சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர் கிளவி.

(இ-ள்.) தலைவன் மாலைக்காலம்வரையும் வராமல் வரவு நீட்டித்தலாற் காமமிக அதனால் மிகுந்த நினைவொடு கூறுதல்.

    சிவனார்திண் டேர்த்துகி லேதுணி யேசெம்மல் போர்க்களமே
    நவனாம் வருணற்கு மாநக ரேநாக சூடிகையிற்
    புவனாதி தீரன் குலோத்துங்க சோழன் புகார்மலையத்
    தவனார் புனற்கட மேயுரை யாயித் தனியவர்க்கே. (290)

பிறைகண் டிரங்கல்.

(இ-ள்.) தலைவி பிறைச்சந்திரனைக் கண்டு வருந்துதல்.

    புந்திக்கு ளன்பர்நின் றாலுந்தம் மாகம் புழுங்குமென்று
    சிந்திக் கவுமஞ்சு வேன்றெய்வ மேசெழுந் தாதகித்தார்
    கந்தித்த மார்பன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னந்திப் பிறைக்கென்செய் வேனென்செய் வேன்பிரி வாற்றுகைக்கே. (291)

பிறையொடு புலம்பல்.

(இ-ள்.) மேற்கூறிய பிறையொடு தன்றுயர்கூறித் தலைவியிரங்கிக் கூறுதல்.

    தண்ணோடை நெற்றிக் களிற்றான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
    மண்ணோடு கூடல் வளைத்தையர் வேன்மணிப் பூண்முலையிற்
    கண்ணோ டருவியுங் கண்டெனைக் காய்வை கடலைகத்துப்
    பெண்ணோடு தித்தனையென் கைபொய்யோவெண் பிறைக்கொழுந்தே (292)

குருகொடு புலம்பல்.

(இ-ள்.) நாரைப் பறவையொடு இரங்கிக் கூறுதல்.

    பொருங்கால வேற்கைக் குலோத்துங்கசோழன் புகார்த்துறைவாய்ப்
    பெருங்கால வைக்குமுன் போங்குரு கீர்பெண் பழிக்கிரங்கி
    யிருங்கால வேலர் தமதூர் குறித்தெம தூர்குறித்து
    வருங்காலென் னெஞ்சைமுன் னேவரக் காட்டி வரச்சொல்லுமே. (293)

விடியாமைக் கிரங்கல்.

(இ-ள்.) இரவு விடியாதிருத்தலுக்குத் தலைவி வருந்திக்கூறுதல்.

    போகாத கங்குலின் கற்பாந்த காலமும் போயொருநாண்
    மாகா தலரையு மெய்துவ மோவணங் காவரசுக்
    காகாய நல்குங் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    லேகாம லம்மட்டு நிற்கிலன் றோவினி யென்னுயிரே. (294)

தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு வருந்திய தலைவியைப் பாங்கி வருத்தத்தைதீ தணியச்செய்தல்.

    எவ்வேந் தரும்வந் திறைஞ்சிய பாத னிரவிகுலச்
    செவ்வெந்தன் கோழிக் குலோத்துங்க சோழன் சிலைக்கொல்லிவா
    யவ்வேந்த ரோட்டிய தேர்தோன் றியதினி யாயினுநின்
    வெவ்வேந்த ரோட்டிய தேர்தோன்று மஞ்சல் விடுதியின்றே. (295)

இதுவரையும் பதினாறாநாள் நிகழ்ச்சி

தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வந்தசெய்தி தலைவிக்குத் தோழிகூறுதல்.

    தூயோர் பழிகொள்வ ரோமறந் தேனும்பொய் சொல்லுவரோ
    நீயோயுந் தன்மைக் கொருமிப்ப ரோநில மேழளந்த
    மாயோ னளகைக் குலோத்துங்க சோழன் வரையினென்னற்
    போயோர் திரும்பிவந் தார்வருந் தேலினிப் பூங்கொடியே. (296)

வந்தோன் றன்னொடு நொந்துவினாதல்.

(இ-ள) பாங்கி வந்த தலைவனொடு துன்பப்பட்டு வினாவுதல்.

    விள்ளா தணைக்குங்கை சற்றே நெகிழினு மெய்துளங்கி
    யுள்ளாவி போமெனுந் தையலை யோவுறி மீதுவெண்ணெய்க்
    கள்ளா முகுந்தன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    வள்ளால் பிரிந்தொரு நாளிருந் தாயென்ன வஞ்சகமே. (297)

தலைவன் பாங்கியொடு நொந்துவினாதல்.

(இ-ள்) எவ்வண்ணந் தலைவியை யாற்றியிருந்தாயென்று தலைவன் றோழியோடு வருந்திக் கேட்டல்.

    மீனாழி யேழு மெழுதீவும் விண்ணும் விழுங்கிற்றெங்கு
    மானா தடுநில வென்றஞ்சி னேனஞ்சி யோடினர்பின்
    கூனாத விற்கை யபயன் குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மானா ருயிர்க்கென்செய் தாய்நேற்றி ராமுற்றும் வாணுதலே. (298)

பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமை கூறல்.

(இ-ள்) வெளி.

    பொறியார் நெருப்பெனப் பொங்கு நிலாவெள்ளம் புக்கழுந்தும்
    வெறியார் குழலி யுயிர்மீட்ட வாறுபொன் மேருவிற்போய்க்
    குறியார் புலியை யெழுதுங் குலோத்துங்கன் கோழிவெற்பா
    எறியாழி வெள்ளத்தி னுள்விழு மாணிக்கம் யான்கண்டதே. (299)

இவற்றுள் தன் பதிக்ககற்சி தலைவன் சாற்றலும் பாங்கி தலைவிக்வன் லவுணர்த்தலுமாகிய இரண்டுஞ் செலவறிவுறுத்தற்கும், தலைமகனைப் பாங்கி விலக்கலொன்றுஞ் செல வுடன்படாமைக்கும், நீங்கலவேண்டலொன்றுஞ் செலவுடன் படுத்தற்கும், பாங்கி விடுத்தலொன்றுஞ் செலவுடன்படுதற்கும், தலைமகன் நெஞ்சொடு புலத்தல் முதலிய ஆறுஞ் சென்றுழிக்கலங்கற்கும் , தலைமகளை யாற்றுவித்தலும் தலைமகன் வந்தமை தலைமகட் குணர்த்தலுமாகிய இரண்டுந் தேற்றி யாற்று வித்தற்கும், பாங்கி வந்தோன் றன்னொடு நொந்து வினாதல் முதல் மூன்றும் வந்துழி நொந்துரைத்தற்கு முரியன.

17-ஒருவழித்தணத்தல் முற்றிற்று.
-------------------

பதினெட்டாவது – வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்.

அஃதாவது-விவாகத்தை யிடையிலே நிச்சயித்து விவாகத்துக்கு வேண்டும் பொருள் காரணமாகத் தலைவன் பிரிதல்; அது-பிரிவறிவுறுத்தல் பிரிவுடன்படாமை பிரிவுடன்படுத்தல் பிரிவுடன்படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழி மகிழ்ச்சி யென வொன்பது வகைப்படும்; அவை வருமாறு:-

என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்.

(இ-ள்) விவாகத்துக்காகப் பொருள்கொண்டு வருதற்குப் பிரியும் என்னுடைய பிரிவைத் தலைவிக்குச் சொல்லென்று தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

    குரமலைக் கும்வெம் பரியான் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    சரமலைக் குங்கண்ணிக் கோதணங் கேசந்து மான்மதந்தோ
    யுரமலைக் கேயுரந் தோற்றே யிடுந்திறை யொப்பச்செம்பொன்
    கரமலர்க் கேதரப் போவேன் வரையக கருதியின்றே. (300)

நின்பொருட் பிரிவுரை நீயவட்கென்றல்.

(இ-ள்) விளி.

    போவா ரெனச்சொல்லுஞ் சொல்லதற் காவி பொறுக்கிலன்றோ
    பாவார் குழலிக் கியான்சொல்லு வேன்பண்டு வாளரக்கர்
    கோவா ருயிருண்ட வில்லான் குலோத்துங்கன் கோழிவெற்பி
    லேவார் சிலைவள்ள னீயே யுரைபிரிந் தேகுவதே. (301)

நீடேனென்றவ னீங்கல்

(இ-ள்) தலைவன் நீட்டித்திராது விரைந்து வருவேனென்று பாங்கியொடு கூறி நீங்குதல். நீட்டித்தல்-காலந்தாழ்த்தல்.

    மானார்கண் ணாளுமி யானுமொன் றாக மணக்கினடு
    வானாத காற்றெய்தி லாகின்றி லேனம ராடுதென்னர்.
    மீனாழி வீவிக்குங் கோழிக் குலோத்துங்கன் வெற்பனையாய்
    போனா னெடிதுநில் லேன்வரு வேன்கைப் பொருள்கொணர்ந்தே. (302)

சூளெடுத் துரைத்தல்

(இ-ள்) பாங்கி தலைவனுக்குச் சபதமெடுத்துச் சொல்லுதல்.

    தருமா றெதிருங்கைக் கிள்ளி குலோத்துங்கன் றஞ்சைவெற்பா
    வருமாறு நீசொன்ன சொற்பிழைத் தான்மழு மானெடுக்கும்
    பெருமான் சிலையொடுந் தேரடி பேரும்பெய் யுங்கணையின்
    செருமானத் தூணி வறக்கும்பொய் யாமந்தத் தேர்ப்பரியே. ( 303)

இதுவரை பதினேழாநாள் நிகழ்ச்சி.

பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்.

(இ-ள்.) பொருள்வயிற் பிரியுந் தலைவன் செல்லுதலைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

    வில்லோ பிரானிளப் பானிதி யோவட வேந்திளப்பா
    னில்லோ வரியிளப் பானறி யேனிடைந் தோடினரைக்
    கொல்லோ மெனவிடுஞ் சென்னி குலோத்துங்கன் கோழிவெற்பர்
    வல்லோ வெனுநின் முலைவிலைக் கேகினர் வாணுதலே (304)

பூங்குழையிரங்கல்.

(இ-ள்) தலைவி வருந்தல்.

    கண்ணே யனையவர் நீங்கின ராலினிக் காமனெய்யும்
    புண்ணே புகப்புக வென்னுயிர் போம்பொன்னின் மாரிபெய்யும்
    விண்ணே யெனுங்கைக் குலோத்துங்கன் கோழி விளங்கிழையாய்
    பெண்ணே யிறைவரும் பொன்னே நமரும் பெறுவதெங்கே. (305)

பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்.

(இ-ள்) இவ்வாறு நீ யிரங்குவதென்னென்று தோழி தலைவியை நோக்கிக் கொடிய சொல்லைச் சொல்லுதல்.

    கரையாரும் பொன்னிக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    குரையா ரலைத்துரும் பாயலை வாய்குல நீதிக்கன்பர்
    வரையா தயலவர் பல்வா ய‌லரு மதனலரு
    நிரையாய் வருத்த வருந்துவ தோநல நேரிழையே. (306)

தலைவி கொடுஞ்சொற் சொல்லல்.

(இ-ள்) மேற்கூறியபாங்கியைமனத்தினானொந்துதலைவிகூறுதல்.

    தருந்தாரு வன்ன குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    பரிந்தார் வரைந்தில ரேனுமென் னாம்பல காலகலா
    திருந்தா ரெனினும்பின் வந்தா ரெனினுமே னுட்குளிரும்
    பிரிந்தா ரெனுஞ்சொற் பொறாதணங் கேயிங்கென் பேதைநெஞ்சே. (307)

வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்.

(இ-ள்.) பாங்கிதலைவர் திரும்பிவருவரென்றுகூறுதல். வலித்தல் - வற்புறுத்திக் கூறுதல்.

    கூற்றுங் கொடியுந் தொடர்வேற் குலோத்துங்கன் கோழிவெற்பி
    னேற்றுந் துயருனக் கேதணங் கேநும் மிருவருக்கும்
    போற்றும் புணர்ச்சி திடமேநின் பூண்முலைப் பூண்களெல்லா
    மாற்றும் பரிவை நினைந்தேனு மீண்டு வருகுவரே. (308)

பருவங்கண்டு பெருமகள் புலம்பல்.

(இ-ள்.) தலைவன் பிரியும்போது கார்காலத்துக்கு முன்னே வருவலென்று குறிப்பாற் கூறிப் போயின னாதலாலே கார்ப்பருவங்கண்டு தலைவி புலம்பிக் கூறுதல்.

    தழைகா லங்கான மயிலாடு காலந் தளவுகொன்றை
    குழைகால மிந்திர கோபமொய் காலங் குருகினஞ்சேர்ந்
    திழைகாலங் கோழிக் குலோத்துங்க சோழ னிருங்கொல்லிவாய்
    மழைகாலம் வந்தும் வராரோ நமைத்தனி வைத்தவரே (309)

இதுவுமது

    மின்னாகும் வாளொ டுறைவீசி வில்லம்பு மீதுகொண்டு
    பின்னாகுங் கோபத் தொடுநெடு மேகம் பெரும்பதத்திற்
    கன்னாரி செய்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னென்னா ருயிர்கொல்ல வந்ததெண் ணார்கொல்விட் டேகினரே. (310)

இகுளை வம்பென்றல்.

(இ-ள்.) அவ்வாறு புலம்பிய தலைவி தேறும் வண்ணம் பாங்கி இது-காலத்தின் வந்த மேகமன்று. இடையே வம்பாகத் தோன்றிய தென்று கூறுதல். வம்பு - காலமல்லாத காலத்திற் றோன்றும் பொருள்.

    தெளிக்குந் திறமன்பர் வாராமுன் னார்த்தது செல்லிதென்று
    துளிக்குங்கண் ணீர்பொழி யேலணங் கேதெவ்வர் சோரியுட்போய்க்
    குளிக்குங் கரதல வேலான் குலோத்துங்கன் கோழிப்பிரா
    னளிக்குங் கடாக்களிற் றார்ப்பும் பெற்றோர்துதி யார்ப்புமிதே (311)

இறைமகள் மறுத்தல்.

(இ-ள்.) தலைவி பாங்கி கூறியவதனை மறுத்துக் கூறுதல்.

    கொழுமுல்லைக் கோநிரை காத்தோன்குலோத்துங்கன்கோழிவெற்பிற்
    செழுமுல்லைத் தூநகை காரன்றென் பாய்திர ளாகவைகு
    முழுமுல்லைப் பூம்புற வெல்லாம் வரிவண்டு மூசவிரிந்
    தெழுமுல்லைப் போதும்பொய் யோமத வேளெடுத் தெய்கின்றதே. (312)

அவர்தூதாகி வந்தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல்.

(இ-ள்.) தலைவி கார்காலம் வந்ததென்று கூறிய சொற்கேட்ட பாங்கி தலைவன் தான் வருகின்ற செய்தியை யறிவித்தற்கு விடுப்ப இப்பொழுது இக்கார் தூதாய்வந் தடைந்த்தென்று கூறுதல்.

    ஓயா தமுதந் தனக்கீயுந் தானத் துதித்ததிரு
    நீயாவ தெண்ணியுன் மெய்வருந் தாம னெறிமுறையிற்
    சாயாத நீதிக் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    றூயார் வருவது காரோதப் போந்தது தூதெனவே. (313)

தலைவி யாற்றல்.

(இ-ள்.) தலைவி துன்பத்தைச் சகித்திருத்தல்.

    போர்க்கும் பலநதி தம்மாழிக் கேள்வனைப் புல்லுதுமென்
    றார்க்குங் கலிப்பெழுந் தாலிக்குங் காணடை யாருடைந்து
    தோற்கும் படிகண்ட கோழிக் குலோத்துங்க சோழன்வெற்பி
    னேற்குந் தலைவர் வரும்போதிப் போதஞ்ச லென்னெஞ்சமே. (314)

அவனவட் புலம்பல்.

(இ-ள்.) பொருளீட்டச்சென்ற தலைவன் தன்கருமமுற்றிய பின்றையே யவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்புதல்.

    சிலைமீது வாங்கு முகிலாங் குலோத்துங்கன் றென்னுறந்தைத்
    தலைமீது மேகமுன் னோடக்கண் டாற்றள ராதெழுந்த
    மலைமீது நின்று கடற்கோடு மாறென்பர் மைக்கடனின்
    றலைமீ துதித்தமின் னார்மலைக் கோடுமின் றாறிரண்டே. (315)

இதுவுமது.

இதுவரையும் பதினேழாநாள் நிகழ்ச்சி.

    ஏட்டிளந் தாதகித் தாரான்றெவ் வாமிப மங்குமம
    ராட்டிளஞ் சீயங் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    காட்டிளம் பூங்கொடி யெல்லா மழைக்குக் கதிர்த்தெழுநம்
    வீட்டிளம் பூங்கொடி நெஞ்சே மழைக்கு மெலிந்தெழுமே (316)

பாகன்றன்னொடு சோகங்கொண்டவன் சொல்லல்.

(இ-ள்.) சோகங்கொண்ட தலைவன் தேர்ப்பாகனோடு தேரை விரைந்து நடாத்தச் சொல்லுதல்.

    காராழி மூழ்கிய மைந்நாகம் போலநங் காரிகைகண்
    ணீராழி மூழ்கு முலைவல வாநில மேழ்புரக்கு
    மோராழி வேந்தன் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    றேராழி மேகமுன் னோடுமுன் னோட்டுநின் செங்கைகொண்டே. (317)

இதுவுமது.

    என்பெருந் தேர்வல வாதிரு மான்மக னேறுமொரு
    நன்பெருந் தேரிற் கடிதோட வேண்டு நளினமனைப்
    பொன்பெருங் கேள்வன் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்த்
    தென்பெருஞ் சாந்த முலையாவி மீளத் திருப்புகைக்கே (318)

மேகந் தன்னோடு சொல்லல்.

(இ-ள்.) தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிக் கூறுதல்.

    தார்மேன் மணத்த புயத்தான் குலோத்துங்கன் றஞ்சையென்னு
    மூர்மே லணுகமுன் போமுகில் காளுறங் காதவிழி
    நீர்மே லொருவெறுங் கூடுகண் டாலின்று நீர்விளம்புந்
    தேர்மே லொருவெறுங் கூடுகண் டேனெனுஞ் செய்தியையே (319).

பாங்கி வலம்புரிகேட்டவன் வரவறிவுறுத்தல

(இ-ள்.) வலம்புரிச் சங்கோசையைக் கேட்டுத் தோழி தலைவன் வரவைத் தலைவிக் கறிவித்தல்.

    பெண்சங்கந் தூற்றலுங் கூடலி லேநின் பெருமலர்க்கை
    மண்சங்கந் தூற்றலு நீக்கணங் கேமனு நீதியெடுத்
    தொண்சங்க மேத்துங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    *மண்சங்க மன்பர்வந் தாரென்று தேர்முன் றமரித்ததே (320)

வலம்புரிகிழத்தி வாழ்த்தல்.

(இ-ள்.) வலம்புரிச்சங்கைத் தலைவி வாழ்த்தல்.

