Kārttikai tīpa veṇpā


பிரபந்த வகை நூல்கள்

Back

கார்த்திகை தீப வெண்பா
சோணாசல பாரதியார்



கார்த்திகை தீப வெண்பா
ஆசிரியர்: சோணாசல பாரதியார் (1858-1925)



Source
"திருவண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா"
காஞ்சிபுரம் புராணிகர் சோணாசல பாரதியார் (1858-1925)
அருளிய "கார்த்திகைத் தீப வெண்பா"
வெளியீடு
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை
12.12.97.
ஈஸ்வர ஆண்டு கார்த்திகைத் திங்கள் 27-ம் நாள்
-----------

புராணிகர் சோணாசலபாரதியார் இயற்றிய
"திருவண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா"



சிவமயம்

காப்பு - வெண்பா

கீர்த்திபெறுஞ் சோண சிரிமுடியின் மீதொளிருங்
கார்த்திகைத் தீபவெண்பா கட்டுரைக்கப்-பூர்த்தியுற
நம்பந்த வாரணத்தி னாதனரு ளைந்துகரச்
சம்பந்த வாரணத்தின் றாள்

நூல்



கங்கையணிதீபங் கற்பூர தீபமலை
மங்கயொருபங்கில் வளர்தீபம் - பங்கயன்மால்
விண்பாரு நேடும்வண மேவியவண் ணாமலையிற்
பண்பாருங் கார்த்திகைத்தீ பம். - (1)


அன்ன மளிக்குந்தீப மண்டினரை யாதரித்துப்
பொன்னு மளிக்குந்தீபம் பொற்றீப-மன்னு
மராவணிநேர் காட்டுமெங்க ளண்ணா மலைமேற்
பராவருங் கார்த்திகைத்தீ பம். - (2)


மோகாந்த கார முறிந்தோடச் செய்தீப
மோகாந்த மாவந் திடுந்தீப-மாகாந்த
னாங்கார்ந்த தென்றுரைக்க வண்ணா மலைமுடிமேற்
பாங்கார்த்த கார்த்திகைத்தீ பம் - (3)


பந்துமுலைப்பாவையர்க்காம் பாங்காருங் கூடலிலே
வந்து வளையல் விற்ற மாதீபங்-கொது
மலர் மலியுஞ் சோண மலைத் தீபம்போற்றிப்
பலர்மலியுங் கார்த்திகைத்தீ பம். - (4)


இட்டவிதி சாப மிரிந்தோடப் போற்றிசைக்கு
மற்ற வசுக்கட் கருடீபஞ்-சிட்டர்
வதிதரு சீர்ச் சோண மலைத்தீப மெம்முட்
பதிதருசீர்க் கார்த்திகைத்தீ பம். - (5)


ஆதுலரா னீரென்றே யன்றொருசேய்க் காவழக்கு
மாதுலரா வந்துரைத்த வண்டீபந்-தாதுலரா
நந்தனஞ்செய் சூழுஞ்சோ ணாசலத்தி லன்பரன்பிற்
பந்தனஞ்செய் கார்த்திகைத்தீ பம் - (6)


நீடுகற்பி னாளுடன்வாழ் நீல்கண்டர் தம்மிடம்வந்
தோடுகவர்ந்த தாண்ட வொருதீப - மாடுமயிற்
கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப்
பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். - (7)


செங்கமல வேதா திலோர்த்தமையைப் பின்றுரத்த
வங்களுக் காவேட னாந்தீபம் - திங்கடவழ்
சோணமலைத் தீபமிகத் தோத்திரஞ்செய் தென்றுமுயர்
சாணர்மகிழ் கார்த்திகைத்தீ பம் - (8)


மண்ணிடந்துங் காணா மலரடியின் மாயவனார்
கண்ணிடந்து சாத்திக் களிதீப-மெண்ணிறந்த
கீர்த்திபெறுஞ் சோண கிரித்தீபந் தென்மதுரைப்
பார்த்திபனாங் கார்த்திகைத்தீ பம். - (9)