    சரிசங்க மென்கையில் வீழாது காத்த தலைவர்திண்டேர்ச்
    சுரிசங்கம் யாதென்று வாழ்த்தெடுப் பேன்சுரர் மாதர்நையப்
    புரிசங்க மூதுங் குலோத்துங்க சோழன் புகாரனையீர்
    திரிசங்கம் பூமியில் வீழாது காத்தவன் சீரொத்ததே (321)

இதுவுமது.

    நடைப்பா லனத்தையொப் பீர்மற வேனுயிர் நல்கியன்ப
    ருடைப்பாரத் தேர்வர வும்பகர்ந் தேயொரு தோற்றமெடுத்
    திடைப்பாடி புக்க குலோத்துங்கன் கோழி யெழிற்கொல்லிவாய்
    விடைப்பாக னாரிடத் தாரிடத் தார்செய்த மெய்ந்நன்றியே (322)

தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாதல்.

(இ-ள்.) தலைவன் வந்தவிடத்துத் தோழி தலைவியை நினைத்த துண்டோவென்று கேட்டல்.

    மனமேபைந் தாமரை யத்தா மரையின் மலருக்கெங்க
    ளனமே திருவெனச் செய்ததுண் டோவம்பொன் மாரிசொரி
    கனமே யெனுங்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    தனமே கொணர வனமே கொணர்ந்தெய்துந் தண்ணடைக்கே (323)

வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைவன் பொருளீட்டி வந்த இற்றைத்தினம் முப்பத்து நான்கா நாளென்க; முப்பத்து நான்கென்னுங் கணக்கு ஏற்றாற்பெற்றதெனின், "களவினுட் டவிர்ச்சி வரைவி னீட்டந், திங்க ளிரண்டி னகமென மொழிப" என்னும் இறையனாரகப் பொருட் சூத்திரவுரையில் பொருளீட்டிவந்த தலைவன் ஆறு நாளில் வரைவு முடிப்பபெனென்று கூறியதனாலும் தலைவன் றலைவியைக் கண்ட பதினெட்டாநாளிற் பொருள்வயிற் பிரிந்ததனாலும் ஐம்பத்தாறாநாள் வரைவு முடிந்ததாகக் கூறுதலாலும் என்க. அற்றேல், "வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோ, ரிருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்" எனக்கூறி னாராலோவெனின், இருதிங்களென்றது எல்லை கடவாமைக்குக் கூறியதன்றி இருதிங்களுள் வரக்கூடாதென்னும் யாப்புறவின்மையினென்க. ஆயின், "வரைவினீட்டந் திங்களிரண்டினக" மென்றதனால் அறுபதாநாள் மணமுடிந்ததாகக் கூறினாலென்னையெனின், அச்சூத்திரவுரையில் திங்களிரண்டினு நான்கு நாளிருக்க மணமுடிப்பதியல் பென்று கூறியதானால் கூறலாகாதென்க. மாதத்தினந்தமாகிய நான்கு நாட்கள் மணத்துக்கு விலக்கப்பட்டனவென்று சோதிடநூலார் சிலர் கூறுதலாலிங்ஙனங் கூறியது போலும்.

தலைவ னினைத்தமை செப்பல்.

(இ-ள்.) வெளி.

    குன்றாத வண்மைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    னன்றா முமைவிடுத் தேகுமந் நாட்டி னறுங்குழலா
    ளொன்றா யினளன்றி யென்பார் வையுமென் னுளமும்விட்டுச்
    சென்றாலன் றோவணங் கேநினைத் தேனென்று செப்புவதே. (324)

ஆற்றுவித் திருந்த அருமை சாற்றல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவனுக்குக் கூறுதல்.

    தனிக்கே ளபயன் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பா
    வினிக்கேதந் தீரவுன் றேர்வரு மோவென நான்விருச்சி
    கனிக்கே பொழில்சென்று கேட்டுநின் றேனன் கனிபறிப்பார்
    கனிக்கே யிரதமுண் டென்பாரஃ தாவியைக் காத்த்துவே. (325)

இவற்றுள் – என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றலும் பாங்கி தலைவிக்கவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டும் பிரிவறிவுறுத்தற்கும், நின்பொருட் பிரிவுரை நீயவட் கென்றலொன்றும் பிரிவுடன் படாமைக்கும், நீடேனென்றவ னீங்கலொன்றும் பிரிவுடன்படுத்தற்கும், தலைவியிரங்கலும் பாங்கி கொடுஞ்சொற் சொல்லலும்பருவங்கண்டு பெருமகள் புலம்பலும் இறைமகண் மறுத்தலும் அவனவட் புலம்பலுமாகிய ஐந்தும் பிரிவுழிக் கலங்கற்கும், வருகுவர் மீண்டெனப் பாங்கி
வலித்தலும் இகுளை வம்பென்றலும் அவர் தூதாகி வந்தடைந்த திப் பொழுதென்றலுமாகிய நான்கும் வன்பொறைக்கும், பிணை விழியாற்றலொன்றும் வற்புறைக்கும், பாகனொடு சொல்லலும் மேகத்தொடு சொல்லலுமாகிய இரண்டும் வரும்வழிக் கலங்கற்கும், வரவறிவுறுத்தல் முதலாகிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்குமுரியன.

18-வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் முற்றிற்று.

முதலாவது களவியல் முற்றிற்று.
___________


இரண்டாவது வரைவியல்.

அஃதாவது – தலைவன் தலைவியைக் குரவர் முதலாயினோர் கொடுப்பவுங் கொடாதொழியவும் கற்பிற்குநிமித்தமாகிய வதுவைச் சடங்கொடு பொருந்தி மணஞ்செய்துகோடல்; ஆதலாலிதுகற்பின் பாற்படுமென்க; இவ்வரைவு-வரைவு மலிவும் அறத்தொடு நிற்றலுமாகிய இரண்டுவகைப்படும்; அவற்றுள்,

பத்தொன்பதாவது.-வரைவு மலிவு.

அஃதாவது-வரைவு தொடங்கி நடக்கு முயற்சிமிகுதல்; அது- வரைவு முயல்வுணர்த்தல் வரைவெதிர் வுணர்த்தல் வரைவறிந்து மகிழ்தல் பராவல் கண்டு வத்தலென நான்கு வகைப்படும்; அவைவருமாறு:-

காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தனவிலையாகத் திரவியங் கொடுத்ததைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

    கடமே நிகரிளங் கொங்கைக்குத் தோற்றுன் கடைத்தலைமுன்
    வடமேரு வந்து வணங்குகை போல்வட காளிந்திபாற்
    குடமேய மேய்த்த குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றடமேய தோணம்ப ரீந்தார் முலைவிலை தாழ்குழலே. (326)

காதலி நற்றா யுள்ள மகிழ்ச்சி யுள்ளல்.

(இ-ள்.) தலைவன் விடுத்த முலைவிலைப் பொருள்களைக்கண்டு நம்மகட்கு மணஞ்செய்யுங்கால‌மென்று நற்றாய் மகிழுமுள்ளத்து மகிழ்ச்சியைப் பாங்கி நினைத்துக் கூறுதல்.

    கற்றார்க்கு வள்ளல் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    செற்றார் தொழுமன்னர் செங்கையி னாற்செழும் பான்முலையைப்
    பற்றார் குழவி தனைப் பெறுந் தாய்நம் பதமணிந்தா
    னற்றாய் மகிழ்வு திருத்தாய் மகிழ்வினனி பொங்குமே. (327)

பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தமர்மணங்கூறி வந்துழித் தலைவி தமர் மணமெதிர்ந்தமை பாங்கிதலைவிக் குணர்த்தல்.

    முன்னாளி னல்லறஞ் செய்தோன் முயலின் முயன்றதெல்லா
    மெந்நாளும் வந்தெய்து மாரணங் கேயெழு பார்மடந்தை
    தன்னாய கன்சங் கமன்வாழ் குலோத்துங்கன் றஞ்சை வெற்பி
    னன்னா யகற்குத் தரவிசைந் தார்நின்னை நந்தமரே. (328)

தலைமக ளுவகை யாற்றா துளத்தொடு கிளத்தல்

(இ-ள்) தலைவி மகிழ்ச்சியடங்காது நெஞ்சொடு கூறுதல்.

    வல்லா ரொருவர் துணைபெற் றுள்ளோர்க் கென்றும் வாழ்வுறுவ
    தில்லாத தோவுள்ள தென்கைகண் டாயெழு காலிங்கமுங்
    கொல்லா புரமும் பொருதோன் குலோத்துங்கன் கோழிவெற்பி
    னல்லா டவர்மணம் பெற்றனை யேயின்று நன்னெஞ்சமே. (329)

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்

    ஆரே மலையுங் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    பாரே தொழவென்றும் வாழிய நீ யெங்கள் பான்மொழிக்கிவ்
    வூரே யணிந்த வலரையெல் லாமொழி வாகக் கொய்தோ
    நீரே யணிந்த தலர்மாலை கூறு நிலமன்னரே. (330)

தலைவி மணம்பொருட்டாக வணங்கைப் பராநிலை காட்டல்

(இ-ள்) தலைவி மணம் நிமித்தமாக தெய்வத்துக்குச் சிறப்புச் செய்து வாழ்த்திக்கொண்டு நிற்கு நிலையைப்பாங்கி தலைவனுக்குக் காட்டுதல்.

    உள்ளாசைத் தீயு முயிர்ப்பும்வெங் காம னுயிர்த்தவம்புந்
    தெள்ளாவிப் பூவெனத் தெய்வமுன் னேதினந் தாழ்தலைப்பார்
    புள்ளாரமாலைக் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    வள்ளா லுனது மணம்பொருட் டாலெங்கள் வாணுதலே. (331)

இதுவுமது

    யாதேனுந் தெய்வத்தி னெய்தா திராதென்று தேறியெங்கள்
    மாதே யணங்கை வணங்குகை பார்மது ரித்ததொ்ன்னூல்
    காதே மணக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
    நீதேனும் வண்டு மெனக்கூடுங் கூடலி னேயங் கொண்டே. (332)

கண்டோன் மகிழ்தல்.

(இ-ள்) தலைவி தெய்வத்தை வாழ்த்துதலைக் கண்ட தலைவன் மகிழ்தல்.

    கொத்தார மாலைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மைத்தாரைக் கண்ணி யணங்கினை யேமணம் வேண்டியிரு
    கைத்தா மரையுங் குவிவாக நோக்கியென் காதலுள்ள
    மெய்த்தா மரையும் விரிவாக்கியதென் விளம்புவதே. (333)

இவற்றுள்-காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தலும் தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டலுமாகிய விரண்டும் வரைவு முயல்வுணர்த்தற்கும் , பாங்கி தமர்வரை வெதிர்ந்த மை தலைமகட்குணர்த்தலாகிய வொன்றும் வரைவெதிர் வுணர்த்தற்கும், நற்றாயுள்ள மகிழ்ச்சியுள்ளலும் உவகையாற்றாதுளத் தொடுகிளத்தலுந் தலைவனைப் பாங்கிவாழ்த்தலுமாகிய மூன்றும் வரைவெதிர்ந்துமகிழ்தற்கும், தலைமகளணங்கைப்பராநிலைகண்டோன் மகிழ்தலாகிய வொன்றும் பராவல் கண்டுவத்தற்கு முரியன.

இதுவரை ஐம்பத்தொன்றாநாள் நிகழ்ச்சி.

19-வரைவு மலிவு முற்றிற்று.
------------------------

இருபதாவது-அறத்தொடு நிற்றல்.

அஃதாவது-களவை முறையே வெளிப்படுத்தி நிற்றல். முறையே வெளிப்படுத்தி நிற்றலாவது, தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்றல். பாங்கி செவிலிக்கறத்தொடு நிற்றல். செவிலி நற்றாய்க் கறத்தொடுநிற்றல். நற்றாய் தன்னையர்க் கறத்தொடு நிற்றலெனக் கொள்க. அறத்தொடு நிற்றற்குப் பொருள், முறையே வெளிப்படுத்தி நிற்றலென்பது; இப்பொருள் எவ்விடத்திற்கு மாகாது இவ்விடத்திற்கு மாத்திரமென்று
கொள்க; அது-முன்னிலை முன்னிலைப்புறமொழியென இருவகைபடும், அவை வருமாறு:-

கையறு தோழி கண்ணீர் துடைத்தல்.

(இ-ள்) கிளவுப் புணர்ச்சியால் மிகவும் அலரெழுதல் கண்டு தந்தையர் முதலாயினோர் வெறுப்புற்ற தறிந்த தலைவன் பிரிந்தேக, அப்பிரிவாற்றாமையாலழுது கொண்டிருந்த தலைவியை ஆற்றிக் கையற்ற தோழி யருகிருந்து கண்ணீர் துடைத்தல். கையறல்-செயலறல்.

    நீலமுத் தாகவு நீலமுத் தானின் முலையின்முத்தின்
    கோலமை நீலம தாகவு மேகுன்ற மேந்தியன்று
    சாலமை காத்த திருமால் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    காலமை வேல்விழி யாய்மொழி யாய்வந்த காரணமே (334)

கலுழ்தற்குக் காரணங் கூறல்.

(இ-ள்) தலைவி யழுதற்குக் காரணஞ் சொல்லுதல்.

    கனவே யொருவர்; புணரப் பொருந்துமென் கண்கள்விழித்
    தனவே நினைந்து கலுழ்கின்ற னன்றருக் காடுருகப்
    புனவே யிசைத்த குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    வனவே யனையபைந் தோளாய் பிறிதில்லை வாட்டங்களே. (335)

தலைவன் தெய்வஙகாட்டித் தெளிப்பத் தெளிந்தமை யெய்தக்கூறல்

(இ-ள்) தலைவன் றெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல மெய்யென்று தெளிந்த அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறுதல்.

    அரிகாட்டு மாலைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    சரிகாட்டுந் தோளணங் கேதெளிந் தேன்றமி யேன்மறவேன்
    வரிகாட்டும் வண்டுசெந் தேன்மறந் தாலு மறேனெனமுன்
    கரிகாட்டு மென்றவர் தாந்தெய்வ மேகரி காட்டியதே. (336)

இறைவி தலைவ னிகந்தமை யியம்பல்

(இ-ள்) தலைவி தலைவ னீங்கினமை பாங்கிக்குக் கூறுதல்.

    கையோடி யொன்றணங் கேதெய்வங் காட்டக்கை யொன்றெனது
    மையோதி வைத்ததெண் ணாதகன் றார்மனம் வாக்கிரண்டு
    செய்யோ னுறந்தைக் குமார குலோத்துங்க சென்னிவெற்ப
    ரையோபொய் யாரென்று நாந்தேறுகைநம் மறிவின்மையே. (337)

பாங்கி யியற்பழித் துரைத்தல்.

(இ-ள்) தலைமகனியலைப் பாங்கி பழித்துக் கூறுதல்.

    வையம் புரக்குங் குமார குலோத்துங்கன் வாழுறந்தைக்
    கொய்யம் புயமனைக் கொம்பனை யாய்கொண்ட காதல்கண்டு
    மெய்யன்ப ரென்றிருந் தேமவர் தாம்வந்து மெள்ளமெள்ளப்
    பொய்யன்ப ராகிவிட் டாரினி யாரன்பைப் போற்றுவமே. (338)

தலைமக ளியற்பட மொழிதல்

(இ-ள்) அங்ஙனங் கூறக்கேட்ட தலைமகள் தலைமகனியற்கை யோரியல்புபட மொழிதல்.

    அலைக்குந் துயரத்தி னெஞ்சுக்குந் துஞ்ச லயர்த்தவென்கண்
    ணிலைக்குந் தலைவர் பிரிந்த கலார்நிக ரார்நகரங்
    குலைக்குந் தடக்கைக் களிற்றான் குலோத்துங்கன் கோழிவெற்பின்
    முலைக்குங் கொடுங்கைக்கு மெய்தார்மின் னேயென் முதல்வினையே. (339)

தெய்வம் பொறைகொளச் செல்குவ மென்றல்.

(இ-ள்) தலைவர் தெய்வத்தின்மேற் பிரியேனென்றாணை கூறிப் பிரிந்துபோனா ராதலால் அத்தெய்வம் சீறாதபடி அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தாரல்லர் நீ பொறுத்துக்கொள்ளென்று வேண்டிக் கோடற்கு இருவேமும் போதுவேமென்று தலைவி பாங்கியுடன் கூறுதல்

    நறுப்பா லடிசிலைப் பூவொடு தூவி நமைநம்பிரான்
    பிறிப்பாவ தில்லையென் றோதும்பொய் யாணையைப் பேரழகி
    னுறுப்பான் மதனன் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    பொறுப்பா யினித்தெய்வ மேயென்று வேண்டுவம் போயணங்கே. (340)

இல்வயிற் செறித்தமை செப்பல்

(இ-ள்) தலைவி தன் மெய் வேறுபட்டாலும் ஊரிலுள்ளா ரலர் தூற்றுதலாலும் நற்றாயுளத்தில் வெறுப்பாகி மனையிடத்திலென்னைக் காவல்செய்தாளென்று பாங்கிக்குக் கூறுதல்.

    தேவும் பகையுஞ் சிறுகாலு மாவியுஞ் சீரணுவு
    மேவும் பிறவும் புகாதணங் கேவிண்ணு மண்ணுமெல்லாந்
    தாவும் பெரும்புகழ்ச் சோழன் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    வாவுந் துயரத் தெனையனை காக்கு மனையென்பதே. (341)

செவிலி கனையிரு ளவன்வரக் கண்டமை கூறல்

(இ-ள்) செவிலித்தாய் செறிந்த இருட்குறியிடத்துத் தலைவன் வரக் கண்டாளெனத் தலைவி பாங்கிக் குணர்த்தல்.

    தண்டா மரைகயல் சங்கிவை மூன்றன்பர் தாட்குறியிற்
    கண்டா ளெனையன்னை காய்ந்துசொன் னாள்கரு நாடம்வங்கங்
    கொண்டாளுங் கிள்ளி குமார குலோத்துங்கன் கோழிவெற்பில்
    விண்டாளுந் தோளி வயலுக்கல் லாதில்லை வெற்புக்கென்றே, (342)

செவிலி தலைமகள் வேற்றுமைக் கேது வினாதல்.

(இ-ள்) செவிலித்தாய் தலைவியின் தவயவ வேறுபாட்டுக்குக் காரண மென்னையென்று பாங்கியைக் கேட்டல்.

    மலராத தாமரை பொன்பூத் தனமல ராங்குவளை
    புலராத முத்தினம் பூத்தன வாற்புவி காக்குமனு
    குலராச சங்கம ராச குலோத்துங்கன் கோழிவெற்பி
    லலரார ணங்குக்கென் னோபுனங் காவ லகன்றபின்னே. (343)

பாங்கி வெறிவிலக்கல்.