எல்லா வுலகு மிசைய வருச்சுனன்கை
வில்லா லடியுண்ட மெய்த்தீப-பொல்லாக்
கவிதீர்க்குந் தீபங் கனவருணைத் தீபம்
பலியேற்குங் கார்த்திகைத்தீ பம். - (10)


சீரார் சிறுத்தொண்டர் செல்வன் கறியுண்ணப்
பேராரை வைத்த பெருங்தீபங்-காரா
ரருணைகிரித் தீபமனத் தல்லும் பகலும்
பருணிதர்பேற் கார்த்திகைத்தீ பம். - (11)


உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங்
கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்டீபம்-வெள்ளமதி
மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற்
பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். - (12)


தொண்டர்க்குத் தோன்றாத் துணையான் தீபநல்ல
வண்டர்க்கு மெட்டா வருட்டீபம்-வண்டமருந்
தோடுடைய பூம்பொழில்சூழ் சோணமலைத் தீபநன்மேம்
பாடுடைய கார்த்திகைத்தீ பம். - (13)


வென்றுனே வன்புலனை வீட்டியுணர் கும்பமுனிக்
கன்றுமணக் கோலமரு டீபஞ்-சென்றுவியன்
விண்ணளக்குஞ் சோணகிரி மேற்றீப மன்பருக்குப்
பண்ணளிக்குங் காத்திகைத்தீ பம். - (14)


போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை
மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்-சாற்றுமறை
யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம்
பன்னரிய கார்த்திகைத்தீ பம். - (15)


சிற்றம் பலத்திற் றிருகடனங்செய் தீபமன்பர்
குற்றம் பலகுணமாக் கொள்தீப-மற்றந்
துடைத்தருளுஞ் சோணமலைத் தோன்றியதீ பஞ்சீர்
படைத்தருளுங் கார்த்திகைத்தீ பம் - (16)


கஞ்சமலர்க் கண்ணனயன் காண்பரிய தீபமெனுள்
வஞ்சமல மகற்றும் வான்றீப-நஞ்ச
மயிலுமுயர் தீபமெழி றண்ணா மலைமேற்
பயிலுமொரு கார்த்திகைத்தீ பம் - (17)


அன்பருளத் தேயகலா வானந்த தீபம்பே
ரின்பருளத் தோன்று மெழிற்றீபம்-வன்பருளத்
துற்றறியா தீபம்வள மோங்குமரு ணாசலத்திற்
பற்றகலாக் கார்த்திகைத்தீ பம். - (18)


ஆலால் சுந்தரரை யன்றுமணந் தடுத்து
மேலா வுவந்தாண்ட மெய்த்தீபம்-பாலாழி
யோர்புதல்வ னுக்கருளி யோங்குமரு ணைத்தீபம்
பார்புகழுங் கார்த்திகைத் தீபம். - (19)


வாதவூ ரன்பர் மகிழப் பெருந்துறையிற்
போதமளித்த புகழ்த்தீப-மேத
மகலவருந் தீபமுய ரண்ணா மலையிற்
பகலவனேர் கார்த்திகைத்தீ பம். - (20)


முத்திக்கு வித்தா முளைத்தெழுந்த தீபமெழிற்
சத்திக் கொருபால் தருதீப-மெத்திக்கு
மார்த்துமிக்கு மன்புடனே யண்ணா மலைமீது
பார்த்துவக்குக் கார்த்திகைத்தீ பம். - (21)


போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசைக்கும் தீபம்விந்து
நாதாந்த முங்கடந்த நற்றீபம்-வேதாந்தச்
சித்திதருந் தீபந் திருவருணைத் தீபநல்ல
பத்திதருங் கார்த்திகைத்தீ பம். - (22)


பாணனுக்கோர் சத்துருவாம் பாடகனைக் கூடலிலே
நாணமுற்றே டப்பாடு நற்றீபம்-பேணி
யயனுமரி யுங்காணா வண்ணா மலையிற்
பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். - (23)