(இ-ள்.) செவிலித்தாய் வெறியாட்டாளனையழைத்து மகட்கு நோயுற்றவாறும் அதுதீருமாறுஞ் சொல்லவேண்டுமென்று கேட்புழித் தெய்வம் வந்தாடும்போது பாங்கி அத்தெய்வத்தை யாடவேண்டாவென்று விலக்குதல். வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தாற் றீருமென்புழி அவ்வாட்டைக் கொல்லாமல் விலக்கலெனினு மமையும்.

    நடைத்தலை யன்னமன் னீர்பர வேந்தர் நடுங்கச்சங்கங்
    கடைத்தலை யார்க்குங் குலோத்துங்க சோழன்கல் யாணியன்னாட்
    குடைத்த கருங்கட லொப்பா மயல்வெள்ள முண்பனவா
    மடைத்த கரையுடைத் தானிற்கு மோநும் மறிவின்மையே. (344)

வெறி விலக்கியவதனாற் செவிலி பாங்கியை வினாதல்.

(இ-ள்.) வெறியாடல் விலக்கிய காரணத்தைப் பாங்கியுடன் செவிலித்தாய் கேட்டறிதல்.

    மாதோ வருந்திய நோய்க்கன்னை யாடும் வழிவெறியை
    நீதோகை வந்து விலக்கினை யானெடுந் தேர்பகலின்
    போதோவல் லாக்குங் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யேதோ வறிகிலன் யானறிந் தாற்சொல் லெனக்கினியே. (345)

தோழி பூத்தரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) பூவைக் கொடுத்தனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்தித் தோழி கூறுதல்.

    குளித்தாக மூழ்கிய வேளம்பென் றேநங் கொடிக்கொருகோன்
    றெளித்தா தரவுடன் காட்டுகை போலத் திருவையுளங்
    களித்தாகம் வைக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணியன்னீ
    ரளித்தான்வெண் முல்லையுங் கஞ்சமு நீல மசோகமுமே. (346)

புனறரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) புனலாற்கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக்கூறுதல்.

    காராருங் கொல்லிக் குலோத்துங்க சோழன்கல் யாணிப்பிரா
    னீராரும் பொன்னியெம் மான்படிந் தாடலு நீண்டபொன்னிப்
    பேரா றிழுத்தமை கண்டெடுத் தானொரு பேரிறைவன்
    வாராழி வந்துதிக் குந்திரு வேந்திய மாலென்னவே (347)

களிறுதரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) யானையைத் தடுத்துக் காத்துக் கூடும்புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறுதல்.

    பொன்னார மார்பன் குலோத்துங்க சோழன் புகாரனையா
    யுன்னாரி பின்னுங் கரிமுன்னு மாவொரு தோன்றனின்று
    கொன்னார மாரிக் கணையா லதன்பெருங் கோடொடித்து
    முன்னார மாரியும் பெய்ய வென்றானம் முதுகிரிக்கே (348)

தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்.

(இ-ள்.) தலைவி வேறுபாட்டை நற்றாய் தெரிந்து அதனுண்மையைச் செவிலியைக் கேட்டறிதல்.

    மீதோ பசந்ததென் சொல்லோ கசந்தது வேல்விழியின்
    போதோ புனலைப் பொழிகின்ற தாற்பொருந் தாவரசர்
    வாதோட வோட்டுங் குலோத்துங்க சோழன் வரைக்கொல்லிவா
    யேதோ வறிகின்றி லேன்மகண் மேனி யிளைக்கின்றதே (349)

செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) முன்னிலைப் புறமொழியா லுணர்த்தாது முன்னிலை மொழியினாலே களவை வெளிப்படுத்தி நற்றாய்க்குச் செவிலி கூறுதல்.

    கூருந் தமிழ்கொள்ளுங் கிள்ளி குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    சோருந் திருவுக்குத் தோழிநல் லாயொரு தோன்றல்சென்று
    தாருங் கொடுத்தன னாம்புன லீர்ப்பவுந் தாங்கினனாஞ்
    சேருங் களிறு விலக்கின னாமென்கொல் செப்புவதே (350)

இவற்றுள்-வெறி விலக்கலொன்று முன்னிலைப் புறமொழிக்கும், ஏனைய பதினேழு முன்னிலை மொழிக்கு முரியன.

20 - அறத்தொடு நிற்றல் முற்றிற்று.
---------------------

இருபத்தொராவது-உடன்போக்கு.

அஃதாவது-தலைவன் தன்னூர்க்குத் தலைவியை யுடன்கொண்டு போதல்; அது-போக்கு கற்பொடுபுணர்ந்த கவ்வை மீட்சியென மூன்றுவகைப்படும்; அவற்றுள்-போக்காவது-போக்கறிவுறுத்தல் போக்குடன்படாமை போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல் போக்கல விலக்கல் புகழ்தல் தேற்றல் என எட்டுவகைப்படும்; அவ்வெட்டும்பாங்கி
தலைவற்குடன் போக்குணர்த்தல் முதல் தலைவன் றன்பதியடைந்தமை தலைவற் குணர்த்தலீறாகிய பதினெட்டு விரிப்படும்; அவைவருமாறு:-

பாங்கி தலைவற் குடன்போக் குணர்த்தல்.

(இ-ள்) காவலதிகப்படுதலால் தலைவியை யுன்னூர்க் குடன் கொண்டுபோதியெனப் பாங்கி தலைவனுக்குக்கூறுதல்.

    வள்ளா லிவளை யெளிதிற் கொடாரெமர் மாநகர்க்குப்
    புள்ளாடு கண்ணி யுடனடப் பாய்புக ழாம்பழியு
    நள்ளாது கற்பு மிதுவே குலோத்துங்க னாகைவெற்பிற்
    கொள்ளாரிம் மங்கை முலைவிலைக் காவண்ட கோடியுமே. (351)

ஆங்கவன் மறுத்தல்

(இ-ள்) தலைவிகொடிய பாலையில் நடக்கச் சகியாளென்று தலைவன் தடுத்துக் கூறுதல்.

    செவ்விய கான்பெறு மின்சீ றடிசெல்லு மாறெங்ஙனே
    வவ்விய மாகடல் வந்தவித தாலுங்கை வாளினிறபோய்
    நவ்வியை வீழ்த்த சிலையான் குலோத்துங்க னாகைவெற்பில்
    வெவ்விய பாலை யவியாது போவதென் மெல்லியலே. (352)

போக்குடன் படுத்தல்

(இ-ள்) தலைவியைத் தலைவன் கூட்டிப்போதற்குப் பாங்கியுடன் படுத்திக் கூறல்.

    கயலார் வயலள கேசன் குலோத்துங்கன் காவிரிநாட்
    டுயலாந் துணையைய நீயன்றி யாரொரு நாடபிரியு
    மயலார் கனவிலு மையல்கொண் டாண்மடக் கன்னியென்னு
    மயலார் கடுஞ்சொல் லினுஞ்சுடு மோவவ் வருஞ்சுரமே. (353)

தலைவன் போக்குடன் படுதல்.

(இ-ள்) தலைவன் தலைவியை யுடன்கொண்டுபோதற்குச் சம்மதித்தல்.

    பன்னா ளினும்வருந் தீமைக்கு மேங்குஞ்செம் பஞ்சுமஞ்சு
    மின்னாள்செஞ் சீறடி மென்மைக்கு மேங்கும் விரைககமலப்
    பொன்னாவி யன்ன குலோத்துங்க சோழன் புகாரனையாய்
    சொன்னா லிரண்டினும் வெஞ்சுரம் போகை துணிந்தனனே (354)

பாங்கி தலைவிக் குடன்போக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவனுடன் தலைவி போதலை யவளுக்குப் பாங்கி கூறுதல்.

    கிளிக்குஞ் சிறியமென் பூவைக்கு மானுக்குங் கிண்ணவமு
    தளிக்கும் பெயரெவர் நாளைக்கென் றாரம ராரைவென்று
    களிக்குங் களிற்றுக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லொளிக்குங் குமமுலை யாய்தெரி யாதன்ப ரோதியதே (355)

தலைவி நாணழி விரங்கல்.

(இ-ள்.) உடன் போக்கில் நாணழியுமேயென்று அதற்குத் தலைவி வருந்துதல்.

    ஏர்க்குந் தலைவ ருடன்போகு மன்புக்கென் னாணழியிற்
    சீர்க்குந் தகைமையிற் பெண்மையென் னாநதிசை நாலிரண்டும்
    போர்க்குங் கவிகைக் குலோத்துங்க சோழன் புகாரனையா
    யார்க்குந் தனுவிற் படுநாணன் றோகுண மாவதுவே. (356)

கற்பு மேம்பாடு பாங்கி கழறல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி கற்பின் பெருமை கூறுதல்.

    சீதையச் சந்த்ர மதியத் திரௌபதி செல்வர்பின்போங்
    காதையிற் கேட்டது கற்பென்ப ரோகம லாலயத்துக்
    கோதைபொற் கேள்வன் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லோதையிற் பாரவர் நாணென்ப ரோவெனக் கோதணங்கே (357)

தலைவி யொருப்பட் டெழுதல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் துணிந்துபோகச் சம்மதித்தல்.

    அன்னேயன் னேயென் றெனைத்தேடி நைந்தழும் பூவைகிள்ளை
    நன்னேயஞ் செய்யுநின் கையடை காணறுங் கோகனகப்
    பொன்னே மணக்குங் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்க்
    கொன்னே பருந்திற்கும் பூசைக்குங் காத்தருள் கோமளமே. (358)

பாங்கி சுரத்தியல் புரைத்தல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாலைநிலத்தின் கொடுமையைப் பாங்கி கூறுதல்.

    பாதாள நாகர் முடிபதைப் பாகப் படுங்கமர்வாய்த்
    தீதாவி யோடிச் சுடுநெடும் பாலையிற் செந்தமிழ்க்கோ
    ராதார மன்னன் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    காதார் விழியணங் கேநீகொ லோமர்க் கால்வைப்பதே. (359)

சுரத்தியல் புரைத்துழிச் சொல்லல்.

(இ-ள்.) பாலையின் கொடுமை கூறிய தோழிக்குத் தலைவி கூறுதல்.

    கொலையார் மதன்கையுந் தாயார்தம் வாயுங் கொடிதடுக்குந்
    தொலையா வலரினும் யானெங்கும் பார்க்கினுஞ் சொல்லுமெண்ணெண்
    கலையா தரனெங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    மலையா நிலத்தினுங் காயுங்கொ னீசொன்ன வன்சுரமே. (360)

பாங்கி கையடை கொடுத்தல்.

(இ-ள்.) தலைவனுக்குத் தலைவியைப் பாங்கி யடைக்கலங் கொடுத்தல்.

    தேவேசன் விற்குனிந் தாலென்ன நாகச் செழும்படங்கை
    மாவேயுங் கொங்கைகள் கண்பார்க் கினுமனை வேண்டத்தெய்வக்
    காவே பெயர்த்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    கோவே யிவளையென் றும்மின்று போலன்பு கூர்ந்தருளே. (361)

பாங்கி வைகிருள் விடுத்தல்.

(இ-ள்.) இருளார்ந்த இடையாமத்திற் பாங்கி தலைவியைத் தலைவனுடன் விடுத்தல்.

    மலர்வாய்க் குமுதங் குவிகா லையிற்குன்ற மாநகர்வா
    யலர்வாய்க் குமுதங் குவிவிததி யானு மடிவணங்காக்
    கலர்வாய் கிழிக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    புலர்வா யிராதுநின் பின்வரு வேன்சுரம் பூங்கொடியே. (362)

இதுகாறும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென்றுணர்க.

தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப் பாலையிற் செலுத்துதல்.

    அவைகா ணினைக்கண்ட தண்டலை நீபக லாடுமிட
    முவைகாண் குடையுஞ் சுனையுவை காணுரை வாணர்தங்க
    ணவைகாணின் மாற்றுங் குமார குலோத்துங்க னாகைவெற்பி
    லிவைகாண் பெருஞ்சுர மஞ்சா தெழுந்தரு ளேந்திழையே (363)

தலைமக ளசைவறிந் திருத்தல்.

(இ-ள்.) தலைவியினது வருத்தத்தையறிந்து தலைவ னவளுடனிருத்தல்.

    கனையே யெழுந்தழ லாலொரு மூன்று கமலமுமுத்
    தினையே யரும்பின காவிருந் தேகுவம் ரத்நவடம்
    புனையேய் புயத்தன் குலோத்துங்க சோழன் புகாரனையாய்
    வினையேன் பொருட்டி னருமந்த மேனி மெலிந்தனையே (364)

உவந்தலர் சூட்டி யுண்மகிழ்ந் துரைத்தல்.

(இ-ள்.) தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு மலரைச்சூட்டி யதனாற் பரவசமகிழ்ச்சியடைந்து கூறுதல். உவகை - அறிவொடு கூடியது, மகிழ்ச்சி-அறிவழிந்தது. என்னை? "உள்ளக்களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற்குண்டு" என்னுந்திருக்குறட்குப் பரிமேலழகர் கூறிய வுரையானு முணர்க.

    நாவா யலரைக் கனலா மெனநடந் தாய்சுரத்திற்
    காவா யலரிற் கனலாறு மாறுகல் யாணிபுரக்
    கோவாய சங்கம ராச குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    பாவா யுனக்கணிந் தேன்வினை யேன்முன்செய் பாக்கியமே (365).

கண்டோ ரயிர்த்தல்.

(இ-ள்.) வடிவின் மேம்பாட்டாற் றலைவனையுந் தலைவியையுங் கண்டோரைய முறக்கூறுதல். கண்டோர் - பாலைநிலத்தெயிற்றியர்.

    சேலோடும் வாவி யுறந்தைக் குலோத்துங்கன் சேரவரைப்
    போலோ ரிருவர் வருபவ ராரப் புரவலனு
    மாலோ னெனிலவ ளுந்திரு வாமெனின் மற்றிவர்க்குக்
    காலோ வுவணத்தல் லால்வருந் தாதிந்தக் கானடந்தே. (366)

கண்டோ ரிரங்கல்.

(இ-ள்.) அங்ஙனம் ஐயுற்றோர் வருந்திக் கூறுதல்.

    செவ்வாயு மார்பின் முலையோ நிரம்பிலள் செல்வனுடன்
    வெவ்வா யழற்சுரம் போந்தன ளான்முந்தை வேந்தருக்கா
    யவ்வா றழைத்த குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    லெவ்வாறுய்ந் தாரிவ ரன்னைய ராய விருவருமே. (367)

காதலின் விலக்கல்.

(இ-ள்) மேற்கூறிய கண்டோர் ஆசையுடன் இங்கிருந்து நாளைப் போகலாமென்று வழிச்செலவு விலக்குதல்.

    வெயிலோ விழுந்த திருளோ வளைந்தது மேனடக்கின்
    மயிலோமென் சீறடி வாடிநை வாண்மரு வார்வெருவ
    வயிலோட விட்ட குலோத்துங்க சோழ னளகைவெற்பா
    வெயிலொ வளைந்தவெம் மூர்வைகி நாளை யெழுந்தருளே (368)

தன்பதி யணிமை சாற்றல்.

(இ-ள்.) இவ்விடத்தில் வைகிப்போதல் வேண்டுமென்ற தலைவிக்குத் தலைவனுடைய பதி சமீபத்திலுள்ளதென்று கண்டோர் கூறுதல்.

    காளந் தருகண் ணியுமண்ண னீயுமிக் கானகன்றா
    னீளம் பெரிதில்லை காதமுண் டாலது நீங்குதலுந்
    தாளம் புயமடு வுங்கடி காவுந் தடம்பொன்னியுஞ்
    சோழன் குலோத்துங்கன் றஞ்சையுங் கோழியுந் தோன்றுமின்றே (369)

தலைவன் றன்பதியடைந்தமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

    தூவியந் தோகை யனையாய்நை யேல்சுரம் போயதிப்பாற்
    காவியுங் கானுங் கமலமுஞ் சேலுங் கரும்புஞ்சங்குந்
    தீவிய சாலியும் வேலியுங் காவிரித் தீம்புனலு
    மாவியுங் காவுங் குலோத்துங்க சோழ னளகையுமே. (370)

இவற்றுள்- பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தலும் தலைவிக்குடன் போக்குணர்த்தலுமாகியவிரண்டும் போக்கறிவுறுத்தற்கும், தலைமகன் மறுத்தலும் தலைவி நாணழிந் திரங்கலுமாகிய விரண்டும் போக்குடன் படாமைக்கும், பாங்கி தலைவனையுடன்படுத்தலும் தலைவிகற்பு மேம்பாடு பாங்கி கழறலுமாகிய விரண்டும் போக்குடன் படுத்தற்கும், தலைவன் போக்குடன்படுத்தலும் தலைவியொருப் பட்டெழுதலும்பாங்கி சுரத்தியல் புரைத்துழிச் சொல்லலுமாகிய மூன்றும் உடன்போக்குடன் படுதற்கும், பாங்கி கையடை கொடுத்தலும் வைகிருள் விடுத்தலும் தலைமகன் தலைமகளைச் சுரத்துய்த்தலுமாகிய மூன்றும் போக்கற்கும், தலைவன் தலைவியசைவறிந்திருத்தலும் கண்டோர் காதலின் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், தலைவன் தலைவியை யுவந்தலர் சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தலும் கண்டோரயிர்த்தலுமாகியவிரண்டும் புகழ்தற்கும், கண்டோர் தன்பதியணிமை சாற்றலும் தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக் குணர்த்தலுமாகிய விரண்டுந் தேற்றற்குமுரியன. சுரத்தியல் புரைத்தல் - சுரத்தியல் புரைத்துழிச் சொல்லலினுங், கண்
டோரிரங்கல் - கண்டோரயிர்த்தலினு மடங்குமென்க.

21-உடன் போக்கு முற்றிற்று.
_______________

இருபத்திரண்டாவது - கற்பொடு புணர்ந்த கவ்வை.

அஃதாவது - தலைவி தலைவனதுடைமையாய்க் கற்பொடு கூடிய அதனை அயலார் விராய சேரியர் பலருமறிதல்; அது – செவிலிபுலம்பல் நற்றாய்புலம்பல் மனைமருட்சி (நற்றாய்மருட்சி) கண்டோரிரக்கம் செவிலி பின்றோடிச்சேறல் என ஐந்துவகைப்படும்; அவை வருமாறு:-

செவிலி பாங்கியை வினாதல்.

(இ-ள்.) தலைவியைத் தேடிக் காணாமற் செவிலி பாங்கியைக் கேட்டல்.

    திருமானு நீயும் நெருந லிராத்தென்றல் வேட்டனமென்
    றருமா மனைமுன்றிற் றுஞ்சினி ரேயன்று மாரிசனா
    மொருமானை யெய்த குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    கருமான் விழியெங்ங னேகினள் காண்கிலன் காரிகையே. (371)

பாங்கி செவிலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் சென்றதைப் பாங்கி செவிலிக்குக் கூறுதல்.