முத்திநெறி காணவென்று முன்னுமன்ப ருக்குமுன்னம்
பத்திநெறி காட்டிப் படர்தீபச்-சத்திநெறி
யோடுதவஞ் செய்யருணை யோங்கிதீ பம்பெரியோர்
பாடுமெழிற் கார்த்திகைத்தீ பம். - (24)


சத்தான தீபமுயர் சன்மார்க்க ருள்ளத்தி
வித்தா முளைத்து மிளிர்த்தீப-முத்தான
மோங்கு கரிக ளுலவுமரு ணாசலத்திற்
பாங்குபெறுங் கார்த்திகைத்தீ பம். - (25)


இன்பந்த தருதீப மேத்திப் பணிந்தோர்க
டுன்பவிரு ளோட்டுஞ் சுடர்த்தீப-மன்ப
ரவமறுக்குந் தீப மருணைவளர் தீபம்
பவமறுக்குங் கார்த்திகைத்தீ பம். - (26)


அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த
மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீப-மெஞ்ஞான்றுஞ்
சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும்
பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். - (27)


நட்டம் புரிதீப நல்லடியார் தங்கள்கொடுங்
கட்டங்களையே களைதீப-மட்ட
திசைமேவு மெங்கடிருவருணைத் தீபம்
பசைமேவுங் கார்த்திகைத்தீ பம் - (28)


நாடியடி யார்ப்பரவு ஞானதீ பம்மறைக்கு
நேடி யரியா நெறித்தீப-நீடுந்
திருவருணைத் தீபந் தினமமரர் போற்றிப்
பருவரல்தீர் கார்த்திகைத்தீ பம். - (29)


நாலா ரணமு நவிலரிய ஞானமெனு
மேலான போகம் விளைதீப-மாலால்
முண்டமரர் தங்களிட ரோட்டருணைத் தீபமன்பாய்
பண்டமருங் கார்த்திகைத்தீ பம். - (30)


சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங்
கன்மவினை போக்குங் கனதீப-மன்பதனை
யங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம்
பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். - (31)


மாமறைக்கு மெட்டா மணித்தீப மேழைகட்குச்
சேமமளித் துக்காக்குஞ் சீர்த்தீபந்-தாமரையு
நத்துமெளிர் வண்சுனைச் சோணாசல தீபந்திசைகள்
பத்துமொளிர் கார்த்திகைத்தீ பம். - (32)


கற்றைச் சடைமுனிவர் காண்டீப மாரூரிற்
புற்றையிடங் கொண்டுறையும் பொற்றீப-மொற்றைத்
தவளவநத் தந்தனைமுன் றந்த வருணைப்
பவளவநக் கார்த்திகைத்தீ பம். - (33)


மன்னு மிளசைநகர் மாறன் முளைவாரி
யன்னமிடைச் சேவை யருடீபம்-வன்னச்
சிகரநெடுங் கோபுரஞ்சேர் தென்னருணைத்தீபம்
பகரமிகுங் கார்த்திகைத்தீ பம். - (34)


நாவுக்கு வேந்து நமச்சிவா யப்பதிகப்
பாவுக்குக் கன்மிதக்கப் பண்டீபம்-வாவித்
கயன்மேய்க் கமுகுடைக்குங் காமரரு ணைக்கோன்
பயன்மேவுங் கார்த்திகைத்தீ பம். - (35)


சிந்தைக் கலக்கந் தெளிவிக்குந் தீபந்தாய்
தந்தைக் கிணையாகச் சார்தீபம்-விந்தை
மதினிலவுக் காறா வளரு மருணைப்
பதிநிலவுங் கார்த்திகைத்தீ பம். - (36)


மன்னுயிர்கட் கோருயிரா வந்தருளுந் தீபமறை
யுன்னுதற்கு மெட்டாத வோர்தீபம்-பொன்னுலகைக்
கீழாக்குஞ் சோணகிரித் தீபம் வெவ்வினையைப்
பாழாக்குங் கார்த்திகைத்தீ பம். - (37)


மூவருக்கு ளாதி முதலான தீபமுயர்
தேவருக்குங் காண்பரிய சீர்த்தீப-மேவருவி
யாலிக்குஞ் சோணமலை யார்ந்தசெழுந் தீபமின்பம்
பாலிக்குங் கார்த்திகைத்தீ பம். - (38)


கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர்
தந்தனையுஞ் சேயாத் தருதீப-மெந்தமைக்க
ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப்
பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். - (39)


வேலனைநேர் மார்க்கண்டேயர் மேவுசிவ பூசைக்காக்
காலணையு தைத்த கனதீபம்-கோல
விதுமகிழுஞ் சோணகிரி வேணுவின்மேற் சூடும்
பதுமநிகர் கார்த்திகைத்தீ பம். - (40)


தக்கனுக்கு மேடத் தலையளித்த தீபமென்று
நக்கனெனப் பேர்படைத்த தற்றீப-மிக்க
விருப்பதனாற் சார்ந்தார் வினைதீர்க்குஞ் சோணப்
பருப்பதஞ்சேர் கார்த்திகைத்தீ பம். - (41)


கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்
குற்றதுணையா வுறுதீபஞ்-சொற்றகதிக்
கேணிநிகர் சோணகிரி யேர்முடிமே லஞ்சலெனும்
பணிநிகர் கார்த்திகைத்தீ பம். - (42)


பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான்
பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்-விண்ணுடனே
சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப்
பாரமலைக் கார்த்திகைத்தீ பம். - (43)


தந்தைதிருத் தாடடிந்த சண்டே சுரருக்குச்
சிந்தைமகிழ் தீபஞ் செழுந்தீப-முந்தை
யொருமுடிவில் லாமலுய ரருணை வெற்பின்
பருமுடியிற் கார்த்திகைத் தீபம். - (44)


பஞ்சாக் கரத்தைமிக்கு பத்தியுட னுன்னுணர்க்கு
விஞ்சாக்க மாக மிளிர்தீப-மஞ்சார்க்கச்
சிஙகமுழை விட்டகலாத் தென்னருணை வெற்புறுமோர்
பங்கதழ்வாங் கார்த்திகைத் தீபம். - (45)


பந்தவினைப் பாசத்திற் பட்டுழலும் பாதகனேன்
மந்தமதி நீக்கும் வண்டீபஞ்-சந்ததமுங்
கொக்குமிசை நற்குயில்கள் கூவருணைத் தீபமுயர்
பக்குவர்காண் கார்த்திகைத் தீபம். - (46)


ஏதம் பெரிதுடையே னேத்துந்தீ பஞ்சாம்
வேதம் பெரிதும் விழைதீபங்-கேதம்
புலிக்குங்கோ விக்குமிலாப் பொன்னருணை வெற்பிற்
பலிக்குஞ்சீர்க் கார்த்திகைத் தீபம். - (47)


வன்னிமதி சென்னிமிசை வைத்தருளுந் தீபமறை
பன்னி மதிக்கப் படாத்தீபங்-கன்னிமதிற்
சூரியற்கு மேலுயருஞ் சோணமலை மீதுவளர்
பாரிநற் கார்த்திகைத் தீபம். - (48)


ஆர்த்துவந்தி டுங்கொடுங்க யாசுரணை யன்றெருநா
னீர்த்துரித்துப் போர்த்த வெழிற்றீபம்-பார்த்துரைக்க
வொண்ணாத சோணகிரி யோங்கியதீ பங்கோபம்
பண்ணாத கார்த்திகைத் தீபம். - (49)