    அன்னே முலையின் விலைக்கேபொன் மாமலை யாகத்தந்து
    மென்னே நமர்தந் திலாமையி னாலிரப் போர்க்கரத்திற்
    பொன்னே பொழியுங் குலோத்துங்க சோழன் புகாரனையாய்
    முன்னே கரியைவென் றார்பின்சென் றாளம் முதுசுரத்தே. (372).

பாங்கியி னுணர்ந்த செவிலி தேற்றுவோர்க் கெதிரழிந்து மொழிதல்.

(இ-ள்.) வெளி, அழிந்து கூறல்-நொந்து கூறுதல்.

    பொய்யாத பொன்னிக் குலோத்துங்க சோழன் புகாரனையீர்
    செய்யா தொழிதுன்பம் வஞ்சிக்கென் பீர்வஞ்சி சீறடிக்கென்
    றொய்யா முலைமுக மோமடி யோமடி சூழ்மருங்கோ
    கையோ மலரணை யோமழை வேகின்ற காய்சுரமே. (373)

செவிலி் தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தல்.

(இ-ள்,) தலைவி போதற்குத் தன் குறிப்பினா லறிவித்த தன்மையை யறிந்திலேனென்று தன்னறிவின்மையை நொந்து செவிலி கூறுதல், நோதல்-வருந்துதல்.

    புள்ளும் பெடையுடன் போவது நோக்கென்றும் போற்றுகின்ற
    தெள்ளுங் கிளிநவ்வி நாளையுன் காப்பென்றுந் தெவ்வரசைக்
    கொள்ளுந் திறையன் குமார குலோத்துங்கன் கோழியன்னா
    ளுள்ளுங் குறிப்புரைத் தாள்பேதை யெனஃ தோர்ந்திலனே. (374)

செவிலி தெய்வம் வாழ்த்தல்.

(இ-ள்.) தலைவிக்கு இடையூறு நிகழாவண்ணந் தெய்வத்தைச் செவிலி வாழ்த்துதல்.

    ஏகாமை செய்திலை யேதெய்வ மேசுரத் தேகுங்கொம்பை
    வேகாமை யிங்குவை மீள்பணி வேன்வியன் பார்கலியுட்
    போகாமை காக்குங் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யாகாமை செய்தவ ராமாறுஞ் செய்வர்பின் பாருக்குமே. (375)

இவ்வைந்தும் செவிலி புலம்பலின் விரியென்க.

செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) செவிலி நற்றாய்க்குத் தலைவி தலைவனுடன் போக்கை வெளிப்படுத்திக் கூறுதல்.

    பொற்றோகை கேள்வன் குலோத்துங்க சோழன் புகாரனையா
    யெற்றோ விளம்பரு வத்தினம் பாவங்கொண் டேகுதலு
    மற்றோர்கை மாதங்கங் கண்டீய நாமறுத் தேமெனமுன்
    னுற்றோர்கை மாதங்கம் வென்றோர்பின் னேகின ளுன்மகளே. (376)

நற்றாயிரங்கல்

(இ-ள்) நற்றாய் வருந்திக் கூறுதல்.

    மையோதி யார்முடிப் பார்பசிக் கார்வந் தமுதளிப்பார்
    மெய்யோடு வேர்துடைத் தாற்றுவ ரார்வெள் வளைதிருத்துங்
    கையோரங் கார்நங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லையோ சுரத்தணங் கேநினக் கார்வண்ட லாடுதற்கே. (377)

நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல்.

(இ-ள்) நற்றா யுயிர்த் பாங்கியுடன் வருந்திக் கூறுதல்.

    பற்றிலை வேற்கைக் குலோத்துங்க சோழன் பனிக்கொல்லிவாய்ப்
    பெற்றிலைவஞ்சம் பெறாமையை நீபெண் மகவெனக்கு
    மற்றிலை யொன்றென்ப தேயறி வாயிவ் வகையறிந்துஞ்
    சொற்றிலை யேமக ளேசுரம் போக்கினை தோகையையே. (378)

நற்றாய் பாங்கியர் தம்மொடு புல்பல்.

(இ-ள்) நற்றாய் பாங்கியருடன் வருந்திக் கூறுதல்.

    மதிநீங்கு தாரகை யுங்கஞ்ச நீங்கு மலருங்கங்கை
    நதிநீங்கு மாறுமொப் பாயினி ரோவொரு நாற்கவிஞர்
    நுதிநீங் கரிய வுறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பதிநீங்கி யெனகொடி தான்சுரம் போனபின் பாங்கியரே. (379)

நற்றா யயலார் தம்மொடு புலம்பல்

(இ-ள்) வெளி

    நாகா பரணனை யேத்துங் குலோத்துங்க னாகைவெற்பின்
    மாகா தலியைப்பெற் றேமென்னு மோகையின் வாரிதியைத்
    தீகாய் சுரஞ்சென்ற சோகா னலமுண்டு தீர்த்ததினி
    யாகாது பெண்மக வாசையெல் லார்க்கு மயலவரே. (380)

நற்றாய் பயிலிடந் தம்மொடு புலம்பல்

இ-ள்) தலைவி பழகி விளையாடு மிடங்களோடு நொந்து நற்றாய் வருந்திக் கூறுதல்.

    சங்கா ழியைக்கடை கையான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    பொங்கார வெண்ணகை யாடிடங் காள்சுரம் போனவளுக்
    கெங்காத லுந்தன் னினங்கா தலும்விட் டிணைபிரியா
    வுங்கா தலுமின்றொ ரேதிலன் காத லொழிவித்ததே. (381)

இவ்வாறும் நற்றாய் புலம்பலின் விரியென்க.

நிமித்தம் போற்றல்

(இ-ள்) தலைவி வருதற்குத் தக்க சகுனத்தைத் துதித்து நற்றாய் கூறுதல்.

    கூர்க்கும் பலிதரு வேன்கொடி யேயென் கொடிதிரும்ப
    வேற்கும் படிகரைந் தென்னுயிர் தாவிருங் கூற்றிலங்கை
    யூர்க்குமுன் னேவுங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பி
    லார்க்குமங் காக்கையன் றோவுயிர் தாங்கு மகிலத்திலே. (382)

சுரந் தணிவித்தல்.

(இ-ள்) தலைவிக்குப் பாலைநிலத்தின் வெப்பந்தணியுமாறு நற்றாய் பிரார்த்தித்தல்.

    பெம்மா னுதற்கண் வலக்கணு மாஞ்சுரம் பின்னிடக்கண்
    ணெம்மானுக் காக வினித்தெய்வ மேயிந்த்ர தாருவஞ்சுங்
    கைம்மான துங்கன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    செம்மா னறுமலர்ச் சீறடிக் காம்படி சிதளமே. (383)

தன்மகள் மென்மைத்தன்மைக் கிரங்கல்.

(இ-ள்) நற்றாய் தன்மகள் மெல்லியதன்மைக்கு இரங்கிக் கூறுதல்.

    பஞ்சா னதுசுடு மென்றஞ்சிச் சாளரம் பாய்நிலவு
    நெஞ்சாரப் பஞ்சென் றதுமிதி யாய்நிக ராருயிர்க்கு
    நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன்ற னாகைவெற்பிற்
    செஞ்சாயல் வல்லியுன் மெலலடி யோசெல்லுந் தீச்சுரமே. (384)

தன்மக ளிளமைத் தன்மைக் குளமெலிந் திரங்கல்.

(இ-ள்) நற்றாய் தன்மக ளிளமைத் தன்மைக்கு மனமெலிந்து வருந்திக் கூறுதல்.

    பாரா லிடுங்கிளி பாறடும் வீழ்ந்திந்தப் பஞ்சரத்துள்
    வாராயிங் கென்றழு வாய்மக ளேமத வேழமுய்யக்
    கூராழி யேவுங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லோரா தொருவன்பின் போவைகொல் லோமுன்செ யூழ்வினையே. (385)

அச்சத் தன்மைக் கச்சமுற் றிரங்கல்.

(இ-ள்.) நற்றாய் தலைவியது வெருவுந் தன்மையை நினைந்துதான் பயமுற்று வருந்துதல்.

    மதுரேசர் தாடொழுங் கோழிக் குலோத்துங்கன் மால்வரைவாய்
    வெதிரேயுந் தோண்மக ளேயென்செய் வேன்வினை யேனினக்குக்
    கதிரேயு மம்புலி யென்றாலு மஞ்சுவை காய்புலியங்
    கெதிரே வரிலுன் னருமந்த மேனிநின் றென்படுமே. (386)

இவ்வைந்தும் மனமருட்சியின் விரியென்க.

கண்டோரிரக்கம்.

(இ-ள்.) வழியுற் கண்ட மாதர் தலைவியைநோக்கி வருந்தி யழுங்கல். இரக்கம்-அழுங்குதல்.

    தோயந் தனக்கொரு தேவீற் றிருக்குந்தொல் லாழியென்னத்
    தீயங் கடவுள்வை குஞ்சுர மோதிருத் தாமரைப்பொன்
    னாயகன் சங்கம ராச குலோத்துங்க னாகைவெற்பி
    லாயமுந் தாயு மிரங்கவப் பேதை யடிவைப்பதே. (387)

இஃதொன்றுங் கண்டோரிரக்கம்; இதற்கு விரியில்லை.

செவிலி யாற்றாத் தாயைத் தேற்றல்.

(இ-ள்.) தலைமகள் பிரிவைச் சகியாத நற்றாயைச் செவிலி தேறுமாறு கூறுதல்.

    கன்றிய லாகுலந் தீரணங் கேகட லேழுவைப்புந்
    துன்றிய வோதியைப் போய்க்கொணர் வேன்றெல்லைப் பூந்திருவை
    யொன்றிய மார்பன் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    பன்றியின் கோட்டகப்பட்டதன் றோவிந்தப் பாரெங்குமே. (388)

    அழகிய காமன் குலோத்துங்க சோழ னளகைவெற்பின்
    லிழிவழி நீர் பெய்யன் மெல்லிய லாய்வல்லி மேவுமிடம்
    பழகிய வாலிலை யூடேகண் மூடிப் படுக்குமிளங்
    குழவியின் வாய்ப்பட்ட தன்றோசென் றேகிக் கொணர்வனின்றே. (389)

இதுவுமது.

    தண்டுஞ் சிவிகையும் பாய்மாவும் பொன்னுந் தமிழ்க்குதவுங்
    கண்டன் புகார்வரைக் காரிகை யேகழு நீரின்முன்
    முண்டுண் டெனக்குறி காட்டியன் றைவர்க் குயிரளித்த
    வண்டுண் டுமிழ்ந்ததன் றோவணங் கேயிந்த வையகமே. (390)

ஆற்றிடைமுக்கோற் பகவரை வினாதல்.

(இ-ள்.) செவிலி தேடிப்போங்கால் வழியிடையெதிர்வருந்திரி தண்டமுடைய அந்தணரை வினாவுதல்.

    மைக்கோ லெனுங்கண் ணியுமொரு காளையும் வந்துமது
    மெய்க்கோலங் கைதொழப் போந்தன ரோவெழு மேதினிக்குங்
    கைக்கோல் செலுத்துங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    முக்கோலி னாலைந்து கோலைவென் றேசென்ற முன்னவரே. (391)

மிக்கோ ரெதுக் காட்டல்.

(இ-ள்.) செவிலி வினாயதற்கு உயர்ந்தோர் அஃது உலகவியல்பென்று காரணங்காட்டிக் கூறுதல்.

    ஞானா கரனெங் குமார குலோத்துங்க னாகைமின்னே
    மீனார் விழியையென் னாடிநை வாய்விரி வாரிமுத்தந்
    தேனா ரமுதங் கரும்பாகின் பாற்சுவை தேமலருந்
    தானாகப் பூண்பவ ருண்பவர் வேய்பவர் தாங்கொள்வரே. (392)

எயிற்றியோடு புலம்பல்.

(இ-ள்.) செவிலி பாலைநிலத்துப் பெண்ணொடு வருந்துதல்.

    கலியின் பயந்தெறுஞ் சோழன் குலோத்துங்கன் காவிரிநாட்
    டொலியின் சுரத்தென் கொடிவந்த தோவொதி லார்குரவம்
    புலியின்பீற் றாலிசெங் குன்றியம் பூணுடைப் பூந்தழைமேன்
    மலியுந் திலதந் தரித்தாரஞ் சாத்து மடக்கொடியே. (393)

குரவொடு புலம்பல்.

(இ-ள்.) செவிலி குராமரத்தொடு வருந்துதல்.

    கானீன்ற மாலைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    றேனீன்ற தாரொரு காளைபின் னேயிந்தத் தீநெறிக்கே
    யானீன்ற பாவைவந் தாற்குர வேயிடை நீக்கிலைநீ
    தானீன்ற பாவையுண் டாயுமுண் டோவித் தறுகண்மையே. (394)

சுவடுகண் டிரங்கல்.

(இ-ள்.) நிலத்தின்மேற் காலழுந்திய குறியைச் செவிலி கண்டிரங்கிக் கூறுதல்.

    முன்போன பேரடி யம்மன்னன் பேரடி முன்னதற்குப்
    பின்போன சீறடி நம்பாவை சீறடி பேருலகைத்
    தன்போ னடாத்திய சென்னி குலோத்துங்கன றஞ்சைவெற்பின்
    மன்போரி னாண்மைக் கிடைந்தோடி னாரடி மாவடியே. (395)

கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்.

(இ-ள்.) உடன் போக்குப்போய தலைவனுந் தலைவியும்போல அன்புகலந்து வழியிடை வருவோ ரிருவரைக்கண்டு செவிலிவினாதல்.

    வந்தா ரிருவரு மென்றயிர்த் தேனிந்த வண்ணமன்னு
    நந்தாத மின்னுமுன் போயின ரோநகம் போலசைந்து
    கந்தாடும் வேழக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    றந்தாயு மாயத் தவருமென் போலத் தவிக்கவிட்டே. (396)

அவர் புலம்ப றேற்றல்.

(இ-ள்.) செவிலி யிரங்கிப் புலம்புதலை யெதிர்வந்தோர் தெளிவித்தல்.

    தாங்காவி யன்னவள் கண்டாளும் யான்கண்ட தார்வள்ளலும்
    பூங்காவி யங்கண்ணி கான்கடந் தேபொரு தாவரச
    *பாங்காரந் தீர்க்குங் குலோத்துங்க சோழ னளகையுமத்
    தீங்கா விரியுநன் னாடுமிந் நேரந் தெரிசிப்பரே. (397)

செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்.

(இ-ள்.) செவிலி தன் புதல்வியைக் காணாது துன்பமிகுதல்.

    மன்னே யுறந்தைக் குலோத்துங்க சோழன் மலைக்கொல்லிவாய்
    மின்னே சுரத்திடைக் கண்டில னாலினி மீண்டும்சென்று
    முன்னே நகைக்கு மயலார்க்கெவ் வாறு மொழிவனல்லா
    லென்னே யவனைப் பெறுந்தாயைத் தேற்றி யிருத்துவனே. (398)

இவ்வொன்பதுஞ் செவிலி பின்றேடிச்சேறலின் விரியென்க.

22. கற்பொடு புணர்ந்த கவ்வை முற்றிற்று.
-----------------------------------------------------------

இருபத்து மூன்றாவது ---- மீட்சி

அஃதாவது-மீண்டு வருதல். செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும் உடன்போய தலைவனுந் தலைவியு மீண்டுவருதலு மடங்கப் பொதுப்பட மீட்சியென்றார். அது தெளிதல் மகிழ்ச்சி வினாதல் செப்பலென நான்கு வகைப்படும்; அவை தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல் முதல் நற்றாய்கேட் டவனுளங்கோள்வேலனை வினாத லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு -

தலைவி சேணகன்றமை செவிலி தாய்க் குணர்த்தல்.

(இ-ள்) தலைவி நெடுந்தூரம் போனதைச் செவிலி நற்றாய்குச் சொல்லுதல்

    சேணார் சுரமெங்கும் தேடிக்கண் டேனில்லை சேந்தனுநம்
    பூணார் முலைவல்லி யும்போய வாறுவெம் போர்விடுத்துக்
    கானா தவர்சிங்கங் கோழிக் குலோத்துங்கன் காக்கும்பொன்னிச்
    சோணாடு போயினர் கோமானு மானுஞ் சுரிகுழலே. (399)

இதுவரை ஐம்பத்துமூன்றாநாள் நிகழ்ச்சி.

தலைவன் நம்மூர் சார்ந்தமை சாற்றல்.

(இ-ள்) ஐம்பத்து நான்காநாள் தலைவன் மீட்சியில் தமதூரைத் தாஞ்சார்ந்தமை தலைவிக் குணர்த்தல். தம்மென்பது தலைவன் றலைவியரிருவரையும்.

    சுரத்தே யெதிர்த்தகைம் மாவிது நான்கண்டு தோயத்துன்னைக்
    கரத்தே யெடுத்த கரையிது காண்கண்ட நாட்புணர்ந்த‌
    விரைத்தேம் பொழிலிது ந‌ம்மூ ரிதுமெல்லச் செல்லணங்கே
    குரைத்தேன்புனற் பொன்னிநாடன் குலோத்துங்கன் கொல்லியிலே (400)

தலைவி முன்செல்வோர் தம்மோடு தன்வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுதல்.

(இ-ள்) தலைவி தனக்கு முன்னே போகும் அந்தணரிடத்தில் தன் வரவைத் தன் தோழிகட்குச் சொல்லி அனுப்புதல்.

    தென்பாற் றமிழ்தெரி சென்னி குலோத்துங்கன் றென்னுறந்தை
    யின்பாற் செலுமறை யீர்தொழு தேயெங்கள் கேள்வருடன்
    வன்பாற் சுரஞ்சென்று தம்முட னேவண்ட லாடுமந்த‌
    வன்பாற் றிரும்பிவந் தேனென்னு மாயத் தரிவையர்க்கே. (401)

முன்சென்றோர் பாங்கியர்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

    ஆறுமின் னாகுல நித்திலத் தாற்சிற்றி லாக்குமினு
    ளேறுமின் னோகை யினிமட வீரிதழ்த் தாமரையின்
    வீறுமின் கேள்வன் குலோத்துங்கன் கோழியின் மெல்லமுதாக்
    கூறுமின் மீளக்கண் டேமுயிர் போலொரு கோவுடனே. (402)

பாங்கியர் கேட்டு நற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

    மண்ணாடு காக்குங் குலோத்துங்க சோழன் வயலுறந்தைப்
    பெண்ணா ரமுதனை யாயிரங் கேல்பெருங் கானகம்போ
    யெண்ணா வழிநின் னிடரா ழியைக்குக னேவயில்போற்
    கண்ணா மயிலில் விடுவிக்க மீண்டனள் காரிகையே. (403)

நற்றாய்கேட் டவ னுளங்கோள் வேலனை வினாதல்.

(இ-ள்.) நற்றாய் தன்மகள் வரவையறிந்து தலைவனுட் குறிப்பின்னதென்று வெறியாட்டாளனைக் கேட்டல் .