பொய்வசமாம் வஞ்சமனம் போமழியா மூவர்களாற்
சைவசமயந் தருதீபந்-தெய்வ
முனிவர்நித்த முண்மகிழ்ந்து மெய்யருணை சார்ந்தார்
பணியகற்றுங் கார்த்திகைத் தீபம். - (50)


பாரருந்தி னோன்றுதித்தல் பண்டீபம் வாவிகரை
சீரிருந்தி யேறக் கிளர்தீப-நீரருந்திச்
சீவனஞ்செய் மாதவர்வாழ் தென்னருணைத் தீபமெம்மைப்
பாவனஞ்செய் கார்த்திகைத் தீபம். - (51)


தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை
கூருகிரினா லுரித்துக் கொள்தீப-மேருமுக
லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமரு ணாசலத்திற்
பாங்குமலி கார்த்திகைத் தீபம். - (52)


நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற்
சென்றுரச வாதமது செய்தீபங்-கன்றுகளுக்
கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப்
பம்பிவளர் கார்த்திகைத் தீபம். - (53)


மாயப் பசுவமணர் மாமதுரைக் கேவவதை
வீயச்சமர்செய்விடைத்தீப-நேயமா
னீராட் டுவனேர்க்கார் நீள்சோண வெற்பிலன்பர்
பாராட்டுங் கார்த்திகைத் தீபம். - (54)


போதனந்த ரத்தவரும் போற்றுந் தீபங்கொடியேன்
கோதனந்த மும்பொறுத்துக் கொள்தீப-நாதனண்டந்
தாங்கனிகர் பண்டுபலாத் தாங்கிவளர் சோணமலைப்
பாங்கமருங் கார்த்திகைத்தீ பம். - (55)


பொன்புரையுஞ் செம்மேனிப் புண்ணியதீ பஞ்சிறிய
வென்புரைமுற் றுந்தீர்த் திடுந்தீப-மன்புரைகொண்
டேத்தியமாத் தொடண்டர்களுக் கென்றுமரு ணாசலத்திற்
பார்த்தியபாங் கார்த்திகைத்தீ பம். - (56)


பாவிகளும் வந்தேத்திடப் பார்த்துப் பணிவாரேன்
மேவிவினை தீர்த்தருளு மெய்த்தீபம்-தேவிமுலை
தீட்டுதொய்ய னேர்மயில்சேர் கென்னருளை வெற்பிலன்பர்
பாட்டுவக்குங் கார்த்திகைத்தீ பம். - (57)


சோமனைக் காருண்ணியமாச் சூடுந்தீ பங்கொடிய
வேமனைக்கால் கொண்டோச் செழிற்றீபந்-தாமரைக
ணெற்றிவளர் கண்போல நீளுமரு ணாசலத்திற்
பற்றிவளர் கார்த்திகைத்தீ பம். - (58)


கோளுங் கொலையுங் குடிகெடுப்பு மாணவமு
நீளுமவர்க் கெட்டாது நீடிப-நாளுந்
திடமிக்குஞ் சோணமலைச் சென்னிவளர் நாகப்
படமொக்குங் கார்த்திகைத்தீ பம். - (59)


தில்லையம்ப லத்திற் றிருநடனஞ் செய்தீப
மொல்லையினி லின்பமுத வுந்தீப-மெல்லை
யிலாண்டுதவஞ் செய்தவரா லேரருணை வெற்பிற்
பல்லாண்டுபெறுங் கார்த்திகைத்தீ பம். - (60)


ஆணிப்பொன் மேருவில்லா வம்பரியாச் சேடனையே
நாணியெனக் கொண்டூர் நகைத்தீபம்-வேணி
விழுதிலா ரத்தவர்கண் மேவருணை வெற்பிற்
பழுதிலாக் கார்த்திகைத்தீ பம். - (61)


மின்னார் மணியரவும் வெண்மதியு நேசிக்கப்
பொன்னார் சடைமேற் புணைதீப-நன்னாரி
பூரிக்குங் கும்பமுலை போலோங்குஞ் சோணமலைப்
பாரிக்குங் கார்த்திகைத்தீ பம். - (62)


பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ்
சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்-செந்நெற்
கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது
பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். - (63)


பாகத் துமையும் படர்சடைமேற் சானவியு
மோகத் துடன்வாழ் முதிர்-தீபமேகத்
துழனிமிக்கார் சோணமலைத் தூய்முடிமேன் ஞானப்
பழநிகர்க்குங் கார்த்திகைத்தீ பம். - (64)


பொல்லா மலவிருட்டைப் போக்குந்தீ பம்புவன
மெல்லாந்தா மாகு மெழிற்றீபம்-வல்லாளன்
மைந்தனென வந்த மகிமையரு ணாசலத்திற்
பந்தமிகுங் கார்த்திகைத்தீ பம். - (65)


எங்கெங்கே யன்பரிருந் தெவ்வாறு வேண்டுகினு
மங்கங்கே யவ்வா றருடீபஞ்-சிங்கக்கேட்
டஞ்சமுகட் டார்ந்துமுகி லார்க்குமரு ணாசலத்திற்
பஞ்சமுகக் கார்த்திகைத்தீ பம். - (66)


எட்டுமிரண் டுந்தெரியா வேழையே மென்பாருட்
கட்டுப்பட் டோங்குங் கனதீப-மட்டிலா
மேன்மைதரு சோணகிரிமேவும்பிறைக் கொழுந்தின்
பான்மைதரு கார்த்திகைத்தீ பம். - (67)


கங்கைதனை யேவியெழிற் கம்பாநதியிலுமை
கொங்கை வலைத்தழும்பு கொள்தீபஞ்-சங்கையிலாப்
புங்கவர்சேர் சோணகிரிப் பொற்சடையாற் றீற்பூதப்
பங்கயநேர் கார்த்திகைத்தீ பம். - (68)


செம்மையடி யார்பூசை செய்துவந்த காரைக்கா
லம்மைக்கா லங்காட் டருடீபம்-வெம்மை
யரிகரிக்கு மில்லா வருணையடைந் தார்நோய்
பரிகரிக்குங் கார்த்திகைத்தீ பம். - (69)


காணரிய மெய்ஞ்ஞானக் காட்சியரு டீபமன்பர்
வேணவரந் தந்தருளு மெய்த்தீபஞ்-சோண
கிரிமுடிக்கண் மேவியொளி கேழ்புவன முற்றும்
பரிமளிக்குங் கார்த்திகைத்தீ பம். - (70)


பாண்டுமகன் வில்லாற் பரிந்தடிக்கப் பாசுபத
மாண்டுமையோ டெய்தி யருடீப-நீண்டு
விசும்புருவு சோணகிரி வெந்தழலி ளிட்ட
பசும்பொனிகர் கார்த்திகைத்தீ பம். - (71)


பன்னற் கரியசெழும் பச்சைப் பவளமென
வன்னமிரண்டா வளர்தீபந்-தென்னருணை
வெற்பரனும் வெந்தழலின் வெந்திட்ட வெண்கட்டிப்
பற்பநிகர் கார்த்திகைத்தீ பம். - (72)


மான்மேற் புலிபோல் வருமிடரெல் லாம்போக்கி
பானமே லிவர்ந்தெனைவந் தாடீப-மேன்மை
பணிகொ ளருணாசலமா மம்புயமே லுற்ற
பணிலநிகர் கார்த்திகைத்தீ பம். - (73)


தேடரிய தீபஞ் சிதம்பரத்தி லாலெடுத்து
நாடறியப் பேர்படைத்த நற்றீப-நீடக்
கசியார்க் குவக்காக் கனவருணை சார்ந்தார்
பசிதீர்க்குங் கார்த்திகைத்தீ பம். - (74)


சாகையுடன் சாத்திரமுஞ் சாற்றரிய பல்கலையு
மாகமபு ராணமுத லாந்தீபந்-தேகப்
பிணியகல வந்தெவரும் பேசிமகிழ்ந் தேத்திப்
பணியருணை கார்த்திகைத்தீ பம். - (75)