    நாலுஞ் சுரும்பிமிர் தாரான் குலோத்துங்க னாகைவெற்பின்
    மாலுந் திருவுமொப் பாய்முருகீ ரெங்கண் மாநகராய்க்
    கோலுங் கடலிடத் தோவல்ல வேலந்தக் கோநகராய்ச்
    சாலுங் கடலிடத் தோமணப் பார்மன்னுந் தையலுமே. (404)

இவற்றுள்- தலைவி சேணகன்றமை செவிலி தாய்க் குணர்த்தலுந் தலைவன் றம்மூர் சார்ந்தமை சாற்றலுமாகிய இரண்டுந் தெளிதற்கும், தலைவிமுன் செல்வோர் தம்மொடு தன் வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தலும் பாங்கி நற்றாய்க் குணர்த்தலுமாகிய இரண்டும் மகிழ்ச்சிக்கும், நற்றாய் தலைமக னுளங்கோள் வினாதலொன்றும் வினாதற்கும், பாங்கியர்க்கு முன்சென்றோ ருணர்த்தலொன்றுஞ் செப்பற்கு முரியன.

23- மீட்சி முற்றிற்று.
________________

இருபத்து நான்காவது.-- தன்மனைவரைதல்

அஃதாவது: உடன்போய் மீண்டுவந்த தலைவன் றலைவியைத் தன்னூர்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின்கண் வரைந்து கோடல். அது-வினாதல் செப்பல் மேவலென மூன்று வகைப்படும்; அவை- நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்முதல் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்த லீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:-

நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்.

(இ-ள்) தலைவி நற்றாய் தனமனையின் மணஞ்செய்யும் விருப்பினாற் செவிலியை வினாவுதல்.

    கொந்துவிடாத மணமாலை நம்மனைக் கோன்புகுந்தே
    யிந்து விடாத நுதற்கிட நாநிதி யீந்தகஞ்ச
    நந்து விடாத கரத்தான் குலோத்துங்க னாகைவெற்பிற்
    சந்து விடாதொழிந் தாலென்கொ லாமினித் தாழ்குழலே. (405)

செவிலிக் கிகுளை வரைந்தமை யுணர்தல்

(இ-ள்) பாங்கி செவிலித்தாய்க்குத் தலைவன் தலைவியை மணந்தமை தூதராற் றெரிந்து கூறுதல்.

    மன்னே தமது மனைக்கேநம் மாதை வரைந்தவண்ண
    முன்னேவந் தென்னொடு தூதர்சொன் னார்மும் மதகரிக்காப்
    பொன்னேமி யேவுங் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யன்னே யுனக்கினி யிவ்வாறெவ் வாறென் றறிவிப்பதே. (406)

வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்) வெளி

    புரியார் குழலைக் குலோத்துங்க சோழன் புகாரிறைவர்
    தரியாமணந்தன ராமணங் கேயவர் தாமிருவர்
    கரியா முளரிமுன் னொன்றொடொன் றேபற்றுங் கைமுளரி
    வரியாருன் கண்ணின் முளரிகண் டேமுன் மகிழ்ந்திலையே. (407)

தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க் கியம்பு சென்றென்றல்.

(இ-ள்) விவாகமுடித்து மீண்டுவந்த தலைவன் றலைவியை விவாகஞ் செய்தமை உன் சுற்றத்தார்க்குச் சென்று சொல்லென்று பாங்கியினிடத்துக் கூறுதல்.

    அந்நாளின் மாலை யெனக்கிடும் பாவைக் கரிகரியா
    விந்நாளின் மாலையிட் டேன்வினை யேனு மிறைஞ்சலரைத்
    தன்னா ளெனக்கொண்ட கிள்ளி குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
    மின்னாளு நுண்ணிடை யாய்நுமர்க் கோது விரைந்துசென்றே. (408)

பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தல்.

(இ-ள்) வெளி.

    ஒன்னார்தஞ் சிங்கங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பின்
    மின்னார் மருங்குல் விளங்கிழை யாளை விதிமுறையே
    யந்நாள் வரைகென் றுரைத்தவி யானன்ப நீவரைந்த
    திந்நா ளுரைக்குமுன் னேயுரைத் தேனெமர் யாவர்க்குமே. (409)

இவற்றுள்-நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதலொன்றும் வினாதற்கும் , வரைந்தமை பாங்கி செவிலிக் குணர்த்தலும் வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தலும் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தலுமாகிய மூன்றும் செப்பற்கும், யான் வரைந்தமை நுமர்க்கியம்புசென்றென்ற லொன்றும் மேவற்கு முரியன.

இதுவரை ஐம்பத்து நான்காநாள் நிகழ்ச்சி.

24-தன்மனை வரைதன் முற்றிற்று
-----------------

இருபத்தைந்தாவது-உடன்போக் கிடையீடு.

அஃதாவது-நம்மனையில் வரைந்துகொள்ளாது தன்னூரில்வரைந்தானென்று தலைவி சுற்றத்தார்வெறுப்படைதலால் தலைவியையுடன் கொண்டு போம்போது தலைவி சுற்றத்தா ரிடையீடுபட்டு மீண்டு தலைவி வருதல். அது-போக்கறிவுறுத்தல் வரவறிவுறுத்தல் நீக்கம் இரக்கமடுமீட்சி என நான்கு வகைப்படும்; அவை:-நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்திவிடுத்தல் முதல் தலைமகளவன் புற நோக்கிக் கவன்றாற்ற லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு:-

நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவுணர்த்தி விடுத்தல்.

(இ-ள்) ஐம்பத்தைந்தாநாள் தன்னூரைவிட்டு நீங்குந் தலைவி எதிர்வருவார் தம்மொடு தலைவனுடன் செல்லுந் தன் செலவைப் பாங்கியர்க்குச் சொல்லியனுப்புதல்.

    கயராசி வேந்தன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பில்
    வெயராக மோடுஞ் சுரநடந் தேன்வினை யேனைநினைந்
    தயராது தேறச் சொலுமின்னம் வேறொன்றெம் மன்னையரைத்
    துயராது தேறச் சொலுமந்த ணீரென் றுணைவியர்க்கே. (410)

தலைமக டன்செல வீன்றாட் குணர்த்தி விடுத்தல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் போதலைத் தன்றாய்க்குச் சொல்லியனுப்புதல்.

    ஊறாழி வண்ணன் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    றேறா தெனதென்னை யாயந்த ணீர்சிந்தை போலநலம்
    பேறா மொருவர்பின் போதுகின் றேனென் பிரிவைநினைந்
    தாறா வயர்வ ளதுவே யெனக்கு மயர்வெனுமே. (411)

ஈன்றாட் கந்தண ருரைத்தல்.

(இ-ள்.) வெளி.

    உன்னைத் தொழுதுஞ் செவிலியைத் தாழ்ந்து முயிர்த்துணைவி
    தன்னைக் கிளிக்கிரந் துஞ்செல்லு மால்சஞ்ச ரீகமண்டும்
    புன்னைப் புகார்மன் குலோத்துங்க சோழன் பொருப்பினுங்கண்
    மின்னைச் சுரத்திற்கண் டேமன்னை யேயொரு மீளிபின்னே (412)

ஈன்றா ளறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) நற்றாய் தலைவியின்களவை வெளிப்படுத்துதல்.

    சேய்காண் மறியுந் தமர்கா டடுமொரு சேயுடனே
    வேய்காணுந் தோண்மங்கை போயினள்ள் காணுமென் பூமடந்தை
    தோய்காள மேக முறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பில்
    வாய்காணும் வெம்பழி யன்றோ நமது வழிக்கென்றுமே. (413)

தமர்பின் சேறலைத் தலைவி கண்டு தலைவற் குணர்த்தல்.

(இ-ள்.) சுற்றத்தார் பின்வருதலைத் தலைவி பார்த்துத் தலைவனுக்கு அறிவித்தல்.

    வாளுஞ் சிலையுஞ் சொரியம்புங் கோபமும் வாயிடிப்பு
    நீளுந் தமியன் கிளையென்னுங் கார்நில மாதிரண்டு
    தோளும் புரண்ட வுறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பி
    லாளுந் தலைவ ரெனும்பானு மேல்வந் தடைகின்றதே. (414)

தலைமகளைத் தலைமகன் விடுத்தல்.

(இ-ள்.) வெளி.

    தேவிதன் றாதையை வேள்வியட் டானரன் றீவினையேன்
    ழேவிய நும்மையர் தம்மைய டேன்மிக்க பாவலவர்
    காவியஞ் சூடுங் குலோத்துங்க சோழன்கல் யாணியிலென்
    னாவியு நீயுமின் னேநிற்க யான் சென் றகலுவனே. (415)

தமருடன் செல்பவ ளவன் புறநோக்கிக் கவன் றாற்றல்.

(இ-ள்.) சுற்றத்தாருடன் செல்லப்பட்ட தலைவி அவன் புறங்காட்டிப் போதலை நோக்கிக் கவலைப்பட்டுத் தேறுதல்.

    கைதான் வில்வாங்கி லுடையாப் படையில்லை காய்ந்தொரம்பு
    பெய்தா லெவருய்வ ரோதெய்வ மேபெரு ராவணனைக்
    கொய்தாடல் கொண்ட குமார குலோத்துங்கன் கோழிவெற்பின்
    வெய்தா மினத்துடன் விட்டே கினரன்பர் மெய்யருளே. (416)

நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தலும் தன்செலவீன்றாட் குணர்த்தி விடுத்தலும் ஈன்றாட் கந்தணர் மொழிதலுமாகிய மூன்றும் போக்கறிவுறுத்தற்கும், ஈன்றாளறத்தொடு நிற்றலும் அறத்தொடு நிற்றலிற் றமர்பின் சேறலைத் தலைவிகண்டுடைத்தலுமாகிய விரண்டும் வரவறிவுறுத்தற்கும், தலைமகளைத் தலைமகன் விடுத்தலொன்று நீக்கற்கும், தமருடன் செல்ப வளவன் புறம் நோக்கிக்கவன் றாற்றலொன்றும் இரக்கமொடு மீட்சிக்கு முரியன.

இதுவரை ஐம்பத்தைந்தா நாள் நிகழ்ச்சி.

25 - உடன் போக்கிடை யீடு முற்றிற்று.
----------------

இருபத்தாறாவது - வரைவு.

அஃதாவது - ஐம்பத்தாறாநாள் தலைவன்மீண்டு தலைவியில்லில் பின்வராநின்றுழித் தலைவி தமரெதிர்கொண்டு போயழைத்து வந்தபின் உலகவியற்கையின்படி பலவிதமாக அருங்கலமுதலிய வேண்டுவனகொடுத்து அந்தணரையுஞ் சான்றோரையு முன்னிட்டு மணச்சடங்குடனே வதுவை முடித்தல், இதற்கு வகையும் விரியுமில்லை.

அந்தணர் சான்றோர் முன்னிட் டருங்கலந் தந்து வரைதல்.

(இ-ள்.) பிராமணரையும் பெரியவரையு முன்வைத்துக்கொண்டு தலைவன் அரிய ஆபரணங்களைத் தலைவிக்குக் கொடுத்து விவாகஞ் செய்தல்.

    சான்றோரு மந்தண ரும்மிருந் தீந்து றமனியப்பூ
    ணீன்றோர் கொடுப்ப வெரிகரி யாயிதழ்த் தாதகிவாய்த்
    தேன்றோ யலங்க லுறந்தைக் குலோத்துங்க சென்னிவெற்பின்
    வான்றோய்புகழ்மன்னன் மின்னை முன்னீரின் மணந்தனனே. (417)

கண்டோர் மகிழ்ந்து கூறல்.

(இ-ள்.) அங்ஙனஞ் செய்த மணத்தைப் பார்த்தவர் மகிழ்ந்து சொல்லுதல்.

    ஒல்லார் புலிநங் குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    கல்லார் சுரத்தில் விடுத்தகன் றோனின்று காதலியை
    நல்லார்கண் முன்ன மணக்கோலங் காண நமதுடம்பிற்
    பல்லா யிரங்கண்கள் செய்தா னிலைசெய்த பாவியுமே. (418)

இங்ஙனமொரு தலைவனுக்குந் தலைவிக்கும் ஒருகால் மணமுடிப்பதன்றிப் பலகான் மணமுடிந்ததாகக் கூறுதல் உலகின்கண் வழங்குவதன்றே, இவ்வாறு கூறியதென்னை யெனின்? உடன்போய்த் தன்னூரின் கண்ணே வரைதலு மீண்டுவந்து தன் மனையின் கண்ணே வரைதலும் அந்தணர் சான்றோரை முன்னிட்டுத் தாய்தமரறிய மணச் சடங்கின் முறையே முடியாமையான் அவையிரண்டும் மணமாகா; அஃதென்னையெனின்? உலகியல்பின்கண் தாய்தமரறியாது மணச்சடங்குமின்றி ஒருவன் உரிமைகருதித் தாலிகட்டு மணம் மணமென்றுலகின் கணுள்ளார் கைக்கொளார்; அவர்க்கேமீண்டு மணச்சடங் குடனே மணமுடிப்பார்; ஆதலா லந்தணர் முதலாயினாரை முன்னிட்டு அவள் மனையின் சடங்குடனே முடித்தலின், இதுவே மணமாயின வாறுணர்க. இதுவரை ஐம்பத்தாறாநாள் எனக் கணக்கிட்டது போல மேல் நிகழ்ச்சி கணக்கிட முடியாதென வறிக.

26-வரைவியல் முற்றிற்று.

இரண்டாவது வரைவியல் முற்றிற்று
---------------

மூன்றாவது கற்பியல்.


கற்பென்பது-கற்பிக்கப்படுவது, கற்பித்தலாவதென்னையெனின்? தலைவிக்கு அறிவும் ஆசாரமுந் தலைவனாலும் இருமுது குரவராலும் செவிலியாலும் அந்தணர்முதலிய சான்றோராலும் போதித்தல்; ஆதலாலிவ்வியல் கற்பியல் எனப்பெயராயிற்று.

ஆயின், இவ்வாறு களவின்கணொழுகல் கற்பின்க ணொழுகல் உலகின் கணின்றெனில்? கூறுதும், அறிவுடையோர் மக்கட்கு மணஞ்செய்யுங்கால் இத்தனமையானை நினக்கு மணஞ்செய்ய நினைத்தோம்; இது நினக்கியைபோ? இயைபின்மையோ? எனவினாவி அவரவர் கூற்றின்படி செய்வர்: அவர் கூறாக்கால் குறிப்பானுணர்ந்து செய்வரெனக்கொள்க.

இங்ஙனம் இருவருள்ளமும் ஒத்தவழி மணஞ்செய்தலியல் பாயிற்று. ஆகவே உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்ததாம்; உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்த போதேமெய்யுறு புணர்ச்சிநிகழ்ந்ததாயிற்று. இதனை "உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்" என்னுங் குறட்குப் பரிமேலழகருரையில் நினைத்தலுஞ் செய்தலோ டொக்கு மெனக் கூறியதனானுணர்க. எனவே, உலகின்க ணிகழுங்கற் பொழுக்க மெல்லாங் கந்தருவ மணத்தின் வழிக்கற்பென்றே கொள்க. இக்கற்பு-மகிழ்வும் ஊடலும் ஊடலுணர்த்தலும் பிரிவும் பிறவும் பொருந்தியதாய், இல்வாழ்க்கை பரத்தையிற்பிரிவு ஓதற்பிரிவு காவற்பிரிவு தூதிற் பிரிவு துணைவயிற்பிரிவு பொருள்வயிற்பிரிவு என ஏழு பாகுபாடுடையது; அவற்றுள்,இருபத்தேழாவது.-இல்வாழ்க்கை.

அஃதாவது- தலைவனுந் தலைவியும் இல்லின் கண்ணே வாழுதலைக் கூறுதல், அது-கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி யென நான்குவகைப்படும்; அவை-தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதல் அன்னவர்காத லறிவித்த லீறாகிய பத்துவிரிகளையுடையன; அவைவருமாறு:-

தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.

(இ-ள்.) வெளி.

    பணமே யரவல்கு லாய்நின தாருயிர்ப் பாங்கி யெங்குங்
    குணமே யுணரின்மிக் காளல்ல வோகொழுஞ் சாலியன்னக்
    கணமே யுறைந்தைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    மணமே பின்னாம்பெறத் தானல ரேமுன் வரப்பெற்றதே. (419)

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.

(இ-ள்.) வெளி.

    புள்ளானை யோதிம மீதேறு முப்பெருங் புங்கவரு
    முள்ளா தரவின்மும் மாதரும் போலுன்னு மாறுவெண்ணெய்
    கள்ளா முகுந்தன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    வள்ளாலெம் மங்கையுடன்வாழி வாழியிம் மாநிலத்தே. (420)

பாங்கிதலைவியை வரையு நாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல்.

(இ-ள்.) தோழி தலைவியை நோக்கித் தலைவன் மணஞ்செய்யுமிதுகாறும் பொறுத்திருந்தமையைச் சொல்லென்று கேட்டல்.

    கார்வா யெனுங்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னூர்வா யலருட் செவிசுடு மாறு முருவிலிதன்
    போர்வா யலர்மெய்ப் புறஞ்சுடு மாறும் பொறுத்திறைவர்
    தார்வாய் தருமெல்லை யெவ்வண்ண மாற்றினை தாழ்குழலே. (421)

பெருமக ளுரைத்தல்.

(இ-ள்.) தலைவி தான் வருந்தாதிருந்த காரணம் பாங்கிக்குக் கூறுதல்.

    பொறியோ வரிய குலோத்துங்க சோழன் புகாரிறைவர்
    வெறியோடு மாலை யிடுநா ளளவுமெய்ந் நூலறிந்த
    நெறியோர் பிரிவுக் கலரெழ வாருயிர் நிற்குங்கொலோ
    குறியோ வியமனை யாய்நெறி காத்ததென் கூடநின்றே. (422)

தலைவனைப் பாங்கி வரையு நாளளவு நிலைபெற வாற்றிய நிலைமை வினாதல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் விவாகஞ்செய்யும்வரை யுயிர்தரித் திருக்கச்செய்த நிலைமையைத் தோழி அத்தலைவனிடங் கேட்டல்.

    ஒருமானன் றெய்த குலோத்துங்க சோழ னுறந்தைவெற்பிற்
    றருமானுஞ் செங்கைத் தலவள்ள லேசல ராசிதருந்
    திருமான் ம்ணக்குமுன் னம்மா லமைந்த செயலெனவெம்
    பெருமான் மணக்குமுன் னிம்மா லமைந்ததென் பேசுகவே.(423)

மன்றன் மனைவரு செவிலிக் கிகுளை யன்புற வுணர்த்தல்.

(இ-ள்.) கலியாண மனையில் வந்த செவிலிக்குப் பாங்கி இருவரது அன்பையும் பொருந்தக் கூறுதல்.

    அவ்வேந்தர் வெம்பரித் தேர்போ முனேநின் னரிவைமுன்றிற்
    கிவ்வேந்தர் வெம்பரித் தேர்வருங் காண்பண் டிராவணனைக்
    கொய்வேந்த னன்ன குமார குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றெவ்வேந்தர் மேற்பொர வென்றே கினுநன்று தேன்மொழியே. (424)

பாங்கி வாழ்க்கை நன்றென்று செவிலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தோழி தலைவியின் இல்வாழ்க்கை நல்லதென்று செவிலித்தாய்க்குக் கூறுதல்.

    வந்தாருக்கீதலும் போவாரை மீட்டலும் வந்தெதிர்ந்தோர்
    தந்தா யெனுமன்புந் தன்புறங் காத்தலுந் தண்டமிழ்க்குச்
    சிந்தா மணிநம் முறந்தைக் குலோத்துங்க சென்னிவெற்பி
    னந்தாம வோதிநின் மாதுக்கொப் பாமவ் வறத்தெய்வமே. (425)

மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியனற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்.) விவாகஞ்செய்யப்பட்ட வீட்டுக்குப்போய்ப் பார்த்து வந்த செவிலித்தாய் தலைவியின் கற்புத்தன்மையை நற்றாய்க்குச் சொல்லுதல்.

    பழிமான முந்தன் மனையறங் காத்தலும் பார்த்திபரைத்
    தொழுமா தரவும் பெறுங்கற்பி னாற்றுதித் தோர்க்குச்செம்பொன்
    பொழிமான துங்கன் குலோத்துங்க சோழன் புகார்ப்பிறந்தா
    ளெழுமாத ரோடிவ ளெண்மாத ராவள்பண் டீன்றிலையே. (426)

நன்மனை வாழ்க்கைத் தன்மை யுரைத்தல்.

(இ-ள்.) செவிலித்தாய் நற்றாய்க்குத் தலைமகளது நல்ல மனைவாழ்க்கைத் தன்மையைச் சொல்லுதல்.

    அன்பான் முகுந்தன் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    னின்பாவை தன்மனை வாழ்க்கையன் னேநிலத் தாறனைத்து
    முன்பாய்வ தொக்கும் பொருளெய்து மாறு முகந்தளித்து
    மின்பாய் முகிலுண்டு தாழாத வாரி விரிவொக்குமே. (427)

அன்னவர் காத லறிவித்தல்.

(இ-ள்.) செவிலி நற்றாய்க் கிருவராசையையுங் கூறுதல்.

    வில்லும் பிறையும் பொருநுத லாளுமவ் வேந்துமன்னே
    புல்லும் புணர்ச்சி மணவறை யாயது புல்லலரைக்
    கொல்லுந் தடக்கைக் களிற்றான் குலோத்துங்கன் கோழிவெற்பி
    னல்லும் பகலு மறியாத பொன்னுல காய்விடுமே. (428)

இவற்றுள் - தலைவன் றலைவிமுன் பாங்கியைப் புகழ்தலொன்றுங் கிழவோன் மகிழ்ச்சிக்கும், தலைவனைப் பாங்கி வாழ்த்தல் முதல் பாங்கி வாழ்க்கை நன்றென்று செவிலிக்குணர்த்த லீறாகியவாறனுள் பெருமகளுரைத்தலொன்றுங் கிழத்தி மகிழ்ச்சிக்கும், அல்லனவைந்தும் பாங்கி மகிழ்ச்சிக்கும், மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியனற்றாய்க் குணர்த்தலாதிய மூன்றுஞ் செவிலி மகிழ்ச்சிக்கு முரியன.

27-இல்வாழ்க்கை முற்றிற்று.
-------------

இருபத்தெட்டாவது-பரத்தையிற் பிரிவு.

அஃதாவது-தலைவன் பரத்தைமேற்காதலாய்த் தலைவியைப்பிரிந்து பரத்தையர் சேரியிற் போதல். அது-வாயில்வேண்டல் வாயின் மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என நால்வகைப்படும்; அவை-காதலன் பிரிவுழிக்கண்டோர் புலவிக்கேதுவிதா மவ்விறைவிக் கென்றல் முதல் புணர்ச்சியின் மகிழ்த லீறாகிய பதின்மூன்றும் உணர்த்தவுணரு மூடலெனவும், வெள்ளணியணிந்து விடுத்துழிப் புள்ளணி மாலைவேலண்ணல் வாயில் வேண்டல் முதல் இணர்த்தார் மார்பனையிகழ்தலும் பிறவுமிறுதியாகிய அனைத்தும் உணர்த்த வுணரா வூடலென வுமிருவகைப்படும்; அவை வருமாறு:-

காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக் கேதுவிதா மவ்விறைவிக் கென்றல்.

(இ-ள்) தலைவன் தலைவியைப்பிரிந்து பரத்தையர் சேரிக்குப் போதலைப் பார்த்தோர் இவன்போத லூடலுக்குக் காரணமென்று கூறுதல்.

    முப்போதும் பாவைதன் முன்றில் விடாமன்னர் மும்முரமா
    யிப்போது சேரியர் முன்றில்புக் காரிப மோலமென்ன
    வப்போது காத்த குலோத்துங்க சோழ னளகையன்னீர்
    மைப்போ தெனுங்கண் சிவவா திராதந்த வாணுதற்கே. (429)

தனித்துழி யிறைவி துனித்தழு திரங்கல்.

(இ-ள்) தலைவி தலைவனைப் பிரி்ந்து தனித்த இடத்துத் துன்பமுற்று அழுது வருந்துதல.

    தீம்பாகுந் தேனு மமுதுமொப் பாமன்னர் சேரியர்க்கா
    வேம்பாகி விட்டன ரேதுசெய் வேன்முன் விசையன்றிண்டேர்க்
    காம்பாகு செய்த குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    காம்பாகுந் தோளும்பொன் னூருமுத் தூருமென் கண்களுமே. (430)

ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்.

(இ-ள்) பாங்கி தலைவியை நோக்கி நீயழுதுகொண்டிருத்தற்குக் காரண மென்னென்று வினாதல்.

    மலையா சலச்சந் தணிந்துமுண் டோவெப்பம் வானமுதந்
    தொலையாம லுண்டும் பசியுமுண் டோதொல்லை வேலையெய்த
    சிலையா னுறந்தைக் குலோத்துங்க சோழன் சிலம்பனையா
    யிலையாரும் வேலர் மணந்துமுண் டோநினக் கித்துயரே. (431)

இறைமகன் புறத்தொழுக் கிறைமக ளுணர்த்தல்.

(இ-ள்) தலைவன் றன்னிடத்தொழுகு மொழுக்கமின்றிப் பரத்தையரிடத் தொழுகுகின்றானென்று தலைவி பாங்கிக்குக் கூறுதல். புறத்தொழுக் கென்பதற்குப் பொருள்-பரத்தையரிடத்தொழுகு மொழுக்கமென்று பொருள் கொண்டவாறென்னை-யெனின்? வடநூலார் புறமுரைப்பாமென்று கூறுவ ராதலாற் பரத்தையரென்னுஞ் சொற்குப் புறமுடையவரென்னும் பொருள் கூறிநின்றவா றுணர்க. புறமுடையரென்ப தென்னையெனின்? இவரின்ப மின்பமன்றென்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் வரைவின் மகளிரென்னு மதிகாரத்தில் இன்பத்திற்குப் புறம் இவரின்பமென்று கூறியவாற்றானுணர்க. "இருமனப் பெண்டிரும்" என்னுந் திருக்குறளானு முணர்க.

    தினைக்குஞ் சுனைக்கு நடுவுழன் றாரின்று சேரியர்த
    மனைக்குங் கடைக்கு மிடையுழன் றார்வைய மேழதிரக்
    கனைக்குங் களிற்றுக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னினைக்குந் தொறுமணங் கேயண்டர் வானு நெருப்பெமழுமே. (432)

தலைவியைப் பாங்கி கழறல்.

(இ-ள்) தலைவிக்குப் பாங்கி புத்திகூறுதல்.

    கொங்கார் குழலணங் கேசேரி சேர்ந்தனர் கொற்றவரென்
    றிங்காவி நைந்தன் பறச்சொல்வ தோவிரு பாணியிலுஞ்
    சங்காழி யேந்துங் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பிற்
    கங்கா நதிபன் னதிதோய் வருணனைக் காய்ந்திலளே. (433)

தலைவி செவ்வணி யணிந்து சேடியை விடுத்தல்.

(இ-ள்) தலைவி பூத்தகாலை மூன்றாநாட் போக்கி நாலாநாள் நீராடியபின் இவற்றி னறிகுறியாகச் செம்பூவும் செவ்வாடையுஞ் செஞ்சாந்தும் புனைவித்துத் தோழியைப் பரத்தையினிடத் திருக்குந்தலைவனிடந் தூதாக அனுப்புதல்.

    தாயே யெனும்நிலந் தாங்குங் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    வேயே யனையமென் றோண்மட வீருங்கண் மீதுசிவப்
    பாயே யெறிப்ப வணிந்தசெம் பொன்னணி யாருங்கண்டாற்
    றீயேனுக் கானசெம் பூவல ராமித் தெருவெங்குமே. (434)

அவ்வணி யுழையர்கண் டழுங்கிக் கூறல்.

(இ-ள்.) அவ்வலங்காரத்தைத் தோழியிடத்து அயல் மனையினுள்ளார் பார்த் திரங்கிக் கூறுதல்.

    உருவுமென் சாந்து மணிப்பூணுந் தூசு மொழிந்தவையு
    மருவுமிச் சேடியர் செவ்வணி காணின் மழையனைத்தும்
    பொருவுந் தடக்கைக் குலோத்துங்க சோழன் புகார்நகரத்
    தெருவுமச் சேரியும் வெள்ளணி யாம்பிறர் செய்ந்நகைக்கே. (435)

இதுவுமது.

    நொடியே பலசொல்லிச் சேரிய ரேசத்தன் னோக்கிரண்டும்
    வடி யேயுஞ் சேடிசெங் கோலங்கொண் டாண்மண்ணும் விண்ணுந்தன்சே
    வடியே யளந்த குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    கொடியேயென் பட்டதை யோகொடி தாமிக் குலமென்பதே. (436)

செவ்வணி பரத்தையர்கண்டு பழித்தல்.

(இ-ள்.) அச்சேரியிற்போகிய தோழியின் செவ்வணியைப் பரத்தையர் பார்த்து நிந்தித்துக் கூறுதல்.

    பூணார மார்பன் குலோத்துங்க சோழன் புகார்ப்பெருமான்
    கோணாத கோல்கொண்டு காக்கின்ற காலத்திற் கூரியவாம்
    வாணாடு கண்ணிற் பரத்தைநல் லீரிந்த மாநிலத்தே
    காணாது கண்டனங் கற்பகப் பூநங் கடைத்தலைக்கே. (437)

பரத்தைய ருலகிய னோக்கி விடுத்தல்.

(இ-ள்.) தலைவி நீராடிய ஞான்று பரத்தையர் தங்கள் சேரியில் தலைவனிருத்தல் உலக முறைமைக்கு இயலாதென்று அவனை யனுப்புதல். உலக முறைமைக்கு இயலாமை "பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீரா டியபின் னீராறு நாளுங், கருவயிற்றுறூஉங் கால மாதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்" என்பதனானு முணர்க. (அகப்பொருள் – அகத்திணையியல் 91.)

    திக்கே புரக்கு முறந்தைக் குலோத்துங்க சென்னிவெற்பி
    னிக்கே யெனுமொழி நும்மனைப் பூவையிச் சேடியர்தம்
    மெய்க்கேறும் பூப்பிறர் கண்டுகண் டேமிக்க சேடனென்பான்
    பைக்கேறும் பூவறி யாதமுன் போமினிப் பார்த்திபரே. (438)

தலைமகன் வரவுகண்டு வாயில்கண் மொழிதல்.

(இ-ள்.) தலைவன் வருதலைக் கண்ட தாதிகள் பாங்கிக்குச்சொல்லுதல்.

    செம்பே ரணியொடு சேடியைக் காண்டலுஞ் சேரியினு
    நம்பே ரிறைவர்நம் வாயில்வந் தாரந்த நாளரக்கர்க்
    கம்பே தொடுத்த குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    கொம்பே வழுக்குவ ரோபெரி யோர்தங் குலத்தியல்பே. (439)

வரவுணர் பாங்கி யரிவைக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வரவுணர்ந்த பாங்கி தலைவனை யெதிர்கொள்ளத் தலைவிக்குச் சொல்லுதல்.

    திண்டேரு மன்பரும் வாயில்வந் தார்செழும் பூவருங்கால்
    வண்டே புறஞ்செல்லு மோவணங் கேவணங் கார்வணக்கங்
    கொண்டே சிறைவிடுங் கோமான் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    பண்டே செயுங்குறை கொள்ளா தெதிர்கொள்கை பண்புனக்கே. (440)

முதிராவிளமுலை யெதிர்கொண்டு பணிதல்.

(இ-ள்.) தலைவனைத் தலைவி யெதிர்சென்று வணங்குதல்.

    பொற்பாதப் பஞ்சும் பொதுமாதர் மஞ்சளும் பூண்குறியு
    நற்பாணி வள்ளுகிர்க் கீற்றுங்கண் காணவு நாற்கவியின்
    சொற்பாதந் தேரு முறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பிற்
    கற்பா மிதுகொடி தாலெதிர் போதுவள் காதலியே. (441)

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்.) வெளி.

    அணங்குஞ் சுடர்வடி வேலார் பொருதயல் வேந்தர்முன்றி
    லுணங்குந் திறஞ்செய் குலோத்துங்க சோழ னுறந்தையன்னாள்
    பிணங்குஞ் சுவைக்குங் கரைதெரி யாதுபிறகுமணந்
    திணங்குஞ் சுவைக்குங் கரைதெரி யாதெனக் கென்றென்றுமே. (442)

இப்பதின்மூன்று துறைகளும் உணர்த்தவுணரு மூடற்குரியன.

வெள்ளணி யணிந்து விடுத்தல்.

(இ-ள்.) தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடிய செய்திக்கு அடையாளமாக வெள்ளிய ஆபரண முதலியன வணிந்து சேடியைத் தலைவனிடத்துச் செவிலித் தாயர் விடுத்தல்.

    நதித்தாரைப் பொன்னிக் குமார குலோத்துங்க னாகைவெற்பின்
    மதித்தாரை யன்னவெண் மௌவலுஞ் சாதியு மாலைபெய்து
    பதித்தா ரமும்வெண் ணிறத்தூசுஞ் சாத்தியெம் பாவையிடத்
    துதித்தான் சிறுவ னெனக்கூற வேவின ரூரனுக்கே. (443)

புள்ளணி மாலைவேலண்ணல் வாயில்வேண்டல்.

(இ-ள்.) வெள்ளணியணிந்து வந்த தோழியைத் தலைவன் தூதாக வேண்டிக் கூறுதல்.

    கனமே யெனுங்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    மனமே மகிழ்ந்து விரைந்துவந் தேன்வந்த காலத்திளந்
    தனமே பொருப்பனை யாண்மனை யாந்திருத் தாமரைக்கின்
    றனமே யெனைத்திங்க ளாக்காது செங்கதி ராக்குவையே. (444)

தலைவி நெய்யாடிய திகுளை சாற்றல்.

(இ-ள்.) தலைவி புதல்வனைப்பெற்று நெய்யாடியதனைப் பாங்கி தலைவனுக்குச் சொல்லுதல். நெய்யாடுதல் - நெய்தேய்த்து நானஞ் செய்தல்; இது - பிள்ளைப்பேற்றுச் சடங்கினொன்று.

    விரைசாரும் பன்மலர் போம்வண்டு போன்மெய்யை விற்றபொரு
    ணிரைசாரும் நெஞ்சின ரில்லிருப் பீர்நில மேழுந்தத்துங்
    குரைசாரும் வாசி நகுலன் குலோத்துங்கன் கோழிவெற்பி
    லரசாள வாண்மகப் பெற்றுநெய் யாடின ளாரணங்கே. (445)

தலைவன் றன்மனத் துவகை கூறல்.

(இ-ள்.) வெளி.

    போர்க்கும் பசுமஞ் சளுநெய்யின் பூசலும் பொற்குழவி
    யேற்குங் கரமுஞ் சுரப்பூறு கொங்கையு மின்னமுத
    மார்க்குங் குலோத்துங்கன் கோழியன் னாள்வண்ணத் தையவியும்
    பார்க்கும் படிக்குக்கண் ணாயிர மீந்திலன் பாவியன்றே. (446)

தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்.

(இ-ள்.) வெளி.

    ஆலே துயிலுங் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    சேலே யெனுங்கண்ணி நின்மகற் காணுந் திருவுளத்தான்
    மாலே திருவின் மனைக்குவந் தாலென வந்துநின்றார்.
    காலே சிவக்குமுன் கண்சிவப் பாறுகை கற்புனக்கே. (447)

தலைவி யுணர்ந்து தலைவனொடு புலத்தல்.

(இ-ள்.) தலைவி தலைவன் வருதலைத் தெரிந்து ஊடுதல்.

    அணங்காரும் வேற்கைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    குணங்காணுஞ் சேயன்பில் வந்தன ராஞ்சென்று கோளரவப்
    பணங்காயு மல்குன்மின் னீரடை யீரங்ஙன் பார்த்திபர்தம்
    வணங்கா முடியெங்கை கால்வணங் காவகை வாசலையே. (448)

தலைவன் மகவேந்தல்.

(இ-ள்.) சேடியர் கொண்டுவந்து கொடுத்த பிள்ளையைத் தலைவன் கையிற் றாங்குதல்.

    கொடுத்தான் பசும்பொன் மறையோர்க் ககரமுங் கோடிகொள்ள
    விடுத்தான் கடவுளர் பூசைசெய் தான்விரைத் தாமரைப்பெண்
    ணடுத்தான் னபயன் குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    லெடுத்தான் மகவை யியம்பாண ரார்ப்ப விறையவனே. (449)

பாணன் வாயில் வேண்டல்.

(இ-ள்.) தலைவன் விடுத்த தூதாகவந்த பாணன் தலைவிக்குச் சமாதானஞ் சாற்றுதல்.

    வாயிற் புறமன்னர் கோடியர் சேவிக்கு மன்பதநின்
    கோயிற் புறநிற்ப தோவணங் கேகுடைக் கீழுலகைத்
    தாயிற் புரக்குங் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பி
    லாயிற் புகழ்ந்தடி யேனிரந் தேன்முனி வாறினியே. (450)

தலைவிபாணனை மறுத்தல்.

(இ-ள்.) வெளி.

    காணாது கனனஞ் செயும்வாயிற் கேமுன் கரிக்கும்பமே
    கோணாது நீட்டினர் போலவந் தாய்குட காவிரிவாய்ச்
    சோணாடன் சங்கம ராச குலோத்துங்க சோழன்வெற்பிற்
    பாணாவென் முன்னர்நில் லாதுசெல் வாயப் பரத்தைமுன்னே. (451)

தலைவி பாணனை முனிதல்.