துப்பற்ற வென்னையுமோர் தொண்டாகக் கொள்தீபந்
தப்பற்ற சேவை தருதீப-மொப்பற்ற
வட்டாங்க யோகிகள்வாழ் வார்ந்தவரு ணாசலத்திற்
பட்டாங் கார்த்திகைத்தீ பம். - (76)


தூர்த்தவடி வாய்வந்து தோரா வியற்பகையார்
சீர்த்தவில் லாளைக்கொண்டு செல்தீபந்-தீர்த்த
நலனாகுஞ் சோணமலை நாடுனர்க்குக் கிட்டும்
பலனாகுங் கார்த்திகைத்தீ பம். - (77)


கொக்கிற்கும் வெள்ளெருக்குங் கோணாகலாமதியு
மக்கு மணியு மணிதீப-மிக்க
வரிசைநிற்ற சோணகிரி வாழ்த் துநர்க்கு வேண்டும்
பரிசளிக்குங் கார்த்திகைத்தீ பம். - (78)


இக்கடன்ஞா லத்தி லிறப்புப் பிறப்பென்னுந்
துக்கமுறு வோற்கருளுந் தூய்தீப-மிக்க
திருமணிசேர் சோணமலைச் செம்மலரின் முத்தின்
பருமணிநேர் கார்த்திகைத்தீ பம். - (79)


மான்மீ னிகர்த்தவிழி மாதரார் மையலுற்ற
நான் மீளக் காண்பார்க்கு நற்றீபம்-வான்மீ
னுதிர்ந்ததென வேய்முத் தொளிர்சோண வெற்பிற்
பதிந்ததிருக் கார்த்திகைத்தீ பம். - (80)


தீங்கினில்வீ ழாதடியார் சீராரு முத்தியெனும்
பாங்கினிலே செல்லப் பகர்தீப-முங்கின்மதி
சத்திரமேந் துங்காம்பாத் தானோங்குஞ் சோணவெற்பிற்
பத்திரமாங் கார்த்திகைத்தீ பம். - (81)


பந்தத் தொடக்கைப் பரிகரிக்குந் தீபநிதம்
வந்தடியே னுள்ளம் வதிதீப-மிந்தத்
தரணிபணி சோணா சலமிடியினல்ல
பரணிவரு கார்த்திகைத்தீ பம். - (82)


கானகவே டன்றனலிற் காய்ச்சியெடுத் துண்டீந்த
ஊனக மகிழ்ந்தினிதென் றுண்டீப-மான
சராசரமும் போற்றுந் தனியருணை வெற்பிற்
பராபரமாங் கார்த்திகைத்தீ பம். - (83)


காசிமன்னன் றன்னைக் கவியாக்கிப் பின்பவன்சீர்
மாசிலுரு வந்தந்த வண்டீபங்-காசினிமீ
னாற்றுதவம் போலாங் கருணைவள ரன்பர்வினை
பாற்றுமெழிற் கார்த்திகைத்தீ பம். - (84)


கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ்
சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்-கொல்லா
விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற்
பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். - (85)


மெச்சிநக ராசமகள் வேண்டுநல்ல கம்பனெனக்
கச்சிநகர் வாழுங் கனதீபம்-கொச்சையெயின்
மாமகளிர் வண்டன் மகிழருணை தன்னிலன்பன்
பாமருவுங் கார்த்திகைத்தீ பம். - (86)


ஆனஞ் சாடுந்தீப மன்பர் பிறப்பிறப்பா
மூனஞ் சாடுந்தீப மொண்டீபம்-வானஞ்
செவித்திர வெல்லும்போற்றிச் சேரருணை வெற்பிற்
பவித்திரமாங் கார்த்திகைத்தீ பம். - (87)