(இ-ள்.) மறுக்கப்பட்ட பாணனை மீண்டுந் தலைவி சேடியர் முன்னிலையிற் கோபித்தல்.

    தென்பான் முனிவ னிசையத னாற்சிலை யேகரைத்தா
    னென்பா ரதையின்று சோதிப்ப மோவியற் பாவலரை
    யன்பால் வளர்க்குங் குலோத்துங்க சோழ னளகையன்னீர்
    நன்பாணற் கும்மிசை வீணைக்குங் கன்மழை நாம்பொழிந்தே. (452)

தலைவி முனிந்தமை பாணன் தலைவற் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி கோபித்ததைப் பாணன் தலைவனுக்குச் சொல்லுதல்

    விரையேந்து தாரண்ண லேயென்சொல் வேன்விரி காவிரிப்பூந்
    திரையேந்து கோழிக் குலோத்துங்க சோழன்பொற் செங்கையினால்
    வரையேந்த வன்று பொழிந்தகன் மாரியு மாதுக்குன்பே
    ருரையேந்த வின்று பொழிந்தகன் மாரியு மோரிரண்டே. (453)

இதுவுமது.

    வாழா திபனம் முறந்தைக் குலோத்துங்க மன்குலத்தோன்
    சூழாழி யொன்றை யணைகட்டி னானந்தச் சூழணைபோற்
    றழாதுன் பேரையெம் மன்னா தமிய னெடுத்தளவே
    யேழாழி யுங்கட்ட லாமெம் பிராட்டி யெறிந்தகல்லே. (454)

பாடினி வாயில் வேண்டல்.

(இ-ள்.) தலைவியிடத்துப் பாடும்பெண் தலைவனுக்காகத் தூது சொல்லுதல்.

    பூமாலை யொத்த குலோத்துங்க சோழன் புகாரணங்கே
    தேமாலைப் பாடினி யொன்றிரந் தேனுங்கள் செல்வர்வந்தா
    லாமாலை யந்திறந் தன்பா லெதிர்கொள்வ தன்றிமுல்லை
    மாமாலை யெய்தின ரெய்தார் விழிமுத்து மாலைகளே. (455)

பாடினி வாயின் மறுத்தல்.

(இ-ள்.) பாடும் பெண்ணுடைய தூதைத் தலைவி மறுத்துக்கூறுதல்.

    கண்ணுங் கருணைக் குலோத்துங்க சோழனன் னாட்டில்வஞ்சம்
    பண்ணும் பரத்தையர் சேரியிற் பாடினி பாடினிப்போ
    யுண்ணுங் கடுவு மமுதமு நாணலு மொண்கரும்பு
    மண்ணும் பசும்பொன்னு மொன்றாக வெண்ணிய மன்னவர்க்கே. (456)

கூத்தர் வாயில் வேண்டல்.

(இ-ள்.) கோடியர் தூது சொல்லுதல். கோடியர் - கூத்தாடுகின்றவர்.

    மாதே யுனைத்துதி கோடியர் யாமன்னர் பான்முனிவிப்
    போதே விடவடி யேமிரந் தேம்புக ழாபரணங்
    காதே புனைந்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    சீதேவி யாற்றில ளோராதை மாதவன் சேர்ந்ததற்கே. (457)

கூத்தர் வாயின் மறுத்தல்.

(இ-ள்.) கோடியர் தூதைத் தலைவி மறுத்துக் கூறுதல்.

    தோடலர் சோலை யுறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பி
    னூடல தாறுந் திறமிரந் தீரும்மை நான்முகத்தோ
    னாடலை யேசெயச் செய்தன னோவகன் றாரையெல்லாங்
    கூடலை யேசெயச் செய்தன னோசொலுங் கோடியரே. (458)

காமக்கிழத்தி வாயில் வேண்டல்.

(இ-ள்.) வெளி.ஈண்டுக்காமக்கிழத்தியென்றது, பாங்கியை.

    முன்போத வந்து புகழ்ந்தோர்க் கெலாமுகி லேழுமென்னப்
    பொன்போத நல்குங் குலோத்துங்க சோழன் புகாரனையா
    யன்போர் வெறுத்தன ராயினு மாறுந் திறனறியா
    வென்போ லெளியைகொல் லோவாறு வாய்கண் ணிணைச்சிவப்பே. (459)

தலைவி காமக்கிழத்திதன்னோ டிரங்கல்.

(இ-ள்.) தலைவன் பரத்தையரைச் சேர்ந்து தன்னை வெறுத் தமையைத் தலைவி பாங்கியொடு வருந்திக் கூறுதல்.

    சாந்தமு மாத்தி மரமுமண் ணாலையுந் தண்கரும்பும்
    போந்ததெரர் வேழ மறிமானு மேனமும் பூமடந்தை
    காந்த னுறந்தைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னேந்தலுக் கெங்கையு மியானுமின் னேயினி யென்செய்வதே. (460)

இறையோன் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்.

(இ-ள்) தலைவன் விருந்தினருடன் வந்த இடத்துத் தலைவி தலைவன் குற்றத்தைச் சகித்தல்.

    அந்தா மரைக்கண் கலுழ்ந்தா ணுதன்முத் தரும்பிநின்று
    நொந்தாண் மனங்கனி வாய்துடித் தாடமிழ் நூற்கவிக்கு
    நந்தா மிருகைக் குலோத்துங்க சோழனன் னாட்டிறைவர்
    வந்தார் விருந்தொ டெனமறைத் தாள்கண் மழையணங்கே. (461)

விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண் டிறையோன் மகிழ்தல்.

(இ-ள்) வெளி.

    பொருந்தா முனிவுந் தணியாக்கண் ணீரும் புலர்ந்ததுன்ப
    மருந்தாகி வந்தெமை வாழ்வித்த தான்மலர்க் கோகனகைக்
    கருந்தா வமிர்தங் குலோத்துங்க சோழ னளகைவெற்பில்
    விருந்தான் மறுமையுண் டின்பமென் பாரிம்மை மேவியதே. (462)

இறைமகள் விருந்துகண் டொளித்த வூடல் வெளிப்படல்.

(இ-ள்) தலைவி விருந்தினரைக்கண்டு மறைத்த வூடல் வெளிப்படுதல்.

    ஏறிய தோர்வெயி லாற்சுரங் காய்ந்த விளநிலவா
    லாறிய தீப்பின்னு மூண்டது போலரும் பாவலவர்
    கூறிய கீர்த்திக் குலோத்துங்கன் கோழியிற் கோதைக்கென்னோ
    சீறிய பார்வை சிவந்தன நீரும்பின் சிந்தினவே. (463)

விருந்துகண் டொளித்த வூடல் வெளிப்பட னோக்கிச் சீறேலென்றவள் சீறடி வணங்கல்.

(இ-ள்) வெளி.

    நல்லார் விருந்தின் மறந்தீர் திரும்பவு நான்முன்செய்த
    பொல்லா மையைநினைந் தீரென்செய் வேன்புதி தாப்பகலை
    யல்லாக்கு மாழிக் குலோத்துங்க சோழ னளகையன்னீ
    ரெல்லாக் குறையும் பொறும்பணிந் தேனும் மிணையடியே. (464)

இஃதெங்கையர் காணி னன்றன் றென்றல்.

(இ-ள்) என் தங்கைமாராகிய பரத்தையர் கண்டால் நீர்செய்த பணிவு குற்றமாமென்று தலைவனுக்குத் தலைவி கூறுதல்.

    கோளா மருவலர் கூற்றங் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றோளார வென்னன்பி னாற்பணிந் தீர்தொடு நீருலகை
    யாளாநிற் கின்ற வரசேகண் டாலும தாகமெங்கை
    தாளால் வருந்துமென் றஞ்சுகின் றேனெழுந் தாள்விடுத்தே. (465)

அங்கவர் யாரையு மறியே னென்றல்.

(இ-ள்) அப்பரத்தையர் யாரையுந் தெரியேனென்று தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

    வழுதியர் சேரர் திறைதர வேவன் சிறையைவிடுத்
    தழுதுயர் மாற்றுங் குலோத்துங்க சோழ னளகையனனீர்
    தொழுதிரு போது முமைநினைப் பேனன்றிச் சூழ்மனைவா
    யெழுதிய பாவையைப் பாவையென் னேன் குற்ற மெய்துமென்றே.

இதுவுமது.

    நான்கா தலினொன்று சொல்லுகின் றேனறுந் தேனுண்டவாய்
    தீங்கான வேம்புண்ணு மோவணங் கேசேரர் பாண்டியர்தம்
    மாங்காரந் தீர்த்த குலோத்துங்க சோழ னளகைவெற்பி
    னீங்காது மாலுண்ட நெஞ்சே யிரும்புண்ட நீரொக்குமே. (467).

காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல்.

(இ-ள்) தலைவி அப்பரத்தைமாரைப் பார்த்ததைத் தலைவனுக்குக் கூறுதல்.

    காமாரிக் கன்பன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    கோமானின் சேயை யொருத்திகண் டாள்குலச் சேய்வருகென்
    றேமா சலக்கொங்கை மீதணைத் தாளன்னை யானுமென்றா
    ளாமாமுன் மைந்தனென் றேன்கவிழ்ந் தாண்முக மாரவளே. (468)

தாமக் குழலியைப் பாங்கி தணித்தல்.

(இ-ள்) தலைவி கோபத்தைப்,பாங்கிதணித்தல்.

    நன்னேமி காக்குங் குமார குலோத்துங்க னாகைவெற்பின்
    மின்னே யிறைவ ரிறைஞ்சவு மேவிழி நீரொழியாய்
    தன்னேய நாயகன் மண்ணே புயத்துத் தழீஇயகுற்றம்
    பொன்னே பொறுத்தில ளோபொறுப் பார்கற்பின் பூவையரே. (469)

தலைவி யூட றணியா ளாதல்.

(இ-ள்.) பாங்கி அங்ஙனந் தணித்துந தலைவியூடல் தனியாளாதல்.

    சேரியர் கேள்வரை யாமார் பிளக்கத் திரும்பியின்னங்
    காரியம் யாது நமக்குநெஞ் சேகங்கங் கோடிதொடர்
    கூரிய வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லாருயிர் தாமு முடல்யாமு மென்கைமெய் யாய்விட்டதே. (470)

தலைமக னூடல்.

(இ-ள்.) தலைவியூடல் தணியாமையைக் கண்டு தலைவன் ஊடுதல்.

    சேய்மானு மண்ண லுறந்தைக் குலோத்துங்க சென்னிவெற்பி
    லாய்மார் துயிலு மறிந்திடை யீடு மகன்றுவெய்ய
    பேய்மாறு கொள்ளு மிராக்குறி போந்துநம் பேரன்பினாற்
    றோய்மா திவளல்ல மற்றொரு மாதைத் தொழுதனமே. (471)

அணிவளைப் பாங்கி யன்பிலை கொடியை யென் றிணர்த்தார் மார்பனை யிகழ்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை அன்பில்லாய் நீ கொடியவனென்றிகழ்ந்து கூறுதல்.

    அம்பார் பெருங்கட் பரத்தையர் காதலை யாதரித்தீ
    ரெம்பா லியல்குற்ற மென்சொல்லு வீரெழு நேமியெனுங்
    கொம்பாற் றியபுயக் கிள்ளி குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றம்பாற் குறையறி யாரறி வார்பிறர் தங்குறையே. (472)

வெள்ளணி யணிந்துவிடுத்தல் முதல் அணிவளைப்பாங்கி யன்பிலை கொடியையென் றிணர்த்தார் மார்பனை யிகழ்தலீறாகிய இவ் இருபத்தொன்பது துறைகளும் உணர்த்த வுணரா வூடற்குரியன.

ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயிலாக வரவெதிர் கோடல்.

(இ-ள்.) தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின் மேலேறிப்போம்போது தெரிந்தெடுத்த ஆபரணங்களை யணிந்த புதல்வ னெதிரே நிற்ப அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக்கொண்டு தலைவனாற்றாமையுடன் வந்த இடத்துப் புதல்வனுந் தலைவனாற்றாமையுந் தூதாகத் தலைவி தலைவனை யெதிர்கொள்ளல்.

    வெள்ளைக் கவிகைக் குமார குலோத்துங்க வேந்தன்வெற்பிற்
    கொள்ளைத் தமதளி யுட்டா மரையிற் குடிகொளவும்
    பிள்ளைக் களிறு புயமலை யேறவும் பேரிசையின்
    வள்ளற் றலைவர்வந் தாரெதிர் போதும் வழிநெஞ்சமே. (473)

மணந்துழி மகிழ்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியைப் புணர்ந்த இடத்து மகிழ்தல்.

    மணந்தாண் மணந்த பொழுதறிந் தேன்பின் மனமயங்கக்
    குணந்தான் செயுங்குறி யாதறி யேன்மலர்க் கோகனகை
    புணர்ந்தா னபயன் குலோத்துங்க சோழன் புகாரனையா
    டணந்தா டணந்தபின் யானறி்ந் தேன்மெய்த் தழும்பினையே. (474)

மணந்தவன் போயபின் வந்த பாங்கியோ டிணங்கிய மைந்தனை யினிதிற் புகழ்தல்.

(இ-ள்) வெளி.

    ஏரோடு நூலிசை வண்டார்ப்பச் செல்வ மெனுமதத்திற்
    சூரோடு தெவ்வென்று வாழிமின் னேகை தொழாதமன்னர்
    போரோட *வோட்டுங் குலோத்துங்க சோழன் புகாரிறைவர்
    தேரோடு மாவைத் திருப்புமென் காதற் சிறுகளிறே. (475)

தலைவி தலைவனைப் புகழ்தல்.

(இ-ள்) வெளி

    இன்பமுங் கண்மணி யும்மாவி காயமும் யாவுமின்னார்க்
    கன்பரை விட்டிலை யென்கைபொய் யோவகன் பாரையொரு
    நன்பதம் வைத்த வுறந்தைக் குலோத்துங்க னாட்டெனது
    துன்ப மொழித்தவர் யாரோ வவர்நந் தொழுந்தெய்வமே. (476)

சிலைநுதற் பாங்கி தலைவியைப் புகழ்தல்.

(இ-ள்) வெளி,

    தேன்மீ தெழுங்குழற் சேரியர் வீதியிற் செல்லுஞ் செல்வர்
    கான்மீ திறைஞ்சுநின் கற்பினை நோக்கிற் கடலடங்கக்
    கோன்மீதொன் றேவுங் குலோத்துங்கன் கோழியிற் கொம்பனையாய்
    வான்மீ தருந்ததி மண்மீது நீயன்றி மற்றிலையே. (477)

---------
* வெட்டுமென்றும் பாடம்.

ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயில்களாக வரவெதிர் கோடல்முதல் சிலைநுதற் பாங்கி தலைவனைப் புகழ்தலீறாகிய இவ்வைந்து துறைகளும் மேற்கூறிய விருவகை யூடல்களோடு சேர்ந்து பரத்தையிற் பிரிவின் விரியாமென்க; எனவே யிம் முப்பத்து நான்கு துறைகளும் வாயில் வேண்டல் வாயின்மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என்னும் நான்கு வகைக்குமேற்ற பெற்றியறிந்து முடித்துக் கொள்க.

28 - பரத்தையிற் பிரிவு முற்றிற்று.
------------

இருபத்தொன்பதாவது. - ஓதற்பிரிவு.

அஃதாவது - தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல். தலைவன் தலைவியையெய்தியிருந்தும் ஓதற்குப் பிரிவுகுறைபா டாகாதோவெனின்? ஆகாது, என்னை? புலமைநிரம்பாமலக்குறைதீர்ப்பான் ஓதற்குப் பிரிதலன்று. பண்டேகுரவராற் கற்பிக்கப்பட்டு, அறம்பொருள் இன்பம் வீடு நுதலிய நூல்களெல்லாங் கற்றான் பரதேயத்து அவை வல்லாருளரெனிற்சென்று தன்னறிவை மேற்படுத்திக் காட்டற் கென்க. இவ்வோதற்பிரிவு முதலிய எல்லாப் பிரிவுகளும் - பிரிவறிவுறுத்தல் பிரிவுடன்படாமை பிரிவுடன்படுத்தல் பிரிவுடன்படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழிமகிழ்ச்சி என வொன்பது வகைப்படும். ஆங்காங்குக்காண்க.

தலைவன் பாங்கிக் கோதற் பிரிவுரைத்தல்.

(இ-ள்.) வெளி.

    பின்போ யினன் கண்ணன் நள்ளிருட் போதெரு பெண்மனைக்கே
    யன்போடு தூதுசென் றானெம் பிரானு மலர்க்கமலப்
    பொன்போது மார்பன் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    மின்போ னுடங்கிடை யாயோதி னார்க்கன்றி வேறெவர்க்கே. (478)

பாங்கி யோதற்பிரிவு மறுத்தல்.

(இ-ள்.) வெளி.

    ஓது வதற்கண்ண லேபிரிந் தாலொண் மயிலையென்பு
    மாது படுத்தினர் போலோதி வாரும் வருந்தமிழைக்
    கோது பிரித்தெறி கோமான் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    றீது படக்கொடி யாவிசென் றாலுந் திருப்புகைக்கே. (479)

ஓதற்குப் பிரிந்தமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் ஓதற்குப் பிரிந்து சென்றதைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

    எரியோ குளிர்ந்தது நீரோ வெதிர்ந்ததன் றேடிடநூல்
    விரியோது மோர்பிள்ளை யானைக்கென் றோவெகுண் டேமதுரைக்
    கரியோட வென்ற குலோத்துக்க சோழன்கல் யாணிவெற்பில்
    வரியோ டரிக்கண்ணி யோதச்சென் றாருன் மவுணருமே. (480)

ஓதற்குப் பிரிந்துழி தலைவி கார்ப்பருவங் கண்டிரங்கல்.

(இ-ள்.) தலைவன் ஓதற்குப் பிரிந்தவிடத்துக் கார்காலம் வர அதுகண்டு தலைவி வருந்துதல்.

    அங்கே யறிந்துள பாவையன் பாக வணைந்தமன்ன
    ரிங்கே யெமைமறந் தோவந்தி லாரெறி யாழியைமுன்
    கங்கே வகுத்த குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    கொங்கே கமழ்குழ லாய்மழை நாளுங் குளிருங்கண்டே. (481)

ஓதற்குப் பிரிந்துழித் தலைவி பனிப்பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்.) வெளி.

    தனிக்கா லமுமென் னுறங்காத கண்ணுந் தளர்வுமிந்தப்
    பனிக்கா லமும்வந்தும் வந்தில ரேபர வேந்தர்க்கெல்லாந்
    துனிக்கால னன்ன வுறந்தைக் குலோத்துங்க சோழன்வெற்பி
    னினிக்கால மெவ்வண்ண மேதெண்ண மோதவங் கேகின்றதே. (482)

ஓதற்குப்பிரிந்த தலைவன் மீண்டமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) ஓதற்குப்பிரிந்த தலைவன் வந்தமையைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

    மாலாழி யுண்டு வருமேகங் கண்டுநின் மன்னர்மின்னே
    நூலாழி யுண்டின்று மீண்டனர் காண்படி நூற்படிசெங்
    கோலா லளிக்குங் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி
    லோலா ரணமுணர்ந் தார்பூண்ப ரோபெண் ணுயிர்ப்பழியே. (483)

29. ஓதற்பிரிவு முற்றிற்று
__________

முப்பதாவது.-காவற்பிரிவு.