கேட்டவர மெல்லாங் கேடுபடமற்கொடுத்தே
நாட்டமுட னாண்டருளு நற்றீபம்-வாட்டமில்லாப்
புள்ளிசேர் மான்கள் பொலியருணை கண்டுகடற்
பள்ளிதாழ் கார்த்திகைத்தீ பம். - (88)


மானாய கன்னியுடன் மால்விடைமேல் வேய்ங்குழல்கேட்
டானாயர் முன்வந் தருடீபம்-வானார்
தருவதினி லுஞ்சிறந்த தாருவளர் சோணிப்
பருவதம்வாழ் கார்த்திகைத்தீ பம். - (89)


ஏறி வருந்தீப மேத்துமவர் வல்வினையை
றூறி வருந்தீப நோன்றீபஞ்-சீறிவரு
மஞ்சிபமா வுற்றறிகாண் மாவருணை வெற்பினிலின்
பஞ்சிறந்த கார்த்திகைத்தீ பம். - (90)


பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார்
தாம்பணியுந் தீபந் தனித்தீப-மாம்பல்
விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற்
பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். - (91)


நன்களிக்குந் தீப நவிலருமுண் ணாமுலையா
மின்களிக்குந் தீபம் விழை தீபம்-வன்களிறு
தண்ணருவி பெட்டையுடன் றணாடுஞ் சோணாவெற்பிற்
பண்ணவர்தேர் கார்த்திகைத்தீ பம். - (92)


மங்களஞ்சேர் தீபமொரு மாசடையா மாசடையிற்
றிங்களஞ்சேர் தீபந் திருத்தீபம்-வேங்களுஞ்சேர்
மாலுமிரு வர்க்கரிதா மன்னருணை வெற்பிடைவிண்
பாலுயருங் கார்த்திகைத்தீ பம். - (93)


பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ
ராதார மாகி யருடீபம்-போதாருங்
கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென்
பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். - (94)


சங்கரிக்கோர் பங்குத் தகையுடனே மற்றையொரு
பங்கரிக்கும் மாகப் பகிர்தீபம்-வெங்கரித்தோல்
போத்ததென மங்குல் பொலியருணை வெற்பிலன்பர்
பார்த்தருள்சேர் கார்த்திகைத்தீ பம். - (95)


ஆணிப்பொன் னம்பலத்தி லாடுந்தீபம் பொல்லா
மாணிக்க தீபமகி மைத்தீபம்-வேணிக்க
ணீராருந் தீபமொழி னீடுமரு ணாசலத்திற்
பாராருங் கார்த்திகைத்தீ பம். - (96)


அந்தச்சிராங்கதனை யச்சுவத்தின் கீழ்வருத்திப்
பிந்தவ னேத்தவருள் பெய்தீபம்-வந்தார்க்
குதவிசெய்வோ மென்றருணை புற்றடியார் வேண்டும்
பதவிதருங் கார்த்திகைத்தீ பம். - (976)


பண்டுபுள காசுரனைப் பாவந் தவிர்த்தாண்டு
கொண்டுவகை கூர்த்த குணதீபந்-தொண்டு
கரவிலா மற்செய்வார் காணருணை வெற்பிற்
பரவிவாழ் கார்த்திகைத்தீ பம். - (98)


சிந்தா மணிகாம தேனு பதுமநிதி
யுந்தாழ்ந் தவக்கருள்செ யுந்தீப-நந்தா
வியப்புள்ள சோணமலை மேற்றிய நல்ல
பயப்புள்ள கார்த்திகைத்தீ பம். - (99)


புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்
சித்தீதருந் தீபஞ்சிவதீபஞ்-சத்திக்
குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்
பயிராகுங் கார்த்திகைத்தீ பம். - (100)


வாழி
வான்வாழி மண்வாழி மன்னவனும் வாழியுய
சோபனவண் ணாமலையுந் தூயதிருக் கார்த்திகை
நற்றீபமும் வாழி சிறந்து.


கார்த்திகைத்தீபவெண்பா-முற்றிற்று.
--------------

Comments