அஃதாவது நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவு. அங்ஙனமாயின் தலைவன் நாட்டை நலிதலுங் கைக்கொள்வதும் உளராக, அவைதீர்க்கச் செல்வானாயின் வலியிலனாதல் வேண்டுமெனின்? அற்றன்று, நாட்டகத்தினின்று நகரத்துவந்து குறைசொல்ல மாட்டாத மூத்தோரும் பெண்டிரும் கூனரும் குருடரும் பிணியுடையாருமாகிய இத்தொடக்கார் முறைப்பாடு கேட்டுத் திருத்துதல் காரணமாகவும் வளனில்வழி வளந்தோற்று வித்தற்கும் ஆலயம் அறச்சாலை முதலியவற்றை யாராய்தற்கும் உயிர்கள் தாயைக் கண்டின்புறுதல்போல் தன்னாற் காக்கப்பட்ட அவ்வுயிர்கள் தன்னைக்கண்டின் புறத்தன்னுருவு காட்டுதற்கு மென்க.

தலைவன் காவற்பிரிவு தோழிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தன்னாடு காத்தற்குப் பிரிதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

    மண்ணுயிர் காத்து வருவேன் வருமத் துணையுமுங்கள்
    பெண்ணுயிர் காத்திங் கருகிருப் பாய்பெரும் பேய்முலையின்
    கண்ணுயிர் வாங்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லெண்ணுயிர் காப்பவற் குன்னுயிர் வேறல்ல வென்றணங்கே. (484)

தோழி காவற்பிரி வுடன்படாமை.

(இ-ள்.) வெளி.

    கைவா ளபிமன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பின்
    மொய்வா ளரியன்ன மன்னவ ரேமுழங் காழிநிலத்
    தெய்வாளிக் கள்ள ருறாதறங் காக்கவென் றேகுகின்றீ
    ரைவாளிக் கள்ள ரிவளையுற் றாற்புக லார்சொல்லுமே. (485)

தோழியைக் காவற் பிரி வுடன்படுத்தல்.

(இ-ள்.) தலைவன் காவற் பிரிவுக்குப் பாங்கியைச் சம்மதிக்கச் செய்தல்.

    எண்மா திரந்தொழுங் கோழிக் குலோத்துங்க னெண்ணலர்போ
    லுண்மாது நைவது தேற்றுகெற் காயுங்கண் மாதிரண்டு
    கண்மா மழையொழி யுந்திறம் யானறங் காத்துடனே
    விண்மா மழைபொழி யுங்கால மீளுவன் மெல்லியலே. (486)

தலைவிக்குத் தோழி காவற் பிரிவுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் காவற் பிரிவு தோழி தலைவிக்குக் கூறுதல்.

    விண்காப்பு வாசவ னேழ்கடற் காப்பந்த மெய்வருணன்
    மண்காப்பு நம்மண்ண லாதலி னால்வரும் பாவலவர்
    கண்காப் பனைய குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    பெண்காப்புந் தான்செய்யுங் காப்பென்று போயினர் பெண்ணணங்கே (487)

காவற்குப் பிரிந்துழித் தலைவி கார்காலங் கண்டிரங்கல்.

(இ-ள்.) தலைவன் நாடுகாவலுக்குப் பிரிந்த இடத்துக் கார் காலங்கண்டு தலைவி வருந்துதல்.

    மைவா னிறம்வெண் ணிறமாய்க் குளிர்பனி வாரிபெய்யு
    மிவ்வாடை யங்கில்லை யோதெய்வ மேமழை யேழுமெட்டுங்
    கைவா ரணநங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    னுய்வாளெவ் வாறு பிரிந்தபெண் பாவியென் றோர்ந்திலரே. (488)

தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.
(இ-ள்.) வெளி.

    நையா தொழியணங் கேயறங் காக்க நயந்துசென்றார்
    மெய்யாநின் னாவியுங் காக்கவந் தார்வெங் கடாமழைபாய்
    கையானை மன்னன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
    பொய்யார் பெரிய ருலகமு மூழியும் பொய்க்கினுமே. (489)

30 - காவற் பிரிவு முற்றிற்று.
----------------

முப்பத்தொன்றாவது - தூதிற்பிரிவு

அஃதாவது - இரண்டரசர் தம்மிற் பொருகின்றவிடத்து அவரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவு. அரசரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவெனின், தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய்து வாழ்வார்; அவரொப்பில்லா ராவா ரென்பதென்னையெனின்? இரண்டரசரும் நாளைப் பொருவோமென்று முரண்கொண்டிருந்த நிலைமைக்கண் தானருளரசனாதலின் மக்களும் விலங்குகளும் பலபடல் சகியாது இப்போரை யொழிப்பேனென்று, இருவரையு மிரந்து சமாதானஞ் செய்வித்தலாலென்க. அன்றி, தேவரு மசுரரும் பொருதகாலத்துத் தேவரையு மசுரரையு மிகைசெய்தாரை யானொறுப்பலென்று பாண்டியன் மாகீர்த்தி சமாதானஞ் செய்வித்ததுபோல இவரையு மிகை செய்தாரை யொறுப்பலென்று தூதாகச் செல்லுதலென்றலுமொன்று.

தலைவன் பாங்கியுடன் தூதிற் பிரிவுணர்த்தல்.

(இ-ள்.) இரண்டரசர்பொருட்டுத் தூதுக்குச் செல்லுதல் தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

    அரிதூது சென்றனன் பாரதப் போர்க்கது போலவியான்
    புரிதூ தினிற்பிரி வோதணங் கேபுனல் சூழிலங்கைக்
    கெரிதூது விட்ட குலோத்துங்கன் கோழி யிடத்தில்வண்டு
    பெரிதூதும் பூங்குழ லாற்புய லாருறும் பெண்கொடிக்கே (490)

தூதிற் பிரிவு பாங்கி மறுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவியைப் பிரிந்து தூதுக்குச் செல்லுந் தலைவனைத் தடுத்தல்.

    கோடிய வார்சிலைக் கையான் குலோத்துங்கன் கோழிவெற்பி
    லாடிய போர்ப்பகை தீரச்செல் வீரன்ப ரேயிவட்குச்
    சூடிய பூவல ருந்தாயர் வாய்தொறுந் தூற்றலரு
    நீடிய வேளல ரும்பகை யாக நினைத்திலிரே (491)

தலைவன் பாங்கியைத் தூதிற் பிரிவுடன்படுத்தல்.

(இ-ள்.) வெளி.

    யானே யிருமன்னர் போரும் பொராம லிடைவிலக்கக்
    கானே நடப்பன்மின் னேயியம் பாய்கடற் காசினிக்குக்
    கோனே யெனவந்த கிள்ளி குலோத்துங்கன் கோழிவெற்பின்
    மானேயுங் கண்ணிக்கு முன்பனிக் காலம் வருவனென்றே (492)

தலைவிக்குத் தூதிற்பிரிவு தோழியுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தூதின்பொருட்டுப் பிரிதலைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

    மாலோடு மோது மிருமன்னர் போரை மறிப்பமன்னர்
    காலோடு தேரொடுந் தூதுசென் றார்களி றோலமென்ன
    வாலோபந் தீர்த்த குலோத்துங்க சோழ னளகைவெற்பின்
    மேலோ ரிருவர் பொரப்போருந் தூது விலக்குவரே. (493)

தூதிற் பிரிந்துழித் தலைவி முன்பனிப்பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்.) வெளி.

    மலர்வாய கஞ்சம் பிரிந்தேன் மலர்முகக் கஞ்சமொப்பாப்
    புலவர் யுணங்கிய முன்பனி நாளும் புகழெடுத்துப்
    பலர்வாயு மேத்துங் குலோத்துங்கன் கோழியின் பாலவினையே
    னலர்வா யினைவதெண் ணாரின்னந் தூதுக் ககன்றவரே. (494)

தூதிற் பிரிந்த தலைவன் மீண்டமை தோழி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

    எழுந்தூதை முன்பனித் தூவலை வீச விளைத்திளைத்துன்
    னழுந்தூ துயிர்ப்பை யடக்குவ தாயன்று பாண்டவர்க்குத்
    தொழுந்தூ துரைத்த குமார குலோத்துங்க சோழன்வெற்பிற்
    செழுந்தூது முற்றி யணங்கே யிறைவர் திரும்பினரே. (495)


31- தூதிற் பிரிவு முற்றிற்று.
-------------

முப்பத்திரண்டாவது - தூணைவயிற் பிரிவு.

அஃதாவது - நட்பாகிய அரசனுக்குப் பகையரச ரிடையூறுற்ற வழி, அது தீர்த்தற்குத் தலைவன் றுணையாகப் பிரிதல். தன்னுழையரிலொருவனைப் படைகூட்டிச் செல்லவிடாது தான் போதல் வேண்டுமென்ப தென்னையெனின்? நட்பு மிகையால் தானே யவனாயிருத்தலின் அவன் கருமந் தன் கருமமாக வெண்ணி விரைவினெழுந்து அப்பகை தீர்க்கத் தானே போனானெனக்கொள்க.

தலைவன் பாசறைப் பிரிவு பாங்கிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் அரசர்க்குத் துணையாகப் படைவீட்டுக்குப் பிரிந்து போதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

    *நார்த்துணை வேந்தர்தம் மேற்படை கூட்டிநண் ணார்மலைக்கும்
    போர்த்துணை யாகவி யான்செலு மாறு புயமிரண்டுந்
    தார்த்துணை மேரு வனையான் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
    வார்த்துணை மாமுலை யாட்குரை யாயின்று வாணுதலே. (496)

தலைவன் பாசறைப் பிரிவு பாங்கி யுடன்படாமை.

(இ-ள்.) வெளி.

    மன்னாந் துணைக்குத வச்செலு வீர்மதன் போர்க்கஞ்சுமெம்
    மின்னாந் துணைக்குற விப்பனி யோவிரைத் தாமரையிற்
    பொன்னாந் துணைவன் குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யென்னாந் துணைவர் பழிகாப்பு நீதி யியற்கையுமே. (497)

உதவியிற் பிரிவு பாங்கியை யுடன்படுத்தல்.

(இ-ள்) தலைவனுதவியாகப் பாசறைக்குப் பிரியும் பிரிவுக்குப் பாங்கியைச் சம்மதிக்கச் செய்தல்.

    அழியாத நன்மைப் புகழ்வேண்டி நண்பினர்க் காகச்செல்வன்
    பழியா வதுகொள்வ னோவணங் கேபசுந் தேனருவி
    பொழியார மாலைக் குலோத்துங்க சோழன் புகார்வரைவாய்
    மொழியாய் திரும்புவர் பின்பனி நாளென்று மொய்குழற்கே. (498)

உதவிக்குப் பிரிந்தமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்) வெளி.

    கண்பான லன்னமின் னேமதன் போர்வருங் காலத்திங்கும்
    பண்பா லுதவ வருவமென் றார்பணிந் தேத்தினர்க்கு
    மண்பா லளிக்கு முறந்தைக் குலோத்துங்க மன்னன்வெற்பி
    னண்பாளர் போர்க்கு முதவச்சென் றாரின்று நாயகரே (499)

உதவிக்குப் பிரிந்துழித் தலைவி பின்பனிப் பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்) வெளி.

    தேர்வாய் பரிதியை யுள்ளே விழுங்கிச்செந் தீப்புழுங்கும்
    வேர்வா யழிக்குமிப் பின்பனிக் காலம் வெகுண்டுபுள்ளின்
    கூர்வாய் பிளந்தன்று வென்றோன் குலோத்துங்கன் கோழிவெற்பிற்
    போர்வா யுதவச்சென் றார்வந்தி லாரின்னம் பூவையரே. (500)

தலைவன் பாசறைப் புலம்பல்

(இ-ள்) தலைவன் தலைவியைப் பிரிந்த வருத்தஞ் சகியாமற்படை வீட்டிலிருந்து துன்புறுதல்.

    முன்னே தவழிள வாடையி னான்முன் முயங்குபுய
    மென்னேயிப் பாசறை வெம்பின வேலெழு பார்க்குமொரு
    மன்னேயெனுஞ் சென்னிகோழிக் குலோத்துங்கன் மால்வரைவாய்
    மின்னேநின் றென்படும் பின்பனிக் காலந்தன் மெய்குளிர்ந்தே. (501)

மீளுந் தலைவன் மின்பதி சேய்த்தென மெலிதல்.

(இ-ள்) பாசறையை விட்டுவருந் தலைவன் தலைவியிருந்த நகரந் தூரமாயிருக்கிறதென்று பாகனொடு வருந்திச் சொல்லுதல்.

    மருந்தூருஞ் சொல்லி தனிவைகு மூர்க்கிற்றை வைகல்செல்லத்
    திருந்தூருந் தேர்ப்பரி செல்லரி தோதிருந் தாவரசர்
    பொருந்தூர் கவர்ந்த குலோத்துங்க சோழன் புகார்வரைவா
    யருந்தூர மாய்விட்ட தாவல வாவிவ் வழற்சுரமே. (502)

மீளுந் தலைவனைப் பாங்க னாற்றல்.

(இ-ள்.) திரும்பிவருந் தலைவனைப் பாங்கன் சீக்கிரந் தேர் செலுத்துவேனென்று கூறிக் கவலை தணித்தல்.

    மஞ்சேதெற் கோடு நெடுவானிற் பின்பனி வாரல்கண்டு
    பஞ்சே ரமளிதுஞ் சாதநின் பாவைமுன் பற்றலர்க்கு
    நஞ்சே யனைய வுறந்தைக் குலோத்துங்க னாட்டுனது
    நெஞ்சேகு முன்னரித் தேரேகக் காண்டி நெடுந்தகையே. (503)

உருவெளிக் காண்டல்.

(இ-ள்.) தலைவ னிடைவழியில் தலைவி வடிவம்போலத் தோன்றுமவறைக் காணுதல்.

    காரும் பிறையுஞ் சிலையுங் குமிழம் கமலமுமுந்
    நீருஞ் சுறவுங் குமுதமுங் கோங்கமு நேரரச
    ராரும் பணியுங் குலோத்துங்க சோழ னளகைமின்னுந்
    தேருங் கதலியுந் தேமாந் தளிருந் திசையெங்குமே. (504)

உதவியிற் பிரிந்த தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக்குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

    நீடு மவுணர் வரவெண்ணி வாடலை நேரிழையா
    யாடு மமர்முற்றி மீண்டனர் காணம ரார்க்கமரர்
    நாடு கொடுத்த குமார குலோத்துங்க னாட்டினின்கை
    யோடும் வளைக்கு முகவளை தேர்முன் பொலிவளையே. (505)

32-துணைவயிற் பிரிவு முற்றிற்று.
____________

முப்பத்து மூன்றாவது.-பொருள்வயிற் பிரிவு.

அஃதாவது – பொருளீட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு. ஆயின், முன் பொருளிலனாம். ஆகவே, "எள்ளுநர்ப் பணித்தலு மிரந்தோர்க் கீதலு, நள்ளுநர் நாட்டலு நயவாரொறுத்தலும்" என்னு மிவையெல்லாம் பொருட் குறைபாடுடையார்க்கு நிகழாமையின், இக்குறைபாடெல்லா முடையனாம்; அவையுடையன தொப்பின்மை யென்னையோவெனின்? பொருளில்லாதவனாய்ப் பிரியுமென்பதன்று. தன்முதுகுரவராற் படைக்கப்பட்ட பல வேறு வகைப்பட்ட பொருள்களெல்லாவற்றையுங் கொண்டு பயன்றுய்ப்பது ஆண்மைத் தன்மை யன்றெ
னத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ்தற் பொருட்டென்க; இஃதன்றித்தனது முயற்சியாற் கிடைத்த பொருள் கொண்டு செய்த கருமங்கள் தனக்கே பயன்படும் பொருட்டுமாம்.

தலைவன் பொருள்வயிற் பிரிவு பாங்கிக் குணர்த்தல்.

(இ-ள்) வெளி.

    காவார் தடக்கைக் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பி
    லீவா ரறனின்பம் யாவுஞ்செய் வாரெவ ரோடுநண்ப
    ராவார் கலைவளர்ப் பார்துரப் பார்பகை யத்தனையு
    மாவார் விழிமொழி கைப்பொரு ளாலென்று வாணுதற்கே. (506)

தலைவன் பொருள்வயிற் பிரிவு பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்) வெளி

    கற்றார் மறைஞர் புரந்தர னாவர் கலந்துபுக
    லுற்றார் கிளைஞ ரளகேச னாவர்தன் னொண்புயத்தி
    னற்றா ரணியுங் குமார குலோத்துங்க னாகைவெற்பிற்
    பொற்றா ரணிமன்னர் சென்றார் பொருட்கின்று பூங்கொடியே. (507)

பொருள்வயிற் பிரிந்துழித்தலைவி யிளவேனிற் பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்) வெளி.

    அருளாழி யாளன் குலோத்துங்க சோழ னளகைவெற்பின்
    வெருளாமிவ் வேனிற் சிறுகா லழலும்வெவ் வாய்க்குயிலு
    மிருளாகு நஞ்சினும் வெய்தா மெனக்கென்ப தெண்ணிவரார்
    பொருளாசை யுள்ளவர்க் காரா சையுமில்லை பூங்கொடியே. (508)

பொருள்வயிற் பிரிந்துவந்த தலைவன் பாகனை வியத்தல்.

(இ-ள்) பொருள் காரணமாகப் பிரிந்து மீண்ட தலைவன் விரைந்து தேர்செலுத்திய சாரதியை மகிழ்தல்.

    கொந்தே கமழ்தொங்கற் சென்னி குலோத்துங்கன் கோழிவெற்பில்
    வந்தேன் சுரத்தின் விரைந்துநம் மூரில் வயப்புரவி
    நந்தேர் வலவநின் கைக்கோலுக் கந்த நகைப்பகலோன்
    செந்தேர் வலவன்கைக் கோலுமொவ் வாதென்கொல் செப்புவதே. (509)

தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்) தலைவன் திரும்பிவந்ததைத் பாங்கி தலைவிக்குச்சொல்லி மகிழச் செய்தல்.

    விரியுங் குழன்முடி செஞ்சாந் தணிமணி மேகலையுஞ்
    சரியு மணியுந் தரியணங் கேதரி யார்சிரத்தை
    யரியும் படைக்கைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற்
    புரியும் பொருண்முற்றி மீண்டார்நின் னன்பர் பொலன்கொடியே. (510)


33 பொருள் வயிற்பிரிவு முற்றிற்று.
குலோத்துங்க சோழன் கோவை முற்றுப்பெற்றது.

------------

Comments